Pages

Showing posts with label நீங்கள் கேட்டவை. Show all posts
Showing posts with label நீங்கள் கேட்டவை. Show all posts

Monday, January 7, 2008

நீங்கள் கேட்டவை 25

மீண்டும் ஒரு நீங்கள் கேட்டவை தெரிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பாடல் தெரிவுகளும் இயன்றவரை அரிதான ஆனால் இனிமையான பாடல்களாகத் தருகின்றேன். கடந்த பாடல் தெரிவில் விருப்பத்தைக் கேட்ட நேயர்களில் சிறீகாந்த் இன் பாடல் தெரிவுகள் மட்டும் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. ஏனையோரில் ஐந்து பேரின் விருப்பப் பாடல்களோடு என் விருப்பமும் இணைந்து வருகின்றது.

முதலில் என் விருப்பமாக "அறுவடை நாள்" திரைக்காக இசைஞானியின் இசைமைத்துப் பின்னணி ஹோரஸ் கொடுக்க சித்ரா பாடும் "தேவனின் கோயில் மூடிய நேரம்" என்றதோர் இனிய பாடல். இந்தப் பாடலை எத்தனை முறையும் அலுக்காது கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் மேடைகளில் பாடப்படுவது வெகு அரிது.


அடுத்து ஒரு மலையாளப் பாடல். றேடியோஸ்பதியின் பெருமைக்குரிய கொ.ப.செ கோபியின் விருப்பமாக மல்லுவூட்டின் All time favourite ஆன "தும்பி வா, தும்பக் குளத்தே" என்று எஸ்.ஜானகி பாட இளையராஜா இசையமைப்பில் "ஓளங்கள்" திரைக்காக இடம்பெறுகின்றது.


காமிரா கவிஞர் சிவிஆர் விரும்பிக் கேட்ட "பாஞ்சாலங்குறிச்சி" திரைப்பாடல் சுவர்ணலதா குரலில் தேவா இசையமைப்பில் வருகின்றது. தன் விருப்பமாக மட்டுமன்றி இசைப்பிரியர்களுக்கும் இந்தப் பாடல் சென்றடைய வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் இந்த indoor & outdoor ஸ்பெஷலிஸ்ட் ;-)


தங்கமலை ரகசியம் திரையில் இருந்து ஒரு தங்கபுதையலைக் கேட்டிருக்கின்றார் வசந்தன்.
பி.சுசீலா பாடும் "அமுதைப் பொழியும் நிலவே" என்ற அந்தப் பாடலை ரி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருக்கின்றார்.



இன்று தொடந்து ஒரே தனிப் பெண் குரல் பாடல்களாக ஒலிக்கிறதே என்று சலிப்பவர்களை ஆறுதல்படுத்த நிறைவாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் ஜோடிப்பாடல் ரிஷான் ஷெரிப் விருப்பமாக "அண்ணா நகர் முதல் தெரு" திரையில் இருந்து சந்திரபோஸ் இசையில் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டாக" ஒலிக்கின்றது.


பாடல்களைக் கேட்பதோடு உங்கள் விருப்பப்பாடல்களையும் அறியத் தாருங்கள். இலகுவில் கிடைக்காத அரிய பாடல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேடித் தருகின்றேன். அவற்றுக்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படுவதையும் பொறுத்தருள வேண்டுகின்றேன்.

Sunday, December 16, 2007

நீங்கள் கேட்டவை 24


நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து இடம்பெறும் என்று சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் புதுகைத் தென்றல் என்ற தமிழ்மணத்தின் புதுவரவுப் பதிவர் விரும்பிக் கேட்டிருக்கும் "செவ்வந்தி பூக்களில் செயத வீடு" பாடல் மெல்லப் பேசுங்கள் திரைப்படத்திற்காக தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் குரலில் ஒலிக்கின்றது. இசை: கங்கை அமரனின் சகோதரர், யுவனின் அப்பா

வலையுலக இசை ரசிகர் ஜி.ராகவனின் விருப்பமாக வரும் அடுத்த தேர்வு இளையராஜா சகோதரர் கங்கை அமரன் இசையில் மலர்களே மலருங்கள் திரைக்காக "இசைக்கவோ நான் கல்யாண ராகம்" என்ற இனிய பாடல் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது.

புது வரவு இலங்கைப் பதிவர் ரிஷான் ஷெரிப் கேட்டிருக்கும் பாடல் கெளரி மனோகரி திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது" என்னும் பாடல். இசையை அமைத்தவர் இனியவன் என்னும் அறிமுக இசையமைப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த இப்படத்தை வி.சி.டியில் எடுப்பதே கடினம். நடிகர்கள் உட்பட பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அறிமுகம் இப்படம். இலங்கை எப்.எம் வானொலிகளில் அப்போது அடிக்கடி வந்த பாட்டு இது.


அடுத்து நம்ம பெருமைக்குரிய கொ.ப.செ கோபி விருப்பமாக மலையாள காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆன திரையில் இருந்து ராஜா சார் இசையில் எம்.ஜி.சிறீகுமார், சித்ரா பாடும் "சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி" என்னும் இனிய கீதம்.

உங்களுக்கெல்லாம் போட்டாச்சு. என் விருப்பத்தையும் சொல்லி விட வேண்டாமா?
ஒரு கைதியின் டைரி திரையில் இருந்து விஜய் என்ற பெயரில் பாடிய இப்போதைய உன்னிமேனனும், உமாரமணனும் கூவும் " பொன் மானே கோபம் ஏனோ" பாட்டைக் கேட்டுக் கிறங்கி நீங்களும் பாட்டுக் கேட்க வாருங்கள் ;-)
Powered by eSnips.com

Thursday, October 11, 2007

நீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்



தமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.

காதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.

பாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.

இந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.

ஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.

"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.

இந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.

http://www.petitiononline.com/msv2008/petition.html


இந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.

முதலில் வருவது "கிருஷ்ண கானம்" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து "ஆயர் பாடி மாளிகையில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.
Get this widget | Track details | eSnips Social DNA


தொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு "முத்தான முத்தல்லவோ" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்த பாடல் "பூக்காரி" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி "காதலின் பொன் வீதியில்" என்று பாடுகின்றார்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்ததாக "சிம்லா ஸ்பெஷல்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "உனக்கென்ன மேலே நின்றாய்" என்ற பாடல் வருகின்றது.
Get this widget | Track details | eSnips Social DNA


நிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் "கீழ் வானம் சிவக்கும்" , T.M செளந்தரராஜன் பாடும் "கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே"
இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே http://www.petitiononline.com/msv2008/petition.html">ONLINE PETITION னில் கீ நாட்டு வையுங்க.

வட்டா ;-)))
Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 4, 2007

நீங்கள் கேட்டவை 22


வழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.

இன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் "அமுதே தமிழே எனதுயிரே" என்ற பாடல் "கோயில் புறா" திரைக்காக ஒலிக்கின்றது.

அடுத்ததாக சந்தன முல்லை, "பயணங்கள் முடிவதில்லை" திரையில் இருந்து "சாலையோரம் சோலை" என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.

தொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் "கிழக்குக் கரை" திரையில் இருந்து சித்ரா பாடும் "சிலு சிலுவெனக் காத்து" தேவாவின் இசையில் மலர்கின்றது.

நிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் "மணிச்சித்ர தாளு" என்ற மலையாளத் திரையில் இருந்து "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.
இப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))

Powered by eSnips.com

Thursday, September 27, 2007

நீங்கள் கேட்டவை 21

வழக்கம் போல் வகை வகையான பாடல்களை வலைப்பதிவர்கள் கேட்டிருக்கும் நீங்கள் கேட்டவை 21 இல் சந்திக்கின்றோம்.

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியின் முதல் பாடல் அண்மையில் மறைந்த நடிகர் விஜயனுக்கு அர்ப்பணமாக ஒலிக்கின்றது. ஏற்கனவே வீடியோஸ்பதியில் விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடலைத் தந்திருக்கின்றேன். றேடியோஸ்பதியில் ஒலி வடிவில் நடிகர் விஜயன் நடித்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் இருந்து " விடுகதை ஒன்று....தொடர்கதை ஒன்று" என்ற பாடலை கங்கை அமரன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடக் கேட்கலாம். காலம் மறக்கடிக்காத பாடல் உங்கள் காதுகளையும் வருடட்டும்.

சரி இனி நீங்கள் கேட்ட பாடல்களுக்குச் செல்வோம்.
முதலில் பாடலை விரும்பிக் கேட்டிருக்கும் சுதர்சன் கோபால், ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இருந்து "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற இனிய பாடலை வரலஷ்மி பாடக் கேட்கின்றார். இசை: குன்னக்குடி வைத்திய நாதன்

அடுத்ததாக ஜீ 3 இன் விருப்பமாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து அதே வரிகளோடு கே.ஜே. ஜேசுதாஸ் பாடும் பாடல் இளையராஜா இசையில் மலர்கின்றது.

அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இருந்து நக்கீரன் விரும்பிக் கேட்கும் பாடல் ஒலிக்கின்றது. "வாழ்க்கை ஓடம் செல்ல" என்ற அந்தப் பாடல் எஸ்.ஜானகி குரலில் இளையராஜா இசையில் ஒலிக்கின்றது.

நிறைவாக சந்தன முல்லை, "வான் போலே வண்ணம் கொண்டு: என்ற பாடலை சலங்கை ஒலி திரையில் இருந்து இளையராஜா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடக் கேட்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

முகப்புப் பட உதவி : சீர்காழி இணையத் தளம்

Powered by eSnips.com

Wednesday, September 19, 2007

நீங்கள் கேட்டவை 20


நீங்கள் கேட்டவை 20 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வாரமும் நிறையப் பதிவர்கள் தங்களுடைய விருப்பப் பாடலுக்காகக் காத்திருக்கின்றார்கள். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இதோ உங்களுக்காக

முதலாவதாக நம்ம வலைப்பதிவின் கொ.ப.செ கோபி விரும்பிக் கேட்ட பாடல் "தளபதி" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" இசை: நம்ம இளையராஜா

தொடர்ந்து பதிவர் முத்துலெட்சுமி விரும்பிக் கேட்டிருக்கும் "என் ஜீவன் பாடுது" திரைப்படப் பாடலான "ஒரே முறை உன் தரிசனம் பாடலை இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடுகின்றார்.

வடுவூர் குமார், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா பாடும் "தவிக்குது தயங்குது ஒரு மனது" பாடலை "நதியைத் தேடி வந்த கடல்" படத்திலிருந்து கேட்டிருக்கின்றார். இசையமைப்பாளர் யாரென்று சொல்ல மாட்டேன் ;))

நீண்ட நாட்களாக இந்தப் பாடல் வருமா? என்று ஓட்டுப் போட்ட பொதுஜனம் போலக் காத்திருக்கும் ஜி.ராகவனுக்காக "சந்திப்பு" திரையில் இருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடும் "ராத்திரி நிலாவில்" என்ற பாடல் தமிழ் வலை உலகில் முதலாவதாக (;-))) இடம்பெறுகின்றது.

நிறைவாக ஒரு நிறைவான ஈழத்துப்பாடலை ஈழத்துச் சகோதரன் ஒருவர் கேட்டிருக்கின்றார். "நெய்தல்" என்ற ஒலிப்பேழையில் இருந்து ஜி.சாந்தன் பாடும் "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடல் காற்றில் மிதக்கின்றது.

பிற்குறிப்பு:
இந்த நீங்கள் கேட்டவை பதிவை வலையேற்றிய பின் நம்ம கொ.ப.செ.கோபியிடமிருந்து ஒரு கண்டன மடல் தனிப்பட வந்தது. அதில் அவர் கேட்ட பாடல் தளபதியில் வரும் "அடி ராக்கம்மா கையத் தட்டு" பாடலே என்றும், "சுந்தரி கண்ணால்" ஒரு சேதி பாடலைக் கேட்கும் மனநிலையில் தான் இல்லையெனவும், காரணம் தனக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையென்றும் வருத்தத்தோடு தெரிவித்தார் ;)
கொ.ப.செயின் கோபத்துக்கு ஆளாகாமல் இதோ அவர் கேட்ட "ராக்கம்மா கையத் தட்டு" பாடல். அத்துடன் அவரின் வேண்டுதல் நிறைவேறவும் பிரார்த்திப்போம் ;-)))


பாடல்களைக் கேட்டவண்ணம் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள்.
Powered by eSnips.com

Thursday, September 13, 2007

நீங்கள் கேட்டவை 19



வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் வெல்கம் to நீங்கள் கேட்டவை 19.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே பாடல்களைக் கேட்ட பதிவர்கள் வலை மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்காங்க. இதோ நீங்கள் கேட்ட பாடல்கள்.


பதிவர் முத்துலெட்சுமி, தன் சக பதிவர் மங்கைக்காகக் கேட்ட பாடல் "முத்துக் குளிக்க வாரீகளா", அனுபவி ராஜா அனுபவி திரைக்காக, டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.


அடுத்ததாக வெயிலானின் விருப்பமாக, இது நம்ம பூமி திரையில் இருந்து இளையராஜா இசையில் "வான மழை போல " என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.


சுந்தரி விரும்பிக் கேட்டிருக்கும் " அஞ்சு விரல் கெஞ்சுதடி" பாடலை ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி பாட, மனோஜ்-கியான் இரட்டையர்கள் உரிமை கீதம் திரைக்காக இசையமைத்திருக்கின்றார்கள்.

நிறைவாக நம்ம ஓமப்பொடியார் சுதர்சன் கோபால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து மனோ பாடியிருக்கும் "வந்தாள் வந்தாள் ராஜகுமாரி" பாடலை இளையராஜா இசையில் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் தெரிவுப் பாடல்களையும் அறியத் தாருங்கள். வட்டா...;)

Powered by eSnips.com

Thursday, August 16, 2007

நீங்கள் கேட்டவை 18



இன்றைய நீங்கள் கேட்டவை 18 பதிவில் நான்கு முத்தான பாடல்கள் இடம்பெறுகின்றன.

முதலில் சர்வேசனின் விருப்பமாக மலரும் "காதோடு தான் நான் பாடுவேன்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, வி.குமாரின் இசையில் "வெள்ளி விழா" திரைக்காக ஒலிக்கின்றது.

தொடர்ந்து ஒலிக்கும் பாடல் கீர்த்திகாவின் விருப்பமாக டி.எம்.செளந்தரராஜன் பாடும் "நதியினில் வெள்ளம்" என்ற பாடல் "தேனும் பாலும்" திரைக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெறுகின்றது.

அடுத்து வரும் இரண்டு பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா
அவற்றில் முதலில் வரும் "ஆனந்த ராகம்" என்ற பாடலை உமாரமணன் பாட சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம் பெற்ற திரைப்படம் "பன்னீர் புஷ்பங்கள்".

நிறைவாக நெல்லைக் கிறுக்கன் தேர்வில் "இளமைக் காலங்கள்" திரைக்காக "பாட வந்ததோர் கானம்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடக் கேட்கலாம்.

Powered by eSnips.com

Thursday, August 9, 2007

நீங்கள் கேட்டவை 17

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.

முதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட "பெண்ணல்ல நீ ஒரு பொம்மை" என்ற பாடல் வி.குமாரின் இசையில் "சொந்தமடி நீ எனக்கு" திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.

அடுத்ததாக மாயாவின் விருப்பமாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்" என்ற பாடல் வருகின்றது.
பாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள்

கோபிநாத் விருப்பமாக "புதிய பறவை" திரையில் இருந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.

நட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் "அதிகாலை சுபவேளை" பாடலைக் கேட்கலாம்.

நிறைவாக சர்வேசனின் விருப்பமாக "ராஜா சின்ன ராஜா" என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.

Powered by eSnips.com

Thursday, August 2, 2007

நீங்கள் கேட்டவை 16



நீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.

சரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.

முதலாவதாக அய்யனாரின் விருப்பமாக "நண்டு" திரைப்படத்தில் இருந்து "மஞ்சள் வெய்யில்" என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.

அடுத்த தெரிவாக "ரசிகன் ஒரு ரசிகை" திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் "பாடியழைத்தேன்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.

வடுவூர் குமாரின் விருப்பமான " மஞ்சள் நிலாவுக்கு" என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.

லட்சுமி திரைப்படத்தில் இருந்து "மேளம் கொட்ட நேரம் வரும்" என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.

மதி கந்தசாமி விரும்பியிருக்கும் "ஆஹா" படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்" என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.

வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Powered by eSnips.com

Thursday, July 26, 2007

நீங்கள் கேட்டவை 15



வாரந்தம் உங்கள் ரசனைக்குரிய பாடல்களின் அணிவகுப்பாக மலரும் நீங்கள் கேட்டவையின் 15 படையலில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரமும் வழக்கம் போல மாறுபட்ட இரசனை கொண்ட பாடல்களின் தொகுப்பாக இடம்பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய நீங்கள் கேட்டவை 15 தொகுப்பில் இடம்பெறும் பாடல்களையும் கேட்ட நண்பர்களையும் பார்ப்போம்.

முதலாவதாக கிடேசன் பார்க் நாயகன் கோபிநாத் தன்னுடைய ஆருயிர் சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக "ஜானி" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))

அடுத்ததாக நக்கீரன் விரும்பிக் கேட்டிருக்கும் பாடலைப் பாடுகின்றார்கள், மலேசியா வாசுதேன், எஸ்.ஜானகி பாடும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை" என்ற பாடலை "என் ஜீவன் பாடுது" திரைக்காகக் கேட்டிருக்கின்றார். எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு இது, என் சீடி இசைத்தட்டு தேயத் தேய இந்தப் பாட்டைக் கேட்டிருக்கின்றேன்.

சர்வேசன் விருப்பமாக "வட்டத்துக்குள் சதுரம்" திரைப்படத்திற்காக "இதோ இதோ என் நெஞ்சிலே" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.

அடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, "மீரா" படப்பாடலான "ஓ பட்டர்பிளை" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)

நிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் " கண்ணின் மணியே கண்ணின் மணியே" பாடல் சித்ராவின் குரலில் "மனதில் உறுதி வேண்டும்" திரைக்காக இடம்பெறுகின்றது.

இன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.

Powered by eSnips.com

Friday, July 20, 2007

நீங்கள் கேட்டவை 14



வாரங்கள் 14 கடந்தாலும் உங்களின் அபிமானத் தெரிவுகளோடு நீங்கள் கேட்டவை தொடர்கின்றது. இதோ இந்தவார நிகழ்ச்சியின் தேர்வுகளைப் பார்ப்போம்.

இந்தவாரம் பெரும்பாலும் 60, மற்றும் 70 களில் வெளிவந்த படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன.

முதலில் இடம்பெறும் "வந்த நாள் முதல்" என்ற பாடலை வடுவூர் குமார் மற்றும் மதி கந்தசாமி ஆகியோர் விரும்பிக்கேட்டிருக்கின்றார்கள். பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பாவமன்னிப்பு". விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
T.M செளந்தரராஜன் பாடலைப் பாடுகின்றார்.

அதே பாடல் சோக மெட்டில் என் விருப்பமாக அடுத்து வருகின்றது. பாடலைப் பாடியிருப்பவர் G.K.வெங்கடேஷ்

இந்துமகேஷ் என்ற அபிமான நேயர் தேர்வில் P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "உடலுக்கு உயிர் காவல் என்ற பாடல் "மணப்பந்தல்" திரைப்படத்திற்காக M.S.விஸ்வநாதன் இசையில் வருகின்றது.

அடுத்ததாக "தெய்வப்பிறவி" திரைப்படத்திற்காக "அன்பாலே தேடிய" என்று ஜெயராமன் பாடும் பாடலை யெஸ்.பாலபாரதி விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடலுக்கான இசை:K.V.மகாதேவன்

தொடர்ந்து பாடல்களைக் கேட்டு வரும் சுதர்சன் கோபால், "பட்டினப் பிரவேசம்" திரைக்காக, M.S.விஸ்வநாதன் இசையில் "வான் நிலா நிலா அல்ல" என்ற S.P.பாலசுப்ரமணியம் பாடும் இனிய பாடலைத் தேர்வு செய்திருக்கின்றார்.

இறுதியாக, அடிக்கடி வலைப்பதிவில் காணாமல் போகும் "நெல்லைக் கிறுக்கன்" இளையராஜா இசையில் "அகல்விளக்கு" திரைக்காக K.J. ஜேசுதாஸ், S.P சைலஜா ஆகியோர் " ஏதோ நினைவுகள்" என்ற இனிய பாடலைத் தருகின்றார்கள்.

Powered by eSnips.com

Friday, July 13, 2007

நீங்கள் கேட்டவை 13



எல்லாருக்கும் வணக்கம்!

எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?
நீங்கள் கேட்டவை 13 இலை உங்களைச் சந்திக்கிறதில எனக்கு ஒரே புழுகம் தான். சரி வாங்கோ நிகழ்ச்சிக்குப் போவம்.

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவில் முதல் பாடலைக் கேட்டிருக்கின்றார், கேள்வியின் நாயகன் சுதர்ஸன் கோபால், செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு தான் வேணும்னு இவர் இரண்டு தடவை மடல் கூடப் போட்டு விட்டார். நான் நினைக்கிறேன் இணையத்தளங்களிலே அகப்படாத இந்த அரிய பாடல் என் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கிறதென்று. இதோ உங்களுக்காக சிறப்பாக வரும் இந்தப் பாடல் "மெல்லப் பேசுங்கள்" திரைக்காக , தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் ஆகியோர் பாடுகின்றார்கள். எஸ்.பி.பாலு, ஜானகி ஜோடி போல இந்த ஜோடிக்கூட்டும் இனிமையானது.
இசையமைத்தவர் யாரென்று சொல்ல மாட்டேன். இவர் பெயரை ஒவ்வொருவாரமும் அதிகப்படியாகத் தட்டச்சி, அந்த எழுத்துக்களே தேய்ந்துவிட்டன.
நீங்களே கண்டு பிடியுங்கள் ;-)


இங்கே அழுத்தவும்


அல்லது

Sevanthi.wma


அடுத்ததாக வலையுலகில் சமையல் முதல் சமூகம் வரை ஒரு கை பார்க்கும் மதி கந்தசாமி
"பாஞ்சாலங்குறிச்சி" திரைப்படத்தில் இருந்து காப்பி நிறையக் குடிக்கும் தேவா சார் இசையில் ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் பாடியது. இந்த மேற்கத்தேய ஜாஸ் இசையோடு போட்டி போடும் இந்த கிராமத்து ஜாஸ் ;-)(எங்கேயோ இடிக்குதே)

Get this widget | Share | Track details


ஒவ்வொரு பதிவிலும் என்னைக் கண்காணித்துத் தன் விமர்சனங்களை அளிக்கும் நண்பர் வெயிலான் பாடல் கேட்பது அரிது. ஆனால் அவர் பாடல் கேட்டால் கர்னாடக சங்கீதத்தின் தாக்கம் உள்ள பாடலாகத் தான் இருக்கும். "நின்னைச் சரணடைந்தேன்" என்ற பாடலை அவர் கேட்டிருந்தார். அந்தப் பாடல் "பாரதி" படத்திலும் இடம்பிடித்தது. ஆனால் நான் அவருக்காகத் தரும் இந்தப் பாடல் கர்னாடக சங்கீதப் பாடகி "பாம்பே ஜெயஸ்ரீ" பாடிய படத்தில் வராத தனிப்பாடலான "நின்னைச் சரணடைந்தேன்". இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் மேற்கத்தேய இசையோடு வித்தியாசமாக வருகின்றது. அதிகம் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள் என்பதற்காகத் தருகின்றேன். இதோ

Get this widget | Share | Track details


வலையுலகில் புதிதாக நுழைந்திருக்கும் அன்புத் தம்பி சினேகிதன் கேட்டிருக்கும் "ஆத்மா" திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அருமையான பாடல்.
" கண்ணாலே காதல் கவிதை" என்ற இந்த இனிய பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடியிருக்கின்றார்கள். பாடல் இசை கங்கை அமரனின் அண்ணன்.

Get this widget | Share | Track details


வலைப்பதிவு உலகில் முதன் முறையாக (பிளீஸ் யாராவது குறிச்சுக்கோங்க ;-))) நீங்கள் கேட்டவை ஒளி வடிவில் வருகின்றது. முதல் பாடலே அம்மா செண்டிமெண்டோடு வரும்
" தளபதி" திரைப்பாடலான "சின்னத்தாயவள்", பாடியவர் எஸ்.ஜானகி. You Tube இல் பாடலை ஏற்றி உதவிய தீனதயாளனுக்கு மிக்க நன்றிகள். முதல் ஒளி மூல நீங்கள் கேட்டவை பாடலைப் பெறும் அதிஷ்டசாலி நம்ம பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்



Thursday, July 5, 2007

நீங்கள் கேட்டவை 12



வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம், welcome to நீங்கள் கேட்டவை 12. வழக்கம் போலவே தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்களையும், ஊக்குவிப்பையும் அள்ளி வழங்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு உடனேயே நிகழ்ச்சிக்குப்
போகலாம். ;-))

இன்றைய நிகழ்ச்சியிலும் வழக்கம் போல பழைய, இடைக்கால, புதிய பாடல்களை பல்வேறு ரசனை கொண்ட நம்ம நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். அந்தவகையில்

நாலு மணி நேர ஜேசுதாஸ் எஸ்.பி.பியின் இசை மழையில் நனைந்து ஜலதோஷம் பிடிக்கமுன்னேயே வந்து பாட்டுக் கேட்டிருக்கின்றார் இந்தவார தமிழ்மண நட்சத்திரம்
சர்வேசன். "சொல்லத் துடிக்குது மனசு" படத்திலிருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பூவே செம்பூவே". இசைய வைத்தவர் இளையராஜா.

பாடலைக் கேட்க

சர்வேசன் கேட்ட பூவே செம்பூவே பாட்டைக் கேட்டதும் குரல் தவிர்த்த இந்தப் பாடலின் இசைக்கோலத்தைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது, அதை உங்களோடும்ம் பகிர்ந்து கொள்கின்றேன், இது இப்போது தான் இணைக்கப்படுகின்றது. கேட்டு அனுபவியுங்கள் இந்த இசை ராஜாங்கத்தை.

Get this widget | Share | Track details



சர்வே புயல் சர்வேசன் போல இசைக்கு ஒரு புயல் நம்ம ஏ.ஆர்.ரகுமான். அவரோடு இயக்குனர் விக்ரமன் இணைந்து விக்ரம் நடித்த "புதிய மன்னர்கள்" படத்திலிருந்து மனோ, சித்ரா பாடும் "ஒண்ணு ரெண்டு மூணடா" என்ற ஆண்களை வெருட்டும் பாடலை விரும்பிக்கேட்டிருக்கின்றார் பாலைவன தேசத்திலிருந்து ஜெஸிலா.




அத்தி பூத்தது போல எப்பவாது ஒருக்கால் தனக்கு ஆசை வந்தா மட்டும் பவ்யமாகப் பாட்டுக் கேட்கிற எங்கட வெற்றி அண்ணை , "அந்தரங்கம்" படத்திலை இருந்து ஜி.தேவராஜன் இசையில் நடித்துக் கொண்டே பாட வல்ல கமலஹாசன் பாடியிருக்கிறார். சோக்கான பாட்டெல்லோ?




சிங்கப்பூர் சீமையில் கட்டுமானமே கதியென்று இருக்கும் நம்ம நண்பர்
வடுவூர் குமார், "அகத்தியர்" படத்தில் இருந்து வயலின் மேதை குன்னக்குடி வைத்யநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுகின்றார்.




இந்து மகேஷ் அண்ணரின் பழைய பாடல் தெரிவுகள் எப்பவுமே சோடை போகாது. அதை நிரூபிக்க "பாதை தெரியுது பார்" திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி பாடிய "தென்னங்கீற்றுச் சோலையிலே" கேட்டுப் பாருங்கள், புரியும்.
பாடலிசை: M.B ஸ்ரீனிவாசன்.




இறுதித் தேர்வை, இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்துப் பதிவுகளிலேயே சிலாகித்த ராதா ஸ்ரீராம் விரும்பும் "பெற்றால் தான் பிள்ளையா" திரையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலரும் "சக்கரக்கட்டி ராஜாத்தி" என்ற பாடலை T.M செளந்தரராஜன் பாடுகின்றார். இணைந்து பி.சுசீலா பாடுகின்றார்.

Get this widget | Share | Track details


சரி நண்பர்களே, இன்றைய பாடல் தேர்வுகள் எப்படியிருந்தன என்பது குறித்தும், புதிய பாடல்களை அறிவிக்கவும் இந்தப் பதிவின் பின்னூட்டலைப் பயன்படுத்துங்கள். ;-)))

Thursday, June 28, 2007

நீங்கள் கேட்டவை 11


வழக்கம் போல் நீங்கள் கேட்டவை 11 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவிலும் உங்களில் பலர் வித்தியாசமான ரசனைகளோடு இனிய பாடல்களைக் கேட்டிருக்கின்றார்கள்.


பெப்சி உமா பாணியில் இந்த நிகழ்ச்சியின் தாரக மந்திரமான "கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க", இந்த வாட்டி உங்க பாட்டு கிடைக்காவிட்டாலும் அடுத்த பதிவில் உங்க விருப்பம் நிறைவேறும் எனவே தொடர்ந்து முயற்சி பண்ணுங்கன்னு சொல்லி வச்சு இன்றைய
நீங்கள் கேட்டவை பாடல்களைப் பார்ப்போம் ;-))


1. முதலாவது பாடலை சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம்பெற்ற படம் "நண்டு". இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் " அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா" என்ற அருமையான இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார். இதே பாடலும் சர்வே புயல் சர்வேசனும் முன்னர் விரும்பிக் கேட்டிருக்கின்றார்.




2. அடுத்த பாடலான "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" என்ற இனிய பாடலை மதி கந்தசாமி விரும்பிக் கேட்கின்றார். பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சந்தியா பாடியிருக்கின்றார்கள். இசை: கீரவாணி என்ற மரகதமணி



3. சினேகிதனின் விருப்பமாக "உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, இளையராஜா இசையில் "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட" என்ற பாடல் வருகின்றது.




அடுத்து ஜி.ராகவன் விரும்பிக்கேட்ட இரு பாடல்கள் இடம்பெறுகின்றன

4. "கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன்" என்ற பாடலை ரி.எம்.செளந்தரராஜன் , எஸ். ஜானகி பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கின்றார். பாடல் இடம்பெற்ற திரைப்படம் "சிரித்து வாழ வேண்டும்"



5. " இது மாலை நேரத்து மயக்கம்" என்ற "தரிசனம்" திரைப்பாடலை, ரி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் சூலமங்களம் ராஜலஷ்மி இசையில் பாடுகின்றார்கள்.


Thursday, June 21, 2007

நீங்கள் கேட்டவை 10



இன்றைய நீங்கள் கேட்டவை 10 பதிவில் பல நேயர்களின் விருப்பத்தேர்வோடு மலர்கின்றது.
பாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப்பாடல்களையும் நீங்கள் அறியத் தந்தால் அவை எதிர்வரும் காலங்களில் இடம்பெறும்.

இன்றைய நீங்கள் கேட்டவை 10 பகுதியில் பாடல்களைக் கேட்ட நேயர்களும் பாடல்களும் இதோ:

1. பொன்ஸ்ஸின் விருப்பமாக "தெய்வத்தின் தெய்வம்" திரைப்படத்தில் இருந்து பி.சுசீலா பாடிய "நீ இல்லாத உலகத்திலே என்ற பாடல். பாடலுக்கான இசை: ஜி.ராமநாதன்



2. வல்லி சிம்ஹனின் விருப்பமாக "வசந்த முல்லைப் போலே வந்து" என்ற பாடல் "சாரங்கதாரா" திரைக்காக டி.எம்.செளந்தரராஜன் பாடுகின்றார். பாடல் இசை: ஜி.ராமநாதன்



3. இந்து மகேஷின் விருப்பமாக கே.வி.மகாதேவன் இசையில் "நாலு வேலி நிலம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "ஊரார் உறங்கையிலே" என்ற பாடல், திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கின்றது.



4. நக்கீரனின் விருப்பமாக "தென்றல் காற்றே" என்ற பாடல் மனோ, ஜானகி பாட, இளையராஜாவின் இசையில் "கும்பக்கரைத் தங்கையா" திரைக்காக இடம்பெறுகின்றது.



5. மழை ஷ்ரேயாவின் விருப்பத் தேர்வில் "கற்பூர முல்லை ஒன்று" என்ற பாடலை சித்ரா, இளையராஜாவின் இசையில் "கற்பூரமுல்லை" திரைப்படத்திற்காகப் பாடுகின்றார்.

Thursday, June 14, 2007

நீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்

வணக்கம் நண்பர்களே,

நீங்கள் கேட்டவை 9 பதிவிலே சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவு சற்று வித்தியாசமாக ஒரே ஒரு நேயரின் விருப்பத்தேர்வில் அமைந்த ஒருபடப்பாடல்களாக அமைகின்றது. அந்த வகையில் குட்டிப் பிசாசு ( நல்ல பேருப்பா ;-)) என்ற நேயரின் விருப்பமாக "ஆண்பாவம்" திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல்கள் இடம்பெறுகின்றன.

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்து "கன்னி ராசி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன், தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமான "ஆண்பாவம்" மூலம் இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராக வந்து தன் திருட்டு முழி நடிப்பால் வெற்றியும் பெற்றார். மிகச் சின்னப்பையனாகவே தான் இயக்குனராக வந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர். ஆள் இன்னும் சின்னப்பையனாகவே இருக்கிறாருப்பா.

1985 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான ஆண்பாவம் வெள்ளிவிழாக் கண்டது. ரேவதியின் குறும்புத்தன நடிப்பு, திருமதி முன்னாள் பார்த்திபன் சீதாவின் அறிமுகம், பாண்டியன், பா-ராஜனின் இயல்பான நடிப்பு, கூட ஒட்டிக்கொண்ட ஜனகராஜ், வி.கே.ராமசாமி தவக்களை போன்றோரின் கச்சிதமான வேடம் என்று இந்த வெற்றிக்குப் பல காரணங்களைப் பங்கு போடலாம். பெரிய பாண்டி (பாண்டியன்), சின்னப்பாண்டி (பாண்டியராஜன்), கனகராஜ் (ஜனகராஜ்), தவக்களை (தவக்களை) என்று பாத்திரங்களின் பெயரை நிஜத்தோடு ஒட்டி வைத்ததும் புதுமை. படம் வந்த காலத்தில் சேலைக்கடையில் லட்டுக் கொடுத்து ஏமாற்றும் நகைச்சுவை ஏக பிரபலமாம்.

இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ள வேண்டிய, விலத்த முடியாத ஒரு அம்சம், இளையராஜாவின் இசை. பாண்டியன் சீதா சந்திப்பில் வரும் சந்தோஷம் கலந்த வயலின் பின்னணி இசை, பின் அவர்களின் பிரிவுக்காட்சிகளில் அதே சந்தம் சோக இசையாக ஜொலிப்பது இப்போதும் என் காதில் கேட்கின்றது.

ராஜா Title song பாடினால் படம் வெற்றி என்பதை தெரிந்தோ தெரியாமலோ நிரூபித்திருக்கின்றது ஆரம்பப் பாடலான "வந்தனம் வந்தனம்" என்ற பாடல்.

அது போல் "காதல் கசக்குதையா" பாடல் ஒரு காலகட்டத்து இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த இரண்டு பாடல்களையும் இளையராஜாவே பாடியிருக்கின்றார்.



அண்மையில் குமுதம் பத்திரிகையின் அரசு கேள்வி பதிலில் ராஜாவை விட யுவன் தான் இயற்கையாக இசையமைக்கின்றார் என்றும் கூடவே "பருத்தி வீரனை" உதாரணமும் காட்டினார். அவர் ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி பாடிய "ஊட்டி வந்த" என்ற கிராமியச் சந்தத்தைக் கேட்கவில்லைப் போலும்.



"என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன்" என்று தடாலடியாகவும், "என்னைப் பாடச் சொல்லாதே, நான் ஊமையான சின்னக்குயிலு" என்று சோகமாகவும் இரண்டு பாடல்களில் இனிக்கிறார் எஸ்.ஜானகி.






இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில் நான் என் விருப்பப் பாடலாகப் பிரத்தியோகமாகப் பாடல் ஒன்றைத் தராததற்குக் காரணம், இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன், சித்ரா இணைந்து பாடும் "குயிலே குயிலே, பூங்குயிலே" என்ற பாடல். இன்றைக்கு அல்ல என்றைக்குமே என் விருப்பப் பட்டியலில் விலக்கமுடியாத தெரிவு இது.
காதலர் இருவர் இணையும் காட்சியைத் தன் கிளாரினெற் கலந்து இசைஜாலத்தால் முன் நிரப்பும் இப்பாடல் தொடந்தும் அதே உணர்வோடு பயணிக்கின்றது.
சிட்டுக்கென பட்டுத்துணி கட்டித்தரவா, மொட்டுக்கென முத்துச்சரம் கொட்டித்தரவா"
என்று துள்ளிக் குதிக்கும் சந்தமாகட்டும்,
"குயிலே குயிலே பூங்குயிலே" என்று பாடும் போது அதைக் கேட்டு வரும் புல்லாங்குழல் ஆலாபனையாகட்டும்,
"ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப்பட்டா"
"ராசாத்தி என்ன செய்வா, அவளுக்கின்னு ராசாவா நாம்பொறந்தா என்று எசப்பாட்டுக் கலப்பதாகட்டும்,
எதைச் சொல்ல...எதை விட...., ராசா ராசாதான் போங்கள்.

Friday, June 8, 2007

நீங்கள் கேட்டவை 8



வணக்கம் நண்பர்களே

நீங்கள் கேட்டவை 8 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இன்றைய பதிவிலே இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களுடன் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
அந்த வகையில் முதலில் இடம்பெறுவது என் விருப்பப் பாடல் ஒன்று.
இந்தப் பாடல் "செவ்வந்தி" திரைப்படத்தில் இருந்து அருண்மொழி, சொர்ணலதா ஆகியோர்
பாடுகின்றார்கள். பாடலிசை இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாத்தியம் இசைக்கும் கலைஞரான அருண்மொழியின் குரலும் ராஜாவிடமிருந்து தப்பவில்லை. அருண்மொழியைப் பயன்படுத்தி நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா.
P.B.ஸ்ரீனிவாஸ் போல அருண்மொழியின் குரலும் அடக்கமானது அதே போல் இனிமையானது. அருண்மொழி பாடிய எல்லாப் பாடல்களையுமே நான் ரசித்துக்கேட்பேன். எனது உயர்தர வகுப்பு பரீட்சைக்காலத்தில் என்னைத் தயார்படுத்தும் காலத்தில் தான் செவ்வந்தி என்ற இந்தத் திரைப்படம் வந்தது. அதிமுக உறுப்பினரான, எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன் சந்தான பாண்டியன் இதில் நடித்திருந்தார்.
கூட நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. சேரன் பாண்டியன், மெளனம் சம்மதம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீஜா. செவ்வந்தி படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே சந்தானபாண்டியன், ஸ்ரீஜா ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆனால் படத்தில் இருவரும் பிரிவதாக முடிவு என்று ஞாபகம். இந்தச் செய்திகளை அப்போது 90 களில் நம்மூர் வாசிகசாலைக்கு வந்த தினத்தந்தி வெள்ளி மலரில் வாசித்துத் தெரிந்துகொண்டேன். அமைச்சரின் மகன் திரைப்படத்திற்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். "செம்மீனே செம்மீனே", அன்பே ஆருயிரே உட்பட இனிமையான கானங்கள் இப்படத்தில் உண்டு. அப்போதய தினத்தந்தி விளம்பரங்களில் இளையராஜாவை முன்னிறுத்தி கொட்டை எழுத்தில் ராகதேவனின் கீத மழையில் என்று இப்படத்திற்கு விளம்பரப்படுத்தியது இன்றும் நினைப்பிருக்கின்றது.

இன்று நான் தெரிவு செய்திருக்கும் "புன்னைவனப் பூங்குயிலே" என்ற இந்தப் பாடல் காதலர் இருவர் பாடும் சோக ராகமாக அமைகின்ற்து. அருண்மொழி, சொர்ணலதா ஜோடி இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கின்றது.
"என்னோடு பேசும் இளந்தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது"
என்று காதலன் தொடங்கும் வரிகளை இடை இசை எதுவுமின்றி
"என் கண்கள் சொல்லும் மொழி காதலே"
என்று காதலி தன் ஆற்றாமையை நிரப்புவதாக இந்தக் கானத்தின் முதற்பாதி அமையும்.

அடுத்த பாதியில்
"பகலென்னும் தீபம் அணையாமல் வீசும்,
அழகாக ஆடும். அருள் தன்னைப் பேசும்,
தூணடாத விளக்கு நாம் கொண்ட காதல்,
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்"

என்று காதலி ஆரம்பிக்க,
விடாமல் தொடர்வார் காதலன் இப்படி
"அலை ஓய்ந்து போகும் கடல்மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா"

சாதாரண வரிகள் என்றாலும் காதலர்க்கு இவை அசாதாரண மொழி, அதுவும் பாடலாகப் பிறக்கும் போது அத்தனை பிரிவுத்துயரையும் கொட்டித்தீர்க்கின்றது இப்பாடல். கேட்டுப் பாருங்களேன் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
PunnaiVana-Sevvant...

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்டவர்கள்

வெயிலானின் விருப்பமாக மோகமுள் திரைப்படத்தில் இருந்து "சொல்லாயோ" என்ற பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரின் குரலில் ஒலிக்கின்றது.


வி.ஜே சந்திரன் , "என் ஜீவன் பாடுது" என்ற பாடலை நீதானா அந்தக் குயில் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கின்றார்.

மழை ஷ்ரேயாவின் விருப்பமாக இரண்டு தெரிவுகள், ஒன்று கேளடி கண்மணி திரைக்காக இளையராஜா இசையில் "கற்பூர பொம்மை ஒன்று" என்ற பாடலை பி.சுசீலா பாடுகின்றார். அதனைத் தொடர்ந்து அன்னை திரைப்படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடும் "புத்தியுள்ள மனிதரெல்லாம் " என்ற பாடல். இசை ஆர்.சுதர்சனம்

நண்பர்களே பாடல்களைக் கேளுங்கள் கேட்பதோடு உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.



Powered by eSnips.com

Friday, June 1, 2007

சுகராகமே - நீங்கள் கேட்டவை அவசரப் பதிவு



சர்வேசனின் அவசர வேண்டுகோளுக்கிணங்க கன்னி ராசி படத்திலிருந்து இளையராஜா (இவரை விட்டால் வேற யார்) இசையில் சுக ராகமே. பாடல் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் குரல்களில்

Get this widget | Share | Track details

Thursday, May 31, 2007

நீங்கள் கேட்டவை 7



வணக்கம் நண்பர்களே

நீங்கள் கேட்டவை 7 பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியிலும் ஏற்கனவே பாடற் தெரிவைக் கேட்ட அன்பர்களின் விருப்பப்பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.முதலில் வழமை போல் என்விருப்பப் பாடல் ஒன்று. இன்றைய என் விருப்பப் பாடலாக வருவது "புவனா ஒரு கேள்விக்குறி" திரைப்படத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடும் "விழியிலே மலர்ந்தது" என்ற பாடல். பாடலுக்கான இசை இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் ஆரம்பகால இசையில் வந்த இந்தப் பாடலில் வித்தியாசமான நெளிவு சுழிவு மெட்டோடு பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். கடந்த வாரம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசைக்கச்சேரி பார்த்துவிட்டு வரும் போது அவர் வீணையில் இசைத்த இந்தப் பாடல் கொண்ட இசைத் தட்டையும் வாங்கினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று தூண்டிவிட்டது அவர் மீள் இசையாகக் கொடுத்திருந்த விதம். இதோ என்னோடு சேர்ந்து நீங்களும் கேட்டு இன்புறுங்கள்.


இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியிலே இடம்பெறும் பாடல்கள் இதோ:
வல்லி சிம்ஹனின் விருப்பத் தேர்வில் நாடோடி மன்னன் திரைக்காக பி.பானுமதி பாடிய "சம்மதமா" என்ற பாடல். பாடல் இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு

இந்துமகேஷ், விப்ரநாராயணா திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா பாடிய "மலரின் மதுவெல்லாம்" என்ற பாடலை விரும்பிக் கேட்டிருக்கின்றார். இந்தப் படத்தின் இசை எஸ்.ராஜேஷ்வர ராவ்

சிவாவின் விருப்பமாக நிழல் நிஜமாகிறது படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "கம்பன் ஏமாந்தான்" பாடலைப் பாடுகின்றார்.

ஜெய்சங்கரின் விருப்பப் பாடலாக ஆவாரம் பூ திரைப்படத்திற்காக "ஆலோலம் பாடி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் இளையராஜா.

நண்பர்களே!
அடுத்த சுற்றுக்கான உங்கள் பாடல் தெரிவுகளை அனுப்பிவையுங்கள் அவை தொடர்ந்த வாரங்களில் இடம்பெற இருக்கின்றன.
என் விருப்பப் பாடல்


நீங்கள் கேட்டவை 7 பாடல்கள்
Powered by eSnips.com