Pages

Wednesday, March 31, 2021

பாடகி சுஜாதா ♥️

“கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை

கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை

காதல் பொய் என்று சொன்னேன் 

உன்னைக் காணும் வரை”

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது.....

https://www.youtube.com/watch?v=_lRUiintKMM

அதி தீவிர ராஜா ரசிகனான எனக்கு ரஹ்மான் வருகை மனசில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்க, அசைத்து உருக்கிப் போட்டு புயலில் மையம் கொள்ள வைக்கக் காரணமான பாட்டுகளில் இதுவுமொன்று.  

தமிழ் திரையிசையில் பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம் இசைஞானி இளையராஜா இசையூட்ட எவ்வளவு ரம்யமாக இருந்ததோ அது போலவே அவர் பாசம் கொட்ட “திலீப்” என்றழைக்கும் ரஹ்மான் வழி மீள் வரவிலும் நிகழ்ந்தது.

“மினி ஜோசப்” ஐ மின்மினி ஆக்கி இளையராஜா அறிமுகப்படுத்த, ரஹ்மான் திருப்புமுனை கொடுத்து போல.

ஆனால் 90ஸ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல 70ஸ் & 80ஸ் குழந்தைகளில் கூட இன்னமும் சுஜாதா, மின்மினியை ரஹ்மானோடு வந்தவர்கள் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

பாடகி சுஜாதாவின் குரல் குளிர் பதனப் பெட்டியில் உறைந்த நீரை அந்த ஆவி பறக்கும் குளிரில் குடித்து விட்டுக் கதை பேசுவது போன்ற ஈரப்பதன் ஒட்டியிருக்கும்.

சொல்லப் போனால் சுஜாதாவின் குரலை நேர்த்தியாகப் பாவித்த இசையமைப்பாளர்களில் இளையராஜா இசையில் அவரின் ஆரம்ப காலமும், ரஹ்மானின் இசையிலும் அது போலவேயும் கொள்ள முடியும். காரணம் வேறு பல இசையமைப்பாளர்கள் அவரின் குரலின் பண்பை அறியாது உச்சஸ்தாயியில் கீறல் விடும் ஆலாபனையைக் கேட்ட போதெல்லாம் இது நம்ம சுஜாதா இல்லை என்று மனம் துடித்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது “காயத்ரி” என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் 

“காலைப்பனியில் ஆடும் மலர்கள் 

காதல் நினைவில் வாடும் இதழ்கள்” 

https://www.youtube.com/watch?v=Dp5hpkm43Vw

அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் “காலைப்பனியில் ஆடும் மலர்கள்” என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா.

ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது “கவிக்குயில்” வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது 

“காதல் ஓவியம் கண்டேன் 

கனவோ நினைவோ”

https://www.youtube.com/watch?v=2lIyJj4t08A

 இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய “காதல் ஓவியம் கண்டேன்” பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். “காதல் ஓவியம் கண்டேன் கனவோ” 42 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் “கா” என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.

“செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே 

பாடுங்களேன் கொண்டாடுங்களேன் 

ஒரு தோழன் துணைக்கு வந்தான் 

ஆடுங்களேன்....”

https://www.youtube.com/watch?v=LAqOZiG9btM

நாங்கள் பிள்ளை வரம் வேண்டி எதிர்பார்த்த காலத்தில் எல்லாம் இந்தப் பாடலை அடிக்கடி கேட்பேன். என்னைத் தூக்கிக் கொண்டு வானத்தில் மிதக்க வைப்பார்கள் சுஜாதாவு வாணி ஜெயராமும்.

இப்போது கேட்டாலும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவம் அது.

தொண்ணூறுகளில் இசைஞானியின் இசைக் கூடத்தில் சுஜாதா வருகையில்

“மின்னாரம் மானத்து மழவில்லொடிஞ்செல்லோ”

https://www.youtube.com/watch?v=D0Sz9PlfI7k

குரு மலையாள சங்கீதம் பறைஞ்சாலும்,

“ஹே கோபமில்லை கொஞ்சிப் பேசு ராசைய்யா

ஹே ராசாமேலே ஆசை வெச்சேன் நானைய்யா...

https://www.youtube.com/watch?v=Wf1UTBUMYGo

என்று சோடாப் போத்தலை உடைக்கும் நுரைப் பூரிப்பில் பாடும் அந்த சுஜாதா குரல் ஆஹாஹா. ராஜாவின் ஜோடிக் குரலாக ஜானகி, சித்ரா தான் கச்சிதம் என்ற நினைப்பை உடைத்த பாட்டு அது.

கண்ணம்மா ஹோ...... கண்ணம்மா ஹோ.......

“நிறம் பிரித்துப் பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்துக் கேட்டேன் 

சங்கீத வண்ணம் என்ன…….”

https://www.youtube.com/watch?v=1IUZGAt9FIo

ஒவ்வொரு பாடலையும் கேட்கும் போது காட்சி வடிவம் பெறும் போது அது எப்படி அழகாக அமையும் என்று மனசின் உள்ளே இயக்குநர் ஒருவர் ஒளிந்திருந்து வடிவமைத்துப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வார். ஆனால் இந்த ‘ நிறம் பிரித்துப் பார்த்தேன்” பாடலை மட்டும் ஒவ்வொரு நினைப்பிலும் விதவிதமான சோடனைகளை மனது போட்டுப் பார்க்கும்.

மேற்கத்தேயரிடம் கேட்டுப் பாருங்கள் நம் இசையை என்று மார்தட்டிக் கொண்டாடக் கூடிய பாட்டு.

இருந்து பாருங்கள் இன்னும் இருபது முப்பது வருடங்களுக்குப் பின்னர் இந்தப் பாடல் இன்னும் எக்கச்சக்கமாகக் கொண்டாடப் படப் போகிறது என்று இன்றிலிருந்தே எதிர்வு கூறக் கூடிய இசை வடிவமும், பாட்டில் குழைத்த கவி வரிகளும். இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் ஒரு மோன நிலைக்கும் இட்டுச் செல்லும். இதுவெல்லாம் சராசரி சினிமாச் சங்கீதத்தில் அடக்க முடியாத மகோன்னதம்.

சகோதரர் பாடலாசிரியர் பழநி பாரதி Palani Bharathi அவர்கள் திரையிசைக்கு வந்ததன் காரணத்தை நியாயம் கற்பிக்கும் பாட்டு.

“ஓவியத்தில் எந்தக் கோடு 

எங்கு சேரக் கூடும்

எல்லாமே...எல்லாமே 

நம் கையிலே”

“நிறம் பிரித்துப் பார்த்தேன்

உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்துக் கேட்டேன் 

சங்கீத வண்ணம் என்ன…….”

பறந்தேன் திரிந்தேன்...

உன் ஆசையில் ஓ.....

கரைந்தே உறைந்தேன் 

உன் காதலில் ஓ.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடகி சுஜாதா

கானா பிரபா

Thursday, March 25, 2021

தேவா இசைத்த வெளிவராத "அதிகாலை சுபவேளை" மூன்று படப் பாடல் ஆகியது


“இதென்னடா புது உருட்டா இருக்கே” என்பது மாதிரியான ஒரு செய்தி.
உன்ன நா தொட்டதுக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி மானம் கெட்டுப் போனவன்டி”
என்ற பாடல் தொண்ணூறுகளில் பிரபலம் கொண்டு விளங்கிய பாட்டு.
தேவா இசையில் “ஊர் மரியாதை” படத்துக்காக அந்தப் பாடல் அமைந்திருந்தது. ஆர்.பி.செளத்ரி தயாரிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். அதாவது சரத்குமார் துணை நடிகராக, வில்லனாக, குணச்சித்திர நாயகனாக என்று மெல்ல மெல்ல அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த வேளை நாயகனாக நடித்து வெளிவந்த படம்.
ஆனால் இந்த “உன்ன நான் தொட்டதுக்கு” பாட்டு ஏற்கனவே இதே சரத்குமாரை நாயகனாக்க்கி “கருணாநிதி சாந்தாராம்” என்ற இயக்குநர் கொடுக்கவிருந்த “அதிகாலை சுபவேளை” படத்துக்காகப் பதிவு பண்ணிய பாடல். இந்த “கருணாநிதி சாந்தாராம்” பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். இயக்குநர் அகத்தியன் என்றால் பளிச்சென்று மின்னுமே? அவரே தான் இவர். ராமராஜனின் மனசுக்கேத்த மகராசா படத்தின் கதாசிரியராக இதே பெயரிலும் பின்னர் ஒரே காட்சியோடு பெட்டி திருப்பி அனுப்பிய “மாங்கல்யம் தந்துனானே” படத்தின் இயக்குநராகவும் ரவிதாசன் என்ற பெயரிலும் இவர் அறிமுகப்பட்டதை முன்னர் தேனிசைத்தென்றல் தேவா தொடரிலும் குறிப்பிட்டிருந்தேன்.
தான் இயக்கிய ஆரம்ப காலப் படமான “அதிகாலை சுபவேளை” குறித்து அகத்தியன் எங்கும் பேசியதாக நான் அறியவில்லை. அத்தோடு தன்னுடைய எந்தப் படத்திலும் சரத்குமாரோடு இவர் இணையாததும் ஒரு விநோதம் கலந்த மர்மம்.
“அதிகாலை சுபவேளை” படப் பாடல்கள் 1989 ஆம் ஆண்டில் வெளிவந்த போது அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் திருப்பத்தூரான். இவரே பின்னாளில் காளிதாசனாக தேவாவோடு தொடர் இன்னிசை விருந்து படைத்தவர். அப்போது “உன்ன நான் தொட்டதுக்கு” பாடலை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார். அப்போது கிருஷ்ணராஜ் பெயர் ராஜன் சக்ரவர்த்தி. (அப்பப்பா ஒரே பதிவிலேயே மூன்று பெயர் மாற்றங்கள் 😆
கிருஷ்ணராஜ் பாடிய அந்த “உன்ன நான் தொட்டதுக்கு” பாடலைக் கேட்க
“அதிகாலை சுபவேளை” படம் வெளிவராத காரணத்தால் அந்தப் படத்தின்
அருமையான
பாடல்கள் வீணாகக் கூடாதென்று நினைத்தாரோ என்னமோ தன்னுடைய இசையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய “பொண்டாட்டி ராஜ்ஜியம்” படத்தில் இடம் பெற்ற “ராகம் ஒன்று அது சுகமானது” https://www.youtube.com/watch?v=Q4bM3M4aYiA
என்ற மனோ, எஸ்.ஜானகி பாடிய இனிய பாடலைப் பொருத்தினார்.
இன்னொரு துணுக்கு என்னவென்றால் இந்தப் பொண்டாட்டி ராஜ்ஜியம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் சாட்சாத் அகத்தியன் தான்.
இதற்கு முன் இன்னொரு புதினமும் இடம்பெற்றிருக்கிறது.
“ராகம் ஒன்று அது சுகமானது” பாடலையும், “கங்கை அமரன் பாடிய “பூஞ்சோலை குருவிகளே” https://www.youtube.com/watch?v=PggjUnxMx5Y பாடலையும் வெளிவராத“அதிகாலை சுபவேளை” படத்தில் இருந்து கார்த்திக் நடிக்க “நீலக்குயிலே நீலக்குயிலே” படத்திலும் பாவிக்க இருந்தார்கள். அதுவும் வெளிவரவில்லை. ரமி இசைத்தட்டில் இந்தப் பாடல்கள் நீலக்குயிலே நீலக்குயிலே படப் பெயருடனேயே இருக்கிறது.
இன்னொன்று “ஓரடி காதல் வாழ” https://www.youtube.com/watch?v=530EtsIMhE4 என்ற எஸ்.ஜானகி பாடிய அதிகாலை சுபவேளை படப்பாட்டு பின்னர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் குழுப்பாடலில் (அன்பே சரணம்/தண்ணிக் குடம் எடுத்து) தொகையறாவில் மெல்லத் தழுவியது.
ஆகவே இளையராஜா காலத்தில் மட்டுமல்ல தேவா காலத்திலும் எப்பவோ போட்ட பாட்டு எதுக்கோ பயன்பட்டிருக்கு என்ற நிலை இருந்திருக்கிறது மக்களே 😆
கானா பிரபா

Saturday, March 20, 2021

ஹரிச்சரண் ❤️


"ஹே...... உன்னுடைய நெற்றி
உன்னைப் பற்றிக் கூறுதே.....
உள்ளிருக்கும் பொட்டு
உந்தன் குட்டு சொல்லுதே...."

இந்த இடத்தில் இருந்து ரசித்து விட்டு அப்படியே முன்னோக்கிப் போய்
“அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா”


பாடலை ரசிப்பேன்.

இம்மாதிரி முன் சரணத்தில் ஒரு ஜாலம் காட்டுவதில் யுவன் சமர்த்தர். பல்லவி சாதாரணமாக இருக்கும் ஆனால் சரணத்தில் ஒரு அசாதாரண சங்கதி மிளிரும்.
எப்படி தேவாவுக்கு ஒரு ஹரிஹரன் வாய்த்தாரோ அது போல யுவன் ஷங்கர் ராஜா சக ஹரிச்சரண் கூட்டில் ஒரு புதுப் பொலிவு மிளிரும்.
“ராசாத்தி போல அவ என்னைத் தேடி வருவா”

“வா வா நிலவைப் புடிச்சுத் தரவா”

“வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுக்கிட்டேன்”

போன்ற பாடல்கள் எல்லாம் “துளித் துளி மழையாய் வந்தாளே”, யார் இந்தப் பெண்தான்” போன்ற அதி உச்சம் பெற்ற பிரபல பாடல்களுக்குச் சற்றும் சளைக்காதவை.
புதிய தலைமுறைப் பாடகர்களுள் ஹரிச்சரண் ஒரு குறுகிய காலத்தில் ரசிகர்களை ஈர்த்தவர். ஆனால் எனக்கு அவரின் முதல் பாடல் “உனக்கென இருப்பேன்” பாடலைக் கேட்டாலேயே அந்த நாளே இருண்டு விட்டதொரு பிரமை எழும். அதனால் அதைக் கேட்காமல் தவிர்த்து விடுவேன். உண்மையில் அங்கே தான் ஹரிச்சரணின் சக்தி இருக்கிறது. ஒரு பெரும் சோகக் குவியலை அப்படியே தூக்கி நம்மேல் போட்டு விடுவார்.
“கண்மணியே..... கண்மணியே....
அழுவதேன்…….”
என்று அந்தப் பாடலில் ஈனஸ்வரத்தில் பாடும் போது உடம்பெல்லாம் சுடும் கொள்ளிக் கட்டையால் தேய்த்தது போல இருக்கும். ஒரு பாடலின் சூழலாகவே குறித்த பாடகன் உறையும் தருணம் அது.
ஹரிச்சரண் நல்ல பாடகர் என்பதைத் தாண்டி நல்லதொரு ரசிகர். அதனால் தான் இளையராஜா காலத்துப் பாடல்களை அவர் மீள மீட்டும் போதும் சேதாரமில்லாது கொடுப்பார். முன்பு அவர் பாடிய “தானா வந்த சந்தனமே” பாடல் குறித்து நான் எழுதிய ரசனைப் பகிர்வு.
இசைஞானி இளையராஜாவின் “சித்திரையில் நிலாச்சோறு” வெளிவந்த காலத்தில் அதிகம் சீண்டாமல் ஆனால் பல வருடங்களுக்குப் பின் எதேச்சையாகக் கேட்ட
“கல்லால செஞ்சு வச்ச சாமி”
பாடலோடே அந்த நாள் முழுதும் குளிப்பாட்டியதில் எல்லாம் ஹரிச்சரணும் பங்கு போடுகின்றார்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, ஹரிச்சரண் என்ற பாடகரின் ஒரேயொரு பாட்டோடு மட்டும் வழ வேண்டும் என்ற கொடுப்பினை வந்தால் நான் தேர்ந்தெடுப்பது
“எப்போ வருவாரோ.....
எப்போ வருவாரோ......”

அற்ப சுக வாழ்வில்
ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தைக் காணேன்
பொன்னம்பலவாணன்
பாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்....
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே...
காதல் கொண்டேன்
வெளிப்படக் காணேனே……
எப்போது கேட்டாலும் இனம் புரியாதவொரு நோவை மனதில் எழுப்பும், இன்பமான வலி அது. கதைச் சூழலில் அந்தப் பெண்ணின் உணர்வுகளைச் சரியாக மொழி பெயர்த்துத் தன் பாட்டுக் குரலில் ஹரிச்சரண் கொடுக்கும் பாங்குக்கே அவர் இருக்கும் திசை பார்த்துக் கும்பிடலாம்.
இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
ஹரிச்சரண்.
புகைப்படம் நன்றி : விக்கிப்பீடியா

Wednesday, March 3, 2021

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️


மலையாளத்தில் “மிடுக்கன்” என்ற சொற் பிரயோகம் உண்டு. எனக்கு அதற்குச் சரியான அர்த்தம் கற்பிக்க நினைத்தால் சங்கர் மகாதேவன் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் அப்பேர்ப்பட்ட மிடுக்கனைக் கூடப் பாதரசமாக உருகி ஓட வைத்தது இந்தப் பாட்டு.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார், தீவிர இளையராஜா வெறியர் அந்த வெறியிலும் இளையராஜா எண்பதுகளில் கொடுத்த பாடல்களைத் தான் ரசிப்பாராம். 

ஆனானப்பட்ட அவரையே ஆட்கொண்ட பாட்டு இந்தப் பாட்டு. 

"ச்சக் சங்கர் மகாதேவன் கொண்டு போட்டுட்டானப்பா" என்று சொல்லும் போது அந்தக் "கொண்டு போடுதல்" தன்னை மயக்கியதன் உச்ச வெளிப்பாடாகப் பிரதிபலிக்கும்.

"கண்ட நாள் முதல்" படம் ஒரு அருமையான பொழுது போக்கு என்ற ஒரு பார்வை இருக்க, இன்னொரு புறம் அழகான காதல் உளவியல் சார்ந்த படைப்பாக நோக்க வேண்டும். ஊடலின் ஒரு பரிமாணமாகவே வெளியிப்படுத்தப்பட்டிருக்கும்.

"கண்ட நாள் முதலாய்" பாடலைத் தவிர மீதி அனைத்தும் தாமரையின் வரிகள். அதில் "மேற்கே மேற்கே மேற்கே தான்" ஒரு அட்டகாச இசைப் படைப்பு. இதுவும் யுவன் தானா கொடுத்தது என்ற இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் கேட்டு ரசிக்கும் போதும்.

சங்கர் மகாதேவன் பாடிய பாடல்களைக் கேட்கும் போது ஏதோ முழுப்பாட்டையும் ஒரே மூச்சில் பாடித் தள்ளி விட்டுக் கடப்பதைப் போல இருக்கும்.

"கோபம் கொள்ளும் நேரம் 

வானம் எல்லாம் மேகம் 

காணாமலே போகும் ஒரே நிலா"

என்று முதல் சரணத்தில் குரல் வைக்கும் தறுவாயில் "ஓஓஓ" என்ற ஒரு அழுத்தம் கொடுத்துத் தொடங்குவதும் "காணாமலே" என்ற சொல்லை சங்கர் மகாதேவன் ஸ்டைலில் எப்படி நிமிர்த்திச் சுழட்டி அடிக்கிறார் என்ற நுணுக்கத்தையும் அனுபவிக்கலாம்.

அது போல் "நீதானென்று பார்த்தேனடி" யில் கொடுக்கும் விறைப்பும் "சகி" இல் தரும் நெகிழ்வும் அனுபவிக்க வேண்டியவை.

சங்கர் மகாதேவன் குரலுக்கு ஒரு படி தாழ்வாகப் பறக்கும் சாதனா சர்க்கத்தின் குரல் பாடல் உருவாக்கத்தின் சிறப்பு வெளிப்பாடு.

"லை லை லை லை லைலா லஹிலா லஹி லஹி லே" என்ற சங்கதி சங்கர் மகாதேவனுக்காகவே நெய்யப்பட்ட சாதகம்.


சுருக்கமாகச் சொன்னால் "மேற்கே மேற்கே மேற்கே தான்" பாடல் ஒரு மகுடிப் பாட்டு. அது கேட்டால் ஆடிக் கொண்டே இன்பமாக அலையும் மனசு.


தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசை புதுப் புதுக் குரல்களை அரவணைத்த போது சங்கர் மகாதேவனையும் இறக்குமதி செய்யதது. ஆனால் அந்தக் குரல் பத்தோடு பதினொன்று அல்ல என்பதை நிரூபிக்குமாற் போல சங்கர் மகாதேவனை விட்டால் இந்தப் பாடலுக்கு இவ்வளவு மகத்துவம் செய்து விட முடியாது என்று மறு பரிசீலனை செய்ய முடியாத தெரிவுகளாக ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் கொடுத்தார்கள். இன்றைக்கு இயங்கும் இளம் பாடகர்கள் பலர் சங்கர் மகாதேவனின் பாணியை அடியொற்றுவதையும் கவனிக்க முடியும்.

சங்கர் மகாதேவனின் குரல் அடித் தொண்டையாப் கத்தும் கர்ண கடூரமல்ல. அது ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடு. "உப்பும் கருவாடு ஊற வச்ச சோறு" சந்தோஷத்தில் பீறிடும் போதும் "தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே" என்று சோகத்தில் கனன்று வெளிப்படும் போதும் அந்த ஆர்ப்பரிப்பு இருக்கும். சுறுசுறுப்பாய் இருப்பவனுக்குப் பக்கத்தில் இருந்தாலே அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளுமாற் போல இருக்கும் சங்கர் மகாதேவன் பாடல்களைக் கேட்கும் போது.

"பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு" என்னும் அந்தக் கனிவான குரல் கல்லையும் கரைத்து விடும்.

ரிதம் படம் வெளிவந்த போது சங்கர் மகாதேவனை அதிகம் கண்ட பரிச்சயம் இல்லாத ரசிகர்கள் சூழ சிட்னியில் ஒரு திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். "தனியே தன்னந்தனியே" பாடலுக்கு சங்கர் மகாதேவன் ஆடுவதைப் பார்த்து ஆளை அடையாளம் தெரியாது உருவ அமைப்பை வைத்துக் கூச்சலிட்டுக் கலாட்டா பண்ணினார்கள்.

எனக்கோ அந்த நேரம் கடுப்பாக இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிட்னியில் நிகழ்ந்த சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் கூடிய அந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவர் பாடி ஆடியதைக் கை தட்டி ரசித்தவர்களில் அவர்களும் இருந்திருக்கக் கூடும். இதுதான் உலகம் 😀

ஆனானப்பட்ட மலையாள தேசத்தின் கதவை ஒரு பக்கம் ஶ்ரேஷா கோசலும் இன்னொரு பக்கம் சங்கர் மகாதேவனுமாக அகலத் திறந்து வெற்றி கண்டார்கள். "பிச்ச வச்ச நாள் முதல்" பாடலுக்கு சேட்டன்கள் மாதக் கணக்கில் கிறங்கியிருக்கிறார்கள், இன்னும் கூட. இது மாதிரி நிறையப் பாட்டுகள்.

சங்கர் மகாதேவன் தென்னிந்திய மொழிகளில் வெற்றி கண்ட பாடகர் ஹிந்தியில் வெற்றி பெற்ற கூட்டணி இசையமைப்பாளர்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

சங்கர் மகாதேவன்.

https://youtu.be/EuJ-P3FZzHg