Pages

Friday, November 15, 2019

🎸 தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் - பியாரிலால் 🥁





“மயில்தோகை அழைத்தால்,
மழைமேகம் நெருங்கும்..
மடல்வாழை அழைத்தால்,
மழைச்சாரல் திரும்பும்.. “
90s Kids இன் பால் புட்டியோடு இந்தப் பாடலும் அவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும். இன்றைக்கும் இலங்கையின் தனியார் பண்பலை வானொலிகளில் வாரம் ஒரு தரமாவது ஒலிக்கும் பண்பு கொண்டது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் - பியாரிலால் கூட்டணி என்றறியாமலேயே நேசிப்போர் பலர் இருக்கிறார்கள்.
அது போலவே 80s Kids இற்கும் ஒரு காலம் இல்லாமலா போய் விடும்?
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க..
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க...
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
எண்பதுகளில் வீடியோ படப்பிடிப்பு கிராமங்கள் எல்லாம் ஆக்கிரமித்த வேளை, ஊர்க் கல்யாண வீடு, சாமத்திய வீடு (பெண் பெரியவளாகும் சடங்கு) எல்லாம் வீடியோ படக் காட்சிகளாக எடுத்துத் தள்ளினார்கள். அப்போது இந்த “பன்னீரில் நனைந்த பூக்கள்” https://youtu.be/7VVtQB2S6vA பாடல் அங்கீகரிக்கப்பட்ட பின்னணி இசை போல பெண் பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், பெரியவள் ஆகிய சடங்கு எல்லாம் ஒட்டிக் கொண்டு விட்டது.
கோவைத்தம்பி அந்தக் காலத்து சூப்பர் ஹிட் தயாரிப்பாளர். பயணங்கள் முடிவதில்லை ஒரு வருஷம் ஓடிய படத்தோடு உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், இதயக் கோயில், நான் பாடும் பாடல், இளமை காலங்கள் என்று இசைஞானி இளையராஜாவின் தேன் மாரி சொரியும் பாடல்களோடு ஹிட் படங்களாகக் கொடுத்து வந்தார். மைக் மோகன் என்று
அடையாளம் கொடுத்ததும் இந்த மாதிரியான படங்களின் வழியாகத் தான். ஆனால் கோவைத்தம்பி - இளையராஜாவுக்கிடையே விரிசல் எழ வேறு இசையமைப்பாளர்களோடு கை கோர்க்க நேர்ந்தது. அந்த வகையில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”, தேவேந்திரன் இசை கொடுக்க “மண்ணுக்குள் வைரம்” என்று தயாரித்தவர் வட நாட்டின் உச்ச இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் - பியாரிலால் ஐத் தமிழுக்கு அழைத்து வந்தார்.
ஸுஸுஸு ஸும் ஸுஸு ஸுஸு ஸும்
கவிதைகள் விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
பாடல் வரிகள் தான் தமிழ் ஆனால் பக்கா வட நாட்டு மணம் வீசும் பாட்டு இது. ஆனாலும் புதுமையாக இருக்கிறதே என்று கொண்டாடினார்கள் மக்கள். அந்த அந்நிய வாடையைக் குறைத்து இயல்பாக்கிய விதத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பங்களிப்பை உண்மையில் பாராட்ட வேண்டும்.
பாடல்களை எழுதிய வாலி, முத்துலிங்கம், எம்.ஜி.வல்லபன், வைரமுத்து பங்களிப்பும் முக்கியமாகச் சொல்ல வேண்டியது. இங்கே தான் சம காலத்தில் மையம் கொண்டு வெற்றிகரமாகக் கலக்கிய மனோஜ் - கியான் இரட்டையர்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு ஆபாவாணன் கிடைத்ததால் லஷ்மிகாந்த் - பியாரிலால் அளவுக்கு அந்நிய நொடி அடிக்காத இசையைக் கொடுத்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் இயக்குநர் கே.ரங்கராஜ் எடுத்த எல்லாப் படங்களுமே சோடை போகாத பாடல்களோடு இருந்தன. இங்கே வேறொரு இசையமைப்பாளர் என்ற கணக்கில் “உயிரே உனக்காக” படமும் ஒரு மியூசிக்கல் ஹிட் என்ற அடையாளத்தை அவருக்குச் சேர்ப்பித்தது.
நல்ல பாடல்கள் என்றால் மோகன் படங்கள், நவநாகரிக உடை, பொட்டு, தோடு ஈறாக நதியாவின் ஆக்கிரமிப்பு பெண்களிடம். இந்த இருவரும் சேர்ந்து “உயிரே உனக்காக” படத்துக்கு இன்னொரு பலமாக இருந்தார்கள். குணச்சித்திரத்துக்கு சுஜாதா, வேடிக்கைக்கு மீசை முருகேஷ் என்று “ஓடோடி விளையாடு”
https://youtu.be/f9MxWIQ_CwE
கொண்டாட்டப் பாடலுக்கும் களம் கொடுத்தது. இந்த நாள் சின்னத்திரை நட்சத்திரம் டிடி என்ற திவ்ய தர்ஷினியின் சகோதரி பிரியதர்ஷினி மற்றும் மாஸ்டர் டிங்கு குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருப்பர்.
ஆரீராரோ ஆரீராரிரோ
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண் மீன்கள் வானின் மேலே தூங்குதே
https://youtu.be/HtQsENDEImA
இன்று கேட்டாலும் மடியில் போட்டுத் தாலாட்டுவது போல எப்பேர்ப்பட்ட சங்கீதம் இது. ஆர்ப்பாட்டமில்லாத குரலில் எஸ்.ஜானகி குரலில் தாலாட்டைக் கேட்பதே இனிமை, சொர்க்கம் என்றும் சொல்லலாம்.
பல்லவி இல்லாமல், பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஒடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறென் ஹ
வெறும் கிட்டார் இசையை முன்னுறுத்தி
எஸ்.பி.பி பாடிய இந்த ஆலாபனை
https://youtu.be/cnH7BXl5rlQ
கிறங்க வைக்கும்.
ஒரு கை தேர்ந்த இசையமைப்பாளரை வைத்து எத்தனை ஹிட் பாடல்களையும் கொடுத்து விடலாம். ஆனால் புதுமை என்று வரும் போது அதுதான் அவரின் அடையாளமாக இருக்கும்.
அந்த வகையில்
“I Want To Be A Big Man"
https://youtu.be/6L3wMPDgvSk
பாடல் உயிரே உனக்காக வில் தனித்து நின்று ஜாலம் செய்யும் பாட்டு.
எஸ்.பி.பி & எஸ்.ஜானகி ஜாலியாக குரலில்
சேட்டை பண்ணிப் பாடிய பாடல்கள் ஏராளமுண்டு. ஆனால் இதை அந்த வகுப்புக்குள் போட முடியாது இரு வேறு கனவுகளுடன் காதலர் பாடும் பாட்டாக வாலியின் கலக்கல் வலிகளோடு அமைந்திருக்கும். பெரும் பணக்காரியாக இருந்தவள் ஏழை அவன் மனதே போதும் என்ற வேட்கையோடு இருக்க, அவனோ பணக்காரக் கனவை வெளிப்படுத்திப் பாடுவான்.

உயிரே உனக்காக படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட் என்றால் அடுத்து வந்த கோவைத் தம்பியின் தயாரிப்பில் “மங்கை ஒரு கங்கை” திருஷ்டிப் பொட்டு. மலையாளத்தின் பிரபல இயக்குநர் ஹரிஹரன் இயக்கிய படமிது. எஸ்.ஜானகி பாடிய
நீராடி” வா தென்றலே”
https://youtu.be/qLfGZS50obY
பாடல் மட்டும் இதம்.
மீண்டும் முதற் பந்திக்குள் போனால் ரகசியப் போலீஸ் படம். கிட்டத்தட்ட சரத்குமாரின் சொந்தப் படம் மாதிரி. சில வருட இடைவேளைக்குப் பின் லஷ்மிகாந்த் - பியாரிலால் தமிழுக்கு வந்தார்கள்.
“சோளீக்கே பீச்சே கியா ஹே” ரேஞ்சில்
“மன்மதன் மந்திரம் இது”
https://youtu.be/xHqmOC3m2dg
கவிதா கிருஷ்ணமூர்த்தி & சித்ரா குழுவினரின் ஒட்டியும் ஒட்டாத பாட்டு, இதை விடுத்து அட்டகாசமான மூன்று ஜோடிப் பாடல்களில்
“ஏன் ஏன் என்னையே பார்க்கிறாய்”
https://youtu.be/E68HWztzcOM
எஸ்.பி.பி & கவிதா கிருஷ்ணமூர்த்தி இவர்களோடு போட்டி போட வானொலிகளில் அடிக்கடி இடம் பெறாத மனோ & ஸ்வர்ணலதாவின் “கண் இமைக்காமல் உனைப் பார்த்தென்ன”
https://youtu.be/5lE1mLF4e6E
அட்டகாஷ் ரகம். ரகசிய போலீஸ் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஜாலியின்னா வாலி எழுதியது.
“மயில் தோகை அழைத்தால்”
https://youtu.be/hxiFV6ZhPMg
பாடல் அந்த கிட்டார் நிரவலை விலக்கினால்
வழக்கமான லஷ்மிகாந்த் - பியாரிலால் தனமில்லாது தமிழுக்கு மிகவும் அந்நியோன்யமான இசையாக ஒலிக்கும். அதுவும் அந்த மெட்டின் சந்தங்கள் அபாரம்.
வளைக்காமல் வளைக்கரம் தேட,
வருந்தாமல் துணைக்கரம் கூட,
இடைசேர நமக்கு, இடைவேளை எதற்கு...
என்று வாலியாரும் வளைத்து வளைத்துப் பின்னியிருப்பார். இது தனிப்பாடல் என்றாலும் ஜோடிப் பாடலுக்குண்டான குணாம்சம் இருக்கும்.
கடலில் இல்லாத மீனும்;
கணையில் விழாத மானும்;
விழியில் கொண்டாடும் மாது,
விடுமோ அன்றாடம் தூது?
மயில்தோகை அழைத்தால்,
மழைமேகம் நெருங்கும்..
மடல்வாழை அழைத்தால்,
மழைச்சாரல் திரும்பும்..
அழைக்காமல் வருவேன்..
அலுக்காமல் தருவேன்;
மனக்கோயில் சிலையே..
உனக்கேது விலையே.
கானா பிரபா ❤️