Pages

Tuesday, August 16, 2016

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (தங்க மீன்கள்), "நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ கடந்த இரண்டு நாட்களாக மனதின் ஓரத்தில் இருந்து "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருக்கிறது.

அது "சத்தம் போடாதே" படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு.

யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.

ஒரு இசையமைப்பாளரின் இசைத்துடிப்பறிந்து அதற்கு ஆத்மார்த்தமான வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் பாடலாசிரியர் வரம். யுவனுக்கு நா.முத்துக்குமாரும் வாய்த்தார். 
பாடலாசிரியர் வைரமுத்துவுக்குப் பின்னர் தனிப்படத்தில் அதிக பாடல் அல்லது முழுப்பாடல்களும் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையும் முத்துக்குமாருக்கே வாய்த்தது.

"பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" இந்தப் பாடலைக் குறித்த காட்சிக்கான களப்பாடலாக மட்டுமன்றி இதையே தனித்து நம் உணர்வின் பரிமாறலாகத் திரை தாண்டி உணர முடிகின்ற வரிகள். அந்த வரிகளை நோகாமல் அணைத்து வருடும் இசை ஆறுதல் மொழி சொல்கிறது. இந்த மாதிரிப் பாட்டெல்லாம் வெறும் வணிகச் சரக்கிற்கான கூட்டணி அல்ல உணர்வுகளின் சங்கமம்.

"எதை நீ தொலைத்தாலும் 
மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா...."
https://www.youtube.com/shared?ci=pdH6KmWdudg

மேற்கண்ட பதிவை நான் பகிர்ந்த போது ட்விட்டர் நண்பர் புதியதொரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். 
தற்கொலை செய்யும் முடிவில் இருந்த பெண்ணொருத்தி இந்தப் பாடலைக் கேட்டு விட்டுத் தன் எண்ணத்தைக் கை விட்டதாக சத்தம் போடாதே படத்தின் இயக்குநர் வஸந்த் அவர்கள், நா.முத்துக்குமார் அவர்களின் ,மரணச் சடங்கில் சொன்னதாக அந்தக் காணொளியையும் பகிர்ந்து கொண்டார். 
இதோ அந்தக் காணொளி




Wednesday, August 10, 2016

இயக்குநர் வடிவெடுத்த பஞ்சு அருணாசலம் அவர்கள்



எழுபதுகளின் மத்தியில் மெல்ல மெல்லக் கிளம்பி எண்பதுகளின் மிக முக்கியமானதொரு கதை சொல்லியாக தமிழ் சினிமாவில் மிளிர்ந்தவர் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
ஒரு வெற்றிப்படத்திற்குண்டான சூக்குமத்தை நுணுக்கமாகத் தன் தயாரிப்பில் மட்டுமன்றிப் பிறர் தயாரித்த படங்களில் பணியாற்றிய போதும் கையாண்டவர். எண்பதுகளின் வசூல் நிறைந்த சினிமா வர்த்தகத்தின் மிக முக்கிய புள்ளி என்ற நிலையில் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் வடிவம். அதற்கு முந்திய கால கட்டங்களில் பாடலாசிரியர் என்று இயங்க ஆரம்பித்த பஞ்சு அருணாசலம் அவர்களது இன்னொரு பரிமாணம் அவர் இயக்குநராகவும் இருந்தது.

தமிழ் சினிமாவில் பல்வேறு ஆற்றொழுக்கான கதாசிரியர்கள் வெற்றிப்படங்களுக்குத் துணை போயிருக்கிறார்கள். பின்னர் இயக்குநர் வடிவம் தரித்த போது வெற்றி பெற்றவர்களுக்கு நிகராகத் தோல்வி கண்டவர் பட்டியலும் இருக்கும். உதாரணமாக ஆர்.செல்வராஜ் அவர்களுக்குக் கதாசிரியர் அந்தஸ்தில் கிட்டிய வெற்றிகளோடு ஒப்பிடும் போது அவர் இயக்கிய படங்கள் என்னதான் வித்தியாசமான கதைக்களனைக் கொண்டும், இசைஞானி இளையராஜாவின் அற்புதம் நிறைந்த பாடல்களைத் தாங்கியும் அமைந்தாலும் அவை அவரை வணிக வெற்றியில் அடையாளப்படுத்தாதவை. பஞ்சு அருணாசலம் அவர்களும் இயக்குநராகச் சாதித்ததை விட பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாகப் பெற்ற வெற்ரீ உச்சம் நிரம்பியது.  மொத்தம் நான்கு படங்களைப் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்க்யிருக்கிறார். இவை 1988 இலிருந்து ஐந்து வருடங்களுக்குள் இவர் சாதித்து முடித்த கணக்கு.

"மணமகளே வா" இது தான் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய முதல் படம், இதில் விநோதம் என்னவென்றால் இவர் எழுதிய முதல் பாட்டு "மணமகளே மருமகளே வா வா" என்ற சாரதா திரைப்படத்தின் புகழ்பூத்த பாட்டு. அந்தப் பாடலின் முதலடியே இவரின் முதல் படத் தலைப்பானது . இன்னொருவர் தயாரிப்பில் அமைந்த இந்தப் படத்தில் பிரபு, ராதிகா ஜோடியோடு மற்றைய கதாபாத்திரத் தேர்வும் கச்சிதமாக அமைந்த வெற்றிப்படம்.

 "Tell me Tell me" https://youtu.be/gpjBbCZZc14 என்று அருண்மொழி அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் அமைந்த வித்தியாசமான பாடல் வாலியின் வரிகளில் அமைய, மீதி எலா, பஞ்சு அருணாசலம் அவர்கள் வரிகள் பூண்ட பாடல்கள். 
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசையரசி பி.சுசீலா பாடும் "ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் பாட்டு" https://youtu.be/nBh2maLfeyk
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவுமொன்று "மணமகளே வா" படத்தின் முத்திரைப் பாட்டு.

தெலுங்கில் வெளிவந்த "கலிகாலம்" படத்தில் சந்திரமோகன், ஜெயசுதா நடித்தது. இயக்குநர் விசுவின் படங்களுக்குண்டான நடுத்தரக் குடும்பத்து அல்லாட்டம் தான் கதைக்கரு. இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் இந்தக் கதையின் உரிமத்தை வாங்கித் தானே தயாரித்து, பாடல்கள், வசனம், இயக்கத்தையும் கையாளும் துணிவைப் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு வந்திருக்காதே. அந்தக் காலகட்டத்தில் நீதிக்குத் தண்டனை, தென்றல் சுடும் போன்ற படங்களில் ஜோடி கட்டிய ராதிகா, நிழல்கள் ரவி ஜோடி போட்டனர். இசைஞானி இளையராஜா இசையில் அவருடன், மனோ, ஸ்வர்ணலதா பாடல்களைப் பாடியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த பாடல்களோடு ஒப்பிடுகையில் வெளியில் தெரியாத அளவுக்கு இந்தப் படப் பாடல்கள் அமுங்கிப் போயின.
அந்தப் படத்தின் பாடல்களின் காணொளி மூட்டை இதோ http://www.youtube.com/playlist?list=PLEqZCvIXGq0ZBgebwYp8kd0rX7u5Mjsqx

"மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு" இந்தப் பாடல் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பட்டி தொட்டியெல்லாம் முழங்க, "ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே" திருப்புகழை யாரோ இதே மாங்குயிலே பூங்குயிலே சந்தத்தில் பாடியதாக அப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சேதி அறிந்து சொன்னது அப்போது பரபரப்பான சினிமாச் சமாச்சாரம். பின்னர் அந்த ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே முதலடிகளை வைத்துக் கொண்டு சினிமா ஜிகினா வரிகளைச் சூடிய பாட்டு வந்தது "தம்பி பொண்டாட்டி" படத்தில்.  ஆம் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய இன்னொரு படம் இந்த "தம்பி பொண்டாட்டி". ரகு(மான்), சுகன்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தது.
இந்தப் படத்தின் பாடல்கள் வந்த நேரம் நான் வெறி பிடித்தது போல் இளையராஜா பாடல்கள் புதுசா எது வந்தாலும் ஒலிப்பதிவு செய்வித்துக் கேட்ட காற்சட்டைக் காலம். ஆகவே "ஏறு மயில்" https://youtu.be/dqWpDeiEXt4 (ஸ்வர்ணலதா, கல்பனா, மின்மினி, பிரசன்னா குழுவினர்) பாடல் மட்டுமன்றி இந்தப் படத்தில் வந்த பாடல்கள் அப்போது இசைஞானி கொடுத்த மற்றைய படங்களின் பாடல்களோடு ஒப்பிடும் போது வெகுஜன அந்தஸ்து அடையாவிட்டாலும் எனக்குப் பிடித்துப் போனவை. குறிப்பாக் உமா ரமணின் "உன் எண்ணம் எங்கே எங்கே" https://youtu.be/6HNmHC-5JxE 
அருண்மொழியின் "சொன்னாலும் வெட்கம்" http://shakthi.fm/ta/player/play/s2268d322
மனோ குழுவினரின் துள்ளாட்டம் "என் மானே தேனே" https://youtu.be/7HAFUNPgBHg
இவற்றோடு உமா ரமணனின் தெய்வீகப் பாட்டு "கண்ணன் வந்ததாலே" https://youtu.be/828KdEatCwo ஆகியவை பிடித்தமானவை. இதுவரை கேட்காவிட்டால் நல்ல ஒலித்தரம் மிகுந்த ஒலி வட்டில் கேட்டுப் பாருங்கள், நுணுக்கமாக ரசித்துக் கேட்க.

"ஐயோ சொக்கா ஒன்றா இரண்டா மொத்தம் பத்துப் பாட்டுகள்" என்று இன்பத்தில் ஏங்க வைத்த பத்துப் பாட்டுப் பொட்டலமாக "புதுப்பாட்டு" படம் வெளிவந்தது. சிறியதும், பெரியதுமாக அந்தப் பாடல்கள் கிராமியத் தெம்மாங்கும், மேற்கத்தேய இசையுமாக அமைந்த அருமையான இசைப் பெட்டகம் இந்தப் படம். பஞ்சு அருணாசலம், வாலி, கங்கை அமரன் பாடல்களை எழுதினார்கள்
மீண்டும் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்க, "மணமகளே வா" படத்துக்கு அடுத்து இவருக்குப் புகழ் கொடுத்த படம் இது.
அந்தக் காலத்துப் பேசும் படம் இதழின் முன்னட்டை, பின்னட்டை, நடுப்பக்கங்கள் நாலு எல்லாவற்றிலும் இந்தப் படத்தின் விளம்பரங்கள் அப்போது வந்தன. மக்கள் நாயகன் ராமராஜன், வைதேகி ஆகியோர் மாட்டு வண்டி மேலேறிப் பயணிக்க, இன்னொரு நாயகி சுமா ரங்கநாத்  நவ நாகரிக ஆடை போட்டு மிளிர வித விதமான புகைப்பட விளம்பரங்கள் அவை.
ஐயோ அந்த "நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்" https://youtu.be/qRpeXjMxXr0 பாட்டை விட்டு மற்றப் பாடல்களுக்குப் போக மனசு வரவில்லை அப்போது. பின்னர் "எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நெனக்கிறே" (இளையராஜா & ஆஷா போஸ்லே) பாடலைச் சிரித்துக் கொண்டே கேட்டதும்,
 "சொந்தம் வந்தது வந்தது இந்தச் சுகமே மச்சான் தந்தது" https://youtu.be/Ftn1OmErJ2o சித்ரா பாடிய அந்த பாடலை காதல் காய்ச்சலில் உருகி உருகிக் கேட்டதும் மறக்க முடியுமா என்ன? 
"இந்தப் பூமியே எங்க சாமி அம்மா" https://youtu.be/mNc665Dof38 தைப்பொங்கலுக்குத் தைப்பொங்கல் நான் வானொலியில் ஒவ்வொரு ஆண்டும் கொடுப்பது. 
"பப்பாபப்பா" என்ற எள்ளலோடு "குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வெறும் பாறை மட்டும் தான் பாட்டுப் படிக்கும்" https://youtu.be/21hnuqQ0N0k கங்கை அமரன் குரலை மாற்றிக் கொண்டாட்டம் போட்ட பாட்டு, கூடவே எஸ்.பி.சைலஜாவும்.
இதில் டச்சு மொழியில் அமைந்த பாடலும் உண்டு, கதைக்களனில் ஜேர்மனியும் வருவதால். அந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்.
"புதுப்பாட்டு" திரைப்படத்தின் அத்தனை பாடல்களையும் கேட்டு ரசிக்க.
http://m.raaga.com/tamil/album/pudhu-paattu-t0000332

கலிகாலம், மற்றும் தம்பி பொண்டாட்டி படங்களில் கிரேசி மோகன் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தின் முக்கியமானதொரு இயக்குனர் சி.ஐ.ராஜேந்திரந்தின் கலை வடிவமைப்பைக் கவனித்திருக்கிறார். 
பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்குநராக அவதாரம் எடுத்த இந்த நான்கு திரைப்படங்கள் எந்தச் சூழலில் அவரால் இயக்க வேண்டிய நிலை வந்தது என்ற கேள்வியைக் கேட்க முடியும். ஆனால் அவர் அதற்கான பதிலை விட்டுச் சொன்றிருக்கிறாரா.... தெரியவில்லை.



Tuesday, August 9, 2016

திரையுலக ஆளுமை பஞ்சு அருணாசலம் அவர்கள் நினைவில்

நான் எடுத்த காரியம் எல்லாத்துலையும் வெற்றி அடைஞ்சேனா என்றால் இல்லை ஆனால் என்னால் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை - பஞ்சு அருணாசலம்

மதிப்புக்குரிய பஞ்சு அருணாசலம் அவர்கள் சில மணி நேரம் முன்னர் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சி கொண்டேன்.  தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாக, இயக்கு நராக விளங்கிய இவர் மனித உருக் கொண்ட சினிமாத் தொழிற்சாலை. கண்ணதாசனின் உதவியாளராக இருந்து சிறு முதலீட்டுப் படங்களில் ஆரம்பித்து பெரும் பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளிவர். இசைஞானி இளையராஜாவுக்கு அறிமுகம் கொடுத்தவர் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு மாபெரும் வர்த்தகச் சந்தையைக் காட்டியவர்.
 பஞ்சு அருணாசலம் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்குக் கடந்த மூன்று மாதங்களாக பேஸ்புக் வழியான நட்புப் பாலம் கிட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த உறவுப் பாலத்தை ஏற்படுத்தியது இந்தப் பதிவு

பூப்போல பூப்போல பிறக்கும் பால் பால் போல சிரிக்கும் 👼🏻 பஞ்சு அருணாசலம் தொடர் 

ஆனந்த விகடனில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் அவர்கள் தன் திரையனுபவங்களைத் திரட்டி அட்டகாசமான தொடர் எழுதி வருகிறார்.

திரையுலகில் சாதனை படைத்த இம்மாதிரியான மூத்தோர்களின் அனுபவங்களைப் படிப்பதே சிறப்பு. இந்தப் பணியைப் பத்திரிகைகள் அவ்வப்போது செய்து வந்தாலும் பலரை அவர்கள் இந்த முயற்சியில் இறக்கவில்லை. அதனால் வானொலிப் பேட்டி வழியாக "ஆபாவாணன்" உள்ளிட்டவர்களின் நீண்ட தொடர் பேட்டிகளை எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
பத்திரிகைத் தொடரில் குறித்த ஆளுமை பரவலான வெகுஜன வட்டத்துக்கு எழுதும் போது சுவாரஸ்யம் மிக்கதாக அமைய வேண்டும். முன்னர் சினிமா எக்ஸ்பிரஸில் இயக்குநர் விக்ரமன் எழுதி வந்த "நான் பேச நினைப்பதெல்லாம்" அவ்வகையினதே.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் கே.பாக்யராஜ் குமுதத்தில் தன் அனுபவத் தொடர் எழுத வந்தபோது ஆவலாக இருந்த எனக்குப் பெரும் ஏமாற்றம். வழவ்வழ கொழ கொழ வென்று இழுத்துத் தள்ளிவிட்டார். அந்தத் தொடரும் மேற்கொண்டு நகராமல் சிகப்பு ரோஜாக்களோடு பொத்தொன்று நின்று விட்டது.
குங்குமத்தில் இயக்குநர் மனோ பாலாவின் அனுபவத் தொடரும் ரசிக்க வைத்துச் சலிக்க வைத்தது பின்னர்.
இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் எழுதிய "நெஞ்சம் நிறைந்த நினைவுகள்" நூலை இந்த ஆண்டு புத்தகக் கொள்வனவுப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.

அந்த வகையில் பஞ்சு அருணாசலம் எழுதும் தொடர் வெகு நேர்த்தியும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதற்குத் தொகுப்பாசிரியரும் காரணமாக இருக்கலாம்.

இதன் வழியாகவே "நானும் ஒரு பெண்" என்ற திரைப்படத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா பாடும் "பூப்போல பூப்போல பிறக்கும்" பாடலை எழுதியது பஞ்சு அருணாசலம் என்று தெரிய வந்தது.
கடந்த வாரம் இந்தப் பாடலின் ஒரு சில வரிகளை ஒலிபரப்பி மேற்கொண்டு தொடர முடியாமல் நேயர் அழைப்பு வந்ததால் முழுமையாக நான் இதைக் கொடுக்கவில்லை. அதற்கு நேயர்களின் செல்லக் கோபத்துக்கு ஆளானேன்.
இசை மேதை சுதர்சனம் அவர்களின் நட்சத்திரப் பாடல் இது.
"நானும் ஒரு பெண்" படத்தை லைக்கா கைங்கரியத்தில் வார இறுதியில் கொஞ்ச நேரம் பார்த்தேன். ஏவிஎம் நிறுவனம் இன்னொரு உப நிறுவனமான "முருகன் பிக்சர்ஸ்" வழியாகத் திரையிலும், நிஜத்திலும் ஜோடி கட்டிய எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரோடு எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, ஏவிஎம் ராஜன் நடித்தது. இதில் நடித்து நிஜத்திலும் ஜோடியான இன்னொரு ஜோடி ஏவிஎம் ராஜன், புஷ்பலதா.

படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார் ஆர்.சுதர்சனம். அதை அனுபவிக்க

இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் பாடல் பிறந்த கதையையும் சொல்கிறார்.

பூப்போல பூப்போல பிறக்கும் பாடலை ரசிக்க

தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதை வசனகர்த்தா பஞ்சு அருணாசலம் குறித்து நான்கு வருடங்களாக நான் ட்விட்டரில் பகிர்ந்ததில் தேர்ந்தெடுத்தவை இவை : 


ராஜாவை நான் அறிமுகப்படுத்தியது தெய்வ சங்கல்பம், தன்னை உயர்த்திக்கொண்டது தொழில் பக்தியும் கடின உழைப்பும் - பஞ்சு அருணாசலம்
#மனதோடு மனோ

ராஜாவை இசையமைப்பாளராக ஆக்க முன்னரேயே 600 படங்களில் பல்வேறு பணிகளில் பணியாற்றியிருக்கிறார் பஞ்சு அருணாசலம் #நிறைகுடம்

தன் சபா மேடையில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலை பாலமுரளிகிருஷ்ணா பாடுவதே அதன் பெருமை கூறும் - பஞ்சு அருணாசலம்

விஜய் பாஸ்கர் நல்லவர் ஆனால் வேறு சில இசையமைப்பாளர்கள் ராஜாவை என் தயாரிப்பில் போடவேண்டாம் அதிஷ்டமில்லாதவர் என்றார்கள் - பஞ்சு அருணாசலம்

அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலுக்கு ராஜா கொடுத்த ஆர்க்கஸ்ட்ரேஷன் பிரமாண்டமானது அதைப்பலர் பின்னாளில் பயன்படுத்தினார்கள் - பஞ்சு அருணாசலம்

ராஜாவை சந்தித்தநாளில் போட்ட மெட்டுக்களில்ஒன்று "வாங்கோண்ணா" இன்னொன்று க்ளாசிக்கல் அதை பாலாஜி பின்னாளில்பயன்படுத்தினார் - பஞ்சு அருணாசலம்

ஆரம்பகால இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்குப் பஞ்சு அருணாசலம் வரிகள் தான் நல்ல பொருத்தம்  #அழகு தமிழ்

பஞ்சு அருணாசலம், நீங்களும் கடவுளாக இருந்துவிட்டுப் போங்கள் => தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ? அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்

பஞ்சு அருணாசலம் குறித்த ஆவணப்படம் 
காலத்தினால் செய்த நன்றி, வாழ்க
@Dhananjayang

பஞ்சு அருணாசலம் விகடனில் எழுதிய தொடர் ஒரு பொக்கிஷம் இன்னும் பல வாரங்கள் கடக்க வேண்டிய அவரின் பொருள் பொதிந்த அனுபவங்களும் தொலைந்தது :-((

புகைப்படம் நன்றி : தமிழ் இந்து

Wednesday, August 3, 2016

ஆடிப்பெருக்கே வா வா வா

🌷🙏 அன்னையின் அருளே வா வா வா 🙏🌷
🍁🍁🍁ஆடிப்பெருக்கே வா வா வா 🍁🍁🍁

அன்னையின் அருளே வா வா வா
ஆடிப்பெருக்கே வா வா வா

பொன்னிப் புனலே வா வா வா
பொங்கும் பாலே வா வா வா
அன்னையின் அருளே வா வா வா

குடகில் ஊற்று கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து
அன்னையின் அருளே வா வா வா

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
தேனாய்ப் பெருகும் தமிழே வா
திருமால் தனைக்கே மாலையாகி
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே 
அன்னையின் அருளே வா வா வா

கட்டிக்கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை நயமும் நீ
முத்துத்தாண்டவர் பாடலிலே
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணைக் காவேரி
வள நாடாக்கும் தாயே நீ
வாழிய வாழிய பல்லாண்டு

https://www.youtube.com/shared?ci=fsuj4DHNxxo

பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர் : டாக்டர் சீர்காழி எம்.கோவிந்தராஜன்
இசை : ஏ.எம்.ராஜா
படம்: ஆடிப் பெருக்கு