Pages

Tuesday, August 10, 2010

1971 இல் பட்டையைக் கிளப்பிய பாவலர் சகோதர்கள்

Nyayave Devaru என்ற படம் 1971 இல் கன்னடத்தில் தயாரான போது அதற்கு இசையமைத்தவர்கள் ராஜன் நாகேந்திரா இரட்டையர்கள். இந்தப் படத்தில் வரும் பி.பி.ஶ்ரீநிவாஸ் பாடும் "ஆகாசவி பீலலி மேலே" என்ற பாடல் கன்னடத்திரையிசையின் முத்துக்களில் ஒன்று.
அந்தப் பாடலைக் கேட்க



இதே பாடல் மெட்டை இவர்கள் மீளவும் "Moodu Mullu" என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுசீலா குரலில் "நீ கோசம் யவ்வன" என்ற பாடலுக்காகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்தப் படம் தமிழில் கலக்கிய முந்தானை முடிச்சு படத்தின் மொழிமாற்றுத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பாடலைக் கேட்க



இந்தப் பதிவின் முதலில் இடம்பெற்ற Nyayave Devaru என்ற கன்னடப்படத்தில் இடம்பெற்ற "ஆகாசவி பீலலி மேலே" பாடலின் இசையை மீளவும் ஒரு வாத்திய இசையாகக் கொடுத்திருக்கின்றார்கள் "பாவலர் சகோதரர்கள்" என்ற இளையராஜா, கங்கை அமரன் (அமர்சிங்), பாஸ்கர் ஆகியோர். அதாவது இளையராஜா என்ற இசையமைப்பாளனை இந்த உலகம் கண்டுணராத காலம் அது. இந்த அரிய பொக்கிஷத்தை இசைஞானியின் ரசிகர் எஸ்.ஆர்.குமார் 1988 ஆம் ஆண்டில் 45 rpm EP record இல் இருந்து ஒலிநாடாவிற்கு மாற்றிப் பொக்கிஷமாக வைத்திருந்தார். இந்த அரிய பொக்கிஷம் நமது நண்பர்கள் ரவிசங்கர் ஆனந்த், சிங்கப்பூர் அலெக்ஸ் வழியாக என் கைக்கு வந்திருக்கின்றது. குமார் மற்றும் நண்பர்களுக்கு இனிய நன்றிகளைப் பகிர்வதோடு யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அதை இங்கே பகிர்கின்றேன் கேட்டு அனுபவியுங்கள் ;)

Tuesday, August 3, 2010

சிறப்பு நேயர்: "மீனாட்சி சுந்தரம்"

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் பகுதி ஒரு சிறு இடைவேளைக்குப் பின் வருவதையிட்டு மகிழ்வடைகின்ற அதே நேரம் இந்த சிறப்பு நேயர் பகுதிக்கு ஒரு பெருமைக்குரிய இசைரசிகரைக் கைப்பிடித்துக் கொண்டு வருவதில் பெருமையடைகின்றேன்.

றேடியோஸ்பதியின் இசைப்பகிர்வுகளில், இசைஞானி இளையராஜாவால் எனக்குக் கிடைத்த நட்புக்கள் பட்டியலில் மீனாட்சிசுந்தரமும் குறிப்பிடத்தக்கவர். ஒரு ஓவியராக, புகைப்படக் கலைஞராக, இசைரசிகராக, கட்டிடக்கலை குறித்த வெளிப்பாடுகளைத் தன் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருபவர் இவர். இவரின் வலைப்பக்கங்களைக் காண

ராஜாவின் பின்னணி இசைப்பதிவாகட்டும், அவரின் இசையால் மிளிர்ந்த பாடல்கள் குறித்த பதிவாகட்டும் மீனாட்சிசுந்தரம் அவர்களின் தனித்துவமான பின்னூட்டம் நிறைவானதாக அமைந்திருக்கும். றேடியோஸ்பதி சிறப்பு நேயராக வர வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்ததோடு அதற்காக நேரம் ஒதுக்கிச் சிறப்பானதொரு படையலைத் தரவேண்டும் என்ற முனைப்பையும் அவர் தன் பதிவு வாயிலாக வெளிப்படுத்தியபோது நெகிழ்ந்து போனேன். அத்தோடு சிறப்பு நேயராக வருபவர் தன்னுடைய படத்தையும் இணைக்கவேண்டும் என்ற என் அன்புக்கட்டளைக்கு மாற்றீடாக அவர் தந்தது, தன் கைப்பட வரைந்த இசைஞானி இளையராஜாவின் ஓவியம்.


சிலவாரங்களுக்கு முன்னர் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் "LP Records சுழற்றும் நினைவுகள்" என்ற இடுகையை இட்டிருந்தேன். அந்தப் பதிவைப் படிக்காமலேயே அவரின் மனவோட்டத்தில் இந்த எல்.பி ரெக்கார்ட்டை சுழற்றி வீடியோ காணொளியாகத் தன் சிறப்பு நேயர் பதிவில் கொடுக்கவேண்டும் என்று தந்தபோது இன்ப அதிர்ச்சி எனக்கு.

மீனாட்சிசுந்தரம் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை ஒவ்வொன்றையும் சிலாகித்து எழுதியபோது ஒன்று மட்டும் புரிந்தது, இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ இசை ஜாம்பவான்கள் வரலாம், ஆனால் இசைஞானியின் ஒவ்வொரு பாடல்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் பல்லாயிரக்கணக்கான இசைஞான ரசிகர்கள் அளவுக்கு யாரும் சம்பாதிக்க முடியாது என்பதே. இனி மீனாட்சிசுந்தரம் பேசுவதைக் கேளுங்கள்.


முதலில் நேயர் விருப்பம் பகுதியில் எழுத எனக்கு வாய்பளித்த திரு. பிரபா அவர்களுக்கு என் நன்றிகள். ரேடியோஸ்பதி நான் விரும்பி படிக்கும் (கேட்கும்) வலைபக்கங்களில் ஒன்று. பிரபா ஒரு தமிழ் திரை பாடல் களஞ்சியமாகவே எனக்குத் தெரிகிறார். பிரபாவின் எழுத்து மற்றும் ரசனையால் ராஜாவின் எழுபதுகளின் பாடல்களில் நான் மூழ்கி முத்தேடுத்தேன்.
---------------------------------------------------------------------------------------------------
அரைக் கால் சட்டை போட்ட காலத்திலேயே உனக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா கேள்விக்கு எனக்கு இளையராஜா தான் பிடிக்கும் என்று பதில் அளிப்பது. பள்ளி நாட்களில் இசைஞானியின் படத்தை நோட் புஸ்தகத்தில் வைத்துகொண்டு திரிவது என்று இசைஞானியின் ஆளுமை என் இளம் பிராயத்தில் தொடங்கிவிட்டது. வெளிநாட்டில் குடியேறி பத்து வருடங்கள் ஆகியும், பல மேற்கத்திய இசைக் கலைஞர்களின் இசை கேட்டும், நம் இசை மேதையின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர குறைந்த பாடில்லை. இசைஞானி இசைஅமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது சில ஆயிரங்கள் அவற்றில் ஐந்து மற்றும் இங்கே.

1. சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்.

ராஜாவின் குரலில் எனக்கு பிடித்த பாடல். இதில் வரும் இசை ஒரு தாலாட்டு பாடல் போல இருக்கும். இடையில் வரும் கிட்டார் இசை மற்றும் பாடல் நெடுக வரும் பேஸ் கிடார் எப்போதும் என் நெஞ்சை கொள்ளை கொள்ளும். சுப்ரமணியபுரம் புண்ணியத்தில் இந்த பாடல் மீண்டும் தமிழ் நாட்டை வலம் வந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.



2. ஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு

இந்த படம் ராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இணைந்து பணியாற்றிய படம். எம். எஸ். வி பற்றி ஒரு துணுக்கு எங்கேயோ படித்தேன் "தினத்தந்தியில் வந்த செய்திக்கு கூட இசை அமைத்துவிடுவார்" என்று. ஆனால் இந்த பாடல் ஏனோ எனக்கு தூய இசை ஞானியின் இசையாகத் தான் தெரிகிறது. எத்தனையோ பாடல்கள் இதற்கு முன் பாடியிருந்தாலும் ஜானகி அம்மாவின் குரல் எதோ புதிய பாடகியின் குரல் போல் ஒலிப்பது மிக அருமை. இந்த பாடலில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், ராஜாவின் செல்ல வாத்தியங்களான வயலின் மற்றும் தபேலா இதில் இல்லை. பேஸ் கிடார் மற்றும் இதர ஒலிகளால் ஆன பின்புலத்தில் புல்லாங்குழலின் ராஜ்யத்தில் ராஜாவால் எதுவும் முடியும் என்று பறைசாற்றும் பாடல்.




3. புதிய பூவிது பூத்தது - தென்றலே என்னைத்தொடு

இந்த பாட்டைப் பற்றி நாள் கணக்கில் எழுதலாம். ராஜாவின் பாடல்களில் நான் இதுவரை அதிகம் கேட்ட பாடல் இது தான், இன்னும் திகட்டவில்லை. இதில் வரும் பேஸ் கிட்டார் இசைக்கு நான் அடிமை. பாப் இசையில் மைக்கேல் ஜாக்சனின் "பில்லி ஜீன்" தான் பேஸ் லைனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்பார்கள். அது போல் ராஜாவின் இசையில் எனக்கு இந்த பாடல் தான் சிறந்த பேஸ் லைனுக்கு எடுத்துக்காட்டு. இந்த பாட்டில் இன்னொரு சுவாரசியமான விஷயம். இந்த பாடலில் வயலின்கள் போல் ஒலிக்கும் இசை உற்றுக் கேட்டால் தெரியும் அது வயலின் இல்லை என்று. ராஜா நோட்ஸ் எழுதி ஒலிப்பதிவிற்கு செல்லும் போது தான் தெரிந்தது வயலின் கலைஞர்கள் எல்லோரும் மும்பை சென்றுவிட்டார்கள், ஹிந்தி படத்திற்கு வாசிப்பதற்காக. ராஜாவோ இயக்குனர் ஸ்ரீதருக்கு வாக்கு கொடுத்துவிட்டார், பாடலை அன்றே முடித்து தருவது என்று. ராஜா உடனே சென்னையில் உள்ள மாண்டலின் கலைஞர்கள் அனைவரையும் கூப்பிட்டு இந்த பாடலை பதிவு செய்தார். வயலினுக்கு எழுதிய நோட்ஸை மாண்டலினிலும் எளிதாக வாசிக்க்கலாமாம். இது நான் சmiiபத்தில் இணையத்தில் படித்தது இதை எழுதியவர் ரவிஷங்கர் என்று நினைக்கிறேன். ஸ்ரீதரின் கவித்துவமான காட்சி அமைப்பு இந்த பாடலுக்கு மேலும் வலு சேர்க்கும்.




4. பூவே செம்பூவே - சொல்ல துடிக்குது மனசு


மெல்ல புல்லாங்குழலில் ஆரம்பித்து லேசாக கிட்டார் சேர்த்து பின் யேசுதாஸின் வருடும் குரலில் ஆரம்பிக்கும் இந்த பாடல் யாருக்குத் தான் பிடிக்காது. இடையிசையில் வீணை, வயலின், தபேலா, ட்ரம்ஸ் என்று வாத்தியங்கள் முழங்க இப்படி ஒரு மென்மையான பாடல் ராஜாவின் மாயாஜாலம். அதுவும் இரண்டாம் இடைஇசையின் முடிவில் வயலின் கோரஸ் ராஜாவின் சிறு சிம்பொனி.




5. சங்கீத மேகம் - உதய கீதம்

இந்த பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை இசை துள்ளல் தான். ட்ரம்ஸ், ட்ராம்போன், ட்ரம்பட் என்று கலக்கலாக ஆரம்பித்து மேடை கச்சேரி பாட்டு என்றால் அது இது தான் என்று சொல்லும் அளவுக்கு ஆரவாரம். எஸ். பி. பாலுவின் இதமான குரல், வயலின் கோரஸ், இரண்டாம் இடைஇசையில் மீண்டும் ட்ரம்பட் என பட்டயக் கிளப்பும் பாடல் இது.




இந்த பாடலை நான் விரும்பிக் கேட்பது ரிக்கார்ட் பிளேயரில். இந்த பாட்டு எல். பி. யில் கேட்டால் எப்படி இருக்கும் என்று ரேடியோஸ்பதி நேயர்களுக்காக வீடியோவாக இங்கே.



பின் குறிப்பு: இசைஞானி எனும் இசை பல்கலைகழகத்தின் வாசற்படியில் நிக்கும் மாணவன் தான் நான். கட்டுரையில் தவறிருந்தால் இசை அறிந்தவர்கள் திருத்தவும்.