Pages

Monday, July 28, 2008

"நல்லவனுக்கு நல்லவன்" படத்துக்காக இசையமைக்காத பாடல்

"தர்மாத்முடு" என்னும் தெலுங்குத் திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தமிழில் மீண்டும் எடுக்கலாம் என்று தீர்மானித்தபோது அது தமிழுக்குச் சரிப்படாது என்று தான் முதலில் பலர் அபிப்பிராயப்பட்டார்கள். பின்னர் கதையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ரஜினிகாந்த்தை வைத்தே நாயகனாக்கி இப்படத்தை எடுத்தார்கள்.

"உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" என்ற பாடலினை இயக்குனர் வி.சி.குகநாதன் தன் படமொன்றுக்கு வைரமுத்து பாடலை எழுத இளையராஜா இசையில் உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தக் குறித்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்தும் நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் இருந்து பெற்றுப் பயன்படுத்தினார். கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப் பாடலும் அமைக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று மேலே சொன்ன செய்திகளோடு தனது "ஏ.வி.எம் 60 - சினிமா" என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் தயாரிப்பாளர் சரவணன்.

கடந்த ரேடியோஸ்புதிரில் நான் தந்த உபகுறிப்புக்களின் விளக்கம் இதுதான்.
இந்தப் படத்தின் ஒரு பாதி இன்னொரு நடிகரின் படமொன்றின் தலைப்பு என்று கூறியிருந்தேன். அந்தப் படம் நல்லவன், நாயகனாக நடித்தவர் விஜய்காந்த். இந்த இரு படங்களின் இயக்குனருமே எஸ்.பி.முத்துராமன் தான்.

இப்பாடலினை கே.ஜே.ஜேசுதாசோடு இணைந்து பாடகி மஞ்சுளா தமிழில் அவ்வளவு பிரபலமாகாத கன்னடத்துப் பாடகி.

இப்படத்தில் நடித்த வாரிசு நடிகர் கார்த்திக்.

"உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்" சந்தோஷ மெட்டு.



"என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய்" சோக மெட்டு



Sunday, July 27, 2008

றேடியோஸ்புதிர் 14- இந்தப் படத்துக்காக இசையமைக்காத அந்தப் பாட்டு எது?

கடந்த போட்டி ஒரே ஜுஜுபி என்று கும்மோ கும்மென்று கும்மியவர்களுக்காக இந்த வாரம் ஒரு சவால் கேள்வி ;-)

அது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம், அந்த நிறுவனத்தின் தற்போதய தயாரிப்பாளர்களில் ஒருவர் அவரது நூலில் சொன்ன விஷயம் இது. எனவே ஆதாரம் கேட்பவர்களுக்கும் ஸ்கான் பண்ணிக் கொடுக்கலாம் ;-)

விஷயம் இதுதான். ஒரு தெலுங்குப் படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். ஒப்பந்தமானவர் ஒரு பெரிய நாயகன். ஆரம்பத்தில் இதைத் தமிழில் எடுத்தால் எடுபடுமோ என்று தயங்கினார்கள். ஆனால் மூலக்கதையில் சிறு மாற்றங்கள் செய்து படத்தை எடுத்தார்கள். இந்தப் படத்திற்காக ஏற்கனவே பதிவு செய்த பாடல்களோடு இன்னொரு பாடலையும் சேர்த்தார்கள். அந்தப் பாடல் விசி.குகநாதனின் வேறொரு படத்திற்காக இசையமைக்கப்பட்டு ஆனால் பயன்படுத்தமுடியாத பாடல். வி.சி.குகநாதனிடன் நோ-அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வாங்கி இந்தப் படத்தில் இணைத்தார்கள். சொல்லப் போனால் இந்தப் படத்தில் வந்த பாடல்களில் மிகவும் கலக்கலான பாட்டு இது தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சொல்கின்றார் "இந்த நாயகனை வைத்து தயாரித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது"....... ....." என்று சொல்வேன்.

இனி இந்தப் புதிரைக் கண்டுபிடிக்க சில உபகுறிப்புக்கள்.
இந்தப் படத்தின் ஒரு பாதி இன்னொரு பிரபல நடிகரின் படத்தலைப்பைச் சொல்லும்.

இந்தப் பாடலைப் பாடிய ஆண்பாடகரோடு, இணைந்து பாடகிய பெண் பாடகி அவ்வளவு பிரபலம் இல்லாதவர். ஆனால் இவரின் பெயரில் ஒரு பிரபல நடிகை முன்னர் நடித்து வந்திருக்கிறார்.

இந்தப் பாடலின் ஒரு பகுதியை வைத்து சோகப் பாடலும் இந்தப் படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.

இதே படத்தில் இன்னொரு பிரபல நடிகரின் வாரிசு நடிகரும் நடித்திருக்கின்றார்.

Monday, July 21, 2008

"குணா" பின்னணி இசைத்தொகுப்பு

றேடியோஸ்புதிர் 13, மிகவும் சுலபமாக அமைந்து விட்டது. பலர் குணா என்ற சரியான விடையோடு வந்திருந்தீர்கள். இந்தப் பதிவு குணா திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பாக அமைகின்றது. கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் வெளிவந்திருந்தது.

குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.

இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை. அதற்கு முன் இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் கொடுத்து விடுகின்றேன். அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர். இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.



படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசை



முதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்



அபிராமியை கவர வரும் வில்லனிடம் இருந்து தப்பித்தல்



மலையுச்சி சமாதிப் புகலிடத்தைத் தேடிப் போதல்



அபிராமி, குணாவை காரால் இடிக்கும் காட்சி



அவளை அபிராமியாக நினைத்து குணா உருகும் காட்சி



இரவின் ஏகாந்தம்



குணாவிடம் இருந்து மீண்டும் அபிராமி தப்பிக்கும் காட்சி



அபிராமியின் மனதில் தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசை



காட்டுக்குள் காணும் நீரோடை



எழுதி வைக்கப்பட்ட விதி


அபிராமி குணா மேல் கொள்ளும் காதல்




அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல்



வைத்தியரைத் தேடிப் போகும் குணா



வில்லனால் தாக்கப்பட்ட குணா, அபிராமியிடம் ஆறுதல் தேடுதல்


அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல்



போனசாக குணா குணா பாடல் ஒலிப்பதிவு வேளையில் நடந்த உரையாடலைத் தந்து உதவிய பதிவர் ஸ்ரீ , பரிந்துரைத்த தல கோபி நன்றிகள் அவர்களுக்கு



Sunday, July 20, 2008

றேடியோஸ்புதிர் 13 - இந்த இறுதிக் காட்சி வரும் படம்?


இந்தப் படத்தைப் பற்றி மேலதிகமாக உபகுறிப்புக்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சொன்னாலும் பக்கென்று கண்டு பிடித்து விடுவீர்கள் ;-). ஒரு பிரபல நாவலாசிரியர் வசனம் எழுதியிருந்தார். அவருடைய ஆன்மீகப் பின்னணியும் இந்தப் பட வசனப் பங்களிப்புக்குப் பொருத்தமாக அமைந்தது. இந்தப் படத்தில் வரும் ஒரு ஒரு குகை இப்போது இப்படத்தின் தலைப்பையே தனக்குச் சூட்டியிருக்கின்றது. பலரின் பார்வை படாத இடம் இன்று சுற்றுலாப் பயணிகள் தேடிப் பார்க்கும் ஸ்தலமாக அமைந்து விட்டது.

இங்கே தரும் இப்படத்தின் இறுதிக் காட்சியின் ஒலியை வைத்து இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.

Sunday, July 13, 2008

பாடகி & இயக்குனர் ஷோபா சந்திரசேகர்

நேற்றைய றேடியோஸ்பதி புதிரில் கேட்ட கேள்விக்கான பதில் ஷோபா சந்திர சேகர். அவரின் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இயக்குனர் நீதியை வைத்து, நீதிதேவதையின் கண்ணைக் கட்டிக் காட்டும் காட்சி வந்த நிறையப் படங்களை இயக்கிவர் அவர். இன்னொரு குடும்ப உறுப்பினர் யாரென்று சொல்லவும் வேண்டுமா, கில்லி கில்லி, விஜய்;-)

ஷோபா சந்திரசேகர் தன் திருமணத்திற்கு முன் லலிதாஞ்சலி என்ற இசைக்குழுவினை, சகோதரர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர், சகோதரி ஷீலாவுடன் இணைந்து நடாத்தி வந்திருக்கிறார்.

எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் 1967 இல் வெளியான இருமலர்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக , ரி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து "மகராஜா ஒரு மகராணி என்ற பாடலைப் பாடியிருக்கிறார். (தகவல் உதவி:ஆறாந்திணை)
அந்தப் பாடலைக் கேட்க:



திருமணத்தின் பின்னர் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் நிறையப் படங்களுக்கு கதாசிரியர், தயாரிப்பாளராக இருந்திருக்கிறார் இவர். 90 களில் ஆரம்பத்தில் நிறைய புதுமுக இயக்குனர்கள், நடிக நடிகர்கள் என்ற ஒரு ஒரு ட்ரெண்ட் முளைத்தது. அப்போது தான்
தானே இயக்கி 1991 இல் நீரஜ், மம்தா குல்கர்னி நடித்த "நண்பர்கள்" என்ற படத்தை முதலில் இயக்கினார். படத்தின் இசை: பாபு போஸ். படத்தின் பாடல்கள் வடநாட்டு மெட்டிலும் இசையிலும் கலக்கி படம் பெரிய ஹிட்டானது.
அந்தப் படத்தில் வரும் "என்னுயிரே என்னுயிரே" பாடலைக் கேட்க



நண்பர்கள் படத்தின் வெற்றியால் மீண்டும் நீரஜை நாயகனாக வைத்து, பர்வீன் என்ற நாயகியோடு, இசைஞானி இளையராஜாவின் இசையில் "இன்னிசை மழை" என்னும் படத்தைக் கொடுத்தார். பொதுவாகவே இசை, பாட்டு என்று படத்தலைப்பு வந்தால் பின்னி பெடலெடுக்கும் இளையராஜா எட்டுப் பாடல்களைப் போட்டுக் கொடுத்து அசத்தினார். பாடல்கள் பெரும் வெற்றி. ஆனால் பாடல்கள் நன்றாக இருந்து என்ன பயன். படம் மகா சொதப்பல். அதை தோல்விப் படமாக்கி ரசிகர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த, கஸல் பாணியில் வரும், சுரேந்தர், இளையராஜா பாடும் "மங்கை நீ மாங்கனி"



எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "வா வா மன்னவா"



எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "தெற்கே பிறந்த கிளி"

றேடியோஸ்புதிர் 12: யாரந்த இயக்குனர்?


இந்த இயக்குனரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்தவர், இப்போதும் படங்களை அவ்வப்போது இயக்கி வருகின்றார். இன்னொரு குடும்ப உறுப்பினர் கூட சினிமா உலகில் பரபரப்பான ஒருவர்.

இங்கே நான் சொல்லும் இயக்குனர் நட்போடு ஒரு திரைப்படத்தை எடுத்திருந்தார். படம் எதிர்பார்த்ததை விட பெரும் பெயர் கொடுத்தது. அந்த வெற்றிக் களிப்பில் முதல்படத்தில் நாயகனாக நடித்தவரை மீண்டும் நாயகனாக்கி இசையை மையப்படுத்திய படத்தை எடுத்தார். இளையராஜாவும் மனம் வைத்து நிறையப் பாடல்களைப் போட்டுக் கொடுத்தார். ஆனால் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றி அந்தப் படத்துக்குக் கிடைக்கவில்லை. அந்த இயக்குனரும் மெல்லத் தன் இயக்கும் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். நாயகனும் அந்த இரண்டு படங்களோடு காணாமல் போய்விட்டார். கேள்வி இது தான், இந்த இயக்குனர் யார்?

Monday, July 7, 2008

எம்.எஸ்.வி- இளையராஜா இணைந்த "என் இனிய பொன் நிலாவே"

நேற்று றேடியோஸ்புதிர் 11 இல் கேட்ட கேள்விக்கான பதிலாக வருவது "என் இனிய பொன் நிலாவே" என்ற திரைப்படம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா கூட்டணியில் இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் பாண்டியராஜன், மெளனிகா ஆகியோர் நடித்தது இந்தப் படம். ஏற்கனவே பாலுமகேந்திரா தெலுங்கில் எடுத்த நிரீக்க்ஷணா (பின்னர் கண்ணே கலைமானே என்று தமிழில் மொழி மாற்றப்பட்டது), பின்னாளில் வந்த அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களின் சாயலினை ஓரளவு ஒத்திருக்கும் இந்தப் படம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பத்து வருடங்களுக்கு மேல் பரணில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் வெளியானது. படம் தொடங்கிய காலத்தில் பாண்டியராஜன் மிகப் பெரும் ஹீரோ. படம் வெளியான போது அவரைக் கடந்து ஒரு நடிகர் பட்டாளமே முந்தி விட்டது. பாலுமகேந்திராவைப் பொறுத்தவரை அவரின் அழியாத கோலங்கள், சந்தியாராகம் போன்ற படங்களைத் தவிர வேறு எந்தப் படத்திற்கும் இளையராஜா இல்லாமல் இசை வைத்ததில்லை.

இந்தப் படத்தின் பாடல்களைத் தேடித் தருமாறு கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னரே நண்பர் ஜீரா அன்புக் கட்டளை இட்டிருந்தார். இப்படப் பாடல்களைத் தேடுவது மகா சிரமமாய் இருந்தது. அண்மையில் ஒரு வீடியோகடையில் இப்படத்தின் விசிடி கிடைத்தது. அதிலிருந்து பாடல்களையும், பாடல்களின் வீடியோக்களையும் பிரித்தெடுத்து விட்டேன். வீடியோக்கள் பின்னர் வீடியோஸ்பதியில் வரும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா கூட்டணியில் இன்னும் சில படங்கள் இசையமைத்து இந்தக் கூட்டணியின் பேர் சொல்லுமளவுக்கு இருந்தாலும் இந்த "என் இனிய பொன் நிலாவே" படப்பாடல்கள் என் கணிப்பில் சுமார் ரகம் தான். முதலில் கொடுத்திருக்கும் பாடல் மட்டும் ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் இந்த இருமேதைகளின் சங்கமத்தில் வந்த திரைப்படம். அதுவும் ஓசைபடாமலேயே போய்ச் சேர்ந்து விட்ட இந்தப் படத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் இப்படப் பாடல்களைத் தருகின்றேன்.

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "தளிர்களில் பூக்கும்"



கே.எஸ்.சித்ரா பாடும் "சில்லென்ற மலரே"



எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் "பூ வேண்டுமே"



கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "காதல் நினைவே"



எல்.ஆர்.ஈஸ்வரி, மனோ பாடும் "புது கடலையின்னா கடலை"

Sunday, July 6, 2008

றேடியோஸ்புதிர் 11 - இந்தப் படம் எந்தப் படம்?


கடந்த சில றேடியோஸ்புதிர் போட்டிகளில் கேட்ட கேள்விகள் ஜீஜிபி என்றும் கஷ்டமான கேள்விகளைக் கேளுங்கள் என்றும் அன்புக்கட்டளை போட்டிருந்தார்கள் சில நேயர்கள். எனவே அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இதோ இந்த வாரக் கேள்வி.

மேலே புகைப்படத்தில் இருக்கும் காட்சி வரும் திரைப்படம் எது? இப்படிக் கேட்டு உங்களை நான் குழப்பத்தில் ஆழ்த்தவில்லை. இதோ சில உப குறிப்புக்கள் தருகின்றேன்.

இரண்டு இசைமேதைகள் இணைந்து இசையமைத்தது இந்தத் திரைப்படம். படத்தின் இயக்குனர் இந்த இரண்டு இசையமைப்பாளரில் ஒருவரை தன்னுடய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார் அப்படி நான் இந்த உபகுறிப்பை கொடுத்திருக்க வேண்டும் ஆனால்//படத்தின் இயக்குனர் இந்த இரண்டு இசையமைப்பாளரை தன்னுடய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார்.// என்று தவறுதலாகப் போட்டு விட்டேன். படத்தின் நாயகன் கூட ஒரு பிரபல இயக்குனரே. சரி இனி இந்தத் திரைப்படம் எது என்று கண்டுபிடியுங்களேன் ;-)

பலர் வருந்திக் கேட்டதால் மேலும் இரண்டு க்ளூக்கள்.
இந்தப் பட நாயகன் ஒரு இயக்குனர் கூட என்றேன் அல்லவா. அவர் 80 களில் தனது தனித்துவமான நடிப்பால் மிளிர்ந்தவர். பிரபல இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர்.

இந்தப் படத்தின் தலைப்பு இந்தப் படத்தின் இயக்குனரின் வேறொரு படத்தின் பாடலின் முதல் அடியாக அமைந்திருக்கும்.

Tuesday, July 1, 2008

றேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் - அறிமுகம்


ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் றேடியோஸ்பதியில் தொடர்கள் ஆரம்பிக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவு ஆரம்பிக்க இருக்கும் புதுத் தொடர்களுக்கான அறிமுகமாக இருக்கின்றது. சரி இனி வரப்போகும் தொடர்கள் குறித்த அறிமுகத்தைத் தருகின்றேன்.


வண்ண வண்ண சொல்லெடுத்து


வாராந்தம் ஒரு குறிப்பிட்ட சொல் வழங்கப்படும். அந்தச் சொல்லியில் வரும் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திருந்தால் அந்தப் பாடல் குறித்த சிறு விளக்கத்தோடு நீங்கள் பின்னூட்டப் பெட்டியிலோ அல்லது kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும். இது இரு வாரத்துக்கு ஒருமுறை இடம்பெற இருக்கின்றது. எனவே முதலில் தென்றல் என்ற அடியில் வரும் பாடலையும் உங்கள் விளக்கத்தையும் வரும் யூலை 14 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.


இசையும் கதையும்


ஒரு சிறுகதை ஒன்றை நீங்களே எழுதி, அந்தச் சிறுகதைக்குப் பொருத்தமான பாடல்கள் நான்கிற்கு மேற்படாமல் பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மாதாந்தம் ஒவ்வொரு படைப்பாளியின் இசையும் கதையும் வானொலிப்படைப்பாக அமையவிருக்கின்றது. இந்தப் படைப்புக்கு சிறப்பான குரல் வடிவம் கொடுத்துத் தயாரிக்க இருப்பவர் நமது சக வலைப்பதிவர் கதிர் சயந்தன் அவர்கள். ஆக்கங்களை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.

சிறப்பு நேயர் தொடர் - பாகம் 2

ஏற்கனவே ஆரம்பித்து இருபது பதிவர்கள் வரை பங்களித்த இந்த வாராந்தத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கின்றது. ஏற்கனவே பங்கு கொண்டவர்களை விடுத்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல பதிவுகளை வாசிக்கும் வாசகர்களும் இந்தத் தொடரில் பங்கேற்கலாம். உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை குறித்த விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்களேன்.

ஸ்யப்பா தொடர்களை அறிவித்து மூச்சு முட்டுகிறது. தொடர்ந்து இசை மழையில் உங்களை நனைவிக்கின்றேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய புதிய தலைமுறைப்பாடகர்கள் சிலரின் பாடல்கள் இதோ.


ஹரிஷ் ராகவேந்திரா
வித்யாசாகரின் இசையில் "அரசியல்" திரைக்காக "வாசகி வாசகி" என்ற பாடலை முதலில் பாடியவர். ஆனால் ராஜாவின் இசையில் பாரதி படத்திற்காக "நிற்பதுவே நடப்பதுவே" பாடலைப் பாடிப் பெரும் புகழ் பெற்றார். ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இங்கே நான் தரும் "சொல்ல மறந்த கதை" திரையில் இருந்து " குண்டு மல்லி குண்டு மல்லி" என்ற இனியதோர் பாடல். அவருடன் இணைந்து பாடுகின்றார் ஷ்ரேயா கோசல்.


கார்த்திக்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரார் படத்தில் வரும் "நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்" பாடல் தான் இவரின் முதல் அடி. ஆனால் முகவரி கொடுத்த பாடலோ அழகி திரைப்படத்தில் பவதாரணியோடு இவர் பாடிய "ஒளியிலே தெரிவது தேவதையா"


ஸ்ரீராம் பார்த்தசாரதி

நல்ல குரல் வளம் மிக்க இந்த இளம் பாடகருக்கு மற்றையவர்கள் போல் வாய்ப்பு அதிகம் கிட்டுவதில்லை. கிடைத்தால் போதும் "பிதாமகன்" படத்தில் வரும் "இளங்காத்து வீசுதே" பாடலே சான்று.