Pages

Monday, February 4, 2019

அஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸


விஸ்வாசம் காய்ச்சல் ஏனோ அந்தப் படம் பார்த்த பின் தான் அதிகம் அடிக்கிறது. மகளைப் பெற்ற அப்பாவுக்குத் தான் புரியும் என்று தூக்குத்துரை ஒரு பக்கம் அழ வச்சுட்டார், “கண்ணான கண்ணே” பாடல் கேட்டால் இன்னும் ஒரு படி நெகிழ வைத்து விடுகிறது.
என்ன வழக்கமான டியூனைத் தானே போட்டிருப்பார் D.இமான் என்று நினைத்திருந்த வேளை சகோதரன் துஷ்யந்தன் Thushyanthan Vettivel இந்தப் படத்தில் வரும் “வானே வானே” பாடலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அழகாக எழுதினாலும் எழுதினார் போச்சு அதிலிருந்து அந்தப் பாட்டில் ஒரு ஈர்ப்பு வந்தது. படத்தில் மிகப் பொருத்தமாகப் பாடலும் வந்து உட்காரவும் இதன் மீதான ஈர்ப்பு இரட்டிப்பாகி விட்டது. திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.
அப்போதுதான் எண்ணிப்பார்த்தேன் “வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.
தொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து “டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்?” என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.
அன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும். இவர்களில் தனியே அஜித்குமாரை மட்டும் பிரித்துப் பார்த்தேன்.
“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில் 
“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.
அன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் Thirukkumar Thirunavukkarasuநிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.
இப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீதி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.
ஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.
பாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும்.
தொடர்ந்து தேவா – ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,
“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.
“ஏஹேஹே கீச்சுக் கிளியே 
என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்”
புத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா? 
அதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.
ரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.
எஸ்.ஏ.ராஜ்குமாரும் விட்டு வைக்கவில்லை. 
“ஓ வந்தது பெண்ணா….
வானவில் தானா” 
என்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.
அஜித் படமென்றாலும் இன்னொருவருக்குப் பாட்டுச் சேர்ந்த விதத்தில் “ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது. 
தோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.
ராஜா படத்திலும் மகாலஷ்மியோடு ஹரிஹரனை ஜோடியாக்கி “ஒரு பெளர்ணமி” பாடல் அர்ப்பணம் ஆனது.
‪இசையமைப்பாளர் சிற்பியின் பங்குக்கு “ராசி” படத்தில் பூமாலை கட்டினார் ஹரிஹரன்.‬
வைரமுத்து – பரத்வாஜ் – சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.
“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”
பாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.
“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது. ‪இங்கேயும் இந்தப் பாட்டு அஜித்துக்கு இல்லாது விக்ரமுக்கு ஆனது.‬
தல என்ற கிரீடத்தை அஜித் மேல் வைத்த தீனா படத்தின் ஒவ்வொரு பாடல்களும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேனிசை. அதில் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” ஏற்ற இறக்கங்களில் ஹரிஹரனைத் தாண்டி யாரைச் சிந்திக்க முடியும்?
கார்த்திக் ராஜா, யுவன் போலவே இளையராஜா இசை கொடுத்த “தொடரும்” படத்தில் “ஷாக்கடிக்கும் பூவே” பாடலைத் தன் பங்குக்குச் சேர்த்தார்.
“அன்பே அன்பே நீ என் பிள்ளை” பாடலைக் கேட்ட்லேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,
“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்தப் பதிவுக்காக அந்தப் பாட்டைக் கேட்கத் தொடங்கியவன் வகை தொகையில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதுதான் வித்யாசாகரின் இசை மாயம்.
தேகத்துக்குள் தூங்கும் இன்பம் தட்டி எழுப்பு
தேடித் தேடி செல்களில் எல்லாம் தேனை நிரப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு……..
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
கானா பிரபா
31.01.2019


இந்தப் பதிவில் இடம்பெற்ற பாடல்களில் அஜித்குமார் தோன்றும் பாடல்களின் காண் தொகுப்பு
https://www.youtube.com/watch?list=PLOXBz6eZeFMdrbr-gauUg1Z_qXGyuejTI&v=GrXy0Eez4ds