Pages

Friday, August 19, 2022

ஏன் பெண் என்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ❤️

அப்பொழுது பரபரப்பாகப் படங்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்த ஆர்.பி.செளத்ரி அவர்களின் அலுவலகக் கதவைத் தட்டுகின்றார் 22 வயதே நிரம்பிய இளைஞர்.

“சார் ! நான் நன்றாக இசையமைப்பேன் எனக்கு ஒரு வாய்ப்புத் தர்ரீங்களா?

என்று அந்த இளைஞன் கேட்கவும்,

“இதோ பாருப்பா நான் இப்போ நாலு படம் பண்ணிட்டிருக்கேன்

எனக்குத் திருப்தியான இசையை நீ கொடுத்தாய் என்றால் உனக்கு வாய்ப்புத் தர்ரேன்" 

என்று சொல்லி இரண்டு நாள் அவர் அலுவலகத்தை ஒதுக்கிக் கொடுக்கிறார்.

அந்த இளைஞன் ஏற்கனவே சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் வழியாக வந்த எல்லாப் படங்களின் பாடல்களையும் ஒருமுறை மனதில் ஓட்டி விட்டு அவற்றில் இருந்து விலகிப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தன் சிந்தனையைத் தட்டி விடுகின்றான்.

மெட்டுக்கள் பிறக்கின்றன.

ஆர்.பி.செளத்ரியிடம் தான் பிரசவித்த மெட்டுகள் ஒவ்வொன்றையும் ஆசையாகப் பகிர்கின்றார்.

செளத்ரி முகத்தில் சந்தோஷம், இதோ இசையமைப்பாளராக வாய்ப்பு அந்த இளைஞனிடம் போய்ச் சேருகின்றது.

அந்த இளைஞனின் பெயரிலேயே படத்தின் பெயரும் ஒட்டிக் கொள்கிறது. காரணம் தொண்ணூறுகளில் ஒரு மெளனப் புரட்சியை இளைஞர் மனதில் விதைத்த “லவ் டுடே” ஆச்சே.

ஆம் அந்த இளைஞன் தான் “லவ் டுடே” சிவா.

ஆர்.பி.செளத்ரி ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் மட்டுமல்ல. ஆகச் சிறந்த திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் சமர்த்தர். அதனால் தான் நமக்கு செளந்தர்யன் போன்றோரும் “சேரன் பாண்டியன்” வழியாகக் கிட்டினார்கள்.

“கன்னத்துல வை” கொஞ்சம் இடைவெளி விட்டு

“ஆ வைரமணி மின்ன மின்ன” இந்த ஐடியாவைக் கொடுத்ததே செளத்ரி சார் தான் என்று இசையமைப்பாளர் சிற்பி சொல்லியிருக்கிறார்.

நடிகர் விஜய் பேரதிஷ்டசாலி. தான் நாயகனாக நடித்த “நாளைய தீர்ப்பு” படத்தில் இசையமைத்த மணிமேகலை என்ற சிறுமி தொட்டு இந்த 22 வயது லவ்டுடே சிவா உள்ளடங்கலாக அவரின் படங்களின் பாடல்கள் எல்லாமே இசையமைப்பாளர் பேதம் பார்க்காத இன்சுவைப் பாடல்கள் விஜய்க்குக் கிட்டிய வரம். அவரை இன்னும் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்த்ததில் பாடல்களுக்கும் பங்குண்டு.

“லவ் டுடே” சிவாவும், தன் முதற்பட இயக்குநர் பாலசேகரனுமாக இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் இயங்கியிருக்கிறார்கள்.

“சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்”

பாட்டு எல்லாம் இந்த இருவர் கூட்டணியில் விளைந்த நல் முத்துகள்.

“ஒருவர் மீது இருவர் சாய்ந்து” படம் வழியாக இருவரும் மீண்டும் சேர்ந்த போது “லவ்டுடே” சிவா தன் பெயரை ஹரிஹரன் என்று மாற்றிக் கொண்டார். ஆனால் சிவா தான் அதிஷ்டம் நிரம்பிய பெயர் போல.....

லவ் டுடே பாடல்களில் உச்சமாக அமைந்த இன்னொன்று எஸ்பிபி கொட்டமடிக்கும் காதல் பாட்டு “என்ன அழகு எத்தனை அழகு” எவ்வளவு உச்ச சக்தியைத்  தன் குரல் வழியே பிரதிபலித்து உடன் மனுஷர் இந்தப் புது இசையமைப்பாளரை அடையாளப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.

பெங்காலி மண் பெற்றெடுத்து தமிழ்ச் சூழல் சுவீகரித்துக் கொண்ட 90களின் பக்கத்து வீட்டுப் பெண் சுவலட்சுமி புராணத்தைத் தனியே கவனிப்போம். 😀

லவ் டுடே பாடல்களில் “ஏன் பெண்ணென்று”, “என்ன அழகு” வைரமுத்து வரிகளிலும், மறைந்த பாடலாசிரியர் வாசன், செல்வன் இவர்களோடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அண்ணன் மகன் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் (மோனிகா மோனிகா) கூடப் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். 

“லவ் டுடே” சிவா எவ்வளவு அசாத்தியத் திறன் மிகு இசையமைப்பாளர் என்பதற்கு “இரு” சோறு பதமாக ஒரே பாடல் இரண்டு வடிவில் அமைந்த 

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” பாடலே போதுமாயிருக்கும்

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” உன்னிகிருஷ்ணன் தனித்த வடிவத்திலும்

https://www.youtube.com/watch?v=_qhpzZCXX-I

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” அஸ்லாமோடு 

https://www.youtube.com/watch?v=V3Q392-mMgA

அற்புதம் நிறைந்தது.

ஒரு இந்துஸ்தானி இசைக் கச்சேரியைக் கேட்டு முடித்துப் பலமணி நேரம் கடந்த பின்னும் காதை விட்டு அகலாத ஓசை நயம் கொண்டது இந்தப் பாட்டு.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானோடு கஸல் மேடைகளில் பந்தி வைக்கும் அஸ்லாமை இந்தப் பாடலில் இவ்வளவு அழகுறப் பொருத்த வேண்டும் என்ற எண்ணத்தைச் செயற்படுத்திய இசையமைப்பாளரை என்னவென்று சொல்லிப் பாராட்ட?

ஒரு குறித்த காட்சியோடு இழைந்த பாடலை யூடியூபில் அதிகம் காணக் கிடைப்பதில்லை. நமக்கும் அந்தக் காட்சியை ஞாபகப்படுத்தி ஒட்டிப் பார்க்க நினைவில் இராது.

அப்படியொரு பாட்டு இந்தப் பாட்டு, "ஏன் பெண்ணென்று பிறந்தாய்" பாடலை இந்தப் படம் வந்த போது கூட இவ்வளவு தூரம் பார்த்திருப்போமா என்றெண்ணத் தோன்றியது காணொளியில் பார்த்த போது

https://www.youtube.com/watch?v=oUyGLyJU-EY

நிமிர்ந்தெழுந்த கோபுரத்தோடு விரியும் காட்சியமைப்பில் பாசத் தந்தை தன் மகனுக்கு எடைக்கு எடை நேர்த்தி வைக்கிறார். அந்த நேரம் தராசில் நிறுக்கப்பட்டிருக்கும் அவன் உயரப் போக எதிர்ப்படுகிறாள் பிரியத்துக்குரியவள்.

அவள் உதிர்க்கும் சிரிப்பில் உறைந்து போனவனை அசைக்கிறது மணிச் சத்தம்.அப்படியே அவன் கனவுலகத்தை அசைத்துப் போடுகிறது புல்லாங்குழல் ஒலி மனதின் பிரவாகமாக, அவளின் உதிர்ந்த பூ இதழொன்று வந்து உட்காருகிறது மறு தட்டில், இறக்கம் காண்கிறான் அந்த ஒற்றைப் பூ இதழால்

பாடல் தொடங்குகின்றது,

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்

ஏன் என் கண்ணில் விழுந்தாய்

ஏன் ஒரு பாதி சிரித்தாய்

என் உயிர்ப் பூவை எரித்தாய்”

அற்புதமானவொரு பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகருக்குக் கிட்டும் உச்ச பட்ச அங்கீகாரமே இயக்குநர் அதைப் பொருத்தமான காட்சிப்படுத்தலாக்குவது.

அந்த வகையில் காட்சியமைப்போடு பயணிக்கும் பாடல் ஒரு அழகிய கவிதை.

“லவ் டுடே” இசையமைப்பாளர் சிவா, இயக்குநர் பாலசேகர் இருவரும் அது நாள் வரை தேனீயாகச் சேகரித்த கற்பனையை ஊற்றெடுத்துப் பரவ விட்டது போல.

லவ் டுடே

இளையதளபதி விஜய் என்ற நடிகனின் ஆரம்ப காலத் திருப்புமுனைகளில் ஒன்றாக மட்டுமல்ல, 

அப்பா ரகுவரன் மகன் விஜய் பாசப் பிணைப்பின் பரிமாணத்தைக் காட்டிய வகையில் மட்டுமல்ல,

அந்தத் 90 களின் வசந்த கால இசையில் இம்மாதிரியான அத்திப் பூக்களையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

உலகை உலகை உன்னால் வெறுத்தேன்

உறவாய் உறவாய் உன்னையே நினைத்தேன்

இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும்

என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும் ! ❤️

கானா பிரபா

19.08.2022


Thursday, August 18, 2022

இசையைப் புரிந்து கொள்ளுதல் - நூல் நயப்பு


தமிழ் முதல்வன் அவர்கள் தொகுப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியராக அமைய,அறிவுச் சமூகம் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது “இசையைப் புரிந்து கொள்ளுதல்” என்ற நூல்.

இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது அகவையின் தொடக்கமாக அமையும் ஜூன் 2022 இந்த நூல் வெளியீடு கண்டிருக்கிறது.

பொதுத் தலைப்பாக அமைந்தாலும் புத்தகத்தின் உள்ளடக்கம் இசைஞானி இளையராஜா குறித்துப் பல்வேறு ரசனையாளர்களின் பார்வையாகவே விரிகின்றது. இருப்பினும் இசைஞானி என்ற மையத்தை வைத்துக் கொண்டு அவரின் இசைப் பரிமாணங்கள், காலச் சூழல், புலமையாளர்கள் மற்றும் இசையின் அடிப்படை நெறி சார்ந்த ஒப்பீடாக அது பரந்து விருகின்றது. அதுவே “இசையைப் புரிந்து கொள்ளல்” ஆகின்றது.

இசைஞானி இளையராஜா பிறந்த ஜூன் மாதத்தை “இசைப் பெருவெடிப்பு வரலாற்று மாதம்” என்று அடையாளப்படுத்தி, கருத்தரங்குகளை வைக்கும் பண்பைக் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து “அறிமுச் சமூகம்” அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.  

இந்த முன்னெடுப்பு உருவான பாங்கைத் தனிக் கட்டுரையாகப் பகிர்ந்ததோடு இளையராஜா குறித்த சமுதாயப் புரிதலை விமர்சன ரீதியாகவும் முன் வைக்கிறார் அறிவுச் சமூகத்தின் தலைவர் தமிழ் முதல்வன் அவர்கள்.

தொடர்ந்து வரும் படைப்புகள் 2021 ஆம் ஆண்டு தமிழ்ப் பெருவெடிப்பு மாதத்தில் பல்வேறு அறிஞர் பெருமக்களும், இசையார்வலர்களும் இந்த நிகழ்வுகளில் வழங்கிய கருத்தரங்கங்களில், தேர்ந்த பகிர்வுகளின் எழுத்து வடிவங்களாக

இந்த நூல் ஆக்கம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் எட்டுக் கட்டுரைகளோடு 202 பக்கங்களோடு இந்திய ரூபா 275 க்கு இந்த நூல் இசை ரசிகர்களுக்காகத் திரட்டப்பட்டு வெளிவந்திருக்கின்றது.

“ஒரு ஓவியர் எப்படித் தன் உணர்வுகளைத் தூரிகைகள் மூலம் காட்சிப் படிமங்களாக வடிக்கிறாரோ, அதைப் போல இளையராஜா இசைப் படிமங்களை உருவாக்குகின்றார்” என்ற பார்வையில் பரந்து விரிந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட இளையராஜாவின் இசை குறித்த தன் பார்வையை முன்வைக்கிறார் தத்துவத்துறைப் பேராசிரியரான முரளி அவர்கள். அதில் ஆன்மிகக் கருத்துகளை ஒத்திசைவாக இசைஞானியின் வாழ்வியலோடு பொருதி ஒப்பிட்டுப் பயணிக்கின்றது “இசையே தவமாய்” என்ற இந்தக் கட்டுரை.

இளையராஜாவின் “அன்னக்கிளி” வந்த காலகட்டத்தில் கல்லூரி மாணவனாக அந்த இசையின் முதல் அலையைக் கேட்டு மயங்கிக் கிறங்கியவர், பின்னாளில் இசைஞானியின் கூட தனியறையில் அவர் அருகே அமர்ந்து சி.ஆர்.சுப்புராமன், எம்.எஸ்.விஸ்வ நாதன் போன்ற தன் இசை முன்னோர்களின் பாடல்களைப் பாடிப் பரவசமூட்டிய அனுபவத்தில் திளைத்திருக்கிறார், வேறு யாருமல்ல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே.

“கலையும் – தனிமனிதனும்” என்ற பங்கில் இளையராஜாவோடு தனக்குக் கிடைத்த “கஸ்தூரி மான்” படப் பாடற்பதிவு அனுபவங்களோடு. இங்கே முக்கியமானதொரு கருத்தையும் பதிவாக்குகிறார். கலையையும் தனி மனிதனையும் அதுவும் குறிப்பாக இளையராஜாவையும் இசையையும் தனித்து நோக்கலாகாது என்ற பார்வையை முன்வைக்கிறார். இளையராஜா என்ற ஆளுமையின் வெளிப்பாடு தான் இசை என்பதை நிறுவிப் பயணிக்கிறது அவரது பகிர்வு.

இளையராஜா இசையில் “படித்துறை” படத்தில் ஜெயமோகன் பாடல் எழுதியதற்கான விடையும் இங்கே பகிரப்பட்டிருக்கிறது கட்டுரையின் நீட்சியாக குறித்த கருத்தரங்கில் பங்கு கொண்டோர் கேட்ட கேள்விகளுக்கு ஜெயமோகன் வழங்கிய பதில்களோடு.

பத்திரிகையாளர் ம.சுசித்ரா வழங்கிய “கட்டுடைக்கும் இசை” பேசுவது இளையராஜா ஆக்கியளித்த மானுட நேசமும், சமூக விடுதலை மீதான பார்வையும் கொண்ட பாடல்களோடு, எவ்விதம் மரபு வழி பேணப்பட்ட சாஸ்திரிய சங்கீதம் சார்ந்த இராகங்கள் ராஜாவால் திரையிசையில் கட்டுடைப்பை நிகழ்த்தியிருக்கின்றன என்ற பார்வையுமாக விரிந்திருக்கின்றது.

“இசையைப் புரிந்து கொள்ளுதல்” நூலில் இந்தப் படைப்பைப் படித்து முடித்து விட்டு நினைத்தேன் இந்தக் கட்டுரை மட்டுமே வந்திருந்தால் கூட நூலின் அகப் பெறுமதியை மீறும் பொக்கிஷப் பகிர்வு என்று, அதுதான் முனைவர் ஜோ.ஆன்டனி செபாஸ்டியன் அவர்கள் பகிர்ந்த “இளையராஜாவின் சிம்போனி இசையில் திருவாசகம்”.

இந்தக் கட்டுரையை ஆழப் படித்தால் மேற்கத்தேய இசையில் ராகங்கள், மேலைச் செவ்விசைப் பாடகர்கள் என்று தொட்டு ஆரட்டோரியோ வரையான ஆழ அகலமான புலமைப் பதிவாக அமைந்திருக்கின்றது. இந்தக் கட்டுரையை அப்படியே இளையராஜா கண்களுக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. அவ்வளவுக்கு நுட்பமான கோட்பாட்டு விளக்கங்களைப் பகிரும் புலமைப் பகிர்வு இது.

இளையராஜாவை ஒரு பாடகராக அடையாளப்பட்ட ஆரம்ப வருஷங்களில் அதாவது நாற்பது வருடங்களுக்கு முந்திய காலத்தில் அவரை ஏளனப்படுத்தாத வெகுஜனப் பத்திரிகைகள் ஆகக் குறைவு எனலாம். அந்த விமர்சனப்பார்வை திரையிசை ரசிகர்கள் வரை நீண்டது. ஆனால் காலவோட்டத்தில் இளையராஜாவின் குரலைத் தமது ஆன்ம சங்கீதமாக நேசித்துக் கொள்ளும் சமூகம் உருவாகி விட்டது. அது மாரி 2 என்று இன்றைய மூப்புக் கொண்டாடும் ராசாவின் குரலைக் கூட யாசிக்கின்றது என்பதன் ஒப்புதல் வாக்குமூலமாக அமைகின்றது “கரகரப்பின் மதுரம்” என்ற பகிர்வு நவீனக் கவிதை உலகில் முக்கியமானதொரு படைப்பாளியாகக் கொள்ளப்படும் “இசை” அவர்களால் பகிரப்பட்டிருக்கின்றது.

சமூக வலைத்தளங்களில் பரவலாக அறியப்பட்டிருக்கும் எழுத்தாழுமை, ஊடகர் ப.கவிதாகுமார் அவர்களின் தனித்துவம் என்னவெனில் தமிழ்த் திரையிசையில் அடையாளப்படாத இசைக் கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் என்று தோண்டியெடுத்து வரலாற்று ஆவணப்படுத்துவது. அவரளவுக்கு இவ்விதம் ஆழமான நேசிப்போடு மலர்ந்தும் மலராத படைப்பாளிகள் குறித்த மெய்த்தன்மையான தரவுகளோடு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு. அவ்விதமான “ராஜா இசையில் வெளிவராத பாடல்கள்” என்ற படைப்பின் வழியாக, நாம் கேட்டு ரசித்த ஆனால் திரையில் வந்திருக்குமா என்ற சந்தேகத்தோடே நிற்கும் பாடல்கள் தொட்டும் இன்னும் பல திரவியங்கள் எவ்வளவு அற்புதமான பாடல்கள் காட்சி வடிவம் பெறாமல் போய் விட்டனவே என்ற ஏக்க உணர்வோ ஆவணப்படுத்தி இந்தக் கட்டுரை வழி அவர் பகிர்கின்றார்.

“காலமும் கலையும் : இளையராஜாவின் ‘இனிமை’ நீங்கிய பாடல்கள்” என்ற தொனியில் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் கருத்துப் பகிர்வில் 1) சமூக அரசியல் மாற்றத்தோடு தொடர்புடைய பாடல்கள், 2) கட்டியங்காரன் பாணியில் அமைந்த நாட்டார் மயப் பாடல்கள் 3) அம்மா பாடல்கள்/ தன்னைப் பற்றிய மெய்ம்மை நோக்கிய பாடல்கள், 4) பக்தி அல்லது அம்மன் பாடல்கள் என்ற பகுப்பாய்வைக் காட்டி நிற்பதோடு, இளையராஜாவின் சமூக மாற்றப் பாடல்கள் முந்திய தலைமுறையில் இருந்து வேறு அமைந்திருக்கும் பாங்கைத் தமிழக அரசியல் மாற்றங்கள், கம்யூனிஸ்ட் இயக்கக் கொள்கை சார்ந்த இளையராஜாவின் ஆரம்ப காலம் அது கொடுத்த திரையிசை வரவுகளாக அரசியற் பின்புலத்தோடு ஆராயும் பகிர்வு இது.

இந்த நூலின் இறுதிப் பகிர்வை பேராசிரியர் இரா.பிரபாகர் “வெகுசன இசையில் இளையராஜா” என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்து பகிர்ந்திருக்கின்றார்; அதில் வெகுசன இசைப்பணியில் இளையராஜாவின் தனித்துவம் என்னவென்பதை மெட்டமைக்கும் பாணியில் இருந்து இசை வடிக்கும் நுட்பம் வரை விபரித்துச் செல்கிறார்.

இளையராஜாவைச் சுற்றியே இந்தக் கருத்தரங்கங்கள் அமைந்ததால், கட்டுரையாளர்களின் உள்ளிருக்கும் தீவிரமான ராஜா நேசிப்பு அதீத ஒப்பனைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. ஆனால் அவற்றுக்கான நியாயப்பாடுகளையும் தங்கள் தரப்பில் முன்வைக்கின்றார்கள்.

“இசையைப் புரிந்து கொள்ளுதல்” நூல் இளையராஜா ரசிகர்களுக்கும் புதிய பல சேதிகளையும், உதாரண விளக்கங்களூடு இளையராஜா என்ற இசைப் பேராளுமை குறித்த பார்வையையும் கொடுக்கும் வகையில் பலருக்கும் சென்று சேர வேண்டிய தொகுப்பு இது.

இந்த நூலை வாங்குவதற்குத் தொடர்பு கொள்க achamoogam@gmail.com 

கானா பிரபா

18.08.2022


Monday, August 15, 2022

ஏ.ஆர்.ரஹ்மான் ❤️ புத்திசைக்கு வயசு 30 🥁🎺

ஆகஸ்ட் 15. 1992 

ரோஜா திரைப்படம் வெளிவருகிறது. 

தமிழ்த் திரையிசையின் அடுத்த போக்கை அது தீர்மானிக்கப் போகிறது என்ற முடிவு ஏதும் அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்படாத சூழலில், இயக்குநர் கே.பாலசந்தர் தன் கவிதாலயா நிறுவனத்துக்காக வெளியார் ஒருவரை வைத்து இயக்கும் இன்னொரு படம் என்ற கவனிப்பு , அதையெல்லாம் தாண்டி மணிரத்னம் என்ற நட்சத்திர இயக்குநரின் அடுத்த படம் என்ற ரீதியிலேயே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது.

இளையராஜாவை விட்டு விலகிய வைரமுத்துவுக்கு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்ற ரீதியில் அப்போது கை கொடுத்தவை ஏவிஎம் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயாவும் தான். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் எழுந்த விரிசல், கவிதாலயா நிறுவனத்தோடு இளையராஜா இசையமைத்து (இதுவரை) வெளியான இறுதிப் படம் என்ற கணக்கில் பாலசந்தரின் சீடர் அமீர்ஜான் இயக்கிய "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" படம் அமைந்து நிற்கிறது. மணிரத்னத்தை வைத்து கே.பாலசந்தர் படம் பண்ணுவோம் என்று தீர்மானித்த போது இளையராஜாவை விட்டு விலகி இன்னொரு இசையமைப்பாளரோடு சேரத் தயக்கம் காட்டினாராம் மணி ரத்னம் (ஆதாரம் Weekend with Star இல் சுஹாசினி). ஆனால் பாலசந்தரோ அது ஒத்துவராது என்று சொல்லி விட்டாராம். அந்த நேரத்தில் பாலசந்தரும் தான் இயக்கிய அழகன், வானமே எல்லை ஆகிய படங்களுக்கும், தன் சிஷ்யர் வஸந்த் இயக்க, கவிதாலயா சார்பில் தயாரித்த நீ பாதி நான் பாதி ஆகிய படங்களுக்கும் மரகதமணி (கீரவாணி) ஐயும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்துக்கு தேவாவையும் ஒப்பந்தம் செய்து விட்டார். இவற்றில் "நீ பாதி நான் பாதி" படத்தைத் தவிர அனைத்துமே ஜனரஞ்ச ரீதியில் வெற்றி பெற்றவை. அதுவும் 1992 ஆம் ஆண்டில் பாலசந்தர் இயக்க மரகதமணி இசையமைத்த "வானமே எல்லை", சுரேஷ் கிருஷ்ணா இயக்க தேவா இசையமைத்த "அண்ணாமலை", மணிரத்னம் இயக்க ரஹ்மான் இசையமைத்த "ரோஜா" என்று மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை வைத்து கவிதாலயா தயாரித்த படங்கள் சூப்பர் ஹிட். இது தமிழ்த் திரையுலகமே கண்டிராத புதுமையான, சவாலுக்கு முகம் கொடுத்த வெற்றி. ஏன் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனமே எதிர்காலத்திலும் கூட இப்படியொரு வெற்றியைக் கண்டதில்லை.

இசையமைப்பாளர் சேகர் மகன் என்ற முத்திரையைத் தாண்டித் தன் பதின்ம வயதுகளில் இளையராஜா, T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் கலைஞராக ஒரு பக்கம், விளம்பரப் படங்களுக்கு இசை, திரை சாரா இறை பக்தி, தனிப் பாடல்கள் என்று இசையமைப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தப் போராடிய ரஹ்மானுக்கு மணிரத்னம் அவர்களின் சகோதரி சாரதா அவர்களின் அறிமுகம் கிட்டவும், அந்த நேரத்தில் புது இசையமைப்பாளரைத் தேடிய மணிரத்னம் அவர்களிடம் ரஹ்மானைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது காலம்.

"எனக்கு மரபு வழியான சினிமாப் பாடல்களுக்குள் நில்லாமல் அதையும் தாண்டி ஏதாவது பண்ணணும் அது திரையிசையைக் கடந்ததாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்" 

என்று ரஹ்மான் தன் அந்த ஆரம்ப காலத்தை நினைவுபடுத்தினார் அண்மையில். 

இசைஞானி இளையராஜாவோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் வைரமுத்து இணைந்து பணியாற்றிய இயக்குநர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி வைரமுத்துவுக்கான இடத்தைக் குறித்த பாடல்களில் துலங்க வைத்ததன் நீட்சியே ரஹ்மான் வருகையிலும் நிகழ்ந்தது. ரோஜா பாடல்களில் "சின்னச் சின்ன ஆசை" பெற்ற பெருவாரியான வரவேற்பில் வைரமுத்துவின் பங்கு வெள்ளிடை மலை. 

ஆனால் இங்கே ரஹ்மானுக்கும் வைரமுத்துவோடு சேர்ந்து வெற்றி கிட்டியது.

ரஹ்மானோடு வைரமுத்து இணைந்து பணியாற்றிய பாடல்களைப் பட்டியல்படுத்தினால் இந்தக் கூட்டணியின் சிறப்பும் தனித்துவமும் புரியும்.

எழுத்தாக்கம் கானா பிரபா

“ரோஜா” பாடல்களைப் பற்றிச் சிறு குறிப்பேனும் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தில் பங்கேற்ற பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற தேர்ந்த முன்னணிப் பாடகர்களோடு தன் திரையிசைப் பயணத்தில் புதுப் புதுக் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக் கிணங்க் ஏற்கனவே பாடி அதிகம் ஜனரஞ்சக வட்டத்தை எட்டாத உன்னி மேனன், சுஜாதா போன்றோரோடு வட நாட்டில் இருந்து ஹரிஹரன் ஐயும் இழுத்து வந்து தமிழில் கோலோச்ச வைக்கிறார். 

தன்னுடைய முதல் முயற்சியில் சம பங்காக இந்தக் கணக்கை வைத்து ரசிகர்களிடம் விட்டு விடுகிறார்.

மீரா படத்தில் இசைஞானி இளையராஜாவால் மின்மினி என்று பெயர் சூட்டப்பட்ட மினி ஜோசப் "சின்னச் சின்ன ஆசை" பாடலுக்கு முன்பே ராஜா இசையில் ஏராளம் பாடியிருந்தாலும் ரஹ்மானே அறிமுகப்படுத்தியது போன்றதொரு தோற்றப்பாட்டைக் கொடுத்தது. இதுவே அன்னக்கிளி வழியாக எஸ்.ஜானகிக்கும் நிகழ்ந்தது.

அதாவது "மீள நிறுவப்பட்ட" குரல்களாகத் தன் இசையில் பிரதிபலிப்பது.

இதன் நீட்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் புதுக் குரல்களைத் தேடிய பயணம் என்றொரு பகிர்வை முன்னர் கொடுத்திருக்கிறேன். அதை வாசிக்க

http://www.radiospathy.com/2011/01/blog-post.html

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் அதன் கதையமைப்பில் சோடை போனாலும் காட்சித் திறன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு அவருக்கு முதலில் வாய்த்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பரப் பட உலக அனுபவம் உப காரணிகளாக இருக்கலாம். பின்னாளில் அதைத் தக்க வைக்க, சேர்ந்த ஷங்கர், கதிர் (ரகுமானின் நண்பர்), விளம்பரப் படங்களின் வழியாக வாய்த்த டெலிஃபோட்டோஸ் சுரேஷ் மேனன் (புதிய முகம்), ராஜீவ் மேனன் (மின்சாரக் கனவு) போன்ற சில உதாரணங்களை முன்னுறுத்தலாம்.

ரஹ்மானின் இசைப் பயணம் மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்துப் படைப்புகளை ஒப்புக் கொண்டதற்குத் தன்னுடைய இசை காட்சி வடிவம் பெறுவதன் பாங்கினாலான அவரின் மிகுந்த கரிசனையும், எதிர்பார்ப்பாகவும் அமையக் கூடும்.

இங்கே காட்சி வடிவம் எனும் போது சம காலத்த்தில் பிரபு தேவா அலையடித்தது ரஹ்மானுக்கு இன்னுமொரு வரப் பிரசாதம்.

எழுத்தாக்கம் கானா பிரபா

தேர்ந்தெடுத்துப் படம் பண்ணினாலும் வண்டிச்சோலை சின்ராசு, மனிதா மனிதா (தெலுங்கு), பரசுராம் போன்ற கரும்புள்ளிகளும் அவரை ஒட்டிக் கொண்டன. அதே போல் மரியாதை நிமித்தம் பாலசந்தருக்காக பார்த்தாலே பரவசம், பாரதிராஜாவுக்காக தாஜ்மஹால் ஆகியவை பண்ணியதும் ரஹ்மானுக்குக் கிடைத்த இக்கட்டுகள். 

கிழக்குச் சீமையிலே படம் ரஹ்மானுக்கான இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு உதவியது. கிராமச் சூழல் கொண்ட படத்துக்குத் தன் தனித்துவத்தை விடாது அதே சமயம் அந்தப் பாங்கிலேயே கொடுத்ததால் அது அங்கீகரிக்கப்பட்டது. கருத்தம்மாவும் அதே பாங்கில் இசை ரீதியாக வெற்றி பெற்ற படைப்பு.

எந்தவொரு உன்னதமான படைப்பாளியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட மாட்டான். விரிந்த தன் தேடல்களைச் சமரசமில்லாமல் ரசிகர்களுக்கும் சுவைக்கக் கொடுப்பான். இளையராஜாவின் ஒவ்வொரு தசாப்தங்களிலும் இந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்திருக்கிறோம். பாடல்களே இல்லாமல் வரவிருந்த அலை பாயுதே படத்திற்குப் பாடல்கள் தேவை என்று வற்புறுத்தியவர் ரஹ்மான். அவர் நினைத்திருந்தால் அலை பாயுதே உடன் தேங்கியிருந்து அது போலவே இன்னும் சுட்டுக் கொண்டிருக்கலாம். அது போல் திரையிசை தாண்டி "வந்தே மாதரம்" போன்ற திரை சாரா இசைப் படைப்புகளிலும் தன் முயற்சியைக் குறைக்காது பெருக்கினார்.

தொண்ணூறுகளில் இளையராஜா மீண்டும் தராத அந்த எண்பதுகளின் இசையைத் தேவாவின் வழியாக ரசித்தது போல ரஹ்மானின் தொடர்ச்சியாகவே ஒரு இசைப் பட்டாளம் தமிழ்த் திரையிசையில் நீண்டு தொடர்கிறது.

இந்தியாவில் அகலத் திறந்து விடப்பட்ட தராளமயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்றவை நுகர்வோரின் அடிப்படைப் பண்டங்களில் இலிருந்து பொழுது போக்குச் சந்தை வரை இலக்கு வைத்தது. இந்த நேரத்தில் ரஹ்மானின் வருகை முக்கியமாகப்படுகிறது.  இசையுலகில் நவீனத்தின் புதிய கதவு திறந்து விடப்பட ரஹ்மான் முக்கிய காரணி ஆகின்றார். அதுவரை மேட்டுக்குடி மக்களை இலக்கு வைத்த மேற்கத்தேய இசையின் பரவல் ரஹ்மான் வழியாக அடித்தள மக்களுக்கும் சென்று சேருகிறது.

இதற்கு முந்திய காலகட்டத்தில் இளையராஜா இதையே மரபுரிமை வாய்ந்த இசையோடு கலந்த கலவையாகப் பிரிப்பேதுமின்றிக் கொடுத்ததால் அந்தப் பாணி அந்நியமாகப் படவில்லை.

சண்டையில் எதிரியின் போர்த் தந்திரோபாயங்களை நாளடைவில் கற்றுத் தேறுவது போல கலைத் துறையிலும் தன் முன்னோர்களால் எடுத்துச் செல்லப்பட்ட திரையிசையைத் தான் கையில் எடுத்த பின் அந்தப் பழைய முன் அனுபவங்களை வைத்துப் படிப்பினைகளைப் தன் இசைத் தொழிலின் பாடங்களாக்கினார். அதுவே அன்று தொட்டு இன்று வரை தன் பாடல்களுக்கான காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு முறையாகக் கையாள்வது, தன்னுடைய படைப்புக்கான சந்தை மதிப்பை அதிகப்படுத்தும் விளம்பர உத்திகளை மேற்கொள்ளக் கூடிய, வர்த்தக உலகத்துக்கான தன் பிரதிநிதிகளைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது, பாடல்களில் மேம்பட்ட, உச்ச ஒலித்தரம், இன்றைய iTunes உலகில் கூடச் சுடச் சுடத் தன் படைப்புகளை கடைக்கோடி நுகர்வோர் வரை எட்டச் செய்வது என்று வர்த்தக ரீதியிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கான பரிமாணம் தனித்துவமாகவும், ஸ்திரத்தன்மையோடும் தொடர்கிறது. ஒரு படைப்பாளி சறுக்குவது இந்த இடத்தில் தான். ஆனால் ரஹ்மான் அந்த விஷயத்தில் தக்கோரைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது வெற்றியைச் சுலபமாக்கியது.

எழுத்தாக்கம் கானா பிரபா

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது

இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் நேரடியாக அவர் காலூன்றிய போது தொடர்ச்சித் தன்மை இருக்கவில்லை.

பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குநர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.

ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் "ரங்கீலா"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல் தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். 

அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் "ஹிந்துஸ்தானி" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.

 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குநரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான். இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. 

இன்றும் மலையாளிகளைக் கேட்டுப் பாருங்கள் "யோதா" (தமிழில் அசோகன்) தான் நம்மட ரெஹ்மான் இசையமைச்சது என்று பீற்றுவார்கள். வெளியீட்டில் ரோஜாவுக்கு அடுத்து வந்த படம் அது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிப் பிராந்தியப் படங்களில்  இளையராஜா தக்க வைத்திருந்த கோட்டையை அந்தந்த மொழிகளில் இசையமைத்து வெற்றியைச் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இன்று இந்திய அளவில் ரஹ்மானுக்கான ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது அவரின் ஹிந்திப் பிரவேசமே.

ரஹ்மானின் ஹிந்திப் பிரவேசம் அதைத் தொடர்ந்து தீபா மேத்தா போன்றவர்களால் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படுதல், அதனைத் தொடர்ந்து Bombay Dreams என்ற மேடை இசை நாடகம், Slumdog Millionaire திரைப்படம் வழியாக இரண்டு Oscar விருதுகள், மற்றும் இசைக்கான Grammy விருதுகள் இரண்டு என்று நிகழ்த்தப்பட்ட வரலாறுக்கு முந்திய தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததற்கான தாமதமான அங்கீகாரங்களாகவே இவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே இசையுலகில் புதுமையை நிகழ்த்திக் காட்டி விட்டார். 

தமிழ் திரையிசையின் மூன்று முக்கிய இசை ஆளுமைகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான மாற்றத்துக்கான இசை இனி எங்கியிருந்து, யாரால் எடுத்து வரப்படப் போகிறது என்றதொரு கால கட்டத்தை நெருங்கும் இவ்வேளை, ரஹ்மான் இசைத்துறையில் நிகழ்த்திக் காட்டிய தேடல்களை மீறியதொரு வரப் போகும் படைப்பாளி எவ்விதமான ஆளுமை செலுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாதவொரு குழப்பமே தற்போது இசைத்துறையில் நிலவும் கூட்டணி ஆட்சியில் தொடர்கின்றது.

1968 இல் வெளிவந்த “கருத்த பெளர்ணமி" பட இசையமைப்பு வேலைகளில் தனக்கு ஒரு துணை இசையமைப்பாளர் தேவை என்று தன் குரு தேவராஜன் மாஸ்டரிடம் வேண்டுகோள் வைக்கிறார் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் அர்ஜீனன் மாஸ்டர்.

தேவராஜன் மாஸ்டர் காட்டியவர் ஆர்.கே.சேகர், அன்று தொடங்கிய பயணம் அர்ஜீனன் மாஸ்டரிடம் தன் சடுதியான மரணம் வரை உதவுகின்ற இசையமைப்பாளராக ஆர்.கே.சேகர். அந்தக் காலகட்டங்களில் குட்டிப் பையன் திலீப் இவர்களின் இசையமைப்பு இடைவேளைகளில் ஆர்மோனியத்தை வைத்து வாசிப்பதைக் கடைக்கண்ணால் பார்த்து மனதில் பதிய வைக்கிறார் அர்ஜீனன் மாஸ்டர்.

எம்.பி.ஶ்ரீனிவாசன் மற்றும் தட்சணாமூர்த்தி சுவாமிகள், அர்ஜீனன் மாஸ்டர் ஆகியோருடன் இசைக் கூட்டுச் சேர்ந்த

ஆர்.கே.சேகர் அவர்கள் தனியாகவும் இசையமைப்பாளராக இயங்கியிருக்கிறார். இவரின் இறுதித் திரைப்படமான “சோட்டனிக்கார அம்மா” என்ற படத்துக்கு இசையமைக்கும் போது நலிவுற்ற இவரை அப்போது கூட இருந்து பார்த்தவரும் அர்ஜீனன் மாஸ்டர் தான்.

ஆர்கே சேகர் 1976 ஆம் ஆண்டில் இவ்வுலகை விட்டு நீங்கும் போது

ஆர்கே சேகரின் மூத்த வாரிசு திலீப்புக்கு வயசு ஒன்பது.

திலீப்பின் அம்மா தன் மகனை இசையுலகத்துக்கு அறிமுகப்படுத்துமாறு அர்ஜீனன் மாஸ்டரிடம் கேட்டுக் கொள்கின்றார்.

1981 இல் “ஈரநாட்டின் மண்ணில் நின்னும் உணர்நெனித்திடும்” படத்துக்காக திலீப்பை கீபோர்ட் வாசிக்க அமர்த்துகின்றார் அர்ஜீனன் மாஸ்டர். அப்போது திலீப்புக்கு வெறும் 13 வயசு தான். தொடர்ந்து திலீப் என்ற அந்தச் சிறுவன் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெரும் இசையாளுமையாக வளர்வதற்கு முன் தினக் காலங்களில் அர்ஜீனன் மாஸ்டரின் அரவணைப்பு பெரும் பலமாக அமைந்திருக்கின்றது.

சேகர் என்ற ஆளுமை மிக்க ஒரு இசையமைப்பாளரின் மனைவியாக இருந்து, 

இள வயதிலேயே கணவனை இழந்து தனியன் ஆகித் தன் குழந்தைகளை வளர்த்து,

தன் மகனின் இசைக்கனவை மெய்ப்படுத்திய வகையில் தாய் என்ற் ஸ்தானம் கடந்த பெருந்தகை.

He died when I was just nine years old. Till five years after my father died, my mother would rent out his musical instruments to run the house after which she was advised to sell the equipment and live with the interest, but she refused saying, No, I have my son. He will take care.She has music instincts. Spiritually she is much higher than me in the way she thinks and takes decisions. For instance, her decision of making me take up music. She made me leave school in Class XI and take up music and it was her conviction that music is the line for me. - Times of India பேட்டியில் (2017) ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயைப் பற்றி.

ஏ.ஆர்.ரஹ்மான் வெறும் இந்தியத் திரையிசையின் போக்கை நிறுவியவர், அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் என்ற அளவில் மட்டுமே பேசு பொருளாக இருக்கக் கூடாது.

அந்தச் சாதனையாளன் தன் 9 வயதில் தந்தையை இழந்த போதும், இசையைத் தன் வாழ்வியல் கருவியாகக் கொண்டு புதிய புதிய தேடல்களைத் தேடிப் பறந்த இசைப் பறவையாக, நம்பிக்கையை விதைத்த ஒரு ஆளுமையாகக் கொள்ளப்பட வேண்டியவர்.

“என் முன் இரண்டு தெரிவுகள் இருந்தன. 

ஒன்று வெறுப்பு இன்னொன்று அன்பு

அவற்றில் நான் தேர்ந்தெடுத்தது அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்தேன் நான் இங்கே இருக்கிறேன்”

https://www.youtube.com/watch?v=cnBFDTSIj2U

 ஏ.ஆர்.ரஹ்மான் (81st Oscar விருது விழா 2009)

கல்லொன்று

தடை செய்த போதும்

புல்லொன்று புதுவேர்கள் போடும்

சந்தோஷக் கண்ணீரே! ❤️

கானா பிரபா

15.08.2022


Friday, August 12, 2022

மின்மினி 💕 சிறகடிக்க ஆசை ❤️

எழுத்தாக்கம் Kana Praba

"சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

பாடலை எதேச்சையாக எப்போது கேட்டாலும் புத்துணர்வு தருகிறது, 

மாற்றம் என்பது அப்படி இருக்கவேண்டும்"

என்று சற்றேறக்குறையப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்திருந்தேன். 

குளிர் காற்றுச் சில்லென்று முகத்தில் படும் அந்த உணர்வுக்கு புத்திசை நாயகன் ரஹ்மான், வரிகளை மணிமணியாகப் பகிர்ந்த வைரமுத்து இவர்களை எல்லாம் பிரதிபலித்த குரலாக மின்மினி. 

அதற்கு முன்பே மின்மினி குரலைக் கேட்டுப் பழகியவர்களுக்குக் கூட இந்தப் பாடல் ஏனோ புதுக்குரல் தரும் பிரமையைக் கொண்டு வந்தது.

இப்படியாகத் தமிழ்த் திரையிசையின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்ததில் மின்மினியை இன்றைய தலைமுறையும் இன்னும் ஞாபகத்தோடு மனதில் இருத்தி வைத்திருக்கின்றது. கொஞ்சம் அதிகப்படியான உரிமையோடு, மின்மினியை ரஹ்மான் தான் அறிமுகப்படுத்தினார் என்பதைக் கூடச் சொல்லி வைக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் "மீரா"திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக வந்த அவருக்கு, அந்த ஆரம்ப காலத்தில் நிறையைப் பாடல்களைக் கொடுத்து வாய்ப்பளித்திருக்கின்றார் ராஜா. மலையாள தேசத்துக் குரல்களின் மீது ஏனோ ராஜாவுக்குத் தீராக் காதல். சுஜாதா, சித்ரா, சுனந்தா, செர்ணலதா (இவர் எம்.எஸ்.வி இசையில் தான் அறிமுகமானார் ஆனால் ராஜா கொடுத்த பாடல்களால் கிடைத்த புகழை இங்கே சொல்லவா வேண்டும்), என்று நீளும பட்டியலில் மின்மினியும் இணைந்து கொண்டார். ரோஸில்லி என்ற இயற்பெயர் கொண்ட “மினி ஜோசப்” என்ற பெயரிலேயே வலம் வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான். 

சொர்ணலதா போல இவருக்கும் ஓரவஞ்சனை இல்லாது நிறைய நல்ல நல்ல பாடல்களை ராஜா கொடுத்திருக்கின்றார். 

ஆனால் அன்றைய சூழலில் ஜானகி, சித்ரா போன்ற முதல் வரிசைப் பாடகிகள் அளவுக்கு வராமற் போயிருந்தார். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமாக, அந்தப் படத்தின் முத்திரைப் பாடல் "சின்னச் சின்ன ஆசை" பாடல் மின்மினிக்குக் கிடைக்க அவர் அதுவரை தொடாத உயரங்களைத் தொட்டார் இந்தப் பாடல் கொடுத்த புகழால். இசைஞானியின் பாடகிகளில் செர்ணலதாவையும், மின்மினியையும் வைத்து ரஹ்மான் தன் ஆரம்ப காலப் படங்களில் நிறையவே கொடுத்திருக்கின்றார். ஆனால் மின்மினி என்பது வானத்தில் ஒளிர்ந்து மறையும் என்பது இவரின் வாழ்க்கையிலும் எழுதப்பட்ட துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. மின்மினிக்குத் திடீரென்று பேச்சாற்றால் இழக்கப்பட, அதுவரை சேர்த்த அத்தனை புகழும் அங்கீகாரமும் ஒரே நாளில் கலைந்து போகின்றது. 

பாடகி மின்மினி, தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகள் இளையராஜா, ரஹ்மான் தவிர தேவா உள்ளிட்ட மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடினாலும் இந்த இருவரிடமிருந்து  பெற்ற பாடல்கள் அளவுக்கு இல்லை என்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது(உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw  பாடலை எஸ்.பி.பி என்ற ஜாம்பவானுடன் பாடும் போது, தன்னிலையில் இயங்கும் மின்மினி பளிச்சென்று மின்னுவார் அதுவும் அந்த 2.30 வது நிமிடத் துளியில் ஆகா https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw

 "ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே" https://www.youtube.com/watch?v=W_4nPYWfCEU  (திருமதி பழனிச்சாமி) என்று ( 2.21 நிமிடம்) அதுவரை கலாய்த்துப் பாடிய எஸ்.பி.பி, சுந்தரராஜன் குழுவுக்குப் போட்டி போட்டுப் பாடுவதிலாகட்டும் மின்மினியின் குரலின் கனிவுக்கு சில சான்றுகள்.

கிட்டத்தட்ட இதே தொனியில் மின்மினி, மலேசியா வாசுதேவனோடு பாடிய “குத்தாலக் காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு" (சின்ன தேவன்) https://www.youtube.com/watch?v=HFhpp-wc0JQ அதிகம் பிரபலமடையாத அற்புத கானம். 

"அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக் கிளி) 

https://www.youtube.com/watch?v=TzflTNcAX4I

பாடலில் மனோவோடு இணைந்து பாடும் மின்மினிக்கு மாற்றீடாக இந்தப் பாடலில் இன்னொரு குரலைப் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளராக இருந்து இயக்குநராக வந்த செய்யாறு ரவியின் இயக்கத்தில் வந்த தர்மசீலன் படத்தில் வரும் "தென்றல் வரும் முன்னே முன்னே" https://www.youtube.com/watch?v=aGnSSv-WvOw  பாடல் மின்மினிக்கு ராஜா கொடுத்த அங்கீகாரங்களில் ஒன்று. தாம்பத்திய உணர்வின் பிரதிபலிப்பு அந்த இனிய சங்கீதத் தாலாட்டு அதில் மிகவும் உருகிக் கொடுத்திருப்பார் மின்மினி.

அதே படத்தில் வரும் “ராத்திரியில் பாடும் பாட்டு" https://www.youtube.com/watch?v=BpgR1O_aHZY  பாடலின் வழி அருண்மொழியோடு மீண்டும் இணை சேரும் போது அந்த ஒத்த அலைவரிசை அழகாக அமைந்திருக்கும்.

“முத்துமண்டபம் நட்ட நடுவே....

சித்திரக்கிளி தன்னந்தனியே

துணை கிட்டுமா.......

வந்து சேருமா.......”

என்ற தொகையறாவுடன் கொடுக்கும் “அன்பே வா அன்பே வா” (ஏழை ஜாதி) https://www.youtube.com/watch?v=wXRhO_s2x-s ராஜா இவருக்குக் கொடுத்த சவாலான பாடல்களில் ஒன்று. 

வள்ளி படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" என்ற பாடலில் சொர்ணலதா வழியாக ஏங்கும் காதலியின் உணர்வைக் கொண்டு வந்த ராஜா,  உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் "தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே" https://www.youtube.com/watch?v=U_-8mmcg-Ds  பாடலை மின்மினிக்குக் கொடுத்து அதே பரிமாணத்தை இன்னொரு வழியாகக் காட்டியிருக்கிறார். 

இவையெல்லாவற்றுக்கும் மேலாக என் மனசுக்கு நெருங்கிய பாடல்களில் ஒன்றான 

"நல்ல தலைவனும் தலைவியும்" (பிள்ளைப்பாசம்) பாடலில் 

"எங்கும் பொழியுது ஒளிமழை 

வண்ண விளக்குகள் பலவகை... 

ஊரெல்லாம் திருவிழா" 

https://www.youtube.com/watch?v=L29mVbzhzcA

என்று பாடும் அந்தக் கணங்களில் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றார்.

"மேகங்களைத் தொடுப்பேன் 

மஞ்சமதை அமைப்பேன் 

எந்தனுயிரே எந்தனுயிரே, 

வானவில்லைப் பிடிப்பேன் 

ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் 

கண்ணின் மணியே கண்ணின் மணியே,

உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே”

https://www.youtube.com/watch?v=KQywnZ-rjtc

அப்பாவித்தனமும், அவர் கொடுக்கும் மின்னி மின்னி மறையும் சங்கதிகளுமாக ஒரு பள்ளிக்காதலிக்குரிய தோரணையில் கொஞ்சும் குரல்.

 “மலையோரம் மாங்குருவி" (எங்க தம்பி),  

https://www.youtube.com/watch?v=S0VJHEcr2QM

மெதுவாத் தந்தி அடிச்சானே (தாலாட்டு) மனோவுடன், 

ஜேசுதாசுடன் அரிதாகச் சேர்ந்த “ஓ மாரி” https://www.youtube.com/watch?v=_Egs4Q-3jyY  (பாட்டு வாத்தியார்)

ஐ லவ் இந்தியாவில் “குறுக்குப் பாதையிலே”, “காற்று பூவைப் பார்த்துக் கூறுது" என்று எஸ்பிபியுடனுமாகக் அந்தக் குறுகிய காலத்தில் பாடிக் கொடுத்தார்.

இளையராஜா இசையில் 1991 – 1995 கால நான்கு ஆண்டு காலத்துக்குள் 46 பாடல்களை அள்ளிப் பாடியவர், 

“மணமகளே மகளே வாழும் காலம் சூழும் 

மங்கலமே மங்கலமே” 

https://www.youtube.com/watch?v=ijbqgzWZgDk

ஸ்வர்ணக் குரலுடன் ஜோடி “மின்”னும். 

தனித்தும் குழுப் பாடகிகளோடும், சக பாடகிகளோடும் என்று இன்னும் இணைக் குரலாக அமைந்திருக்கின்றார்.

“நிலவ நிலவ இப்போ நான் புடிக்கும் நேரம்” மனோ & குழுவினரோடு போட்டி போட்டுப் பாடியிருப்பார்.

https://www.youtube.com/watch?v=70ae7_ZY028

“வாடி என் செங்கமலம்” 

https://www.youtube.com/watch?v=J3JBurIjUTY

தன் தாய் தேசம் கேரளத்தில் குறைச்சலாகப் பாடினாலும்

ரவீந்திரன் மாஸ்டரின் சங்கீதத்தில் 

“செளபர்ணிதா மித”

https://www.youtube.com/watch?v=nxaNfaFd9io

ஆகா என்னவொரு சாஸ்திரியப் பிரவாகமாய்ப் பாயும்.

இன்னும் ஜான்சன் மாஸ்டர் இசை கொடுத்த “வெள்ளித்திங்கள்"

https://www.youtube.com/watch?v=roNaea_HFdA

இன்னொன்று பாலகிருஷ்ணனின் இசை கொடுத்த வியட்னாம் காலனி “பாதிராவி நேரம்"

https://www.youtube.com/watch?v=JxfbL3nTRLQ

என்று அங்கும் குறைவாகப் பாடினாலும் நிறைவாக நிலைத்திருக்கின்றார் ரசிகர் மனதில்.

கானா பிரபா

இன்னொரு பக்கம் ரஹ்மானின் தொடக்கத்தில் இருந்து மின்மினிக்கு ஆரம்ப கால வாய்ப்புகளில் “பாக்காதே பாக்காதே” (ஜென்டில்மேன்) ஜெயச்சந்திரனோடு “சித்திரை நிலவு” (வண்டிச் சோலை சின்ராசு) கேட்கும் போது ஆகா இந்த ஜோடிக் குரல்களை மனதில் வைத்துக் கொண்டே மெட்டுக் கட்டியிருப்பாரோ என்னுமளவுக்கு அச்சொட்டான ஜோடிக் குரல் பொருத்தம் இசையோடு இழைந்திருக்கும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் “எடுடா அந்தச் சூரிய மேளம்” (புதிய மன்னர்கள்) பாட்டுத்தலைவனோடு கூடச் சேர்ந்து பாடும் மிதப்பு இருக்கும்.

அப்படியே துள்ளிசை ஆட்டம் போட்டு

மால்குடி சுபாவுடன் “சம்போ சம்போ பக்திப் பாடல் பாடட்டுமா (புதிய முகம்)

https://www.youtube.com/watch?v=2njd4p8MEsY

கொடுத்திருக்கும் விதமே வெகு அற்புதமாக இருக்கும். சின்னச் சின்ன ஆசைக்கு நேரெதிர் விளைவாக அந்தக் குரலின் பரிமாணம் இருக்கும்.

மின்மினியின் தொடர் பயணத்தில் ஒரு தடைக்கலாகப் பாடுவதற்கு அவர் சிரமப்பட்ட சோகம் நிகழ்ந்து, முடங்கிப் போய் மீண்டும் வெளியே வந்தவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்தத் தொண்ணூறுகளின் மின்மினியாகவே மேடையில் தன் குரலால் ஒளிர்ந்தார் இப்படி

https://www.youtube.com/watch?v=9TnTIEHSfRQ

மின்மினி தன் குரலை அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விளையாடுவார். அனுபவப்பட்ட பாடகிகள் அநாயாசமாக ஏற்ற இறக்கங்களோடு கொடுக்கும் சங்கதிகளோடு பாடுவதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு மின்மினியின் அந்தக் குரலில் மிளிரும் பெப்பர்மிண்ட் உணர்வு மறக்கடிக்க வைத்து விடும்.

நான் ஒரு

வீணையைப் போலே

நீ என்னை மீட்டுகிறாய்

ராகத்தின் சாயல்கள்

எல்லாம்

மோகத்தில் காட்டுகிறாய்

அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட

தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்  ❤️

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மின்மினிப் பாடகிக்கு 

கானா பிரபா

12.08.2022


Wednesday, August 10, 2022

ஒரு மாலைச்சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே ❤️


கடந்த இரண்டு நாட்களாக இலக்கியாவைப் பள்ளிக்கூடத்தில் விடும் போதும், மீண்டும் அழைத்து வரும் போதும் இந்தப் பாடலையே தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.


அந்தத் தாள லய ஓசை நயம் என் காதுகளை விட்டு நகராமல் அப்படியே இருக்கிறது.


“பால் நெலவு சூரியன்போல் 

சுட்டதென்ன நியாயம்

பச்சக்கிளி தோளக் கொத்தி 

வந்ததிந்த காயம்

ஓடிவந்த வைகை நதி 

காஞ்சதென்ன மாயம்

கூட வழி இல்லையென்றே 

ஆனது பெண் பாவம்“


https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw


பாடலாசிரியர் காமராசனுக்குக் கிடைத்த பொக்கிஷப் பாட்டு.

அந்தப் பாட்டில் அழகானதொரு தொகையறாவும் முத்தாய்ப்பாய் இருக்கும்.


மின்மினி குரலைப் பிரதிபண்ணவே முடியாத ஒரு நுணுக்கம் இருக்கும். 

டி…யில் தொடங்கி

ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ..ஆ..

அந்த “ஆஆஆ” எனும் போது அது அவரின் முத்திரையாக மிளிரும். கேட்கும் போதெல்லாம் மிண்ட் சுவை. இதற்காக அவர் குரல் ஒன்றும் அதிக பிரயாசைப்படாது, மின்மினியின் இயல்பான குரல் அது.


பாட்டு முழுக்க உணர்ச்சிப் பிரவாகத்தில் எஸ்பிபி தனித்துப் பன்முக ஏற்ற இறக்கங்களை அப்படியே நம்முள் கடத்தி விடுவார்.


வெண்ணிலவில் தேடுகிறேன் 

கன்னி முகம் காணோம்

புன்னகையும் நான் இழந்தேன் 

என் மனதில் சோகம்

சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்

தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்


செல்லக் குயில் கூவ 

மெல்ல வரும் மேகம்

சொல்லில் வரும் சோகம் 

கங்கை நதி ஆகும்

எங்கிருந்த போதிலும் 

நீ வந்து விடு தேவி


மாலைச் சந்திரன் மலரைத் தேடுது

மலையடிவாரத்திலே


எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோக ராகம், மின்மினி குதூகலக் குரல் என்ற முரணோடு பயணிக்கும். இந்த மாதிரி இரண்டு விதமான மனோ நிலையை எப்படி ஒரு பாட்டுக்குள் அடக்க முடியும், அதை எப்படி உறுத்தாமல் ரசிகன் மனதில் பதியம் வைக்க முடியும் என்பதெல்லாம் எல்லாம் தெரிந்த வித்தைக்காரர் இசைஞானிக்கே கண்கூடு.


“வானில் விடிவெள்ளி" (ஆனஸ்ட் ராஜ்), “தாயறியாத தாமரையே” (அரங்கேற்ற வேளை) இந்த மாதிரிக் கலவை உணர்வை ஒரே பாட்டில் கடத்தும் வித்தைக்கார ராஜா.


2000 நாட்களுக்குப் பின் இசைச்சக்கரவர்த்தி இளையராஜாவுடன் கோவைத்தம்பி

ஒரு ராகம் தராத வீணை

நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி

பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீண்டும் வேளை

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பாடல் வரிகளை பிறைசூடன் எழுத, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். 

எண்பதுகளில் கோவைத்தம்பி தன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட  பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்னர் இடையில் லஷ்மிகாந்த் பியாரிலால் கூட்டணியோடு "மங்கை ஒரு கங்கை" போன்ற படங்களை எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டார்.

கோவைத்தம்பியின் அடுத்த சுற்றில் அவரின் தயாரிப்பில் "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" படம் வெளியானது.


2000 நாட்களுக்குப் பின் இசைச்சக்கரவர்த்தி இளையராஜா இசையில் என்ற அறிவிப்போடு தான் இந்தப் படம் ஆரம்பிக்கும்.


நடிகர் பார்த்திபன் அப்போது வெளியார் இயக்கத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சமயம் இந்தப் படமும் இயக்குநர் ஶ்ரீதேவ் இயக்கத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் வரும் "இப்போதும் நிப்போம்" பாடல் மூலமாகத்தான் நடன இயக்குநராக பிரபுதேவா அறிமுகமானர். படத்தின் எழுத்தோட்டத்திலும் அது வரும்.

இங்கே தரும் பாடலை எழுதிய பிறைசூடன் மற்றும் ஏனைய பாடல்களை வாலி, மு.மேத்தா, நா.காமராசன், முத்துலிங்கம், கங்கை அமரன் என்று ஏறக்குறைய அன்றைய எல்லாப் பாடலாசிரியர்களை இணைத்த படம் இது. இப்படியே ராஜாவின் எல்லாப் படப் பாடல்களும் ஒரு கூட்டுக் கலவையாக வந்திருக்கலாம் என்றெண்ணுவதுண்டு.


"ஒரு ராகம் தராத வீணை

நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி

பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீண்டும் வேளை"


https://www.youtube.com/watch?v=PJ7TLouNLUM


காலைவேளைக்குப் பூச்சுட்டிப் பொட்டும் வைக்கும்  பாட்டு

https://twitter.com/kanapraba/status/229370508544733184

என்று பத்து வருடங்களுக்கு முன் ட்விட்டியிருக்கிறேன் 🙂


பாடலின் ஆரம்ப வரிகளில் "வீணை" என்ற பதத்தைச் சேர்த்திருப்பார் பிறைசூடன், பாடலுக்கு அணி செய்வதுமே இந்த வீணை என்ற வார்த்தையை முன்னுறுத்திய வரிகள் தான். மெட்டமைத்து வரிகளை வாங்கும் போது கண்டிப்பாக வீணை வாசிப்பு இருந்திருக்காது. 


ஆனால் பாடலின் இன்ன பிற வாத்தியங்களின் சிறப்பான வாசிப்போடு இந்த வீணை வாத்தியம் பாடலில் நளினமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ராகம் வந்தாடும் வீணை" என்று பாடும் சமயமும் "நல்ல காதல் கொண்டாடும் பெண்மை" என்னும் போதும் சுண்டி இசைக்கிறது வீணை. அப்படியே முதல் சரணத்திலும் காவிக் கொண்டு ஏனைய வாத்திய இசைக்கருவிளை இணைக்கின்றது.


“ஓஹோஹோ காலைக்குயில்களே” 

https://www.youtube.com/watch?v=4VQ7qzKEzxI


அப்படியே தண்ணி வாளியை இறைத்தாற் போலக் கூட்டுக்குரல்களோடு எஸ்.ஜானகியம்மாவின் பரவசக் குரல் வந்து மனதை நிறைக்கும்.


“எல்லாப் பாடல்களும் இந்தப் படத்தில் அருமையாக  இருந்தும் இந்தப் படம் ஏன் ஓடவில்லை என்று மனம் வெறுத்து நான் சினிமாவை விட்டு ஒதுங்க இதுவும் காரணமாயிற்று" என்று அண்மையில் சாய் வித் சித்ராவில் கோவைத்தம்பி பேசினார்.


ஈழத்தில் போர்ச் சூழலில் சைக்கிள் டைனமோ சுத்திப் பாட்டுக் கேட்ட காலத்தில் என்னை வந்து சேர்ந்த பாடல்கள் இவையும் கூட.


கானா பிரபா

10.08.2022

Saturday, August 6, 2022

தந்தன தந்தன தை மாசம்... அது தந்தது தந்தது உன்ன தான்...❤️



மெல்லிசை இளவல் வித்யாசாகர் கொடுத்த மென் வருடல் பாடல் தொகுப்பில் தவிர்க்கக் கூடாததொன்று இது. 


“இரு விழி இரு விழி...

இமை கொட்டி அழைக்குது...

உயிர் தட்டி திறக்குது...

ரெக்கை கட்டி பறக்குதம்மா...

ரெக்கை கட்டி பறக்குதம்மா...”


தோழிமார் தொடக்கி வைக்கக் கூடு சேரும் அந்தப் பாடகக் காதலர்கள்.

திருமண வீடுகளில் அதிகாரபூர்வமற்ற ஒலிபரப்பாளனாக இயங்கும் போதும், அந்த வீடியோப் பேழைகளிலும் போய் இடம் பிடித்து விடும் இது.


தோழிமார் தொகையறாவை முடிக்கும் போது அப்படியே கையேந்தும் தள வாத்தியத் தபேலாக்காரார் இலேசாக “தந்தனத் தந்தன” வை உருட்டிப் பார்ப்பார். இந்தத் தாள லயம் அப்படியே கே.ஜே.ஜேசுதாஸ் & சாதனா சர்க்கம் கூடிப் பாடும் போது தம்பாட்டுக்கு பின்னால் இசைத்துக் கொண்டே பயணிக்கும் போது இரண்டுக்காகவும் தனித்தனியாகக் கேட்க வேண்டும் போலவொரு பேராசை பிறக்கும்.


இந்தப் பாடலின் மெட்டுக்கட்டல் அபாரமாக இருக்கும். தந்தனத் தந்தனப் போட்டுக் கொண்டு அப்படியே இன்னொரு திசைக்குக் கிளை போடும்


“என் காது ரெண்டும் கூச...

வாய் சொன்னதென்ன நீ சொல்...

அந்த நேரம் என்ன பேச...

அறியாது போலே நீ சொல்...”


அழகியல் இன்பம். அந்த வரிகளுக்குப் பின்னால் ம்ம்ம்ம்ம் கொட்டும் ஒரு இசைக் கோவை அழகான ஐசிங்.


இரண்டாவது சரணத்துக்கு முன்னர் நானும் பாடிப் பார்க்கட்டா? என்பது போல

புல்லாங்குழலும் பாடிப் பார்ப்பார்.


தை ரத்தத் தை தை ரத்தத் தை


வித்யாசாகரம் ❤️


கே.ஜே.ஜேசுதாஸ் & சாதனா சர்க்கம் ஒரு விநோதமான கூட்டு.

அதனால் தான் ரட்சகன் படத்தின் அத்துணை துள்ளிசைப் பாடல்களும் கொட்டமடிக்க, ஓரமாக இருந்து நெஞ்சை அள்ளி விடும்

“நெஞ்சே நெஞ்சே 

 மறந்து விடு 

நினைவைக் கடந்து விடு”


https://youtu.be/ugbdnewtQJM


வித்யாசாகரின் பாடகர் தேர்வில் ரஹ்மானின் தாக்கம் அதிகமாக இருக்கும். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அவர் கூட்டுச் சேர்ந்த பாடகர்களையும், ஜோடிகளையும் ஆழமாக அவதானித்தால் புரியும்.

ஆனால் வித்யாசாகரின் தனித்துவம் மிளிரும்.


அப்படியே இந்த ஜேசுதாஸ் & சாதனா சர்க்கத்தைக் கவர்ந்து வந்து

“காதல் வந்ததும்

 கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை” 


https://youtu.be/Fs3u1mDSPT4


என்றவொரு தன்னன்னான கொடுத்திருப்பார். 


“நில்லாத காற்று 

சொல்லாது தோழி 

நீயாக உந்தன் 

காதல் சொல்வாயா”


😍


அறுபதைக் கடந்த கானக் கந்தர்வனின் குரலை விட மனமில்லாமல் அவருக்காகக் கொஞ்சம் இயல்பாக, கீழ்த்தளத்தில் போடப்பட்ட பிரவாகமாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கும்.


“தந்தனத் தந்தனத் தை மாசம்” பா.விஜய் கொடுத்த அழகிய பாடல்.


ஒரு வணிகச் சூழலுக்குச் சமரசம் செய்யும் துள்ளிசைப் பாடல்களைக் கொடுத்து அங்கும் தன் முத்திரை பதித்தாலும், அடி மனதின் ஆழத்தில் உறைந்திருக்கும் இம்மாதிரியான மெல்லிசை கீதங்களைக் கொடுக்கும் போது தன் ஆத்மார்த்தமான உழைப்பை அங்கு காட்டுவார் வித்யாசாகர்.


எங்கள் “சொக்கக் தங்கம்” விஜயகாந்தும், செளந்தர்யாவும் அழகு ஜோடியாகப் பயணித்த முன்னோடி இந்தத் தவசி.


https://youtu.be/c4ObfHk6ZFM


உன் கண்களோடு நானும் 

முகம் பார்த்து வாழ வேண்டும்

உன்னைப் பார்த்து பார்த்து 

வாழ நகக் கண்ணில்

பார்வை வேண்டும்


https://youtu.be/8bG1r005-jI


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே

கண்ணாடி ❤️


கானா பிரபா

06.08.2022

Thursday, August 4, 2022

வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா ❤️


“மீண்டும் மீண்டும் கூடி சேருது 

பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது....”

இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது.

அந்தக் காலத்து இளவட்டங்கள் நம் ஊர்ப்பக்கப் பெண்களைக் கண்டால் குறும்பாகப் பாடும் பாடல்களில் இதுவுமொன்றாக இருக்கும் 

ஏன் இப்போது கூட விடிகாலை இருளில் எங்காவது பயணப்படும் போதும் அந்தச் சூழலில் மனதில் எழும் பாடலில் இது முதல் இடத்தில் இருக்கும். அதற்குப் பாடலின் அந்த ஆரம்பக் காட்சிப்படுத்தலின் பாதிப்பு இருக்கலாம். 

அந்த ண்ண்ண்ண் என்ற தொடக்க இசையே விடிகாலையின் அழகிய தொடக்கம் போல உவமானப்படும்.

பாட்டு ஒரு அழகியல் என்றால் இதன் காட்சிப்படுத்தல் இன்னோர் அழகியல்.

முகப்பவுடர், உதட்டுச் சாயம் இல்லாத ஏன் ஒப்பனையே இல்லாத ராமராஜனின் அந்தக் களையான முகம், கூடச் சேர்ந்த ரேகாவின் ஜோடிப் பொருத்தம் என்று எண்பதுகளில் ராஜாவின் பாடல்களில் காட்சிப்படுத்திய உன்னதங்களில் இதுவுமொன்று.

https://www.youtube.com/watch?v=ASZVLcLHvWg

இந்த மாதிரிப் பாட்டெல்லாம் போகிற போக்கில் எடுத்து விடுவது போல அந்தக் காலத்தில் ராஜா கொடுத்தது. ஆனாலும் சாதாரணர்கள் நமக்கோ அந்தப் பிரமிப்பு இத்தனை ஆண்டுகாலம் கடந்தும் அந்த எஸ்பிபி & ஜானகி கூட்டணியின் கனிவும், குழைவும், இசையுமாக நம்மை ஒரு வழி பண்ணிவிடும் “தேனகம்” இது.

முன்பெல்லாம் டி.கே.போஸ் இயக்கிய “ராசாவே உன்னெ நம்பி" படத்தோடு, கங்கை அமரன் இயக்கிய இந்த “செண்பகமே செண்பகமே” படத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்வேன். 

பின்னர் ஞாபகத்தில் போட்டு வைத்தது இப்படித்தான் “செண்பகமே செண்பகமே” பாட்டு வந்த “எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்துக்குப் பின்னர் ராமராஜனோடு கங்கை அமரன் சேர்ந்தது என்ற கணக்கு.

“வெளுத்துக் கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி” ராஜாவே எழுதித் தன் தம்பியோடு அந்த முகப்புப் பாடலில் தோன்றிய அழகிய ஒற்றுமைக்காலம் அது.

பின்னாளில் எடுக்கப் போகும் கரகாட்டக்காரன் படத்துக்கு ஒத்திகை பார்த்தாரோ என்றெண்ண வைக்கும் சிலுக்கின் நடனத்தோடு வரும்

“தென்பழனி ஆண்டவனே தெய்வயானை நாயகனே” 

https://www.youtube.com/watch?v=f3Bg1_1vfpo

மலேசியா அண்ணனின் “பதினாறு வந்த மயிலே மயிலே” https://www.youtube.com/watch?v=Lj6eXwNOnvI பாடல் அருமையாக இருந்தும் அதிகம் பேசாப்பொருள் ஆகி விட்டது.

“வாசலிலே பூசணிப்பூ” எண்பதுகளின் காதல் ஜோடிப் பாடல்கள் உள்ளூர் ஒலிப்பதிவு கூடங்களில் தவறாமல் வாடிக்கையாளர் பட்டியலில் ஒன்றாக இருக்கும்.

“ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே....”

ஜானகி முடிக்க அப்படியே 

“ஹ்ஹா” 

“ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே

போதும் போதும் கண்ணால்

என்ன கட்டி இழுக்கற செண்பகமே!”

என்ற தன் அக்மார்க் குறும்பை உதிர்த்து விட்டுத் தான் முடிப்பார் எஸ்பிபி. விடமாட்டாரே பாடல் முடியும் தறுவாயில் கூடக் காத்திருந்து ஒரு ஜாலமா? என்ற வியப்பு வந்து போகும்.

கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது 

உங்க பாட்டு..

கேள்வி போல என்னை வாட்டுது

❤️

https://www.youtube.com/watch?v=n1Sw4pO9Wn4


Tuesday, August 2, 2022

❤️பின்னணி இசை விருதின் முதல்வர்❤️ 🥁 இசைஞானி இளையராஜா 🪘 🤺கேரள வர்மா பழசிராஜா 🏹


ஈராயிரங்களுக்குப் பின் இளையராஜா என்ன சாதித்தார்? 

ஒரு வரலாற்றுப் பின்னணி சார்ந்த படத்துக்கு அவரின் தேவை

எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? போன்ற கேள்விகளுக்கான

ஒரு ஆய்வு ரீதியான பகிர்வாக இது அமைகின்றது.

பின்னணி இசைக்கான தேசிய விருது என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட போது  முதல்வராக விருதைப் பெற்றுக் கொண்டவர் இசைஞானி இளையராஜா.

"தாரை தப்பட்டை" படத்தின் பின்னணி இசைக்காக மீண்டும் இந்த விருதைப் பெறும் இசைஞானி இளையராஜா, பின்னணி இசையில் எவ்வளவு தூரம் தனித்துத் துலங்குபவர் என்பதை மீள நிரூபிக்க இதோ "கேரள வர்மா பழசிராஜா" படத்தின் பின்னணி இசை முழுத் தொகுப்பு  இடுகையாக.

"1792 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி ஶ்ரீரங்கப்பட்டணத்தில் கவர்னர் ஜெனரல் கான்வாலிஸ் பிரபுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி திப்புசுல்தான் மலபார் பிரதேசத்தின் பலபகுதிகளை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு விட்டுக் கொடுத்தார். வர்த்தகம் மட்டுமல்லாது கம்பனி ஆட்சியையும் கைப்பற்றியது. கடுமையான வரிச்சட்டங்களை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தியது. அங்கிருந்த குறுநில மன்னர்கள் படைபலமோ துணிவோ இல்லாததால் வெள்ளையனுக்கு அடிபணிந்து கிடந்தனர். 

ஒரேயொரு ராஜகுமாரன் மட்டும் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராட மக்களைத் திரட்டினார்"

பழசிராஜா என்ற வரலாற்றுக் காவியம் இப்படித் தான் ஆரம்பிக்கின்றது. ஆரம்பம் முதல் பழசிராஜாவின் அந்தத் தீரவரலாற்றின் பக்கங்களின் பங்காளிகளாக எம்மையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றது. ஈற்றில் பழசிராஜா மடியும் போது எம் மனங்களில் கனமாக உட்கார்ந்து கொண்டு விடுகிறார்.

கோகுலம் நிறுவனத்தின் சார்பில் கோபாலன் தயாரிப்பில் கேரளத்தின் பெரும் எழுத்தாளர்  

M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

மலையாளத்தின் பெரும் நடிகர் மம்முட்டி பழசிராஜாவாகவும் அவரின் தளபதி இடைச்சேன குங்கனாக சரத்குமார், பழசிராஜா நாயகி கனிகா, நீலி என்ற வீரப்பெண் பத்மப்ரியா, திலகன் என்று தொடங்கி மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களையும் இணைத்த படமாக இது திகழ்கின்றது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எடுத்துக் கொண்ட கதையின் நோக்கத்துக்கு இம்மியும் பிசகாமல் பயணிப்பது அனுபவப்பட்ட ஜாம்பவான்களின் கூட்டினை நிரூபிக்கின்றது.

இந்தப் படத்தைத் தமிழில் மொழிமாற்றிய போது பாடல்கள் முழுவதையும் கவிஞர் வாலி கவனித்தார். படத்தின் இன்னொரு பலமாக நேர்த்தியான, எளிமையான வசன அமைப்புக்களைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். படத்தைப் பார்க்கும் போது பாத்திரங்களின் வாயிலாக அவற்றைக் கேட்கும் போது எவ்வளவுதூரம் இந்த வசனப்பகுதியை ஜெயமோகன் சிறப்பாகக் கொடுத்திருக்கின்றார் என்பதை உணர முடியும்.

பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குநர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.

ஆங்கிலேயரின் தேடலுக்கு மறைவாக பழசிராஜா தன் மக்களுடன் காடுகளில் பயணிக்கும் போது வரு பாடல் "ஆதியுஷாசந்யா போததிதுவே" பாடலை கேரளத்தின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஓ.என்.வி.குருப் எழுதும் போது கவிஞர் அந்த காட்சியின் காத்திரமான உணர்வைக் கொண்டுவரவில்லை என்று ராஜா சொல்லப் போக அதனால் கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்குநர் ஹரிஹரன் தலையிட்டு, "ராஜாவுக்கு அது திருப்தி கொடுக்காதது அவரின் சொந்தக் கருத்து, ஆனால் இயக்குநராக என்னை குருப் இன் கவி வரிகள் திருப்திப்படுத்தியது" என்று சொல்லி பிரச்சனையை ஓரளவு தணித்தார். ஆனாலும் ஏஷியா நெட் என்ற கேரள தொலைக்காட்சியின் 2009 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா பெயரை அந்த விழா முடியும் வரை மருந்துக்கும் கூடச் சொல்லாமல் அமுக்கிப் பழிவாங்கிவிட்டார்கள். என்றாலும் இந்தப் படத்தில் வந்த "குன்னத்தே" பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை சித்ரா தட்டிக் கொண்டார். கானா பிரபா

இந்தியத் திரை வரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசி(இளைய)ராஜாவுக்குக் கிட்டிய விருது கொடுத்த தெம்பில் கடந்த மூன்று நாட்களாக பழசிராஜா இசைப்பிரிப்புப் பணியில் இறங்கினேன். படத்தை ஓடவிட்டுப் பதமாக இசையை மட்டும் பிரிக்கும் காட்சிகளை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப் போல அவதானமாக இருந்தாலும் அவ்வளவு சுலபமான வேலையாக அது படவில்லை. காரணம், இசைஞானியின் மற்றைய படங்களில் பின்னணி இசைவரும் காட்சிக்கு மட்டும் தனியானதொரு வசன ஆதிக்கம் குறைவான அல்லது இல்லாத காட்சியமைப்பு இருக்குமாற்போல இந்தப் படத்தில் இல்லை. படம் தொடங்கி முடியும் வரை இண்டு இடுக்கெல்லாம் இசையை நுழைத்து இலாவகமாக சங்கமிக்க வைத்ததால் நாலைந்து தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் காட்சிகளை மீள ஒடவிட்டு இசைப்பிரிப்புச் செய்ய வேண்டியதாயிற்று. கானா பிரபா

அப்படியாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒலிக்குளிகைகள் மட்டும் 38 , அவற்றை இங்கே தருகின்றேன். இந்த இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணர்வீர்கள். காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது. 

கமல்ஹாசனின் அறிமுகத்தோடு ஆரம்பமாகும் முகப்பு இசை

http://www.radio.kanapraba.com/praja/p1.mp3

ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களின் விசுவாசிகளைச் சந்தித்தல்

http://www.radio.kanapraba.com/praja/p3.mp3

ஆங்கிலப்படையின் அணிவகுப்பு

http://www.radio.kanapraba.com/praja/p4.mp3

பழசிராஜாவின் சுதேசிப்படைகளின் வாட்களும் ஆங்கிலப்படைகளின் துப்பாக்கிகளும் மோதும் காட்சி

http://www.radio.kanapraba.com/praja/p5.mp3

கானா பிரபா

பழசிராஜாவின் அறிமுகம், தனது மாமனார் குரும்பிரநாடு ராஜவர்மாவைச் சந்தித்தல்

http://www.radio.kanapraba.com/praja/p6.mp3

http://www.radio.kanapraba.com/praja/p7.mp3

அமைதி தவழும் அந்தக் கிராமத்தில் பழசிராஜாவைத் தேடி நுழையும் ஆங்கிலேயப்படை

http://www.radio.kanapraba.com/praja/p8.mp3

இடைச்சேன குங்கன் (சரத்குமார்) அறிமுகமும், ஆங்கிலச் சிப்பாய்களுடன் அவரின் மோதலும்

http://www.radio.kanapraba.com/praja/p9.mp3

பழசிராஜா மரபுமுறை போர்முறையின் அவசியத்தை உணர்த்தித் தன் அணியில் இருக்கும் வீரர்களைப் பயிற்சி எடுக்கச் செய்யும் காட்சி

http://www.radio.kanapraba.com/praja/p10.mp3

இடைச்சேன குங்கனுக்கும் பழசிராஜாவுக்கும் நடக்கும் நட்புரீதியான வாட்போர்

http://www.radio.kanapraba.com/praja/p11.mp3

தன் மக்களோடு தான் தொடர்ந்து இருப்பேன் என்று பழசிராஜா தன் மக்களுக்கு உறுதிகூறும் காட்சி

http://www.radio.kanapraba.com/praja/p12.mp3

பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலச் சிப்பாய்களுக்கும் ஒரு திடீர் மோதல்

http://www.radio.kanapraba.com/praja/p13.mp3

ஆங்கிலேயர்களுடன் நட்புறவாடும் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து ஆங்கிலச் சிப்பாய்களுடன் பழசிராஜாவைப் பிடிக்க வரும் காட்சியும் அதை பழசிராஜா தந்திரமாக எதிர்கொள்ளலும்

http://www.radio.kanapraba.com/praja/p14.mp3

காட்டுக்குள் பழசி படைகளை வேட்டையாட வரும் ஆங்கிலேயப்படைகளை சுதேசிப்படைகள் தந்திரமாக மடக்கிப் போர் புரிதல்

http://www.radio.kanapraba.com/praja/p15.mp3

பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போட முனையும் வேளை

http://www.radio.kanapraba.com/praja/p16.mp3

பழசிராஜாவும் ஆங்கிலேயப் பிரதிநிதிகளும் நேருக்கு நேர்

பழசிராஜாவைக் கொல்லத் தருணம் பார்க்கும் ஆங்கிலேய அதிகாரி மேஜர் ஜேம்ஸ் கோர்டனுக்கு அவரின் மேலதிகாரி , கோட்டையைச் சுற்றி வளைத்து நிற்கும் பழசி படைகளைக் காட்டும் காட்சி, அட்டகாசமான பின்னணி இசையோடு

http://www.radio.kanapraba.com/praja/p18.mp3

பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போடும் முன் தன் கோரிக்கையைச் சொல்லும் வேளை

http://www.radio.kanapraba.com/praja/p19.mp3

பழசிராஜா ஆங்கிலேயருடன் போட்ட ஒப்பந்தத்தால் அதிருப்தியடையும் இடைச்சேன குங்கன், கைதேறி அம்பு (மனைவியின் சகோதரன்) ஆகியோருக்குத் தன் நிலைப்பாட்டை விளக்கும் போது

http://www.radio.kanapraba.com/praja/p20.mp3

இடைச்சேன குங்கன் (சரத்குமார்) குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்) நேருக்கு நேர்

http://www.radio.kanapraba.com/praja/p21.mp3

பழசிராஜா தன் வாளை எடுத்துப் பரிசோதிக்கும் போது

http://www.radio.kanapraba.com/praja/p22.mp3

"உண்மையைச் சொல்லு! யார் நீ, பழசியோட ஆளு தானே?"

"பழசியோட ஆள் இல்லை, பழசியே தான் பழசி கேரள வர்மா"

http://www.radio.kanapraba.com/praja/p23.mp3

பழசிராஜாவின் விசுவாசி கண்ணவது நம்பியார் (தேவன்) அவர் மகன் ஆகியோரைத் தந்திரமாகப் பிடித்த ஆங்கிலேயர் பொது இடத்தில் தூக்கிலிடும் போது

http://www.radio.kanapraba.com/praja/p24.mp3

ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் பேபரின் செயற்பாடுகளால் அதிருப்தியடையும் அவர் வருங்காலத் துணை டோரா 

http://www.radio.kanapraba.com/praja/p25.mp3

பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் பெரும் மோதல்

http://www.radio.kanapraba.com/praja/p26.mp3

தலைக்கால் சந்துவும் (மனோஜ் கே ஜெயன்) அவரின் மனைவியாகப் போகும் நீலியும் (பத்மப்பிரியா) ஆங்கிலேயப் படைகளை எதிர்கொள்ளும் போது

http://www.radio.kanapraba.com/praja/p27.mp3

பழசிராஜாவின் தலைக்கு ஆங்கிலேயர் விலை வைத்தலும் தலைக்கால் சந்து கொட்டும் மழையில் மரணத்தை முத்தமிடுதலும்

http://www.radio.kanapraba.com/praja/p28.mp3

அதுவரை அழாமல் இருந்த நீலி பழசிராஜாவைக் கண்டதும் தன் அழுகையைக் கொட்டித் தீர்க்கும் பெருஞ்சோகம்

http://www.radio.kanapraba.com/praja/p29.mp3

தன் வலதுகரமாக இருந்த தலைக்கால் சந்துவின் (மனோஜ் கே ஜெயின்) கோரமரணத்தைத் தொடர்ந்து இடைச்சேன குங்கன் (சரத்குமார்) மேஜர் ஜேம்ஸ் கோர்டனை வேட்டையாடல்

http://www.radio.kanapraba.com/praja/p30.mp3

ஆங்கிலேயப் படை பழசிராஜாவின் இருப்பிடத்தை அறிந்து வரப்போகும் வேளை ஊரே இடப்பெயரும் நேரம் நிகழும் காட்சிகள், கைதேறி அம்பு காயம்படல்

http://www.radio.kanapraba.com/praja/p31.mp3

பழசிராஜா தன் வாளுக்கு வேலைகொடுக்கும் நேரம் வந்து விட்டதை உணர்தல்

http://www.radio.kanapraba.com/praja/p32.mp3

கைதேறி அம்பு காலனின் கைகளில் தன் உயிரைக் கொடுக்கும் நேரம் பழசிராஜா அவனுக்கு ஆறுதல் கொடுத்தலும் ஆனால் அவன் உயிர் பிரிந்ததை உணரும் வேளை அவன் கைகளை ஒதுக்கிவிட்டு மனம் உடைந்து போதலும்

http://www.radio.kanapraba.com/praja/p33.mp3

இடைச்சேன குங்கன் எட்டப்பன் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்)வை வேட்டையாடிக் கொல்லும் வேளை

http://www.radio.kanapraba.com/praja/p34.mp3

ஆங்கிலேயப் படைகளை நேரெதிரே சந்திக்கும் போது சரணடையாமல் இடைச்சேன குங்கன் பழசிராஜாவுக்குத் தன் குருதட்சணயாக உயிரைக் கொடுக்கும் வேளை 

http://www.radio.kanapraba.com/praja/p35.mp3

பழசிராஜா தன் மனைவி கைதேறி மக்கம் (கனிகா) தன்னை விட்டு விலகி கைதேறிக்குப் போகுமாறு சொல்லும் நேரம்

http://www.radio.kanapraba.com/praja/p36.mp3

"தம்புரானோட உயிர் எங்களுக்குப் பெருசு" - எம்மன் நாயர் (லாலு அலெக்ஸ்)

பழசிராஜா பெருஞ்சிரிப்புடன்

 "துருப்பிடிச்ச வாளைப்பார்த்து வயசான காலத்துல இல்லாத வீரகதைகளை உருவாக்கி அதை எல்லாரையும் நம்பவச்சு அதைப்பேசி நாம் வாழணும்,

எம்மன்! பிறந்ததில் இருந்து ஒரு நிழல் கூடவே வந்துகிட்டிருக்கு, என்னைக்காவது ஒருநாள் அது திரும்பி நேருக்கு நேரே வந்து நிற்கும் அதுதான் மரணம், பயமில்லை"

"அழாதீங்க, அழணும்னு தோணிச்சின்னா அழுதுக்குங்க, என்னை நினைச்சில்லை

அதிர்ஷ்டம் கெட்ட இந்த நாட்டை நினைச்சு, நாட்டோட மக்களை நினைச்சு...

வீரசொர்க்கங்கங்களின் வர்ணனைகளைக் கேட்டு ஆசைப்படுற ஒரேயொரு கடமை மட்டும் தான் பாக்கியிருக்கு

இந்த நாட்டை ஆளுற உரிமை யாருக்குன்னு இங்க, என்னோட ரத்தத்தால குறிக்கணும்

அது போதும்...."

http://www.radio.kanapraba.com/praja/p37.mp3

பழசிராஜா ஆங்கிலேயப்படைகளோடு நேரடிச் சமரில், வாத்தியங்களின் உச்சபட்ச ஆர்ப்பரிப்போடு

http://www.radio.kanapraba.com/praja/p38.mp3

பழசிராஜாவின் வீரமரணமும், ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் கொடுக்கும் இராணுவ மரியாதையும்

"He was our enemy, 

but he was a great man, 

a great warrior,

we honour him"

http://www.radio.kanapraba.com/praja/p39.mp3

கானா பிரபா

02.08.2022