Pages

Tuesday, December 27, 2016

தமிழ்த் திரையிசை 2016 அலசல் நிறைவுப் பாகம்


கடந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இசையமைப்பாளர் அனிருத், "நானும் ரவுடி தான்" படத்தில் கொடுத்த சிறப்பான பாடல்களால் கவரப்பட்டார். ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரை "ரெமோ" என்ற வெற்றிப்படத்தில் அவரின் பங்களிப்பு இருந்ததோடு "செஞ்சுட்டாளே" https://www.youtube.com/shared?ci=F5hc4BXoHLo பாடலை ஹிட் பட்டியலில் சேர்த்திருந்தாலும் அந்தப் படப் பாடல்கள் ஏதோ தனித்த இசை ஆல்பங்களுக்குண்டான தகுதியோடு இருப்பதாகவே பட்டது. எனவே அடுத்த ஆண்டு அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை வைத்துத் தான் மீளத் தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம்.

அனிருத் போலவே Hip Hop தமிழாவுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கடந்த ஆண்டு "தனி ஒருவன்" பாடல்களில் சாதித்துக் காட்ட முடிந்தது. இந்த 2016 இல் கிடைத்த வாய்ப்புகளில் அதைத் தக்க வைக்க முடியவில்லை.

இசையமைப்பாளர் தர்புகா சிவாவைக் கவனிக்க வைத்தது கிடாரி பாடல்கள். குறிப்பாக "வண்டியிலே நெல்லு வரும்" https://www.youtube.com/shared?ci=qBVh2in1BJw இந்த ஆண்டின் ஹிட் பட்டியலில் அடங்கும்.

வன வாசத்துக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்த ஆண்டு "தர்மதுரை" "சென்னை 28 - பாகம் 2" படங்களின் வெற்றியோடு அவரும் கவனிக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை "யாக்கை" படத்தின் நீ" https://www.youtube.com/shared?ci=jtPF9ElkLP0 என்ற தனிப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்ட போது கிட்டிய கவனயீர்ப்பு நிரூபித்தது. அத்தோடு "நெஞ்சம் மறப்பதில்லை" படத்துக்காக மீண்டும் இயக்குநர் செல்வராகவனோடு இணைந்த போதும் அதேயளவு மகிழ்ச்சி உணர்வைப் பகிர்ந்து கொண்டனர் இணைய ரசிகர்கள். 
"இடம் பொருள் ஏவல்" படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஓராண்டைக் கடந்தும் படம் வெளிவராத நிலையில் "தர்மதரை" படத்தை சீனு ராமசாமி இயக்கவும், அந்தப் பாடல்கள் அவசரகதியில் வெளியிட்டது போன்றதொரு உணர்வு. ஆனால் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் "தர்ம துரை" கொடுத்த உச்ச வெற்றியோடு யுவனின் பாடல்களும் கவனிக்கப்பட்டன. "ஆண்டிப்பட்டி"  https://www.youtube.com/shared?ci=mFyVT-H2ZHs பாடல் அடிக்கடி சின்னத்திரையில் வலம் வந்தது. இதிலும் நான்கு பாடல்களை வைரமுத்து எழுதினார். 
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு பாடல் அதிரி புதிரி வெற்றியாகும் ஆனால் அந்தப் பாடலில் அப்படி என்ன இருக்கிறதென்று தேடிக் கொண்டே இருப்போம். அப்படியொன்று தான் "மக்கா கலங்குதப்பா" https://www.youtube.com/shared?ci=sJKFe8INiFo பாடல் (பாடல் வரிகள் மதிச்சியம் பாலா). 2016 ஆம் ஆண்டில் தேநீர்க் கடைகளில் இருந்து கடைக்கோடி ரசிகன் வரை இந்தப் பாடல் சாம்ராஜ்ஜியம் நடத்துதுகிறது.
"நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்கள் வருவதற்கு முன் இருந்த எதிர்பார்ப்பு பாடல்கள் வந்த பின் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். கலவையான விமர்சனங்களோடு பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். படம் வந்த பின் தான் இந்தக் குழப்பம் தீரும்.

நடிக்க வந்து தன் பிழைப்பைக் கெடுத்த வகையில் மூன்றாவது வெற்றிகரமான ஆண்டில் நுளைகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். கடந்த ஆண்டு பாடல்கள் வெளியாகி 2016 இல் திரைக்கு வந்த "தெறி" பாடல்கள் அனைத்தும் கேட்கும் தரம் என்ற ஒன்றே போதும் என்று நினைத்து விட்டார் போலும். "மீண்டும் ஒரு காதல் கதை" படம் போல அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளிலாவது இன்னும் உழைத்திருந்தால் இந்த ஆண்டு திகழ்ந்திந்திருப்பார்.

நடிக்க வந்து வெற்றியைக் காட்டிய வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு "பிச்சைக்காரன்" படம் கொடுத்த பணக்கார வெற்றி அவருக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அந்தப் படத்திற்காக அவர் இசையில்' "நெஞ்சோரத்தில்" https://www.youtube.com/shared?ci=veILFv0bxLA பாடல் கலக்கல் ரகம். "நூறு சாமிகள்" https://www.youtube.com/shared?ci=mEemB2K1fZA பாடலும் ரசிக்கும் தரம்.
ஆனால் தொடர்ந்து வந்த சைத்தான் படத்தின் பாடல்களில் முன்னதை விடத் தாண்டிக் கொடுக்கக் கூடிய இசை கிட்டவில்லை.

இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம் "தாரை தப்பட்டை" இந்த 2016 ஆண்டு வெளியாகியிருந்தாலும் பாடல்கள் ஏற்கனவே முந்திய ஆண்டில் வெளியாகிக் கவனத்தை ஈர்த்தன. ஆனால் படம் வெளியாகி அதன் மோசமான படமாக்கத்தால் புதைந்து போயின.
அம்மா கணக்கு, ஒரு மெல்லிய கோடு, அப்பா, ஓய், எங்க அம்மா ராணி படங்களின் பாடல்கள் பரவலாகப் போ ய்ச் சேராது பத்தோடு பதினொன்றா கின. 
"குற்றமே தண்டனை" படத்தின் பின்னணி இசை இளையராஜாவின் பேர் சொல்லும் பிள்ளையானது இந்த ஆண்டு.

"நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்" https://www.youtube.com/shared?ci=QjtJZ-rZsWw 24 படத்துக்காக, மதன் கார்க்கியின் வரிகளில்  அமைந்த இந்தப் பாடல் தான் 2016 இல் வெளிவந்த பாடல்களில் மெட்டுக்குக் கச்சிதமாக வந்தமர்ந்த வரிகளைச் சுமந்த பாடலாகச் சொல்வேன். 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 24 மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் இந்த 2016 இல் கிட்டி, இரண்டில் அச்சம் என்பது மடமையடா பாடல்கள் ஒப்பீட்டளவில் பரவலாகப் போ ய்ச் சேர்ந்தவை.
குறிப்பாக "தள்ளிப் போகாதே" இளசுகளின் இன்னொரு தேசிய கீதம். இது தாமரையின் வரிகளுக்காகவும் கொண்டாடப்பட்டது.
"ராசாளி", "அவளும் நானும்" பாடல்களும் வெற்றி முகம் கொண்டவை. 
ஆனால் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களுக்கு நிகராக இந்தப் பாடல்களை ஒப்பிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அச்சம் என்பது மடமையடா படம் வெளியான பின்னர் படத்தையும் அவ்வாறே ஒப்பிட்டு விண்ணைத் தாண்டி வருவாயா தான் விண்ணை முட்டியது.

ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த இரு முகன் பாடல்கள் சிறப்பானவை. அதிலும் "கண்ணை விட்டு" https://www.youtube.com/shared?ci=kYZlWoMUOgc பாடல் 2016 இன் சிறந்த பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. "சிங்கம் 3" பாடல்களைக் கேட்ட போது இந்த சிங்கங்களுக்கு ஹாரிஸோ இல்லை தேவி ஶ்ரீ பிரசாத்தோ யார் இசையமைத்தாலும் ஒரே அமைப்போ என்று எண்ண வைத்தது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு 2016 இல் கிட்டிய வாய்ப்புகளால் திக்கு முக்காடிப் போயிருப்பார். அது பாடல்களிலும் தெரிகிறது.
மனிதன் படத்திற்குச் சத்தமே இல்லாமல் கொடுத்த பாடல்கள் தான் இந்த 2016 இல் அவர் கொடுத்ததில் முதல் தரம் என்பேன். அதிலும் "அவள் குழல் உதித்திடும்" https://www.youtube.com/shared?ci=1AJFcPVVaCg பாடல் வெகு பிரமாதம். "முன் செல்லடா" https://www.youtube.com/shared?ci=PSvFJ48lMpo அட்டகாசமான தன்னம்பிக்கைப் பாட்டு.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததோ என்றெண்ணணத் தோன்றும். கபாலி பாடல்கள் கடைக்கோடி வரை சென்றாலும் ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்துக்கு இது போதாது என்றே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இன்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
"மாய நதி இன்று" பாடல் பரவலாகப் போய்ச் சேர்ந்த பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
இறைவி பாடல்கள் அக்மார்க் சந்தோஷ் நாராயணன் தனமாக அமைந்தன. 
இறுதிச் சுற்று படத்தின் "ஏ சண்டக்காரா" கவனிக்கப்பட்டது.

"தகிட தகிட" என்ற ஒற்றைப் பாடல் "காஷ்மோரா" வின் பாடல்களில் தனித்து விளங்கினாலும் இந்தப் படப் பாடல்கள் கால நேரத்தோடு படத்தின் வெளியாக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன் வந்திருந்தால் இன்னும் பரவலாகப் போ ய்ச் சேர்ந்திந்திருக்கும் முத்திரைகள் உண்டு.
' கொடி" பாடல்களும் சந்தோஷ் நாராயணனுக்கு ஓரளவே பெயர் கொடுத்தவை.
இந்த 2016 ஆம் ஆண்டில் தன்னுடைய தனித்துவத்தை விடாது கொடுத்த பாடல்கள், விட்டுக் கொடுத்த பாடல்கள் என்ற வகையில் இரண்டாவது நிலையில் தற்போது வந்த "பைரவா" பாடல்கள் அமைந்திதிருக்கின்றன.

தமிழ் சினிமா வில் காலத்துக் காலம் ஒரு இசையமைப்பாளர் காட்டில் மழை பொழிந்து கொண்டிருக்கும். மள மளவென்று படங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.  அதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் தேவா இப்போது டி.இமான்.
"முன்னாள் காதலி' https://www.youtube.com/shared?ci=QkfwyZ3kW8k என்று வெறி பிடித்துப் பாடும் பாடல் வகையறாவில் இருந்து , "மிருதா மிருதா' https://www.youtube.com/shared?ci=jG6Frsf5Eu0 என்று மென் சோகப் பாடல்கள் வரை இந்த 2016 ஆண்டு டி.இமானுக்கான இன்னொரு கல்யாண மேள ஆண்டு.
"கண்ணைக் காட்டு போதும்" https://www.youtube.com/shared?ci=aX93o5hCthU (றெக்க) பாடலைக் குமுதம் அரசு கேள்வி பதிலில் வாசகர் கேள்வியாக அமை ந்ததில் இருந்தும், ஹன்சிகாவின் பேட்டியில் தனக்கு "செந்தூரா"  https://www.youtube.com/shared?ci=zy8CTiowjC4 (போகன்) பாடல் பிடிக்கும் என்று சொல்லியதில் இருந்தும் டி.இமான் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார் என்று புரியும்.
தனக்கு மறுவாழ்வு அளித்த பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவான தொடரிக்காக
"போன உசிரு வந்திருச்சு" https://www.youtube.com/shared?ci=F-7IH8sZUFE பாடல் இந்த ஆண்டின் ஹிட் ரகத்தில் சேர்ந்ததது.
பிரபு சாலமன் இயக்கினாலோ தயாரித்தாலோ ஒரே மாதிரித் தான் கொடுக்க வேண்டும் என்று டி.இமான் கங்கணம் கட்டியிருப்பார் போல. பிரபு சாலமன் தயாரிப்பில் "ரூபாய்" திரைப்படத்துக்காகக் கொடுத்த "உன் கூடப் பேசத் தானே" https://www.youtube.com/shared?ci=ynu5rJmo1lw பாடலைக் கேட்ட போது அவ்வாறே தோன்றியது.
"அடடா இது என்ன" (தொடரி), "கண்ணம்மா கண்ணம்மா" (றெக்க), "அடியே உன்னைப் பார்த்துட நான்" (வெற்றிவேல்) போன்ற பாடல்களும் 2016 இல் டி.இமான் இசையில் கவனத்தை ஈர்த்த பாடல்கள்.

2016 ஆம் ஆண்டின் திரையிசைப் பாடல்களைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரையில் தொட்டுச் செல்லாத பாடல்கள், இசையமைப்பாளர்கள் இன்னும் உண்டு. இங்கே கோடிட்டுக் காட்டியவை முக்கியமான சிலதுகள் தான். 
இது இளையவர்களின் காலம், வளர்ந்து வரும் இளம் இசைமைப்பபாளர்களும், பாடலாசிரியர்களுமாக இளையவர்களே அதிகளவில் வெற்றியைப் பங்கு போட்ட காலமாகவே 2016 இன் தமிழ்த் திரையிசையைப் பார்க்க முடிகிறது.
2017 ஆம் ஆண்டின் திரையிசை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்போம். 

(நிறைந்தது)

கடந்த பதிவுகள்

பாகம் 1
http://www.radiospathy.com/2016/12/2016.html

பாகம் 2
http://www.radiospathy.com/2016/12/2016_21.html

பாகம் 3
http://www.radiospathy.com/2016/12/2016_22.html

Thursday, December 22, 2016

தமிழ்த் திரையிசை 2016 அலசல் - பாகம் 3


நிவாஸ் கே பிரசன்னா 🎺
ஷான் ரால்டன் 🎻
லியோன் ஜேம்ஸ் 🎸
அஜீஸ் 🎷

"கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா" https://www.youtube.com/shared?ci=U2ZZRzXUiwE  இந்தப் பாடலைப் பற்றி எழுதும் போது உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு வானொலி இந்தப் பாட்டை ஒலிபரப்பிக் கொண்டிருக்கலாம். அவ்வளவுக்கு இந்த ஆண்டு ஏகோபித்த ஜனரஞ்சக அந்தஸ்து பெற்ற பாட்டு. 
சிங்கப்பூர் ஒலி வானொலியில் 35 வாரங்களைக் கடந்து முதலிடத்தைத் தக்க வைத்த பாட்டு. ஏலவே மற்றைய வானொலிகளின் இசை அணித் தேர்வுகளிலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் பாட்டு. இப்படியான கெளரவமெல்லாம் எடுத்த எடுப்பில் ஒரு புதுமுக இசையமைப்பாளருக்குக் கிடைப்பது வரம். அந்த வரம் இந்த ஆண்டு "சேதுபதி" படத்தின் வாயிலாக நிவாஸ் கே பிரசன்னாவுக்குக் கிட்டியிருக்கிறது.
"உன்னால காக்கிச் சட்டை கலரு ஆச்சு" https://www.youtube.com/shared?ci=-qkeK-gryiU பாடலும் கூட சேதுபதி படத்தின் வெற்றியில் பங்கு போட்ட பாடல்களில் ஒன்றாக அடுத்து அமைந்தது. 
அனுருத் குரலில் "ஹே மாமா" https://www.youtube.com/shared?ci=tm6EA6xDOs8 ஒரு அட்டகாசத் துள்ளிசை. போலீஸ் படங்களுக்கு இம்மாதிரியான நிறம் கொண்ட துள்ளிசை கொடுத்தால் அதன் கெத்தே தனி தான். சூப்பர் போலீஸ் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் "சுந்தரா நீ யாரடா" என்ற பாடலைக் கொடுத்து இன்பக் கலவரம் ஏற்படுத்தியது நினைவுக்கு வருமளவுக்கு "ஹேய் மாமா" பாடல் சிறப்பு மிகுந்ததாக இருக்குறது.
சேதுபதி படத்தைத் தயாரித்த மெல்பர்ன் வாழ் நண்பர் ஷண் சுதர்சனுக்குப் படத்தின் வெற்றியை விட இந்தப் பாடல்களின் வெற்றி இன்னும் இனிப்பாக அமைந்திருக்கும்.
 "தெகிடி" படம் மூலமாக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னாவுக்கு ஒரு ஆண்டு இடைவெளி கொடுத்து 
2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார் சேதுபதி.

"விண்மீன் விதையில்" https://www.youtube.com/shared?ci=acJj0nBKhwY (தெகிடி) பாடலின் நீட்சியோ எனப்பட்டது நிவாஸ் கே பிரசன்னா இந்த ஆண்டு கொடுத்த இன்னொரு படமான "ஜீரோ" படப் பாடல்கள். சேதுபதி படப்பாடல்கள் அளவுக்குப் பிரபலமாக இல்லாவிட்டாலும் "உயிரே உன் உயிரென நானிருப்பேன்" https://www.youtube.com/shared?ci=tKeHrDuf8nQ பாடலைக் கேட்டால் சேதுபதிக்கு சற்றும் சளைத்ததல்ல என்று சொல்ல வைக்கும். இந்தப் படத்தின் பாடல்களில் You are in my heart https://www.youtube.com/shared?ci=64vfg25cJ6g ஒரு ஆங்கிலப்பாட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுக் கொண்டே போங்கள். பாடல் முடிவில் ஒரு வயலின் ஆலாபனை இருக்கும். அப்படியே நெஞ்சைக் கிள்ளி விடும்.
ஜீரோ படத்தின் ஒட்டுமொத்தப் பாடல்களைக் கேட்ட போது இந்த இசைத் தொகுப்பு முழுவதுமே மென் மெலடியாக இருக்கவேண்டும் என்று முடிவு கட்டி இசையமைத்தது போல் இருக்கும்.
கேட்டுப் பாருங்கள் https://www.youtube.com/shared?ci=QW0nYoo04i0

இளம் இசையமைப்பாளர்கள் தமக்குள் ஒற்றுமையாக ஒருவர் இசையில் இன்னொருவர் என்று பாடகராகவும் பங்களிக்கிறார்கள். "அடியே அழகே" பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடிய ஷான் ரால்டன் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர். அவருக்கு இந்த ஆண்டு வரவாக "ஜோக்கர்" படம் இசையமைக்க வாய்த்தது. இந்தப் படத்தின் கதையோட்டத்தை வைத்துக் காட்சிச் சூழலுக்கு இவர் கொடுத்த இசையில் "செல்லம்மா" மனதில் நிற்கிறது.
நடிகர் தனுஷ் ஜோக்கர் படத்தைப் பார்த்த பின் ட்விட்டரில் வெகுவாகப் பாராட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியோ என்னமோ ஜோக்கர் பட இசையமைப்பாளர் ஷான் ரால்டனைத் தனது இயக்கத்தில் வரும்  "பவர் பாண்டி" படத்துக்கு இசையமைக்க வைத்திருக்கிறார். இதன் மூலம் கிட்டிய பெரிய வாய்ப்பைத் தக்க வைப்பாரா என்று அடுத்த ஆண்டு வரை காத்திருந்து அறிவோம்.

இன்றைய திரையிசைச் சூழலில் ஏகத்துக்கும் இசையமைப்பாளர்கள் இறைந்து கிடப்பதால் வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்ற நிலை நல்ல திறமைசாலிக்கு ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. அதாவது என்னதான் தன் திறமையைக் கொட்டி இசையமைத்தாலும் கிடைக்கும் படைப்பு சேதாரமாக இருந்தால் அந்த நல்லிசையும் சேர்ந்து ஒடுங்கி விடும் அபாயம் உண்டு. அந்த மாதிரியான ஒரு இடர் தான் லியோன் ஜேம்ஸ் இற்கு.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டுக் குழுவில் இருந்த நோயல் ஜேம்ஸ் இன் மகன் லியோன் ஜேம்ஸ் "காஞ்சனா" படத்தில் "வாய்யா என் வீரா" என்ற ஒற்றைப் பாடலில் அறிமுகமாகிய இவருக்கு
 "கோ 2" படம் முழுமையான பாடல்களைக் கொடுத்த வகையில் இசையமைப்பாளராக அறிமுகமாக்கியது. கடந்த ஆண்டு இறுதியில் பாடல்கள் வெளியாகிய நிலையில் இந்த ஆண்டு தான் "கோ 2" படம் வெளியானது. இதில் "கண்ணம்மா" https://www.youtube.com/shared?ci=q42z9sLfkK8 பாடல் பரவலாக இசை ரசிகர்களைச் சென்றடைந்தது. 
அதைத் தொடர்ந்து "கவலை வேண்டாம்" பட வாய்ப்பு . "உன் காதல் இருந்தாப் போதும்" 
https://www.youtube.com/shared?ci=Rc8SqP-gN4I  என்ற பாடல் வானொலிகளால் புகழடைந்தது. லியோன் ஜேம்ஸ் தான் இசையமைக்கும் படப் பாடலில் ஒன்றை எடுத்து இரண்டு வடிவில் கொடுப்பது வழக்கம். இந்தப் பாடலையும் வந்தனா ஶ்ரீனிவாசனை வைத்து இன்னொரு அழகிய மெலடியைக் https://www.youtube.com/shared?ci=YCBV_U00Kos  கொடுத்திருக்கிறார். இருந்தும் என்ன இந்த இரண்டு படங்களும் லியோன் ஜேம்ஸ் கொடுத்த பாடல்கள் அளவுக்கு உழைக்கவில்லை.

"நீ உறவாக ஆசை" https://www.youtube.com/shared?ci=fCcfp8D7vKA இந்தப் பாட்டை முதலில் கேட்ட போது ஐஸ்கிரீம் திரளையை வாயில் போட்டது போல ஒரு குளிர்மையை மனதில் உணர்ந்தேன். யாரோ ஒரு பெரிய இசையமைப்பாளராக இருக்கும் என்று நினைத்துப் பாடலின் பின்னணியை நோண்டினால் இசையமைப்பாளர் அஜீஸ் என்று அறிந்து பிரமிப்பு. அற்புதமான மெலடிப் பாடலை ஸ்ரேயா கோசல், ஹரிச்சரண் குரலில் படவைத்தது இன்னும் வெளிவராத "பாம்புச் சட்டை" படத்துக்காக. விஜய் டிவி சூப்பர் சிங்கர் வெற்றியாளர், பின்னர் கோவா படத்தின் "இதுவரை இல்லாத" பாடல் மூலம் இதுவரை பயணப்பட்ட அஜிஸ் இற்கு பாம்புச் சட்டை படத்தில் கிட்டிய இசையமைப்பாளர் பணியைச் சிறப்பாக எடுத்திருப்பது இந்தப் பாடலில் தெரிகிறது. இதே படத்துக்காகக் கொடுத்த "நீயும் நானும்"
https://www.youtube.com/shared?ci=vF27ra8I-Oc
 பாடலும் அழகாக வந்திருக்கிறது.

நிவாஸ் கே.பிரசன்னா, லியோன் ஜேம்ஸ், அஜிஸ் போன்றோர் சின்னத்திரை இசைப் போட்டிகளில் தம்மை வெளிப்படுத்திப் பெரிய வாய்ப்பைப் பிடித்திருப்பது சிறப்பு.

(தொடரும்)

முந்திய பதிவுகள்

தமிழ்த் திரையிசை 2016 அலசல் அறிமுகம்
http://www.radiospathy.com/2016/12/2016.html

இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன்
http://www.radiospathy.com/2016/12/2016_21.html

Wednesday, December 21, 2016

தமிழ்த் திரையிசை அலசல் 2016 - இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன்


"கண்ணக் கட்டிக் காட்டில் விட்டுப் போறாளே கண்ணழகி கண்ணழகி தானே" https://www.youtube.com/shared?ci=Cld8cBAMpTc  இந்தப் பாடல் வெளி வந்து சில வாரம் தான் ஆகியிருக்கிறது. ஆனால் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இத்தனைக்கும் பாடல் இடம் பெற்ற "காலக் கூத்து" என்ற இந்தப் படமே இன்னும் வெளிவராத நிலையில் பாடலைத் தேடிக் கேட்க வேண்டும் என்ற தூண்டுதலை உண்டு பண்ண முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தான். அவ்வளவு தூரம் இசை ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இடம் பிடித்திருக்கிறார்.

ஒரு திரைப் படைப்பாக்கத்துக்கு வெறும் நாலு பாடல்களை இசையமைத்துப் பிரபலப்படுத்தி விட்டுப் போய் விட்டால் சரி என்ற நிலையில் தான் சமீபகாலப் போக்கு நிலவுகிறது. ஆனால் குறித்த திரைப்படத்தின் பின்னணி இசையும் உயிர் நாடி என்பதையும் உணர்ந்து சிரத்தையோடு இசை பண்ணிக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலரில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு முழுமையான இளைய தலைமுறை இசையமைப்பாளர். அதனால் தான் அவருக்கு "இசை இளவல்" என்ற பட்டம்  இட்டேன்.
"பண்ணையாரும் பத்மினி" படத்தில் தொடங்கி இன்று வரை இவர் இசையமைத்த படங்களைத் தேடி நுகர்வோர் இதை உணர்வர்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை "ஒரு நாள் கூத்து" திரைப்படம் ஜஸ்டின் பிரபாகரனுக்கு அழகிய பூங்கொத்தைக் கொடுத்துக் கெளரவித்தது.
தனிப்பட்ட என் ரசனையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில், தான் எடுத்துக் கொண்ட கருவை வெகு கச்சிதமாகக் காட்சியமைப்போடும் உணர்வு பூர்வமாகவும் கொடுத்த படமாக "ஒரு நாள் கூத்து" படத்தையே முன் வைப்பேன்.
"எப்போ வருவாரோ" https://www.youtube.com/shared?ci=iq4nXbb9ols என்ற கோபால கிருஷ்ணபாரதியாரின் பாடலை மீள் இசையில் அழகாக வடிவமைத்ததோடு ஹரிச்சரணின் பொருத்தமான குரலையும் சேர்த்ததால் ஆகத் திறமான படைப்பாக இந்தப் படத்தின் கதையோட்டத்துக்குத் துணை புரிந்திருக்கிறது.
அத்தோடு "அடியே அழகே" https://www.youtube.com/shared?ci=wF5NOayV9Ug பாடலில் தோய்த்தெடுக்கப்பட்ட காதல் பிரிவின் துயர் காட்டும் அழகியல். இது ஆறு மில்லியன் பார்வையைக் கடந்திருக்கிறது YouTube இல்.
அத்தோடு துள்ளிசை ஏரியாவிலும் கலக்குவேன் என்று காட்டிய "பாட்டைப் போடுங்க ஜி" https://www.youtube.com/shared?ci=emnxMbcqfhg என்று பண்பலை வானொலிகளுக்குச் செமத்தியான தீனியைக் கொடுத்திருக்கிறார். "ஒரு நாள் கூத்து" பாடல்கள் கடந்த ஆண்டே வெளியாகி விட்டாலும் இந்த ஆண்டு படமும் பாடல்களும் ஒரு சேரப் பரவலாகப் போய்ச் சேர்ந்தன.

ஒரு திகட்டத் திகட்ட காதல் பின்னணி கொண்ட ஒரு படம் ஜஸ்டின் பிரபாகரனுக்குக் கிட்டினால் மனுஷர் அடி பின்னி விடுவார் போல அத்தனை இசைக் குணவியல்புகளும் அவருள் இருக்கின்றன.

தொடர்ச்சியாக நல்ல படைப்புகளில் பணியாற்றக் கிடைப்பது ஒரு வரம். அத்தகு நிலை ஜஸ்டின் பிரபாகரனுக்குக் கிட்டியிருப்பதை இந்த ஆண்டில் வெளிவந்த "ராஜா மந்திரி" படமும் நிரூபித்தது.
ஏற்கனவே பண்பலை வானொலிகளின் ஆசீர்வாதம் வேறு இவருக்கு இருப்பதால் "லெகுவா வெகுவா" 
https://www.youtube.com/shared?ci=uf8sP05ABQc பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு முதலில் பிடித்துப் போன பாடலாக அமைந்தது. படம் பார்க்கும் போது அப்பாவிக் கிராமத்தான் படிக்காத அண்ணன் காளி வெங்கட்டுக்கு அச்சொட்டாகப் பொருந்தக் கூடிய குரலாக ஏ.சி.எஸ்.ரவிச்சந்திரனை வைத்து "எதிர்த்த வீட்டு காலிஃபிளவரே" https://www.youtube.com/shared?ci=k_mT-UL0Xq8 பாடல் வரிகளில் கூட அந்தக் காட்சி நுட்பத்தை உணர்ந்த வகையில் கொடுத்து வசீகரித்தது. இன்னொன்று "ஸ்நேகிதியே ஸ்நேகிதியே நீ சிரித்தால் போதுமடி" https://www.youtube.com/shared?ci=1ymXr0vFOrA என்று தன் அக்மார்க் மெலடி அட்டகாசத்தையும் காட்டி விட்ட வகையில் "ராஜா மந்திரி" படப் பாடல்களும் முத்திரைப் பாடல்களாக அமைந்தன.

"காலக் கூத்து" மற்றும் "உள் குத்து" படங்கள் இன்னும் வெளி வரவில்லை. காலக் கூத்து படத்தில் ஹரிச்சரணுக்கு அழகிய பொருத்தமாக அமைந்த "கண்ணை கட்டிக் காட்டில் விட்டுப் போறாளே" பாடல் தற்போது வெளியாகியிருக்க மீதிப் பாடல்களுக்குக் காத்திருக்கிறோம்.
உள் குத்து படத்திற்காகக் கொடுத்த
"பெசையும் இசையா என் காதுக்குள்ள கேக்குறான்" https://www.youtube.com/shared?ci=-nz1qMqPdVQ வந்தனா ஶ்ரீனிவாசனுக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷப் பாட்டு. இதே படத்தில் இடம் பிடித்த "குறு குறு கண்ணால்" பாடல் உருவாக்கத்தை முதலில் பார்த்து விட்டு https://www.youtube.com/shared?ci=v3PCYnOlR6Y பின்னர் அதைத் தனியே கேட்கும் இன்பமே தனி https://www.youtube.com/shared?ci=QHeBmT55v1k
இந்தப் பாடலை லதா கிருஷ்ணாவுடன் ஜஸ்டின் பிரபாகரனும் இணைந்து பாடியிருக்கிறார்.

கொசுறுச் செய்தியாக மலையாளக் கரையோரம் போய் "குஞ்சி ராமாயணம்" 

அந்தப் படப் பாடல்களைக் கேட்க 
https://www.youtube.com/shared?ci=XF5_QavpqXo

புதுப் புது இயக்குநர்களோடு ஒவ்வொரு படம், இன்னார் மட்டும் என்றில்லாமல் எல்லாப் பாடலாசிரியர்களோடும் பணி புரியும் திறன் போன்றவை இவருக்குக் கிட்டிய மேலதிக பெறுமதிகள்.

ஜஸ்டின் பிரபாகரன் என்ற மிகச் சிறந்த இளம் படைப்பாளிக்குத் தேவை ஒரு பரவலான மக்கள் வட்டத்துக்குச் சென்று சேரக் கூடிய ஒரு நட்சத்திர வெற்றி. அதை வெளி வர இருக்கும் படங்களோடு 
சமுத்திரக்கனி இயக்கத்தில், காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் தயாரித்துக் கொடுக்கவிருக்கும் "தொண்டன்" படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

(தொடரும்)

இந்தத் தொடரின் முந்திய பதிவு
http://www.radiospathy.com/2016/12/2016.html

தமிழ்த் திரையிசை 2016 அலசல்


ஒரு படைப்பை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய காரணிகளில், ஒன்று அந்தப் படைப்பு மீதான நுகர்வோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் விளையும் தானாக எழும் எதிர்பார்ப்பு, இன்னொன்று குறித்த படைப்பைச் சந்தைப்படுத்தும் பாங்கினால் நுகர்வோரைத் தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்வது என்ற ரீதியில் அமைந்திருக்கும். இது திரையிசைப் பாடல்களுக்கும் பொருந்தும்.
கடந்த பல ஆண்டுகளாக அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை வைத்துச் செய்யும் அலசலை இந்த ஆண்டிறுதியிலும் செய்ய முனைந்துள்ளேன்.
இதற்கிடையில் இருவேறு திசைகளில் இருந்து இந்த மாதிரி ஒரு பகிர்வைத் தத்தம் பத்திரிகைகளுக்குக் கொடுக்குமாறு நண்பர்கள் கேட்டிருந்தாலும் இதைக் கொடுப்பதற்கான மன ஆர்வம் பரிபூரணமாக இல்லாததால் தட்டிக் கொண்டே போனது. இப்போது கை கூடியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் திரையுசையின் போக்கில் இன்னார் தான் என்றில்லாமல் ஒரே ஆண்டில் பல்வேறு புதுப் புது இசையமைப்பாளர்கள் தம் வல்லமையைக் காட்டி ரசிகர்களைக் கட்டியிழுக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. இதனால் புதுப் புது உத்திகளையும், பாய்ச்சலையும் இசையமைப்பாளர்களால் காட்ட முடிகின்றது.

2016 ஆண்டைப் பொறுத்தவரை பாடலாசிரியர் முத்துக்குமாரின் அகால மரணம் தான் தமிழ்த் திரையிசை உலகின் முதற்பெரும் தாக்கமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பாடலாசிரியர் அண்ணாமலையின் மரணமும் பாடலாசிரியர்களைத் தேடி அறிந்து கொள்ளும் இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது.
ஆனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் காலமான பாடலாசிரியர் கவிஞர் காளிதாசனின் இறப்பைப் பரவலாக அறிந்து உணராததைக் கவலையுடன் பார்க்கிறேன். தேனிசைத் தென்றல் தேவாவின் ஆரம்பகாலத்துப் பாடல்களில் குறிப்பாகக் கிராமிய மணம் கொண்ட பாடல்களில் கவிஞர் காளிதாசன் கொடுத்த பங்களிப்பு மிகப் பெரிது. அவரை வானொலிப் பேட்டியெடுக்கப் பல்லாண்டுகளாகத் தேடியும் எனக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. இறப்புச் செய்தி தான் வந்து சேர்ந்தது பெருந்துயரம்.

பாடகர் என்ற வகையில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பை ரசிக உலகம் கவலையோடு எதிர்கொண்டது. 
ஒரு சில பாடல்கள் பாடிச் சென்றாலும் "அம்மா என்றால் அன்பு" பாடல் வழி பிரபலமாகிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இழப்பையும் தமிழ்த் திரையிசையின் துயர் பகிரும் பக்கங்களில் பதிய வேண்டும்.

இசைத்தட்டையும், ஒலி நாடாவையும் தேடி ஓடிக் கேட்ட காலம் கடந்து இன்று தனிப் பாடல் பகிர்வு, பின்னர் கொஞ்சக் காலம் இடைவெளி விட்டு
அனைத்துப் பாடல்களும் வெளியீடு என்று YouTube ஐ நம்பிய பொறிமுறை அமைந்திருக்கிறது. குறித்த பாடலின் உருவாக்கத்துக்கு முந்தியே அவற்றை ஒலியேற்றும் போது வரிகளை ஆங்கிலத்தில்  கொடுப்பது (தமிழிலும் கொடுக்கும் இரட்டை முறைமை வர வேண்டும்) , பாடகர், படம் மட்டுமன்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர், இன்னும் குறித்த பாடலுக்குப் பின்னால் தொழில் நுட்ப ரீதியில் உழைத்தவர்களின் விபரங்களை அந்தந்தப் படங்களின் பாடல் உரிமம் பெற்ற நிறுவனங்களே உயர் ஒலித்தரத்தில் கொடுப்பது நல்ல விடயம்.
அத்தோடு iTunes மற்றும் Google Play வழியாகவும் கட்டண முறையில் கேட்கும் முறைமை இயங்கினாலும் அவற்றைத் தமிழ்ச் சூழல் உள்வாங்குவது மிகவும் குறைவாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் Doopadoo தளம் http://www.doopaadoo.com/அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 9 மாதங்களுக்குள் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இது Raaga மற்றும் Saavn இசைத்தளங்களின் பாவனையாளரைக் கணிசமாக உள்வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரபல பாடகர்கள், பாடலாசிரியர்களால் இந்த Doopadoo தளம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதுடன் படங்களின் எழுத்தோட்டத்திலும் கூட விளம்பரப்படுத்தப்படுலின்றது.

தற்போது US மற்றும் Australia வில் கிட்டும் YouTube Red எனும் முறைமை எதிர்காலத்தில் பாரிய இசை நுகர்வோர் சந்தையை உள்வாங்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. 

YouTube Red இல் என் இசை அனுபவம் இதோ

கடந்த சில மாதங்களாக கட்டற்ற இன்னிசையைப் பருக ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டுள்ளேன். அதுதான் YouTube Red.
பாடல் பிரியர்களுக்கு இதுவொரு அருமையான படைப்பு. பணியிடம் நோக்கிய பயணத்தின் போது YouTube இல் பாட்டுக் கேட்டுக் கொண்டே தட்டச்சு வேலைகளோ அல்லது சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று. 

பாடல் கேட்பதற்கு முதல் தெரிவாக YouTube ஐ நாடுவதற்குக் காரணம் விரும்பிய பாடலை அந்த நேரத்தில் இருக்கும் நமது மனவோட்டத்துக்கேற்ப கேட்க முடிவது தான். அத்தோடு  எத்தனை பாடல்களைத் தான் கைப்பேசியில் நிரப்பி வைப்பது? இப்போது புதிய பாடல்களைக் அதி திறமான ஒலித்தரத்தில் YouTube இல் தான் குறித்த படப் பாடல்களின் ஒலிப்பதிப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களே வெளியிடுகின்றன. அத்தோடு பழைய, இடைக்காலப் பாடல்களையும் மேம்படுத்தப்பட்ட ஒலியோடு தனி நபர்கள் மற்றும் இளையராஜாவின் அதிகாரபூர்வப் பக்கம் போன்றவை கொடுக்கின்றன. கட்டற்ற இலவசமான சேவை என்பதால் இது சாத்தியம். எனக்கெல்லாம் SoundCloud காரன் செய்த சந்தா மோசடியால் இப்படியான தளங்களை விட்டு YouTube தான் கதி என்று ஆகிவிட்டது.

Smart Phone யுகம் வந்ததில் இருந்து பெருங்குறையாக இருந்தது சமகாலத்தில் YouTube இல் காணொளியை இயக்கி விட்டு இன்னொரு காரியத்தைச் செய்ய முடியாத நிலை. இந்த Multitasking முறைமைக்கு (Background Play) YouTube Red வழியேற்படுத்துகிறது. இப்போதெல்லாம் ஒரு பாடலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பின்னணியில் YouTube இல் பாடலை ஒளிக்க(ஒலிக்க) விட்டு அதை ரசித்தவாறே iPhone Notes இல் எழுத ஆரம்பிப்பேன். 

YouTube இல் ஒரு பாடலைக் கேட்க ஆரம்பிக்கும் போதோ அல்லது ஒரு நிகழ்ச்சி/படத்தைப் பார்க்கும் போதோ இடையில் விளம்பரம் வந்து அறுக்கும் என்ற நிலையும் YouTube Red இனால் களையப்பட்டுள்ளது.

இன்னொரு மிக முக்கியமான அனுகூலமாக YouTube இல் விரும்பிய பாடலையோ, படத்தையோ Offline  பாவிக்க வழி செய்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது வேண்டியதை Offline Video வாக இறக்கி விட்டு, இணையப் பாவனையைச் சேமிக்க வேண்டி இந்த முறைமையைப் பயன்படுத்தலாம். அத்தோடு பயணம் போகும் போது iPad இல் YouTube இலிருக்கும் தேவையான படங்களை இறக்கி விட்டுப் பார்க்கலாம்.

இந்த YouTube Red பரவலான கவனத்தை ஈர்த்து வெற்றிகரமான செயலியாக அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் நேரடி ஒலி, ஒளிபரப்புகள் கூடத் தங்கு தடையின்றி அஞ்சல் செய்யும் வாய்ப்பு அதிகமாகும். அத்தோடு பாடல்களைக் கேட்பதற்கான ஒரே செயலியாக இதையே சார்ந்திருக்கும் வாய்ப்பும் பெருகும். YouTube Red மாதாந்தக் கட்டணமாக 10 அமெரிக்க டாலர் அறவிடப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு YouTube Red சென்று சேர்ந்துள்ளதா தெரியவில்லை. அப்படியாயின் அந்தந்த நாட்டுக் கணக்கு வழக்கின்படி நியாயமான கட்டணத்தை அறவிடலாம்.

சரி இனி 2016 ஆம் ஆண்டில் மூத்தவர்களும் இளையவர்களுமாகக் கொடுத்த பாடல்களில் வென்றதும், மனதில் நின்றதும், நொந்ததும் என்று அடுத்த பகிர்வுகளில் பார்ப்போம். இது என் தனி ஆவர்த்தனம் என்பதால் பகிர்வில் கொடுக்கப் போகும் பாடல்களில் பெரும்பாலானவை சுய ரசனை, என் காதுக்கெட்டிய வானலைப் பகிர்வுகளாக இருக்கும்.

முதலில் இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இன்னும் வெளிவராத படத்தில் இருந்து மனதைக் கொள்ளை கொண்ட பாடலோடு. அந்தப் பாடல் எதுவென்பதை அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள் 😀

Thursday, December 8, 2016

நானொன்று கேட்டால் தருவாயா

நானொன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நிலவுக்குக் கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓஓஓஓஓஓஓ

நானொன்று கேட்டால் தருவாயா

கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே
கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா
கற்பனைகளைச் சொல்லும் கவிதைகளில்
சொல்வதென்றும் உண்மையில்லை புரிகிறதா

என் பாடல் செல்லுமிடம் எங்கேயென 
நீயே சொல்வாய்
உன் பாடல் நான் சொல்லவோ
என் பாதை வேறெல்லவோ
இதயம் தரையில் இறங்காது
இலைக்குச் சிறகு முளைக்காது
சங்கீத மொழி தூது

நானொன்று சொல்வேன் கேட்பாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நீயந்த நிலவை மறப்பாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

வெண்ணிலவிலே உன்னைக் குடியமர்த்த
தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே
குடியிருக்கும் சின்னக் குடிசையிலும்
தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையோ
ஆதாரம் இல்லாமலே கூடாரம் நிற்காதம்மா
ஆதாமின் ஆதாரம் தான் ஏவாளெனும் பெண் தானய்யா
வானம் கையில் அடங்காது
மெளன அலைகள் உறங்காது
சங்கீத மொழிகள் தூது

நானொன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நிலவுக்குக் கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓஓஓஓ
நானொன்று கேட்டால் தருவாயா


🎻🎻🎻🎻🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

இசைஞானி இளையராஜா இசையில் இளைய ராகம் படத்துக்காக சித் ராவுடன் அருண்மொழி பாடிய பாட்டிது. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இடையில் பாடல் வரிகளையும் கேட்டு எழுதி முடித்து விட்டேன்.  எழுதி முடித்த பாடல் வரிகளில் கண்கள் பதியம் வைக்க, பாடலைக் கேட்டுக் கொண்டு வருவது சொர்க்க லோகத்திலும் கிட்டாத இன்பம்.

பாடகர் அருண்மொழியின் குரல் அசாதரணமானது என்று மெய்ப்பிக்க எத்தனையெத்தனை பாடல்கள். அவற்றில் இதுவுமொன்று. அவரின் குரலே ஒரு வாத்தியம் எழுப்பும் நாதம் போலிருக்கும். 
அதிர்ந்து கொடுக்காத அந்த ஒலி அப்படியே ஊடுருவும். பாடல் கேட்டு முடித்த பின்பும் அந்த நாத இன்பத்தை மனது பொச்சடிக்கும்.

நானொன்று சொன்னால் கேட்பீர்களா?
இந்தப் பாடலை இது நாள் வரை கேட்காதவர்கள் இப்போதே ஓடிச் சென்று கேட்டு அனுபவியுங்கள்,
ஒன்றுக்குப் பல முறை 
நடந்திடும்
அது முடியும் 

Wednesday, November 30, 2016

வாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது


கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். 
இன்று நவம்பர் 30 ஆம் திகதி தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிக் கொண்டிருக்கின்றார்.

சாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு  திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.  
கவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.

வாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.

அந்தப் பேட்டியின் வழியாக,
தனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும், 
அதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்

தமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் "தாயும் சேயும்" என்ற வெளிவராத படத்துக்காக "பொன் மயமான காலம் வரும்" அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" மற்றும் 

அவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்

தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த 
தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல்  16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார். 
தற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

வாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.

ஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.

வாணி ஜெயராமுக்கு "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.

இதுவரை 18 மொழிகளில், 45 வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வரும் வாணி ஜெயராம் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.


வாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய வானொலிப் பேட்டியைக் கேட்க


(படத்தில் என்னுடன் வாணி & ஜெயராம் தம்பதி)

Thursday, November 17, 2016

கவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்


இன்று என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிவுமதி அண்ணன் பிறந்த நாள் என்பதைக் கவிஞர் பழநிபாரதி அவர்கள் பகிர்ந்த வாழ்த்துப் பகிர்வில் இருந்து அறிந்து கொண்டேன்.தொலை தூரம் இருந்தாலும் தமிழுணர்வாலும், ஈழத்தமிழருக்கான குரலாகவும் அவர் எமக்கெல்லாம் கிட்டத்தில் இருப்பவர் ஆயிற்றே. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அறிவுமதி அண்ணருக்கு.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக 12 வருடங்களுக்கு முன்னர் அறிவுமதி அண்ணரோடு நான் கண்ட வானொலிப் பேட்டியின் சில பகுதிகளை ஒலிக்க விட்டுக் கேட்டேன். அதில் இசைஞானி இளையராஜா தொட்டு முக்கியமான சில இசையமைப்பாளர்களது இசையில் பாடல் எழுதிய கதையைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் இருந்து பிரித்தெடுத்தெடுத்து எழுத்துப் பகிர்வாக இங்கே பகிர்கின்றேன்.

முதலில் கே.பாக்யராஜ் இவரைத் திரையுலகுக்கு அழைத்து நான்கு திரைப்படங்களில் உரையாடல், நெறியாள்கை பின்னர் பாலுமகேந்திராவிடம் 7 படங்கள் , பாரதிராஜாவிடம் நான்கு ஆடுகால் என படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுங்கில் பானுசந்தர், அர்ச்சனா ஜோடியோடு மீளவும் பாலுமகேந்திரா இயக்க, அந்தத் திரைப்படத்தில் முன்னர் "ஓலங்கள்" திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "தும்பி வா" பாடல் மெட்டு பயன்படுத்தப்படுகிறது. நிரீக்ஷனா திரைப்படம் தமிழில் "கண்ணே கலைமானே" என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது  அதில் "நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே"  https://www.youtube.com/shared?ci=-oydrjrc-Kk பாடலை எஸ்.ஜானகிக்காக எழுதினார் அறிவுமதி.
மூன்றாம் பிறை படத்தில் வந்த பின்னணி இசையின் ஒரு பகுதியே பாலுமகேந்திராவின் வேண்டுகோளில் இளையராஜாவால் "தும்பி வா" ஆனதாகவும் பேட்டியில் சொன்னார். பின்னர் இந்த மெட்டு "சங்கத்தில் பாடாத கவிதை" என்று ஆட்டோ ராஜா படத்துக்காக புலவர் புலமைப்பித்தனால் எழுதப்பட்டது. தான் கலந்து கொண்ட கவியரங்க மேடைகளில் தலைவராக வீற்றிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய அதே மெட்டுக்குத் தானும் பாடல் புனையும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லி நெகிழ்ந்தார் அறிவுமதி.

தான் உதவி இயக்குநராக இருந்த போது இசைஞானி இளையராஜா பாடல் இசையமைக்கும் தருணம் கூட இருந்ததை நினைவு கூர்ந்தவர் "நாடோடித் தென்றல்" படத்தின் பாடல்களை இளையராஜா எழுதி விட்டு "மதி இதைப் பார்" என்று என்று எழுதியதைக் காட்ட, அவற்றின் ஈரம் காயாமல் படியெடுத்துக் கொடுத்தாராம், மணியே மணிக்குயிலே உட்பட.

மலையாளத்தில் காலாபாணி என்று பிரியதர்ஷன் இயக்கிய படத்தின் தமிழ் வடிவம் "சிறைச்சாலை" ஆனபோது அந்தப் படத்தின் உரையாடல், மற்றும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார் அறிவுமதி.
சிறைச்சாலையின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் தனித்தனியாகப் பதிவு எழுதலாமே.
அந்தப் பாடல்கள் https://www.youtube.com/shared?ci=Kdwb7-h1LVY

இசைஞானி இளையராஜாவோடு அறிவுமதி அண்ணன் முதன் முதலாக அமர்ந்து பாட்டெழுதியது "ராமன் அப்துல்லா" படத்தில் வந்த "முத்தமிழே முத்தமிழே முத்தச்சத்தம் ஒன்று கேட்டதென்ன" https://www.youtube.com/shared?ci=CF7IhOVNFqM பாடலாம். அந்தப் பாடலை எழுத முன், நான்கைந்து மெட்டுகளைக் கொடுத்து "இவற்றில் உனக்குப் பிடித்ததை எடுத்துப் பாட்டெழுது" என்றாராம் ராஜா.

இந்த வானொலிப் பேட்டியை நான் எடுத்த சமயம் தமிழீழத்தின் A9 பாதை இலங்கை அரசாங்கத்தால் அடைபட்டிருந்த நேரமது. தன் பேட்டியில் "எங்கே செல்லும் இந்தப் பாதை" https://www.youtube.com/shared?ci=Q_AoV8ckCNQ பாடலை சேது படத்திற்காக எழுதியதோடு ராஜா குரலுக்காகத் தான் எழுதிய முதல் பாடல் என்ற நினைவோடு இப்போது A9 பாதை அடைபட்டதையே இந்தப் பாடலைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்றார்.

ஆங்கிலம் கலக்காத தமிழில் தான் எழுதுவேன் என்ற என் கொள்கையைத் தெரிந்தும் தன் உதவியாளரை அனுப்பி "உதயா உதயா உளறுகிறேன்" https://www.youtube.com/shared?ci=d1LkuuhrHF0 பாடலை எழுத வைத்தாராம். தான் வெளியூருக்குப் போய் வந்து நாட் கணக்கில் தாமதித்தாலும் காத்திருந்து   ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொண்டதையும் குறிப்பிட்டார்.

"பிரிவொன்றைச் சந்தித்தோம் முதன் முதல் நேற்று" https://www.youtube.com/shared?ci=-Lijqq5Cjkk பாடலைப் பிரியாத வரம் வேண்டும் படத்துக்காக எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் எழுதிய "ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறள் நாம்" வரிகளைக் கண்டு நெகிழ்ந்து தனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் கிட்டிய பாராட்டு மோதிரத்தைக் கழற்றி அறிவுமதி அண்ணனுக்கு அணிவிக்க வந்தாராம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். நான் மோதிரம் அணிவதில்லை என்று இவர் மறுக்க, இது உங்கள் தமிழுக்கு நான் தருவது என்று வற்புறுத்தினாராம் எஸ்.ஏ.ராஜ்குமார்.

வித்யாசாகரோடு அறிவுமதி அண்ணன் இணைந்து கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை. அவற்றைப் பற்றிச் சொல்லும் போது  "அள்ளித் தந்த வானம்" படத்துக்காக முதன் முதலாகச் சந்தித்தாராம். அப்போது ஏற்கனவே எழுதிய பாடலைக் காட்டிய போது அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டது 
"தோம் தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்" https://www.youtube.com/shared?ci=tldQN4tNa30 ஆனதாம். அதே படத்தில் "கண்ணாலே மிய்யா மிய்யா" https://www.youtube.com/shared?ci=KU0M_1bTGnw பாடலோடு,  நாட்டுப் புறப் பாடலுக்கும் மெட்டமைத்தாராம்.
தமிழ் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து, பாடலாகவே முதலில் எழுதித் தரச் சொல்லிப் பின் மெட்டமைப்பாராம் வித்யாசாகர்.
அப்படி வந்ததிதில் "அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே" https://www.youtube.com/shared?ci=gE5S9fwx25U
(ஆகா ஆகா என்ன பாட்டய்யா இது போன வாரம் முழுக்க முணு முணுத்தேனே தேனே)
பரவை முனியம்மாவுக்காகப் பத்து நிமிடத்தில் எழுதியது" மதுர வீரன் தானே" https://www.youtube.com/shared?ci=xeY0BKhmd78

பேட்டி எடுக்கும் போது சொல்லாத பாட்டு ஆனால் என்னைச் சொக்க வைக்கும் இன்னொரு பாட்டு "விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு"
https://www.youtube.com/shared?ci=LQ-FOFu7gB4

இந்தப் பேட்டி எடுத்த போது 120 பாடல்கள் வரை எழுதிய பின் தன் திரைப்பணியில் இருந்து ஒதுங்கிருந்தார். அதையும் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அறிவுமதி அண்ணனைச் சென்னை தேடி வந்து நேரே சந்தித்திருக்கிறேன். பின்னர் வானொலிப் பேட்டியும் கண்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் சந்திக்க வேண்டும், நிறையப் பேச வேண்டும் என்ற ஆவல் இன்னும் தீரவில்லை.
நீங்கள் பல்லாண்டு காலம் நோய், நொடியின்றித் தன் மூச்சாய்க் கொண்ட தமிழோடு வாழ வாழ்த்துகிறேன்.

Thursday, September 8, 2016

இசைஞானி இளையராஜா இசையில் பாடகி ஆஷா போஸ்லே




எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் வட இந்தியாவில் கோலோச்சிய பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே சகோதரிகள் இளையராஜா இசையில் தமிழில் தொடர்ச்சியாகச் சில படங்களில் பாடிச் சிறப்பித்தனர். இந்த இருவர் பாடிய படங்கள் வெளிவந்த ஆண்டுகளும் சம காலத்தில் அமைந்திருந்தன.
இதற்கு முன்னர் ஐம்பதுகளில் "வானரதம்" படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியதும் பின்னர் மூன்று தசாப்தங்கள் கழித்துத் தமிழில் பாட வந்ததும் புதுமை. லதா மங்கேஷ்கர் குறித்த தனிப்பகிர்வில் அவரின் பாடல்களைப் பார்ப்போம். லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே தமிழில் பாடியதில் இது இன்னார் தான் என்ற அடையாளச் சிக்கலும் ஏற்படுவதுண்டு. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அழகான உச்சரிப்பு, மொழிச் சுத்தம் இவற்றில் சமரசமில்லாது பாடிய வட இந்தியப் பாடகிகளில் ஷ்ரேயா கொசல் அளவுக்கு யாரும் இலர். அதில் இந்தச் சகோதரிகளும் அடக்கம். ஆனால் என்ன மணி மணியான பாடல்கள் இவர்களுக்குக் கிடைத்ததால் அவற்றைத் தவிர்க்க முடியாது சமரசத்தோடு பருக வேண்டுமே நாம் 😂

 இன்று பாடகி ஆஷா போஸ்லேயின் பிறந்த தினத்தில் அவர் தமிழில், குறிப்பாக இளையராஜா இசையில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். தவிர எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் தங்கத்தின் தங்கம் படத்தில் "செவ்வந்திப் பூ மாலை கட்டு", தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் என்று மற்றைய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியளித்தார்.

"செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே" https://www.youtube.com/shared?ci=ikOwAVpUbpM என்று பட்டி தொட்டியெங்கும் முழங்கிய "எங்க ஊரு பாட்டுக்காரன்" பாடல் ஆஷா போஸ்லேவுக்குக் தமிழின் கடைக்கோடி ரசிகர்கள் வரை ஆஸ்தி சேர்த்தது. அந்தக் காலத்து றெக்கோர்டிங் பார்களில் இந்தப் பாடல் சுப்ரபாதம். இதையே மனோ, சுனந்தா சந்தோஷ மெட்டுகளிலும் பாடியிருப்பர்.

"எங்க ஊரு பாட்டுக்காரன்" வெற்றியைத் தொடர்ந்து கங்கை அமரன் இயக்கிக் கொடுத்த "சக்கரைப் பந்தல்" படம் எத்தனை பேருக்குத் தெரியும்? அப்போது வில்லனில் இருந்து நாயகனாகப் பதவி உயர்வு பெற்ற சரண்ராஜ் நாயகனாக நடித்தது. இந்தப் படத்தில் "மழை மேகம் மூடும் நேரம்" https://www.youtube.com/shared?ci=6ucvRMoMoCI என்ற அட்டகாஷ் பாட்டு ஆஷா போஸ்லேவுக்குக் கிட்டியது. ஆனால் அந்தப் படத்தின் மழுங்கிய வெற்றியால் இந்தப் பாடலும் பரவலாகப் போய்ச் சேராத குறை உண்டு.

சரண்ராஜ் மற்றும் ரேகா ஜோடி போட்ட "நான் சொன்னதே சட்டம்" படத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்ததனைத்தும் தவிர்க்க முடியாத அற்புதமான பாடல்கள். 
"அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்" https://www.youtube.com/shared?ci=F0a39SR5m5U இதுதான் முதன் முதலில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை ஆட்கொண்ட பாட்டு. இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு இருக்கும். இதே எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஆஷா போஸ்லே கூட்டு
"ஒரு தேவதை வந்தது" https://www.youtube.com/shared?ci=zFc0b_YViz0 கூட்டுக்குரல்கள் சங்கதியோடு கொடுத்த இந்தப் பாடல் பழைய காதல் நினைவுகளே கதவைத் திற என்ற ரீதியில் உள்ளத்து உணர்வுகளை உரசும் அழகான காதல் பாட்டு. ஆஷா போஸ்லே குரலுக்கு வெகுமதி கொடுத்து நோகாமல் அமைந்த மெட்டு.

"கண்ணுக்கொரு வண்ணக்கிளி" படம் வெளிவராமல் போன துரதிஷ்டசாலி. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கொண்ட இசைத் தட்டைத் தேடிப் பெற்றது மறக்க முடியாதது. இதற்காக விசேட பதிவும் இங்கே எழுதியிருக்கிறேன். http://www.radiospathy.com/2012/07/blog-post.html
லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஒரே படத்தில் பாடிய சிறப்புக் கொண்டது. "உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்" மூன்று வடிவத்தில் எஸ்.பி.பி & ஆஷா போஸ்லே பாடியது இன்னொரு தேவதை வந்தது போன்றதொரு சுகம்.

"ஓ பட்டர்ஃப்ளை ஓ பட்டர்ஃப்ளை" https://youtu.be/qDJVdY8Kx8E பாடல் ஆஷா போஸ்லேக்குத் தமிழில் இன்னுமொரு உச்சம் கொடுத்த பாட்டு. பட்டர் மாதிரி வழிந்தோடும் வரிகளை பட்ட்டர்ர்ர் என்று பகிர்ந்திருப்பார்.
ஒளிப்பதிவாளர் ஶ்ரீராம் இயக்குநராக  அவதாரமெடுத்த மீரா படத்தில் இந்தப் பாட்டோடு இன்னும் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். அதில் ஒன்று எஸ்.பி.பி "பனி விழும் மாலையில்" https://youtu.be/t1RfO10sCac என்று பாடிக் கொண்டே போக இவர் ஆமோதிப்புக் குரலைப் பாடல் நெடுகக் கொடுப்பார்.
இன்னொன்று இதுவரை தமிழில் அவர் கொடுத்திராத பாணியில் போதைக் கிறங்கலோடு "பழைய விலங்கு உடைந்ததா" https://youtu.be/f6Vwrv2u6O8 என்று அமைந்திருக்கும்.

பழைய விலங்கு உடைந்ததா என்று ஆஷா போஸ்லேவுக்குக் கிட்டிய அந்தப் புதுமையான பாடலை ஒப்பீட்டளவில் ஓ பட்டர் ஃப்ளை அளவுக்கு ரசிக்காத ரசிகர்கள், பின்னர் இதே மாதிரி அமைந்த
இன்னொரு பாட்டைக் கொண்டாடினார்கள். அதுதான் சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் வரும்
"சாத்து நடை சாத்து" https://youtu.be/sbpikAoMeZs இந்தப் பாட்டு ஆஷா போஸ்லேக்கு மட்டுமல்ல உஷா உதூப் இற்குக் கிடைத்திருந்தாலும் பின்னியிருப்பார். அந்த கோரஸ் குரல்கள் கொடுக்கும் ஜும் ஜக்கு ஜும் ஜக்கு ஜக்கு :-) 
பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய "புதுப்பாட்டு" படத்தில் இளையராஜாவோடு ஜோடி க்ஃட்டிப் பாடிய "எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நெனக்கிறே" https://youtu.be/ZY9gHT8s5RU பாடலும் இவரைக் கவனிக்க வைத்தது.

"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமைச் சேர்த்த உறவுக்கொரு நன்றி" https://youtu.be/dmAqcdyY14s
இசைஞானி இளையராஜாவின் இசையில் ஆஷா போஸ்லேவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்த பாட்டு. ஹரிஹரனின் கூட்டும் கச்சிதமான பாட்டு ஜோடியாக அமைந்து சிறப்பிக்கும். 

கடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக வந்திருந்த ஆஷா போஸ்லேவுக்கு இளையராஜா பூச்செண்டு அனுப்பி கார்த்திக் ராஜா வழியாகக் கனம் பண்ணியிருந்தார். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகளுக்குத் தமிழகத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினரோடு இருக்கும் பந்தம் போலவே இசைஞானி இளையராஜாவிடத்தும் என்பதை மீள நிரூபித்தது அந்த நிகழ்வு.

Tuesday, August 16, 2016

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (தங்க மீன்கள்), "நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ கடந்த இரண்டு நாட்களாக மனதின் ஓரத்தில் இருந்து "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருக்கிறது.

அது "சத்தம் போடாதே" படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு.

யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.

ஒரு இசையமைப்பாளரின் இசைத்துடிப்பறிந்து அதற்கு ஆத்மார்த்தமான வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் பாடலாசிரியர் வரம். யுவனுக்கு நா.முத்துக்குமாரும் வாய்த்தார். 
பாடலாசிரியர் வைரமுத்துவுக்குப் பின்னர் தனிப்படத்தில் அதிக பாடல் அல்லது முழுப்பாடல்களும் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையும் முத்துக்குமாருக்கே வாய்த்தது.

"பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" இந்தப் பாடலைக் குறித்த காட்சிக்கான களப்பாடலாக மட்டுமன்றி இதையே தனித்து நம் உணர்வின் பரிமாறலாகத் திரை தாண்டி உணர முடிகின்ற வரிகள். அந்த வரிகளை நோகாமல் அணைத்து வருடும் இசை ஆறுதல் மொழி சொல்கிறது. இந்த மாதிரிப் பாட்டெல்லாம் வெறும் வணிகச் சரக்கிற்கான கூட்டணி அல்ல உணர்வுகளின் சங்கமம்.

"எதை நீ தொலைத்தாலும் 
மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா...."
https://www.youtube.com/shared?ci=pdH6KmWdudg

மேற்கண்ட பதிவை நான் பகிர்ந்த போது ட்விட்டர் நண்பர் புதியதொரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். 
தற்கொலை செய்யும் முடிவில் இருந்த பெண்ணொருத்தி இந்தப் பாடலைக் கேட்டு விட்டுத் தன் எண்ணத்தைக் கை விட்டதாக சத்தம் போடாதே படத்தின் இயக்குநர் வஸந்த் அவர்கள், நா.முத்துக்குமார் அவர்களின் ,மரணச் சடங்கில் சொன்னதாக அந்தக் காணொளியையும் பகிர்ந்து கொண்டார். 
இதோ அந்தக் காணொளி




Wednesday, August 10, 2016

இயக்குநர் வடிவெடுத்த பஞ்சு அருணாசலம் அவர்கள்



எழுபதுகளின் மத்தியில் மெல்ல மெல்லக் கிளம்பி எண்பதுகளின் மிக முக்கியமானதொரு கதை சொல்லியாக தமிழ் சினிமாவில் மிளிர்ந்தவர் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
ஒரு வெற்றிப்படத்திற்குண்டான சூக்குமத்தை நுணுக்கமாகத் தன் தயாரிப்பில் மட்டுமன்றிப் பிறர் தயாரித்த படங்களில் பணியாற்றிய போதும் கையாண்டவர். எண்பதுகளின் வசூல் நிறைந்த சினிமா வர்த்தகத்தின் மிக முக்கிய புள்ளி என்ற நிலையில் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் வடிவம். அதற்கு முந்திய கால கட்டங்களில் பாடலாசிரியர் என்று இயங்க ஆரம்பித்த பஞ்சு அருணாசலம் அவர்களது இன்னொரு பரிமாணம் அவர் இயக்குநராகவும் இருந்தது.

தமிழ் சினிமாவில் பல்வேறு ஆற்றொழுக்கான கதாசிரியர்கள் வெற்றிப்படங்களுக்குத் துணை போயிருக்கிறார்கள். பின்னர் இயக்குநர் வடிவம் தரித்த போது வெற்றி பெற்றவர்களுக்கு நிகராகத் தோல்வி கண்டவர் பட்டியலும் இருக்கும். உதாரணமாக ஆர்.செல்வராஜ் அவர்களுக்குக் கதாசிரியர் அந்தஸ்தில் கிட்டிய வெற்றிகளோடு ஒப்பிடும் போது அவர் இயக்கிய படங்கள் என்னதான் வித்தியாசமான கதைக்களனைக் கொண்டும், இசைஞானி இளையராஜாவின் அற்புதம் நிறைந்த பாடல்களைத் தாங்கியும் அமைந்தாலும் அவை அவரை வணிக வெற்றியில் அடையாளப்படுத்தாதவை. பஞ்சு அருணாசலம் அவர்களும் இயக்குநராகச் சாதித்ததை விட பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாகப் பெற்ற வெற்ரீ உச்சம் நிரம்பியது.  மொத்தம் நான்கு படங்களைப் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்க்யிருக்கிறார். இவை 1988 இலிருந்து ஐந்து வருடங்களுக்குள் இவர் சாதித்து முடித்த கணக்கு.

"மணமகளே வா" இது தான் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய முதல் படம், இதில் விநோதம் என்னவென்றால் இவர் எழுதிய முதல் பாட்டு "மணமகளே மருமகளே வா வா" என்ற சாரதா திரைப்படத்தின் புகழ்பூத்த பாட்டு. அந்தப் பாடலின் முதலடியே இவரின் முதல் படத் தலைப்பானது . இன்னொருவர் தயாரிப்பில் அமைந்த இந்தப் படத்தில் பிரபு, ராதிகா ஜோடியோடு மற்றைய கதாபாத்திரத் தேர்வும் கச்சிதமாக அமைந்த வெற்றிப்படம்.

 "Tell me Tell me" https://youtu.be/gpjBbCZZc14 என்று அருண்மொழி அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் அமைந்த வித்தியாசமான பாடல் வாலியின் வரிகளில் அமைய, மீதி எலா, பஞ்சு அருணாசலம் அவர்கள் வரிகள் பூண்ட பாடல்கள். 
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசையரசி பி.சுசீலா பாடும் "ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் பாட்டு" https://youtu.be/nBh2maLfeyk
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவுமொன்று "மணமகளே வா" படத்தின் முத்திரைப் பாட்டு.

தெலுங்கில் வெளிவந்த "கலிகாலம்" படத்தில் சந்திரமோகன், ஜெயசுதா நடித்தது. இயக்குநர் விசுவின் படங்களுக்குண்டான நடுத்தரக் குடும்பத்து அல்லாட்டம் தான் கதைக்கரு. இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் இந்தக் கதையின் உரிமத்தை வாங்கித் தானே தயாரித்து, பாடல்கள், வசனம், இயக்கத்தையும் கையாளும் துணிவைப் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு வந்திருக்காதே. அந்தக் காலகட்டத்தில் நீதிக்குத் தண்டனை, தென்றல் சுடும் போன்ற படங்களில் ஜோடி கட்டிய ராதிகா, நிழல்கள் ரவி ஜோடி போட்டனர். இசைஞானி இளையராஜா இசையில் அவருடன், மனோ, ஸ்வர்ணலதா பாடல்களைப் பாடியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த பாடல்களோடு ஒப்பிடுகையில் வெளியில் தெரியாத அளவுக்கு இந்தப் படப் பாடல்கள் அமுங்கிப் போயின.
அந்தப் படத்தின் பாடல்களின் காணொளி மூட்டை இதோ http://www.youtube.com/playlist?list=PLEqZCvIXGq0ZBgebwYp8kd0rX7u5Mjsqx

"மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு" இந்தப் பாடல் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பட்டி தொட்டியெல்லாம் முழங்க, "ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே" திருப்புகழை யாரோ இதே மாங்குயிலே பூங்குயிலே சந்தத்தில் பாடியதாக அப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சேதி அறிந்து சொன்னது அப்போது பரபரப்பான சினிமாச் சமாச்சாரம். பின்னர் அந்த ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே முதலடிகளை வைத்துக் கொண்டு சினிமா ஜிகினா வரிகளைச் சூடிய பாட்டு வந்தது "தம்பி பொண்டாட்டி" படத்தில்.  ஆம் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய இன்னொரு படம் இந்த "தம்பி பொண்டாட்டி". ரகு(மான்), சுகன்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தது.
இந்தப் படத்தின் பாடல்கள் வந்த நேரம் நான் வெறி பிடித்தது போல் இளையராஜா பாடல்கள் புதுசா எது வந்தாலும் ஒலிப்பதிவு செய்வித்துக் கேட்ட காற்சட்டைக் காலம். ஆகவே "ஏறு மயில்" https://youtu.be/dqWpDeiEXt4 (ஸ்வர்ணலதா, கல்பனா, மின்மினி, பிரசன்னா குழுவினர்) பாடல் மட்டுமன்றி இந்தப் படத்தில் வந்த பாடல்கள் அப்போது இசைஞானி கொடுத்த மற்றைய படங்களின் பாடல்களோடு ஒப்பிடும் போது வெகுஜன அந்தஸ்து அடையாவிட்டாலும் எனக்குப் பிடித்துப் போனவை. குறிப்பாக் உமா ரமணின் "உன் எண்ணம் எங்கே எங்கே" https://youtu.be/6HNmHC-5JxE 
அருண்மொழியின் "சொன்னாலும் வெட்கம்" http://shakthi.fm/ta/player/play/s2268d322
மனோ குழுவினரின் துள்ளாட்டம் "என் மானே தேனே" https://youtu.be/7HAFUNPgBHg
இவற்றோடு உமா ரமணனின் தெய்வீகப் பாட்டு "கண்ணன் வந்ததாலே" https://youtu.be/828KdEatCwo ஆகியவை பிடித்தமானவை. இதுவரை கேட்காவிட்டால் நல்ல ஒலித்தரம் மிகுந்த ஒலி வட்டில் கேட்டுப் பாருங்கள், நுணுக்கமாக ரசித்துக் கேட்க.

"ஐயோ சொக்கா ஒன்றா இரண்டா மொத்தம் பத்துப் பாட்டுகள்" என்று இன்பத்தில் ஏங்க வைத்த பத்துப் பாட்டுப் பொட்டலமாக "புதுப்பாட்டு" படம் வெளிவந்தது. சிறியதும், பெரியதுமாக அந்தப் பாடல்கள் கிராமியத் தெம்மாங்கும், மேற்கத்தேய இசையுமாக அமைந்த அருமையான இசைப் பெட்டகம் இந்தப் படம். பஞ்சு அருணாசலம், வாலி, கங்கை அமரன் பாடல்களை எழுதினார்கள்
மீண்டும் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்க, "மணமகளே வா" படத்துக்கு அடுத்து இவருக்குப் புகழ் கொடுத்த படம் இது.
அந்தக் காலத்துப் பேசும் படம் இதழின் முன்னட்டை, பின்னட்டை, நடுப்பக்கங்கள் நாலு எல்லாவற்றிலும் இந்தப் படத்தின் விளம்பரங்கள் அப்போது வந்தன. மக்கள் நாயகன் ராமராஜன், வைதேகி ஆகியோர் மாட்டு வண்டி மேலேறிப் பயணிக்க, இன்னொரு நாயகி சுமா ரங்கநாத்  நவ நாகரிக ஆடை போட்டு மிளிர வித விதமான புகைப்பட விளம்பரங்கள் அவை.
ஐயோ அந்த "நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்" https://youtu.be/qRpeXjMxXr0 பாட்டை விட்டு மற்றப் பாடல்களுக்குப் போக மனசு வரவில்லை அப்போது. பின்னர் "எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நெனக்கிறே" (இளையராஜா & ஆஷா போஸ்லே) பாடலைச் சிரித்துக் கொண்டே கேட்டதும்,
 "சொந்தம் வந்தது வந்தது இந்தச் சுகமே மச்சான் தந்தது" https://youtu.be/Ftn1OmErJ2o சித்ரா பாடிய அந்த பாடலை காதல் காய்ச்சலில் உருகி உருகிக் கேட்டதும் மறக்க முடியுமா என்ன? 
"இந்தப் பூமியே எங்க சாமி அம்மா" https://youtu.be/mNc665Dof38 தைப்பொங்கலுக்குத் தைப்பொங்கல் நான் வானொலியில் ஒவ்வொரு ஆண்டும் கொடுப்பது. 
"பப்பாபப்பா" என்ற எள்ளலோடு "குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வெறும் பாறை மட்டும் தான் பாட்டுப் படிக்கும்" https://youtu.be/21hnuqQ0N0k கங்கை அமரன் குரலை மாற்றிக் கொண்டாட்டம் போட்ட பாட்டு, கூடவே எஸ்.பி.சைலஜாவும்.
இதில் டச்சு மொழியில் அமைந்த பாடலும் உண்டு, கதைக்களனில் ஜேர்மனியும் வருவதால். அந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்.
"புதுப்பாட்டு" திரைப்படத்தின் அத்தனை பாடல்களையும் கேட்டு ரசிக்க.
http://m.raaga.com/tamil/album/pudhu-paattu-t0000332

கலிகாலம், மற்றும் தம்பி பொண்டாட்டி படங்களில் கிரேசி மோகன் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தின் முக்கியமானதொரு இயக்குனர் சி.ஐ.ராஜேந்திரந்தின் கலை வடிவமைப்பைக் கவனித்திருக்கிறார். 
பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்குநராக அவதாரம் எடுத்த இந்த நான்கு திரைப்படங்கள் எந்தச் சூழலில் அவரால் இயக்க வேண்டிய நிலை வந்தது என்ற கேள்வியைக் கேட்க முடியும். ஆனால் அவர் அதற்கான பதிலை விட்டுச் சொன்றிருக்கிறாரா.... தெரியவில்லை.



Tuesday, August 9, 2016

திரையுலக ஆளுமை பஞ்சு அருணாசலம் அவர்கள் நினைவில்

நான் எடுத்த காரியம் எல்லாத்துலையும் வெற்றி அடைஞ்சேனா என்றால் இல்லை ஆனால் என்னால் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை - பஞ்சு அருணாசலம்

மதிப்புக்குரிய பஞ்சு அருணாசலம் அவர்கள் சில மணி நேரம் முன்னர் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சி கொண்டேன்.  தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாக, இயக்கு நராக விளங்கிய இவர் மனித உருக் கொண்ட சினிமாத் தொழிற்சாலை. கண்ணதாசனின் உதவியாளராக இருந்து சிறு முதலீட்டுப் படங்களில் ஆரம்பித்து பெரும் பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளிவர். இசைஞானி இளையராஜாவுக்கு அறிமுகம் கொடுத்தவர் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு மாபெரும் வர்த்தகச் சந்தையைக் காட்டியவர்.
 பஞ்சு அருணாசலம் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்குக் கடந்த மூன்று மாதங்களாக பேஸ்புக் வழியான நட்புப் பாலம் கிட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த உறவுப் பாலத்தை ஏற்படுத்தியது இந்தப் பதிவு

பூப்போல பூப்போல பிறக்கும் பால் பால் போல சிரிக்கும் 👼🏻 பஞ்சு அருணாசலம் தொடர் 

ஆனந்த விகடனில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் அவர்கள் தன் திரையனுபவங்களைத் திரட்டி அட்டகாசமான தொடர் எழுதி வருகிறார்.

திரையுலகில் சாதனை படைத்த இம்மாதிரியான மூத்தோர்களின் அனுபவங்களைப் படிப்பதே சிறப்பு. இந்தப் பணியைப் பத்திரிகைகள் அவ்வப்போது செய்து வந்தாலும் பலரை அவர்கள் இந்த முயற்சியில் இறக்கவில்லை. அதனால் வானொலிப் பேட்டி வழியாக "ஆபாவாணன்" உள்ளிட்டவர்களின் நீண்ட தொடர் பேட்டிகளை எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
பத்திரிகைத் தொடரில் குறித்த ஆளுமை பரவலான வெகுஜன வட்டத்துக்கு எழுதும் போது சுவாரஸ்யம் மிக்கதாக அமைய வேண்டும். முன்னர் சினிமா எக்ஸ்பிரஸில் இயக்குநர் விக்ரமன் எழுதி வந்த "நான் பேச நினைப்பதெல்லாம்" அவ்வகையினதே.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் கே.பாக்யராஜ் குமுதத்தில் தன் அனுபவத் தொடர் எழுத வந்தபோது ஆவலாக இருந்த எனக்குப் பெரும் ஏமாற்றம். வழவ்வழ கொழ கொழ வென்று இழுத்துத் தள்ளிவிட்டார். அந்தத் தொடரும் மேற்கொண்டு நகராமல் சிகப்பு ரோஜாக்களோடு பொத்தொன்று நின்று விட்டது.
குங்குமத்தில் இயக்குநர் மனோ பாலாவின் அனுபவத் தொடரும் ரசிக்க வைத்துச் சலிக்க வைத்தது பின்னர்.
இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் எழுதிய "நெஞ்சம் நிறைந்த நினைவுகள்" நூலை இந்த ஆண்டு புத்தகக் கொள்வனவுப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.

அந்த வகையில் பஞ்சு அருணாசலம் எழுதும் தொடர் வெகு நேர்த்தியும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதற்குத் தொகுப்பாசிரியரும் காரணமாக இருக்கலாம்.

இதன் வழியாகவே "நானும் ஒரு பெண்" என்ற திரைப்படத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா பாடும் "பூப்போல பூப்போல பிறக்கும்" பாடலை எழுதியது பஞ்சு அருணாசலம் என்று தெரிய வந்தது.
கடந்த வாரம் இந்தப் பாடலின் ஒரு சில வரிகளை ஒலிபரப்பி மேற்கொண்டு தொடர முடியாமல் நேயர் அழைப்பு வந்ததால் முழுமையாக நான் இதைக் கொடுக்கவில்லை. அதற்கு நேயர்களின் செல்லக் கோபத்துக்கு ஆளானேன்.
இசை மேதை சுதர்சனம் அவர்களின் நட்சத்திரப் பாடல் இது.
"நானும் ஒரு பெண்" படத்தை லைக்கா கைங்கரியத்தில் வார இறுதியில் கொஞ்ச நேரம் பார்த்தேன். ஏவிஎம் நிறுவனம் இன்னொரு உப நிறுவனமான "முருகன் பிக்சர்ஸ்" வழியாகத் திரையிலும், நிஜத்திலும் ஜோடி கட்டிய எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரோடு எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, ஏவிஎம் ராஜன் நடித்தது. இதில் நடித்து நிஜத்திலும் ஜோடியான இன்னொரு ஜோடி ஏவிஎம் ராஜன், புஷ்பலதா.

படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் பின்னணி இசையில் பின்னி எடுத்து விட்டார் ஆர்.சுதர்சனம். அதை அனுபவிக்க

இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் பாடல் பிறந்த கதையையும் சொல்கிறார்.

பூப்போல பூப்போல பிறக்கும் பாடலை ரசிக்க

தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதை வசனகர்த்தா பஞ்சு அருணாசலம் குறித்து நான்கு வருடங்களாக நான் ட்விட்டரில் பகிர்ந்ததில் தேர்ந்தெடுத்தவை இவை : 


ராஜாவை நான் அறிமுகப்படுத்தியது தெய்வ சங்கல்பம், தன்னை உயர்த்திக்கொண்டது தொழில் பக்தியும் கடின உழைப்பும் - பஞ்சு அருணாசலம்
#மனதோடு மனோ

ராஜாவை இசையமைப்பாளராக ஆக்க முன்னரேயே 600 படங்களில் பல்வேறு பணிகளில் பணியாற்றியிருக்கிறார் பஞ்சு அருணாசலம் #நிறைகுடம்

தன் சபா மேடையில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலை பாலமுரளிகிருஷ்ணா பாடுவதே அதன் பெருமை கூறும் - பஞ்சு அருணாசலம்

விஜய் பாஸ்கர் நல்லவர் ஆனால் வேறு சில இசையமைப்பாளர்கள் ராஜாவை என் தயாரிப்பில் போடவேண்டாம் அதிஷ்டமில்லாதவர் என்றார்கள் - பஞ்சு அருணாசலம்

அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலுக்கு ராஜா கொடுத்த ஆர்க்கஸ்ட்ரேஷன் பிரமாண்டமானது அதைப்பலர் பின்னாளில் பயன்படுத்தினார்கள் - பஞ்சு அருணாசலம்

ராஜாவை சந்தித்தநாளில் போட்ட மெட்டுக்களில்ஒன்று "வாங்கோண்ணா" இன்னொன்று க்ளாசிக்கல் அதை பாலாஜி பின்னாளில்பயன்படுத்தினார் - பஞ்சு அருணாசலம்

ஆரம்பகால இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்குப் பஞ்சு அருணாசலம் வரிகள் தான் நல்ல பொருத்தம்  #அழகு தமிழ்

பஞ்சு அருணாசலம், நீங்களும் கடவுளாக இருந்துவிட்டுப் போங்கள் => தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ? அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்

பஞ்சு அருணாசலம் குறித்த ஆவணப்படம் 
காலத்தினால் செய்த நன்றி, வாழ்க
@Dhananjayang

பஞ்சு அருணாசலம் விகடனில் எழுதிய தொடர் ஒரு பொக்கிஷம் இன்னும் பல வாரங்கள் கடக்க வேண்டிய அவரின் பொருள் பொதிந்த அனுபவங்களும் தொலைந்தது :-((

புகைப்படம் நன்றி : தமிழ் இந்து

Wednesday, August 3, 2016

ஆடிப்பெருக்கே வா வா வா

🌷🙏 அன்னையின் அருளே வா வா வா 🙏🌷
🍁🍁🍁ஆடிப்பெருக்கே வா வா வா 🍁🍁🍁

அன்னையின் அருளே வா வா வா
ஆடிப்பெருக்கே வா வா வா

பொன்னிப் புனலே வா வா வா
பொங்கும் பாலே வா வா வா
அன்னையின் அருளே வா வா வா

குடகில் ஊற்று கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து
அன்னையின் அருளே வா வா வா

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
தேனாய்ப் பெருகும் தமிழே வா
திருமால் தனைக்கே மாலையாகி
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே 
அன்னையின் அருளே வா வா வா

கட்டிக்கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை நயமும் நீ
முத்துத்தாண்டவர் பாடலிலே
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணைக் காவேரி
வள நாடாக்கும் தாயே நீ
வாழிய வாழிய பல்லாண்டு

https://www.youtube.com/shared?ci=fsuj4DHNxxo

பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர் : டாக்டர் சீர்காழி எம்.கோவிந்தராஜன்
இசை : ஏ.எம்.ராஜா
படம்: ஆடிப் பெருக்கு


Wednesday, July 20, 2016

இசைஞானி இளையராஜாவின் "அம்மன் கோவில் திருவிழா"

"வாசமுள்ள வெட்டி வேரு வந்து விளையாடுதடி ஒரு நேசமுள்ள மல்லியப்பு கொஞ்சி மணம் வீசுதடி" என்ற எடுவையோடு தொடங்கி "மாஞ்சோலைக் கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு" https://youtu.be/ALlf2S4qYnM இசை சேர்த்துப் பாடுகிறார் இளையராஜா. பாடலாசிரியர் நா.காமராசனின் இனிமை மிகு வரிகளோடமைந்த இந்தப் பாடல் இசைஞானி இளையராஜா இசைத்துப் பாடிய பாடல்களில் தவிர்க்க முடியததொன்று. அவர் குரலில் அமைந்த பாடல்களைத் தேடி நுகரும் இசை ரசிகர்கள் கண்டிப்பாகத் தவற விடமாட்டார்கள். இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் 25 வருடங்களுக்கு முன் வெளி வந்த "அம்மன் கோவில் திருவிழா".

எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவைக் குதூகலப் படங்களில் இருந்து பக்திப் படங்களுக்குத் தாவி தொண்ணூறுகளில் ஆரம்பமெல்லாம் வசூல் மழை பொழிய வெற்றிக் கொடி நாட்டியவர் இயக்குநர் இராம.நாராயணன் இதுவே அவரின் கலையுலகத்தின் இறுதிக்கால வெற்றியை நிர்ணயித்தது. 
"வண்ண விழியழகி வாசக் குழலகி மதுரை மீனாட்சி தான்" என்று சித்ரா பாட சங்கர் - கணேஷ் இசையில் தியேட்டரே சாமி ஆடிய அதிரி புதிரி வெற்றிப் படமும் "ஆடி வெள்ளி" படமும் அப்படியொன்று.
புலியைப் பார்த்துச் சூடு போட்ட கதையாக ஆடி வெள்ளி படத்தின் நகலாக, பிரபல கதாசிரியர் கலைஞானத்தின் கதையில் உருவானது "அம்மன் கோவில் திருவிழா". தேவரின் ஆசி பெற்ற ஆடி வெள்ளி யானையும், அப்போதெல்லாம் குரங்கு, யானை போன்ற மிருகங்கள் ஹீரோ வேஷம் கட்டிய படங்களில் துணை நாயகனாக நடித்த நிழல்கள் ரவியும் தான் முதலீடு. தொண்ணூறுகளின் ஆரம்பத்த்தின் வெற்றி நாயகி கனகா, கவுண்டமணி & செந்தில் என்று பக்க பலம் சேர்க்க, இளையராஜா கொடுத்த இனிய பாடல்களுக்காக
கடந்த வாரம் ஜெயா டிவியில் காண்பித்த படத்தைப் பார்த்து நொந்தே போனேன். ஒரு பெரிய வெற்றிப்படத்துக்கான பாடல்கள், பின்னணி இசஒ எல்லாம் அட்டகாசமாக இருக்க, ஒரு நொட்டைக் கதை, இதுவரை பார்த்தே இராத கொடுமையான கவுண்டமணி & செந்தில் அறுவை நகைச்சுவை என்று படத்தைப் புரட்டிப் போட்டு விட்டது. பாவம் ஆடி வெள்ளி யானையைத் தண்ணீர் பிடிக்க, காதல் கடிதம் கொடுக்க எல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பார் இயக்குநர். மேனகா காந்தி கண்ணில் சிக்கியிருந்தால் மாறு கால் மாறு கை வாங்கியிருப்பார். இதே மாதிரி கிழக்குச் சீமையிலே வெற்றியை மனதில் வைத்து புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தையும் உருவாக்கி இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நாசம் பண்ணியிருந்தார் இயக்குநர் என்.கே.விஸ்வநாதன்.

"தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்வோம்" https://youtu.be/R3VtLO9-fiY என்று இளையராஜாவே எழுதிப் பாடிய பாடலோடு தொடங்குகிறது அம்மன் கோவில் திருவிழா. இந்தப் பாடல் கண்டிப்பாக கும்பக்கரை தங்கய்யா படத்தில் இடம் பிடித்த "என்னை ஒருவன் பாடச் சொன்னான்" பாடல் போன்றதொரு அமைதியான தெய்வீகப் பாட்டு இது.

"நான் சொன்னால் கேளம்மா என் மேல் கோபமா" பாடல் அந்தக் காலத்து சென்னை வானொலி உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் ஓயாது ஒலித்த பாட்டு. முதலில் இளையராஜா பாடிய தனிப்பாட்டு https://youtu.be/etXSDr9HC1E
இன்னொன்று மனோவும் ஜானகியும் பாடும் ஜோடிப் பாட்டு https://youtu.be/DOpWsk1mKTg
தவிர எஸ்.ஜானகி பாடும் "நான் சொன்னால் கேளய்யா" https://youtu.be/pui31o7YixY சோக மெட்டில் தனிப்பாட்டு என்று கவிஞர் வாலி வரிகளில் இருக்கிறது.

"மதுர ஒயிலாட்டம் தான்" மலேசியா வாசுதேவன் அண்ணரின் தெம்மாங்குத் துள்ளிசையோடு சித்ராவும் பாடிக் கலக்கியிருக்கிறார். இந்தப் பாடல் வரிகளைப் புனைந்தவர் பிறைசூடன்.
இதே ஜோடி பாடும் ஆக்ரோஷமான இறை பக்திப் பாடல் "தேச முத்து மாரியம்மா" பாடல் இந்தக் காலகட்டத்தில் கரகாட்டக்காரனில் வந்த "மாரியம்மா மாரியம்மா",உத்தம ராசா வின் "நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே" போன்ற பாடல்களுக்கு ஒப்பான கனதியான இசையோடு படத்தின் இறுதிக் காட்சிக்குக் கை கொடுத்துத் தாங்குவது.

"அம்மன் கோவில் திருவிழா" படத்தை இசைஞானி இளையராஜா இசைக்காகப் பார்க்கத் தொடங்கிய போது படத்தின் ஆரம்பத்தில் "தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்வோம்" பாடலைப் படமாக்கிய விதத்தில் பெரு நம்பிக்கை விளைவித்தது. ஆனால் மெல்ல மெல்ல நீர்த்துப் போகும் திரைக்கதையோட்டத்தில் இளையராஜாவின் அட்டகாசமான பின்னணி இசையை, பாடல்களையுமே அனுபவிக்க வேண்டி படத்தை நெட்டித் தள்ள வேண்டியிருந்தது.
இந்தப் படத்துக்கான இசை இன்னோர் பயனுள்ள பயிருக்குப் போய்ச் சேர வேண்டிய பாசனம்.

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ராகா இசைத் தளத்தில் கேட்க
http://m.raaga.com/tamil/album/Amman-Kovil-Thiruvizha-songs-t0002636

Wednesday, July 13, 2016

பாடலாசிரியர் வைரமுத்துவும் எண்பதுகளின் இசையமைப்பாளர்களும்


இன்று கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த நாளுக்குச் சிறப்புத் தீனியாக எதைக் கொடுக்கலாம் என்று நினைத்த போது, அவர் பாடலாசிரியராகப் பரிணமித்த தலைப்புகள் பல்வேறு அம்சங்களாக மனதில் உதித்தன. அவற்றில் ஒன்றைத் தான் இன்றைய காலை ரயில் பயணத்தில் எழுத ஆரம்பிக்கிறேன். 

கவிஞர் வைரமுத்து "நிழல்கள்" திரைப்படத்தின் வழியாகப் பாடலாசிரியராக அறிமுகமானதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவோடு அவர் கூட்டுச் சேர்ந்த திரைப்படங்களைத் தான் பரவலான இசை ரசிகர்கள் தம் ரசனைக் கூட்டில் சிலாகித்துப் பேசுவர். அதைத் தொடர்ந்து தொண்ணூறுகளில் இசைப்புயல் ரஹ்மான் காலத்திலும் வைரமுத்து - ரஹ்மான் கூட்டணி முத்திரை பதித்தது. என்னளவில் ரஹ்மான் பாடல்களுக்குச் சரியான கூட்டு வைரமுத்து ஒருவரே. சரி அதைப் பற்றிப் பேசி இங்கே பேச வந்ததை மறந்து போகாமல் மீண்டும் தலைப்புக்கு வருவோம் 😀
எண்பதுகளிலே வைரமுத்து கூட்டணி கட்டிய இசையமைப்பாளர்கள் இன்னும் நிறையப் பேர். இந்தப் பதிவை நீட்டினால் ஒரு புத்தகமே போடலாம். ஆனால் இங்கே நான் வெறும் கோடு தான் போடுகிறேன்.

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு நட்சத்திர இயக்குநர்களின் கூட்டணி அமைந்தது மிகப் பெரும் பலம். பாரதிராஜாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து கே.பாலசந்தரோடு வைரமுத்து கூட்டுச் சேர்ந்த படங்களின் பாடல்களும் தனித்துவமானவை. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனில் இருந்து பல்வேறு இசையமைப்பாளர்களோடு இந்த இருவரும் ஒரு சேரப் பணியாற்றியிருக்கிறார்கள்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "தண்ணீர் தண்ணீர்" திரைப்படம் தான் வைரமுத்து அவர் இசையில் முதலில் பாட்டெழுதிய படம். அதில் பி.சுசீலா பாடும் "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" https://youtu.be/XqLqdUMAPmA பாடல் இவரின் கவித்திறனை மெல்லிசை மன்னர் இசைத் தாலாட்டில் கொடுத்தது. 
கே.பாக்யராஜ் இயக்கத்தில் அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் வரும் "எண்ணி இருந்தது ஈடேற" https://youtu.be/0B4baN0uycE என்ற மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் ஜோடிப் பாட்டும் மெல்லிசை மன்னர், வைரமுத்து கூட்டணியில் அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய பாட்டு.

வி.எஸ்.நரசிம்மன் அட்டகாசமான இசைக் கலைஞர். இவரை இசையமைப்பாளராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற இளையராஜாவின் வேண்டுகோளை ஏற்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் "அச்சமில்லை அச்சமில்லை" படத்தில் இருந்து தொடர் வாய்ப்புகளைத் தான் இயக்கிய படங்களில் கொடுக்கிறார். "ஆவாரம் பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு" https://youtu.be/gvkrsRyr9oM பி.சுசீலா, எஸ்.பி.பி குரல்களிலும், "ஓடுகிற தண்ணீரில்" https://youtu.be/G6_EG-Vdes8 பி.சுசீலா குரலிலுமாக மறக்க முடியுமா இதையெல்லாம்?
கே.பாலசந்தர் வைரமுத்து கூட்டணி குறித்துத் தனியான பதிவைக் கொடுக்கும் போது இந்தப் பந்தியை நீட்டிக் கொள்கிறேன்
கே.பாலசந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இயக்கிய படமான "புதியவன்" படத்தில் வி.எஸ்.நரசிம்மன் மேற்கத்தேய இசையில் அத களம் பண்ணியிருப்பார். அதில் வரும் "தேன் மழையிலே" (எஸ்.பி.பி) "https://youtu.be/ROcjqJFZjGQ நானோ கண் பார்த்தேன்" (கே.ஜே.ஜேசுதாஸ்) https://youtu.be/YNIRvIRSnYI பாடல்களின் இசைக்கு இனிமை சேர்த்தன வைரமுத்துவின் வரிகள்.
வி.எஸ்.நரசிம்மனோடு நான் கண்ட பேட்டியில் மேலும் சில பாடல்கள் http://www.radiospathy.com/2012/02/blog-post_16.html

சின்னப்பூவே மெல்லப் பேசு படத்தில் ஆரம்பித்து புது வசந்தம் படத்தில் உச்சம் தொட்டது வரை தொடர்ந்து தன் படங்களுக்குத் தானே பாடல் வரிகளையும் எழுதினார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். எண்பதுகளில் எஸ்.ஏ.ராஜ்குமாரோடு கவிஞர் வைரமுத்து சேர்ந்த படம் என்று எனது சிற்றறிவுக்கு எட்டியவரை ஒரு படமுமில்லை.

ஆபாவாணனின் அறிமுகத்தில் தமிழுக்கு வந்த   மனோஜ் கியான் இரட்டையர்கள் வேறு இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்த போது வைரமுத்துவின் பங்களிப்பும் இருந்தது.
"அழகான புள்ளி மானே" https://youtu.be/cO_FGYXXKPs என்ற "மேகம் கருத்திருக்கு" பாடலை மறக்க முடியுமா?
அது போல் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" https://youtu.be/GyJlJXiS8u4 "வெளிச்சம்" படப் பாடலும் வைரமுத்து - மனோஜ் & கியான் கூட்டணியின் சொல்லத் தகு பாடல்கள்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடல் குறித்த என் ரசனைப் பகிர்வு
http://www.radiospathy.com/2014/09/blog-post_28.html

"பருவம் கனிந்து வந்த பாவை வருக" https://youtu.be/6jU7EKqpd7k என்ற அழகான பாடல் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்களுக்கு இனிப்பானது. அந்தப் பாடல் "யாரோ எழுதிய கவிதை" திரைப்படத்தில் இடம்பெற்றது. இயக்குநர் ஶ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தில் ஆனந்த் சங்கர் என்ற வட இந்திய இசை மேதையை இசையமைப்பாளர் ஆக்கினார். வைரமுத்துவுக்கும் இந்தப் பாடல் சிறப்பாக வாய்த்தது.

ஹிந்தித் திரையுலகின் உச்ச இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் தமிழில் கொடுத்த படங்களில் ஏவிஎம் இன் "உலகம் பிறந்தது எனக்காக" திரைப்படமும் ஒன்று. அந்தப் படத்தின் இணை இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவில் ஒலித்த "அடி மாங்காட்டு மயிலே நில் நில் நில்" https://youtu.be/d7Bmd57-rz4 எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் கை உயர்த்துங்கள் பார்க்கலாம் 😀

பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் கருத்து முறிவு ஏற்பட்ட காலங்களில் அவர் வைரமுத்துவை மட்டும் தவிர்க்காமல் வேறு இசையமைப்பாளர்களோடு கூட்டுச் சேர்வார். அப்படியொருவர் இசையமைப்பாளர் ஹம்சலேகா. 
கொடி பறக்குது பாடல்கள் வைரமுத்துவின் கை வண்ணமே. ஆனால் கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் சூப்பர் டூப்பர் படமான "பருவ ராகம்" என்ற தமிழ் மொழி மாற்றுப் படத்தில் ஹம்சலேகா இசையில் வைரமுத்து கொடுத்த "காதல் இல்லை என்று சொன்னால்" https://youtu.be/B01V0Gr2_2s பாடல் தான் எனக்கு முதல் தேர்வு.

பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் முதலில் இயக்கிய மண்ணுக்குள் வைரம் படத்தின் முகப்புப் பாடலும் வைரமுத்துவின் கை வண்ணமே. அந்தப் படத்தின் இசை தேவேந்திரன். ஆனால் தேவேந்திரனை உலகறியச் செய்தது பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது. இதில் வைரமுத்துவின் முத்தான பாடல்களில் எதை விடுவது? ஆனால் என் நெஞ்சுக்கு நெருக்கமானது புத்தம் புது ஓலை வரும் 

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" https://youtu.be/AHF0x7H5TaU நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம் பிடித்தது. பாலைவனச் சோலை படத்தில் எல்லாப் பாடல்களும், குறிப்பாக "மேகமே மேகமே"  https://youtu.be/U2_24GPjhAc என்று மீண்டும் வாணி ஜெயராமுக்குக் கதையாழம், கருத்தாழம் மிக்க பாட்டு ஒன்று. வைரமுத்து எழுத சங்கர் - கணேஷ் இரட்டையர்களின் கூட்டணி இன்னொரு பக்கம் வெற்றி நடை போட்டது.  மேகமே மேகமே பாடல் தான் வாணி ஜெயராமுக்கு முதலில் வைரமுத்து எழுதியது. குறிப்பாக ஏவிஎம் இன் தயாரிப்பில் விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் தொடர்ந்து வந்த திருமதி ஒரு வெகுமதி ஆகிய படங்களோடு "இதயத் தாமரை" படத்தில் வந்த "ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்" https://youtu.be/q7pOFn8s4zc
"யாரோடு யாரென்ற கேள்வி  https://youtu.be/L_xksM-sVhM ஆகிய பாடல்கள் முத்திரைப் பாடல்களாக அமைந்தன.

"பூப் பூத்ததை யார் பார்த்தது"  https://youtu.be/X_4Lf7oPObk கதாநாயகன் திரைப்படப் பாடல் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையில் மலர்ந்தாலும் அதன் மூல வடிவம் ஷியாம் இசையில் நாடோடிக் காத்து மலையாளத் திரைப்படத்தில் இடம் பிடித்தது.
எண்பதுகளில் இசைஞானி இளையராஜாவுடன் இசையில் இணைந்திருக்காத காலங்களில் வைரமுத்துவின் பாடல்களைத் தாங்கிப் பிடித்ததில் ஏவிஎம் நிறுவனம், சங்கர் - கணேஷ் வரிசையில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் கூட முக்கியமானவர். முன்னர் நான் சந்திரபோஸ் குறித்துத் தந்த இடுகையில் வைரமுத்துவின் பாடல்கள் குறிப்பாக மனிதன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்டவையைக் குறிப்பிட்டேன்.
"சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்" https://youtu.be/MykxW4k9shw என்று வைரமுத்து வரிகளுக்கு அவரே குரல் கொடுக்க எஸ்பிபி பாடிய பாடல் இன்று வரை வைரமுத்துவுக்கு ஒரு புது அனுபவமாகக் கொள்ளக் கூடியது.
தாய் மேல் ஆணை படத்த்தில் வரும் "ஹேய் மல்லிகைப்பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு" https://youtu.be/idY0WOgkeRM என்ற வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் கொடுத்த பாடல் தான் இந்தப் பதிவை எழுத எனக்கு முக்கிய உந்துதலாக இருந்தது.
அவ்வளவுக்குப் பிடிக்கும் எனக்கு இந்தப் பாடல்.
பாடலாசிரியர் எண்பதுகளில் இணைந்து பங்கேற்ற இசையமைப்பாளர் இன்னுமுண்டு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களோடு விரிவாக இந்தப் பதிவு நீளும்.