Pages

Monday, November 21, 2022

கதை வசனகர்த்தா "ஆரூர்தாஸ்"

தமிழகத்தில் நான் முதன் முதலில் காலடி வைத்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவுறுகிறது. வேலை நிமித்தம் பெங்களூருக்கு வந்தவன், பெரியம்மா வீட்டையும் (!) எட்டிப் பார்ப்போம் என்று சென்னைக்கு வந்தேன்.

தேவி பாரடைஸ் சென்று “கன்னத்தில் முத்தமிட்டால்" பார்த்து விட்டுத் திரும்பியவன் முன்னால் ஒரு சிறு புத்தக அங்காடி கண்ணில் படவும், அங்கே தொங்கியிருந்ததில் ஒன்றை எடுத்தேன்.
அதுதான், ஆரூர்தாஸ் எழுதிய “சினிமா : நிஜமும் நிழலும்".
ஆகவே பெரியம்மா வீட்டுப் பரிசாக இன்னும் ஞாபகத்தில் நினைப்பூட்டிக் கொண்டிருப்பது இந்த நூல் தான். இதுவரை ஆரூர்தாஸ் அவர்களைச் சந்திக்கவே வாய்ப்பில்லாமல் போனவனுக்கு, அவரின் கையெழுத்தும் பொறிக்கப்பட்டதைப் பெற்றதைத் தான் ஒரு அதிசயமாக நினைத்துக் கொள்கிறேன்.

“சிற்றுளியும் மலையைப் பிளக்கும் !
சிறிய படமும் வசூலை அளக்கும்”

“விதி” படத்தின் விளம்பர வாசகம் கூட ஆரூர்தாஸின் கைவண்ணமே. அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, கலைஞர் கருணாநிதியின் “பராசக்தி” படத்தின் நீதிமன்றக் காட்சிகள் எவ்வளவு தூரம் ரசிகர் மனதில் கோலோச்சினவோ அதுபோலவே, பராசக்திக்குப் பின் 32 ஆண்டுகளுக்குப் பிறகு “விதி” படத்தின் நீதிமன்றக் காட்சிகள்
ஆரூர்தாஸின் சிற்றுளியால் செதுக்க, பெரும் வசூல் மழையைக் கொட்டிய வெற்றிச் சித்திரம் ஆனது.
அந்தக் காலத்தில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் வசன ஒலிப்பேழைகளுக்கு நிகராகச் சக்கை போடு போட்டது “விதி” படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்களோடு மிளிர்ந்த ஒலிச்சித்திரம். இன்றும் நமக்கெல்லாம் அந்தப் படத்தின் வசனங்கள் மனப்பாடம் ஆகுமளவுக்குப் பதியம் போட்டது.

மொழி மாற்றுப் படங்களுக்கு வசனமெழுதித் தொடங்கிய இவரின் கலைப்பயணத்தில் தமிழில் நேரடி கதை, வசனகர்த்தா என்ற அந்தஸ்தைக் கொடுத்தது தேவரின் “வாழ வைத்த தெய்வம்”.
தொடர்ந்து நீண்ட நெடுங்காலம் அவரைக் கதை வசனகர்த்தாவாக வாழ வைத்தது. தேவரின் அன்புக்குரியவராக அங்கே தொடர்ந்தும் அவரின் பேனா இயங்கியது.

பின்னாளில் இது போலவே “விதி” பட வெற்றி தொடர்ந்தும் கே.பாலாஜியின் தயாரிப்பில் உருவான படங்களில் இவரை எழுத வைத்துச் சிறப்பித்தது.

கவியரசு கண்ணதாசனால் “பாசமலர்கள்” என்று சூட்டப்பட்டு, பீம்சிங்கால் “பாசமலர்” ஆக்கப்பட்டதில் வசனம் எழுதிய ஆரூர்தாஸ் அந்தப் படம் பெற்ற பெரும் புகழில் பங்கு போட்டுக் கொண்டார்.

“என் படங்கள்லே டைரக்டர் மாறுவாரு, மத்தவங்கள்ளாம் மாறுவாங்க, ஆனா ரெண்டே ரெழ்ண்டு பேர் மட்டும் எப்பவும் மாற மாட்டாங்க, ஒருத்தர் சிவாஜி கணேசன் இன்னொருத்தர் ஆரூர்தாஸ்” என்று சொன்னவர்கள் தயாரிப்பாளர்கள் சந்தானம் மற்றும் வி.சி.சுப்புராமன். அதன்படியே பாசமலர், அன்னை இல்லம், அன்பளிப்பு என்று சந்தானம் தயாரித்தவைகளிலும், வி.சி.சுப்புராமனின் பார் மகளே பார், தேனும் பாலும் படங்களிலும் சிவாஜியும்,ஆரூர்தாசும் தான்.
ஜெமினி கணேசனுக்கு அடையாளத்தை நிறுவிய “வாழ வைத்த தெய்வம்” வசனகர்த்தாவை சிவாஜிக்கு ஜெமினியே அறிமுகப்படுத்தியதால் தான் 29 படங்களில் எழுதியிருக்கிறேன் என்று நன்றி பாராட்டியிருக்கிறார் ஆரூதாஸ்.

இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்காக, தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், அன்பே வா, பெற்றால் தான் பிள்ளையா, தனிப்பிறவி உட்பட ஒரு தொகைப் படங்களிலுமாக இரண்டு முன்னணி நட்சத்திரங்களுக்குச் சமகாலத்தில் வசனகர்த்தாவாகப் பரபரப்பாக இயங்கியவர்.

அதுபோலவே தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் என்று முன்னணி நிறுவனங்களின் முக்கிய வசனகர்த்தா. சிவாஜி பிலிம்ஸின் முதல் வித்தான “புதிய பறவை” படத்துக்கும் சிவாஜியே விரும்பி அமர்த்தப்பட்டவர், கடைசிக் காட்சியில்
“பெண்மையே நீ வாழ்க!
உள்ளமே உனக்கு நன்றி”
என்று முத்தாய்ப்பாக முடிக்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் காட்சியமைக்க வைத்தவர் ஆரூர்தாஸ்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட “பூ ஒன்று புயலானது” (விஜயசாந்தியை உச்சாணிக் கொம்பில் ஏற்றிய படம்) படத்தில் ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் ஆனந்த விகடனில் வாரா வாரம் பிரசுரமானது.

“நாட்டிய தாரா” மொழி மாற்றுப் படத்தோடு தொடங்கியவருக்கு அவரின் இன்னொரு சுற்றாக மொழிமாற்றுப் படங்கள் வெற்றியைக் குவித்தன. மை டியர் குட்டிச்சாத்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ், இதுதாண்டா போலீஸ், அம்மன் உள்ளிட்ட படங்களின் வெற்றியில் ஆரூர்தாசின் வசனமும் முக்கிய நாயகன்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றுப் படங்கள் கொட்டிக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் மருதபரணி இன்னொரு பக்கம் ஆரூர்தாஸ் என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது.

Touring Talkies இல் அடிக்கடி வந்த கேள்விகளில் ஒன்று சித்ரா சாரை  ஆரூர்தாஸைப் பேட்டி எடுக்கும் படி கேட்பார்கள். முன்பு கொரோனா, பின்னர் சில மாதங்களுக்கு முன் ஆரூர்தாஸின் மனைவியார் இறந்த காரணத்தால் அந்தப் பேட்டி நமக்கெல்லாம் கிடைக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது ஆரூர்தாஸ் என்ற திரையுலக வசன “கர்த்தா”வின் நினைவுகளை அவரின் நீண்ட நெடிய பேட்டியாகப் பதியாமலேயே போய் விட்டது.

ஆரூர்தாஸ் என்ற கதை வசனகர்த்தா,
தமிழ்த் திரையுலகம் செழிப்பான உரையாடல் வளத்தோடு வாழ்ந்தது என்பதன் சாட்சியம், ஏசுவின் திருவடிகளைச் சேர்ந்தார்.

கானா பிரபா
21.11.2022

உசாத்துணை நன்றி : சினிமா : நிஜமும் நிழலும் - ஆரூர்தாஸ்


Monday, November 14, 2022

அப்பிடிப் பாக்குறதுன்னா வேணாம் 💜❤️


சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்

இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே

பற்றி இழுத்தென்னை அள்ளும்

கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே....

அடித்துப் போட்டது போலதொரு களைப்பில் அமர்ந்தவன் இந்தப் பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று தோன்ற கடந்த 1 மணி நேரமாகச் சுழற்றிச் சுழற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

சிலர் சாப்பிடும் போது பார்த்திருப்பீர்கள் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட கறிகளை ஒவ்வொன்றாக நோகாமல் மெல்ல எடுத்துச் சாதத்தோடு கலந்து ஆற அமரச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். கருமமே கண்ணாயினர் என்பது போல வேறெங்கும் கவனமில்லாது அன்னப் படையலை உருசி காண்பதே அவரின் சிந்தனையில் இருக்கும். சாப்பாடு ஒன்றே தான் ஆனால் அதை மள மளவென்று அள்ளி வாயில் திணித்து, கோப்பையை வழித்துத் துடைத்து ஐந்து நிமிடத்துக்குள் தமது "வேலை" முடிந்ததே என்று போய்க் கொண்டிருப்பர்.

அது போலத் தான் ஒரு பாடலை அனுபவித்துக் கேட்பதும்.

ஐந்து நிமிடப் பாடல் தான் ஆனால் அந்தப் பாடலின் மெட்டமைப்பு, வரிகளின் பொருத்தப்பாடு, இவற்றையெல்லாம் சுவை கூட்டிச் செவிக் குணவாகத் தரும் இசைக் கோவை இவற்றையெல்லாம் நேசித்துக் கேட்கும் போது அந்தப் பாடல் பதிலுக்கு நம்மிடம் காட்டும் நேசம் இருக்கிறதே ஆஹா.

அப்படி ஒரு பாடலோடு தான் இன்று வந்திருக்கிறேன்.

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம் கண்ணுல தாக்குறதுன்னா வேணாம்" இயக்குநர் பார்த்திபன் சில வருடங்களுக்கு முன் இந்தப் பாடல் பிறந்த கதையை எள்ளுப் போலச் சொல்லியிருந்தார்.

ஒரு சம்பாஷணைக்குண்டான இந்த வரிகளை இசைஞானி இளையராஜா ஆரம்ப வரிகளாக்கிச் சுடச் சுட மெட்டமைத்துப் பிரமிக்க வைத்ததாகப் பார்த்திபன் கூற்று.

இனி நான் முன் சொன்ன விடயத்துக்கு வருகிறேன்.

முதலில் இதைக் கேளுங்கள்

https://soundcloud.com/ashaheer/appadi-parkarathu

இந்த இசைக் குளிகை பாடலின் இரண்டாவது சரணத்தில் பிரவாகமாகப் பாயும். கேட்கும் போது கடல் குளியலில் கைகளைச் சுதந்தரமாக அகல விரித்து நீர்வலையை அலம்பும் போது பிறக்கும் இன்பம் வருகிறதா இல்லையா.

சரி இனி இந்தப் பாடலின் ஆரம்ப இசைக்குப் போவோம்.

https://m.soundcloud.com/ravinat14/appadi?in=ravinat14/sets/ring-tones-raja

இளமைத் துள்ளலாய்க் குதிக்கும் இந்த ஆரம்ப இசையைப் பிரசவித்த போது இசைஞானிக்கு 59 வயது. எண்பதுகளில் வந்த பாடல்களையே மீளவும் கொடுத்துக் கொண்டிருக்கலாம் என்றொரு கருத்தைக் கொண்டிருப்போரின் எண்ணத்தையெல்லாம் இது மாதிரியான புத்திசை கரைத்து விடும். இந்தப் பாடல் வந்த போது 20 வருடங்களுக்குப் பின் இன்று போல் கரைந்து போய் விடுவேன் என்று நினைத்தே இருக்கவில்லை.காலம் போன பின் தான் இன்னும் இனிக்கிறது.

தன் வாழ்நாள் பூராகவும் புதிது புதிதாய் தேடிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கெல்லாம் தான் கட்டிக் காத்த ரசிகச் சூழலுக்குள் (comfort zone) நின்று கொண்டு படைக்க முடியாது.

இது இசைக்கு மட்டுமல்ல எல்லா விதமான வினைத் திறனிலும் உச்சத்தைத் தேடிக் கொண்டிருப்போருக்கான அடிப்படைப் பண்பு. அதுதான் அவரை மாண்பு மிக்கோர் ஆக உயர்த்தும்.

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம்" 

https://soundcloud.com/sridharravi/appadi-parkirthenna-ivan

மாதங்கியின் மயக்கும் குரலோடு இடை இசையில் ஜதி ஒன்று சொல்லி அவரை முழுமையாகப் பாட விட்டு இரண்டாவது சரணத்தோடு இணைந்து கொள்வார் உன்னிகிருஷ்ணன்.

இசைஞானி இளையராஜாவின் இசை மேதமையால் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றிருக்கும் இயக்குநர் குழாம் ஒரு புறமிருக்க, அவரை உள்ளார்ந்த நேசத்தோடு காதலித்துப் போற்றும்

மிகச் சில இயக்குநர்களில் பார்த்திபனும் ஒருவர்.

பொண்டாட்டி தேவை படத்தில் இருந்து இளையராஜாவோடு பார்த்திபன் கூட்டில் இசைப் படையல்கள் வாய்த்ததும் அவை பாடல்களிலும் குறை வைக்காதவை என்றாலும் பார்த்திபனின் குருநாதர்கள் ராஜாவோடு பணியாற்றிய போது கிட்டிய பரவலான வெகுஜன அந்தஸ்த்தைக் கொடுக்கக் கூடிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

பாடகி சுதா ரகு நாதன் தமிழ்த் திரையிசையில் பாட வந்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் “நிறைந்திருக்கிறது"

“எனை என்ன செய்தாய் வேங்குழலே” வாலியின் கை வண்ணம்,

https://www.youtube.com/watch?v=WQMs5enVRTs

“எனக்கிணை யார் இங்கே இசையில்" 

https://www.youtube.com/watch?v=Hc5uqId_APw

“கண்ணன் நீயென் இசை நாத ஓவியம்"

https://www.youtube.com/watch?v=0jchEUXPTw0

கவிஞர் முத்துலிங்கம் கணக்கில் இரண்டு என்று முத்தான மூன்று பாடல்களோடு, இசைஞானி இளையராஜா இசையில் இருபது வருடங்களுக்கு முன்னர் திரையிசையில் அறிமுகமானார் சாஸ்திரிய சங்கீதப் பாடகி சுதா ரகுநாதன்.

பின்னாளில் பார்த்திபனின் சிஷ்யர் கரு.பழனியப்பன் இயக்கிய “மந்திரப் புன்னகை” படத்தில் இன்னொரு தேமதுரைப் பாடல்

“என்ன குறையோ” என்று தொடங்கும் கண்ணன் பாடலையும் சுதா ரகுநாதன் பாடியளித்ததை ரசித்துப் பகிர்ந்துள்ளேன்.

http://www.radiospathy.com/2010/12/blog-post.html

இசைஞானி இளையராஜாவின் “இவன்" பாடல்களில் வாலி, முத்துலிங்கம், மேத்தா, இளையராஜா, பழநிபாரதி, கபிலன், நா.முத்துக்குமார் என்று பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் கவிஞர் குழாம் ஆகா.....

“அப்படி பாக்குறதுன்னா வேணா

கண் மேலே தாக்குறது வேணா

தத்தித் தாவுறதுன்னா னானா

தள்ளாடும் ஆசைகள் தானா”

தன் மேல் படரும் காதலன் கண்களைத் தவிர்ப்பதற்குத் தான் திரையிசை நாயகிகள் எத்தனை பாடல்களைப் பாடியிருப்பார்கள் இதற்கு முன்பும். அவை காலத்தால் அழியாதவை என்றால் இதுவும் தானே?

“வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே”

போலத் தன் பாட்டுகளில் இசையையும், வாழ்க்கையையும் பிணைத்துக் கவி பாடும் திறனாளர் பழநிபாரதி அவர்கள்.

அதனால் தான் கண்களை இசைத்தட்டாகச் சுழற்றி விடுகிறார்.

“இவன்” பார்வையை அவள் தடுக்க, இவனோ அந்தப் பார்வையின் தேடலில் விளைந்ததை உச்சபட்ச உவமைகளோடு ஒப்புவிக்கிறான்.

அந்தப் பேரின்ப வெள்ளத்தில் விழுந்தவர்கள் நாமும் தான்.

தீக்க்ஷண்யாவின் கண்களில் “இவன்” விழுந்தான்.

“பேரின்ப வெள்ளத்தில்

நான் மூழ்கிப் போனேனே.....”

இந்தப் பேரின்ப இசையில் “இவன்” விழுந்தேன்”

"அப்படிப் பாக்குறதுன்னா வேணாம்" இன்று முழு நாளையும் என்னை ஆக்கிரமித்திருக்கும் இசை விருந்து.

ஆதி தாளம் போட்டு

எனை பாதியாக செய்து

தத்தளிக்க விட்டாயே


https://www.youtube.com/watch?v=Azodz4PitV8


கானா பிரபா


Thursday, November 10, 2022

காலங்கள்.. மழைக்காலங்கள்...❤️


தேன் குடித்த வண்டுக்குத் தேன் தான் கள்ளு. அது போல இந்தப் பாடலைக் கேட்டால் இசைத்தேன் இன்பதேன். அதுவே கள்(ளு) ஆகியும் விடுமல்லவா? 

தேன் குடித்த வண்டின் களிப்பு இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் எனக்கெழும். 

கவியரசர் கண்ணதாசனும் “காலங்கள் மழைக்காலங்கள்” பாடலில் “கள்” ஐப் பரவ விட்டிருக்கிறார். ஒவ்வொரு அடிகளும் கள்ளால் நிறைவுற்றிருக்கும்.

வெறும் “கள்” உண்ட மயக்கத்தை அனுபவித்ததில்லை, ஆனால் தாயகத்தில் இருந்த காலத்தில் அப்பம் செய்வதற்குக் கள்ளைப் பயன்படுத்தி மாவைப் புளிக்க வைக்கும் வழக்கம் இருந்ததால் அந்தக் கள் சுவை எப்படியோ ஒட்டிக் கொண்டு விட்டிருக்கலாம்.

“கள் பெற்ற பெருவாழ்வு” டாக்டர் மு.வரதராசனர் எழுதிய அந்தக் கட்டுரையில் “கள்” என்ற விகுதியின் பொருள் மயக்கத்தைப் பற்றி எழுதியிருப்பார். அந்தக் கட்டுரை நம் பள்ளிக்காலத்துத் தமிழ்ப் பாட நூலின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது.

“கள் பெற்ற பெருவாழ்வு” கட்டுரையைப் படிக்க

https://madhuramoli.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0.../

“கள்ளோ காவியமோ” என்ற நாவலைக் கூட டாக்டர் மு.வரதராசன் எழுதியளித்தும் உள்ளார்.

“காலங்கள் மழைக்காலங்கள்” பாடல் இடம் பிடித்த “இதயத்தில் ஓர் இடம்” படத்தில் ஜெயச்சந்திரனுக்கு ஒரு துள்ளிசை “காவேரி கங்கைக்கு மேலே”  https://www.youtube.com/watch?v=RUTVbpv2CWs  

இலங்கை வானொலியின் அந்தக் காலத்துப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்களில் ஒன்றாகிப் போன “மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்” https://www.youtube.com/watch?v=krYjIaZeT8c

ஜேசுதாஸ் குரலில் ஒலித்தது பலரின் மலரின் நினைவுகளில் கறுப்பு வெள்ளையாக நிழலாடும்.

இளையராஜா இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடவே இல்லை என்று அலும்பு பிடிப்பவர்களின் மூக்கை உடைக்க இதே படத்தில் அவரோடு  சந்திரன் பாடிய “மணப்பாறை சந்தையிலே” https://www.youtube.com/watch?v=Ew7N1LZYtd8 பாடலும் உண்டு.

மலேசியா வாசுதேவன் அவர்களின் தலை சிறந்த பத்துப் பாடல்களைக் கொடுக்கச் சொன்னால் இந்தப் பாடலை எப்படியாவது முதல் மூன்றுக்குள் நுழைத்து விடுவேன்.

“மணி முத்தங்கள்

நகை மின்னல்கள்

சிரிக்கின்ற பெண்கள் 

காவியங்கள்

மலர் மொட்டுக்கள்

இளஞ்சிட்டுக்கள்

அணைக்கின்ற ஆண்கள் 

ஓவியங்கள்

நேரங்கள் நதி ஓரங்கள்

ஆனந்த காலங்கள்”

என்று மனுஷர் உருகித் தத்தளிக்க, 

“எனை அள்ளுங்கள்

கதை சொல்லுங்கள்

அழகென்னும் தேரில் 

நடை போடுங்கள்

மலர் மஞ்சங்கள்

இரு நெஞ்சங்கள்

பிறர் காண வேண்டாம் 

திரை போடுங்கள்”

சுதந்திரப் பறவையாய் ஜானகியார் கடந்து விடுவார்.

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “தண்ணி கருத்திருச்சு” போன்ற பாடல்களில் ஒரு கிராமியத்தனமான குரலாக வெங்கலமாக மிளிர்ந்தவர், மிக மெருதுவானதொரு குரல் அலைவரிசைக்கு மாறிப் போய் இந்த மாதிரியான பாடல்களில் அடங்கிப் போய் விடுவார்.

கோடு கிழித்த அந்த அலைவரிசைக்கு மேலே எழாது தன் கோட்டுக்குக் கீழேயே நின்று ஜாலம் செய்யும் மலேசியா அண்ணரின் குரல்.

கிட்டார் மழைத்துளிகள், தபேலாவின் முத்தங்கள், 

உச்சி மோந்து வருடும் புல்லாங்குழல்கள்.....வயலின்கள்

இந்த ராகதேவன் பாடல்கள் சொர்க்கங்கள்

ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் 

பூக்கள்….

காலங்கள் 

மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்……

https://www.youtube.com/watch?v=jfVoCIS0xv0

கானா பிரபா

Wednesday, November 9, 2022

யாரிகாகி ஆட்டா மனசொலி ஹேளு ❤️❤️❤️


இசைஞானி இளையராஜா தன் பாடல்களில் வெவ்வேறான காட்சிச் சூழல்களிலும் புதுமையான உத்திகளைக் கையாண்டிருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடும்.


அவ்வாறானதொரு பாடல் தான் இந்த “ யாரிகாகி ஆட்டா”


https://youtu.be/mK1ak5B9tXo


கன்னடத்தில் Bharjari Bete 

படத்துக்காக 41 வருடங்களுக்கு முன்பே செய்து காட்டிய உத்தி அது. ஒரு காபரே நடனத்துக்கு 3 beats உத்தியைக் கையாண்டு அந்தப் பாடலை அமைத்திருக்கிறார்.

இந்த உத்தியைப் பற்றி ராஜா விளக்கிய பின்னர் பாடலைக் கேட்கும் போது அட போடத் தோன்றும்.


https://youtu.be/dqU5XM7ZuYQ


எஸ்.ஜானகி போன்ற அசுரத்தனமான பாட்டுக்காரர் தான் ராஜாவின் மனதில் ஓடும் இவ்வாறான புதுமைகளுக்கு வழி கோலுவார்கள். அதையே நிரூபித்தும் காட்டியிருக்கிறார் ஜானகிம்மா. ஆரம்பத்தில் பதுங்கிப் பதுங்கிப் பின் சுதந்திரப் பிரவாகமாகக் கொட்டுவார் பாருங்கள் அப்பப்பா


கன்னடத்தில் “ஹ” வகை வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கும். இங்கே “ஹேளு” என்று ஜானகிம்மா உச்சரிக்கும் போதெல்லாம் அதே இன்ப அனுபவம்.


பாடலின் இசைக் கோப்பும் இந்தப் புதுமை அனுபவத்தின் உச்ச சோடனையாக இருக்கும். தாள லயம் மூன்று மூன்று என்று தட் தட் தட்


இந்த மாதிரியான அற்புதமான பாடல் கன்னடத்தில் படமாக்கப்பட்ட வகையிலும் ஒரு பிரமிப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆனால் இது நான்கு வருடங்கள் கழித்துத் தமிழில் அந்த ஒரு நிமிடம் (1985) ஆன போது “நல்ல நேரம்” என்று ஜெயமாலினிக் குலுக்கலுக்குப் பயன்பட்ட போது கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதை நீங்களே YouTube இல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தமிழ் வடிவத்தின் ஒலிப் பகிர்வை மட்டும் இங்கே கேளுங்கள்.


https://youtu.be/ELpXrToXfwE


எப்படி அந்த 3 beats உத்தியை யாரிகாகி ஆட்டா வரிகளும் மெய்ப்பித்ததோ அதே அளவு நியாயத்தைத் தமிழில் வைரமுத்து கொடுத்த வரிகளும் கொடுக்கவில்லை. இந்த மாதிரிப் பாட்டுக்கு வாலியோ, கங்கை அமரனோ அதிகபட்சமாக இருந்திருப்பார்கள்.


எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இசை அசுரன் தான் பாடாத பாடல்களின் இசை நுணுக்கங்களைக் கூடப் பாட்டுப் பேட்டி மேடைகளில் பகிர்ந்து விளக்குவார். இந்தப் பாடலைக் கூட அவர் விட்டு வைக்காததைப் பார்க்கும் போது ஆச்சரியமும், இன்னொரு பக்கம் இப்படியான ஞானஸ்தரை எப்பிறப்பில் காண்போமோ என்ற கவலையும் எழும். 


https://youtu.be/RHP5_vcksMI


இசையமைப்பாளர் ஹம்சலேகாவை மட்டுமல்ல கணேச சதுர்த்தி மேடைகளில் இன்னும் கன்னடர்களின் பெரு விருப்பப் பாடலாய் இது இன்னும் கொண்டாடப்படுகிறது.


கன்னடத்தின் மகா நடிகன் சங்கர் நாக் இப்போது நம்மிடையே இருந்திருந்தால் தனது 68 வது பிறந்த நாளை இன்று 09.11.2022 ரசிகர்கள் புடை சூழக் கொண்டாடியிருப்பார். 

தன் 36 வயதிலேயே அகாலம் கொண்ட அவரின் “ஜோதயலி” https://youtu.be/xfWnvQHdkNo பாடல் வழியாக இன்னமும் மொழி கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இசைஞானி இளையராஜா & சங்கர் நாக் தனிப்பதிவு பின்னர் கொடுப்பேன். சங்கர் நாக் இன் “Geetha” கன்னடப் படத்தில் ராஜா இசை கொண்டாடப்பட்டது போலவே Bharjari Bete பாடல்களும் இன்னொரு பரிமாணத்தில் அமைந்தவை. 

பாடல்களைக் கேட்க


https://youtu.be/VD4Vyfsg-zE


அவை கொண்டாடித் தீரா அனுபவம். 😍❤️


கானா பிரபா

Tuesday, November 8, 2022

உஷா உதூப் 75 ❤️❤️❤️

“பாப் இசை உலகின் ராணி” என்ற பட்டத்தோடு 56 வருடங்கள் தொடர்ந்து இளமைத் துடிப்போடு மேடைகளில் ஆட்டமும், பாட்டுமாகக் களிப்பூட்டும் மகாராணி. 

அண்மையில் ஒரு இசை நிகழ்வுக்குப் பயணிக்கும் போது அந்த வழியில் பாடகர் கார்த்திக் உள்ளிட்ட கலைஞர்கள் பக்கமிருக்க, இசைஞானி இளையராஜாவின் அரிய பாடலொன்றைப் பாடி அசத்தி விட்டு, ராஜாவைப் பார்த்து ”உங்க எல்லாப் பாட்டும் தெரியுமே” என்று சிரித்துப் பேசுகிறார்.

எஸ்பிபி போலத் தான் இவரும், தன்னுடைய ஒவ்வொரு மேடைத் துளிகளையும் உற்சாகக் கட்டுக்குள் வைத்திருப்பதில் உஷா உதூப் பாடகி என்ற எல்லையைத் தாண்டி, வாழ்வைக் கொண்டாடும் மகோன்னதம்.

வயசெல்லாம் வெறும் இலக்கம் தான் என்று துள்ளாட்டமும், கொட்டமுமாக இவரைப் பார்க்கும் போதே உற்சாகம் அள்ளும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது YouTube ஐத் தட்டிப் பார்த்தால்

எஸ்பிபியை உஷா புகழும் காணொளி கண் பட்டது.

https://www.youtube.com/watch?v=zX6WGrgYOwg

இருவருமே 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் தன் பங்குக்கு “ஊருக்கு உழைப்பவன்” படத்தில் 

It's Easy To Fool You https://www.youtube.com/watch?v=Kzw20o-_OcI

பாடலில் கூட்டுச் சேர்ந்து பாடியுமிருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா இசையில், உஷா உதூப் கடந்த ஆண்டு நவராத்திரி ஸ்பெஷலாகக் கொடுத்த “நிலா அது வானத்து மேலே” ஐ ஆன்மிகத்தில் கலக்கிக் கொடுத்த

Bhoi Maa Bhoiee

https://www.youtube.com/watch?v=gGNLG9yJiPk

பாடலுக்கு முன்பே, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்தில் இரண்டு பாடல்கள்

“ராத்திரியில் தூக்கமில்ல"

https://www.youtube.com/watch?v=2O1n7y_HoZo

பாடகர் சாய்பாபாவுடன் கொட்டமடித்த 

“கற்சிலை சிலை தான்" 

https://www.youtube.com/watch?v=eNaPknsFNUA

இனிய உறவு பூத்தது பாடலின் அந்த உடற்பயிற்சிக் கட்டளைக் குரலாக எஸ்.ஜானகியோடு இணைந்த “சிக்கென்ற ஆடையில்”

https://www.youtube.com/watch?v=Udn3Y6Y1JQA


Keechuralu தெலுங்குப் படப் பாடல் (பரிந்துரை நண்பர் TC Prasan)

https://www.youtube.com/watch?v=6osVOyDKxG4

இசைஞானியின் 500 வது படமான “அஞ்சலி” கொடுத்த

“வேகம் வேகம் போகும் போகும்”

https://www.youtube.com/watch?v=1omuE_510gg

கூட்டுப் பாடல் என்று அமைந்திருந்தது. இன்று இசைஞானியின் உலகச் சுற்றுலாக்களில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

இளையராஜாவின் பிறந்த நாளுக்காக அவர் பாடியளித்த இசைக்கலவை

https://www.youtube.com/watch?v=U45DGYEuagA

1966 இல் பாடகியாக அறிமுகமான உஷா உதூப் 13 இந்தியப் பிராந்திய மொழிகளிலும், 8 வேற்று மொழிகளிலும் பாடியிருக்கின்றார். எந்த மொழி ஆனாலும் அது அந்நிய மொழி அல்ல தன் மொழி என்றாக்கி விடுவார்.

உஷா உதூப்பின் பயணம் தமிழில் 70 களிலேயே அமைந்திருந்தது. 

குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களின் இசையில்

“மேல் நாட்டு மருமகள்” படத்தில் Love is Beautiful https://www.youtube.com/watch?v=VXJzKk04a9A பாடலைப் பாடியதோடு காட்சியிலும் தோன்றி நடித்திருந்தார்.

இன்னொரு ஆங்கிலப் பாடலாக “Under A Mango Tree” https://www.youtube.com/watch?v=mqRdpqeJ37U

பாடலை “மதன மாளிகை” படத்துக்காக இசையமைப்பாளர் M.B.ஶ்ரீனிவாசன் வரிகள் எழுதி இசையமைக்கப் பாடினார்.

உஷா உதூப் தமிழில் “மன்மதன் அம்பு” படத்திலும் நடிக்க வைக்கப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=JY70nB3ePZk

உஷா உதூப்பின் மேடை எவ்வளவு தூரம் உற்சாகக் களையோடு இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது

https://www.youtube.com/watch?v=QO3oILb1vSY

பாப் இசைப் பாடகர் என்றால் அதீத முக்கல் முனகலோடு அந்நியப்பட்டு நில்லாது, பொதுமறை இசைப் பறவையாக ரசிகர்களை

மாற்ற வல்ல இயல்பு கெடாப் பாடகி இவர்.

தான் பாடாத பாடல்களைக் கூட, அது ஆண் குரல் என்றாலென்ன, பெண் குரலென்றால் என்ன அப்படியே தன்னுடையாக்கி மேடையேற்றிப் பிரதிபலிக்கும் பேராற்றல் மிகு அம்மணி இவர்.

இதோ பாருங்களேன்

https://www.youtube.com/watch?v=fDfojAS8C8I

வாழ்வைக் கொண்டாடப் பாடல்கள் மட்டுமல்ல, பாடகர்களும் தான் என்பதை மேடையில் நிரூபித்துக் கொண்டே இருக்கும்

உஷா உதூப் என்ற மகா கலைஞர் துள்ளிசையாய் ஓயாது இயங்க எல்லாம் வல்ல ஆண்டவன் துணையிருக்கட்டும்.

கானா பிரபா

08.11.2022


Monday, November 7, 2022

கமல்ஹாசன் என்ற பாட்டுக்காரர் தனக்காகப் பாடாத பாடல்கள் ❤️🎸

“பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது”

https://www.youtube.com/watch?v=Qr3PEIoio8s

எதுவித முன்னேற்பாடும் இல்லாமல் அப்படியே ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் வந்த கமல், இளையராஜா வேண்டிக் கேட்க அப்படியே “சுகம் தர நடந்தது" போலப் பாடி விட்டுப் போனார் மு.மேத்தா வரிகளில் நடிகர் மோகனுக்காக, அந்தச் சம்பவம் “ஓ மானே மானே” படத்துக்காக அமைந்தது.   

இதற்கு முன்பும் இன்னொரு சந்தர்ப்பம் கமல்ஹாசனுக்கு அமைந்திருக்கிறது. 

“பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் 

ஐயனை நீ காணலாம்” என்ற ஜேசுதாஸ் பாடல் சரணம் ஐயப்ப்பா படத்தை நினைப்பூட்டி விடும். இந்தப் படத்தின் இசைமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் “சரணம் ஐயப்பா” படத்தில் “அண்ணா வாடா தம்பி வாடா” https://www.youtube.com/watch?v=MmXkDbGJo2E  என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தாலும் அது வேறொருவருக்கானதாக அமைந்தது. இதே படத்தில் கமல் கெளரவ வேடத்திலும் தோன்றியிருக்கின்றார்.

கங்கை அமரன் இசையில் தெரு விளக்கு படத்தில் இளையராஜா பாடியது போல, கமல்ஹாசனும் & சைலஜாவோடு இணைந்து

"மதுரைப் பக்கம் என் மச்சான் ஊரு"

https://www.youtube.com/watch?v=bJaRXU_eC5A

பாடியுள்ளார்கள்.

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

“ஞாயிறு ஒளிமழையில்” (அந்தரங்கம்) https://www.youtube.com/watch?v=rLSmBy55ot0  படத்தில் ஜி.தேவராஜன் இசையில் தொடங்கி சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளடங்கலாக ஏராளம் இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசன் பாடியிருக்கிறார். அவற்றில் 99 வீதமானவை தனக்கான படங்களுக்காகவே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் “காதலா காதலா” படத்தில் கார்த்திக் ராஜா இசையில் பாடி நடித்த கமல்ஹாசனை, தன் பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர் பாடல் வரிகளில் பவதாரணி, ஸ்வர்ணலதாவுடன் கூட்டுச் சேர்த்துக் கொடுத்த “முத்தே முத்தம்மா” https://www.youtube.com/watch?v=ippxU28VPMM 

அட்டகாஷ் ரகம். தனிப்பட்ட ரீதியில் கமல் பாடிய பாடல்களில் உச்சமாக ரசித்துக் கேட்பேன்.

அது போல இதுவரை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்திருக்காவிட்டாலும், யுவனின் ஆரம்பகால ஆல்பமான “The Blast” இல் 

“பூக்கள் எல்லாம்” (பார்த்தி பாஸ்கர் & சுஜாதா வரிகள்) 

https://www.youtube.com/watch?v=jj1j2bN0Aws

“வா நந்தனே” (அமரர் வாசன் வரிகள்)

https://www.youtube.com/watch?v=kcbq05ZeNxg

அவள் தேவதை (கவி ரவி வரிகள்)

https://www.youtube.com/watch?v=1OXeyLqqx2Q

போன்ற பாடல்களில் தன் குரலைக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

பின்னாளில் புதுப்பேட்டையில் நா.முத்துக்குமார் வரிகளில்

“நெருப்பு வாயில்”

https://www.youtube.com/watch?v=nj2_XlOc5N4

பாடலில் யுவன் இசையில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார் கமல்.

தனிப்பட்ட ஆல்பம் என்று சொல்லும் போது கொரோனா காலத்தில் ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பகிர்ந்த “அறிவும் அன்பும்” பாடல் தொகுதியும் குறிப்பிட வேண்டியது. கானா பிரபா

கமலின் தயாரிப்பு என்று வரும் போது நளதமயந்தி படத்தில் வித்தியாசமான இரண்டு பாடல்கள் 

Sudupattadha

https://www.youtube.com/watch?v=ydrEqU1y-pE

Stranded On the Streets

https://www.youtube.com/watch?v=LyBGscQMRW4

ரமேஷ் விநாயகம் இசையில் கமல் பாடியளித்திருந்தார்.

முத்துராமலிங்கம் படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பின் தன் இசையில் கமல்ஹாசனைப் பாட வைத்தார் “தெற்கத்தி சிங்கமடா” இளையராஜா. பெரிதும் திருப்தி தராத படைப்பு அது. இளையராஜாவுக்காக பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிக் கொடுத்த இறுதிப் பாடல் அது.

ஆனால் Happi படத்துக்காக ராஜா மீண்டும் கமலை அழைத்துக் கொடுத்த Zindagi dish  https://www.youtube.com/watch?v=EYYn9rZvSdk பொக்கிஷம் எனலாம்.

“வானம் முழுதும் பௌர்ணமி

உன் அழகில் தான் வந்ததோ

தேசம் முழுதும் மின்மினி

உன் வரவை தான் தேடுதோ.....”

பன்முகத் திறமையாளர் நம்மவர் கமல்ஹாசனுக்கு இனிய 68 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

07.11.2022


Thursday, November 3, 2022

வான் மீதிலே …..💛 வா வெண்ணிலா 💚 ஏ வெண்ணிலா ❤️





“வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே”


என்ற அதியற்புதமான பாடல் “சண்டி ராணி” படத்தில் இடம்பெற்றிருந்தது. அதை ஒருமுறை இளையராஜா, எம்.எஸ்.விஸ்வ நாதனிடம் சிலாகித்துப் பேசவும், அப்போது சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் உதவியாளராக இருந்த சமயம் தானே அந்தப் பாடலை கம்போஸ் செய்த தகவலை சொல்லியிருக்கிறார். அதை ராஜா மேடையில் கூறுவதை 5 வது நிமிடத்தில் கேட்கலாம்.


https://youtu.be/OKT7psGQ41E


“வான் மீதிலே” பாடல் பிறந்த கதையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனே சொல்லும் அற்புதமான பகிர்வையும் கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/fIOOK9QCb7k


இதே பாடலின் வழி மூலமாக 33 ஆண்டுகள் கழித்து மெல்லிசை மன்னரும் இசைஞானியும் ஓன்று கூடி இசையமைத்துப் பிறந்தது தான் “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் இடம் பெற்ற “வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே” 


https://youtu.be/9VMs5JITg5Q


இந்தப் பாடலின் காட்சியமைப்பில் இன்னொரு சிறப்பாக அந்த இசைப்பள்ளி ஆசிரியராக வெள்ளைச் சட்டையுடன் தோன்றுபவர் இன்னொரு இசை மகானுபவர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள்.

இப்படியாகப் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தது “வான் மீதிலே” பாடல்.


“வா வெண்ணிலா” பாடல் இன்று வரை 35 ஆண்டுகள் கழித்தும் புத்துணர்வோடு இருப்பதைத் தனியாக வேறு சொல்ல வேண்டுமா?


சண்டி ராணி படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளிலும் இயக்கி நடித்தவர் பானுமதி ராமகிருஷ்ணா. நாயகன் என்.டி.ராமராவ்.


வான் மீதிலே” பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடியவரும் பானுமதி தான். இந்தப் பாடலில் கவரப்பட்ட

இசைஞானி பின்னாளில் பானுமதியைத் தன் இசையில் பாட வைத்த நேரம் என்ன பேசியிருப்பார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வேன்.

பானுமதி இளையராஜா பேட்டியில் 


http://isaignanibakthan.blogspot.com/2013/


அந்தச் சந்தேகமும் தீர்ந்தது.


“சண்டி ராணியே எனக்குக் கப்பம் கட்டு நீ” (மன்னன்) முதலடிகளை வழக்கம் போல் ராஜாவே எடுத்துக் கொடுத்தும் இருக்கலாம். 


ஆனால் இந்த சண்டி ராணியின் கணக்கு இன்னும் விட்டு வைக்கவில்லை. கங்கை அமரனும் இசையமைப்பாளராக இயங்கிய போது “வான் மீதிலே” பாடலின் பாதிப்பில் ஒரு பாடலைக் கொடுத்தார். அதுதான்

“ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

 உன் வானம் தானே”


https://youtu.be/-UuYqA04TGs


கங்கை அமரன் அவர்களே அந்தப் பாடலை எழுதி இசையமைத்து “இது ஒரு தொடர்கதை” படத்துக்காக வெளிவந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் தனித்தனியாக “வா வெண்ணிலா” பாடியிருக்க (வா வெண்ணிலா எஸ்பிபியோடு ஆலாபனையிலும் ஜானகி) , 

“ஏ வெண்ணிலா” பாடலை இருவரும் சேர்ந்து பாடியிருப்பார்கள்.  அங்கேயும் ஒரு குறும்புத்தனம் பண்ணியிருப்பார் கங்கை அமரன்.  வா வெண்ணிலா பாடலின் எஸ்.ஜானகி வடிவம் ஒரு தபேலா தாளக் கட்டுடன் பாடுவதை இந்த  ஏ வெண்ணிலா பாடலிலும் பிரதிபலிக்குமாற் போலொரு சங்கதியை 2.30 நிமிடத்தில் கொடுத்து எஸ்பிபியை ஆலாபனை பாட வைத்திருப்பார்.


வா வெண்ணிலாவுக்கும், ஏ வெண்ணிலாவுக்கும் இன்னொரு ஒற்றுமை, மெல்லத் திறந்தது கதவு படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியது போல, இது ஒரு தொடர்கதை படத்தை அவரின் உதவியாளர் அனு மோகன் இயக்கியிருக்கிறார்.


தமிழ் சினிமா ஜாதகப்படி மோகன் & அமலா ஜோடி சேர்வதில் ஏகப்பட்ட சிக்கல். “உன்னை ஒன்று கேட்பேன்” படத்தில் தன் காதலி அமலாவை வில்லன்களிடம் பறி கொடுத்து விடுவார். “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் சேற்றுக் குழியே வில்லன் ஆகி விடும். 

இது ஒரு தொடர்கதையிலும் அப்படி இப்படிச் சுற்றி ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விடுவார்கள்.


கங்கை அமரன் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மகா ரசிகர் என்பது இந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் உணரும்.


காட்சியோடு ஏ வெண்ணிலா 


https://youtu.be/SRQfJFqstJw


ஆளுமைப்பட்ட மனிதர்களைப் பின்பற்றி வாழ்வது உலகியல் நியதி.

இங்கே “வான் மீதிலே”  என்ற பாடல் எத்தனை ஆண்டுகள் கழித்தும் இவ்விரு பாடல்களுக்கும் ஆளுமைப்பட்டு நிற்பதை உணரலாம்.


இசைஞானி சொல்வது போலத் தான் 

“ஒரு பாடல் தோன்றுவதற்கு முன் அது ஒவ்வொரு வாத்தியங்களின் இசையாக வெளிப்படும் போது இன்னதாகத் தான் வெளிப்படும் என்று அது உணருமா என்ன” ❤️


கல்யாணராகம் பாடி 

காதல் செய்ய வந்தேனே�இன்னிசை பாடும் ராகம் நூறு 

நீயே ஆதாரம்


உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்�நிலவே இன்று நீ விடியிரவாய்�ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம் தானே 💚🎸


கானா பிரபா

03.11.2022