“வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே”
என்ற அதியற்புதமான பாடல் “சண்டி ராணி” படத்தில் இடம்பெற்றிருந்தது. அதை ஒருமுறை இளையராஜா, எம்.எஸ்.விஸ்வ நாதனிடம் சிலாகித்துப் பேசவும், அப்போது சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் உதவியாளராக இருந்த சமயம் தானே அந்தப் பாடலை கம்போஸ் செய்த தகவலை சொல்லியிருக்கிறார். அதை ராஜா மேடையில் கூறுவதை 5 வது நிமிடத்தில் கேட்கலாம்.
https://youtu.be/OKT7psGQ41E
“வான் மீதிலே” பாடல் பிறந்த கதையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனே சொல்லும் அற்புதமான பகிர்வையும் கேட்டுப் பாருங்கள்.
https://youtu.be/fIOOK9QCb7k
இதே பாடலின் வழி மூலமாக 33 ஆண்டுகள் கழித்து மெல்லிசை மன்னரும் இசைஞானியும் ஓன்று கூடி இசையமைத்துப் பிறந்தது தான் “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் இடம் பெற்ற “வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே”
https://youtu.be/9VMs5JITg5Q
இந்தப் பாடலின் காட்சியமைப்பில் இன்னொரு சிறப்பாக அந்த இசைப்பள்ளி ஆசிரியராக வெள்ளைச் சட்டையுடன் தோன்றுபவர் இன்னொரு இசை மகானுபவர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள்.
இப்படியாகப் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தது “வான் மீதிலே” பாடல்.
“வா வெண்ணிலா” பாடல் இன்று வரை 35 ஆண்டுகள் கழித்தும் புத்துணர்வோடு இருப்பதைத் தனியாக வேறு சொல்ல வேண்டுமா?
சண்டி ராணி படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளிலும் இயக்கி நடித்தவர் பானுமதி ராமகிருஷ்ணா. நாயகன் என்.டி.ராமராவ்.
வான் மீதிலே” பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடியவரும் பானுமதி தான். இந்தப் பாடலில் கவரப்பட்ட
இசைஞானி பின்னாளில் பானுமதியைத் தன் இசையில் பாட வைத்த நேரம் என்ன பேசியிருப்பார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வேன்.
பானுமதி இளையராஜா பேட்டியில்
http://isaignanibakthan.blogspot.com/2013/
அந்தச் சந்தேகமும் தீர்ந்தது.
“சண்டி ராணியே எனக்குக் கப்பம் கட்டு நீ” (மன்னன்) முதலடிகளை வழக்கம் போல் ராஜாவே எடுத்துக் கொடுத்தும் இருக்கலாம்.
ஆனால் இந்த சண்டி ராணியின் கணக்கு இன்னும் விட்டு வைக்கவில்லை. கங்கை அமரனும் இசையமைப்பாளராக இயங்கிய போது “வான் மீதிலே” பாடலின் பாதிப்பில் ஒரு பாடலைக் கொடுத்தார். அதுதான்
“ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம் தானே”
https://youtu.be/-UuYqA04TGs
கங்கை அமரன் அவர்களே அந்தப் பாடலை எழுதி இசையமைத்து “இது ஒரு தொடர்கதை” படத்துக்காக வெளிவந்தது.
எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் தனித்தனியாக “வா வெண்ணிலா” பாடியிருக்க (வா வெண்ணிலா எஸ்பிபியோடு ஆலாபனையிலும் ஜானகி) ,
“ஏ வெண்ணிலா” பாடலை இருவரும் சேர்ந்து பாடியிருப்பார்கள். அங்கேயும் ஒரு குறும்புத்தனம் பண்ணியிருப்பார் கங்கை அமரன். வா வெண்ணிலா பாடலின் எஸ்.ஜானகி வடிவம் ஒரு தபேலா தாளக் கட்டுடன் பாடுவதை இந்த ஏ வெண்ணிலா பாடலிலும் பிரதிபலிக்குமாற் போலொரு சங்கதியை 2.30 நிமிடத்தில் கொடுத்து எஸ்பிபியை ஆலாபனை பாட வைத்திருப்பார்.
வா வெண்ணிலாவுக்கும், ஏ வெண்ணிலாவுக்கும் இன்னொரு ஒற்றுமை, மெல்லத் திறந்தது கதவு படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியது போல, இது ஒரு தொடர்கதை படத்தை அவரின் உதவியாளர் அனு மோகன் இயக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமா ஜாதகப்படி மோகன் & அமலா ஜோடி சேர்வதில் ஏகப்பட்ட சிக்கல். “உன்னை ஒன்று கேட்பேன்” படத்தில் தன் காதலி அமலாவை வில்லன்களிடம் பறி கொடுத்து விடுவார். “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் சேற்றுக் குழியே வில்லன் ஆகி விடும்.
இது ஒரு தொடர்கதையிலும் அப்படி இப்படிச் சுற்றி ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
கங்கை அமரன் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மகா ரசிகர் என்பது இந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் உணரும்.
காட்சியோடு ஏ வெண்ணிலா
https://youtu.be/SRQfJFqstJw
ஆளுமைப்பட்ட மனிதர்களைப் பின்பற்றி வாழ்வது உலகியல் நியதி.
இங்கே “வான் மீதிலே” என்ற பாடல் எத்தனை ஆண்டுகள் கழித்தும் இவ்விரு பாடல்களுக்கும் ஆளுமைப்பட்டு நிற்பதை உணரலாம்.
இசைஞானி சொல்வது போலத் தான்
“ஒரு பாடல் தோன்றுவதற்கு முன் அது ஒவ்வொரு வாத்தியங்களின் இசையாக வெளிப்படும் போது இன்னதாகத் தான் வெளிப்படும் என்று அது உணருமா என்ன” ❤️
கல்யாணராகம் பாடி
காதல் செய்ய வந்தேனே�இன்னிசை பாடும் ராகம் நூறு
நீயே ஆதாரம்
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்�நிலவே இன்று நீ விடியிரவாய்�ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம் தானே 💚🎸
கானா பிரபா
03.11.2022
0 comments:
Post a Comment