Pages

Monday, July 6, 2026

பாக்யராஜைப் பாட வைத்த புலவர் ❤️


பச்சைமலை சாமி ஒண்ணு 

உச்சிலை ஏறுதுன்னு 

எடுடா தம்பி மேளம் 

கொஞ்சம் எதமாப் போடு தாளம்

பாக்யராஜ் அந்தப் பல்லவியையும் தானே எழுதித் தன் மெட்டுக்கட்டலைப் பாடிக் காட்டுகிறார் புலவர் புலமைப்பித்தனிடம். (பாக்யராஜ் இவ்விதம் பல்லவிகளில் அணி செய்த கை வண்ணம் பின்னொரு  பகிர்வில் வரும்)

இந்தப் பல்லவியே இருக்கட்டும் என்று புலவரவர்கள் சொல்லி விடுகிறார்.

கூடவே இன்னொன்றையும் வேண்டுகோளாக வைக்கிறார்.

“நீங்களே இந்தப் பாடலையும் பாடி விடுங்களேன்” என்று.

பாக்யராஜ் தயங்குகிறார். 

கூட இருந்த ஒலிப்பதிவாளர் சம்பத் அதை ஆமோதிக்கிறார்

“நீங்க இசையமைக்கிறதை ஊர்ல நம்புற மாதிரித் தெரியலை நீங்க பாடினால் தான் அடையாளம்” என்று அவர் வேறு விளக்கம் சொல்கிறார்.

“இது நம்ம ஆளு” படத்தின் வழியாக

இசையமைப்பாளர் பாக்யராஜ் அறிமுகமாகிறார்.

கூடவே பாடகர் பாக்யராஜ் பிறப்பெடுக்கிறார்.


“காவேரின்னு கங்கைன்னு பேரு வச்சான் 

ஆனாலும் அந்தத் தண்ணி ரெண்டும் ஒண்ணுதான் 

ஆளாளுக்கொரு சாதி இங்கே சொல்லி வச்சான்

ஆனாலும் நாம சாதியெல்லாம் ஒண்ணுதான்”


என்று புலமைப்பித்தனின் பொதுவுடமைச் சித்தாந்தம் பாடல் வரிகளில் தொனிக்கும்.


கங்கை தெற்கே பாயாதா…

காவேரியோடு சேராதா…

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு


என்று அதே ஆண்டிலேயே “உன்னால் முடியும் தம்பி”யிலும் அந்த வெளிப்பாட்டைக் காட்டியவர்.


“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா” என்று பாடும் நிலா எஸ்பிபி அவர்களுக்குப் பாட்டெழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.

பாலசுப்ரமணியம் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமான “துடிக்கும் கரங்கள்” படத்தில் கூட அந்த ராசி புலவர் ராசியாக ஜோடி போட்டிருப்பார்.


பச்சமலை சாமி ஒண்ணு


https://youtu.be/CcnI2QW3M_M?si=W_CbxeNy7Pa9c7NS


“இது நம்ம ஆளு” படத்தில் இன்னுமிரண்டு காதல் ஜோடிப் பாடல்கள்.

எஸ்பிபியுடன்

 “அம்மாடி இதுதான் காதலா” 


https://youtu.be/erJ_bMgEA7c?si=qorVc_0YybMz0h_y


என்று சித்ராவும்,

எஸ்பிபியுடன் “காமதேவன் ஆலயம்” 


https://youtu.be/w_1JYnfid5Q?si=cysrrrve3h0P2F8f


என்று எஸ்.ஜானகியுடனும்

இணைந்து கொண்ட இரண்டுமே பெரு வெற்றி பெற்ற இசையமைப்பாளர் பாக்யராஜின் பாடல்களாகி விட்டன.


புலவர் புலமைப்பித்தனுக்கும், கே.பாக்யராஜுக்குமான பந்தம் “கன்னிப் பருவத்திலே” காலத்தில் விளைந்தது.

பாக்யராஜின் திரையுலக வழிகாட்டி பாலகுரு அவர்கள் இயக்கிய அந்தப் படத்தின் கதை, வசனகர்த்தாவோடு இணை இயக்குநராகவும், வில்லனாகவும் பாக்யராஜ் தோன்றிய படமது. 

சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசையில் 

“பட்டு வண்ண ரோசாவாம்

 பார்த்த கண்ணு மூடாதாம்….”


https://youtu.be/9YfB-a6oaa4?si=OF-hokl9ZvoyDoz_


மலேசியா வாசுதேவன் குரலிலும், எஸ்.ஜானகி குரலிலுமாகத் தனித்தனியாக அமைந்தவை.


 

காத்து பட்டாலே

கரையாதோ கற்பூரம்

கரையுது எம் மனசு உன்னால…


புலவரவர்கள் அந்த வரிகளால் கரைய வைத்திருப்பார் நம் மனதை.


இதில் இன்னொரு சம கால விந்தையும் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட இதே சந்தத்தில் 1979 இல மாதக் கணக்கில் சற்றே முன்பதாக இசைஞானி இளையராஜா இசையமைப்பில்

“உச்சி வகுந்தெடுத்து” பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.


இவ்விதம் எழுபதுகளின்  “கன்னிப் பருவத்திலே” தொட்டு 90களின் நடுப்பகுதி வரை புலவர் புலமைப்பித்தனோடு கே.பாக்யராஜின் கவி இணைப்பும் இருந்தது.


பாக்யராஜ் இசையில் “பவுனு பவுனுதான்” படத்தில் வரும்

 “மாமா ஒரு மாலை சூட்டி மார்பில் எனை ஊஞ்சலாட்டு” 


https://youtu.be/38HgJNUs0KI?si=Z8dQwrKdC08U_fdB


பாடலுக்கும்

பாக்யராஜுக்கு மூத்தவர், சினிமாவுக்கு வருவதற்கு முன் ஒன்றாக நாடகம் போட்டவரும் பின்னாளில் உதவி இயக்குநருமாக அமைந்தவருமான ஆர்.பி.விஸ்வம்

இயக்கிய “ஞானப்பழம்” படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாகவும், இசையும் கொடுத்த

  “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்னு சொன்ன சாரே” 


https://youtu.be/zhW_NkUqpLU?si=rvFrgpk2OjCBekFt


பாடலுக்கும் 

என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.


பட்டு பூச்சி வாழ்க்கையது

எட்டு நாள் தானே

பறந்து வரும் ஈசலுக்கு

ஒருநாள் தானே


அவை பறக்கலையா

சிறகு விரிக்கலையா

வாழ்வை ரசிக்கலையா


பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்

மன பாரம் தீரத் தான்


https://youtu.be/KMhvXWII6HA?si=EeX4BM31DV0QiJTK


வாழ்க்கையே ஒரு வரவு செலவு

வந்ததே ஒரு வரவு தான்


என்று நிலையாமைத் தத்துவத்தைக் காட்டி நிற்கும் அற்புதமான பாடலை “சுந்தர காண்டம்” படத்துக்காக தீபக் இசையில் புலமைப்பித்தன் எழுதி பாக்யராஜ் படங்களில் இன்னொரு மகுடப் பாடலாய் அமைத்தார்.


இசைஞானி இளையராஜா & இயக்குநர் பாக்யராஜ் கூட்டில் புலவர் புலமைப்பித்தன் இணைந்து கொண்ட பாடல்களில்

“நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்” 


https://youtu.be/Cg4a0aYdjpE?si=JWmvjKMlF_pwQn3U


முந்தானை முடிச்சுக்காகவும், “பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணாகக் கூடிச்சாம்” 


https://youtu.be/1ftmovmTljY?si=x4eAlpnQ1Prm2xBl


வீட்ல விசேஷங்க படத்துக்காகவும் அமைந்த சிறப்பு மிக்கவை.

அவற்றுக்கெல்லாம் மேலாக, பாக்யராஜ் வேண்டி வாங்கும் சூழ்நிலைப் பாடலில் உன்னதமாக அமைந்த “சின்ன வீடு” படத்தில் வரும்

“வெள்ளை மனம் உள்ள மச்சான்” 


https://youtu.be/2RfG5u_8o4g?si=ZgAOZ6UUwiWO4Fbu


இந்தக் கூட்டணியில் புலமைப்பித்தனின் புலமை சாற்றும்.


“கள்ள மனம் முள்ளு தச்சி

கண்ணீரில் மூழ்குதடி…”


என்று எதிர் அலைவரிசையில் நாயகனுக்காக அவர் கொடுத்த வரிகள் அபாரம் என்றால்


செங்கரும்பை நான் மறந்து

வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…


அவன் நொந்து நிற்கும் சூழலில் “யாருமிங்கே ராமனில்லே” என்று ஆற்றுப்படுத்துவாள் புலவரின் வரிகளினூடே.


இந்தக் கட்டுரை எழுதும் போது பழைய நினைவுகளில் தேங்கியிருந்த போது ஒன்று ஞாபகத்தில் எழுந்தது.

“தங்க மகன்” படம் உருவாகும் சூழலில் தான் பூர்ணிமா ஜெயராம், பாக்யராஜை மணமுடிக்கும் செய்தி வந்தது. அதன் பின்னர் கூட பூர்ணிமா நடிப்பில் படங்கள் 

வந்திருந்தாலும், தங்க மகன் காலத்தை நினைத்தால் பூர்ணிமா & பாக்யராஜ் திருமண பந்த அறிவிப்பு நினைவில் எழும்.

அங்கே கூட புலவர் புலமைப்பித்தனின் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ” கூடவே வரும்.


இதற்கெல்லாம் முன்பாக, பாக்யராஜ் & பூர்ணிமா நிழலில் ஜோடி போட்ட காலம் அமைந்திருக்கிறது. 

“டார்லிங்…டார்லிங்…டார்லிங்…”

படத்திலே “அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே” 


https://youtu.be/PSOsKuz4d0s?si=wkF0aZZxqkb7Wmi-


என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியது பின்னாளில் நிஜத்தில் நிலைத்துப் போனது.

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


பட்டுப் போல் மெதுவாக தொட்டுக்கொள்

கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்

தலைவனின் கரம் தழுவிட வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே…

இதய தாகம் அது 

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்…


கானா பிரபா

05.07.2026