பாரதிராஜாவின் ஹம்சலேகா ❤️
எந்தப் பெண்ணிலும் இல்லாத
ஒன்று
ஏதோ....
அடி ஏதோ...
உன்னிடம் இருக்கிறது.....
SPB எந்த இசையமைப்பாளரிடம் கூட்டுச் சேர்ந்தாலும், தன்னுடைய உணர்வுரீதியான பரிமாறலில் குறை வைத்ததே இல்லை என்பதைக் காட்டும் ஒரு வசீகரப் பாட்டு.
பாரதிராஜா இளையராஜாவை விட்டு விலகிய காலத்திலும்,
வானொலிக்காரர்கள் விடாமல் வேதம் புதிது (தேவேந்திரன்), கேப்டன் மகள் (ஹம்சலேகா) வை இளையராஜா இசை என்றே பரிமாறும் பாரம்பரியமும் நடந்திருக்கிறது.
பாரதிராஜாவின் படங்களில் ஒரு இயக்குநர் எவ்வளவு தூரம் தான் வேண்டியதை வாங்கும் திறன் கொண்டவர் என்பதற்கு இவ்விரு இசையமைப்பாளர்களும் சான்று.
அதுவும் ஹம்சலேகாவைத் தன் இரண்டு படங்களில் (கொடி பறக்குது, கேப்டன் மகள்) பாரதிராஜா பயன்படுத்திக் கொண்டது ஆகச் சிறப்பு.
கேப்டன் மகள் படத்தில் இன்னொரு அறியப்படாத பொக்கிஷப்பாட்டு உண்டு. அது "நந்தவனப் பூக்கள் பூத்ததே".
அந்தப் பாடல் பிடித்துப் போனதுக்குக் காரணமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொடுக்கும் அந்த கெத்தான குரல் தான்.
“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடலில் மெது மெதுப்பாகப் பாடும் எஸ்பிபியா இப்படி ஒரு மிரட்டல் குரலில் பாடுவது என்ற பிரமிப்பும் கூடவே.
மென்மையாக ஒடுங்கும் சித்ரா குரலுக்கு மாறுபட்ட வில்லத்தனம் மிளிரும் குரல் நெப்போலியனுக்கான முதல் பாடல் என நினைக்கிறேன். இதே மாதிரித் தானே "மண வினைகள் யாருடனோ" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முதலாக ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார்.
அந்தக் காலத்தில் “கொடி பறக்குது” பாடல்கள் ஒரு புறம் பட்டையைக் கிளப்ப, இன்னொரு புறம் “கொடி பறக்குது” சேலைக்கும் ஏக மவுசு. ஒரு படத்தில் நாயகி அணியும் வித்தியாசமான நிற வடிவமைப்புக் கொண்ட சேலைக்கு அந்தப் படத்தின் பெயரையே வைத்து விடும் பாரம்பரியம் அது. சேலைக் கடைகளில் தீபாவளிக்கு “கொடி பறக்குது” சேலை என்ற விளம்பரம் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதி விளம்பர ஒலிபரப்பு லவுட்ஸ்பீக்கட் வழியே பரவியது இன்னும் பசுமையாக நினைவில்.
தமிழில் இளையராஜா & பாரதிராஜா கூட்டணியில் விரிசல் வந்த போது இசையமைப்பாளர் தேவேந்திரனோடு “வேதம் புதிது” வழியாக ஒரு மெல்லிசைக் கூட்டணி எழுந்தது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, அமலாவோடு பாரதிராஜா சேர்ந்து எதிர்பார்ப்பைக் கிளப்பிய படமாக “கொடி பறக்குது” வந்தது. அம்சலேகாவோடு முதன்முறை இணைந்தார் பாரதிராஜா.
சொல்லி வைத்தது போலக் கில்லி அடித்தது கொடி பறக்குது படப் பாடல்கள். தன் பாணியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் அறிமுகம் வேறு கொடுத்துச் சிறப்பித்திருந்தார் “கொடி பறக்குது” இசைப் பேழையில் பாரதிராஜா.
“ஓஓஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை”
இரண்டு வடிவங்களில் ஒலிப்பதிவானது.
ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு வாணி ஜெயராம், இன்னொன்று சித்ரா சேர்ந்தது. படத்தில் வந்தது எஸ்பிபி & சித்ரா சேர்ந்தது தான்.
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” எண்பதுகளின் பாடல் தொகுப்புகளில் தவிர்க்க முடியாத பாட்டு. கூடவே சேலைக் கடைகளுக்கான வானொலி விளம்பரங்களுக்கும் கை கொடுத்தது.
எஸ்பிபியின் “அன்னை மடியில்” உருக வைத்தது, மொத்தத்தில் கொடி பறக்குது படம் வணிக ரீதியாகப் போகா விட்டாலும், பாடல்கள் இளையராஜாத்தரமாக இருந்தன.
ரஜினிக்கும் ஹம்சலேகாவுக்கும் அப்படி என்ன ராசியோ, கொடி பறக்குது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் எதிர்பார்த்த அளவில் போகாத சூழலில், இன்னொரு படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது அதுதான் “நாட்டுக்கு ஒரு நல்லவன்”. ரஜினி ரசிகர்களே இந்தப் படத்தைக் கெட்ட கனவாக மறக்க நினைக்கும் வேளை இங்கேயும் அம்சலேகா தான் கை கொடுக்கிறார்.
கர்னாடகா எல்லை தாண்டி தமிழகத்தில் ஊடுருவி ஒரு மிகப் பெரிய இசைத் தாக்கத்தை, அதுவும் இளையராஜா காலத்தில் நிகழ்த்திக் காட்டியது “பருவராகம்”.
தமிழராக இருந்தாலும் கன்னட சினிமா உலகில் கடை விரித்தவர் தயாரிப்பாளர் வீராச்சாமியும் மகனும் நடிகனுமான ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரன் நடித்த கன்னடத் திரைப்படமான “பிரேம லோகா” மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவே தமிழில் “பருவ ராகம்” ஆனது.
பருவராகம் படத்தில் பஞ்சு அருணாசலம் பங்களிப்பு உண்டு.
ரஜினிகாந்த் பாரதிராஜாவைப் படம் பண்ண அழைத்த போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு வேண்டியவர் பஞ்சு அருணாசலம். ஆகவே இந்த ஹம்சலேகா பரிந்துரை கூட அவரின் தெரிவாக இருக்கலாம்.
இதை உறுதிப்படுத்த பஞ்சு அருணாசலமும் இல்லை, பாரதிராஜாவும் இல்லை நம்மோடு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசையமைப்பாளர் ஹம்சலேகா!
கானா பிரபா
23.06.2026

