மெட்டுப் போடும்
செந்தாழம் பூ
கெட்டி மேளம் போட
எட்டிப் பாக்கும் ஆவாரம் பூ
வெக்கத்தோடு ஓட
விடிகாலை சிட்னி வெளியெங்கும் ஒரு
கனரக வாகனம் ஒன்று ஒரு புகை மண்டலத்தை எழுப்பி விட்டுப் போனது போலப் பனிப்புகார்.
காலை ஏழு மணி டொட்
மகளைப் பள்ளிக்கூடத்தில் இருத்தி விட்டுத் திரும்பும் போது கனேடிய வானொலி இந்தப் பாடலை ஒலிபரப்பவும் காரை ஓரம் கட்டி, ஒலித்தரம் கொண்ட பாடலைக் கேட்டுக் கொண்டே பயணிக்கிறேன்.
அந்த மூன்றாவது நிமிடத்தில் கூட்டுக் குரல்களுக்குப் பின்னால் ஒரு துள்ளாட்டம் போடுமே ஒரு இசைக் குவியல்? அது போல ஆகிவிட்டது மனம்.
கதாநாயகியைத் தன் முதுகில் சுமந்து செல்லும் நாயகன் போலவே இந்தப் பாடலும் என்னைச் சொகுசாகச் சுமந்தது போல ஒரு உணர்வு.
பட்டம் விட்டு அலை பாயும் காதலர் போல மிதக்குது மனம்.
அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை ❤️
அதெப்படி காட்சிக்குப் பொருந்தும் போல அந்தக் காதலியைச் சுமக்குமாற் போலச் சந்தம் பாடுகிறது என்று ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் ஆச்சரியம் தான் எனக்கு.
பொம்பள எஸ்பிபி ஜானகியும், ஆம்பள ஜானகி எஸ்பிபியும் பாடிய காலத்துக்கும் நிற்கும் பாடல்களில் இதைத் தவிர்க்கத்தான் ஒப்புமோ மனம்?
அச்சாரம்...அப்பன் தந்த முத்தாரம்...
ஒரு இழுவை கொடுப்பார் பாருங்கள் 😁
சொந்தம் இங்கே வந்தாளுன்னு...
சொன்னான் அவன் லேசா...
ஜானும்மா கொஞ்சம் வெட்கம் கலக்க
இவரோ அந்தச் சந்தம் கெடாமல்
ஹஹ்ஹா போடுவார்
சந்தோஷம்...
தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும்...
கிட்ட வரும் எப்போதும்...
காத்திருந்து தீட்டுவது போல அந்த ராட்சசியும் பதம் பார்ப்பார்.
இந்த அதிகாரப் போட்டியை மாறி மாறி ரசிப்பதே சுகம்.
ஒற்றைப் புல்லாங்குழல் அப்படியே எங்காவது கிராமத்தில் கொண்டு போய் நம்மை நட்டு விட்டுத் திரும்பும்.
இந்தமாதிரிப் பாடல்களின் மெட்டைப் பங்கம் செய்யாமல் சந்தத்தின் மீதேறிப் பாட்டெழுத கங்கை அமரனே துணை.
மலையாள இயக்குநர் பரதனுக்கு பட வாய்ப்பு இல்லாத சூழலில் இளையராஜாவே தயாரிப்பாளர் கேயாரிடம் பரிந்துரைக்கிறார். கேயாரும் ராஜா சொன்னதே வேத வாக்கு என்று பரதனை ஒப்பந்தம் செய்யவும் “ஆவாரம்பூ” பூக்கிறது.
இந்தப் படம் பரதன் இயக்கி, மலையாளத்தில் ஒரு முக்கியமான படமாக விளங்கும் தகரா படத்தின் மீள் உருவாக்கமாகும்.
பாடல் மெட்டுக்கட்ட Ideal beach போனார்களாம். 15 நிமிடத்தில் ஆறு பாடல்களுக்குமான மெட்டுகளையும் போட்டுவிட்டு நிமிர்ந்தார் இளையராஜா என்று தயாரிப்பாளர் கேயார் இன்று கூட ஆச்சரியப்பட்டுப் பேசுகிறார்.
“ஆலோலம் பாடி” பாடலை SPB ஐ வைத்துப் பாட வைக்க ராஜா முடிவெடுத்தும், கேயார் இவரே வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டாராம்.
ஆக, அந்தப் பதினைந்து நிமிடத்துக்குள் பிறந்த ஒரு அபூர்வம் தான் இதுவும் ஆகிய
அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை ❤️
34 வருஷங்களுக்கு முன்னர் இந்த மெட்டைப் போடும் போது ராஜா நினைத்திருப்பாரா,
அத்தனை ஆண்டுகள் கழித்தும்
பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து ஒரு தென் அரைக்கோள முனையில் இருப்பவனுக்குப் பக்கத்தில் தான் போய் இருப்பேன் என்று?
வெற்றி மாலை
போட்டானய்யா
கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டான் அங்கே
மொட்டுப் போல ரோசா ❤️

