தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ ❤️
இயக்குநர் கே.பாக்யராஜ் & பாடலாசிரியர் வைரமுத்து கூட்டணியில் ஆகச் சிறந்த ஒன்று என்றால் இதுவே முன் நிற்கும்.
அத்துணை அழகு நிறைந்த பாடலது.
பாக்யராஜுக்கான ராசியான குரல் மலேசியா வாசுதேவனும், ராசியான ஜோடிக் குரல் ஜானகியும் அணி செய்த பாட்டு.
வைரமுத்துவின் பாடல்களில் பின்னாளில் எழுந்த அதீத உவமை கையாளல் போல் இல்லாமல் இந்தப் பாடலில் இயல்பான கவிதை மடை மிளிரும்.
துஞ்சியது பைந்தமிழ் சொல்லில் ஒரு கிறக்கம் எழும்.
“தன்னோடு தான் போராடினாள்” எல்லாம் வைரமுத்துவின் அழகியல் சொல்லாடல்.
“முந்தானை முடிச்சு” படத்தைப் போட்டுக் காட்ட இளையராஜாவை அழைக்கிறார் பாக்யராஜ். வைரமுத்துவும் கூட வரலாமா என்று கேட்டு அவரின் அனுமதியோடு அழைத்து வருகிறார் ராஜா.
படத்தின் இடைவேளையோடே “இந்தப் படம் நூறு நாட்கள் ஓடும்” என்கிறார் ராஜா.
“எப்படி முழுப்படத்தையும் பார்க்காமல் சொல்கிறீர்களே” என்று பாக்யராஜ் கேட்கவும்,
“இந்தக் கதைப்போக்கு சரியாகப் பயணிக்கிறது” என்றாராம் ராஜா.
கூட வந்த வைரமுத்து ஒன்றுமே பேசவில்லையாம்.
இந்தப் படைப்பில் தன் பாடல் எதுவுமே இடம்பெறவில்லையே என்ற ஆதங்கத்தைத் தான் கண்டு கொண்டதாக பாக்யராஜ் குறிப்பிட்டார்.
ஆனால் அதற்கு முன்பாகவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “எண்ணி இருந்தது ஈடேற” பாடலை அந்த 7 நாட்கள் படத்துக்காக எழுதியிருக்கிறார் வைரமுத்து.
கே.பாக்யராஜ் எந்த ஒரு பாடலாசிரியரையும் முழுமையாகச் சார்ந்திருந்தவர் அல்ல. எம்.ஜி.ஆர் காலத்துப் பாடலாசிரியர்களை மட்டுமன்றிப் புதிய புதிய கவிஞர்களையும் உள்வாங்கினார்.
இளையராஜாவின் முறை வந்தது முந்தானை முடிச்சு படத்துக்குப் பின்னர் தாவணிக் கனவுகள் படத்தில் “மாமோய் கள்ளுக்கடை” மற்றும் சின்ன வீடு படத்தில் இடம்பெற்ற “சிட்டுக்குருவி வெட்கப்படுது” ஆகிய பாடல்களை பாக்யராஜுக்காக வைரமுத்து எழுதினார்.
தீபக் இசையில் சுந்தரகாண்டம் படத்தில் வா வா பாட்டுப் பாடலாம் மட்டும் குறிப்பிடத்தக்க பாடல்.
பாக்யராஜ் இசையில் ஆராரோ ஆரிரரோ படத்தில் “எல்லோருமே லூசுங்க தான்” மற்றும் அவசர போலீஸ் 100 படத்தில் “நாகூரு பேட்டை” என்று தலா ஒரு பாடல் எழுதியவர்.
பாக்யராஜ் இசையில் அதிக பட்சம் ஒரே படத்தில் எழுதிய கணக்கில் பவுனு பவுனு தான் படத்தில்
“உச்சாணிக் கொம்பேறி”, “என்னென்ன சுட்டிக” பாடல்களோடு
“தென்மதுர பாண்டி சீமையிலே சாமி ஆளாகி நான் வாடுறேன்”
https://youtu.be/MGoAFY4Bu2M?si=SCiBl1yH7uAOgt4M
அற்புதமான விளைச்சல்.
இவ்விதம் இவர்கள் தொடர்பின் இறுதி அத்தியாயமாக, “படிச்சாப் புடிச்சிர்லாம்”என்ற
பாக்யராஜ் சுயசரிதை நூலுக்கு முன்னுரை பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து.
“தூறல் நின்னு போச்சு” படத்துக்குப் போட்ட மெட்டுக்குப் பதில் பாக்யராஜ் இன்னொன்று வேண்ட, அந்த மெட்டு தும்பி வா, சங்கத்தில் பாடாத கவிதை என்று மொழி கடந்து ஹிந்தி வரை சென்றது உப வரலாறு.
“தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி”
https://youtu.be/MFQsW2D6JMU?si=6zcGeBEmt8tgOWiI
ஒரு காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவை நகை மாட விளம்பரத்தில் ஒட்டிக் கொண்ட முன்னிசைப் பாட்டு.
காலங்கள் மாறினால் என்ன…
இவளின் கனவு
தணியும் வரையில்
விடியாது
திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ…❤️
கானா பிரபா
07.07.2026

