Pages

Wednesday, December 30, 2009

நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக

சில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான "வம்சவிருக்ஷா" (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.

கல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து "நெஞ்சில் ஓர் ஆலயம்" படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து "அலைகள்" படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக "மழலைப்பட்டாளம்' வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். "குர்பானி" ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் "விடுதலை"யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த "பிரேம பாசம்" என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.

தமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் "வானத்தைப் போல" படம் "எஜமான" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது.

"மணிச்சித்ரதாளு" மலையாளத்தில் இருந்து கன்னடத்துக்குத் தாவியபோது "ஆப்தமித்ரா"வாகி கன்னட சினிமா உலகையே புரட்டிப் போட்ட வெற்றியைக் குவித்ததில் விஷ்ணுவர்த்தனின் பங்கும் கணிசமானது. அதுவே பின்னர் "சந்திரமுகி" ஆனது பலரும் தெரிந்த செய்தி. தமிழ் தவிர மலையாளத்தில் மம்முட்டியோடு இவர் இணைந்து நடிக்க ஜோஷி இயக்கத்தில் "கெளரவர்" என்ற திரைப்படம் வெளியானது.

"எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது" என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிகராக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் "விஷ்ணுவர்த்தன்"
























விஷ்ணுவர்த்தன் என்ற கலைஞனின் ஆத்மா சாந்தியடைவதாக

விஷ்ணுவர்த்தன் நடித்த சில படங்களில் இருந்து பாடல்கள்

அலைகள் படத்தில் இருந்து "பொன்னென்ன பூவென்ன கண்ணே"



மழலைப்பட்டாளம் திரைப்படம் தரும் "கெளரி மனோகரியைக் கண்டேன்"



விடுதலை படத்தில் தேன்றிய காதல் பாட்டு "நீலக்குயில்கள் ரெண்டு"



நிறைவாக விஷ்ணுவர்த்தன் குரலில் மலரும் "தூத்து அன்னா துன்னகே" "ஜிம்மி கள்ளு" படத்தில் இருந்து



விஷ்ணுவர்த்தன் படங்களில் குறிப்பிடத்த படமாக இருக்கும் Mutthina Hara படத்தில் இருந்து பாடல் ஒன்று காணொளியாக



உபகுறிப்புக்கள் உதவி: விஷ்ணுவர்த்தன் இணையம், விக்கிபீடியா

Monday, December 28, 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.

இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.

ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான "ரங்கீலா". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் "ரங்கீலா"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல்த்தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். ரங்கீலா குறித்த இன்னொரு விபரமான பதிவைப் பின்னர் பார்ப்போம்.

அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் "ஹிந்துஸ்தானி" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.

இந்தத் தொடரில் ரஹ்மானின் இசையில் ஹிந்தியில் வெளியான தனித்துவமான திரைப்படங்கள் குறித்த பார்வை இடம்பெறப் போகின்றது. அதில் முதலாவதாக வருவது 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான்.

இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. இப்படத்தில் வந்த Banno Raani பாடல் மேலே மேலே இருக்கிறானே என்றும் Ruth Aa Gayee Re என்ற பாடல் "மச்ச மச்சினியே" என்றும் பின்னர் தமிழ் பேசின. Dheemi Dheemi என்ற ஹரிஹரன் பாடல் அப்பட்டமான வட இந்திய இசைமெட்டுக்கு ஒரு சாம்பிள். Yeh Jo Zindagi Hai என்ற பாடலில் சிறீனிவாசைப் பயன்படுத்தியிருப்பார் அதை மீண்டும் சுக்விந்தர் சிங்கோடு இணைத்தும் இன்னொரு பாடலாகத் தந்திருப்பார், அழகாக வந்திருக்கிறது. சிறீனிவாஸ் போன்று சுஜாதா என்ற இன்னொரு தென்னாட்டுக் குயிலையும் Ishwar Allah பாடலில் தேர்ந்தெடுத்தது பொருத்தமான தெரிவுகள்.

1947: Earth படத்தில் வந்த முத்துக்களில் சில இங்கே

படத்தின் மூலப்பின்னணி இசைக் கோர்ப்பு



பியானோ இசையில் இன்னொரு கலவை


சுக்விந்தர் சிங் குழுவோடு பாடும் Ruth Aa Gayee Re, நளினமான இசையோடு அளவெடுத்த சுக்விந்தர் குரல் எவ்வளவு இனிமையைக் கொடுக்கிறது பாருங்கள். இந்தப் பாடல் ஹிந்தியில் வசீகரித்த அளவுக்கு தமிழில் எடுபடவில்லை.


ஹரிஹரன் பாடல் Dheemi Dheemi


Yeh Jo Zindagi Hai பாடலில் இணையும் சிறினிவாஸ், சுக்விந்தர் சிங் குழுவினர்

Tuesday, December 22, 2009

சகலகலாவல்லி பி.ஆர்.விஜயலட்சுமி

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்டிருந்த கேள்வியாக அமைந்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு , இயக்கம் என்ற நான்கு பணிகளைச் செய்த பெண் இயக்குனர் யார் என்பதற்கு பி.ஆர்.விஜயலட்சுமி என்ற சரியான பதிலைப் பலரும் சரியான பதிலை அளித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கிய தயாரிப்பாளர், சக இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளே பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். பின்னர் கே.பாக்யராஜின் "சின்ன வீடு" திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, அறுவடை நாள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுப் பணியைத் தொடர்ந்தார். "ஈரவிழிக்காவியங்கள்" என்ற திரைப்படத்தைத் தயாரித்தும் இருக்கின்றார்.

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய நான்கு பணிகளைச் செய்த ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெரும் விளம்பரத்துடன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய முதல் படமே "பாட்டு பாடவா". இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுமான், லாவண்யா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். படமும் சுமாரான வெற்றியைக் கண்டிருந்தாலும், இந்தப் படத்திற்குப் பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் இசை தான் என்றால் மிகையில்லை.

"பாட்டுப் பாடவா" படத்திற்கு முன்னர் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்த படமே "தாலாட்டு". நவநாகரீக இளைஞன் தோற்றத்தைக் கொண்ட அரவிந்த்சாமியை அரை ட்ரவுசர் போட்டு கழுத்தில் துண்டும் கட்டிய கிராமத்து இளைஞனாக கற்பனை செய்வதே கஷ்டம் இதை இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில் காட்டினால் எப்படி இருக்கும்? கூடவே சுகன்யா, சிவரஞ்சனி போன்றோரும் நடித்த படம் டப்பா வரிசையில் சேர்ந்து கொண்டது. படத்தை இயக்கியிருந்தவர் டி.கே.ராஜேந்திரன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மோகன்ராஜின் அடுத்த தயாரிப்பான "பாட்டுப் பாடவா" பி.ஆர்.விஜயலட்சுமிக்கு இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது

சினிமா உலகத்தில் இருந்து விலகி, தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிப் புகழ் பெற்றதோடு இப்போது சரிகம என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் பி.ஆர்.விஜயலஷ்மி தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெண்கள் தொழிள்நுட்பக் கலைஞர்களாக பெரும் பங்களிப்பை வழங்கியிராத வெற்றிடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் என்ற ரீதியில் மறக்க முடியாதவர்.

தொடந்து பி.ஆர்.விஜயலஷ்மி இயக்கிய "பாட்டுப் பாடவா" ஒளிப்பதிவு செய்த "தாலாட்டு" திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில.

"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா பாடும் "வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்



"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுரேந்தர், நெப்போலியன் (அருண்மொழி) பாடும் "இனிய கானம் புதிய வேதம்"



"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து இளையராஜா, உமா ரமணன் பாடும் "நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்"



"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அட வா வா ராஜா என்னோடு பாட"



நிறைவாக "தாலாட்டு" திரைப்படத்தில் இருந்து மனோ, மின்மினி பாடும் "மெதுவா தந்தியடிச்சானே என் மச்சானே"

Monday, December 21, 2009

றேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.
இந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.
சரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.
பி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.

புதிருக்கான சரியான பதில் இதோ:
அந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி
இயக்கிய படம்: பாட்டு பாடவா
ஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு
அவரின் தந்தை: பி.ஆர்.பந்துலு
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Saturday, December 12, 2009

ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை


ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.

மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.

சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்
பயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.

ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.

எஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.

இன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.

ஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் "பா"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.

முதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து "பொதுவாக என் மனசு தங்கம்"



அடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "போக்கிரி ராஜா" திரையில் இருந்து "போக்கிரிக்கு போக்கிரி ராஜா"



சந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் "ராஜா சின்ன ரோஜா" திரையில் இருந்து "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா"



இசைப்புயல் ரஹ்மானோடு "முத்து"வாக் கைகோர்த்து "ஒருவன் ஒருவன் முதலாளி


இந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்



"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்



தேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.



"தேவாமிர்த"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து



பாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய "துடிக்கும் கரங்கள்" படத்தில் இருந்து "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்"



"தப்புத் தாளங்கள்" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய "என்னடா பொல்லாத வாழ்க்கை"



விஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் "நான் அடிமை இல்லை" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக "ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது"



இசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்



ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு "போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்"



ரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் "ஆசை நூறு வகை" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.



"தேவர் மகனில்" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் "பா"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.
"அடிக்குது குளிரு" அது சரி சரி ;-)



நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.

ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது

போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே

எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்

திறமை இருந்தால் மாலை இடு

இல்லை என்றால் ஆளை விடு




Saturday, December 5, 2009

"பா (Paa)" ர்த்தேன், பரவசமடைந்தேன்!

இசைஞானி இளையராஜாவுக்காக மட்டுமே தியேட்டர் படியேறிய இன்னொரு ஹிந்திப் படம் "பா". முந்தியது ""சீனி கம்". பா படம் நேற்றே வெளியாகியும் பதிவர்களின் அதிரடி விமர்சனங்கள் இன்னும் வராதது ஆச்சரியம்.

இன்று மதியம் 1 மணி காட்சிக்குப் போவோம் என்று நினைத்து தியேட்டருக்கு காரை விட்டேன். போகும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் , படம் பார்க்கும் கொடுப்பினை இருக்குமா என்ற நினைப்போடு மட்டுமே இருந்தேன். அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கட் வாங்கி "பா" வரப்போகும் திரையரங்குக்குள் சென்றேன். பின் வரிசையில் இரண்டு ஜோடிகள். முன்னே தனியே நான். ஆக மொத்தம் ஐந்தே பேர் பார்க்கப் போகும் ஸ்பெஷல் ஷோ "பா (Paa)" குறித்த நேரத்துக்கே ஆரம்பமானது.

"பா" என்று ஒலித்துக் கொண்டே ஒரு பெண் குரல், அட அது ஜெயா பச்சன். படத்தின் கலைஞர்களையும் அவர் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டே ஒரு சின்ன இடம் விட்டு அறிமுகம் "அமிதாப் பச்சன்" என்று சொல்லி ஆரம்பக் காட்சியை புதுமையாகப் படைத்த போதே அதீத எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.

ஒரு தூய அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற நினைப்பில் கேம்பிரிட்ஜில் மேற்படிப்பு படிக்கும் Amol Arte (அபிஷேக் பச்சன்) க்கும், டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் வித்யா (வித்யா பாலன்)க்கும் திடீர்க் காதல், அதனால் விளைவது திடீர்க்கர்ப்பம். குழந்தை வேண்டாம் என்ற கொள்கையோடு இருக்கும் அபிஷேக், ஆனால் இவரின் முடிவுக்கு முரண்டு பிடிக்கும் வித்யா பாலன் உறவை அறுத்து விட்டு அபிஷேக்க்கின் கண்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார். Progeria என்ற மூப்பு நோய் கண்ட Auro (அமிதாப்) 12 வயசில் எம்பி அபிஷேக் பச்சனைத் தன் பள்ளி விழாவில் சந்திக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அபிஷேக் தன்னுடைய குழந்தை தான் அது என்று தெரியாமலேயே நட்புப் பாராட்டி நேசம் வளர்க்கிறார். அபிஷேக் தன் மகனை எப்படிக் கண்டு பிடித்தார். வித்யா பாலனின் முடிவு என்ன என்பது தான் கதை.
படத்தின் முழுக்கதையையும் சொல்லி சுவாரஸ்யத்தைக் கெடுக்க விரும்பவில்லை.

பள்ளி விழாவில் சிறந்த கண்காட்சிப் பொருளுக்குப் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதைத் தேர்ந்தெடுத்தவர் எம்பி Amol Arte. கழிப்பறையில் இருந்து தன் பேண்டை இழுத்துக் கொண்டே இழுத்து இழுத்து நடந்து கொண்டே வருகிறான் Auro. ஆயிரத்துக்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் கூடியிருக்கும் அந்த பள்ளி மண்டபமே அவன் பேர் சொல்லிக் குதூகலிக்கிறது. அவனோ அமைதியாக வந்து மேடையில் பரிசுக் கிண்ணத்தை வாங்குகிறான். என்னடா இது மூடியாக இருப்பானோ என்று நினைப்பை மாற்றி விடுகிறது. தன் இரு பின் பக்கங்களையும் ஒரே சமயத்தில் தட்டி கூக்குரல் இட்டு ஆரவாரிக்கிறான் மாணவர்களோடு. இதுதான் உண்மையான Auro.

Auro என்ற குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் அமிதாப்பை படம் முடியும் வரை தேடவேண்டியிருக்கிறது. ஆகா என்னவொரு குழந்தைக்கேற்ற தனித்துவமான நடிப்பு அது. அவருக்குப் பண்ணியிருக்கும் மேக் அப் கூட செயற்கையாகத் திரையில் தெரியாதது ஒளிப்பதிவின் இன்னொரு சிறப்பு. பொதுவாக இப்படியான நோய் கண்ட குழந்தைகளை வச்சு எடுக்கும் படங்களில் அநியாயத்துக்கும் செயற்கையாக அந்தப் பாத்திரம் அனுதாப மூட்டையை கட்டி வைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு துளி கூட படம் முழுதும் அதை நிரவாமல் அதே நேரம் ஒரு கேலிக்குரிய பொருளாக இந்தப் பாத்திரத்தைக் காட்டாததும் இயக்குனர் பால்கி இன் சாமர்த்தியம் பிளஸ் வல்லமை. சீனி கம் இல் சில காட்சிகளில் தடுமாறிய பால்கி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப் படம் மூலம் ஒரு தேர்ந்த இயக்குனராகி விட்டார்.

ஒரு முறை "கற்றதும் பெற்றதும்" தொடரில் சுஜாதா சொல்லியிருப்பார். ஒரு நல்ல சினிமாவில் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே முதல் 15 நிமிடங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று. அதைத் தான் இந்தப் படமும் பின்பற்றியிருக்கிறது. mudi midi பாடலிலேயே வித்யா பாலன் அபிஷேக் காதல் ஆரம்பமாகி அந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே விடைபெற்றுக் கொள்ளும் வகையில் காட்சியமைப்பு இருக்கின்றது. படத்தின் எந்த ஒரு காட்சியும் அநியாயத்துக்கு நீளமாக இல்லாதது திறமையான எடிட்டிங்கை காட்டுகிறது.

பி.சி.ஸ்ரீராம் இன்னமும் மெளன ராகம் காலத்திலேயே இருக்குமாற் போல தன் ஒளிப்பதிவை இளமையாக வைத்திருக்கிறார். இவருக்குப் பின்னால் ஒரு ஒளிப்பதிவு பள்ளியே உருவாக்கி நல்ல கலைஞர்களை வளர்த்து விட்டாலும் இன்னமும் பி.சி.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது காட்சி அமைப்புக்களும், ஒளிப்பதிவு நேர்த்தியும்.

"ஏன் நீங்க வெள்ளைச் சட்டை போடுறீங்க" சிறுவன் அவுரு கேட்கிறான்.
"அரசியல்வாதிகள்னா வெள்ளைச் சட்டை போடுவாங்க" எம்பி அமோல் சொல்கிறார்.
"துக்கத்துக்கும் கூட வெள்ளைச் சட்டை போடுவாங்க, இல்லையா" மீண்டும் அவுரு
"ஆமா" எம்பி அமோல்
"ஓ நாட்டைச் சாவடிச்சுட்டோமே என்ற துக்கத்தில் தானே வெள்ளைச் சட்டை போடுறீங்க, ஹோ ஹோ ஹோ" அவுரு நையாண்டி பண்ணிச் சிரிக்கிறான்.

குழந்தைகளுக்கான பள்ளிக் காட்சிகளில் வருகின்ற வசனங்களில் அதி மேதாவித்தனம் இல்லாத குழந்தைகளின் மொழி நடையும் உணர்வும் பேசப்படுகின்றன.
அபிஷேக் - வித்யா ஊடல், வித்யா - தாய் சம்பாஷணைகள் சினிமாத்தனமில்லாத எளிமை.
உண்மையிலேயே வசனகர்த்தாவும் "பா" வின் உயிரோட்டத்தில் பங்கு போடுகிறார். ஹிந்தி வகையறாப் படங்களைப் பார்க்கும் போது ஆங்கில சப்டைட்டில்கள் படத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும். அந்த வேலையை இங்கே செய்யாத புண்ணியவானைக் கூடப் பாராட்ட வேண்டும்.

சிறுவனாக வரும் அமிதாப் முதல் இடத்தில் இருந்தால், அடுத்த இடத்தில் நடிப்பில் கலக்குபவர் வித்யா பாலன். இவ்வளவு நாளும் ஒரு நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்துக் கொண்டு நான் கஷ்டப்பட்ட கதை உனக்குத் தெரியுமா என்று பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் தன் கண்களாலும் முக பாவனைகளாலும் உணர்ச்சிகளைக் காட்டியிருக்கும் வித்யாபாலனுக்கு இந்தப் படம் பெரிய வரம். அமிதாப்பின் நடிப்புலக இளமைக் காலம் முழுமையான மசாலாவோடு போய்விட்டது. ஆனால் அபிஷேக்கிற்கு இப்படியான நேர்த்தியான கதைகளில் எல்லாம் வாய்ப்புக் கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். இவரின் தந்தையாக வந்து வழக்கம் போல் இயல்பாகச் செய்கிறார் பர்வேஷ் ராவால். வித்யா பாலனின் அம்மாவாக நடிக்கும் அருந்ததி நாக் உம் அளவாகச் செய்து சிறப்புச் சேர்க்கிறார்.

இளையராஜா எங்கே போனாலும் துரத்திச் சென்று கேட்டுப் பரவசமடையும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய அளவில் கிடைத்த ஆஸ்கார் இந்த "பா". இசைஞானிக்கு மாற்றீடாக இந்தப் படத்தில் இன்னொரு ஜீவனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை " என்ற பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக மெட்டுக் கட்டி இசையமைத்து ஆனால் படத்தில் வராத பாடல். ஆனால் 28 வருஷங்களுக்குப் பின்னர் "Halke se bhole" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.

"மூடி மூடி" பாடல் உட்பட எல்லாப் பாடல்களையும் தேவையில்லாமல் நுழைக்காது இலாவகமாகக் காட்டி அந்தப் பாடல்களின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இளையராஜாவின் பாடல்களை குப்பனும் சுப்பனும் ரீமிக்ஸ் ஆக்கிக் கொல்லும் இந்தக் காலத்தில் தானே விதவிதமான படையலாக மீளத் தரும் போது அதன் சுகந்தமே தனி தான்.

படத்தின் மெயின் தீம் இசையான அந்த வயலின்களின் ஆவர்த்தனத்தை மகிழ்ச்சி, சோகம் என்று விதவிதமாகக் கலவையாகக் காட்டியது ஒரு பக்கம். பாத்திரங்கள் மெளனிக்கும் போது மெளனித்து, பீறிடும் போது ஆர்ப்பரித்துக் கலக்கியிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை. அம்பேத்கர் நகர் என்ற வறியோர் பகுதியில் நடக்கும் அரசியல் பரப்புக் காட்சியில் தளபதியில் கலெக்டர் அரவிந்த்சாமிக்குப் பின்னணியில் ஒலித்த அதே இசை மீளவும் வந்து நிரப்புகிறது. படத்தின் ஒரு காட்சியில் அபிஷேக்கின் மொபைல் போன் ஒலிக்கும் ரிங் டோன் இசை "பல்லவி அனுபல்லவி" படத்தில் வரும் பாடலின் இசைவடிவமாகத் தந்து கிடைத்த சந்து பொந்துகளையும் இசையால் நிரப்பி விடுகிறார். இசைஞானிக்குத் தேவை இப்படியான திறமையாக வேலை வாங்கக் கூடிய ஒரு நல்ல இயக்குனர்.

படத்தைப் பார்த்து முடிக்கும் போது ஒரு எண்ணம் வருவது தவிர்க்க முடியாதது. ஒரு திறமையான இயக்குனர் மட்டுமல்ல , சாமார்த்தியமாகக் கதை சொல்லிக் கட்டிப் போட வல்ல பால்கி என்ற இயக்குனர் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா என்ற ஜாம்பவான்களின் திறமையை அளவோடும் அழகாகவும் பயன்படுத்தி இப்படியான படைப்புக்களைக் கொண்டு வரவேண்டும், அதை ரசிகர்கள் முழுமனதாக ஆதரிப்பதன் மூலம் அந்த எண்பதுகளில் விரவிய இசைஞானத்தை அள்ளிப் பருகலாம்.

Wednesday, December 2, 2009

2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக

2007 இல்
உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?

2008 இல்
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

ஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்
இந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.

போட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.

பதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்
தரப்படும்.

போட்டிக்கான ஆக்கங்கள்

1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்

ஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்

2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
பாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்

3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?

ஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.


2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண

போட்டி விதிமுறைகள்

1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.

2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.

3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு

4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.

முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.
தமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.



Thursday, November 19, 2009

றேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்?

கடந்த ரேடியோஸ்புதிர் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நண்பர்கள் பலர் சிக் லீவ் எடுத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு களம் இறங்குகின்றேன்.

ஒரு ஹிந்திப் பிரபலம் தான் சேமித்த காசையெல்லாம் கரைக்கவேண்டும் என்ற விதிப்பயன் காரணமாக சினிமாப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஹிந்தி, தமிழ் என்று படங்களைத் தயாரித்து சேமித்த காசையெல்லாம் கரைத்தார். அப்படியாக அவர் தயாரித்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இயக்கம் பிரபல விளம்பர இரட்டை இயக்குனர்கள். ராசியில்லாத அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகனோடு அன்றைய ராசியில்லாத நாயகனும் நடித்திருந்தார். அந்த ராசியில்லா நாயகன் படத்திலே ஆமையை நண்பனாக "இமையவர்மன்" என்று பெயர் சூட்டி தன் காதலை எல்லாம் சொல்வாரே.

புதிரில் சொன்ன விஷயங்களை வைத்து படத்தையோ அல்லது அந்த இசையமைப்பாளரையோ ஊகிக்க முடிகிறதா? இல்லாவிட்டால் இந்த ஒலித்துண்டத்தையாவது கேட்டுப் பாருங்களேன் கண்டுபிடித்தால் உற்சாகம் தான் ;)

Get this widget | Track details | eSnips Social DNA


கேட்ட கேள்விக்கான சரியான பதில்

படம்: உல்லாசம்

நடிகர்கள்: அஜித், விக்ரம்

தயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்

இசை: கார்த்திக் ராஜா

இயக்கம்: ஜேடி - ஜெரி

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Tuesday, November 17, 2009

"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி

கண்ணதாசனின் "தென்றல்" பத்திரிகையில் ஆரம்பித்து பின்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவில் சேர்ந்து எடிட்டிங் பயிற்சி பெற்று , உதவி இயக்குனராக மாறி பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தாலும் மிகவும் அடக்கமான எளிய மனிதர் இவர். சில வருஷங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவைப் பார்க்கச் சென்ற நான் இவரை சந்தித்துப் பேசியபோது இருகரங்களையும் பற்றியவாறே நேசத்துடன் பேசியது இன்னும் பசுமரத்தாணி போல இருக்கின்றது.

நான் பணிபுரியும் இன்னொரு எப்.எம் வானொலியான "தமிழ் முழக்கம்" வானொலிக்கு இந்திய செய்திகளைப் பகிர்ந்து வரும் திரு ராணி மைந்தன் அவர்கள் பல சுயமுன்னேற்ற, தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கின்றார். அவர் படைப்பில் அண்மையில் வெளி வந்ததே விகடன் பிரசுரமான "ஏவிஎம் தந்த எஸ்பிஎம்". இந்த நூல் ஆக்கப்பட்ட பின்னணி குறித்த ஒலிப்பேட்டி ஒன்றை கடந்த வாரம் தமிழ் முழக்கம் வானொலிக்காக திரு.ராணி மைந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.
அந்தப் பகிர்வை இங்கே கேட்கலாம்.



ஒலிப்பேட்டியில் இடம்பெற்ற சில சுவையான தகவல்கள்.

ராணி மைந்தனின் ஒருவருஷ கால உழைப்பாக இந்த நூல் வந்திருக்கின்றது.

எஸ்.பி.முத்துராமன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போது ராணி மைந்தனை அழைத்து வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு படமாக தன் அனுபவங்களை சொல்லச் சொல்ல பதினாறு மணி நேரங்களுக்கு மேலாக ஒலிப்பதிவு செய்து நூலை ஆக்கியிருக்கின்றார்.

முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் டயரியை எடுத்து ஒவ்வொரு மாதமும் தனக்குத் தேவையான நாட்களின் கால்ஷீட்டை இவரே எழுதி வைத்துவிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.

ரஜினியை வைத்து 25 படங்களை எடுத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கே சாரும்.

ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்துராமன் வாழ்க்கை வரலாற்று நூலை விழாவாக எடுத்துச் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் எந்திரன் படப்படிப்பு இருந்த காரணத்தால் எளிமையாக ரஜினி வீட்டில் வைத்து வெளியிடப்பட்டது.

Thursday, November 12, 2009

இசையமைப்பாளர் கங்கை அமரன்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.

அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் "புதிய வார்ப்புகள்" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.
இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

"கோழி எப்படிய்யா கூவும்" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த "கோழி கூவுது" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. "உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.

மீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. "இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.

கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் "விடுகதை ஒரு தொடர்கதை" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு புறம்"




சம காலத்தில் வந்த இன்னொரு படம் "மலர்களே மலருங்கள்". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்'




"அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்
"காதல் வைபோகமே" பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து " மூக்குத்திப் பூ மேலே காத்து"



1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. "இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் "நீலவான ஓடையில்" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் "நீலவானச் சோலையில்" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்."வாழ்வே மாயம்" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.



அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. "பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் "அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா". அப்போது தான் வெளி வந்த படமான "அத்த மக ரத்தினமே" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.



"ஜீவா" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு "சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.




இசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

Saturday, November 7, 2009

சுரேஷ் சக்ரவர்த்தி ஒலிப்பேட்டி

"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின் அனுபவங்களில் சொன்னது போலத் தான் அந்தப் பேட்டி எடுத்த நிகழ்வும் அமைந்திருந்தது.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னர் இணையம் என்ற ஒரு ஊடகம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசும் நல்லுலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்த வேளை இணையமூலமான தமிழ் ஒலிப்பகிர்வை வழங்கிய முன்னோடிகளில் India Direct இன் கலாபுகழ் தமிழோசை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. அதில் பாடல் தொகுப்புக்கள், பேட்டிகள் என்று சுரேஷ் சக்ரவர்த்தியும் பின்னாளில் சுபஸ்ரீ தணிகாசலமும் வழங்கிய ஒலிப்பகிர்வுகள் தனித்துவமானவை. அப்போது நான் பல்கலைக்கழகப் படிப்புக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்திருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த தனிமை வாழ்வின் குறையை கொஞ்சமாவது நிவர்த்தி செய்தது இந்த ஒலித் தொகுப்புக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு ஆனந்தமடைவேன்.


காலம் பல வருஷங்களைச் சுழற்றிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார் என்பது மட்டும் தெரிந்த நிலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை வானொலிப் பேட்டிக்கு அழைத்து வருவோம் என்று எப்போதோ நினைத்திருந்தேன். வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு இருபது நிமிடம் வரை இவரை நேற்றுப் பேட்டி எடுக்கப் போகின்றோம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் மெல்பனில் உள்ள உணவகத்துக்கு அழைத்து என் தகவலைச் சொல்லி வைத்தேன். சில நிமிடங்களில் என் போனுக்கு அழைத்தார். இன்னும் பத்து நிமிஷங்களில் உங்கள் அனுபவங்களை எமது வானொலி நேயர்களுக்குப் பகிரமுடியுமா என்றேன். திடீரென்று கேட்டதால் என்ன சொல்வாரோ என்று நினைத்த எனக்கு தாராளமாக பண்ணலாம் பிரபா என்று சொல்லி வைத்தார். பேட்டி ஆரம்பமானது, 57 நிமிடத்துளிகளில் மனுஷர் தன் கலகலப்பான பேச்சில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து நிறைவானதொரு பேட்டியைத் தந்து விட்டார். இந்தப் பேட்டியை வானொலியைக் கேட்டவர்கள் மட்டுமன்றி இணைய ஒலிபரப்பின் மூலமும் நண்பர்கள் இணைந்து கேட்டு ரசித்தார்கள்.

தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதைக் கேட்போம்



பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சில பகிர்வுகள்.

நடிகை ஸ்ரீபிரியாவை ஆலு அக்கான்னு அழைப்பேன், எவ்வளவோ பேர் வந்து இதுக்கு வரணும்(கலைத்துறை) சாதிக்கணும், பேரோடு சேர்ந்து புகழும் புகழோடு சேர்ந்து பணமும் கிடைக்கணும்னு வருவாங்க. ஆனா உனக்கு எல்லாமே ஈசியா, சுலபமா வந்ததால உனக்கு இதனோட அருமை தெரியல. நீ விட்டுட்டுப் போறாய் அப்படின்னாங்க. நான் எதுவுமே பிளான் பண்ணி இப்படி வரணும் அப்படி வரணும்னு வரலே.

00000000000000000000000000000000000000000000000000000

அப்போது சினி இண்டஸ்ரியில் 15 ஆர்டிஸ்ட் தேதி பார்த்துக்கிட்டிருந்தேன். ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா என்னை அழைச்சுப் போனாங்க. அப்போது எனக்கு 18, 19 வயசு, விளையாட்டுப் பையனா இருந்த என்னை கூட நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஊக்கப்படுத்தி நடிக்க வச்சார். எனக்கு தெலுங்கு தெரியாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி வச்சு படிச்சா தமிழில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. "நாய் வேஷம் போட்ட குலைச்சாகணும், மொழியை கத்துக்கோ" அப்படின்னு எஸ்.பி.பி சொல்லி நிறைய தெலுங்குப் படம் பார்க்க வச்சு ஒரு மாசம் அந்த மொழியை கற்றேன்.தெலுங்கில் தொடர்ந்து 3 படம் பண்ணினேன்.


பிரேமா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை நான் வழங்கிய முந்திய பதிவைக் காண


000000000000000000000000000000000000000000000000000000000000



தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தேன். அந்தப் படத்தில் கூட நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன் அவர் நான் சூட்டிங்கில் பண்ணிய சேஷ்டைகளைப் பார்த்து, அப்போது அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு பாத்திரத்துக்காக சிபார்சு செஞ்சார்.
பாலசந்தர் ஆபீஸ் போனேன்.
தொடர்ந்து பாலசந்தர் மாதிரி பேசிக்காட்டி அந்த நாள் சம்பாஷணையை நினைவு படுத்துகிறார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நான் டிவியில் ரொம்ப பிரபலமா இருந்த நேரம் பாலசந்தர் என்னை வச்சு "சொர்ணரேகை"ன்னு ஒரு சீரியல் எடுத்தார். சித்தி சீரியல் புகழ் பாஸ்கரின் முதல் இயக்கம் அது. காமடிக்கு அப்போது நான் பிரபலமா இருந்த நேரம் என்னை ஒரு ஜோசியராக வரும் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வச்சார். எனக்கு சுட்டுப் போட்டாலும் செந்தமிழ் வராது. ஆனால் அதில் செந்தமிழ் பேசி , கர்னாட்டிக் பாட்டு பாடி எடுக்கணும். குறிப்பாக அந்தக் காட்சியில் வசனம் பேசுவதெல்லாம் டப்பிங் இல்லாம லைவா பண்ணியிருந்தோம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000



சன் டிவியில் இணைந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்,

சிறுவயசு முதலே கலாநிதி மாறன், நான், சக்சேனா, கண்ணன், ஷம்மின்னு நாம எல்லாம் நண்பர்கள். முரசொலியின் வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு அபோது எழுதினேன். கலாநிதி மாறனை புகழ், தயாநிதி மாறனை அன்பு அப்படின்னு அழைப்போம். அதன் பாதிப்பில் வந்தது தான் பின்னாளில் இணைய ஒலிபரப்பாக நான் தயாரித்த கலாபுகழ் தமிழோசை நிகழ்ச்சி.

துபாய்ல இருந்து அப்போது வந்திருந்தேன். சன் டிவிக்கு ஸ்டூடியோ கிடையாத நிலையில் சத்யா ஸ்டூடியோவில் கண்ணன் என்பவர் இயக்கிய டிக் டிக் டிக் நிகழ்ச்சி. செட் எல்லாம் போட்டு ஆடியன்ஸும் வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முக்கியமான காமடியன் வராத நிலையில் கலாநிதி மாறன் "நீயே பண்ணுப்பா"ன்னு மேடையில் ஏத்தி விட்டார். ஓவர் நைட்டில் என்னை ஸ்டாராக்கி விட்டார். தொடந்து துபாய்க்கு நான் போக முடியாம ஏழரை வருஷங்கள் ஆயிரக்கணக்கான சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.
முதன் முதலாக சன் டிவியின் Senior manager of Programming ஆக இருந்திருக்கேன்.

அமிதாப் பச்சனின் எபிசி கார்ப்பரேஷனுக்காகப் பண்ணிய "பதி சபாபதி" நாடகம் பிறந்த கதை. அதனைத் தொடர்ந்து அவ்வை ஷண்முகி படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் தொடந்த வழக்கு பற்றியும் பேசுகிறார்.

நான்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறி கடைசியில் தேர்வான உமாவுடன் பெப்சி உங்கள் சாய்ஸ், மீண்டும் மீண்டும் சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கிய நினைவுகளைப் பகிர்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000


பிரபு தேவா தயாரித்த சீரியல் கொடுத்த சிக்கலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு கதையை பேசுகின்றார். ஜெயா டிவியின் முதல் நாள் லைவ் நிகழ்ச்சியில் சன் டிவி என்று வாய் தடுமாறிப் பேசி வாங்கிக் கட்டியதும் , விளம்பர இடைவேளையில் ஜெயலலிதா தொலைபேசியில் அழைத்துப் பேசியதையும் நினைவுபடுத்துகின்றார்.

0000000000000000000000000000000000000000000000000000000

உத்தம்குமாரின் India Direct மூலம் கலாபுகழ் தமிழோசை என்ற இணைய ஒலிபரப்பை நடத்திய அந்த நான்கு வருச நினைவுகளும் அது கொடுத்த திருப்தியையும் சொல்லி மகிழ்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000000

தனது கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது நடத்தும் Madras Banyan Tree என்ற உணவகம் ஆரம்பித்த கதையோடு பேட்டி நிறைவை நாடுகின்றது.

00000000000000000000000000000000000000000000000000000000

பி.குறிப்பு: சுரேஷ் சக்ரவர்த்தியின் காட்சி வடிவத்தை இந்தப் பதிவுக்குப் போடவேண்டும் என்று எண்ணி இன்று பகல் பூராவும் தேடி ஒருவாறு அழகன் பட டிவிடி வாங்கி அதில் இருந்து அவர் stills தயாரித்து இங்கே அவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன். இவரைப் போல இன்னொரு சுவாரஸ்யமான கலைஞரைச் சந்திக்கும் நாள் கிட்டும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.

Tuesday, November 3, 2009

றேடியோஸ்புதிர் 47 - "ராஜாதி ராஜா" படத்தில் வராத பாட்டு

"ராஜாதி ராஜா" படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.

படத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த "டவுசர் பாண்டி" ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த "பெத்தவமனசு" என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் 'பெத்தவமனசு' படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.

போட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.

இந்தப் படத்தில் வராத பாடல் "உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்

அந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்

Wednesday, October 28, 2009

சிறப்பு நேயர் - யோகா (யோவாய்ஸ்)

இந்த வாரம் சிறப்பு நேயராக வருபவர் இலங்கையின் ஊட்டி என்று வர்ணிக்கக்கூடிய குளு குளு பிரதேசம் நுவரெலியாவில் இருந்து "யோ வாய்ஸ்" யோகா.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலையுலகில் இருக்கும் யோகாவின் பதிவுகள் போலவே அவரது முத்தான ஐந்து ரசனைகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து யோகா பேசுவதைக் கேட்போம்

எனது பாடல் ரசனை பொதுவாக மற்றவரோடு ஒத்து போவதில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் ரொம்ப சந்தோஷமா பாட்டு கேட்பேன். ரொம்ப துக்கமா அதுக்கும் பாட்டு கேட்பேன். பாடல்கள் எனக்கு எபபோதும் உற்சாகம் தருபவை. ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். ஏ.ஆருக்கு ஆஸ்கார் கிடைத்த அன்று நாங்கள் நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினோம். எனக்கு பிடித்த 5 பாடல்கள்.

01. விழிகளின் அருகினில் வானம் (படம் - அழகிய தீயே)


எனது மனநிலை எந்த நிலையிலிருந்தாலும் அதை சாந்தப்படுத்த கூடிய பாடல். இந்த பாடல் எனக்கு பிடித்தற்கு காரணம் இந்த பாடலில் சகலமும் பரிபுரணமாக இருப்பதனாலாகும். இசை, பாடல் வரிகள், குரல் என இந்த பாடலின் சிறப்பு சகலவற்றிலும் தங்கியுள்ளது. பாடல் வரிகள் வாலி என சில இணையதளங்களிலும் கவி வர்மன் சில இணையதளங்களிலும் உள்ளது.மிகவும் அழகான வர்ணனைகள், அதை அழகாக இசையமைத்தவர் ரமேஷ்விநாயகம்.




02. என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே (படம் - இதயமே இதயமே)


ஒரு டப்பிங் படத்தில் அமைந்திருந்தாலும் இந்த பாடல் மனதை ஈர்க்குமென்பதில் சந்தேகமேயில்லை. முக்காலா போன்ற பாடல்கள் பாடிய மனோவா இந்த மெல்லிய பாடலை பாடினார் என்பது ஆச்சர்யம். இந்த பாடலின் காணொளியை இதுவரை பார்த்ததில்லை. இப்போதும் இந்த பாடல் கேட்க வேண்டுமானால் வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில்தான் கேட்பேன். காரணம் இந்த பாடல் கேசட்டில்தான் என்னிடம் இருக்கிறது.



03. புது வெள்ளை மழை (படம் ரோஜா)

ஏ.ஆர் இசையமைத்த முதல் படத்திலுள்ள பாடல். சுஜாதா, உன்னி மேனன் குரல்களும், அந்தகாலத்தில் மிகவும் வித்தியாசமான இசையையும் கொண்ட இந்த பாடல் என்னை ஈர்த்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இதிலுள்ள கோரஸ். இப்பவும் வானொலியில் இந்த பாடல் போகும் போது இது போல் இன்னொரு பாடல் இல்லை என தோன்றும்.




04. இளைய நிலா பொழிகிறது (படம் - பயணங்கள் முடிவதில்லை)

இசைஞானியின் இசையில் எஸ்.பீ.பீ யின் காந்தக்குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் கேட்க கேட்க சலிக்காத அவ்வளவு இனிமையான பாடல். இந்த பாடல் பிடிக்க இன்னொரு காரணம் எங்களது சீனியர் ஒருத்தர் பள்ளி நாட்களில் இந்த பாடலை தனது பொக்ஸ் கிட்டாரில் அழகாக வாசிப்பதும் ஆகும். இந்த பாடலை நடுராத்திரி தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி கேட்க சொன்னாலும் கேட்பேன். அவ்வளவுக்கு இந்த பாடலை நான் காதலிக்கிறேன்.



05. வெள்ளைப்பூக்கள் (படம் - கன்னத்தில் முத்தமிட்டால்)

ஏ. ஆரின் இசையில் அவரே பாடிய பாடல். இந்தபாடல் எனக்கு பிடிக்க காரணம் பாடிய ஏ.ஆரின் குரல். ”முஸ்தபா முஸ்தபா”, ”அந்த அரபிக்கடலோரம்” பாடியவருக்கு இப்படி ஒரு பாடல் பாட முடியுமென நாங்கள் நினைத்திருக்கவில்லை. ஆஸ்கர் தமிழனின் குரலில் உள்ள பாடல்களில் எனக்கு என்றென்று் பிடித்த பாடல்.





நன்றி

யோகா (யோவாய்ஸ்)

Wednesday, October 21, 2009

மலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக் கலைஞன்

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலகட்டத்தில் ரி.எம்.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.

அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"



சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)

நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து "சிந்து மணி புன்னகையில்" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.



நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.



சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்

முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.



சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.



மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்



நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது