Pages

Wednesday, August 25, 2021

புரட்சிக் கலைஞர் பாட்டுக்கு ஒரு தலைவர் ❤️🎸 கே.ஜே.ஜேசுதாஸ் & ஜெயச்சந்திரன் 🥁

 “ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு 

காத்தாடி போலாடுது 

பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு 

பொன்மானே உன்னைத் தேடுறேன்” 

எண்பதுகளில் ரெக்கோர்டிங் பார்களில் இருந்து தேநீர்ச்சாலைகள் வரை, கோயில் திருவிழா நாதஸ்வரங்களில் இருந்து விடலைப் பையன்கள் ஏன் சின்னஞ்சிறு பொடுசுகள் வரை இந்தப் பாட்டு வந்த நேரம் ஒரு மயக்க நிலைக்கு எடுத்துச் சென்றது. கம்பீரத் தோற்றம் கொண்ட விஜயகாந்த் என்ற நாயகனுக்கு முற்றிலும் மாறுபட்ட மென் குரல்களான ஜெயச்சந்திரனும், கே.ஜே.ஜேசுதாஸும் கச்சிதமாகப் பொருந்திப் போனார்கள். இதுவொரு முரண் நிறைந்த சுகானுபவம். 

இந்த மென் குரல் முரண் பற்றிப் பேசும் போது கேப்டனுக்குத் திருப்புமுனை கொடுத்த “சட்டம் ஒரு இருட்டறை” காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ச்சியாக அவரை வைத்து இயக்கிய போது பின்னணிக் குரல் கொடுத்தவர் இன்னொரு மென் குரல் எஸ்.என்.சுரேந்தர். 

கூடவே

“தனிமையிலே ஒரு ராகம்” 

https://www.youtube.com/watch?v=YrK2xcu8uYM

விஜயகாந்துக்கான ஆரம்ப கால ஹிட் பாடல்களில் ஒன்றைக் கொடுத்தவர் சுரேந்தர்.

“இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே”, “காத்திருந்து காத்திருந்து”, “ராசாத்தி உன்னை” என்று வைதேகி காத்திருந்தாளில் ஜெயச்சந்திரன் கொடுத்த பாடல்கள் மூன்றுமே முத்தாகக் கிட்ட, 

https://www.youtube.com/watch?v=VbidRaHhBW4

தொடர்ந்து அந்தப் படத்தை இயக்கிய ஆர்.சுந்தரராஜனின் சீடர் பாலு ஆனந்த் இயக்கிய “நானே ராஜா நானே மந்திரி” படத்தில் கொடுத்த “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்” 

https://www.youtube.com/watch?v=TH75xoyjPvY

இன்றும் ராஜா இசையமைத்த பாடல்களில் அதிக தடவை உச்சரிக்கும் பாடல்களில் ஒரு பாடலானது. 

முன்னதில் மூத்தவர் P.சுசீலாவோடு இணைந்தவர் “தேகம் சிறகடிக்கும்” 

https://www.youtube.com/watch?v=Hmh7sw5lmhI

என்று அதே படப் பாடலில் சித்ராவோடு இணைந்தார்.

அம்பிகாவை ஜோடியாக்கி விஜயகாந்த் நடித்த தழுவாத கைகளில் அவருக்கு மாறுபட்ட குடும்பத் தலைவர் வேடமாகக் கொடுத்து இயக்கினார் ஆர். சுந்தரராஜன். 

“விழியே விளக்கொன்று ஏற்று” 

https://www.youtube.com/watch?v=NkVZoLKtESc

ஆகா இசை சொட்டும் பாட்டு என்று இதைப் படிக்கும் போதே முகம் விளக்காய்ப் பிரகாசிக்குமே?

இதுவும் இன்னொன்றுமாக “ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ” 

https://www.youtube.com/watch?v=MR5rk1AhGQY

பாடலும் மீண்டும் ஜெயச்சந்திரன் குரல் கொடுத்த விஜயகாந்த் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்து கொள்ள, 

இதோ நானிருக்கிறேனே என்று “பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா” https://www.youtube.com/watch?v=SA3cIpyUOZQ&t=213s

என்று இன்னுமொரு கலக்கல் பாட்டு போட்டி போட்டது. அந்தப் பாடல் இடம் பிடித்த “என் புருஷன் எனக்கு மட்டும் தான்” படத்தில் இன்னொன்றாகக் கொடுத்த “புல்லைக் கூடப் பாட வைத்த” 

https://www.youtube.com/watch?v=HAcLOuxlStM

ஜெயச்சந்திரன் தானும் உருகி எங்களையும் உருக வைப்பார்.

“ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே” 

https://www.youtube.com/watch?v=OjOZFpjnJwo

அப்படியே றேடியோ சிலோன் காலத்துக்குக் கொண்டு போய் இருத்தி விடும். அந்தப் பாடல் இடம்பிடித்த “அகல் விளக்கு” காலத்தில் இருந்து அகலாத குரலாக கே.ஜேசுதாஸ் விஜய்காந்துக்குத் தோதுவாக இருந்தார். 

எங்கள் காலத்து இளைஞர்களுக்குத் தீனி போட்ட பாடல் என்றால் “அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ” (சிறையில் பூத்த சின்னமலர்). 

https://www.youtube.com/watch?v=mHIdn0VaiAQ

ஆனால் அந்தப் பாடலுக்கு முன்பே வெளி வந்த பாடல்கள் தான் நாளாக நாளாக இன்னும் அதிகம் ஈர்த்தன.

அப்படியொன்று தான் “சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா” 

https://www.youtube.com/watch?v=GQWF5D94QDg

கேட்கும் போதெல்லாம் தாய்மை உணர்வு வந்து ஒட்டிக் கொள்ளும். 

“பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்

கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்” என்ற வரிகளில் மிதக்கும் போது கங்கை அமரன் கவி நயத்தை மெச்சும் மனசு.

பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வந்த இந்தப் பாட்டோடு “அடி கானக் கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன்” என்று குத்தாட்டத்தில் பின்னியிருப்பார் ஜேசுதாஸ்.

ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்

என்று ஹம் கொடுத்துக் கொண்டே “மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ” என்று உங்களுக்குள் பாடி விட்டு பின்னர் அந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் சொர்க்கம் ஐயா. இதே பாட்டு சோக கீத வடிவில் ஒற்றை ஆளாக கே.ஜே.ஜேசுதாஸ் உருக்குவார் “நீதியின் மறுபக்கம்” படத்துக்காக.

“உன் மடிமேல் நான் மயங்க….

நாள் விடிந்தால் கண்ணுறங்க….

காவேரி ஆத்துக்கு கல்லில் அணை

கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை

நான் போடவா….” 

https://www.youtube.com/watch?v=WzEg65o8aEE

அப்படியே ஓடிப் போய் இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு வாருங்களேன்.

இங்கே பேசிக் கொண்டிருக்கும் கே.ஜே.ஜேசுதாசும் ஜெயச்சந்திரனும் ஒரே படத்தில் விஜய்காந்துக்குக் குரல் கொடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற கனவை மெய்ப்படுத்தியது “அம்மன் கோயில் கிழக்காலே”. ஜேசுதாஸ் தன் பங்குக்கு “உன் பார்வையில் ஒராயிரம்” என்று ஒரு சூப்பர் ஹிட் பாட்டு கொடுத்திருக்க, “பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்னராசா” என்று ஜெயச்சந்திரன் தன் பங்கையும் நிறைவாக்கியிருக்கிருப்பார். 

அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் என்று நான்கு முன்னணிப் பாடகர்கள் விஜயகாந்துக்குக் குரல் கொடுத்த அதிசயம் நிகழ்ந்தது. அதில் உன் பார்வையில் ஓராயிரம் https://youtu.be/PtL-ZO88hOA ஜேசுதாஸுக்கும், 

பூவ எடுத்து ஜெயச்சந்திரனுக்கும் சேர்ந்தது.

இதில் “பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே” 

https://www.youtube.com/watch?v=lfOYYP241SM

பாடலை எந்தவித வாத்தியப் பின்னணி இல்லாமல் கூட அழகாகப் பாடி முடிக்கலாம், அவ்வளவுக்கு அழகானதொரு மெட்டு இலக்கணம் அமைந்திருக்கும்

கே.ஜே..ஜேசுதாசுக்கு பி.சுசீலா,  எஸ்.ஜானகி, சித்ரா என்று ஜோடி சேர்ந்த பாடகிகள் எல்லோருமே நிறைவானதொரு பங்களிப்பைக் கொடுத்திருக்க, வாணி ஜெயராமோடு அவர் சேர்ந்த பாடல்களைத் தனிப் பாடல் கொத்தாகப் போடுமளவுக்கு நல்ல நல்ல பாட்டுகள் இருக்கின்றன. நல்ல என்றதும் நினைவுக்கு வருது “நாளை உனது நாள்” படத்தில் வரும் “வெண்ணிலா ஓடுது” 

https://www.youtube.com/watch?v=UZQzAphWemw

பாட்டு. பாடகி சுனந்தாவின் முதல் ஜோடிப் பாட்டுக்காரர்  ஜெயச்சந்திரன், அவரின் அறிமுகக் காலத்தில் வந்த “சிறைப் பறவை” இல் கே.ஜே.ஜேசுதாஸ் உடன் ஜோடி சேர்ந்தது “ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி”.

https://www.youtube.com/watch?v=zHq3jyS5BBw

“காதல் கீதம்” என்று தமிழில் மொழி மாற்றிய அபினந்தனா தெலுங்குப் படத்தில் “அதே காதல்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாட்டின் மெட்டும் இசையும் விஜய்காந்த் நடித்த “அமுத கானம்” படத்தில் கே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி குரல்களில் “ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடவா” ஆனது.

https://www.youtube.com/watch?v=AZZjvziBvJU

“குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்” 

https://www.youtube.com/watch?v=gzzdkIcBcSA

இன்றும் பெரு விருப்போடு வானொலியில் ஒலிபரப்பும் கல்யாணப் பாட்டு தொண்ணூறுகளில் விஜய்காந்துக்கான குரலாக “எங்க முதலாளி” க்காகக் கொடுக்க, அதே கால கட்டத்தில்

“வண்ண மொழி மானே” 

https://www.youtube.com/watch?v=QkrOwAwBxSE

என்று சேதுபதி ஐ.பி.எஸ் குரலானார் ஜேசுதாஸ்.

“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே” 

https://www.youtube.com/watch?v=doaaUf7uJ2w

என்று ஜேசுதாஸ் பாசமழை பொழிந்தார் புலன் விசாரணைக்காக.

முன் சென்னதெல்லாம் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்காந்துக்காக கே.ஜே.ஜேசுதாசும் ஜெயச்சந்திரனும் கொடுத்தவை. இதை விட ஏராளம் இன்னும் உண்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் விஜய்காந்தின் ராசிக் குரல்களை விட்டு வைக்கவில்லை. “காற்றோடு புல்லாங்குழல் அது கண்ணே நீ சொல்லும் தமிழ்” என்று “கஸ்தூரி மான்குட்டியாம்”

https://www.youtube.com/watch?v=QT_qjXXiW_g

 பாடலில் ஜெயச்சந்திரனை “ராஜ நடை போட வைத்தார்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் ஐக் கொண்டாட வேண்டுமென்றால் “ தோடி ராகம் பாடவா மெல்லப் பாடு” 

https://www.youtube.com/watch?v=0-EdIAvC08U

பாடலை அந்தக் கொண்டாட்டதில் சேர்க்க வேண்டும். அத்துணை அழகானதொரு மெல்லிசை தழுவிய காதல் பாட்டு கேப்டனின் மாநகரக காவல் வழியாக எமக்குப் பரிசாகக் கிட்டியது.

இசையமைப்பாளர் தேவேந்திரன் எண்பதுகளில் கொடுத்த இரண்டு சோகப் பாடல்கள் அன்றைய காலத்து இளைஞரின் தேசிய கீதம் என்று முன்னர் சொல்லியிருந்தேன். அதை இங்கும் ஞாபகப்படுத்த விஜய்காந்த் நடித்த “காலையும் நீயே மாலையும் நீயே” இல் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” 

https://www.youtube.com/watch?v=6Oz360EdiXw

மற்றும்  “உழைத்து வாழ வேண்டும்” இலிருந்து

“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” 

https://www.youtube.com/watch?v=fo0LWd2OkzA

ஆகியவற்றைத் துணைக்கு அழைக்கிறேன். அவை சோக ராகம் பாடும் போது இன்னொரு பக்கம் “முத்துக்கள் பதிக்காத கண்ணில்” (சித்ராவுடன் ஜேசுதாஸ்)

https://www.youtube.com/watch?v=qJoSpFaAlno

 என்று “உழைத்து வாழ வேண்டும்” படத்திலும், “சம்மதம் சொல்ல வந்தாள்” (எஸ்.ஜானகியுடன் ஜெயச்சந்திரன்), 

https://www.youtube.com/watch?v=uxoe5tcZ074

“காலையும் நீயே மாலையும் நீயே” படத்திலுமாக நாயகக் குரல் கொடுத்திருப்பார்கள்.

விஜய்காந்துக்குக் கிட்டிய மாறுபட்ட படைப்புகளில் இசையாட்சி புரிந்த மனோஜ் - கியான் குறித்துப் பின்னர் அதிகம் பார்க்கலாம். ஆனால் இந்தப் பகிர்வில் அவர்கள் கொடுத்த இரண்டு முக்கியமான பாடலைக் குறிப்பிடாமல் கடந்து விட முடியாது. “சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை” 

https://www.youtube.com/watch?v=n0a8KAk5GZk

இது “செந்தூரப் பூவே” படத்துக்காக ஜெயச்சிந்திரன் கொடுத்த சோகப்பாட்டு. குடும்பத்தோடு கூடிக் களிக்கும் குரலாக ஜேசுதாஸ் “காவியத் தலைவன் தந்த “சந்தன மலர்களைப் பார்த்து வந்தது தென்றல் காற்று” https://www.youtube.com/watch?v=Ml1eaa3aFJA என்ற இரண்டுமே அவை. ஆபாவாணன் கூட்டணியில் “காவியத் தலைவன்” படத்தில் கேப்டன் இணைந்த போது “சந்தன மலர்களைப் பார்த்து” என்று ஸ்வர்ணலதாவுடன், கே.ஜே.ஜேசுதாஸுமாக குடும்பப் பாட்டுக் கொடுத்தார்.

வித்யாசாகரும் தன் பங்குக்கு “தந்தனத் தந்தனத் தை மாசம்” என்று சாதனா சர்க்கத்தை, ஜேசுதாஸுடன் இணைத்து விஜயகாந்துக்குக் கொடுத்திருந்தார்.

“ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” 

https://www.youtube.com/watch?v=mPG363pNPmw

பாடலோடு பாவலர் மகன் இளைய கங்கை (ஸ்டாலின் வரதராஜன்)  தன் இசைப் பயணத்தை இரண்டாவது சுற்றில் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற படத்தில் தொடங்கிய போது ஜேசுதாஸ் குரல் மீண்டும் விஜய்காந்துக்குப் போனது.

விஜயகாந்துக்குப் பல பின்னணிப் பாடகர்கள் பாடல்கள் தந்திருந்தாலும் கே.ஜே.ஜேசுதாஸ் & ஜெயச்சந்திரனின் பாடல்களில் ஒரு தனித்துவம் விளங்கும்.

புரட்சிக் கலைஞருக்கு 

இனிய பிறந்த நாள் பூச்செண்டு ♥️🥁

கானா பிரபா

Tuesday, August 24, 2021

♥️ காதல் தேசம் ♥️ கிளப்பிய நினைவுகள் 🎸







படிக்கும் காலத்தில் இருந்தே நான் இரு தோணிகளில் கால் வைத்தேன். படிப்பு ஒரு பக்கம் பாட்டு ஒரு பக்கம். பாட்டை ஒரு பக்கத் தோணியில் போடுவதற்குக் காரணம் திரையிசைப் பாடல்களை அவ்வளவு வெறித்தனமாகக் காதலித்தேன். ஒரு காலத்தில் ஒரு இசைக் கூடமொன்றை அமைத்துப் பாடல் பதிவு செய்து கொடுப்பதெல்லாம் என் இமாலயக் கனவுகளில் ஒன்றாக இருந்தது.

ஈழத்தில் இருந்து மெல்பர்னுக்குப் புலம் பெயந்த காலத்திலும் இந்த வேட்கை விடவில்லை. அதனால் தான் படிப்பு, பகுதி நேர வேலை இதைத் தாண்டி நானாக ஒரு சம்பளமில்லாத வேலையில் அமர்ந்து கொண்டேன். அது தான் இங்கே பாட்டை முடிச்சுப் போடும் வேலை.

நண்பர் ஒருவர் அப்போது மெல்பர்னில் புதிதாக இலங்கை இந்திய மளிகைக் கடை ஒன்றைத் திறந்தார். வெளிநாட்டில் பேருக்குத் தான் மளிகைக்கடை ஆனால் சில சமயம் மளிகையே இல்லாமல் சோப்பு, சீப்பு, கண்ணாடி ஈறாக இருக்கும். நண்பரின் மளிகைக் கடையிலும் ஒரு பக்கம் வீடியோ காசெட்டுகளும், இசைத் தட்டுகளுமாக இறைந்து கிடக்கும். என்னுடைய வேலை படிப்பு முடிந்து அடுத்ததாக வேலைக்குப் போக முன் கிடைக்கும் அவகாசத்தில் நண்பரின் கடையை மேய்வது. மேய்வது என்றால் வெறும் மேய்வது மட்டுமல்ல.

வாடிக்கையாளர் யாராவது புதுப் படப் பாட்டு சீடி கேட்டால் 

“பிரபா ! அந்தப் படம் வந்திட்டுதோ?” 

 என்று என்னிடம் தான் கேட்பார் நண்பர். 

அவருக்கு உள்ளூர என் மேல் பயம் :-) 

ஏனென்றால் முன்பொரு முறை அவரிடம் இப்படி ஒரு வாடிக்கையாளர் ஒரு படத்தின் பாடல் சீடியை வந்து கேட்க, 

கவனக் குறைவால் “அது எங்களிடம் இல்லை” என்று விட்டார்.

நானோ விடாப் பிடியாக அந்த சீடி அடுக்குகளில் இருந்து தேடிப் பிடித்துக் கொடுத்தேன். ஏனென்றால் அங்கு என்ன பாட்டு சீடியெல்லாம் வரும் என்று என் கம்பியூட்டர் மூளை ஏற்கனவே நகல் எடுத்து வைத்திருக்கும். 

அதனால் “இந்த பிரபா வந்தாச்சு” என்று அந்தப் படப்பெட்டி பக்கம் என்னை தள்ளி விடுவார். நானும் ஒவ்வொரு இசைத்தட்டாகத் தொட்டுத் தொட்டுப் படங்களாக வேடிக்கை பார்த்து, யார் யார் இசை, யார் யார் பாடியிருக்கிறார்கள் என்று மனதில் சேமிக்கத் தொடங்குவேன்.

அப்படித் தான் ஒரு நாள் பொழுது படும் வரை அந்தச் சம்பளமில்லா வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு வாலிபர் கூட்டம் கடையை முற்றுகையிட்டது. அதில் ஒரு பெடியனைத் தவிர மீதி இரண்டு, மூன்று பேர் புதுமுகங்களாகத் தெரிந்தது.

“அண்ணை ! இப்ப தான் கொழும்பில் இருந்து வந்திருக்கினம் என்ர ப்ரெண்ட்ஸ். ஒரு புதுப் பாட்டு கேசட் இருக்கு வேணுமோ?”

என்று அந்த ஒலிப் பேழையை மெல்பர்ன் குளிருக்குப் போர்த்திருந்த கவச உடைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கடைக்காரரிடம் நீட்டினார்.

“காதல் தேசம்”

அதுதான் அந்த ஒலிப் பேழை. கடைக்கார அண்ணல் என்னைப் பார்க்க நானோ அந்த ஒலிப்பேழையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பழக்கப்பட்ட பெடியன் வந்து என்னிடம் கேட்டார்

“உமக்கு வேணுமோ?”

“ஓமோம் நானே வாங்குறன்” என்னிடம் அரை நாள் சம்பளமாகப் பொத்தி வைத்திருந்த சேமிப்பில் இருந்து அந்த காசெட்டுக்கு முதலிடுகிறேன். 

“காதல் தேசம்” என் கைக்கு வருகிறது.

“இவருக்கு பாட்டென்றால் பயங்கர இன்ரறஸ்ட் எடா” என்று தன் சகாவுக்குச் சொல்லிக் கொண்டே அந்தப் பெடியன் மேற்கொண்டு மளிகை மேய்ந்தார்.

 

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு படங்களுக்கு இசையமைப்பதை விட சுயாதீன இசைப் படைப்புகளைக் கொடுப்பதில் தான் மிகையான ஆர்வம் என்பதை அவர் ஆரம்ப காலப் பேட்டிகளில் இருந்து சொல்லி வருகிறார்.

இயக்குநர் கதிரோ இதயம் படத்துக்குப் பின்னால் நேராகச் செய்ய வேண்டியது “காதல் தேசம்”. அதுவும் அவரே தயாரித்து இயக்குவதாகச் சொல்லி ரஹ்மானிடம் முற்பணம் கூடக் கொடுத்தாகி விட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சூழலால் இருவரும் இணைந்த படம் “உழவன்”. இருவருமே தவிர்த்திருக்க வேண்டிய ரக படமாயிற்று.

இதோ மீண்டும் கதிர் வருகிறார். இம்முறை அவரோடு குஞ்சுமோன் என்ற பிரமாண்டம் சூழ. 

ரஹ்மானும் இணைகிறார். 

“காதல் தேசம்” பிறக்கிறது.

வினீத் என்ற பழக்கப்பட்ட இளம் நாயகனுடன் அப்பாஸ் அறிமுகமாக, தபூ இறக்குமதியாகிறார். அந்தக் காலத்தில் இவர்களுக்கு தபூ அக்கா மாதிரி இருக்கிறார் பொருந்தவே இல்லை என்று விமர்சனங்களையும் கொடுத்தோம்ல :). முதலில் நடிக்க அணுகப்பட்டிருந்தவர் ரவீனா டாண்டனாம், நல்ல வேளை.

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தமிழில் முதன் முதலில் ஒப்பந்தமான படம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு frame ஐயும் பார்க்கும் போது வெளிநாட்டுத் தரம் மின்னும் ஒளிப்பதிவு. இப்போது கூட காதல் தேசம் படத்தின் நிறக் கலவை தனித்துவமாக மின்னும்.

காதல் தேசம் படைப்பைப் பொறுத்தவரை அது எவ்வளவு தூரம் இயக்குநர் கதிருக்கு ஆத்மார்த்தமாக அமைகிறதோ அது போலவே ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்பதைப் பாடல்கள் சொல்லிக் காட்டின.

இனி மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எது ஆத்மார்த்தம் என்று “காதல் தேசம்” படப் பாடல்களைக் கேட்டாலேயே போதும். 

அது படத்துக்காகப் பண்ணாமல் தனி இசை ஆல்பம் போலவும் மிளிரும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். எல்லாமே இளைஞரின் நட்பு, கொண்டாட்டம், காதல், சோகம் என்ற கலவையான ஆல்பம். ஆகவே ரஹ்மானுக்கும் கனவு மெய்ப்பட்டதொரு படம் என்று சொன்னால் மிகையில்லை.

இதற்கு முன் “காதலன்” படம் கூட முழு நீளக் காதல் படம் என்றாலும் அந்தக் கால 29 வயசு இளமையின் விளிம்பில் நிற்கும் ரஹ்மானுக்குத் தோத்தான ஒரு படைப்பு என்று கணித்தால் கச்சிதமாக அமைந்து விட்டது அது.

காதல் தேசம் இசை ஆல்பம் ஒரு MTV இசை அலைவரிசைக்கான ஒத்திகை. இளமைத் தீனி. 29 வயசுக்காரரின் மெட்டுக்கு அப்போது 65 வயது நிரம்பியவர் கொடுத்த வரிகள் என்றால் தொட்டிலில் கை சூப்பிக் கொண்டிருந்த 90ஸ் கிட் கூட விரலை எடுத்து விட்டு ஆவென்று பார்க்கும். அந்த 65 வயசுக்காரர் வேறு யார் வாலின்னா ஜாலி ஆச்சே.

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் ஆங்கிலச் சொற்களைப் பாடல்களின் நயத்துக்காகப் பொருத்திய பாடலாசிரியர் பலருண்டு. ஆனால் வாலி அளவுக்குப் பொருத்தமாகவும், தமிழோடு இயைபாகவும் கொடுத்தவர் யாருமுண்டா சொல்லுங்களேன்?

இதயம் படத்தில் இருந்து தொடர்ந்து வாலியோடு பயணித்தவர் அது இளையராஜாவோ அன்றி ரஹ்மானோ என்று விடாக்கண்டனாக இயக்குநர் கதிர்.

வாலி தன் வயசுக்காரர் போல கதிர் ஆட்களையும் “நண்பர்” என்று அடைமொழி இடுவதைச் சொல்லி நெகிழ்ந்தார் கதிர்.

வேடிக்கை என்னவென்றால் இந்தப் பதிவை எழுதி முடித்த பின் வாலி & கதிர் சந்திப்பைப் பார்த்தேன். அதில் வாலி கதிரைப் பார்த்து “விடாக்கொண்டன்” என்றிருப்பார். :)

“உனக்கு வரிகள் எழுதி எழுதி எனக்கு வரிகள் அதிகமாச்சுப்பா” என்று வாலி 1000 நிகழ்வில் வாலி வேடிக்கையாகக் கதிரைப் பார்த்துச் சொல்லுவார் :)

அதுவரை நானொரு கோயில் நீயொரு தெய்வம் (நெல்லிக்கனி), “காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி) ரகங்களோடு நட்பைக் கொண்டாடிய தலைமுறை 

“முஸ்தபா முஸ்தபா Don’t worry முஸ்தபா” https://www.youtube.com/watch?v=FC3rg-G-Rpw

பாடித் தோளோடு தோள் கொடுத்து ஆடியது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு

விண்ணை தொடலாம் உந்தன் சிறகு

வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே

இந்த மாதிரி ஒரு பாட்டை மிஸ் பண்ணிட்டேனே என்று ஆதங்கப்பட்டாராம் இயக்குநர் ஷங்கர்.

இங்கு பறக்கும் வண்ணப் பறவை

எங்கு இருந்தோ வந்த பறவை

கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்

முஸ்தபா முஸ்தபா பாடலில் அந்த எலெக்ட்ரானிக் கிட்டாரின் ஜாலத்தோடு கொடுக்கும் பாங்கில் கல்லூரி வளாகத்தின் கொண்டாட்ட மேடைக்குள் போய் விடுவோம். வேடந்தாங்கலைக் கல்லூரிக்குக் கொண்டு வந்து உதாரணப்படுத்துவாரய்யா வாலி(பர்).

“மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்” என்று கொடுத்தது மாதிரி ஒரு வரியை எனக்குக் கொடுங்களேன் என்று மணிவண்ணன் வாலியிடம் யாசித்தாராம். படமோ கிராமியப் பின்புலம், வாலியும் சரியென்று போட்டாரம் இப்படி

“வெளுக்காத சாயம் விவசாயம்”.

கதிர் எடுக்கவிருந்த “கல்லூரிச் சாலை” படம் வந்திருந்தால் இவரோடு வாலி கூட்டில் இறுதிப்படமாக இருந்திருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மானும் குஷி மூட்டோடு பாடல்களைப் பதிவு பண்ணியிருப்பார் போல. மூன்று பாடல்களில் முன்னணியாகப் பாடியிருப்பார். 

எனது வானொலி ஆரம்ப காலப் பயணத்தில் இரவின் மடியில் “காதலர் கீதங்கள்” கொடுக்கும் போது நேயர்கள் அடிக்கடி கேட்டுப் பழகிப் போனதில் ஒன்றாக இருந்தது 

“ஓ வெண்ணிலா இரு வானிலா”

https://www.youtube.com/watch?v=M0uk9NtY3pk

“கண்ணே கண்ணே காதல் செய்தாய்.....” 

என்று வரும் கணம் எழும் இசையால் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதது மிதக்கும் உணர்வு எழச் சிலிர்த்துப் போவேன். அதுவும் அந்த இரவின் ஏகாந்தத்தில் இந்தப் பாடலைக் கேட்டால் அந்த இரவே மண்டியிட்டுக் கேட்பது போல இருக்கும்.

இந்தக் காலத்து 2K கிட்ஸ் இற்கு அறிமுகமான இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இன் தந்தை பிரபல இசைக் கலைஞரும், ரஹ்மானின் ஆரம்ப காலப் படங்களில் பாடியவருமான நோயல் ஜேம்ஸ், அனுபமா, ஸ்ட்ரோம்ஸ் உடன் ஒரு பக்கம்  “ஹலோ டாக்டர் ஹார்ட்டு திருடாச்சு”, இன்னொரு பக்கம் “கல்லூரிச் சாலை” ஹரிஹரன், அஸ்லாம் முஸ்தபா கூட்டணி என்று ஏ.ஆர்.ரஹ்மானின் ரகளையான துள்ளிசைப் பாட்டு. இரண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே களியாட்ட உலகில் இருப்பது போல.

அன்பே....

அன்பே.....

அன்பே.....அன்பே

“என்னைக் காணவில்லையே நேற்றோடு

 எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு.....

https://www.youtube.com/watch?v=1rP7GypOhu0

எஸ்.பி.பி இல்லாத சூழலில் கேட்கும் போது அவரின் இன்மையை நினைத்து இன்னும் ஏங்க வைக்கும் பாட்டுகளில் ஒன்றாகி ஒன்றி விட்டது.

அவரோடு கூட ஒரு சாஸ்திரிய இசைப் பாடகர் ஓ.எஸ்.அருண். நம்ப மாட்டார்கள் இவர் தான் இந்த நவ நாகரிகப் பாடலுக்குக் குரல் அணி சேர்த்தார் என்று. இரண்டு குரல்களுமே ஏக்கம் தொனிக்கும் 

ஆனால் 

“உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்....”

என்று எஸ்பிபியின் மன ஓலத்துக்குச் 


சற்றுக் 

கீழிறங்கி 

 “என்னைக் காணவில்லையே நேற்றோடு 

எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு....” 

என்று ஓ.எஸ்.அருண் பாடுவதைச் சிலாகிப்பதா அன்றி இந்த இருவேறு குரல்களை வெவ்வேறு ரேஞ்சில் பொருத்திப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் அழகியலை மெச்சுவதா என்று மனம் சலனப்படும். கூடப் பாடிய ரஃபி ரஹ்மானின் ஆஸ்தான குரல்களில் ஒன்றாக இயங்கிவர். அந்தக் காலத்தில் ரஹ்மானுக்கான குரல் படையணி ஒன்றிருக்கும். மேற்கத்தேயப் பாடல்களில் துள்ளிசையில் சோகம் கொடுக்கும் மரபை ரஹ்மான் அட்டகாசமாக இந்தப் பாடலில் உள்வாங்கிப் பதித்திருப்பார்.


கரையின் மடியில் நதியும் தூங்கும்

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூங்கும்

இனிய கனவில் தூங்கு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு


https://www.youtube.com/watch?v=nwjZuqTRgIg

இரண்டு குரல்கள் உன்னிகிருஷ்ணன், மனோ சேர்ந்து இன்னொன்று.

இங்கே மனதின் ஆர்ப்பரிப்பு அல்ல, காதலிக்கான தாலாட்டு. ஊசி விழுந்தாலும் சத்தம் எழா வண்ணம் நோகாத ஒரு பியானோ வழியலில் வருடி நித்திரை ஆக்கும் பாட்டு. 

மாலை வானில் கதிரும் சாயும்

மடியில் சாய்ந்து தூங்கடா

பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா

இந்த காதல் தேசம் படத்தின் பாட்டுக் கூட்டமெல்லாம் இளமைத் துள்ளல், கூடச் சேர்ந்த ஐம்பது வயதுக்கார எஸ்பிபியையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன். ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பான இசையமைப்பாளராக இயங்கிய சூழலிலும் தனிப் பாட்டுத் தொகுப்புக் கொடுத்ததன் முன்னத்தி ஏர் இந்தப் படப் பாடல்கள் என்றும் சொல்லலாம்.

என் கைக்கு வந்த “காதல் தேசம்” படம் வெளியீடு கண்டு நேற்றோடு (23.08.2021) 25 ஆண்டுகளாம். 

இந்த 25 வருட காலத்தில் மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு இடப் பெயர்வு, தவிர எத்தனை வீடெல்லாம் மாறியிருப்பேன். ஆனால் என் கூடவே இந்தக் காதல் தேசம் ஒலிப்பேழை பாத்திரமாக இருக்கின்றது. இதைப் பார்க்கும் போதெல்லாம் முன் சொன்ன சம்பவம் டயரி மாதிரி விரித்துப் படிக்கும். 

என் வீட்டு இசைக் கூட இதய அறையில் 25 வருடங்களாகக் காதல் தேசம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

மழை நீரில் வானம்

நனையாதம்மா

விழி நீரில் பூமுகம்

கரையாதம்மா

எனைக் கேட்டு

காதல் வரவில்லையே

நான் சொல்லி

காதல் விடவில்லையே


கானா பிரபா


காதல் தேசம் படங்கள் நன்றி : K.T.குஞ்சுமோன் தளம்


#காதல்தேசம்25  #25YearsOfKadhalDesam  Kathir

Monday, August 23, 2021

இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் புது வசந்தத்துக்கு முன் 🎸🥁

தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் விக்ரமனுக்கு முன், விக்ரமனுக்குப் பின் என்று பகுத்து அவரின் இசைப் பயணத்தை நோக்க முடியும். அதுவும்

அவரின் ஆரம்ப காலத்தில் பயணித்தது ராஜபாட்டை எனலாம். 

இசைக் கலைஞர் செல்வராஜின் மகன் எஸ்.ஏ.ராஜ்குமார் எண்பதுகளில அடையாளப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்பதோடு தானே அக்காலத்தில் பெரும்பாலும் பாடலாசிரியராகவே இரட்டைச் சவாரியும் செய்த வகையில் தனித்துவமானவர். தன்னுடைய இசை வளத்துக்குத் தன் பால்யப் பருவத்தில் டுமீல் குப்பம் மீனவ சமூகத்தோடு வாழப் பழகி அவர்களோடு கடல் படுக்கையில் படகுச் சவாரியில் பாட்டுக் கச்சேரி படித்ததுவும் பயிற்சிக் களனாக அமைந்ததை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார் தன் “ஏ புள்ள கருப்பாயி” பாடலின் பின்னணிச் செய்தியாக.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். 

அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

கீபோர்ட் வாத்தியக்காரராக ஏ.ஆர்.ரஹ்மான், சக இசைக்கலைஞராக மணிசர்மா, நெப்போலியன், நவீன் இவர்களோடு இசை ஒருங்கமைப்பாளராக வித்யாசாகர் என்று எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்ப காலம் பின்னாளில் திரையிசையை ஆட்கொண்ட ஜாம்பவான்களின் கூட்டாக அமைந்திருக்கின்றது. இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர் கூடத் தன் இசையின் அபிமானி என்றும் அவர் வழியாக ராஜாவிடம் “பொன்மாங்குயில்” பாட்டு போய்ச் சேர்ந்து ராஜாவும் மெச்சியதாக ராஜ்குமார் குறிப்பிட்டிருக்கின்றார்.

தன்னுடைய முதல் படப் பாடல் ஒலிப்பதிவுக்காக வந்த ஜெயச்சந்திரன் ஒலிப்பதிவு தாமதப்படுகிறதே என்று கடிந்து கொண்டாராம், ஆனால் பின்னர் பெரும் எடுப்பிலான பிரமாண்ட வாத்தியக் கூட்டணியைக் கண்டு பிரமித்துத் தன் பாடலைப் பாடி முடித்த பின் பாராட்டி விட்டுப் போனாராம் எஸ்.ஏ.ராஜ்குமாரிடம்.

அந்தப் பாட்டு தான்

“சின்னப் பூவே மெல்லப் பேசு”

“நான் பாடின சிறப்பான பாடல்களில் ஒன்று ரொம்பக் காலத்துக்கு நிற்கும்” பாடி விட்டு இப்படிச் சொல்லிப் போனாராம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரிடம்.

இப்படியான ஆரம்ப கால எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற சங்கீதக்காரனின் இசைப் பாதையில் உல்லாசப் பூங்குயிலாய் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு பாடல்களும் இசை வசந்தம் புகழ் சேர்த்தவை.

“சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே 

இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே…..”

https://www.youtube.com/watch?v=iUN49mpg3Qc

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஜோடிக் குரல்கள் தனித்துவமான பாதையில் வெற்றிக் கொடி நாட்டியவை, 

இசையமைப்பாளர்கள் இந்த ஜோடிக்குரல்களுக்குப் பொருந்தும் விதமாய்ச் சந்தம் சேர்த்து விட்டுத்தான் அழைப்பார்களோ என்ற அளவுக்கு அந்தத் தனித்துவம் இருக்கும் இப்பேர்ப்பட்ட குரல்களைத் தன் முதல் படத்திலேயே ஜோடி சேர்த்து அழகு பார்த்தார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

“உதயமே உயிரே அழைத்தும் வாராததேன்.....”

https://www.youtube.com/watch?v=V5Bn2On5FzA

இதோ அபூர்வ ஜோடிக் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உமா ரமணன் சேர்கிறார்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் “ஒரு பொண்ணு நெனச்சா” படத்துக்காக. இந்தப் பாடலை எல்லாம் கேட்டால் நேர்த்தியான இசையும், நெருடல் இல்லாத மெட்டுமாக இளையராஜா கணக்கில் வானொலிகள் சேர்த்து விட்ட பாட்டுகளில் ஒன்று. அப்பேர்ப்பட்ட அங்கீகாரம் தனக்குப் பெருமையே என்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

சொல்லப் போனால் “விக்ரமனுக்கு முன்” என்ற எஸ்.ஏ.ராஜ்குமார் காலத்தில் என் முதல் தேர்வு இந்த “உதயமே உயிரே” பாட்டுத்தான். இசைக் கோப்பில் ஒரு ராஜ விருந்து இது.

சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் மொத்தம் பத்துப் பாடல்களைப் பல்வேறு பாடகர்களுக்குப் பங்கிட்டவர் எஸ்பிபிக்கு மட்டும் முத்தான மூன்றை எழுதி வைத்தார் எஸ்.ஏ.ராஜ்குமார். அதில்

“கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே”

https://www.youtube.com/watch?v=pSXmH9lA00g

பாடலை இதே பிரபு நடித்து இளையராஜா இசைத்த “ஆனந்த்” படத்தின் “பூவுக்குப் பூவாலே மஞ்சம் உண்டு” https://www.youtube.com/watch?v=MoFiFbTZwu4  பாடலோடு பொருத்திப் பார்க்கக் கூடிய மகத்துவம் நிறைந்தது.

பின்னாளில் இதே சோக ராகத்தில் “நான் கண்டது” (பறவைகள் பலவிதம்) பாடலை எஸ்பிபிக்கே கொடுத்தார் எஸ்.ஏ.ராஜ்குமார். மூன்றுமே ஒரே அணியில் பொருத்திப் பார்க்கக் கூடியவை.

அந்தக் காலத்தில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் & இயக்குநர் ராபர்ட் – ராஜசேகரன் ஜோடி என்ற கூட்டணிக்கு விளம்பரமே தேவை இல்லாத மவுசு இருந்தது. அதனால் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த மற்றோர் படங்கள் அதிகம் எடுபடாமல் போனதும் உண்டு. அப்படி ஒன்று தங்கச்சி (ராம்கி நாயகன்) என்ற படம். அதில் அனைத்துப் பாடல்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே பாடினார். அது போல அர்ஜூன் நடித்த சத்யா மூவிஸ் இன் “என் தங்கை” படத்திலும் எஸ்பிபியே முக்கியத்துவப்பட்டார்.

அந்தக் காலத்தில் சுரேஷ், நதியா ஜோடியைப் பிரபலமாக்கிய இயக்குநர், தன் படங்களில் டி.ராஜேந்தர், ஆர்.டி.பர்மன் என்றெல்லாம் ஜோடி சேர்த்து ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் வி.அழகப்பனின் குங்குமக் கோடு படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் சேர்ந்த போதும் ஆறு பாடல்கள் அனைத்துமே எஸ்பிபி வசமாகின.

மக்கள் நாயகன் ராமராஜன் & எஸ்.ஏ.ராஜ்குமார் கூட்டணி சேர்ந்த போது கிட்டிய அருமையான பாடல்களில் எஸ்பிபிக்கானவை “போறவளே பொன்னுத்தாயி” (ரயிலுக்கு நேரமாச்சு), ஆஷா போன்ஸ்லேயை ராஜாவுக்கு அடுத்துப் பயன்படுத்திய தமிழ் இசையமைப்பாளர் என்ற வகையில் செவ்வந்திப் பூ மாலை கட்டு (தங்கத்தின் தங்கம்) பாடலைத் தனிப் பெண் குரலாகவும், எஸ்பிபி & சித்ரா ஜோடிக் குரல்களாகவும் https://www.youtube.com/watch?v=20G89n9tcXU

கொடுத்து அந்தக் காலப் பிரபல பாட்டுகளில் ஒன்றாக்கினார்.

அந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லேவுக்குக் கிடைத்த “முத்து முத்து நான் கண்ட முத்து” பாடலும் புகழ்பூத்ததொன்று.

மனசுக்குள் மத்தாப்பு படத்தில் “பொன்மாங்குயில்” பாடலின் சுகந்தத்துக்கு எதிர்மாறு “யார் யார் இங்கே” என்ற துள்ளிசைப் பாடலிலும் எஸ்பிபி மின்னினார்.

எண்பதுகளின் அண்ணன்மாரின் சோக கீதங்களில் ஒன்றாக வலம் வந்த பாட்டு கே.ஜே.ஜேசுதாஸின் “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”

https://www.youtube.com/watch?v=E9_AvSSyHwA

இந்தப் பாட்டை ஏறக்குறைய மறந்தே போய் இருந்தேன். சில வருடங்களுக்கு முன் பிரான்ஸில் இருந்து ஒரு பேஸ்புக் உறவு இந்தப் பாட்டைத் தேடித் தருவீர்களா?  என்று கேட்ட போது தான் சுட்டது. அட இந்த அருமையான பாட்டை மறந்தே போயிருந்தேனே என்று. அப்போது தான் நதிமூலம் தேடிப் போனால் “மக்கள் ஆணையிட்டால்” படத்துக்காக எஸ்.ஏ.ராஜ்குமார் கொடுத்த பாட்டு அது. ஒரு காலத்தில் நம்மூர் ரெக்கார்டிங் பார் காரர்களின் கையில் செமத்தியாக வேலை வாங்கப்பட்ட இசைத்தட்டு அது.

அதே காலகட்டத்தில் ராதாரவி நாயகனாக நடிக்க, விஜயகாந்த், கார்த்திக் சிறப்புத் தோற்றத்தில் நடித்த வீரன் வேலுத்தம்பி படத்துக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இசை.

சத்யா மூவீஸ் தயாரிப்பில் பழம் பெரும் இயக்குநர் ஜெகந்நாதன் இயக்கிய அர்ஜீன் படம் “என் தங்கை” https://www.youtube.com/watch?v=rr3QxDp8M3Y


இதற்கு முன் பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய “தங்கச்சி" , எஸ்.ஏ.சந்திரசேகரின் “பூவும் புயலும்” https://www.youtube.com/watch?v=ErjokQpePsU
 ராம்கி, நிஷாந்தி நடிப்பில் "காதல் விடுதலை"என்று பிரபலங்களின் படங்களுக்கும் இசை கொடுத்தார். இருந்த போதும் முன்பு விட அவரின் புது வசந்தம் என்ற அடுத்த சுற்றில் இன்னும் பல வெற்றிகளைக் குவித்துத் தொடர்ந்தார்.என்று பிரபலங்களின் படங்களுக்கும் இசை கொடுத்தார். இருந்த போதும் அவரின் புது வசந்தம் என்ற அடுத்த சுற்றில் இன்னும் பல வெற்றிகளைக் குவித்துத் தொடர்ந்தார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களுக்கு.

கானா பிரபா

Thursday, August 19, 2021

இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள் திரையிசைப் பயணம்


முழுமையான ஒலி & ஒளி வரலாற்றுப் பகிர்வு.

இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்றென்றும் கேரள தேசத்தின் தூய இசையின் பேரரசராக விளங்குகிறார். 

ஆன்மிகம் நிறைந்த சுவாமியின் முழு உடலும் வாழ்க்கையும் இசை என்று சொல்லலாம். 

ஒரு பக்கம் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜேசுதாஸில் இருந்து, ஜேசுதாஸ், மகன் விஜய் ஜேசுதாஸ், மகள் அமேயா ஆகியோருக்கும்,

இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா தொட்டு பவதாரணி வரையும் ஒரு இசை ஞான குருவாக ஸ்வாமிகள் விளங்கி நிற்கின்றார்.

பழம் பெரும் முன்னணிப் பாடகி பி.லீலாவிலிருந்து, N.C.வசந்தகோகிலம், கல்யாணி மேனன் உள்ளடங்கலாக அவர் குருவாக விளங்கியது இன்னொரு மேன்மை.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் அவர்கள் மேடை இசைக் கலைஞராக இருந்த போது அவரைத் திரையிசையின் பக்கம் திருப்பியவரும் ஸ்வாமிகளே. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஸ்வாமிகளின் பந்தம் தொடர்ந்தது.

இதனால் பெரிய பக்தர் தலைமுறைகளின் சுவாமி மற்றும் குரு ஆனார்.

ஸ்ரீகுமரன் தம்பியின் பல மெல்லிசைப் பாடல்களை மலையாளிகளின் எப்போதும் பிடித்தமானதாக ஆக்கியது சுவாமியின் மாயம்தான்.

சிறந்த இசை இயக்குனருக்கான மாநில அரசின் திரைப்பட விருது, ஜேசி டேனியல் விருது, சங்கீத சரஸ்வதி விருது மற்றும் சுவாதி திருநாள் விருது உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, சுவாமி இசைப் பிரியர்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பெற்றார்.

தொண்ணூற்றி மூன்று வயதில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில், சுவாமி இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை தூய இசையின் பக்தராக இருந்தார்.

இன்று கேரள மண் ஸ்வாமிகளுக்கான ஒரு நினைவு மண்டபம் அமைத்து அவரின் சேகரங்கள் அனைத்தையும் சேமித்துப் பாதுகாக்கின்றது.

இப்படியானதொரு நீண்ட இசை வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள் குறித்த ஒரு பெட்டக நிகழ்ச்சியைச் செய்வோம் என்று அன்பு நண்பர் சரவணன் நடராஜனிடம் Saravanan Natarajan வேண்டினேன். அவர் தன்னுடைய நண்பர் சுந்தர் வழியாக ஸ்வாமிகளின் மகள் திருமதி கோமதி ஶ்ரீ அம்மாவை இந்த நிகழ்வுக்கு வருமாறு வேண்டினார். அவரும் மனமுவந்து கலந்து கொண்டார். திருமதி கோமதி ஶ்ரீ அவர்கள் ஒரு சாஸ்திரிய இசைப் பாடகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவாஜி உட்பட (மாலே மணிவண்ணா, சஹாரா பாடலின் முகப்புப் பாடல்) படங்களில் பாடியிருக்கிறார். 

இரண்டு மணி நேரத்தைத் தொடும் இந்த நிகழ்ச்சிக்காக நண்பர் சரவணனும், கோமதி ஶ்ரீ அம்மாவும் கொடுத்த உழைப்பு கிட்டத்தட்ட 10 மணி நேரம் என்று சொன்னால் மிகையில்லை. அவ்வளவுக்கு ஸ்வாமிகள் குறித்த முக்கிய வரலாற்றுத் திரட்டுகள், பாடல்கள், ஒளிப்படங்கள் என்று திரட்டி ஒரு முழுமையான நிறைவான நிகழ்வாகப் படைத்து விட்டார்கள். 

https://youtu.be/t4sDd-ey7C4

வெள்ளித்திரையில் ஒரு சகாப்தத்தைப் படைத்த வெ.தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளுக்கு இன்றைய நாள் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாக அவர் முன் இந்தப் படைப்பைச் சமர்ப்பிப்பதில் பெரு நிறைவு கொள்கின்றோம்.

Wednesday, August 18, 2021

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ❤️

ஆஹா.... ஆஹா ஹா.....

ஆஹா.... ஆஹா ஹா.....

ஒரு மலை உச்சியிலிருந்து உரக்க ஒலி எழுப்பி அது அப்படியே மலையடிவாரமெங்கும் தொட்டுப் பரவி எதிரொலிப்பது போல ஒரு ஆர்ப்பரிப்பை முகப்பு ஆலாபனையாய் கொடுப்பார் பாடும் நிலா பாலு. அது தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் காதலின் நீள அகலம் எவ்வளவு என்பதைத் தன் நெஞ்சைப் பிளந்து காட்டுமாற் போல இருக்கும்.

வாசமான முல்லையோ..,

வானவில்லின் பிள்ளையோ..

பூவில் நெய்த சேலையோ..

நடந்துவந்த சோலையோ..

இப்படியாகக் காதல் பாடலென்று வந்தாகி விட்டது இனி அவளை வர்ணிக்கக் கற்பனைக்குதிரைக்குக் கடிவாளம் போட முடியுமா? 

ஆனால் 

ஆனால் 

ஆனால்

ஒரு இயற்கையைப் பொய்யாக்கி விட்டு, கற்பனையை மெய்யாகும் தருணத்தைப் போட்டிருப்பார் கவிஞர் வைரமுத்து இப்படி

“உன் கண்ணில் நீலங்கள் 

நான் கண்டு நின்றேன்

ஆகாயம் ரெண்டாக 

மண்மீது கண்டேன்”

பாடலின் அந்தத்தில் அப்படியே தன் ஆலாபனையால் அடுத்த தொடக்கத்துக்கு இணைத்து விடுவாரே எஸ்பிபி கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா இவரைத் தாண்டி?

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அந்த ஆலாபனையை ஆரம்பிக்கும் போதே தன் வயதில் பாதியைக் குறைத்து விடுவார்.

இந்தப் பாடல் மூன்று வடிவங்களில் இருக்கிறது. அவற்றை வேறுபடுத்த இசை தான் முக்கியமான தொழிற் கருவி. மற்றது பாடல் வரிகள்.மற்றப்படி மெட்டில் அதிகம் நெகிழ்வுத் தன்மையையோ வேகத்தையோ அதிகப்படியாகக் கூட்டாமல் அளவாக வேகமெடுத்தும், நிதானித்துச் சோகம் கலந்தும் கொடுக்கிறது இந்தப் பாட்டு.

“கீதம் சங்கீதம்” 

https://www.youtube.com/watch?v=Lhjj-2Rxvxs

சந்தோஷப் பாடலில் ஒரு பக்கம் உருகி உருகி எஸ்பிபி பாட அந்த இடையிசையில் அவர் நிற்கும் மலையுச்சி நோக்கிப் பயணிக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் போல இசையின் வேகம் ஒரு தட தட தட ரயில் பயணம்.

இதே பாடல் தான் ஆனால் சோகச் சூழலாக அமைய வேண்டியிருக்கிறது. அப்போது தன்னுடைய கடந்த காலக் காதலின் இனிய நினைவுகளை எப்படி இரை மீட்டியிருப்பான்?

அதே பாடலை மீண்டும் ஆலாபனை செய்திருப்பான் அல்லவா?

அப்படித் தான்

கீதம் சங்கீதம் சோகப் பாடல்

https://www.youtube.com/watch?v=DcI4K_GEdFQ

அதே நீலகிரி எக்ஸ்பிரஸை பின்னோக்கித் திருப்புமாற் போல, ஒரு ரிவர்ஸ் அடித்து மெது நடை கற்பிக்கும் பாட்டு இது.

கீதம் சங்கீதம் சந்தோஷ மெட்டின் ஆரம்பத்தில் சிரித்து வைக்கும் எஸ்.பி.சைலஜா குரலைக் கடாசி விட்டாலும் பாதகமில்லை என்றெண்ண வைக்கும். அப்படியிருந்தால் அது ஒரு காதலின் தீபமொன்று ரேஞ்சில் தனியாவர்த்தனமாக அமைந்திருக்கும்.

இருக்கவே இருக்கிறதே எஸ்.பி.சைலஜாவுக்கா தனிப்பாட்டு இதுவென்று.

https://www.youtube.com/watch?v=ad8mgmRuk64

அது என்னமோ தெரியவில்லை கங்கை அமரன் முதலில் எழுதிய பாடலிலோ, முதலில் இசையமைத்த படத்திலோ அன்றி முதலில் இயக்கிய படத்திலோ கூட அவரின் பிரிய நண்பன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடவில்லை. ஆனால் வட்டியும் முதலுமாகக் கொடுத்து வைத்த படமோ என்றெண்ண வைக்கும் இந்த “கீதம் சங்கீதம்”

கோழி கூவுது திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து தன்னுடைய இன்னொரு பரிமாணத்திலும் சாதித்து மிகப் பெரிய வெற்றியையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார் கங்கை அமரன்.

பாடலாசிரியராக, இசையமைப்பாளராக இதற்கு முன்பே தன்னை நிரூபித்துக் காட்டிய கங்கை அமரனுக்கே கோழி கூவுது படத்தின் வெற்றியை ஏற்றுக் கொள்ளுமளவு அப்போது பக்குவம் இருக்கவில்லை என்பதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் அவர் தொடர்ந்து இயக்கிய "கொக்கரக்கோ" படம் நேரெதிரான வசூல் நிலவரத்தைக் கொடுத்தது.

"கோழி எப்பிடிக் கூவும்" என்று வைரமுத்து செல்லமாகச் சீண்ட "வைரமும் முத்துவும் ஒன்றாக இருப்பதில்லையா அது போல்" என்று பதில் கொடுத்தார் கங்கை அமரன் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு.  

"பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிக்க "கொக்கரக்கோ" படம் கங்கை அமரன் இயக்கத்தில் உருவானது. இந்தப் படத்திலும் இசைஞானி இளையராஜா குறை வைக்காத மணி மணியான பாடல்கள். கோழி கூவுது படத்தைப் போல இந்தப் படத்திலும் வைரமுத்து பாடல்களை எழுதினார். அதில் ஒன்று தான் இந்த "கீதம் சங்கீதம்"

சில பாடல்களை எந்த விதமான வாத்திய அலங்காரங்கள் இன்றித் தனிக் குரல் வெளிப்பாடாகப் பாடும் போது கூடச் சுவைக்கும். அப்படியொன்று தான் இந்த "கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்".

எம்பார் கண்ணனின் வயலின் இசையோடு மீட்டாத ஒரு வீணையும் கீதம் சங்கீதமும் கலந்து ஒரு பகிர்வு இருக்கிறது கேட்டுப் பாருங்கள்.

https://soundcloud.com/skrajiv/meetadhu-oru-and-geetham

நீலமான கண்களே..,

நீண்டு வந்து தீண்டுதே......

பாவை பாதம் பார்க்கவே..

கூந்தல் இன்று நீண்டதே....

தூய காதலின் முன்னே இயற்கையெல்லாம் பொடிப் பொடியாக அங்கே கற்பனையே நிஜமாக நிறுவப்படும் அற்புதத் தருணமது.

ஒவ்வொரு வரிகளையும் ஒரு பச்சைக் குழந்தையை ஏந்துமாற் போல ஏந்திப் பாடும் இந்தப் பாடகனை எந்தப் பிறவியிலும் மறவோம்.

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

கானா பிரபா

Monday, August 16, 2021

எம் காலத்து ஜிக்கி

பூவெடுத்தேன்  நான்  தொடுத்தேன்  

பூஜையின்  நேரம்  நான்  கொடுத்தேன் 

காலமெல்லாம்  காத்திருபேன் 

கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்.......

அனிச்சையாக வாய் முணுமுணுத்து அந்த 

“நினைத்தது யாரோ நீதானே”

https://www.youtube.com/watch?v=X2PyCz_PGII

பாடலுக்குள் மூழ்கிவிட்டால் கரையேற ஒரு நாள் போதாது.

அப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மனசு. இம்மட்டுக்கும் ஒன்றல்ல இரண்டல்ல 33 ஆண்டுகள் கால வெள்ளத்தில் நம்மிடம் எத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தாலும் இந்தப் பாட்டுப் போல ஒரு கூட்டம் பாடல்கள் அப்படியே அலையடித்துக் கரையொதுக்கிய முத்துச் சிப்பி போல.

“துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்”

பாடல் எல்லாம் நம் அப்பன், அம்மை காலமென்றால் நமக்காகவே அந்த ஜிக்கியம்மாவை அழைத்து வந்து பாட வைத்தது போலவொரு பாட்டு இந்த “நினைத்தது யாரோ நீதானே”.

சித்தியின் மகன் துளசி அண்ணாவுக்கு திருமணம் 8.8.1988 இல் நடக்கிறது ஜேர்மனியில். அவர்து திருமண வீடியோ காசெட்டைப் பார்க்க உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்து சித்தி வீட்டில் திரள்கிறார்கள். துளசி அண்ணாவின் ஜேர்மனியில் கல்யாணத்தை ஏதோ கண்ணுக்கு முன்னால் நடப்பது போல எல்லாரும் உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். இடைக்கிடை அந்த வீடியோவில் தலைகாட்டும் சொந்தங்களை அடையாளம் கண்டு "இஞ்சை பார் உவன் நிக்கிறான், அவன் நிக்கிறான்" என்ற நேரடி வர்ணனை வேறு, எனக்கோ அந்தப் பதின்ம வயசிலும் புதுப்பாட்டுக் கேட்கும் தொற்று வியாதி. தொற்றுவியாதி என நான் சொல்லக் காரணம், இரண்டு இளந்தாரிப்பிள்ளைகளைப் பெற்றெடுத்து விட்டாலும் இன்னமும் கிட்டாரும் கையும் இளையராஜா பாட்டும் என்றிருக்கும் துளசி அண்ணரிடமிருந்து தான் இளையராஜா பாடல்களை வெறியோடு நேசிக்கும் பண்பு வந்தது எனக்கு, அவரைப் பற்றி இன்னொரு முறை விலாவாரியாகப் பேசவேண்டும்  .

அந்த வீடியோ காசெட்டில் ஒவ்வொரு புதுபுதுப் பாடல்களாகக் கடக்கின்றன ஆனால் அப்போதே மனதை ஆக்கிரமித்துக் கொண்டது " நினைத்தது யாரோ நீதானே" பாட்டு. அப்போது படமே வரவில்லை ஆனால ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார் எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும் நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர் இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு. தாவடிச் சந்தியில் இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன் போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப் பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே. 

பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ, ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம். அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள், யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால் காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான பாட்டு.

பாடகி ஜிக்கி அவர்கள் தனது கணவரும் பாடகர் சக இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் இசை கடந்து பல்வேறு ஆளுமைப்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும், 

நம் காலத்து இசைஞானி இளையராஜா காலத்திலும், தேனிசைத் தென்றல் தேவா இசையிலும் பாடியது ஒரு முத்தாய்ப்பு.

“ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில

ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு, உசிரு

வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு’

https://www.youtube.com/watch?v=Cbsb8SSjhjU


என்று “ஆத்தா உன் கோயிலிலே” பாடலை ஜிக்கியம்மா பாடும் போது, 

“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டு

 அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டே

https://www.youtube.com/watch?v=bW-vBXila2k

நம் தலைமுறைக்கு முந்திய தலைமுறைக்குப் பால்வீதியில் கைப் பிடித்து அழைத்துச் செல்லுமாற் போல இருக்கும்.

சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் ஏ.எம்.ராஜா & ஜிக்கி பாடிய 

செந்தாமரையே செந்தேன் இதழே” 

https://www.youtube.com/watch?v=8aTZrjoBpr8


போன்று அதே காலத்தில் புதுமையாக ஐந்து இசையமைப்பாளர்கள் தனித்தனிப் பாடல்களோடு விளைந்த “கண்ணில் தெரியும் கதைகள்” படத்தின் 

“நான் ஒன்ன நெனச்சேன்

நீ என்னை நெனைச்சே”

https://www.youtube.com/watch?v=SxV_Tryq2v0

பாடலை சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராமுடன் ஜிக்கியம்மா பாடியதும் நம் தொட்டில் காலத்தில் கேட்டுப் பழக்கிய பாடல்கள்.

இசைஞானி இளையராஜாவும் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட “நினைத்து யாரோ நீதானே” பாடலுக்கு முன்பே “வட்டத்துக்குள் சதுரம்” படத்தில் பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் அற்புதமானதொரு பாடலை ஈன்றிருக்கிறார். ஜிக்கியம்மா தனித்துப் பாடும் அந்தப் பாட்டு

“காதலெனும் காவியம்

கன்னி நெஞ்சின் ஓவியம் 

ஓராயிரம் பாடலும் பாடுமே

மங்கை உள்ளமே வருவாய்....

https://www.youtube.com/watch?v=apzH-KcDmIg

இதுவரை கேட்காதவர்கள் இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தப் பாடலைக் கேட்டு விட்டு வாருங்கள். எவ்வளவு அற்புதமான தேவார்தம் என்று புரியும்.

“காதலெனும் காவியம்” பாடலின் தாளக் கட்டைக் கொஞ்சம் வேகம் பூட்டி ஒரு பாட்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்துப் பல்லாண்டுகளுக்குப் பின் வெளிவருகின்றது. அதுதான் 

“வண்ண வண்ணச் சொல்லெடுத்து 

வந்தது செந்தமிழ்ப் பாட்டு”

https://www.youtube.com/watch?v=7ccLsgNgleA

படத்திலும் ஒரு பாடகிக்கான குரலாகக் கெளரவம் பூணும் ஜிக்கி குரல், அந்தப் படம் எம்.எஸ்.வியின் குடும்பத் தயாரிப்பு என்பதும் இன்னொரு விசேஷம்.

இசைஞானி இளையராஜாவும் இன்னும் இன்னும் பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர்.

“தாயம் ஒண்ணு” படத்தில் 

“ராத்திரி பூத்தது காட்டு ரோஜா

 பார்த்ததும் பூங்கரம் நீட்டு ராஜா”

https://www.youtube.com/watch?v=u5RBG8pcZWw

என்று சில்க் ஸ்மிதாவின் விரகதாபப் பாடலுக்குப் பொருத்திப் பார்த்தவர் விட்டாரா என்ன?

அதே சில்க்குக்கு கிருஷ்ணதேவராயர் காலத்து 16 ஆம் நூற்றாண்டு காலத்துப் பாட்டுக்கும் ஜிக்கியை இணைத்துக் கொடுத்தார்.

அது தெலுங்கிலும், தமிழிலும் ஜிக்கியம்மாவே பாடிச் சிறப்பித்த பாட்டு. இறுதியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட இணைந்து பாடியிருக்கும் அந்தப் பாட்டைக் கேட்டால் ஐம்பதுகளுக்குப் போய் ராஜா இசைத்தது போலிருக்கும்.

தெலுங்கில் “Jaanavule”

https://www.youtube.com/watch?v=xisd-3n8EEw

தமிழில் “இள வாலிபனே”

https://www.youtube.com/watch?v=D8-6KuO4-Hw&t=999s

என்று அமைந்திருக்கும்.

அப்படியே ஒரு தாய்மை உணர்வுக்கு ஜிக்கியம்மாவைக் கடத்தி 

“பூவோடு காற்று வந்து

 புது ராகம் சொல்லித் தர”

https://www.youtube.com/watch?v=ezpM6Hyw4mg

என்று தர்மம் வெல்லும் படத்திலும் (இதே பாடல் இளையராஜாவின் குரலிலும் உண்டு), 

இன்னொரு தாய்மை சுரக்கும் பாடலாக பங்காளி படத்திலும்”

“செல்வமே சித்திரமே பூந்தேரே”

https://www.youtube.com/watch?v=7EQj4QC_Fes

பாடகி ஜிக்கிக்கு தன்னால் இயன்ற இசைக் கெளரவத்தைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

இன்று பாடகி ஜிக்கி அவர்கள் மறைந்து 17 ஆண்டுகள் ( 16.08.2004) தொடுகின்றது. நம் காலத்துப் பாடல்கள் வரை அவரின் நினைவுகள் தொடரும்.

“நீதானே  என்  கோயில் 

உன்  நாதம்  என் வானில்

ஊர்வலம்  போவோம்  பூந்தேரில்  

நினைத்தது  யாரோ  நீதானே.......”




கானா பிரபா

Sunday, August 15, 2021

❤️ மெளன ராகம் ❤️ 35 ஆண்டுகள் 🎸



ஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு 35 ஆண்டுகளைத் தொடுகின்றது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் கடந்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் கொண்டு நிலைத்திருக்கின்றது.

வெளியே கலகலப்பான திவ்யாவாகத் திரியும் அவளின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கடந்து போன காதலின் இழப்பைச் சொல்லமுடியாத வேளை, சூழ்நிலைக்கைதியாகத் திருமண பந்தத்தில் இணைகின்றாள். காதலை மனதில் பூட்டி வைத்து மெளனராகம் பாடும் அவளும், கரம் பிடித்தவனும் "தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் தம் திருமண பந்தத்தைத் தொடர்ந்தார்களா என்பதே இந்தக் காவியத்தின் மையம்.

ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு, பொருத்தமான பாத்திரங்களையும், துறை தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் இணைத்துப் படைக்கும் எந்த ஒரு படைப்பும் காலத்தைத் தாண்டிப் பேச வைக்கும் என்பதை இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் பாடமெடுக்கும் படங்களில் கண்டிப்பாக மெளன ராகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளியே ஆர்ப்பாட்டம் காட்டி உள்ளே மெளன ராகம் பாடும் திவ்யா என்ற பாத்திரத்தில் ரேவதி, மனைவியின் மனம் கோணாது அவள் வழியே விட்டுத் துணையாகப் பயணிக்கும் கணவனாக என்ற சந்த்ரு மோகன், திவ்யாவின் கல்லூரிக்காலக் காதலனாக மனோ என்ற குணச்சித்திர பாத்திரத்தில் கார்த்திக் என்று இவர்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத வகையில் இவர்களுக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட பாத்திரப்படைப்புக்கள். அதிலும் குறைவாகவே வந்தாலும் நிறைவாகவே நிற்கும் கார்த்திக் இன் குணச்சித்திர வேடம் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு இன்னொரு தமிழ் சினிமா இப்படியானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கின்றதா என்பதை யோசித்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும். மோகனின் பாத்திரத்தோடு இணைந்து கச்சிதமாகப் பொருந்திப்போகும் சுரேந்தரின் பின்னணிக்குரலையும் சொல்லி வைக்க வேண்டும்.


கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பன்முகப் பொறுப்புக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு மணிரத்னம் இயக்கிய சொற்பமான படங்களில் இதுவுமொன்று. அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காத வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம். பகல் நிலவு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், நாயகன் கொடுத்த பெரும் அங்கீகாரத்துக்கு முன் "மெளன ராகம்" என்ற இந்தப் படைப்புக்குத் தயாரிப்புப் பொறுப்பை அவரின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஷ்வரன் ஏற்க, ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் ஏற்றிருக்கின்றார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி என்ற இரட்டைக் குரல்கள் மாத்திரமே முழுப்பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கின்றார்கள்.

இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது.


இந்தப் படத்தின் பின்னணி இசைப் பிரிப்பு வேலைகளைச் செய்யும் போது கவனமாக ஒவ்வொரு துளியாகச் சேமிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். எனவே இந்தப் பணியைக் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் செய்யத் தொடங்கினேன். கூடவே இப்படியான படைப்புக்களுக்கு ரசனை உள்ள சகபதிவரைத் துணைக்கழைத்து அவரின் பார்வையில் காட்சிப்படுத்தல்களில் இழையோடும் இசை குறித்த வர்ணனையை எதிர்பார்த்த போது கை கொடுத்துச் சிறப்பித்தவர் "மாதவிப்பந்தல்" புகழ் என் அருமைச் சகோதரன் கே.ஆர்.எஸ் என்ற கண்ணபிரான் ரவிசங்கர். எங்களோடு இணைந்து, இந்தப் பணியில் கே.ஆர்.எஸ் இற்கு அவ்வப்போது காட்சித் துண்டங்களை வழங்கிப் பதிவை எழுத உதவிய நண்பர் சுரேஷ் உம் இணைந்து எம் மூன்று பேரின் உழைப்பு இந்தப் பதிவில் இணைந்து சிறப்பிக்கின்றது.

பாடல் வரிகள் தான் முக்கியம்!

பின்னணி இசை = 'பின்'-அணி தான்!

ஆனால் அதையும் மீறி, பாடல் சாராத அழகிய BGM-களை MSV குடுத்திருக்காரு! காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்! துள்ளலான அழகிய BGM!

* 'பின்னால்' இருந்த BGM-ஐ, 'முன்னால்' கொண்டு வந்து...

* தாளம் மட்டும் அல்லாமல், ராகத்தையும் கொண்டாந்து வைத்து...

* பியானோ முதல் புல்லாங்குழல் வரை...பல இசைக்கருவிகளையும் BGM-இல் நடை பயில விட்டு...

* 'பின்'-அணியை 'முன்'-அணி ஆக்கி...பல வர்ண ஜாலங்கள் காட்டத் துவங்கியது... = இ-ளை-ய-ரா-ஜா!

பாடல் காட்சிகளிலே வரிகளும் முன் வந்து நிற்பதால், இசை சற்று முன்னும் பின்னும் வாங்கும்!

ஆனால் படத்தின் சீன்களில்? = அது இசை-அமைப்பாளனின் ஆடுகளம்! BGM-இன் முழு வீச்சு இங்கே தான்!

அன்னக்கிளி படத்தில் தொடாத BGM-களை எல்லாம்...முள்ளும் மலரும் படத்தில் தரத் தொடங்கினார்...

அது அப்படியே சிகப்பு ரோஜாக்கள், உதிரிப் பூக்கள், ஜானி, ராஜ பார்வை, மூன்றாம் பிறை என விரிந்து...மெளன ராகம் என்னும் படத்தில் தலை விரித்து ஆடியது!

தொடர்ந்து இசைஞானி அள்ளி வழங்கிய "மெளன ராகம்" என்ற காவிய ரசத்தைப் பருகுவோம்.

மெளனராகம் முகப்பு இசை

படித்தில் வரப் போகும் சிலிர்ப்புகளை, டைட்டிலிலேயே சொல்லி விடும் இசை!

தமிழ்ப் பட டைட்டில் இசையில்...

இதை மட்டும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கி விட்டார் ராஜா!

ஆரம்பத்தில் பியானோவில் மட்டுமே வலம் வரும் இசை...

உடனே சந்தோஷத் துள்ளலுக்கு மாறி...

சிறிது நேரத்தில் மீண்டும் மாறிச் சோகம் இசைக்க...

அத்தனை வயலின்களும் சேர்ந்து கொள்ள....டைட்டில் முடிந்து...வீட்டில் விடியற்காலை அலாரம் ஒலிக்கிறது! 🙂

படம் முழுதும் தூவித் தூவி வரும் இந்த மாய இசையைக் கேளாத காதுகளே இல்லை! ஒலிக்காத செல்பேசிகளே இல்லை!

http://radio.kanapraba.com/mounaragam/mr1.mp3

ரேவதி தன் தங்கையோடு, அண்ணன் அண்ணியின் கொஞ்சலைச் சீண்டிப்பார்க்கும் குறும்புக் காட்சி

http://radio.kanapraba.com/mounaragam/mr2.mp3

தன்னைப் பெண் பார்க்க வரும் மாலைவேளை அதைத் தவிர்க்க ரேவதி தன் நண்பிகளோடு மழையில் லூட்டி அடிக்கும் "ஓஹோ மேகம் வந்ததோ பாடலோடு"

http://radio.kanapraba.com/mounaragam/megam1.mp3

காலம் கடந்து வீடு திரும்பும் ரேவதி மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்து போய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் குஷியாக உள் நுழைய அங்கே அவர்களைக் காணும் அதிர்ச்சித் துளி இசையாக

ஓகோ மேகம் வந்ததோ...பாட்டு முடிஞ்சி...ஹைய்யா அம்மா-அப்பாவை ஏமாத்தியாச்சே-ன்னு வீட்டுக்கு வந்தா....மாப்பிள்ளை காத்துக் கிடக்காரு!

கையில் செருப்போடு, அவளும் நோக்கினாள்! அண்ணலும் நோக்கினான்! 🙂

அதிர்ச்சியில் சித்ரவீணை பேசுகிறது, மூன்றே நொடிகளுக்கு!

http://radio.kanapraba.com/mounaragam/mr3.mp3

பெண் பார்க்க வரும் மோகன் - ரேவதி தனிமையில் சந்திக்கும் வேளை,2 நிமிடம் 10 செக்கன் ஓடும் காட்சியில் இடையில் வரும் உரையாடலையும் இணைத்திருக்கின்றேன் காட்சி, உரையாடலோடு வரும் இசை எவ்வளவு தூரம் இழைந்திருக்கின்றது என்று உணரக்கூடிய வகையில்

http://radio.kanapraba.com/mounaragam/mr4.mp3

"அவரு உன் கிட்ட ஏதோ தனியாப் பேசணுமாம்" என்று சொன்னவுடன், பிடிக்கலீன்னாலும்...இன்ப அதிர்ச்சியா ஒரு வயசுப் பொண்ணுக்கு?

= ஒரே ஒரு ஒத்தை மிருதங்க ஒலி.....டங்ங்ங் ! BGM-ஐக் கேளுங்க! 'மெளனம்' என்பதைக் கூட இசையாக்க வல்ல 'தெறமை' ராஜாவுக்கே உரித்தானது!

அங்கே துவங்கிய மிருதங்க ஒலி, "உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"-ன்னு மோகன் சொல்லும் வரை, 1 beat, 2 beat, 3 beat-ன்னு வித்தை காட்டும்!

ரேவதியை மாப்பிளைக்கு பிடித்திருக்கு என்று குடும்பமே குதூகலத்தில் இருக்க, "எனக்குப் பிடிக்கல" என்றவாறே தன் எதிர்ப்பைக் காட்டும் காட்சியில்

http://radio.kanapraba.com/mounaragam/mr5.mp3

தன் தந்தைக்கு Heart attack என்றறியும் போது வரும் காட்சியில் இழைந்தோடும் அதிர்ச்சியும், சோகமும் இசையில் தெறிக்க

http://radio.kanapraba.com/mounaragam/mr6.mp3

ரேவதி, மோகனைக் கரம்பிடிக்கும் மணமேடை

http://radio.kanapraba.com/mounaragam/mr7.mp3

முதல் இரவில் காதலோடு கணவன், தள்ளி நிற்கும் அவள்

கல்யாணம் முடிஞ்சி First Night Scene எனக்கு ரொம்பப் பிடிக்கும்! 🙂

முதலிரவுக்குப் பயப்படும் ரேவதி, கதவை மூடும் போது சோக வயலின்...

அதுவே மெல்லீசா இன்ப இசையா மாறி...

மோகன் லுக்கு விடும் போது, சக் சக் சக் சக்-ன்னு ஒரு கிக் இசையாகி.....தீண்டும் இன்பம்!!

http://radio.kanapraba.com/mounaragam/mr8.mp3

டெல்லிக்கு வரும் தம்பதிகள், மோகன் ஆசையாகத் தன் வீட்டைச் சுற்றிக் காட்ட, ரேவதி காட்டும் அசட்டை

http://radio.kanapraba.com/mounaragam/mr9.mp3

மோகன், ரேவதி மனம் விட்டுப் பேசும் காட்சி

http://radio.kanapraba.com/mounaragam/mr10.mp3

தன் மனைவிக்கு ஆசையாக முதல் பரிசு வாங்கித் தரக் கணவன் கடைவீதியில், "இந்தக் கடையில் விவாகரத்து வாங்கிக்கொடுக்க முடியுமா" என்று கேட்கும் அவள், "நிலாவே வா செல்லாதே வா" பாடலோடு

http://radio.kanapraba.com/mounaragam/mr11.mp3

"என் இதயத்தில உங்களைக் கணவரா ஏத்துக்க முடியல" படத்தின் மூல இசை அப்படியே அடித்துப் போட்டவன் மெல்ல எழுந்து நகர்ந்து வருவது போல மெதுவாகப் பயணிக்க

"நீங்க தொட்டா கம்பளிப்பூச்சியைத் தொட்டமாதிரி"தபேலாவின் அதிர்வோடு

இதற்கு என்ன எழுத முடியும்? நீங்களே கேளுங்கள்!

தபேலா மட்டும் துடிதுடிக்க...இறுதியில் சுரத்தே இல்லாத மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும்...மென் உணர்வுகள்!!!

http://radio.kanapraba.com/mounaragam/mr12.mp3

கார்த்திக் அறிமுகமாகும் காட்சி ஆர்ப்பரிக்கும் இசைக்கூட்டணியோடு

ஒரு மனிதனின் குணத்துக்கு BGM போட முடியுமா? - Karthik Entry!

* கார்த்திக் = துள்ளல்

* ரேவதி = தில்லு

* மோகன் = மென்மை

படத்தில் இது வரை வராத Trumpet முதல் முறையா முழங்க...

சண்டைக் காட்சியிலும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் மெல்லிதாகவே கேட்க...

கார்த்திக்கின் துள்ளல் இசையே, முழுசும் ஆக்ரமிப்பு!

http://radio.kanapraba.com/mounaragam/mr13.mp3

எம்.பி மகனைத் தாக்கிய குற்றவாளி ஆள் அடையாள அணிவகுப்பில் கார்த்திக்கைக் காட்ட ரேவதி முன் வருகையில்

http://radio.kanapraba.com/mounaragam/mr14.mp3

போலீஸ் அடி வாங்கி தள்ளாடி வரும் கார்த்திக், மூல இசை சோகராகமாகி பின்னர் குதூகலித்துப் பயணிக்கிறது

பெயிலில் எடுக்கும் போது....

நொண்டும் கார்த்திக்கின் சோக டைட்டில் இசையே,

கண்ணடிக்கும் கார்த்திக்கின் துள்ளல் டைட்டில் இசையாக மாறி...

http://radio.kanapraba.com/mounaragam/mr15.mp3

ரேவதியை கல்லூரியில் சந்திக்கும் கார்த்திக் தன் காதலைப் பகிரும் காட்சி

http://radio.kanapraba.com/mounaragam/mn.mp3

பஸ்டாண்டில் மீண்டும் சந்திக்கும் ரேவதி கார்த்திக்

http://radio.kanapraba.com/mounaragam/mr16.mp3

coffee shop இல் காதலால் சீண்டிப்பார்க்கும் கார்த்திக்

http://radio.kanapraba.com/mounaragam/mr17.mp3

தன் தந்தையைக் குறும்பு செய்த கார்த்திக் இன் சேஷ்டையைப் பார்த்து மனம் விட்டுச் சிரிக்கும் ரேவதி, கூடவே கார்த்திக் உம் இணைந்து கொள்ள சந்தோஷ மழையில் இசையும் கூட

http://radio.kanapraba.com/mounaragam/mr18.mp3

கல்லூரி லைப்ரரியில் கார்த்திக் ரேவதி சந்திக்கும் காட்சி, கூடவே ஒலிபெருக்கி மூலம் ஊரைக்கூட்டிச் சொல்லும் காதலோடு இணைகிறார்கள் மனதால் ஒருமித்து. இசைத்துண்டத்தின் இறுதித் துளிகளில் படத்தின் மூல இசை இன்னொரு பரிமாணத்தில்

http://radio.kanapraba.com/mounaragam/mr19.mp3

தன் போராளிக்குணத்தைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொட்டும் மழையில் ரேவதியைச் சந்திக்கும் காட்சியில் கல்யாணத்துக்கு நேரம் குறிக்கையில்

http://radio.kanapraba.com/mounaragam/mr20.mp3

கல்யாண நாளன்று போலீஸ் துரத்தலில் கார்த்திக், கார்த்திக் இன் இறுதி நிமிடங்கள்

கார்த்திக் ஜீப்பில் இருந்து குதிக்கும் போது, வயலினும் குதிக்கிறது! வயலினும் ரோட்டில் ஓடுகிறது!

அதுவே டைட்டில் BGM-ஆக மாறி...திவ்யா...ஆவி அடங்குகிறது! காதல் அடங்குகிறதா?

http://radio.kanapraba.com/mounaragam/mr21.mp3

மோகன் ரேவதிக்கு ஆசையாகக் கொடுக்கும் பரிசு

விவாக ரத்துப் பத்திரமும், கொலுசும் = ஷெனாயில் துவங்கி, மாங்கல்யம் தந்துனானே!

http://radio.kanapraba.com/mounaragam/mr22.mp3

பூஜா கா குங்கும் ஹை! சிந்தூர் லகாதோ - என்று அலுவலகப் பெண் வாழ்த்த, எல்லாரும் வாழ்த்த.....

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல! நாடகம் ஆனதும் விலகிச் செல்ல...

http://radio.kanapraba.com/mounaragam/mr23.mp3

ரேவதி மோகனுக்காக ஆசையாகச் சமைத்துவிட்டுக் காத்திருக்க, வேலையில் இருந்து தாமதமாக வரும் மோகன் அதற்காக வருந்தும் காட்சியின் பின்னணி இசை

http://radio.kanapraba.com/mounaragam/mr24.mp3

டெல்லி சுற்றிப்பார்க்க ரெடி

http://radio.kanapraba.com/mounaragam/mr25.mp3

விவாகரத்து தம்பதிகள் தாஜ் மகாலைக் காணும் திடீர்க் காட்சி.....பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(

முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ???

http://radio.kanapraba.com/mounaragam/mr26.mp3

விபத்தில் சிக்கிய மோகனை, மருத்துவமனையில்..."என் புருசன்" என்று தாலி தூக்கிக் காட்டும் காட்சி...ஷெனாய் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்!

ஷெனாய் ஒலிக்க, தம்பூராவைச் சுண்டும் ஒரே ஒலி ஊடாடும் அழகு!

http://radio.kanapraba.com/mounaragam/mr27.mp3

முப்பது நாள் கடந்து முதன்முதலில் காதலோடு தன் கணவனைப் பார்க்கையில் "சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா"

http://radio.kanapraba.com/mounaragam/mr28.mp3

மோகன் வீட்டில் மேற்கத்திய இசை கேக்கறாரோ? = Violin Ensemble Orchestra!

Wow! ரேவதி கொலுசு சத்தம் போடாமல் குதிகாலில் காதல் சொல்லி வர...

ஆனால்.....மோகனோ எரிஞ்சு விழ...ரேவதியின் காதல் கண்ணீரில் துளிர்க்கிறது!

http://radio.kanapraba.com/mounaragam/mr29.mp3

மோகன் பொட்டு வைத்து விட, காலிங் பெல் அடிக்க, சென்னைக்கு டிக்கெட் வர...அதே டைட்டில் இசை...ஆனால் வேறு சாயலில்!

http://radio.kanapraba.com/mounaragam/mr30.mp3

தில்லியை விட்டுப் போகும் போது, தில்லிக்கு வந்த அதே இசை!

ரேவதியின் பேச்சே ஒரு இசை தானோ? = "உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"

http://radio.kanapraba.com/mounaragam/mr31.mp3

வயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM!

= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்!

http://radio.kanapraba.com/mounaragam/mr32.mp3

BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!

தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...

அதே சமயம், தம்பதிகள் பேச வேண்டிய இடத்தில் எல்லாம், இசை மட்டுமே பேச, இந்தத் தம்பதிகள் பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் இசை!

Mute-ல்ல போட்டு, BGM இல்லாம, மெளன ராகம் கடைசிச் சீனை, சும்மா ஒருக்கா பாருங்க...

இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!

அதுவும் ஒரே டைட்டில் இசையை, பல அவதாரங்களில் ஓட விடும் மாயம்!

ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,

ஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....

இசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்! மெளன ராக ஸ்தோத்திரம்!!

பின்னணி இசைப் பகிர்வில் நயவுரை எழுதிய நண்பர் கே.ஆர்.எஸ் இற்கும் நன்றிகள்.

கானா பிரபா


Wednesday, August 11, 2021

Oh Butterfly .....Butterfly... வ்வாவ் வ்வாவ் Oh Butterfly.....🦋 ஏன் விரித்தாய் சிறகை......🧚‍♂️ தரையில் விழாத இசை ❤️

அந்த ஆரம்ப இசையே வண்ணத்துப் பூச்சி சிறகடித்து உலாவுமாற் போலப் புல்லாங்குழல் நாதத்தோடு கிளம்ப,
இடையில் வரும் நிச் நிச் ஒலியைக் கற்பனை பண்ணினால் அந்த வண்ணத்துப் பூச்சி ஒவ்வொரு பூக்களாய்த் தாவித் தாவி இருக்கும் ஓசையோ எனத் தோன்றும்.
“எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு”
என்று கேட்டு வாங்கி போனார் எட்டு வயசுப் பெண் குழந்தை.
“அது பழைய பாட்டாச்சே” என்று அறிவிப்பாளர் ஜெய்னேஷ் கிண்டலாகக் கேட்ட போது தான் அந்தக் குழந்தை இந்தப் பதிலைச் சொல்லிப் பாடலைக் கேட்டது. ஒரு தினம் சிங்கப்பூர் ஒலி வானொலியைக் கேட்ட போது தான் இந்த சுவாரஸ்யமான உரையாடல் நிகழ்ந்தது.
அந்தப் பாடல் வானொலியில் ஒலித்து ஓய்ந்தும் என் மனசில் கடந்த மூன்று மணி நேரமாக வண்ணத்துப்பூச்சி போலச் சுற்றிக் கொண்டே வருகிறது.
இந்தப் பாட்டை ஆழ அகலமாக முன்பெல்லாம் கேட்டு ரசித்திருந்தாலும் இன்று ஏனோ புதிதாகக் கேட்பது போல. இதை விட ரொம்பப் பழைய பாடல்களையெல்லாம் இன்றைய குழந்தைகள் கேட்டு ரசிப்பது வழமை என்றாலும் ஓ பட்டர்ஃப்ளையின் சிறப்பு வெறுமனே பாடலின் மெட்டு மட்டுமல்ல அது தாங்கியிருக்கும் இசையும். பூவில் குடிகொண்ட தேனை உறுஞ்சிக் களி கொள்ளும் வண்ணத்துப்பூச்சி கொள்ளும் கிறக்கம் எழும். ஒரு தித்திப்பும், புத்துணர்வும் இருக்கும்..
ஓ பட்டர்ஃப்ளை பாடலை எப்படி இசையமைச்சீங்க? என்று பாடகர் கார்த்திக் இசைஞானி இளையராஜாவிடம் கேட்ட போது ராஜாவும் வேடிக்கையாக கையை மிதப்பது போல அசைத்துக் காட்டியதை இசை மேடையில் கண்டிருப்போம். ஆனால் இந்தப் பாடல் வெளிவந்த நாட் தொட்டு பாடலைக் கேட்கும் போதே மிதக்குமாற் போலத் தான் உணர்வேன். பாடல் கூட இசையோடு மிதந்து கொண்டேயிருக்கும். பயன்படுத்திய வாத்தியக்கருவிகளில் புல்லாங்குழல், வயலின் ஈறாக ஒரு புது மாதிரியான மெது மெதுப்பு இருக்கும். புல்லாங்குழல் ஒலி வரும் போதெல்லாம் நோகாமல் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியைத் தான் கண்ணுக்குள் கொண்டு வரும்.
இந்த மாதிரிப் பாடல்கள் என்றால் பாடும் நிலா பாலுவுக்கு கரும்பு சுவைப்பது போல. அந்த “பட்ட ஃப்ளை” என்ற உச்சரிப்பிலேயே ரொம்பவும் நாகரிக எடுத்தாளுகையாக “ர்” ஐ சேர்க்காமல் பாடுவார். ஆனால் கூடப் பாடும் ஆஷா போன்ஸ்லே அபிராமிப்பட்டர் ரேஞ்சுக்கு “பட்டர்ர்ர்ர்ஃபளை” என்று ர்ர்ர்ப்பாடியிருப்பார்ர்.
கேட்கும் போதெல்லாம் இதையும் ஸ்வர்ணலதாவுக்கு எழுதி வைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றும். எஸ்.பி.பிக்கும் ஸ்வர்ணத்துக்குமிடையில் வெற்றி தோல்வியற்ற சமனான ஆட்டமாக இருக்கும்.
“மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே” என்ற அடியில்
“உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே”என்று வரும் கணங்களில்
போதையேற்றுவார் ஆஷா போன்ஸ்லே.
இந்தப் பாடலை சுஜாதா பாடியிருக்கிறார் பாருங்கள் நம் எதிர்பார்ப்பைக் கொஞ்சம் ஈடு செய்திருப்பார் இங்கே https://youtu.be/gUVQhGw0i1Q
“மீரா” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. அனைத்துப் பாடல்களிலும் ஒரு இளமைத் துள்ளாட்டம் இசையில் மட்டுமல்ல வாலிபக் கவிஞர் வரிகளிலும் இருக்கும். ஆச்சரியமாக இந்தப் படத்தில் இடம் பெற்ற “புது ரூட்டுல தான்” பாட்டு தான் என் மனைவியாருக்குப் பிடிக்கும். 😃
கதாநாயகி ஐஸ்வர்யாவை நேரில் பார்க்காமல் ஒரு சஞ்சிகையில் பார்த்துத் தான் "மீரா” படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன் என்று அப்போது பேட்டி கொடுத்திருந்தார் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமான ஒளிப்பதிவாளர் P.C.ஶ்ரீராம். அப்போது ஐஸ்வர்யாவும் வண்ணத்துப் பூச்சியுமாக பேரழகு வடிவம் கொண்டு “மீரா”குறித்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தனர். சரத்குமார் நாயகனாக மாறிய போது இந்தப் படத்தில் மட்டும் வில்லனாக நடிக்கிறேன் என்று ஒப்பந்தமான கடைசிப்படம். அதிர்ஷ்டமில்லா நாயகன் விக்ரம் கூட எதிர்பார்ப்போடு இருந்த படம்.
மினி ஜோசப் என்ற கேரளத்துக் குயிலை மின்மினி ஆக்கி “லவ்வுன்னா லவ்வு” பாட வைத்துத்‬ தமிழ்த் திரையுலகில் ஒரு புதுக் குரலை அறிமுகப்படுத்தினார் இசைஞானி.
தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் மின்சாரத் தடை இருந்த போது ஜெனரேட்டரில் 100 ரூபாவுக்கு (அப்போது அது ஆயிரம் ரூபாவை விடப் பெறுமதி) மண்ணெண்ணை போட்டுப் பார்த்த படங்களில் மீராவும் ஒன்று. பெரும்பாலும் படத்தை இரசித்துப் பார்க்கும் ஆவலை விட, அந்த நெருக்கடியான காலத்திலும் படம் போட்டுக்காட்டி ஏதோ சாதனை செய்த திருப்தி தான் முனைப்பில் இருக்கும். எமது வாலிபப்பருவத்தில் இருந்த ஒரே பொழுதுபோக்கு அல்லது நடத்தை அதுவாகத் தான் இருந்தது. அந்த நேரத்தில் எங்கள் கிராமத்தில் படம் பார்க்கும் கோஷ்டியில் என்ன படம் போடலாம் என்ற ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினன் நான். என் படத் தெரிவுகள் சில சொதப்பியதும் உண்டு. விக்ரம் நடிக்க அப்போது பிரபலமாக இருந்த பி.சி. ஶ்ரீராம். இயக்க "மீரா" படம் வருகுது என்று ஆவலைத் தூண்ட, மீராவையும் எடுத்துப் போட்டோம்.
படம் தொடங்கி முடியும் வரை, கதாநாயகனும் நாயகியும் வில்லனுக்கு பயந்து ஒடுகினம் , ஒடுகினம், ஓடிக்கொண்டே இருக்கினம். படம் முடிஞ்சாப் பிறகும் கூட்டாளி அப்புவால் நம்பமுடியவில்லை. இன்னும் ஏதேனும் படம் இருக்கும் என்ற நப்பாசையில் எழும்பவேயில்லை. மற்றவர்கள் தங்கள் மோசம் போனது போல் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் என்னுடைய முந்திய தெரிவுகள் சில நல்லதாக இருந்ததால் நானே அவர்களுக்கு நிரந்த ஆலோசகர். இப்படிப் பழைய நினைவுகளை எல்லாம் இந்த “மீரா” கிளப்பும்”.
29 வருடங்கள் கழித்தும் மீரா படத்தைப் பற்றிச் சிலாகிக்க இன்று எஞ்சியிருப்பது இசைஞானியின் பாடல்கள் தான். அது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போகும் இன்று காலை கேட்ட சிங்கப்பூர் வானொலிக் குழந்தை போல.
மலர்கள் தோறும்
நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம்
இரவல் கேட்கும்
எனது ஜீவனே…..
Oh Butterfly .....Butterfly...

Tuesday, August 10, 2021

இசைக்கவோ நம் கல்யாண ராகம்.....



இந்தப் பாட்டின் மீது இலங்கை வானொலி காலத்தில் இருந்து கொள்ளைப் பிரியம். கங்கை அமரன் இசையமைப்பாளராக உருவெடுத்த காலத்தில் வந்த ஆரம்பப் படங்களில் ஒன்று “மலர்களே மலருங்கள்”. விஜயகாந்த், ராதிகா, சுதாகர் என்று நிறம் மாறாத பூக்கள் படத்தின் நடிகர்கள் கூட்டத்தோடு (ஆயிரம்) மலர்களே மலருங்கள் என்று தலைப்பு ஈறாகக் கவர்ந்த படம் ஆனால் ரசிகர்களைக் கவராது பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது. ஆனாலும் பாடல்களைச் சுளை சுளையாகக் கொடுத்திருந்தார் கங்கை அமரன்.

அதில் ஒன்று தான் “இசைக்கவோ நம் கல்யாண ராகம்”. 

https://www.youtube.com/watch?v=HzkX4ThiTRo&t=72s

வீணை, ஷெனாய் வாத்தியங்களில் அப்படியென்ன ஈடுபாடோ இவருக்கு என்னுமளவுக்கு கங்கை அமரன் பாடல்களில் இவற்றின் பயன்பாடு அமைந்திருக்கும். இந்தப் பாட்டில் வீணையின் ஆலாபனம் அழகாக இருக்கும். பாடல் வரிகள் எம்.ஜி.வல்லபன்.

ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி ஜோடி சேர்ந்த இனிய பாடல்களில் இதையும் சேர்த்து எழுத வேண்டும். நல்ல மெட்டுகளைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள், பாடலோடு பயணிக்கும் இசையில் நெருடலை உண்டு பண்ணி விடுவார்கள். ஆனால் இந்தப் பாட்டில் கங்கை ஆகக் கொட்டும். இடையில் ஸ்வர சாதகத்தையும் வரிகளைக் கொடுக்கும் பாங்கே தனி.


“மலர்களே மலருங்கள்” படத்தைச் சொல்லும் போது கங்கை அமரனுக்கு முதலில் வாய்ப்புக் கிட்டிய “மலர்களிலே அவள் மல்லிகை” படத்தையும் சொல்லி வைக்க வேண்டும். இதுதான் கங்கை அமரன் இசைத்த முதல் படம். ஒரு தயாரிப்பாளரிடம் மலேசியா வாசுதேவன் கங்கை அமரனைப் பரிந்துரைத்து அந்தப் பட வாய்பைப் பெற்றுக் கொடுத்ததை கங்கை அமரன் வேடிக்கையாகப் பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.

ஆனால் வெளிவராத பாவத்தால் “விடுகதை ஒரு தொடர்கதை” படம் அந்த லாபத்தைப் பெற்றுக் கொண்டது.

மலர்களே அவள் மல்லிகை படத்தில் பி.சுசீலாவோடு ஜெயச்சந்திரன் பாடும் “சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்” https://www.youtube.com/watch?v=jcyZ-26pcUw

பாடலும் அந்தக் காலத்து றேடியோ சிலோன் பிரபலங்களில் ஒன்று தான். அற்புதமான பாட்டு.

மலர்களிலே மலருங்கள் படத்தில் இன்னொரு முத்து “சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா ” https://www.youtube.com/watch?v=zgj6cUps8v4

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலுக்கு பி.சுசீலா குரல் கொடுத்தது. இந்தப் பாடலையும் கேட்கும் போது கங்கை அமரன் இசைத்திறன் துலங்கும். 

கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடிய “ஞாபகம் இல்லையோ” https://www.youtube.com/watch?v=-ikrfOOuzJI வெகு காலத்துக்கும் நீடித்த வானொலிப் புகழ் கொண்ட பாட்டு.


கானா பிரபா


Thursday, August 5, 2021

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் ♥️


இன்று கடும் குளிர் போர்த்திய விடிகாலை உடற்பயிற்சி ஓட்டத்துக்கு என்னைத் தயார்படுத்தி விட்டு வழக்கம் போல காதணிகளைச் செருகி விட்டு YouTube இல் எழுமாற்றாக ஏதாவது இளையராஜா பாடலைக் கேட்கலாம் என்று துழாவிய போது தன்னிச்சையாகக் காட்டியது இந்தப் பாடல் காணொளி

https://youtu.be/LYwfNL08IVo

உடற்பயிற்சி ஓட்டம் ஆரம்பித்த கணம் தொட்டு அது முடிவுற்ற புள்ளி வரை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு அற்புதமான மீள் பகிர்வாகக் கொடுத்திருந்தார்கள். பஞ்சாமிருதத்தில் கடிபடும் கற்கண்டு போல நுணுக்கமான சங்கதிகள் ஒன்றைக் கூட இந்தப் பாடகர்கள் விட்டு வைக்கவில்லை. அமிர்தம் தான்.

ஒரு பாடலைப் பாட முன்பு அதைக் காதலிக்க வேண்டும். அப்படியான காதலுணர்வோடு அணுகினால் தான் அதன் பூரணத்தை அப்படியே அள்ளிக் கொடுக்க முடியும். அப்படியொரு நிறைவானதொரு முயற்சி இது. பாடிய ரம்யா துரைசாமி மற்றும் சஞ்சய் சதீஷ் உங்களுக்கு 💚🙏

தூறல் நின்னு போச்சு படத்தில் வரும் இந்தப் பாடலை அடியொற்றி கவிஞர் முத்துலிங்கத்திடம் கே.பாக்யராஜ் படங்களில் அவர் பணியாற்றிய அனுபவத்தைப் பேட்டியில் நான் கேட்ட போது

“பூபாளம் இசைக்கும் 

பூமகள் ஊர்வலம்”

என்று மனுஷர் பாடி விட்டுத் தான் தொடர்ந்தார். அப்படியாயின் அந்த மெட்டை அவர் உளமாரக் காதலித்திருக்கின்றார். அதனால் தான் பூ மாதிரி அற்புதமான வரிகளை அவரால் தூவ முடிந்தது.

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்

னன னன னன னனனா 

மெட்டின் வசீகரத்தில் வரிகளைப் போட மறந்து விட்டாரோ என்றெண்ணும் ஆலாபனை

மாலை அந்தி மாலை 

இந்த வேளை 

மோகமே….

ஜேசுதாஸ் அப்படியே உருகிப் போய் விடுவார். தட்டி இயல்பாக்குவது போல உமா ரமணன்

நாயகன் ஜாடை நூதனமே 

நாணமே பெண்ணின் சீதனமே…..

அப்படியே சரணத்தில் உமா ரமணனின் அக்மார்க் உருக்கத்துக்கு வழி சமைக்கும்

பூவை எந்தன் சேவை 

உந்தன் தேவை அல்லவா…,,

என்ன விலை கொடுத்தாவது பாட்டுக்குள்ளே வாழ்ந்து விட்டு வர வேண்டும் போல இருக்கும்.

இந்தப் பாடலில் “தந்தன” கொட்டும் கோரஸ் குரல்கள் தான் எவ்வளவு அழகு மணப்பெண்ணின் தோழியர் போல.

“இரு மனம் சுகம் 

பெறும் வாழ்நாளே..” 

அந்த வாழ் நாளை உயர்த்திப் பாடும் பாங்கைப் பாருங்கள். அங்கே தான் ஒரு பாட்டின் ஜீவிதம் புரியும். அவ்வளவு உயரம் வேண்டுமாம் இவர்களுக்கு.

மேகமழை நீராட...

தோகை மயில் வாராதோ 

தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது

னன னன னன னனனா…

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

Monday, August 2, 2021

"நீ வருவாய் என நான் இருந்தேன்" பாடகி கல்யாணி மேனன் விடை பெற்றார்

பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் சற்று முன்னர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சக இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாருமாவார். மறையும் போது இவருக்கு வயது 80.

எண்பதுகளில் இலங்கை வானொலியில் ஓயாது ஒலித்த "நீ வருவாய் என நான் இருந்தேன்" பாடலின் வழியாகப் பரவலாக அறியப்பட்டவர்.

https://www.youtube.com/watch?v=9cCLwq-DSag

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று தொடர்ச்சியாக அவருக்கு முத்தான பாடல்கள் கிட்டின. கோவிந்த் வசந்தாவின் 96 பாடலில் சின்மயியுடன் இணைந்து பாடிய "காதலே காதலே" அவருக்கு நிறைவாகப் புகழ் சூட்டிய பாட்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தண்ணியைப் போட்டா சந்தோஷம் (சவால்), நீ வருவாய் என (சுஜாதா), 

சங்கர் கணேஷ் இசையில் “விதி வரைந்த பாதை வழியே” (விதி), நான் இரவில் எழுதும் (சுப முகூர்த்தம்), 

இசைஞானி இளையராஜா இசையில் செவ்வானமே பொன் மேகமே ( நல்லதொரு குடும்பம்), “அம்பத்தொன்பது பெண் பக்‌ஷி (ஆலோலம்),

கங்கை அமரன் இசையில் "என் ராஜாவே" (வாழ்வே மாயம்), 

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலை பாயுதே கண்ணா (அலைபாயுதே) , வாடி சாத்துக்குடி (புதிய மன்னர்கள்) , அதிசயத் திருமணம் (பார்த்தாலே பரவசம்), ஓமணப் பெண்ணே ( விண்ணைத் தாண்டி வருவாயா) போன்ற கூட்டுப் பாடல்களையும் பாடிச் சிறப்பித்தவர். ராஜீவ் மேனனின் நண்பர் ரஹ்மானின் ஆரம்ப காலம் தொட்டுத் தொடர்ந்த பாடகி இவர். ஓமணப் பெண்ணே பாடலின் மலையாள வரிகள் இவரே எழுதியது.

நம் வாழ்க்கையில் சில அபூர்வங்கள் நிகழ்வதுண்டு. மறைந்த கல்யாணி மேனன் குறித்து நினைத்த போது இன்னொரு விஷயம் புலப்பட்டது. இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகளின் நினைவு தினத்திலேயே அவர் மறைந்திருக்கிறார். கல்யாணி மேனனுக்கு அவர் இசையில் குருவாக விளங்கியிருக்கிறார். அத்தோடு வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இசையில் தான் முதன் முதலில் திரைப்படத்தில் பாடி அறிமுகமாகி இருக்கின்றார். அது தச்சோளி மருமகன் அம்பு படத்துக்காக "இல்லம் நிற வல்லம்" https://www.youtube.com/watch?v=OpabQEhiP_I என்ற பாட்டு. இந்தப் பாட்டு அவர் கோரஸ் சூழ, அதாவது கூட்டுக் குரல்களோடு பாடியிருக்கிறார். தனது முதல் பாடல் போலவே கல்யாணி மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவை கூட்டுக் குரல்களாகவே அதிகம் மிளிர்ந்திருக்கின்றன. கல்யாணி மேனன் தமிழில் இளையராஜா இசையில் அறிமுகமான "செவ்வானமே பொன்மேகமே" (நல்லதொரு குடும்பம்) https://www.youtube.com/watch?v=PMKhB5QW5RE பாடலும் கூடக் கூட்டுக் குரல்களாக ஜெயச்சந்திரன், சசிரேகா, T.L.மகராஜனோடு சேர்ந்து பாடியது தான்.

பாடகி கல்யாணி மேனன் ஆன்மா இளைப்பாறட்டும்.