Pages

Monday, August 24, 2015

"கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் டயரிக்குறிப்பிலிருந்து


 "விவித்பாரதி" வர்த்தக சேவையில் கட்டுண்டு கிடந்த 90களின் ஆரம்பம் அது. அப்போதெல்லாம் ஆகாசவாணியின் விவித்பாரதி எடுத்து வரும் வெகிவர இருக்கும் திரைப்படங்களுக்கான குறு விளம்பரங்களினூடே சில நொடிகள் மட்டும் அறிமுகமாகும் பாடல்களே அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணுவதுண்டு.
அப்படியாக அறிமுகமானது தான் கேளடி கண்மணி படப் பாடல்கள்.
"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" என்று வாத்திய இசையைத் தொடரும் எஸ்.பி.பியின் குரல் அப்படியே குறைய கேளடி கண்மணி விளம்பரம் ஆரம்பிக்கும் பின்னர் "தென்றல் தான் திங்கள் தான்" என்று ஜேசுதாஸ் தொடங்கி சித்ராவின் கைக்குப் போக முன்பே, மீண்டும் படத்தின் விளம்பரம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து அப்படியே "நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றித் தூங்காது கண்ணே" 
என்று ஆளுக்குத் தலா இரண்டு அடிகள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் பட அப்படியே கேளடி கண்மணி பட விளம்பரம் ஓய்ந்து விடும்.
நம்மூரில் கடும் யுத்தம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க, மின்சாரமும் நின்று போக, கிடைத்த பேட்டரிகளில் சிலதை வைத்துக் கொண்டு தான் இந்த விவித்பாரதி நிகழ்ச்சியை இரவில் கேட்பேன். சரியாக எட்டு மணிக்குத் திரை விளம்பரங்கள் வரும் என்று நினைவு.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அந்த பேட்டரி சக்தியில் இயங்கிய டேப் ரெக்கார்டர் வழி "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் மீதான மோகம் தலைக்கேற  அந்தச் சில நிமிடத் துளிகளை ஒலிப்பதிவு செய்து பேட்டரியின் கையிருப்பைக் குறைத்துக் கொண்டது தனிக்கதை. பின்னர் அந்த பேட்டரிகளை நிலத்தில் வீசி அடித்து மீண்டும் டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்ட கதையாகத் தொடர்ந்தது.

யுத்தம் கடுமையானதால் என் படிப்பைக் கொழும்பில் தொடர வைக்கலாம் என்று வீட்டார் முடிவுகட்டியதன் விளைவாக, அம்மாவுடன் தலைநகருக்கு வந்தேன். பிள்ளை தனியாகத் தங்கிப் படிக்கப் போகுது என்று என் மேல் அளவு கடந்த கரிசனை அம்மாவுக்கு. 
அப்போது வெள்ளவத்தை சவோய் தியேட்டருக்கு எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கடை வளாகம் இருந்தது. அதன் மேல் அடுக்கில் ஒரு பெரிய ரெக்கார்டிங் பார். தனியனாக ஒரு நாள் கொழும்பைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய எனக்கு அந்த ரெக்கார்டிங்க் பார் கண்ணில் படவே அங்கு போய் வித விதமாக அடுக்கி வைத்திருந்த எல்.பி.ரெக்காட்ஸ் ஐ எல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி என்று ஓரமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒலி நாடாக் குவியலில் "கேளடி கண்மணி" தெரிந்தது.அள்ளிக் கொண்டேன் அதை.
கொழும்பில் உறவினர் வீட்டில் என்னை விட்டுவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் போகத் தயாரானார் அம்மா. "எனக்கு இஞ்சை இருக்கப் பிடிக்கேல்லை நானும் உங்களோட வாறன்" என்று அழுது புலம்பியதும் அம்மா என் சூட்கேசையும் சேர்த்து அடுக்கினார். சூட்கேஸ் ஓரமாக அந்தக் "கேளடி கண்மணி" ஒலிநாடாப் பேழையை வைத்தேன்.  எஸ்.பி.பாலசுப்ரமணியம் முகம் மட்டுமே பெரிதாக வைத்து அழகாக வடிவமைக்கப்படிருந்த அந்தப் பேழையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிய பயணம். வழியில் வவுனியா இராணுவச் சோதனைச் சாவடியில் ஆட் பரிசோதனைக்காக இன்னொரு பஸ்ஸில் எம்மை ஏற்றினார்கள். சூட்கேஸ் ஐயும் திறந்து காட்டி விட்டுத்தான் வருவார்களாம். எமக்கான சோதனை முடிந்து பஸ் நடத்துனரோடு கூட இருந்த கைத்தடிகளிடமிருந்து  சூட்கேஸைப் பெற்றுத் திறந்தால் "கேளடி கண்மணி" மாயம். 
"கேளடி கண்மணி" வந்து ஐந்து ஆண்டுகளுப் பின்னரேயே சொந்தமாக அந்தப் படப் பாடல்கள் என் கையில் நிரந்தரமாகக் கிட்டும் வாய்ப்பு வந்தது, இருந்தாலும் அந்த எக்கோ ஒரிஜினல் "கேளடி கண்மணி" ஒலி நாடாப் பேழை தொலைந்த கவலை எனக்கு இன்னமும் உண்டு.

ஒரு காலத்தில் விவித் பாரதியில் ஒரு துளி பாடலைக் கேட்கத் தவமிருந்த காலம் போய் பின்னாளில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ஆகி "காதலர் கீதங்கள்" என்ற தொகுப்பில் அளவுகணக்கில்லாமல், ஆண்டுக்கணக்காக "நீ பாதி நான் பாதி கண்ணே" பாடலை ஒலிபரப்புவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். "நீ பாதி நான் பாதி கண்ணே" கவிஞர் வாலி முத்திரை, இதே வாலி முன்னர் இதே கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன் கூட்டணிக்கு "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று இன்னொரு அற்புத
 படையலையும் கொடுத்த கணக்கே தீராது,

"மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" சாதனை படைத்த பாடல் காதலின் வேதனை துடைத்த பாடல் என்றெல்லாம் அப்ஸராஸ் இன்னிசை வார்ப்புகள் மெல்லிசைக் குழு அப்போது கொண்டாடியிருந்தது இந்தப் பாடலை.  "எடேய் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியிருக்கிறாராம்" என்றெல்லாம் கூட்டாளிமாரிடம் வியந்து கொண்டே உள்ளுக்குள் நாமும் பாடிப் பார்க்கலாமே என்று விஷப்பரீட்சை எல்லாம் செய்ததுண்டு.
ஆனால் மெல்பர்னுக்கு ஒருதடவை கங்கை அமரன் உடன் இசைக்கச்சேரிக்கு வந்திருந்த எஸ்,பி.பி "மூச்சு விடாமப் பாடினா மனுஷன் செத்துடுவான் இல்லியோ" என்று சொல்லி அந்தச் சிதம்பர ரகசியத்தைப் புஸ்வாணம் ஆக்கினார். அத்தோடு "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் பாவலர் வரதராஜன் அவர்கள் எழுதியது என்று ரெக்கார்டில் போட்டிருந்தாலும் அது உண்மையில் கங்கை அமரன் அவர்களே எழுதியது என்று அதே மேடையில் சொன்னார் எஸ்.பி.பி.

"தென்றல் தான் திங்கள் தான்"இந்தப் பாடலை ராஜா சார் கம்போஸ் பண்ணும் போது எனக்குப் பிடிக்கவே இல்லை. வேற ஒரு மெட்டு கொடுங்களேன் சார் என்று கேட்டேன். ராஜா சாரோ "நீ இருந்து பாரேன்" என்று தன்னைச் சமாதானப்படுத்தியதாகவும் பின்னாளில் அந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெற்றது என்பதையும் "கேளடி கண்மணி" இயக்குநர் வஸந்த் ஒருமுறை ராஜ் டிவி பேட்டி ஒன்றில் சொல்லக் கேட்டுக் கப் என்று அந்தத் தகவலைப் பிடித்து வைத்துக் கொண்டேன்.
"தென்றல் தான் திங்கள் தான்" (பாடலாசிரியர் பிறைசூடன் எழுதியது) பாடல் குறித்து ஒரு முழு நீளப் பதிவையும் எழுதியிருக்கிறேன் இங்கே http://www.radiospathy.com/2011/11/blog-post_08.html

"கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ" என்ற ஆண்டாளின் திருவாய்மொழியை  "காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா" பாடல் உருவாக்கத்தின் போது இளையராஜா, கவிஞர் வாலியிடம் பகிர்ந்ததைக் கேட்டபோது கற்பனை செய்து பார்த்தேன். இம்மாதிரியான பாடல்களின் உருவாக்கங்களின் போது தேவார, திருவாசகம் தொட்டு நாலாயிரத் திவ்ய பிரபந்தம் வரை இசைஞானியின் ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பிரசவிக்கப்படும் தருணங்களில் பேசு பொருளாக இருக்குமோ என்று. குறிப்பாக வாலி கலந்து கொள்ளும் அந்தச் சபைகளில்.
இங்கே "கேளடி கண்மணி படத்தில் ஆண்டாளே வந்திருக்கிறார். "வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து" பாடல் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் தனித்தனியாக அந்தப் பாசுரத்துக்கு மெய்யிசை சேர்க்கப்பட்டு உயிரோடு உலாவ விடப்பட்டிருக்கிறது.

"என்ன பாடுவது என்ன பாடுவது" விளையாட்டுத்தனமான துள்ளிசை, கங்கை அமரன் வரிகளில் அவர் அண்ணன் குழுவினரோடு பாடியது. "எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்" பாடலின் உறவு முறை.

"தண்ணியில நனைஞ்சா" பாடல் தான் கேளடி கண்மணி படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாட்டாக இருக்கும். அந்தப் பாடலை எழுதியது மு.மேத்தா. ஆனால் வட்டியும் முதலுமாக இன்னொரு பாடலில் தன் பேரை அழுத்தமாக பதிய வைத்து விட்டார் அதுதான் 
"கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று"

"கற்பூர பொம்மை ஒன்று" பாடலை இலக்கியா பிறக்கும் முன்னரும் எத்தனையோ தடவை கேட்டு அழுதிருக்கிறேன். இப்போதும் கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சரணத்தில் கண்ணில் நீர் முட்டுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வளவு தூரம் உணர்வைச் சீண்டிப் பார்க்கும் பாடல் இது. தாயாகவும் என்னக் உணரும் சந்தர்ப்பங்கள் பலவற்றில் இந்தப் பாடல் மடி சுரப்பது போல அமைந்து விடுகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நாயகனாக நடித்த படங்களில் முக்கியமானதொரு வெற்றி படமாக "கேளடி கண்மணி" அமைந்தது. அப்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது.
கேளடி கண்மணி படம் ஓடி முடிந்த சில வருடங்களில் ஆனந்த விகடனில் சிறுகதை ஒன்று. அதில் குறிப்பிட்ட கதைக்களத்தில் "கேளடி கண்மணி" படத்தின் கடைசி நாள் காட்சியில் ஹவுஸ்புல் என்றதொரு குறிப்போடு கதாசிரியர் எழுதிவிட்டார். அடுத்த இதழில் ஒரு வாசகர் அதைச் சுட்டிக் காட்டி "எப்படி கடைசி நாள் காட்சி ஹவுஸ்புல்லாக இருக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தொடர்ந்து மறு வாரம் வந்த விகடன் இதழில் இன்னொரு வாசகர் "சேலம் விஷ்ணு" படம் ஏதோவொரு தியேட்டரில் இம்மாதிரி கடைசி நால் ஹவுஸ்புல்லாக ஓடியது என்று ஆதாரத்தோடு எழுதியிருந்தார். 

"கேளடி கண்மணி" படத்தின் தலைப்பு வடிவமைப்பைப் பாருங்கள். எவ்வளவு கலை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் இம்மாதிரித் தலைப்பைச் செதுக்கிக் காட்டுவதிலேயே தேர்ந்ததொரு கலா ரசனை மிளிரும்.

"புதிய பாதை" என்ற படத்தைத் தயாரித்து 1989 இல் வெளியிட்ட விவேக் சித்ரா சுந்தரம் (விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர்)அவர்கள் அந்தத் தேசிய விருதுப் படத்தைத் தொடர்ந்து "கேளடி கண்மணி" என்ற இந்தத் தேசிய விருந்தை 1990 இல் ஆக்கிப் படைத்தார். இந்த ஆண்டோடு இந்தப் படம் வெள்ளி விழா காண்கிறது.
"கேளடி கண்மணி" பொன் விழா கடந்தும் நினைவு கூரப்படும்.


Thursday, August 20, 2015

செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது


அப்போதெல்லாம் அயற் கிராமமான சுன்னாகம் பொது நூலகத்திற்கு ஓடுவேன். தமிழகத்தில் இருந்து வரும் வித விதமான பத்திரிகைகள் படிக்க. அதுவும் குறிப்பாக தினத்தந்தி வெள்ளிமலர்.  

தினத்தந்தி வெள்ளிமலரில் கலர் கலரான அழகான வடிவமைப்புடன் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடான  பட விளம்பரமொன்று வந்தபோது இசைஞானி இளையராஜாவைத் தவிர மிச்சது எல்லாமே அறிமுகமற்றதாக அமைந்திருந்தது. வழக்கம் போல இளையராஜா என்ற அமுதசுரபியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அப்போதைய பொருளாதார நெருக்கடியில் ( ஹிஹி நமக்கெல்லாம் பாக்கெட் மணியும் இல்லை உசிலைமணியும் இல்லை) கையில் இருந்த காசை முதலிட்டு றெக்கோர்டிங் பார் இல் பதிவு பண்ணி ஆசையாகக் கொண்டு வந்து கேட்டால் அமுதசுரபி கை விடுமா என்ன?
அதுதான் செவ்வந்தி படப் பாடல்கள்.

"அன்பே ஆருயிரே" என்றொரு காதல் சோகப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது.  http://www.youtube.com/watch?v=q70UdcTpeKc&sns=tw கடந்த வருடம் சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.பி வந்திருந்த போது ஒரு பையன் பாட, இந்தப் பாடலைத் தான் பாடியதையே மறந்து விட்டதாகச் சொன்னபோது நமக்குத் தான் ஆச்சரியம் கிளம்பியது. ஆனால் ரெக்கார்டு படைத்தவருக்கு இதுபோல் இன்னும் பல மறந்தே போயிருக்கும்.

ஜெயச்சந்திரன் & சுனந்தா  ஒரு அட்டகாஷ் பாட்டு ஜோடி. சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரனோடு ஜோடி கட்டிய "காதல் மயக்கம்" பாடலால் நிகழ்ந்ததால் செவ்வந்தி படத்துக்காகக் கூடு கட்டிய "செம்மீனே செம்மீனே" 
பாட்டிலும் அதே ரசதந்திரம்.
செம்மீனே செம்மீனே பாடலைக் கல்யாணக் கொண்டாட்டப் பாடலோடு சேர்த்து விடுவோம்.
 http://www.youtube.com/watch?v=BBeOajpOadA&sns=tw 
வாத்தியக் கூட்டிசையோடு கூடிக் குலாவும் சேர்ந்திசை குரல்கள் (கோரஸ்) ஐத் தவிர்க்காமல் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டும்.

இதே போல் இன்னொரு மெல்லிசை குரல் கூட்டணி அருண்மொழி & ஸ்வர்ணலதா. இருவரும் சேர்ந்து பாடிய "புன்னைவனப் 
பூங்குயிலே பூமகளே வா" 
 http://www.youtube.com/watch?v=upXge9OLt2E&sns=tw 
செம்மீனுடன் போட்டி போட்ட ஹிட். என் தனிப்பட்ட விருப்புப் பாடல் ஒப்பீட்டளவில் "புன்னைவனப் பூங்குயிலே" தான் அதுவும்
"என் கண்கள் சொல்லும் மொழி காதலே" என்று ஸ்வர்ணலதா உருகும் தருணம் கரைந்து விடுவேன்.
அது போல் "அலை ஓய்ந்து போகும் " என்று அருண்மொழி தொடங்கும் வகையறாவும்.

ஸ்வர்ணலதாவுக்கு இரட்டைப் பரிசு இந்தப்  படத்தில். "பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு"  http://www.youtube.com/watch?v=nZEJ4xHWQ58&sns=tw என்று கோரஸ் குரல்கள் பாடி ஆரம்பிக்க மனோ, ஸ்வர்ணலதா கொடுக்கும் இந்தச் சரக்கு பிரபு போன்றோர் படங்களுக்கு அப்போது சென்று சேர்ந்திக்க வேண்டியது.

படத்தில் பெண் தனிக்குரல் பாடலாக உமா ரமணன் பாடும் "வாசமல்லிப் பூவு பூவு" http://stream.shakthi.fm/ta/Sevanthi_www.shakthi.fm/shakthi.FM-Vasamally.mp3 இந்தப் பாடல் எல்லாம் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டிய பாடல் ஹும்.

பாடல்களை கவிஞர் வாலி, முத்துலிங்கம், பொன்னடியான், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

ஒளிப்பதிவாளர் நிவாஸ் எழுபதுகளிலே கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு போன்ற படங்களை இயக்கி மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கிய படம் இந்த செவ்வந்தி.
அப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவில் அமைச்சராக விளங்கிய அரங்கநாயகத்தின் மகன் சந்தனபாண்டியன் தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்றும் கண்டுபிடிச்சாச்சு. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீஜா அப்போது தமிழில் மெளனம் சம்மதம், சேரன் பாண்டியன் படங்களில் நடித்தார். செவ்வந்தி அவருக்கு தனி நாயகி அந்தஸ்த்தையும் கொடுத்தது.

செவ்வந்தி படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு தூரம் நன்மை கிட்டியிருக்குமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி திரையைத் தாண்டி நிஜத்திலும் மணம் முடித்தனர். சந்தனபாண்டியன், ஶ்ரீஜாவின் மகள் பேட்டி கூட சமீபத்தில் வந்தது. வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்.

சரி சந்தனபாண்டியன் & ஶ்ரீஜாவை விட்டு இசை ரசிகர் நமக்கு இந்தப் படத்தால்  21 ஆண்டுகள் தாண்டியும் தெவிட்டாத தேன் கிட்டியது இன்னொரு பேறு.


இந்தப் படத்தின் உதவி இயக்குநர் ரதன் சந்திரசேகர் இப்பதிவைக் கண்டு பகிர்ந்தது.
நன்றி KANA PRABA... உங்கள் பதிவில் இணையிலாப் பெருமகிழ்ச்சி எனக்கு....நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம். படம் பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்தபோதும் - முதல்நாள்தொட்டு கடைசிநாள் வரை பணியாற்றிய ஒரே உதவி இயக்குனர் நான்தான்.  அப்பா....என்னவோர் அனுபவம்...என் இயக்கத்தில் வெளிவரப்போகும் 'என் பெயர் குமாரசாமி' படத்தை இயக்கும்போது எனக்கு பல இடங்களில் கை கொடுத்தது இந்தப் படத்தின் 'அசிஸ்டென்ட் ' அனுபவங்கள்தாம்.  என் பெயர் குமாரசாமியின் டைட்டிலிலும்  'முதல் வணக்கம் - ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ்.நிவாஸ்.' என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். 

செவ்வந்தி பாடல்களை  சுளைசுளையாக சுவைத்திருக்கிறீர்கள்...நன்றி. பாடல்கள் குறித்து நீங்கள்  பதிவிட்டிருப்பதனால்...'பொன்னாட்டம் பூவாட்டம்' பாடல் குறித்த ஒரு சுவையான தகவலை கீழே பகிர்ந்திருக்கிறேன்....உங்களுக்கு பயன்படக் கூடும்......

நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம் 'செவ்வந்தி'. 

அந்தப்  படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பிய நேரத்தில்...இளையராஜா படு பிசி. அவரது பாடல்களுக்காக க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள் .  படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நிவாஸ் அவர்களுக்கு ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. நாங்கள் இருப்பதோ ஊட்டியில் உள்ளத்தி என்கிற ஒரு மலை கிராமத்தில். இளையராஜாவிடம் வந்து ட்யூன் கேட்டு வாங்கி வர நேரமில்லை. நிவாஸ் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா?

'ஜானி' படத்தின் ஒரு பாடல் காசெட்டை வாங்கி வரச் செய்து...அதில் வரும் 'ஆசையக் காத்துல தூதுவிட்டு.....'பாடலை டேப் ரெக்கார்டரில் ஒளிபரப்பி அதற்கு நடனத்தை கம்போஸ் செய்யும்படி டான்ஸ் மாஸ்டர் சின்னாவிடம் கூறினார். 'ஜானி' படப் பாடலுக்கு நடன அசைவுகள் படமாக்கப்பட்டன. சினிமா தெரியாத நாங்கள் சிலபேர்  (வடிவேலு வார்த்தையில் சொல்வதானால் 'அப்ரசண்டிசுகள்'....)   முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

படப்பிடிப்பு முடித்து அந்தப் பாடலுக்கான புட்டேஜுகளை  எடிட் செய்து 'ஜானி' பாடலை உருவிவிட்டு  இளையராஜாவிடம் கொண்டு போய்  'பப்பரப்பே' எனக் காட்டினோம். அதற்கு ஓரிரு மணிநேரத்தில் ட்யூனையும் பின்னணி இசையையும் கம்போஸ் செய்து அடுத்த நாள் வாலியை வரச் சொல்லி பாடல் எழுதி வாங்கி , பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் இசைஞானி. நாங்கள் மலைத்து நின்றோம். எங்களைப் பார்த்து நிவாஸ் அவர்கள் சிரித்த நமுட்டுச் சிரிப்பில் இளையராஜாவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தெறித்து விழுந்தது. 

 'பொன்னாட்டம் பூவாட்டம்' வீடியோவில் 'ஜானி' பாடலைப் பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் நெஞ்சில் நெடுநாளாய்க் கிடக்கிறது....


Thursday, August 13, 2015

இசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு


கலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாளராகவும் விளங்கி வந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற பதிவின் வழியாக அவரின் ஆரம்ப காலத்துப் படங்களில் இருந்து சிலவற்றைப் பகிருந்திருந்தேன் இங்கே
அந்தப் பதிவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பாடல்கள் தொடரும் என்றிருந்தேன். ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் கங்கை அமரன் அவர்களுக்குப் புகழ் சேர்த்த இன்னும் சில பாடல்களோடு சந்திக்கிறேன்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி கண்ட "பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த நடிகர் பாண்டியராஜனுக்கு இன்னொரு சுற்று படங்களைக் குவிக்கவும் வழிகோலியது. அந்தப் படத்தின் வசனகர்த்தா அந்தக்காலத்தில் புகழ்பூத்த நகைச்சுவை எழுத்துக்காரர் சித்ராலயா கோபு. பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த தெம்பும் காரணமாக இருக்கக் கூடும், பாண்டியராஜனை இரட்டை நாயகராக வைத்து "டில்லி பாபு" என்ற படத்தை இயக்கினார் சித்ராலயா கோபு. பாண்டியராஜன், ரஞ்சனி, சீதா நடித்த இந்தப் படத்தின் இசையைக் கவனித்துக் கொண்டார் கங்கை அமரன். "டில்லி பாபு" படத்தில் வந்த "கூரைப் புடவை ஒண்ணு வாங்கி வா நாந்தான் உன் சொந்தமல்லவா" பாடலை எண்பதுகளின் திரையிசைக் காலத்தில் வாழ்ந்து கழித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் உச் கொட்டி ரசிப்பார்கள். அந்தளவுக்கு இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் ஏக பிரபலம். இரு வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் நான் இயங்கும் வானொலி வழியாகவும் இந்தப் பாடலைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் என் சார்பில் ஒலிபரப்பி என் கணக்கைத் தீர்த்துக் கொண்டேன். இந்தப் பாடலின் இடையிசை, குறிப்பாக இரண்டாவது சரணத்துக்கு முன்னீடு தான் கங்கை அமரன் கொடுத்த இசையில் அவர் கொடுக்கும் முத்திரை என்பது அவரின் பாடல்களை அறிந்து ரசிப்பவர்கள் உணர்வார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும்  அந்த இனிய பாடல் இதோ

ஆக்க்ஷன் கிங் என்று புகழப்பட்ட பாம்பு கராத்தே நடிகர் அர்ஜீன் ஒரு கட்டத்தில் முழு நீள அடி,உதை அலுத்துவிட எண்பதுகளின் இறுதியில் கொஞ்சம் தாய், தங்கை பாசக் கணக்கை வைத்துப் படங்களில் நடித்தார். அதிலும் கூடப் பழிவாங்கல் இருக்குமே.
அப்படி ஒரு படம் தான் "எங்க அண்ணன் வரட்டும்". அந்தக் காலகட்டத்தில் பெயரே கொஞ்சம் புதுமையாக வைத்து எடுத்த படம் அது. அர்ஜூன், ரூபிஅனி ஜோடி போட்டது.
இந்தப் படத்தில் கங்கை அமரன் அவர்கள் கொடுத்த முத்திரைப் பாடலாக நான் கருதுவது "பூவெடுத்து மாலை கட்டி". இதை அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவும் அடிக்கடி மெய்ப்பித்தது. ஆனால் எனக்கிருந்த பெரும் மனக் கவலை என்னவென்றால் இந்தப் பாடலை ஏதோ ஒரு காதல் ஜோடிப் பாடல் என்றே அனுபவித்துக் கேட்டிருந்தேன். பல காலத்துக்குப் பின்னர் தான் இது அண்ணன் தங்கை பாடல் என்று வரிகளை உன்னிப்பாகக் கவனித்து உணர்ந்து நொந்தேன். உண்மையில் இது காதல் ஜோடிப் பாடலுக்கே வெகு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைவடிவம். 
சமகாலத்தில் இந்தப் பாட்டின் இசை நேர்த்தி கூட கங்கையின் இளைய அண்ணன் கொடுத்த இசையோ என்ற தடுமாற்றமும் கூட இருந்ததுண்டு.

மேலே சொன்ன "கூரைப் புடவை ஒண்ணு" பாடலோடு இங்கே தரும் "பூவெடுத்து மாலை கட்டி பொண்ணுக்கொரு சேலை கட்டிப் பாரு"
பாடலை அடிக்கடி பொருத்திக் கொள்வேன். இந்தப் பாடல் சோல வடிவிலும் உண்டு. சந்தோஷப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

"மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் நான் குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்" http://shakthi.fm/ta/player/play/s3db4b511# 
மறக்க முடியுமா "பிள்ளைக்காக" படத்தில் வந்த இந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை. எத்தனை தடவை இலங்கை வானொலியின் வாழ்த்துப் பாடல்களில் பல நாட்கள் இது தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த அழகான பாடலைக் கூட்டுக் குரல்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடியது போன்று தனிப்பாடலாக இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாடியிருப்பார். கங்கை அமரன் இசையமைக்கும் படங்களில் இவ்வாறு இரட்டைப் பாடல்களில் அவரே ஒன்றைப் பாடுவது அரிதான காரியம். அந்த வகையிலும் இது சிறப்புச் சேர்த்தது. சந்திரபோஸ் ஆக இருக்குமோ அல்லது சங்கர் கணேஷா என்ற குழப்பத்துக்குக் கூட முடிவுகட்டியது கங்கை அமரன் பாடிய இரண்டாவது வடிவம்.


சின்னத்தம்பி என்ற பேரலை அடிக்க முன்னர் பிரபு, பி.வாசு கூட்டணியில் அமைந்த "பிள்ளைக்காக" படத்துக்கு முன்னர் இந்த இருவரும் சேர்ந்து அப்போது ஒரு வெற்றிக் கூட்டணியை "என் தங்கச்சி படிச்சவ" படத்துக்காக அமைத்திருந்தனர். "சொந்த சுமையைத் தூக்கித் தூக்கிச் சோர்ந்து போனேன்" http://youtu.be/KM5gpixtacU
பாடலைச் சொன்னால் இப்போது பலர் படத்தை அடையாளம் காண்பர். அந்தப் படத்திலும் கங்கை அமரனின் இசையும் கை கொடுத்தது என்பதை அந்தப் பாடலின் வெற்றியே மெய்ப்படுத்தும்.

"சின்னத்தம்பி பெரியதம்பி" படத்தில் வந்த "ஒரு காதல் என்பது" பாசலைத் தான் எல்லாரும் சிலாகிக்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடல் மட்டும் அண்ணன் இளையராஜா கொடுத்தது. ஆனால் இதே படத்தில் இன்னொரு அழகான பாட்டு இருக்கே அதை நீங்க யாரும் ஏன் அதிகம் பேசுவதில்லை என்ற தொனியில் கங்கை அமரன் கொடுத்த வாக்குமூலத்தில் முன் மொழிந்த பாடல் தான் "மழையின் துளியில் லயம் இருக்குது" ஆகா என்னவொரு இனிமையான மழைத்தூறல் போலச் சாரலடிக்கும் பாட்டு என்று என்று மனது தாளம் போட சித்ரா பாடுவதை லயிக்காமல் இருக்க முடியாதே. மணிவண்ணனின் ஆஸ்தான நாயகன் சத்யராஜ், பிரபுவோடு கூட்டணியில் நதியாவும் இணைந்த கலகலப்பான படத்தில் கங்கை அமரனின் முத்திரைப் பாட்டு இது.


"நெற்றித் திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே" என்று மேலேழும் அந்த டி.எம்.செளந்தரராஜன் என்ற மேதையின் குரலில் இருந்து சிலாகித்துக் கொண்டே முன்னோக்கி நகரவேண்டும் "பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே" பாடலுக்கு, அப்போது தெரியும் கங்கை அமரன் அவர்களின் சாகித்தியத்தின் மாண்பு.
"நீதிபதி" திரைப்படத்துக்காக கங்கை அமரன் இசையமைத்தது இந்தப் பாட்டு. கே.பாலாஜி அவர்களின் தயாரிப்பில் அண்ணன் இளையராஜாவின் ஆரம்பகாலத்துப் படங்களில் "தீபம்" ஒளியேற்றி வைத்த பாட்டுத் திறத்தில் சகோதரர் கங்கை அமரனும் பாலாஜி அவர்களின் படங்களில் பங்கேற்ற வகையில் இந்தப் படமும் சிறப்புக்குரியது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் என்று அந்தக் காலகட்டத்தில் கே.பாலாஜியோடு இயங்கிய போது ஒன்றை நான் என் கருத்து வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.
கங்கை அமரனின் இசை இளையராஜாவினது ஊற்றோ என எண்ணுமளவுக்கு அமைந்த பாடல்கள் ஒருபுறமிருக்க, நீதிபதி படத்தின் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் முத்திரை போன்று அமைந்திருக்கும். இரு மேதைகளையும் போற்றி விளங்கும் கங்கை அமரனுக்கு இம்மாதிரி வாய்ப்பு எதேச்சையாகவோ  அமைந்து போனது வெகு சிறப்பு.
எண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் இந்தப் பாடல் மணமகள் அழைப்பில் காட்சியோடு பின்னப்பட்டிருக்கும் அளவுக்கு அப்போது பிரபலமானது. இப்போதெல்லாம் உரிமையோடு நண்பர்களின் கல்யாண வீடுகளில் இதை நான் பரிந்துரைக்கும் போது "கிவ் மீ மை தாலி மை லைஃபே ஜாலி ஜாலி" போன்ற வஸ்துகளை  அவர்கள் மோகிக்கும் போது காலத்தின் கொடுமை என்றறிக.
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.சைலஜா குரல்களில் வரும் "பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே" பாடலை முடிந்தால் உங்கள் கல்யாண வீட்டுப் பாடல்களில் சேருங்கள், அமோகமாக இருக்கும். கங்கை அமரனின் இசையில் விளைந்த உன்னதங்களில் இந்தப் பாட்டுக்கு மட்டும் தனிப்பத்தி எழுத வேண்டும் அவ்வளவு மகத்துவம் நிறைந்த பாட்டு. சிலவேளை என் கண் உடைப்பெடுத்துச் சாட்சியம் பறையும் அளவுக்கு இந்தப் பாட்டை நேசிக்கிறேன்.

கங்கை அமரன் கொடுத்த இசை முத்துகளும் கரையில ஆகவே இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

Saturday, August 8, 2015

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாட வா

பாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நிற்பவை சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்தவை. குறிப்பாக "மாஞ்சோலைக் கிளி தானோ", "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" சில பருக்கைகள். 

தொண்ணூறுகளில் இவ்விதமாக அமைந்த இரண்டு பாடல்கள் தனிச்சிறப்பு மிக்கவை. ஒன்று 1992 ஆம் ஆண்டு ராமராஜன் அலை ஓயும் வேளை வந்த "பொண்ணுக்கேத்த புருஷன்" படப்பாடலான 
"ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்" 
கங்கை அமரன் வரிகளுக்கு ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடியிருப்பார்கள். இந்தப் படம் வந்த சுவடே தெரியாதவர்களும் உண்டு என்ற காரணத்தால் இன்னும் வெகுவாகப் புகழப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பாடலும் அதிகம் ஆர்ப்பாட்டம் அற்று அமுங்கிவிட்டது. 

இதே படத்தில் வந்த "மாலை நிலவே" (மனோ, சித்ரா, குழுவினருடன்) பாடல் என்னுடைய நெருக்கத்துக்குரிய விருப்பத் தேர்வுகளில் ஒன்று. 
பாடல் ஆரம்பிக்கும் குதிரைக் குளம்பொலி ஓசையைக் கேட்டவுடனேயே "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று அன்பே வா காலத்தை நினைப்பூட்டிவிடுவதால் காட்சியிலும் அதை உருவிப் போட்டு ராமராஜன், கெளதமி ஜோடியை ஊடால விட்டு கொலவெறி பண்ணிருப்பார்கள். பார்த்தலில் கேட்டல் இனிது :-)

"அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு. 
"உரிமை கீதம்", "புதிய வானம்" என்று வெவ்வேறு இசையமைப்பாளர்களோடு பயணப்பட்டுவிட்டு இளையராஜாவோடு கூட்டணி அமைக்க ஆரம்பித்த போது இணைந்த "உறுதி மொழி" படத்தின் இந்தப் பாடலே இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாகப் பிரகடனப்படுத்த உதவியது. ஆனால் "கிழக்கு வாசல்" வெற்றி இன்னும் மணிமகுடமாக.

மணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.
இந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும் அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கத்தேய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும் ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.

இணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும் புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆகா.

பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாடலில் அவர் பாடும் தொனி, மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்.

உறுதி மொழி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனால் இந்தப் பாடலை ஓராயிரம் முறை கேட்டுக் கொண்டாடிருப்பேன்.

Tuesday, August 4, 2015

பாடல் தந்த சுகம் : வானமென்ன கீழிருக்கு


சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்தப் பாடல் எப்படி இசை வடிவம் கண்டிருக்கும் என்ற கற்பனையை வளர்த்திருப்போம். அதுவே பின்னர் உறுதிப்படுத்தப்படும் போது உள்ளூரப் பெருமையாக இருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் "வெற்றி விழா" படத்தில் வந்த "வானமென்ன கீழிருக்கு" பாடல் வழி கிட்டியது.
இந்தப் பாடலில் மூல வரிகளைத் தாண்டிய சோடிப்பு அடியாக "ததாகுதூது ததாகுது தூதூ" என்ற சேர்க்கை இடம்பெற்றிருக்கும். அதைக் கேட்கும் போதெல்லாம் இசைஞானி இளையராஜா வழக்கமாகத் தன் மெட்டுக்குப் பாட்டைத் தருவிக்கப் போடும் டம்மி வரிகளோடு இசைந்ததாக அவரே அமைத்துக் கொடுத்த வரியாகத் தான் இருக்கும் எனவே அந்தத் தத்தகரத்தோடு சேர்த்தே அமைத்த அந்த அடிகளைப் பின்னர் பாடலாசிரியர் தான் போடும் வரிகளோடு பிணைத்து அதாவது "ததாகு தூதூ ததாகு தூதூ" வை அந்தமாக்கி அமைத்திருப்பார் என்று நினைத்து வைத்திருந்தேன்.
அதை உறுதிப்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் கங்கை அமரன் கடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியில். இந்தப் பாடலை இளையராஜா மெட்டமைக்கும் போதே "தார தார தார தார தார ராரா ததாகுதூதூ ததாகுதூதூ" என்றே அமைத்ததாகச் சொல்லிருந்தார். கூடவே இந்தப் பாடலில் இடைச் சேர்க்கையாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பெருத்தமான சேஷ்டைக் குரல்களும் சேர்ந்து அமர்க்களப்படுத்தியிருந்ததாகக் கிண்டலோடு சொல்லிச் சிலாகித்தார். அவர் சொல்ல மறந்தது எஸ்.பி.பியோடு இணைந்து பாடி வெகுவாகச் சிறப்புச் சேர்த்த மலேசியா வாசுதேவன் குரலை.

"வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலியிருக்கு" பாடல் கவிஞர் வாலி அவர்கள் எழுதியது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் "வெற்றி விழா" திரைப்படம் வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே கமல்ஹாசனுக்காக "வானம் கீழே வந்தாலென்ன அட பூமி மேலே போனால் என்ன" என்று வாலி அவர்களே பாடி வைத்தது. ஐந்து வருடங்களுக்குப் பின் மறக்காமல் வானத்தைக் கீழே வைத்துப் பூமியை மேலே வைத்திருக்கிறார் குறும்புக்கார வாலி.
இந்த மாதிரி இசைக்கட்டுப் பொருந்திய பாடல்கள் வழக்கமாகக் கங்கை அமரனுக்கே போய்ச் சேரும். உதாரணம் தம்தன நம்தன தாளம் வரும். ஆனால் வெற்றி விழா படத்தில் "சீவி சிணுக்கெடுத்து" பாடல் மட்டுமே கங்கை அமரன். மீதி எல்லாமே வாலி எழுதியது.
"மாருகோ மாருகோ மாருகோயி" துள்ளிசைக் கலவையை மறக்க முடியுமா? அந்த நாளில் கல்யாண வீட்டுக் கொண்டாட்டங்களிலும், ஏன் கோயில் திருவிழா நாதஸ்வரக்காரரிடமும் கூட இந்தப் பாடல் தப்பாமல் முழங்கிக் கொட்டிய அந்த நினைவுகள் இன்னமும் தேங்கியிருக்கிறது. பின்னாளில் வாலியே இந்த ந்மாருகோ மாருகோ பாடலை சதி லீலாவதிக்காக இன்னொரு சாஸ்திரீயத் தளத்தில் அரங்கேற்றினார்.
"பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே அன்று" சைக்கிள் வாகனமேதிஅய் காதல் முளை விட்ட காலங்களிலா இது இனித்தது, இன்று கூட நாலு சில்லு Subaru யாத்திரையிலும் காருக்குள் சத்தமாக ஒலிக்க விட்டு, அதிவேகத் தடத்தில் பயணிக்கும் போது இருக்கும் சுகம் இருக்கிறதே சொர்க்கம்.

பள்ளிக்கூடத்துச் சகபாடி விஜயரூபன் கொழும்புக்குப் போய் வந்த பவிசில் எங்களுக்குப் பசம் காட்டியது "வெற்றி விழா" படத்தின் ஓலி நாடாப் பேழையைத் தான். வழக்கமாகக் கலர்ஃபுல்லாக இருக்கும் ஒலி நாடா அட்டைகளில் இருந்து வித்தியாசப்பட்டுப் பள்ளிக்கூட மாணவன் போன்ற வெள்ளைச் சீருடை மேலட்டையில் எக்கோ ஆடியோவின் அந்த வெற்றி விழா ஒலிநாடாப் பேழையை திருப்பித் திருப்பி ரசித்துப் பார்த்தோம் அப்போது.
"குரு சிஷ்யன்" படத்தில் ரஜினிகாந்த் & பிரபு இணைந்து நடித்த போது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்குமிடையில் தள்ளு முள்ளு அப்போது 
சிவாஜி புரெடக்ஷனில் "வெற்றி விழா" முதன் முதலாக கமல்ஹாசன் இந்த நிறுவனத்துக்காகப் பிரபுவோடு இணைந்து நடித்தது. இரு தரப்பு ரசிகர்களால் அப்போது  சேதாரம் வரவில்லை என்பது என் நினைவு. இளமைக் காலங்கள் நாயகி சசிகலா மீண்டும் இன்னும் நிறைய மேக் அப் ஐ அள்ளிப் போட்டுக் கொண்டு நடிக்க வந்தார் இந்தப் படத்தில்.
தர்மத்தின் தலைவன் வழியாகத் தமிழில் வந்த குஷ்புவை இந்தப் படத்திலும் ஜோடியாக்கிக் கொண்டார் பிரபு. சி.மு (சின்னத்தம்பிக்கு முன்)
அந்தக் காலகட்டத்தில் அமலாவைப் பாதிப் படத்திலேயே சாவடிக்கும் வழக்கம் இருந்தது (படுபாவிப் பசங்க, இதை வாசிக்கும் போது காந்திமதி மண்ணை அள்ளி வீசுறாப்ல கற்பனை செய்யவும்) . உதாரணம் உன்னை ஒன்று கேட்பேன், மெல்லத் திறந்தது வரிசையில் வெற்றி விழாவும் அமலாவைப் பாதியிலேயே அவ்வ்.

"வானமென்ன கீழிருக்கு" பாடலின் ஆரம்பத்தில் வரும் முதல் முப்பது விநாடிகளைக் கேட்கும் போது  "இரவு நிலவு உலகை ரசிக்க" (அஞ்சலி) பாட்டுக்குள்ளும் போய் விடுவேன். 

எண்பதுகளின் சூப்பர் ஸ்டார் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் கூட்டணி அமைத்த பாடல்களில் "என்னம்மா கண்ணு செளக்யமா"  எள்ளும், கொள்ளும், லொள்ளும் கொட்டிய பாடல் என்றால், இந்த "வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு" அதற்கு நேர்மாறான ரகம்.
எஸ்.பி.பி க்கு இந்த மாதிரி ஜாலிக் குத்துகளில் அவரின் குஷிக்குக் கேட்கவே வேண்டாம். பின்னிப் பெடலெடுத்து விடுவார் தகுதகுதுதகுது 
ஆனால் மலேசியா வாசுதேவனின் பாணி பாசில் படங்களில் வரும் வில்லன் மாதிரி நோகாமல் குத்தும் பாணி. பாடும் தொனியிலே ஒரு அப்பாவித்தனம் ஒட்டியிருக்கும். அதை அப்படியே வைத்துக் கொண்டிரு திடீர் சங்கதிகளைப் போட்டுச் சிக்சர் அடித்து விடுவார். எவ்வளவு உன்னதம் நிரம்பிய பாடகர்கள் இந்த இருவரும் அப்பப்பா.

 http://www.youtube.com/watch?v=Nssfv7-kowQ&sns=tw