Pages

Friday, April 24, 2009

சிறப்பு நேயர் "பாலசந்தர்"


றேடியோஸ்பதியில் இதுநாள் வரை இருந்த வார்ப்புரு மாற்றம் கண்டிருக்கின்றது. இந்த வார்ப்புருவை வாரி வழங்கிய பெருமை நண்பர் பாலசந்தரைச் சேரும். வலையுலகில் திடீரெனப் பூத்த பாலசந்தரின் நட்போடு அவரின் வலைப்பதிவான Design world ஐப் பார்த்துப் பிரமித்துப் போனேன். மிகவும் சிறப்பான வகையில் பல்வேறுவகைப்பட்ட வலைப்பதிவு வார்ப்புருக்களைத் தானே ஆக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றார் இவர். றேடியோஸ்பதிக்காக சிறப்பானதொரு வார்ப்புருவை பதிய எண்ணியிருந்த எனக்கு பாலசந்தரின் உதவியால கை கூடியிருக்கின்றது. என் எண்ணத்தில் தோன்றியதை அவர் மெய்ப்பித்த அவருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு அவரின் பிரியமுள்ள ஐந்து பாடல்களை நீண்ட இடைவெளிக்குப் பின் சிறப்பு நேயர் பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

பாலசந்தரின் முதலாவது தெரிவு, இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் வந்து ஆட்கொண்ட கல்லுக்குள் ஈரம் திரைப்பாடலான 'சிறுபொன்மணி அசையும்", பாடலை இசைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா, ஜோடிக்குரலாக எஸ்.ஜானகி



இவரின் அடுத்த தெரிவு சற்று வித்தியாசமாக அதிகம் கேட்கப்படாத ஆனால் இனிமையான பாடல்களில் ஒன்றான "ஆத்தி வாடையிலே" என்ற பாடல் "சிந்துநதி பூ" படத்திற்காக செளந்தர்யன் இசையில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்



"கம்பன் ஏமாந்தான்" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிழல் நிஜமாகிறது" பாடலை யாருக்குத் தான் பிடிக்காது. மெல்லிசை மன்னர் இசையில் மலர்கின்றது



அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்திக் பாடும் "அவ என்னைத் தேடி வந்த அஞ்சல" பாடல் புத்தம் புது மெட்டாக "வாரணம் ஆயிரம்" திரையில் இருந்து பாலசந்தர் ரசனையில் மலர்கின்றது.



நிறைவாக ரங் தே பாசந்தி" என்ற இசைப்புயலின் கைவண்ணத்தில் "Luka Chuppi" என்ற பாடல் லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான் குரல்களில் இனிதாய் ஒலிக்கின்றது.

Sunday, April 5, 2009

"ஆவாரம்பூ" பின்னணிஇசைத்தொகுப்பு

1992 இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும். அந்த ஆண்டில் தான் ரஹ்மான் என்ற புதுப்புயல் வந்து தமிழ் சினிமாவி போக்கை மாற்றியது. அத்தோடு அதுவரை ராஜாவை மட்டும் மையப்படுத்தி முதன்மைப்படுத்திய தமிழ் சினிமா இசைவிரும்பிகளின் கவனத்தை இன்னொருவர் பங்கு போட்ட ஆண்டும் கூட. இந்த ஆண்டில் ராஜாவின் இசையின் உச்சமாக அமைந்து விட்ட இரண்டு படங்களில் ஒன்று "ஆவாரம்பூ", இன்னொன்று "தேவர் மகன்". இந்த இரண்டுமே மலையாளத் திரையின் பிரபல இயக்குனர் பரதனின் இயக்கத்தில் வெளிவந்தது இன்னொரு சிறப்பு.

1980 இல் மலையாளத்தில் வெளிவந்த படம் "தகரா". பிரதாப் போத்தன், சுரேகா, நெடுமுடிவேணு போன்றோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடித்த இப்படத்தின் கதை கூட பின்னாளில் மலையாளத் திரையுலகின் முக்கியமான இயக்குனராக வலம் வந்த பதமராஜனின் கைவண்ணத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தை இயக்கிய பரதனே பன்னிரெண்டு வருஷங்கள் கழித்து தமிழில் இதை "ஆவாரம்பூ"வாகக் கொண்டு வந்தார். கடலோரக் கிராமம் ஒன்றில் வாழும் சக்கர (வினீத்) என்னும் அப்பாவி & அனாதைப் பையனுக்கும், தாமர (நந்தினி) என்னும் பொண்ணுக்கும் வரும் காதலையும், அதற்கு தாமரயின் தகப்பன் தேவர் (நாசர்)ரூபத்தில் வரும் எதிர்ப்பும் என்ற சாதாரண காதலைத் தான் அதன் இயல்பு கெடாமல் அப்படியே கொடுக்கின்றது ஆவாரம்பூ. மலையாளத்தில் நெடுமுடி வேணு செய்த சபலிஸ்ட் பாத்திரத்தை தமிழில் கவுண்டமணி செய்கின்றார். வினித், நந்தினி, நாசர், கவுண்டமணி உள்ளிட்ட பாத்திரத் தேர்வுகளும், குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆபாசத்தின் எல்லையைத் தொட முனையும் காட்சி அமைப்புக்கள் இருந்தாலும் "ஆவாரம்பூ" இசைஞானியின் கைவண்ணத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வண்ணம் இருப்பது சிறப்பு.

விநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் இருந்த "கேயார்", 1991 இல் "ஈரமான ரோஜாவே" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியவர். இசைஞானியின் அருட்கடாட்சம் விழுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதாலோ என்னவோ கேயார் தயாரிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு இளையராஜாவின் இசை என்பதோடு அந்தப் படங்களின் பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

"ஆவாரம்பூ" போன்ற புதுமுகங்களை முதன்மைப்படுத்திய திரைப்படத்தில் வழக்கம் போல இளையராஜா தான் ஹீரோ என்பதை இப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றது. கங்கை அமரனும், புலமைப்பித்தனும் பாடல்களை எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ, கிருஷ்ணசந்தர் இவர்களோடு இளையராஜாவும் பாடிச் சிறப்பிக்கின்றார்கள்.

படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது "ஆவாரம்பூ" பாடல்களின் அணி.

தொடந்து இசைஞானியின் கைவண்ணத்தில் மலர்ந்த "ஆவாரம்பூ" படத்தின் பின்னணி இசையோடு, பாடல்களையும் அனுபவியுங்கள்.

முதலில் இப்படத்தில் கிடைத்த முத்துக்களில் சிறப்பான ஒன்று.
சக்கர, தாமர காதல் வயப்படும் காட்சி, அபாரமான பின்னணி இசையில்




படத்தின் ஆரம்ப இசை



தன் தாயை நிரந்தரமாக பையன் சக்கர தொலைக்கும் போது



சக்கர அநாதையாக வளர்தல், ராஜாவின் "ஆலோலம் பாடி" பாடலோடு



தாமர அறிமுகக் காட்சி



தாமர மேல் ஆசை கொள்ளும் ஊர் விடலைப்பையன் கிருஷ்ணசந்தரின் பாடலோடு, புல்லாங்குழல் இசை கலக்கின்றது



தாமர யை அடையத் துடிக்கும் ஆசாரி, பின்னணி இசையோடு





"மந்திரம் இது மந்திரம்" (ஜேசுதாஸ்) பாடலோடு தாமரயை வேண்டிப் பாடும் ஊர் விடலைப் பையன். இந்தப் பாடலின் இடையிசையில் வயலின் ஆவர்த்தனம் அபாரம்.



சக்கர மனதில் தாமர இடம் பிடிக்கும் காட்சி, இந்தப் பின்னணி இசை அருமையானதொன்று



சக்கர, தாமர சந்திக்கும் காட்சி ஒன்று



தேவர் (நாசர்) தன் மகள் வீட்டை விட்டுப் போனதைக் கண்டு குமுறும் காட்சி



தாமர , சக்கர கடலில் நீந்தி விளையாடும் காட்சி



"அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மால" (எஸ்.பி.பி, ஜானகி குரல்களில்) சக்கர, தாமர கடலோரச் சந்திப்பில்



தேவர் (நாசர்) தன் மகளை மீண்டும் தாய் ஊருக்குச் சென்று அழைத்து வரும் காட்சி





சக்கர, தாமர மேல் மையல் கொள்ளும் காட்சி



"சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே" (எஸ்.பி.பி, எஸ்.ஜானகி)தாமர, சக்கர காதல் பாட்டு



"நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும்" (எஸ்.ஜானகி)சக்கரயின் பிரிவில் தாமர உருகும் காட்சி



சக்கர, தாமர சேரும் இறுதிக்காட்சி



Wednesday, April 1, 2009

இளையராஜாவும் ரஹ்மானும் இணைந்த படம்

அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கித் துடித்த இசைரசிகர்களுக்கு இனிப்பான நிகழ்வாக வந்தது ரஹ்மானும் இளையராஜாவும் இணைந்த இந்தப்படம்.


இனிய ஏப்ரல் 1 தின‌ வாழ்த்துக்கள்