Pages

Thursday, March 2, 2017

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வித்யாசாகருக்கு

மலரே மெளனமா 
மெளனமே வேதமா 🌷🎻🎸🌸

"ஆண்டுக்கு இப்படியொரு பாடல் கிடைத்தால் போதும் வாழ்நாள் முழுக்கப் பாடிக்கொண்டே இருக்கலாம் என்றாராம் "மலரே மெளனமா" பாடல் ஒலிப்பதிவு முடித்து விட்டு அதன் ஒலிப்பதிவைக் கேட்டுப் பார்த்த ஆனானப்பட்ட இசையுலகின் இமயமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இதைச் சொன்னவர் பாடலை எழுதிய வைரமுத்து.

என்னைக் கேட்டால் இந்தப் பாட்டு ஒன்றை மட்டும் கொடுத்து விட்டு இசையுலகில் இருந்து முழுக்குப் போட்டிருந்தாலும் கூட காலாகாலத்துக்கும் இன்று போல் என்றுமே இசையமைப்பாளர் வித்யாசாகரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிக உலகம்.
பாடலொன்று இன்னாரிடமிருந்து தான் வர வேண்டும் என்பதுவும் கொடுப்பினை. அதெல்லாம் குறித்த இசை ஆளுமையின் அளவு கடந்த சாகித்தியத்தை மீறிய அமானுஷ்ய வெளிப்பாடு.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் எத்தனை எத்தனை இசையமைப்பாளர்களுக்காக ஜோடி கட்டிப் பாடியிருப்பார்கள், அதிலும் இளையராஜாவுக்காகத் தெரிந்து பகிர்ந்தாலே நூறு நூறாய்க் கொட்டுமே. 
இருந்தாலும் இந்தப் பாட்டை விலத்தி அவர்களின் இசை வாழ்வு பரிபூரணப்பட்டிருக்குமா என்றெண்ணத் தோன்றுமே.

"நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்" என்று பாடிப் பிரிந்த காதலர்கள் மறு ஜென்மத்தில் ஒன்று கலந்தது போல
"பாதி ஜீவன் கொண்டு 
தேகம் வாழ்ந்து வந்ததோ 
மீதி ஜீவன் என்னைப் 
பார்த்த போது வந்ததோ"

"மலரே மெளனமா" பாடல் எத்திசையில் ஒலித்தாலும் அந்தப் பாட்டுக்குள் போய் அங்கேயே தங்கி விட்டுத் தான் திரும்பும் மனது.

இன்றைக்கு இசைப் போட்டிகளில் அடுத்த தலைமுறைப் பாடகராக வருபவர்களுக்கு அரசு அங்கீகரிக்காத பாடம் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டின் நுட்பம் தெரிந்து அதைப் பாதிக் கிணறு கடப்பவரே கரை சேர்ந்து விடுவார்கள்.
"மெளனமா" என்ற சொல்லை மட்டும் வைத்துப் கேட்டாலே பாடலில் இது ஒலிக்கும் போதெல்லாம் வேறுபடும் சாதாக வெளிப்பாடே ஒரு உதாரணம்.
பாடலின் வரிகளை நோகாமல் கொண்டு சேர்க்கும் திறன் எல்லாம் படைப்பின் உன்னதத்தை மிகாமல் காப்பாற்றுகின்றன.
இந்தப் பாடலில் இருக்கும் உணர்வோட்டமே பாட்டு முடிந்த பின்னும் நாதம் போல உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருக்கும்.

அளவு கடந்த நேசத்தை எப்படி நோகாமல் வெளிப்படுத்த முடியும் இவர்களின் குரல்கள் அனுபவித்து அதைக் கடத்துகின்றது.

https://www.youtube.com/shared?ci=wNoC5DNqNcA

வித்யாசாகர் பற்றி எவ்வளவு எழுதலாம். அவரின் பாடல் பட்டியலில் ஒவ்வொன்றையும் தனித்துப் பேசி அனுபவிக்கலாம்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசை இளவல் வித்யாசாகர் பாடல்கள் குறித்த என் பதிவுகள் சில

"உடையாத வெண்ணிலா உறங்காத பூவனம்"
https://www.facebook.com/kana.praba/posts/10206894459225344

"கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை"
https://www.facebook.com/kana.praba/posts/10207745966432492

"பூத்திருக்கும் வனமே"
https://www.facebook.com/kana.praba/posts/10208826802332714

"அன்பே அன்பே நீயென் பிள்ளை"
https://www.facebook.com/kana.praba/posts/10211995619071152