Pages

Wednesday, October 16, 2024

மெதுவா தந்தி அடிச்சானே என் மச்சானே….🩷🩷🩷

இன்று காலை வேலைக்குப் போகும் ரயில் பயணத்தில் விஜய் சூப்பர் சிங்கரில் அரங்கேறிய இந்தப் பாடலைக் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

https://youtu.be/Wm3t3y1Iezc?si=LFBuCOaGECoF8wj4

ஒரு பாடலோடு தன்னை எவ்வளவு ஆழமாகத் தொடர்புபடுத்த முடியும் என்பதை போட்டியாளர் ஜீவிதாவின் கண்கள் மெய்ப்பித்தன.

ஏதோ ஒரு பெரும் வரம் பெற்றது போல ஆசையாக இதைக் கொடுக்கிறார் பாருங்கள்.

மனோ - மின்மினி அலைவரிசையில் முத்திரைப் பாடல் இது.

கேட்கும் போது இப்படியெல்லாம் அற்புதமான வாய்ப்புத் தந்த  ராஜா மீது எப்படி அவதூறை வாரி இறைக்க முடிந்தது என்ற வருத்தமும் எழுந்தது.

முதற்கோணல் முற்றும் கோணல் என்பது போல,

நகரத்து இளைஞன் போல முகபாவம் கொண்ட அர்விந்த்சாமிக்குப் பதில்

கார்த்திக் அல்லது பிரபு நடித்திருந்தாலோ

அல்லது

ஒட்டுப் போட்ட பொம்மை போல சுகன்யாவுக்கு ஒரு கெட் அப் ஐப் போட்டதுக்குப் பதில் குஷ்புவைப் போட்டிருந்தால் வெள்ளிவிழாப் படமாக அமைந்திருக்கும்.ஒரேயொரு ஆறுதல் அந்த சின்னக் குஷ்பு தான் 😄

தாலாட்டு வெளிவந்த காலத்திலேயே இதை இயக்கியது ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற குழப்பம் எனக்கு இருந்தது.

சாய் வித் சித்ராவில் தான் உதவியாக இயக்க வேண்டியிருந்ததைச் சொல்லி இருக்கிறார்

தாலாட்டு படத்தின் அனைத்துப் பாடல்களையும் புலவர் புலமைப்பித்தனை வைத்து எழுத வைத்திருக்கிறார் ராஜா.

கொழந்தை பாடுறேன் 

https://youtu.be/sfiO5e5TJMU?si=fjb03GtUJu9ppPwe

மலேசியா வாசுதேவனின் 90கள் பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டியது.

எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்

https://www.youtube.com/watch?v=scBnduzWaHA

ஒத்தடம் போடும்.

இளையராஜா வெறும் இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ஆகச் சிறந்த கலை இயக்குநர், அதை விடவும் ஒரு அற்புதமான நடன இயக்குநருக்கான தாளக்கட்டை உருவாக்க வல்லோன் என்பதை “மெதுவா தந்தியடிச்சானே” 

https://youtu.be/_8Wdqg2eSmI?si=9ThNrj3J2SO1Lkpj

இல் உணரலாம்.

அந்த முன்னிசையில் ஒரு கொலுசு நடையை நோகாமல் நடக்க விட்டு, தபேலா குலுக்கலைக் காட்டுவதில் இருந்து பெருக்கெடுத்துப் பாயும் துள்ளல் இசையனுபவம் ❤️

கானா பிரபா


Tuesday, September 24, 2024

சாருகேசி 🩷



வரச் சொல்லடி

அவனை வரச்சொல்லடி

அந்திமாலை தன்னில்

அவனை வரச்சொல்லடி…..


https://youtu.be/eUGCBkaJ6c0?si=mGScynl8Njj0vym3


சாருகேசி ராகத்தில் இவ்விதமாகத் தூது விட்டார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தப் பாடலின் முழு நீள முகப்பு இசை இலங்கை வானொலிக் காலத்து நிகழ்ச்சிகள் ஏதோவொன்றில் முகப்பு இசையாகக் கூடப் பயப்படுத்தக் கூடிய தார்ப்பரியம் நிறைந்தது.

இசையரசி சுசீலாம்மா ஒரு பெரும் சாஸ்திரிய இசைக் கச்சேரியை நடத்தி ஓய்ந்த தொனி இருக்கும் பாடல் முடியும் போது.

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் இன்னும் கொண்டாட வேண்டியது.


இந்தப் பாடல் இடம்பெற்ற “பாதுகாப்பு” வெளிவந்தது 1972 இல், அப்படியே 20 வருடங்கள் கழித்து 1992 “சாருகேசி”

80s kid குமரியாகி, நவீனப்படுத்தப்பட்ட இசையோடு பாடுகிறாள் இப்படி


“தூது செல்வதாரடி

 உருகிடும் போது

செய்வதென்னடி…..


https://youtu.be/SkPunUuLtNU?si=zqGmdoXS5p_jஜ்6ஊ


வெறும் அரைப் பாட்டு அந்த 2.30 நிமிடங்களில் ஒரு முழு நீளப் பாடலுக்கான தார்ப்பரியத்தை இசைஞானி கொடுக்க, ஜானகியம்மா அந்த குறுகிய ஓவர் துடுப்பாட்டத்திலும் சிக்சர் அடித்து விடுவார்.


நிலை பாரடி கண்ணம்மா 

பதில் கூறடி பொன்னம்மா 

என்

காதல் வேலன் 

உடன் வர

தூது செல்வதாரடி….


பாடலாசிரியர் பொன்னடியான் எழுத்துகளில் பொன்னாய் ஜொலிக்கும் வரிகள். இந்தத் தோழிமார் பாட்டு எழுதியவர் தானே இதற்கு முந்திய ஆ “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” என்ற சாகாவரம் பெற்ற பாடலையும் யாத்தவர்.


“அம்மம்மா கேளடி தோழி

  சொன்னானே ஆயிரம் சேதி”

சாருகேசியில் மெல்லிசை மன்னர் இசை கொடுத்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். இங்கே அவர் பகிர்வைக் கேளுங்கள்


https://youtu.be/r5V5mne7kwU?si=DQL9Bd7NyeuhRtmQ


இப்படியாக இந்த இரண்டு பாடல்களையும் எனக்கு நினைப்பு மூட்டியது இன்னொரு பாட்டு.

அதன் சரணத்தைச் சொல்கிறேன்

வாசிக்கும் போதே அப்படியே பல்லவி வந்து உங்கள் வாயில் கதவைத் தட்டிப் பாட வைக்கும்


தாழம்பூ கைகளுக்கு

தங்கத்தில் செயத காப்பு

வாழைப்பூ கைகளுக்கு

வைரத்தில் செய்த காப்பு


உன் அண்ணன் போட வேண்டும்

ஊரெல்லாம் காண வேண்டும்

கல்யாண நாளில் இங்கே

கச்சேரி வைக்கவேண்டும்


“மண மாலையும் மஞ்சளும் சூடி”


https://youtu.be/iEI_ns-BWIE?si=க்ஷ்ள்த்ஹு92ம்78க்ஷு


இந்தப் பாடலைக் கேட்கும் போது கூடப் பிறக்காத தங்கைக்காக கண்கள் கொட்டும் இன்பப் பரவசத்தில் அப்படியொரு உணர்ச்சி ஊட்டம் இது.


எண்பதுகளின் கல்யாண வீடியோ கேசட்டுகளின் சிறப்பு விருந்தினராக எத்தனை பேர் அலமாரிகளில் இந்தப் பாடல் குந்தியிருக்கிறது என்று விசாரித்துப் பாருங்கள்.


சாருகேசியை சுசீலாம்மாவும், ஜானகிம்மாவும் தலை மேல் சுமக்க, பாட்டுத்தலைவன் எஸ்.பி.பி தன் இதயத்தில் சுமந்து மீட்டுவார்.

ஒரு சில பாடல்களத் தான் அவற்றைக் கேட்கும் போதே சொந்தம் கொண்டாடி ஆனந்தக் கண்ணீர் கொட்ட வைக்கும். அதில் முதல் வரிசையில் இருக்கும் இது.


“குங்குமத்துச் சிமிழே வா…

  சங்கம் தந்த தமிழே வா…”


என்று இந்த நூற்றாண்டின் சங்கப் புலவர் புலமைப்பித்தன் தன் முத்திரையைக் காண்பித்திருப்பார்.


“பிறை போல் நுதலில்” 

நெற்றிக்குச் சம வார்த்தை நுதல் என்று போகிற போக்கில் தமிழ்ப் பாடம் வேறு.


கொடியில் அரும்பி

மடியில் மலர்ந்த

மலரே நீ வாழ்கவே.


சாருகேசி !

நீயும் வாழ்கவே ❤️


கானா பிரபா

24.09.2024

Friday, September 13, 2024

இசையமைப்பாளர் பாபி


“சொல்லாமலே” இயக்குநர் சசி  பிறந்த நாள் செப்டெம்பர் 9 ஆம் திகதி அவர் நட்பு வட்டத்தில் இருப்பதால் வாழ்த்தி விட்டு, இரு தினம் கழித்தால், அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாபியின் பிரிவுச் செய்தி எட்டியது.

சில வாரங்களுக்கு முன்னர் சங்கர் (கணேஷ்) புதல்வர் பாபி சங்கர் பேட்டியிலும் இசையமைப்பாளர் பாபி குறித்த பேச்சு வந்த போது தம் இசைக்குழுவில் வாத்தியக்காரராக இருந்தது குறித்துப் பேசியிருந்தார். பேட்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தவர்களில் இசையமைப்பாளர் பாபியும் ஒருவர், இப்படியான கை நழுவிய வாய்ப்புகளில் அவரும் ஒருவராகி விட்டார் இப்போது.

“சொல்லாதே சொல்லச் சொல்லாதே” 

https://www.youtube.com/watch?v=FZjTCCXtvQA

பாடல் பாபியை நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும். அண்ணன் அறிவுமதி அவர்கள் எழுதிய பாட்டு அது.

அதை விட இரண்டு இனிய புதையல்கள் “சொல்லாமலே”யில் உண்டு.

அதில் ஒன்று “சிந்தாமணியே வா...”

https://www.youtube.com/watch?v=A0nx6vjOdys

சகோதரன் Senthooran A R Thiruchchenthooran வந்து ஞாபகப்படுத்தினார். பண்பலை வானொலி வளர்ப்பு அப்படி. இந்தப் பாடல் எல்லாம் இன்னும் அதிகம் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டிய பாடல். அறிமுக இசையமைப்பாளர்களுக்கு எஸ்பிபி அந்நியமில்லாது பாடிய முதல் பாடல் என்ற பாட்டியல் போட்டால் இதுவும் முந்திக் கொண்டு வரும். உண்மையில் இந்தப் பாடலில் தான் இன்னும் அசாத்திய இசைத் திறனை பாபி காட்டியிருப்பார்.

ஈராயிரங்களில் பாடலாசிரியர் வாசனின் கூடப் பிறக்காத தம்பி முத்துக்குமார் எப்படி புதுப் புது இசையமைப்பாளர்களுக்கும் முத்து முத்தாய்க் கொடுத்தாரோ அது போலத்தான் வாசன் தான் வாழ்ந்த கொஞ்சக் காலத்திலும் நிறைவாகச் செய்து விட்டுப் போயிருக்கிறார்.

“சிந்தாமணியே வா” பாடல் அவரின் கை வண்ணம் தான்.

மறைந்த கலைஞரை அவர்தம் படைப்புகளால் நினைப்பூட்டிக் கொண்டாடுவது எப்பேர்ப்பட்ட வரம்?

அப்படித்தான் வாசனின் சகோதரியும் பாடலாசிரியர் வாசன்  இசையமைப்பாளர் பாபியை நினைவுபடுத்தி அஞ்சலிக்கும் போது தன் அண்ணன் இந்தப் படத்துக்காக எழுதிய மூன்று பாடல்களோடு வந்தார்.

அதில் ஒன்று “சொல்லுச் சொல்லு” 

https://www.youtube.com/watch?v=HDAg_-VYG6E

“சொல்லாமலே” படத்தின் கதையின் அடிநாதமாக இந்தப் பாட்டு அழகாய் அமைந்திருக்கும்.

அப்படியே பாபி இசையில் மலர்ந்த “நேசம் புதுசு”  

https://www.youtube.com/watch?v=u14VVmdwKk0

பாடல்களையும் கேட்டுப் பாருங்கள், குறையொன்றும் இல்லாத இசை மகத்துவம். 

மேலும் "மார்கழி 16", "கன்னக்கோல்" ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆனாலும் என்ன ஒரு படைப்பின் வெற்றி தானே ஆக்ககர்த்தாவை நிலைத்திருக்க வைத்திருக்கிறது.


Wednesday, September 11, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக மலேசியா வாசுதேவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக 
மலேசியா வாசுதேவன் ❤️❤️❤️



ஹேய் ரத்தரா ஹேய் ரத்தரா,
ரத்தரா ரத்தரா ரத்தரா
ரத்தரா ரத்தரா ரத்தரா ஹே

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மணி....

அந்தப் பாடலைக் கேட்டாலேயே அச்சொட்டாக ரஜினிகாந்தே குரல் கொடுத்து ஆடிப் பாடுவது போலவொரு உணர்வெழும்.
உற்சாக மன நிலை வேண்டும் போதெல்லாம் யாசிப்பது இம்மாதிரியான பாடல்களைத் தான்.

ரஜினிகாந்துக்கு T.M.செளந்தரராஜன் தொட்டு ஏராளம் பாடகர்கள் குரல் கொடுத்ததை முன்னர் தனிப்பதிவாகவே பகிர்ந்திருந்தேன்.
ஆனாலும் மலேசியா வாசுதேவனையே என்னளவில் ரஜினிக்கானவொரு குரல்வாகு ஆக மனதளவில் ஏற்றுக் கொண்டு ரசிப்பேன். பதிவை எழுதியவர்கானாபிரபா

"இரவும் பகலும் எனக்கு உன்மேல் கண்ணோட்டம்" மெல்லிசை மன்னர் பாடல் ஈறாக இதை விட்டுவைப்பதில்லை.

"மணவினைகள் யாருடனோ
 மாயவனின் விதிவகைகள்..."

என்று ரஜினிக்காக முதன்முதலில் குரல் கொடுத்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தான் மலேசியா வாசுதேவன் குரலை ரஜினிக்கு முதலில் பொருத்தி அழகு பார்த்தவர். அந்த நீட்சியில் அமைந்த பாடல்களைத் தொகுத்து இங்கே பகிர்கின்றேன்.கானா பிரபா

1. கொடிகட்டிப் பறக்குதடா - எம்.எஸ்.விஸ்வநாதன் - குப்பத்து ராஜா
2. ஆகாய கங்கை - இளையராஜா - தர்மயுத்தம்
3. ஒரு தங்க ரதத்தில் - இளையராஜா - தர்மயுத்தம்
4. இரவும் பகலும் - எம்.எஸ்.விஸ்வநாதன் - பில்லா
5. வெத்தலயப் போட்டேண்டி - எம்.எஸ்.விஸ்வநாதன் - பில்லா
6. அடி ஆடு பூங்கொடியே  - இளையராஜா - காளி
7. நாட்டுக்குள்ள-  இளையராஜா - நான் போட்ட சவால்
8. சுகம் சுகமே - இளையராஜா - நான் போட்ட சவால்
9. பொதுவாக என் மனசு - இளையராஜா - முரட்டுக்காளை
10. கோடானு கோடி - இளையராஜா - முரட்டுக்காளை
11. சுப்பண்ணா சொன்னாருண்ணா - எம்.எஸ்.விஸ்வநாதன் - தீ
12. தேடும் தெய்வம் - இளையராஜா - கழுகு
13. தங்கங்களே - எம்.எஸ்.விஸ்வநாதன் - தில்லு முல்லு
14. நல்ல கட்ட நாட்டுக்கட்ட - சங்கர் கணேஷ் - ரங்கா
15. என்ன சுகமான - இளையராஜா - கர்ஜனை
16. ராஜா ராணி ஜாக்கி - இளையராஜா - நெற்றிக்கண்
17. மாப்பிள்ளைக்கு - இளையராஜா - நெற்றிக்கண்
18. மல்லிகைப் பூ - எம்.எஸ்.விஸ்வநாதன் - ராணுவ வீரன்
19. போக்கிரிக்குப் போக்கிரி ராஜா - எம்.எஸ்.விஸ்வநாதன் - போக்கிரி ராஜா
20. முல்லை அரும்பே - இளையராஜா - தனிக்காட்டு ராஜா
21. வா வா வசந்தமே இளையராஜா - புதுக்கவிதை
22. பட்டுவண்ணச் சேலைக்காரி - இளையராஜா - எங்கேயோ கேட்ட குரல்
23. எத்தனையோ பொட்டப்புள்ள - சங்கர் கணேஷ் - மூன்று முகம்
24. ஆப்பக்கடை அன்னக்கிளி - இளையராஜா - பாயும் புலி
25. பொத்துக்கிட்டு ஊத்துதடி - இளையராஜா - பாயும் புலி
26. தங்கச்சி சிரித்தாளே - எம்.எஸ்.விஸ்வநாதன் - சிவப்பு சூரியன்
27. முந்தானை பந்தாட -  எம்.எஸ்.விஸ்வநாதன் - சிவப்பு சூரியன்
28. ஆசை நூறுவகை - இளையராஜா - அடுத்த வாரிசு
29. உன் மேல ஒரு கண்ணு - இளையராஜா - நான் மகான் அல்ல
30. ஆசை கிளியே - இளையராஜா - தம்பிக்கு எந்த ஊரு
31. ஆத்தா பெத்தாளே - இளையராஜா - கை கொடுக்கும் கை
32. தாத்தா தாத்தா - இளையராஜா - அன்புள்ள ரஜினிகாந்த்
33. என் தாயின் மீது ஆணை - இளையராஜா - மிஸ்டர் பாரத்
34. பச்ச மொளகா - இளையராஜா - மிஸ்டர் பாரத்
35. நாட்டுக்குள்ள நம்மப் பத்தி - சந்திரபோஸ் - விடுதலை
36. அம்மா அம்மா - இளையராஜா - மாவீரன்
37. எழுகவே - இளையராஜா - மாவீரன்
38. ஹே மைனா - இளையராஜா - மாவீரன்
39. நீ கொடுத்தத - இளையராஜா - மாவீரன்
40. சொக்குப்பொடி - இளையராஜா - மாவீரன்
41. வாங்கடா வாங்க - இளையராஜா - மாவீரன்
42. மாமனுக்கு மைலாப்பூரு தான் - இளையராஜா - வேலைக்காரன்
43. பெத்து எடுத்தவ தான் - இளையராஜா - வேலைக்காரன்
44. சொல்லி அடிப்பேனடி - இளையராஜா - படிக்காதவன்
45. மல்லிகைப்பூவுக்கு - சங்கர் கணேஷ் - ஊர்க்காவலன்
46. முத்தம்மா - சங்கர் கணேஷ் - ஊர்க்காவலன்
47. நாற்காலிக்குச் சண்டை போடும் - இளையராஜா - குரு சிஷ்யன்
48. ஒத்தடி ஒத்தடி - இளையராஜா - தர்மத்தின் தலைவன்
49. வெள்ளிமணிக் கிண்ணத்துல - இளையராஜா - தர்மத்தின் தலைவன்
50. யாரு யாரு - இளையராஜா - தர்மத்தின் தலைவன்
51. தொண்டைக்குள்ளே - ஹம்சலேகா - கொடி பறக்குது
52. அன்னக்கிளியே - இளையராஜா - அதிசய பிறவி
53. இதழெங்கும் - இளையராஜா - அதிசய பிறவி
54. பாட்டுக்குப் பாட்டு - இளையராஜா - அதிசய பிறவி
55. சிங்காரி பியாரி - இளையராஜா - அதிசய பிறவி
56. தா தந்தன - இளையராஜா - அதிசய பிறவி
57. ஒன்ன பார்த்த நேரம் - இளையராஜா - அதிசய பிறவி
58. தூக்குச் சட்டியை - இளையராஜா - எஜமான்
59. தேவாதி தேவர் எல்லாம் - சந்திரபோஸ் - ராஜா சின்ன ரோஜா 
60. என்னோட ராசி - இளையராஜா - மாப்பிள்ளை
61. ஒரு ஊரில் ஒரு மகராணி - இளையராஜா - கர்ஜனை
62. வாங்க வாங்க அண்ணாச்சி - இளையராஜா - நான் மகான் அல்ல
பதிவை எழுதியவர் கானா பிரபா
63. தென்மதுரை வைகை நதி - இளையராஜா - தர்மத்தின் தலைவன்

ரஜினி நடித்த படங்களில் அவருக்கான குரலாக அன்றி தேங்காய் சீனிவாசனுக்காக "அடியே நீ" (ஜஸ்டிஸ் கோபி நாத்), ரவீந்தருக்காக 
"அழகான பட்டுப்பூச்சி" (ரங்கா), கார்த்திக்குக்காக "நம்ம முதலாளி" (நல்லவனுக்கு நல்லவன்), எஸ்பிபி இந்தப் பாடலிலும் "என்னம்மா கண்ணு" (மிஸ்டர் பாரத்) பாடலிலும் குரல் கொடுக்க, என்னம்மா கண்ணு பாடலும், படத்தில் வெளிவராத "உனக்கும் எனக்கும் ஆனந்தம்" (ஶ்ரீராகவேந்திரா) பாடலும் சத்தியராஜுக்கும், வி.கே.ராமசாமிக்காக "இளமை இதோ" (உன் கண்ணில் நீர் வழிந்தால்), மோகனுக்காக "கதிரவன் எழுந்தான்" (ஶ்ரீ ராகவேந்திரா) பாடலும், சிவாஜி கணேசனுக்காக "ஒரு கூட்டுக் கிளியாக" (படிக்காதவன்) , பிரபுவுக்காக "தென்மதுரை வைகை நதி" (தர்மத்தின் தலைவன்) , டெல்லி கணேஷுக்கு “அழைக்கிறான் மாதவன்”, கராத்தே மணிக்காக பட்டுக்கோட்டை அம்மாளே (சங்கர் கணேஷ் இசையில் ரங்கா) ஆகிய பாடல்களோடு

ரஜினிகாந்துக்கான முகப்புப் பாடலாக "மனிதன் மனிதன்" (மனிதன்), குழுப் பாடலாக "எஜமான் காலடி மண்ணெடுத்து" (எஜமான்), அசரீரிப் பாடல்களாக "இடியே ஆனாலும்" (எஜமான்), தேவா இசையில் " சிங்கம் ஒன்று புறப்பட்டதே"( அருணாச்சலம்) ஆகிய பாடல்களிலும் மலேசியா வாசுதேவன் அணி செய்திருப்பார். தூக்குச் சட்டியை பாடலில் கவுண்டமணியாகவும், ரஜினியாகவும் குரல் கொடுத்திருப்பார். 

"குப்பத்து ராஜா" (1979) தொடங்கி அருணாச்சலம் (1997) வரை ரஜினிகாந்த் & மலேசியா வாசுதேவன் கூட்டணி நிகழ்ந்திருக்கிறது. 

கானா பிரபா
11.09.2024

Tuesday, September 10, 2024

வெள்ளிவிழாப் பாட்டுக்காரன் விவேகா


தமிழ்த் திரையிசையின் நம்பிக்கை ஊற்றாய், தன் செழுமையான வரிகளால் வளம் சேர்க்கும் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியர்களில் விவேகாவுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.

ஆகஸ்ட் 14, 1999 அவர்தம் பாட்டுப் பயணத்தின் திறவுகோலாய் அமைந்தது “நீ வருவாய் என”.

நடிக்க வாய்ப்புக் கேட்கச் சென்ற நண்பரோடு சென்றவரை நீங்கள் வருவீர்கள் என இயக்குநர் இராஜகுமாரன் சிவப்புக் கம்பளம் விரித்தார்.

“பூங்குயில் பாட்டுப் பிடிச்சிருக்கா” என்று பட்டிமன்றமே போடாமல் இன்றுவரை யாழ்ப்பாணத்து மினிபஸ்கள் ஈறாகப் பாட்டு மன்றம் கட்டிக் கொண்டிருந்த வரலாறு திறந்த நாள் அது.


பழநி பாரதி தொட்டு,  தன் உதவி இயக்குநர்களையும் கூட பாடலாசிரியர் ஆக்கி உதவிய இயக்குநர் விக்ரமன்.

இசைக் கவி என்ற இரட்டைஸ்தானம் கொண்ட இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரை எடுத்துக் கொண்டால் ஒரு தொகை அறிமுகப் பாடலாசிரியர்களுக்கான ஸ்தாபனம் அவர்.

இந்த வழியில் பிறந்த இராஜகுமாரனும் விவேகா எனும் பாடலாசிரியரைக்  கண்டெடுத்து அறிமுகப்படுத்தியது இந்தப் பாட்டுச் சந்தையின் மரபை நிரூபித்தது.


“பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா” பாடல் வெளியார் காதுக்குப் போகமுன்பே தன் குரு நாதர் காதில் போட்டு விட, விக்ரமனும் “தாவணியே என்னை மயக்குறியே” என்று “வானத்தைப் போல” மனசோடு விவேகாவுக்கு அடுத்த தளத்தைக் காட்டினார். “நீ வருவாய் என” உதவி இயக்குநர் லிங்குசாமியும், தன் முதல் படைப்பு “ஆனந்தம்” படத்திலும் “என்ன இதுவோ” என்று விவேகாவை இழுத்து வைத்துக் கொண்டார்.


விவேகாவின்

“மின்சாரம் என் மீது பாய்கின்றதே” பாடலைக் கேட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியதைப் பூரிப்போடு சொன்னாராம் லிங்குசாமி.

அப்படியே “என் ப்ரெண்டைப் போல யாரு மச்சான்” இலும் ஷங்கர் விவேகாவைப் பயன்படுத்தியதோடு, அவரின் தயாரிப்பு “ஈரம்” ஈறாக வாய்ப்பு வழங்கினார்.


எஸ்.ஏ.ராஜ்குமார், சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் என்று விவேகாவைப் பற்றெனப் பிடித்தவர்களோடு அப்படியே தேவி ஶ்ரீ பிரசாத்தின் அரசவைப் பாடலாசிரியர் ஆகவும் ஆகிவிட்டார். தேவி ஶ்ரீ பிரசாத்தின் அனேக படங்கள் அனைத்துப் பாடல்களும் விவேகா, அது கூட இல்லையென்றால் தன் படங்களில் விவேகா பாட்டு இருக்கும் என்பதை ஒரு அறிவிக்கப்படாத சட்டமூலமாக்கி விட்டார் இந்த DSP.


“ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே”

என்று தகதகக்கும் வரிகளோடு சுடச் சுட கங்குவா பாடலைக் கேட்டு ரசிக்கும் இன்றைய நடப்புக்குச் சற்று முன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் “புஷ்பா” அலையிலும் கனன்றார் பாடலாசிரியர் விவேகா.


பார்வ கற்பூர தீபமா…ஶ்ரீவள்ளி

பேச்சே கல்யாணி ராகமா….


அந்தப் பாடலை இந்த நிமிடம் கேட்கும் போதும் திருவண்ணாமலை தீபமாய் “காதுகள்” பிரகாசிக்கும்.


இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் தொடங்கி இளைய தலைமுறைக்காரர் அனிருத் உள்ளிட்டு,  இசைஞானி இளையராஜா கூட விட்டு வைக்காத பாடலாசிரியர்,


இன்னோர் புறம் கமல், ரஜினி தொடங்கி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என்று இன்னொரு தலைமுறை வரை பயணப்படுகிறார்.

மெல்லிசைப் பாடல்கள் தொடங்கி,

துள்ளிசைப் பாடல்கள் ஈறாக ரசிகர்களின் நாடித்துடிப்போடு விளையாடும் வரிகளை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. அந்த வித்தை கைவரப் பெற்றவர் விவேகா.


“கருத்தவன்லாம் கலீஜா” பாடல் வெளித்தோற்றத்தில் ஒரு துள்ளிசை, அந்த வரிகளுக்குள் நுழைந்தால் பட்டுக்கோட்டையார் போல திருவண்ணாமலையார் சமூக நீதி போதிப்பார்.


இங்கே நான் தொகுத்த, பாடலாசிரியர் விவேகாவின் பாடல்களில் எனக்கு அணுக்கமான ஐம்பது இவை.


1.     பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா (எஸ்.ஏ.ராஜ்குமார்) – நீ வருவாய் என

2.     தாவணியே என்னை மயக்குறியே (எஸ்.ஏ.ராஜ்குமார்) – வானத்தைப் போல

3.     என்ன இதுவோ (எஸ்.ஏ.ராஜ்குமார்) – ஆனந்தம்

4.     இப்பவே இப்பவே ( வித்யாசாகர்) – ராமன் தேடிய சீதை

5.     மின்சாரம் என் மீது (வித்யாசாகர்) – ரன்

6.     சொல்லத்தான் நினைக்கிறேன் ( லவ் டுடே சிவா) – காதல் சுகமானது

7.     ஆகாயம் பூக்கள் (சிற்பி) – விண்ணுக்கும் மண்ணுக்கும்

8.     இதுவரை யாரும் (எஸ்.ஏ.ராஜ்குமார்) – காதலுடன்

9.     விடிய விடிய ( சபேஷ் முரளி) – சமுத்திரம்

10.  அமளி துமிளி (ஹாரிஸ் ஜெயராஜ்) – கோ

11.  வானே வானே (டி.இமான்) – விஸ்வாசம்

12.  முளைச்சு மூணு (விஜய் ஆன்டனி) – வேலாயுதம்

13.  சக்கை போடு போட்டாலே (யுவன் ஷங்கர் ராஜா) – தாஸ்

14.  அலேக்ரா ( தேவி ஶ்ரீ பிரசாத்) கந்தசாமி

15.  ஶ்ரீவள்ளி ( தேவி ஶ்ரீ பிரசாத்) – புஷ்பா

16.  விழிகளில் விழிகளில் (டி.இமான்) – திருவிளையாடல் ஆரம்பம்

17.  அழகாப் பொறந்துப்புட்ட (வித்யாசாகர்) – சிறுத்தை

18.  உயிர் நதி கலங்குதே (அனிருத்) – வேதாளம்

19.  சின்னச் சின்ன வீட்டு வேலை (எஸ்.ஏ.ராஜ்குமார்) – பாட்டாளி

20.  கிளியோப்பட்ரா (யுவன் ஷங்கர் ராஜா) – உனக்காக எல்லாம் உனக்காக

21.  ஒரே ஒரு வார்த்தைக்காக (தேவி ஶ்ரீ பிரசாத்) – வேங்கை

22.  டாடி மம்மி (தேவி ஶ்ரீ பிரசாத்) – வில்லு

23.  என் ப்ரெண்டைப் போல (ஹாரிஸ் ஜெயராஜ்) – நண்பன்

24.  எப்ப மாமா ட்ரீட்டு  (டி.இமான்) – ஜில்லா

25.  எப்படி இருந்த நாங்க (விவேக் மெர்வின்) – சுல்தான்

26.  எப்படி இருந்த என் (தேவி ஶ்ரீ பிரசாத்) – சந்தோஷ் சுப்ரமணியம்

27.  காதலெனும் ஜோருல (பரத்வாஜ்) – தமிழ்

28.  கருப்பு பேரழகா (தமன் எஸ்.எஸ்) – காஞ்சனா 1

29.  மொட்டைப் பையா (தமன் எஸ்.எஸ்) – காஞ்சனா 2

30.  ஒரு கண் ஜாடை செய்தாளே (யுவன் ஷங்கர் ராஜா) – அஞ்சான்

31.  கண்ணென்ன மின்சாரமா (எஸ்.ஏ.ராஜ்குமார் ) – ஜேம்ஸ் பாண்டு

32.  சின்னத்தாமரை (விஜய் ஆன்டனி) – வேட்டைக்காரன்

33.  மழையே மழையே (தமன் எஸ்.எஸ்) – ஈரம்

34.  வெள்ளை பம்பரம் (ஜி.வி.பிரகாஷ்குமார்) – சகுனி

35.  காதல் வந்தாலே (தேவி ஶ்ரீ பிரசாத்) – சிங்கம்

36.  Feel My Love  என் காதல் சரியோ (தேவி ஶ்ரீ பிரசாத்) – குட்டி

37.  Teddy Bear  (ஜிப்ரான்) -  நய்யாண்டி

38.  புரியவில்லை இது புரியவில்லை (தேவி ஶ்ரீ பிரசாத்) – சிங்கம்

39.  குட்டிப்புலி கூட்டம் ( ஹாரிஸ் ஜெயராஜ்) – துப்பாக்கி

40.  அந்த வானவில்லின் பாதி (தேவி ஶ்ரீ பிரசாத்) – வீரம்

41.  என்னத்தைச் சொல்ல (ஹாரிஸ் ஜெயராஜ்) – என்றென்றும் புன்னகை

42.  கோழி வெடக்கோழி (தேவி ஶ்ரீ பிரசாத்) – சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

43.  ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால ( (தேவி ஶ்ரீ பிரசாத்) – மன்மதன் அம்பு

44.  கண்களினாலே (பரத்வாஜ்) – ப்ரியசகி

45.  இதயம் கரைகிறதே (தமன் எஸ் எஸ்) – தில்லாலங்கடி

46.  சிக்கு சிக்கு பூம் பூம் (டி.இமான்) – மாசிலாமணி

47.  தனிமையிலே (சி.சத்யா) – இவன் வேற மாதிரி

48.  நாணிக் கோணி (ஹாரிஸ் ஜெயராஜ்) – மாற்றான்

49.  இறைவா (அனிருத்) – வேலைக்காரன்

50.  தென்றல் வரும் வழியில் (இளையராஜா) – ஓய்


தாய்த்தமிழகத்தை ஈழத்தோடு கால்கட்டுப் போட்டு பருத்தித்துறையில் பெண்ணெடுத்து நம் உறவுக்காரரும் ஆகி விட்டார்.


அதிசயனே

பிறந்து பல வருடம்

அறிந்தவை மறந்தது

எனது நினைவில் இன்று

உனது முகம்

தவிர எதுவும் இல்லையே…


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நம் பாட்டுக்காரர் விவேகா.


கானா பிரபா

10.09.2024

Wednesday, September 4, 2024

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைந்தார் 🙏

“ஶ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் வழங்கும்”

என்ற தயாரிப்பு நிறுவன அடையாளத்தை எண்பதுகள், தொண்ணூறுகளின் தமிழ்த் திரை ரசிகர்கள் அவ்வளவு தூரம் மறந்து விடமாட்டார்கள்.

அதையும் தாண்டி அந்த நிறுவனத்தின் சக தயாரிப்பாளர் தரங்கை வி.சண்முகத்துடன் ஒரு தயாரிப்பாளராக அன்றி, வில்லனாகவும் பரிணமித்தவர் மோகன் நடராஜன்.

இயக்குநர் வேந்தம்பட்டி அழகப்பனின் “பூக்களைப் பறிக்காதீர்கள்” படத்தைத் தயாரித்த வெற்றியோடு,

நடிகர் பிரபுவுக்குத் திருப்புமுனை வெற்றியாக அமைந்த “என் தங்கச்சி படிச்சவ” படத்தைத் தயாரித்தார். இது பி.வாசு தனியாக இயக்கிய படம் என்றதோடு இசையமைப்பாளர் கங்கை அமரனின் 100 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபு ராசியால் தொடர்ந்து அவரை வைத்து  பிள்ளைக்காக,  கிழக்குக் கரை, மறவன்

ஆகிய படங்களையும் தயாரித்தனர். இவற்றில் கிழக்குக் கரை படம், சின்னத்தம்பியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

சத்யராஜின் நடிப்பில் வேலை கிடைச்சுடுச்சு,

அர்ஜீன் நடிக்க

எங்க அண்ணன் வரட்டும்,

புதுமை இயக்குநர் ஶ்ரீதர் இயக்க

இனிய உறவு பூத்தது,  

விஜயகாந்த் நடித்த பதவிப் பிரமாணம்

அருண்பாண்டியனின் கோட்டை வாசல்

சரத்குமாரின் சாமுண்டி

சூர்யாவின் வேல்

அஜித் நடிப்பில் ஆழ்வார்

விஜய் நடிப்பில் கண்ணுக்குள் நிலவு

என்று நீண்டு செல்லும் படங்களை “ஶ்ரீ ராஜகாளியம்மன்” தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்த பங்காளிகளில் ஒருவர்.

தன் வில்லத்தன நடிப்பால் வெளியாரின் ஏராளம் படங்களில் கூட நடித்துத் தன் அடையாளத்தைப் பேணியவர்.

ஒரு நீண்ட இயக்கம் கொண்ட தயாரிப்பு நிறுவனத்தை நடத்திய மோகன் நடராஜனின் படப் பட்டியலை எந்த இணையத் தளமும், விக்கிப்பீடியா உட்பட சேமிக்கவில்லை. அவர் வாழும் காலத்திலும் அவரின் திரைப்பட அனுபவங்கள் பதியப்படவில்லை.

மோகன் நடராஜன் தன் 71 வது வயதில் நேற்று மறைந்து விட்டார்.

கானா பிரபா

Tuesday, August 27, 2024

வளையல்…வளையல்…இந்த வளையல் போடம்மணி ❤️




சில குரல்கள் அத்திப்பூ போல அப்படியொன்றாகத் தான் எஸ்.குழந்தைவேலுவின் குரலும் தமிழ்த் திரையிசையில் அமைந்தது. ஆனாலும் அமர்க்களமானதொரு பாடலில் அவர் குரல் காலத்துக்கும் நின்று நிலைத்திருக்கிறது.


“வந்தாளப்பா வந்தாளப்பா

 வந்து ஜென்னலில நின்னாளப்பா”


https://youtu.be/HuIsseB2Pvw?si=2aW0GAknvYaCUaWf


எல்லாரும் அந்தப் பக்கம் ஒதுங்க, நானோ அடிக்கடி கேட்டது என்னமோ

“வளையல் வளையல் இந்த

வளையல் போடம்மணி” 


https://youtu.be/r0nC0maXkFw?si=3q7RuRUWODYQ5aQS


காரணம், வந்தாளப்பா போல தேவா சில பல் கொடுத்திருக்கிறார். 

ஆனால் இந்த “வளையல்” பாட்டு அவரின் தனித்துவம் எனலாம்.


இந்தப் பாடலை நினைக்கும் போது எஸ்பிபி பாடும் பாங்கில் தான் நினைப்பூட்டும்.

புதுப் பாடகர்களை அரவணைத்துப் பாடுவதில் ஜானகி போலத் தான் சித்ராவும். இந்தப் பாடலை எவ்வளவு அழகாகக் கையாண்டிருப்பார்.


தேவா “தாமரை” படத்துக்காகக் கொடுத்த “எங்கே தேன் துளி” 


https://youtu.be/P2-3aPyU0S8?si=nxglEDcArJo8tJU9


பாடலையும் ஞாபகமூட்டும் ஆரம்பச் சந்தம்.


இயக்குநர் ஆர்.சுந்தரராஜனே அனைத்துப் பாடல்களையும் எழுதி வெளிவந்தது “சீதனம்”.

அவரது கொங்கு நாட்டு வார்த்தைப் பிரயோகமாக “அம்மணி” யைச் சேர்த்துக் கொடுத்த பாட்டு. அத்தோடு பல்லவியின் ஆரம்ப வரிகளை மிக அழகாகப் பொருத்தியிருப்பார்.


ஆர்.சுந்தரராஜனின் “காந்தி பொறந்த மண்” படத்தில் அவர் எழுதிய  இன்னொரு பாடலுக்குக் குரல் கொடுத்திருப்பார் குழந்தைவேலு.

“வளையல்” பாடலில் சித்ராவோடு ஜோடி கட்டியவர், “தலைவா” வில் எஸ்.ஜானகியோடு அணி சேர்ந்திருப்பார்.


“தலைவா நான் வரவா

  தனிமை என்னை அழைக்குது

  முதன்முறையா….


https://youtu.be/9wEy4EaBMyM?si=-AqPigH91EiyAHXk


இந்தப் பாடலில் இன்னமும் அவர் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். 


பாடகர் எஸ்.குழந்தைவேலுக்கு தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த இன்னொரு வாய்ப்பு “மண்ணைத் தொட்டு கும்பிடணும்” படத்துக்காக மின்மினியோடு

 “எனக்கின்று தீபாவளி”


https://youtu.be/e4pzVGDvN8Q?si=TN7_fJbRKDMppDdT


ஆக 1995 இல் முத்தான மூன்று வித்தியாசமான வாய்ப்பை இவருக்குக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் தேவா.


“கன்னத்தில் குழி விழுந்த 

அப்பாவின் முகம் போக”

 நாயகன் பிரபுவின் முக லட்சணத்தை அச்சேற்றுவார் பாடலாசிரியர் சுந்தரராஜன்.


“காலையில் உதிக்கிற கதிரவன் நெருப்புல

பொறக்கணும் பொறக்கணும்

பொறந்ததும் சிரிக்கணும்”


காவல்துறை அதிகாரிக்குப் பிறக்கப் போகும் பிள்ளை எப்படியிருக்க வேண்டுமென்று தோழிமார் கூடிப் பாடமெடுக்கிறார்கள்.




ஒரு வித்தியாசமான மெல்லிசை வளைகாப்பு இந்த வளையல் வளையல் இந்த

வளையல் போடம்மணி.


ஆரிரோ ஆரிரோ 

பாடிடும் நாள் வரும்

அதுவரை பொறுத்துக்கோ

வளையலைப் போட்டுக்கோ


வளையல் வளையல் இந்த

வளையல் போடம்மணி ❤️


கானா பிரபா