Pages

Tuesday, April 16, 2024

“சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமழ" புகழ் சாஸ்திரிய இசை விற்பன்னர் கே.ஜி.ஜெயன் மறைவில்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகர் மனோஜ்.கே.ஜெயனின் தந்தை கே.ஜி.ஜெயன் (கலாரத்னம் ஜெயன்) இன்று இறைவனடி சேர்ந்தார்.

கே.ஜி.ஜெயனும் அவரது சகோதரர் கே.ஜி.விஜயனும் இணைந்து ஜெய-விஜயா என்ற பெயரில் சாஸ்திரிய இசைப் பாடல்களை இசையமைத்தும், மேடையேற்றிப் பாடியும் வந்தவர்கள். 

பாகப்பிரிவினை படத்தின் மலையாள வடிவம் "நிறகுடம்" (சிவாஜி நடித்த பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தவர்) பீம்சிங் இயக்கத்தில் மீள உருவானபோது இந்த இரட்டையர்களே இசையமைத்துள்ளார்கள்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்

https://www.youtube.com/watch?v=G1Y0Ns5i1l4

இன்னும் பல மலையாளப் படங்கள், தமிழ்ப் படங்கள் சிலவற்றுக்கும் இசைப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கே.ஜெயன் சகோதர்கள் உருவாக்கியளித்த ஐயப்பன் புகழ் பாடும் பாடல்கள் ஏக பிரசித்தம் வாய்ந்தவை.

https://www.youtube.com/watch?v=I6bICJsQJKs

https://www.youtube.com/watch?v=CA-YbYfz7SI

தமிழில் ஜெய-விஜயா இரட்டையர்கள் இசை வழங்கிய படங்களில் ஷண்முகப்ரியா படப் பாடல்கள்

வேல் வண்ணம் செந்தூர் கண்டேன்

https://www.youtube.com/watch?v=OWSfHRfTg5g

குன்றங்கள் ஆடிவரும்

https://www.youtube.com/watch?v=gbs0qVhZ7d0

இறைவனுக்கும் பெயரை வைத்தான்

https://www.youtube.com/watch?v=eygEnv27ATg

காலம் வந்ததும் நான் வருவேன்

https://www.youtube.com/watch?v=Dd5uJUf-Mw4

பீம்சிங் இயக்கிய தமிழ்ப்படமான “பாதபூஜை” படத்திலும் ஜெய-விஜயா இரட்டையர்கள் இசையில்

ஆ! சுகம் சுகம் இது

https://www.youtube.com/watch?v=b5xO3xTD8x8

கண்ணாடி அம்மா உன் இதயம் என்ற அற்புதமான பாடல்

பி.சுசீலாவுடன் வாணி ஜெயராம் பாடிய பாடல்

https://www.youtube.com/watch?app=desktop&v=JdOqf-WW7AA


பாப்பாத்தி என்ற இன்னொரு தமிழ்ப் படத்துக்கும் ஜெய - விஜயா இசையமைத்துள்ளனர்.

அதில் இடம்பெற்ற மலையாளப் பாடல்

https://www.youtube.com/watch?v=_JgXV7fP7lA

அதே படத்தில் ஹிந்தியும் தமிழுமாக இன்னொன்று

https://www.youtube.com/watch?v=aP8CvFQCzow

பன்னீர் சிந்திய பனிமலர் ஒன்று, வாணி ஜெயராம் குரலில்

https://www.youtube.com/watch?v=AVTL3zk2rpA


யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஜே.ஜே.ஜேசுதாஸ் கச்சேரியில் “சந்தனமும் ஜவ்வாதும்” பாடலைக் கேட்டு ரசித்தவர்களுக்கு அந்தப் பாடலுக்குப் பின்னால் இருக்கும் இசையமைப்பாளர்களையும் இந்தப் பதிவு இனிமேல் அடையாளப்படுத்தும். 1985 இல் தன் சகோதரர் விஜயனை இழந்தார்.

அதனால் இசையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த ஜெயனை மீள அழைத்து வந்தவர் ஜே.ஜே.ஜேசுதாஸ்.

ஜெயனின் இசையில் 

“ராத தன் பிரமத்தோடானோ கிருஷ்ணா”

https://www.youtube.com/watch?v=--i6aAHQkEA

பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள் சொக்கிப் போவீர்கள்.

சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ

பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து 

தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர 

வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும்

உன்னழகைக் காண ஆயிரம் காணவேண்டும் 

முருகனை காண  கண்ணாயிரம் வேண்டும்

https://www.youtube.com/watch?v=ZGXVrgViriQ

கானா பிரபா

16.04.2024


Monday, April 15, 2024

கொக்கு சைவக் கொக்கு 🦩 விக்கல் பாட்டு ❤️❤️❤️


ஐந்து பாட்டை இசையமைப்பாளரிடம் கேட்டு வாங்கிப் படமாக்குவதை விட மிகச் சிறந்த அனுபவம், குறித்த காட்சியை உள்வாங்கி, அதன் அணுக்கள் எல்லாவற்றையும் பாடலுக்குள் அடக்கும் போது அது காட்சியாக விரியும் போது இரண்டும் கலந்து கொடுக்கும் இன்பப் பரவசத்துக்கு அளவே இல்லை.

அப்படியொரு பாட்டு இது.

புறச் சத்தங்களை வைத்து ரஹ்மான் கொடுத்த அரிதான, மிக அற்புதமான முதற்தர வரிசைப் பாட்டு இது.

ஒரு விக்கலோடு தொடங்கி, ஆனால் அதை வைத்தே ஜல்லி அடிக்காமல் மாறுபட்ட இசைக் கோவைகளும், கூட்டுக் குரல்களும்,  இடையில் கோழிக் கொக்கரிப்பை விக்கலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும், 

“ஏலாலோ எலக்கடி ஏலாலே”

ரஹ்மான் டச்சுமாக ஒரு கலகலப்பான கொண்டாட்டமாக மாறி முடியும் தறுவாயில் அந்த விக்கலை மீண்டும் நினைவுபடுத்தி முடிப்பார்.

வாத்து எழுப்பும் ஒலி நயத்துக்கு ஏற்ப சுபஶ்ரீயின் இரு தோள்களும் அசைந்தாடும் அழகியலாக ஒவ்வொரு இசைத் துணுக்குக்கும் அசைவுகளின் அழகியல்.

ரஹ்மானின் ஆரம்பங்களில் புல்லாங்குழலைக் கையாளும் நுட்பத்துக்குத் தனி அத்தியாயம் வைக்க வேண்டும். அங்கே புல்லாங்குழல் நவீனையும் கொண்டாட வேண்டும்.

கோபியர் கொஞ்சும் ரமணாவாய் ரஜினிக்குப் புல்லாங்குழலை மீட்டக் கொடுத்திருப்பார்.

தேனி குஞ்சரம்மாளின் குரலை “வயசான சுந்தரி” க்குப் பொருத்திய குறும்புத்தனம் என்றால், அது உறுத்தாமல் ஜோதிலட்சுமியின் மிடுக்குக்கு அளவெடுத்த சட்டை.

இந்தப் பாடலை ஓவராக தத்துவம், கத்துவம் போடாமல் ரஜினியின் பாத்திரப் படைப்புக்கு ஏற்ப அமைத்தது போல எளிமையாகக் கொடுத்திருப்பார் வைரமுத்து.

பாடுவது ரஜினியா எஸ்பிபியா என்று குழம்புமளவுக்கு அச்சொட்டான பிரயோகம் கொடுப்பார் சூப்பர் ஸ்டார்.

கூட்டத்துக்கு ஏய்ப்புக் காட்டும் எஸ்பிபி, குஞ்சரம்மாள் குரலைக் கேட்டு அடங்கி வழி விட்டு

“வயதான சுந்தரியே

  மன்மதன் மந்திரியே”

என்று எள்ளலோடு ஒரு போடு போட்டு காலி பண்ணி விடுவார் அந்த மிடுக்கன்.

இந்த மாதிரிப் பாட்டுப் பாட இன்னொரு எஸ்பிபி பிறந்து வர வேண்டும்.

மெல்பர்னில் வாழ்ந்த காலத்தில், அறைத்தோழர் ஜோ அண்ணா படு பயங்கர ரஜினி விசிறி. 

படத்தில் ரஜினி அழுதால் இவருக்குத் தொண்டை கட்டி விடும்.

நானும் அவருமாக மெல்பர்ன் மொனாஷ் பல்கலைக்கழக யுனியன் சினிமாவில் படம் பார்க்கிறோம்.

“குளுவாலிலே” பாட்டுக்கு நெளிகிறார்.

ரஜினியை உதித் நாராயணன் குரலுக்கு ஒப்பிட மறுக்கிறார் என்பது புரிந்தது.

“படம் எப்பிடி?”

வீடு திரும்பும் சமயம் கார் தரிப்பு இடத்துக்கு வரும் போது பேச்சுக் கொடுக்கிறார்.

“கொக்கு சைவக் கொக்கு கலக்கல்” என்றேன். 

சிரித்தார்.

அக்கக் கக்க அக்க…வோடு முடியும் 

ரஹ்மான் முத்திரை ❤️

https://youtu.be/9HTvvuSyfn0?si=aIwuTNRofQNeImpZ

கானா பிரபா


Monday, March 25, 2024

பெரியோனே…. என் ரஹ்மானே…….❤️ ரஹ்மானும் அவர் தந்தையும் அளித்த ஆன்மாவின் பாடல்கள் ❤️



புகை போல சிட்னியின் விடிகாலைப் புகார் முட்டியிருந்த அந்தச் சனிக்கிழமை விடிகாலை.


காரை வெளியில் எடுத்துக் கொண்டு வழக்கமாக ஓட்டப் பயிற்சி எடுக்கும் பூங்காவை நோக்கிப் பயணிக்கும் சமயம் “பெரியோனே” 

பாடலை ஒலிக்க விடுகிறேன்.


அந்த ஏகாந்தச் சூழலில் அந்தப் பாடல் எழுப்பிய உணர்வுக்கு மொழியில்லை.

அந்த மலையாளப் பாடலோடே ஐக்கியமாகின்றேன்.


கையறு நிலைப்பட்ட ஒரு ஆன்மாவின் மன ஓசையாகப் பிறக்கும்  இந்தப் பாடலின் முதலடிகள் தான் இறைவனை யாசிக்கும், அதன் பின்னெல்லாம் வருவது அவனின் சுய பச்சாதாபமாக இருக்கும்.


ரஹ்மானைப் பொறுத்தவரை ஆன்மிகப் பாடல்களைத் தனித்தும் செய்தவர்.


உதயங்கள் எல்லாமும் 

மேற்கில் அல்லவா

அது உண்மை நபி நாதர் 

தரும் வாக்கில் அல்லவா


https://youtu.be/-XdmSHm2xWk?si=n-6O2CNMl_Jv50yn


வாங்கிக் குவித்த இசைத்தட்டுகளின் குவியலில் முதல் இறையருள் பாடல்கள் கொண்ட இசைத்தட்டு என்ற பெருமையப் பெறுவது தீன் இசை மாலை எனும் இசை வட்டு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்னர் இசையமைத்து வெளிவந்த இஸ்லாமியத் தனிப்பாடல் திரட்டு இதுவாகும்.

இலங்கையில் இருந்த காலத்தில் வானொலி வழியாக, இங்கே நான் பகிர்ந்த சுஜாதா பாடிய பாடல் வழியாகத் தான் இந்த இசைவட்டு குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

"தீன் இசைமாலை" இஸ்லாமிய இறைபக்திப் பாடல்களுக்குப் புது வடிவம் கொடுத்ததென்பேன்.


“பெரியோனே” பாடலில் ஜித்தின் ராஜ் இன் குரலை எப்படித்தான் ரஹ்மான் கச்சிதமாக அமர்த்திக் கொண்டரோ, எல்லா மொழிகளிலும் அவர் குரல் அந்தப் பாடலின் ஆன்மாவாகவே பிரதிபலிக்கின்றது.


“ஆடு ஜீவிதம்” படத்துக்காக மிகவும் சிரத்தையெடுத்துக் கொண்டேன் என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் கூற்றின் மெய்த்தன்மையைக் கட்ட “பெரியோனே” ஒரு சிறு உதாரணம் பறையும்.


https://youtu.be/mX8JxEc2_mk?si=dDi7dTjBg1yf44uR


பின்னணி ஓசையை ஆற்றுப்படுத்தி, குரலுக்கே முக்கியத்துவம் தருகிறார்.

“பெரியோனே” என்று தொடங்கும் போதே பாலைவனத் திடலில் நின்று ஒலிக்கும் ஒற்றைக் குரலாகவே தொனிக்கிறது.


“ஒரு ஆன்மிக இடம் போல எந்த வித தேவையற்ற பேச்சுக்கள் அற்ற சூழலாக ரஹ்மானின் ஒலிப்பதிவுக் கூடம் இருக்கும்” என்று சாய் வித் சித்ராவில் கெளதம் வாசுதேவ மேனன் பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். அது சரியான நேரத்தில் இந்தப் பாடலின் வழியே உணர வைக்கின்றது.


ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள சினிமாவின் உதவி இசையமைப்பாளர், இசை ஒருங்கமைப்பாளராகவும் இயங்கியவர்.

ஆர்.கே.சேகர் இசையமைப்பாளராய் அறிமுகமானது 1964 இல்  “பழசிராஜா” படைப்பின் வழியாக பின்னாளில் மம்மூட்டி நடிக்க இளையராஜா இசையில் இதே பெயரில் ஈராயிரங்களில் உருவானதும் நாமெல்லோரும் அறிந்ததே.


ஆர்.கே.சேகரின் அறிமுக இசைமைப்பில் வயலூர் ரவிவர்மா பாடல் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் பாடலில்


காலன் கோழிகள் கூவி

கழுவன் சுற்றி நடந்தூ…..


என்று இடைவரி அமைந்திருக்கும்.

அதை இப்போது தனையன் ரஹ்மானின் ஆடு ஜீவிதத்தோடு பொருத்திப் பார்க்கிறேன்.


ரஹ்மானின் தந்தை கொடுத்த 

அந்தப் பாடல்

.

“சொட்ட முதல் சுடலை வரே

  சுமடும் தாங்கி 

  துக்கத்தின் தண்ணீர்ப்பந்தலில்

  நில்குன்னவரே…. நில்குன்னவரே


https://youtu.be/0H2dqpx6R8M?si=xwfz8X05pfjr2vt7


✍🏻

கானா பிரபா

Wednesday, March 20, 2024

கவிஞர் முத்துலிங்கம் 82 💚❤️


“பூபாளம்....
இசைக்கும் பூமகள் ஊர்வலம்....”

நான் கேட்ட கேள்வியை மறந்து விட்டுப் பாட ஆரம்பித்தார் கவிஞர் முத்துலிங்கம்.
“கே.பாக்யராஜ் இற்கும் உங்களுக்கும் அப்படியென்ன ஒரு பந்தம்?”

என்று நான் கேட்டதுக்குத் தான் அப்படிப் பாடியபடி ஆரம்பித்தார் தன் பதிலோடு.

இன்று தமிழ்த் திரையிசையின் செழுமையான பாடல் பயிர்களை விளைவித்த கவிஞர் முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு அகவை 82. திரையிசைப் பாடலாசிரியராக ஐம்பது ஆண்டுகளைத் தொடுகின்ற அவரது பாட்டு ஓட்டத்தில் கிடைத்த ஒவ்வொரு துளியும் நமக்குப் பெறுமதியான பாடல்களாக ஏந்த முடிந்தது.

ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் "பாடல் பிறந்த கதை" தான்.

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை 2011 இல் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "முத்து மணி மாலை" என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் "பாடல் பிறந்த கதை" என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தொட்டு விருமாண்டி கமல்ஹாசன் ஈறாகப் பாடல்கள் பிறந்த கதைகளை 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார்.

என் மனசில் உட்கார்ந்திருந்த அந்தக் கேள்விக்குப் பின்புலமாக அமைந்தது, இயக்குநர் கே.பாக்யராஜுடன், கவிஞர் முத்துலிங்கம் போட்ட அற்புதமான கூட்டணி.

கே.பாக்யராஜ் நாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புகள்” படத்தில் “இதயம் போகுதே”,
அது போல அவர் இயக்குநராக அமைந்த முதல் படமான “சுவர் இல்லாத சித்திரங்கள்” படத்திலும் “ஆடிடும் ஓடமாய்” இரண்டுமே
அவலச் சுவை நிறைந்தவை. ஆனால் பாக்யராஜ் திரைப்பயணத்தில் இந்த இரண்டுமே அடுத்தடுத்த படிக்கற்களாய் அமைந்த படங்கள்.

எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாய்க் கொண்டாடப்பட்டவர் அவ்விதமே புலமைப்பித்தன், வாலி, முத்துலிங்கம் ஆகியோரையும் அரவணைத்துக் கொண்டார்.

“அண்ணா நீ என் தெய்வம்” படத்தில் எம்ஜிஆருக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்த உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
https://www.youtube.com/watch?v=6iWO_euqDjc

பாடல் முத்துலிங்கம் எழுத, அது தோதாகப் பின்னாளில் அவசரப் போலீஸ் 100 படத்தின் பாடல் பட்டியலிலும் அமைந்தது. அந்தப் படத்தில் பாக்யராஜ் இசையமைத்த பாடல்களில் முத்துலிங்கம் இல்லை என்றாலும் தானாகக் கனிந்த நிகழ்வு இது.

இவ்விதம் இயக்கு நர் கே.பாக்யராஜ் & பாடலாசிரியர் முத்துலிங்கம் கூட்டணி அமைத்து பல்வேறு இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவை எல்லாமே ராசியான வெற்றிப் படங்களாய் அமைந்ததற்கு நான் தொகுத்துப் பகிரும் இந்தப் பட்டியல் ஓர் சான்று.

1. இதயம் போகுதே – புதிய வார்ப்புகள் – இளையராஜா
https://www.youtube.com/watch?v=mOWb09m4WoM

2. ஆடிடும் ஓடமாய் – சுவர் இல்லாத சித்திரங்கள் – கங்கை அமரன்
https://www.youtube.com/watch?v=ahV59QQa6D8

3. பல நாள் ஆசை – இன்று போய் நாளை வா – இளையராஜா
https://www.youtube.com/watch?v=wMTr8b4ks4Y

4. அம்மாடி சின்ன – இன்று போய் நாளை வா – இளையராஜா
https://www.youtube.com/watch?v=bNAT1MmgNN4

5. கோகுலக் கண்ணன் – பாமா ருக்மணி – எம்.எஸ்.விஸ்வநாதன்
https://youtu.be/6ck944lkH_M?si=jmw11Q_k99M4RtaD

6. கதவைத் தெறடி பாமா - பாமா ருக்மணி – எம்.எஸ்.விஸ்வநாதன்
https://www.youtube.com/watch?v=ybpChLMFM7o

7. மச்சானே வாங்கய்யா – எல்.ஆர்.ஈஸ்வரி - எம்.எஸ்.விஸ்வநாதன்
https://www.youtube.com/watch?v=1483GPagLH8

8. வான் மேகமே – குமரிப் பெண்ணின் உள்ளத்திலே – சங்கர் – கணேஷ் (இயக்கம் ரா.சங்கரன்)
https://www.youtube.com/watch?v=o2wxZE4ss94

9. பொன்னோவியம் ஒன்று - குமரிப் பெண்ணின் உள்ளத்திலே – சங்கர் – கணேஷ் (இயக்கம் ரா.சங்கரன்)
https://www.youtube.com/watch?v=xSud9bwq_7c

10. டாடி டாடி – மெளன கீதங்கள் – கங்கை அமரன்
https://www.youtube.com/watch?v=YfZUARsc6oM

11. பூபாளம் இசைக்கும் – தூறல் நின்னு போச்சு – இளையராஜா
https://www.youtube.com/watch?v=4XPvUOPYp24


12. My dear my sweet – டார்லிங் டார்லிங் டார்லிங் - சங்கர் – கணேஷ்
https://www.youtube.com/watch?v=TBpAZ4Pwrc0

13. சின்னஞ்சிறு கிளியே – முந்தானை முடிச்சு – இளையராஜா
https://www.youtube.com/watch?v=9Z8MOGIgSmA

14. வானம் நிறம் மாறும் – தாவணிக் கனவுகள் – இளையராஜா
https://www.youtube.com/watch?v=u9IwaT36Lco

15. அட மச்சமுள்ள – சின்ன வீடு – இளையராஜா
https://www.youtube.com/watch?v=hTOPpRf8tTA

16. ஒரு ரகசியப் பூஜை – இது நம்ம ஆளு – பாக்யராஜ் (இசைத்தட்டில் மட்டும், இயக்கம் பாலகுமாரன்)

17. என் ஜோடிக்கிளி – காவடிச் சிந்து – பாக்யராஜ் (வெளிவரவில்லை)
https://www.youtube.com/watch?v=Z5Yh-FnIN_w

கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா
20.03.2024

Sunday, March 10, 2024

இருவர் 🔥 ஏ.ஆர்.ரஹ்மானின் புதுப் பரிமாணம் ✨❤️

நேற்று வெகு நாட் கழித்து சூப்பர் சிங்கரில் பாடகர் மனோவின் 40 ஆண்டுக் கலைப்பயண சிறப்பு நிகழ்ச்சியைத் தேடிப் பார்த்தேன்.

அந்த நிகழ்வில் அற்புதமான பாடல்கள் பலதும் பகிரப்பட்டிருந்தாலும் இன்று காலை அனிச்சையாக ஒரு பாடல் மேல் மையல் கொண்டேன்.

அந்தப் பாடல் தான் “இருவர்” படத்தில் வந்த “ஆயிரத்தில் நான் ஒருவன்".

ஈராயிரக் குழவிகள் அடிக்கடி சொல்வது போல இந்த “இருவர்” படப் பாடல்களே ஒரு underrated தான்.

ஆங்காங்கே போட்டி மேடைகளில் “நறுமுகையே” பாடல் மட்டும் அடிக்கடி சாஸ்திரிய இசைச் சுற்றில் எட்டிப் பார்க்கும். காரணம் இந்தப் பாடலை விட மிகவும் சிக்கலான சாஸ்திரிய இசைப் பாடல்கள் கே.வி.மகாதேவன் காலத்தையதை எடுத்தால் மேல் மூச்சு, கீழ்மூச்சு, ஃபீமேல் மூச்சு வாங்கும் என்ற செளகரியச் சூழலும் (comfort zone) கூட இதை எடுக்க ஒரு காரணம். அங்கே தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவத்தைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“இருவர்” மாதிரியான ஒரு மெய் வாழ்வின் காலச் சூழலைப் பிரதிபலிக்கும் படத்துக்கு (period film) அப்படியே பழைய நொடி அடிக்கக் கூடிய பாடல்களைத் தானே பொதுவாக மீளுருவாக்கம் செய்ய முனைவார்கள்?

ஆனால் இங்கே ரஹ்மான் பரீட்சித்துப் பார்த்தது

புதுக் குரல்கள் 

தன்னுடைய தனித்துவமான இசை 

ஆனால் அந்தக் காலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய உள்ளுணர்வை ரசிகனுக்கு எழுப்ப வேண்டும்.

“கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

 கண்டதை எல்லாம் நம்பாதே”

ஹரிஹரன் பாடுகிறார். அப்படியே “கண்ணை நம்பாதே” (நினைத்ததை முடிப்பவன்) காலத்தில் இருத்தி விடும்.

என் வானொலிக் காலத்தின் ஆரம்ப அரசியல் கலந்துரையாடல் நிகழ்வுகளின் முகப்புப் பாடலாக இந்த “கண்ணைக் கட்டிக் கொள்ளாதே” பல்லாண்டுகள் ஆட்சி செய்தது.

கேட்கும் போதே அந்தக் கட்சித் தொண்டனை உசுப்பி உள்ளிழுக்கும் தலைவனின் குரலாய் ஓங்கி ஒலிக்கும்.

இதெல்லாம் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த எழுச்சிப் பாட்டுகளையும் நினைப்பூட்டும்.

அது போலத்தான் TMS  தன் குரலில் ஒரு நெளிவைக் காட்டிக் குழைந்து கொடுக்கும் தொனியை “ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடலின் வழியே மனோ பிறப்பிப்பார். மனோவைப் பொறுத்தவரை அவரை வித்தியாசப்படுத்திய பாடல்களில் இதுவும் மிக முக்கியமாக மேடையில் கொண்டாடப்பட வேண்டியதொன்று.




பி.சுசீலாம்மாவுக்குப் பதிலாக அவரின் மருமகள் சந்தியாவை அழைத்து வந்து 

“பூ கொடியின் புன்னகை” அந்த பி.சுசீலாம்மாவின் ஏகாந்தம் மிதக்கும் பாடலில். இன்னொன்று “வெண்ணிலா வெண்ணிலா” (ஆஷா போஸ்லே) கூட அதே தொனிதான்.

“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்”

அந்த உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஶ்ரீ மென்குரல்கள் “எம்.ஜி.ஆருக்கு அரிதாகப் பாடிய ஏ.எம்.ராஜா பாட்டுகளை நினைப்பூட்டும். அந்தப் பாடலில் கையாண்ட வரிகளும் தமிழ்த் திரையிசையின் ஆரம்ப காலத்துத் சங்கத் தமிழைக் காட்டி நிற்கும்.

எல்.ஆர்.ஈஸ்வரி & சதன் கூட்டணியின் அந்த க்ளப் நடன ரேஞ்சில் இங்கே ஹரிணி & ராஜகோபால் “ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி” என்று கும்மாளம் போடுவார்கள்.

இருவர் படம் வந்தபோது அந்தப் படத்தை மெல்பர்னில் பார்த்தபோது பக்கத்தில் இருந்தவர் தன் மனைவிக்கு எம்.ஜி.ஆர் & கருணாநிதி காலத்தை நினைவுபடுத்தித் தொடர்புபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார் 😀 அவ்வளவுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிக வட்டத்துக்கு அப்போது பிடித்துப் போன படமிது.

“இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுக்காக எந்தப் பாடலையும் உருவாக்கவில்லை. உண்மையில் “இருவர்” படத்துக்கு என்று எந்தப் பாடலையும் உருவாக்கவில்லை. இந்தப் படத்தினுள் வரும் படங்களில் வரும் பாடல்களைத்தான் நாம் பார்த்தோம்.”

இப்படி மணிரத்னம் தன்னுடைய மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் (பரத்வாஜ் ரங்கன்) நூலில் குறிப்பிட்டிருக்கிறது.

இங்கே தான் ஏ.ஆர்.ரஹ்மானின் உழைப்பும், அவரின் வித்தியாச நோக்கையும் மெச்ச வேண்டும். 

இருவரில் பழையதைப் புதுமையாக்கிப் பழையது போல் காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பின்னாளில் தமிழில் அவருக்கு அப்படியொரு சூழல் வாய்க்கவில்லை அல்லது அவர் அந்த மாதிரியான சூழலை இதுபோல் கையாளவில்லை என்பேன்.

"இருவர்" பாடல்களைக் கேட்க

https://www.youtube.com/watch?v=Z0OIkvlrjuU

கானா பிரபா

படங்கள் நன்றி IMDB


Monday, March 4, 2024

Manjummel Boys ❤️❤️❤️ மஞ்ஞும்மெல் பாய்ஸ் ❤️❤️❤️

“கமலஹாசன் கையில் தான் 

இனி எல்லாம்”

என்று அந்தப் பயண ஓட்டத்தில் கூட்டாளிகளில் ஒருவன் சொல்ல, அந்த நண்பர் கூட்டம் ஆர்ப்பரிப்புடன் கொடைக்கானல் நோக்கிக் கிளம்பும்.

சற்று முன்னர் தான் பழனிமலை அடிவாரக் கடையில் வாங்கிய கமல் ஹிட்ஸ் mp3 ஐக் காரில் கேட்டுக் கொண்டே பயணிக்கிறார்கள்.

அப்படியே ஆபத்துக் குழியில் சிக்குகிறார்கள்.

மிக எளிமையான கதை, கதை என்பதை விட ஒரு நிகழ்வு. அதை எந்த வித மாய்மாலமும் இல்லாத, புத்திசாலித்தனமாகக் காட்டிக் கொள்ளாத காட்சியோட்டத்தோடு எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவில் கூட எந்தவிதமான தொழில் நுட்ப மிரட்டல் இல்லை. ஆனால் இரண்டரை மணி நேரப் படத்துக்குள் இறுகக் கட்டிப் போட்டு விடுகின்றது.

“கண்மணி அன்போடு 

காதலன் நான் எழுதும் கடிதமே”

பாடலை ஓவிய வரைகலையோடு ஆரம்ப எழுத்தோட்டத்தில் நகர்த்துவதிலாகட்டும், அப்படியே அந்தப் பாட்டின் இடையிசையை இன்னொரு வடிவத்தில் அதே வாத்தியக் கோப்பை ஒத்திசைவோடு கொடுப்பதிலாகட்டும் இயக்குநர் மட்டுமல்ல, இசையமைப்பாளர் 

சுஷின் ஷியாமும் ஆத்மார்த்தமாக உழைத்துள்ளார்.

எந்த வித பய உணர்ச்சியும் இல்லாத, தங்களுக்குள் அடித்துக் கொண்டும், கூடிக் குலாவிக் கொண்டும் இருக்கும் அந்த இளைஞர் கூட்டணியை அழகாக வரைந்திருக்கும் ஆரம்பக் காட்சிகளில் துள்ளிசை கூட அந்த நிறத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

எல்லோருமே “கண்மணி அன்போடு” பாடலை உச் கொட்டுகிறார்களே?

இன்னொரு விஷயம் கவனித்தீர்களா?

அந்தப் பழனி மலைச் சூழலில் மெல்ல மிதந்து போகும் “அண்ணாத்தே ஆடுறார் ஒத்துக்கோ” (அபூர்வ சகோதரர்கள்) பாடலின் வாத்திய ஒலிக்கீற்று பேரிகையோடு கடந்து போனதை?

இப்படி கமல் reference படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மானையும், கமல்ஹாசனையும் இன்னமும் தங்கள் ஆள் என்று தான் கேரளத்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதை நியாயமாகக் கெளரவம் செய்திருக்கிறார்கள்.

“சிறு பொன்மணி அசையும்” பாடலை வைத்து சுப்ரமணியபுரம் தொட்டு இருந்து ஏராளம் தமிழ்ப் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை hype பண்ண மட்டுமே கையாளப்பட்டிருக்கின்றன. 

ஆனால் இந்த “மஞ்ஞும்மெல் பாய்ஸ்”படத்தைப் பொறுத்தவரை “கண்மணி அன்போடு”

பாடலையும் சரி “குணா” படத்தையும் சரி ஒரு கருவியாகவே அல்லது குறியீடாகவே கையாண்டிருக்கிறார்கள்.

“குணா” என்ற கற்பனைக்கும் “மஞ்ஞும்மெல் பாய்ஸ்” என்ற நிஜத்துக்குமான ஒரு உறவாடல் எனலாம்.

பழனி மலையடியில் பாட்டு சீடி எடுக்கும் போது “விஜய் ஹிட்ஸ்” எடு என்று கூட்டாளி சொல்வது மலையாளிகளின் விஜய் மீதான சமீபகால ஈர்ப்பைக் கோடிட்டிருக்கும். தான் விஜய்யின் மீதான  தன் அபிமானத்தையும் இப்பட இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.

“மலைக்குளிருக்குக் கட்டிங் போட்டது போல கமல் பாட்டுகள் இருக்கும்” என்று  சொல்லிக் கொண்டே பாட்டைப் போடுவது,

“பாட்டைக் கேட்டு ரூட்டை மாத்தி”

“அபிராமி ஆள் எங்கே” என்று குணா குகைக்குள் குரல் கொடுப்பது என்று வசன அமைப்பில் அ நியாயத்துக்கும் எளிமை அதுவே ஈர்ப்பைக் கொடுக்கிறது.

“Devil's kitchen” என்று வெள்ளைக்காரனாலேயே மிரண்டு போய் வைத்த பூர்வீகப் பெயர்க் காரணத்தோடு, 900 அடி ஆழமிருக்கும், இதுவரை குழிக்குள் போன 13 பேர் போனது போனதுதான்”

என்று பிரச்சார நொடி அற்ற, அந்தக் குகையின் பயங்கர நிலவரத்தைப் பாத்திரங்களினூடு கடத்திய உத்தி சிறப்பு.

இயக்கு நரின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு, இந்தப் படைப்பின் முக்கிய பாத்திரங்கள் அல்லது கதை நகர்த்திகளுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களைப் போட்டது.

அந்த வகையில் நண்பனைக் காப்பாற்றும் சகபாடியாக ஷோபின் ஷகிர் (தயாரிப்பாளர்களில் ஒருவர்) (விசில் பறக்கிறது தியேட்டரில் அவர் தோன்றும் முதற்காட்சியில்),  குழிக்கும் விழும் நண்பனாக ஶ்ரீநாத் பாஸி இருவருமே  தமிழ் உலகத்திலும் OTT புண்ணியத்தில் பரிச்சயமானவர்கள். 

அது போல் படமே 90 வீதம் தமிழ்ப்படம் பார்க்கின்ற உணர்வில் இருக்கும் போது தமிழ் நடிகர்கள் ஜோர்ஜ் மரியான், கதிரேசன் மற்றும் ராம்ஸ் ஆகிய தமிழின் முக்கிய நடிகர்கள் வலுச் சேர்க்கிறார்கள்.

ராம்ஸ் ஐ இன்னும் முழு அளவில் தமிழ் சினிமா பாவிக்கவில்லை என்ற ஆதங்கத்தை இந்தப் பதிவில்

https://www.facebook.com/photo.php?fbid=10204585223775901&set=a.10200950943041154&type=3

 நான் எழுதிய போது நண்பர் ஹரி Hari HK S தொலைபேசியில் ராம்ஸ் உடன் பேச வைத்தார் அப்போது.

தனக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லையே என்று என்னிடம் ஆதங்கத்தோடு ராம்ஸ் பேசியிருந்தார்.

அந்த நிலை இன்றும் தொடர்வது அந்தக் கலைஞனுக்கு நிகழும் பேரவலம் 

ஒரு காலத்தில் மலையாளப் படம் என்றால் இரண்டே இரண்டு காட்சி அதுவும் ஒரேயொரு தியேட்டரில் என்ற நிலை மாறி சிட்னியின் பெரும்பான்மை திரையரங்கில் தினமும் மூன்று காட்சி, அதுவும் நான் பார்த்த காட்சியில் 2 டிக்கெட் தான் நான் பதிவு பண்ணும் போது எஞ்சி இருந்தது.

படம் முடிந்ததும் கை தட்டிக் கொண்டாடினார்கள்.

மஞ்ஞும்மெல் பாய்ஸ்

குறித்து இரண்டு ஆதங்கங்கள் உள்ளன. 

ஒன்று

படத்தின் முடிவில் மீண்டும் இயக்குநர் விபரம் வந்த பின்னர் தான் 2006 இல் நிகழ்ந்த ஒரு உண்மைக்கதை படமாக்கப்பட்ட செய்தியே நிழற்படங்களோடு காட்டப்படுகிறது.

முன்னர் படம் பார்த்தவர்களே இந்தப் படத்தின் மெய்த்தன்மையைத் தவற விட்டு விட்டார்கள். அதிலும் குறிப்பாக நண்பனுக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து விருது பெற்ற சைஜு டேவிட் குறித்த தகவலும்.



இரண்டு

குழியில் இருந்து நண்பன் காப்பாற்றப்பட்டு மேலெழும் தருணத்தில்

“கண்மணி அன்போடு” பாட்டு திடுதிப்பென்று பாய்வது அந்த உணர்வோட்டத்தைச் சிதைப்பது போலவும் படுகிறது.

என் அபிப்பிராயத்தில் இதையே வேறு விதமாகக் காண்பித்திருக்கலாம்.

அதாவது அந்த குணா குகையில் இருந்து வெளியேறும் சூழலில் 

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்று கத்தி விட்டு கமல் மலையில் இருந்து விழும் போது எழும் அசரீரியைக் கொடுத்திருக்கலாம்.

பின்னணி இசையோடு அதைக் கொடுக்கிறேன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனிதக் காதல்

அல்ல……..

http://www.radio.kanapraba.com/Guna/guna17.mp3

அது போல எல்லோரும் கேரளம் திரும்பும் போது “கண்மணி அன்போடு” பாடலை ஒலிக்க விட்டிருக்கலாம்.

குணா படமும், பாடலும் காட்சி  உத்திக்கு மெருகூட்டி,  பார்வையாளர் ஈர்ப்புக்குக் கைகொடுத்தாலும், தெரிந்த முடிவோடு பயணிக்கும் ஓட்டத்தைச் சுவாரஸ்ய சித்திரமாக்கியதில் படக் குழுவின் பங்கு அபாரம். ஆகவே குணாவை மட்டும் முன்னுறுத்த முடியாது.

ஆக மொத்தத்தில் இயக்குநர் சிதம்பரம் குழுவினரை சபாஷ் போட்டுக் கொண்டாடலாம்.

கானா பிரபா

04.03.2024



Saturday, March 2, 2024

வித்யாசாகரம் ❤️❤️❤️


அடி தோழி..அடி...தோழி

அடை காக்கும் சிறு கோழி

மயில்முட்டை வாங்கி உனது

கூட்டில் வச்சேனே...

அடை காக்கும் முட்டைக்குள்ள

உசுர வச்சேனே....

https://www.youtube.com/watch?v=kvR4aXh315o

கல்யாணியின் குரல் நம் காதுகளை எட்டும் போது ஒரு இரட்டைப் பின்னல் கொண்ட பெண் குமரி ஆகிவிடும் மனசு.

வித்யாசாகரைக் கொண்டாட ஏராளம் கூறுகள் இருந்தாலும், அவர் தன் பாடல்களில் கையாண்ட பாடகர்களை, அதுவும் குறிப்பாக அதிகம் அறியப்படாதவர்களை, அல்லது அறியப்பட்டவர்களை விதவிதமாகக் காட்டிய வகையிலும் தனித்து நோக்க வேண்டிய ஒரு இசை ஆளுமை.

“தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானாஹ்ஹ்ஹ்"

அப்படியே கிண்ணென்று பிரதிபலிக்கும் மணிக்குரலாக புஷ்பவனம் குப்புசாமியைக் கொண்டு வந்து ஒரு மேற்கத்தேய இசைச்சாயம் கொண்ட குத்துப் பாடலுக்குப் போடுவார் பாருங்கள்.

ஆஹா சுல்த்தானே சுல்த்தானே என்று ஸ்வர்ணலதா போல ஆர்ப்பரிக்கும் மனசு. இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அப்படியே ஒருமுறை புஷ்பவனத்தார் தொடங்கும் சுல்த்தான்ஹாஆஆஆ வைக் கேட்டுவிட்டு வாருங்கள், கிறங்க வைக்கும்.

https://www.youtube.com/watch?v=0hxz-JMsu0I

இவரைப் போலவே ஒரு சாஸ்திரியப் பாடகரை வைத்து “கண்ணுக்குள்ள கெழுத்தி” ரேஞ்சில் எவ்வளவு கொடுத்திருப்பார் மணிக்க விநாயகம் அவர்களுக்கு. இதெல்லாம் வித்யாசாகரின் உள்ளே இருக்கும் வித்தியாச பார்வையின் வெளிப்பாடு.

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும்

மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

https://www.youtube.com/watch?v=7Q_jK5mf9oc

பாடகி ஶ்ரீவர்த்தனிக்கு இன்று வரை அடையாளமாகத் திகழும் இந்த “கண்ணாலே மிய்யா மிய்யா” . 

“பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும்

கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ”

கூடப்பாடிய உன்னிமேனன் என்ன குறைச்சலா? அவர் எத்தனை ஆயிரம் பாடியிருந்தாலும் இந்த மாதிரிப் பாடல் எல்லாம் அவருக்குப் புதுமையானது. கானாபிரபா

ஹரிஹரன் என்ற இசை அசுரனின் அலைவரிசைக்குச் சற்றே கீழே இருக்கும் “குரல்வாகு” ஆனாலென்ன 

“பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்

பருவநாளில் முதலாய் இருந்தேன்

பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்

ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்”

https://www.youtube.com/watch?v=jro0C5Idg0U

அப்படியே அசரடித்து விடுவார் சந்தனபாலா “ஒரே மனம்....ஒரே குணம்" தொடங்கும் கணத்திலும் ஒரு ஏக்கம் தொனிக்கும் அங்கே.

மது பாலகிருஷ்ணனை அதிகம் அற்புதமாகக் கையாண்ட இசையமைப்பாளர், அல்லது மதுபாலகிருஷ்ணனின் பாடல்களில் அதிகம் அற்புதம் வாய்ந்தவை என்று கேட்டால் நோகாமல் கை நீட்டி விடலாம் வித்யாசாகர் இருக்கையை நோக்கி,

“நான்.....தேடுகின்ற யாவும் உன்னிடம்”

என்று ஒரு இழுப்பு இழுப்பாரே……..

ஆகா மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்

“அற்றைத் திங்கள் வானிடம்...”

https://www.youtube.com/watch?v=e8UR4e_phMM

கேட்கையில்.

அங்கே அடக்கி வாசிப்பவர் தான், 

“கனாக் கண்டேனடி தோழி......”

https://www.youtube.com/watch?v=ZCm3FwF0has

என்று துள்ளிசைப்பார்.

சிவப்பதிகாரம் போல வித்யாசாகர் & மதுபாலகிருஷ்ணன் கூட்டைப் பற்றிப் பேச்செடுத்தால் அதை எழுதவே தனி அதிகாரம் தேவை.

பாடகி சுஜாதாவை மிக அழகாக ஒவ்வொரு பாடல்களிலும் வித்யாசாகர் கையாண்ட விதத்தையும் அவ்விதம் எழுதலாம். குறிப்பாக அவரின் பலவீனம் உச்ச ஸ்தாயியை உணர்ந்து ஒரு மத்திம அலைவரிசையிலேயே வித்யாசாகர் பாடல்கள் வைத்திருந்து சுஜாதாவுக்குப் பெருமை சேர்க்கும்.

இதை எழுதும் போதே “அழகூரில் பூத்தவளே” என்ற ஏக்கப் பெருமூச்சோடு எஸ்பிபி வந்து நிற்கிறார். 

“மெளனமே பார்வையாய் 

பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணமாய்

பூசிக் கொண்டோம்....” 

https://www.youtube.com/watch?v=jalDrNf2HdQ

இவ்வளவு அற்புதமாக வந்த பாடலைப் பயன்படுத்தாது விட எப்படிய்யா உங்களுக்கு மனசு வந்தது? என்று எஸ்பிபி நொந்து சொன்ன அந்த “அன்பே சிவம்” பாட்டில் கூட 

“புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்....” 

கூட்டிசைக்கும் சந்தரயி உடைய நாசிக்குரல் இசைக்கருவிகளில் ஒன்று போலப் பேதமில்லாமல் இருக்கும்.

வித்யாசாகர் தான் முழுமையான இசையமைப்பாளராகப் பிறப்பெடுத்த “பூமனம்” படத்திலேயே அந்தக் காலத்து மெல்லிசைக் குரல் P.B.ஶ்ரீநிவாஸ் அவர்களை வைத்து

“சில நேரம் ஏதோ நடக்கும்” 

https://www.youtube.com/watch?v=siGifvcUFgA

பாடலைக் கொடுத்துப் புதுமை படைத்தவர்.

பாபநாசம் சிவன் அவர்களது “என்ன தவம் செய்தனை யசோதா” கீர்த்தனையை ஜலபதி சுப்ரமணியம் அவர்களை வைத்து மாதங்கள் ஏழு படத்தில் இப்படிக் கொடுத்தவர்

https://www.youtube.com/watch?v=dLg4VgfBEOA

அப்படியே அதைத் தூக்கிக் கொண்டு போய் பார்த்திபன் கனவு படத்தில் ஹரிணிக்குக் கொடுத்திருப்பார் இப்படி

https://www.youtube.com/watch?v=82wUgYO-PYI

இதே போலத்தான் பூமனம் படத்தில் கையாண்ட 

என் அன்பே

https://www.youtube.com/watch?v=4QEAtji8N-4

பாடலை மறுசுழற்சியில் பக் பக் பக் மாடப்புறா ஆகினார் பார்த்திபன் கனவில். இந்த என் அன்பே பாடலில் ஜொலிக்கும் தினேஷ் குரல் உன்னிமேனனை ஞாபகமூட்டும்.

கர்நாடக சங்கீதப் பாடகிகள் திரையுலகில் கோலோச்சிப் புகழ் பூத்து விளங்குவது என்னமோ காலத்தும் நிற்கும் விஷயம் என்றாலும் சுதா ரகுநாதன் என்னுமொரு ஒரு சாஸ்திரிய சங்கீதக் குரலை அழுத்தமான காட்சிச்சூழலுக்குக் கொடுப்பாரே

இப்படி

கண்ணா...... கண்ணா......கண்ணா....

https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE

பல நாட்கள் இந்தப் பாடலில் நான் கட்டுண்டு கிடந்தேன். கானாபிரபா

“யமுனை ஆற்றிலே” என்று தளபதிக்காக ஒரு சில அடிகளோடு நிறுத்திக் கொண்ட மித்தாலிக்கு மீள் வரவாக வித்யாசாகர் கொடுத்தது, ஹரிஹரனை இணைத்து “உச்சிமுதல் பாதம் வரை”

https://www.youtube.com/watch?v=ZnW4t0KDE70

உமா ரமணனுக்கு அத்திப்பூவாய் ஒரு சில பாடல்கள் வித்யாசாகர் கூட்டில் அமைந்தாலும் “பூத்திருக்கும் வனமே” 

https://www.youtube.com/watch?v=wNNwhHrKflE

ஒரு தங்கப்”புதையல்”என்றால் 

ஹரிஷ் ராகவேந்திராவின் ஆரம்ப காலத் திறப்புப் பாடல் “வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி” 

https://www.youtube.com/watch?v=Zyd1k2vEcwc

இரண்டு பேரும் கூட்டாய் பண்ணிய அற்புதச் சுரங்கம். இரண்டு பாடல்களின் இசைக் கோப்புக் கூட ஒரே தொட்டிலில் வளர்ந்த குழந்தைகள் போல.

ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் அளவுப் பிரமாணங்களை அகலத் திறந்து விட்ட முதல் பாடலாக “வா சகி” ஐத் தான் அழைத்து வருவேன். “சிறகே இல்லாத” (தாலி புதுசு) முன்வரவாக அமைந்தாலும் கூட.

“கண்ணாளனே கண்ணாளனே

உன் கண்ணிலே

என்னை கண்டேன்

கண் மூடினாள் கண் மூடினாள்

அந்நேரமும் உன்னை கண்டேன்....”

நூறாண்டுக்கொருமுறை பூக்கின்ற பூவல்லவா”

https://www.youtube.com/watch?v=vvLsy7C3zew

கோபால் சர்மாவையும், தேவி நேத்தியாரையும்  இன்னமும் இலங்கையின் பண்பலை வானொலிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இந்தப் பாடல் வழியாக.

மழை நின்ற பின்பும் தூறல் போல 

உனை மறந்த பின்பும் காதல்.....

அலை கடந்த பின்பும் ஈரம் போல 

உனை பிரிந்த பின்பும் காதல்....

https://www.youtube.com/watch?v=_2H6b1exlLM

இந்தப் பதிவைத் தொடக்கி வைத்த கல்யாணியே நிறைத்து வைக்குமாற்போல நினைப்பூட்டுகிறார் வித்யாசாகரத்தின் இன்னொரு முத்தாய்ப்புப் பாடலாக. இதைக் கேட்கப் போய் இதையும் கேட்டு விட்டு வந்தேன்

https://www.youtube.com/watch?v=SsNm1RzNf0E

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே.....

அதுதான் வித்யாசாகரம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

✍🏻 கானா பிரபா

      02.03.2024


Wednesday, February 21, 2024

இலங்கை இந்திய வானொலிகளில் கோலோச்சிய குரலோன் பினாகா கீத்மாலா" புகழ் அமீன் சயானி விடை பெற்றார்


றேடியோ சிலோன் காலத்து வானொலி உலகின் பொற்கால நாயகர்களில் ஒருவர் அமீன் சயானி தனது 91 வது வயதில் பெப்ரவரி 20 ஆம் திகதி விடைபெற்றிருக்கிறார்.

1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் "விவித் பாரதி" வர்த்தக ஒலிபரப்பிலும் இந்த பினாகா கீத்மாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பெரும் புகழோடு விளங்கியவர்.

வாராந்தம் தலை சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் அணிவகுப்பாக அமைந்த அந்த நிகழ்ச்சியைத் தமிழில் இசை அணித்தேர்வு என்று இலங்கை வானொலியும் அமைத்திருந்தது.பினாகா கீத்மாலாவுக்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். 






வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,

தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"சகோதர சகோதரிகளே!" என்று விளித்துத் தன் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் அமீர் சஹானி 54,000 க்கும் மேற்பட்ட வானொலிப் படைப்புகள் செய்த அசுர சாதனையாளர். 

கானா பிரபா

21.02.2024

Tuesday, February 20, 2024

சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு கண்ணுக்குள்ள என்ன கண்ணு….


நிலை தளர்ந்து அப்படியே உடைந்து சரியும் நிலையை அப்படியே மனக்கண் முன்னே கொண்டு வர முடியுமானால் அந்த உணர்வைப் பிரதிபலிக்கக் கூடிய அரிய பாட்டு இது.

மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி & வாணி ஜெயராம் என்று மூன்று குரல்களின் சோகப் பிரதிபலிப்பு ஒரே அலைவரிசையில் இருக்கும்.

அதெப்படி மூன்றுமே ஒன்றாகி ஒரே உணர்வைக் கொடுக்கிறது என்ற ஆச்சரியம் மேலிடும்.

பாடல் வரிகளை மறந்து “சின்னப்பொண்ணு” “சின்னப்பொண்ணு”  என்று அந்த மெட்டில் உட்காரும்படி பாடிப் பார்த்தால் கூடப் பொருந்திப் போகும் நெளிவு சுழிவு இருக்கும்.

விழுந்து கிடக்கும் பிரபுவை எழுப்ப எஸ்.ஜானகியின்  ஆலாபனை காதலிக்குப் (பல்லவி) போய்ச் சேர, அதை முந்திக் கொண்டு கட்டிய மனைவி (ராசி) ஓடி வரும் போது தோதாக வாணி ஜெயராமின் ஆலாபனை வரும் பாருங்கள். இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ஒருமுறை பாருங்கள் இந்த இசைக்குக் காட்சி கொடுத்த மரியாதை புரியும்.

எத்தனையோ பிறப்பில் வாழ்ந்து கழித்து விட்டோம் இப்பிறப்பில் ஏனிந்தப் பிரிவினை என்று நொந்து கொள்ளும் காதலி, 

கொண்டவன் வேதனையைக் கண்டு மருகும் மனைவி,

இருவருக்கும் நடுவில் மலேசியா வாசுதேவனின் தளர் நடையில் எழும் சோக ராகமாய் அமைந்திருக்கும்.

அதில் சுயபச்சாதாபம் இல்லாதிருக்கும்.

கங்கை அமரனின் பாடல் வரிகள் இந்தச் சூழலுக்கு நியாயம் செய்திருக்க, அண்ணனின் இசை மெல்லிய நீரோடை போலப் பின்னணியில் ஓடும். சிவாஜி புரடெக்ஸன்ஸ் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த முதல் படம் அறுவடை நாள் தொடர்ந்த ஆனந்த் ஆகிய இரு படங்களுக்கும் கங்கை அமரன் தான் முழுப் பாடல்களும்.

மலேசியா வாசுதேவனைக் கொண்டாடும் போது இம்மாதிரியான பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிக்க வேண்டும். அவர் உயிர்ப்புடன் இருப்பார்.

சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு….

https://youtu.be/dNcsEuZQyqw?si=CHXRvg5iOaH7Tiw0

மலேசியா வாசுதேவன் நினைவில் 

(20 பெப்ரவரி 2011)

கானா பிரபா


Wednesday, February 7, 2024

இசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த் விடை பெற்றார் 🙏



“வா வா என் இதயமே...

என் ஆகாயமே...

உன்னை நாளும் பிரியுமோ 

இப் பூமேகமே....


https://youtu.be/sW_stgFQ4SY


பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பாடலின் உணர்வுக்குள் ஐக்கியமாகி, இந்த அற்புதமான இசையமைப்பைக் கொண்டாடவும் செய்யும் மனது. 


“தேவ லோக பாரிஜாதம்

மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்.....”

என்ற கணங்களில் உதாராக, விரக்தியின் வெளிப்பாட்டோடு தன் ஸ்டைலான வார்த்தைப் பிரயோகத்தைக் காட்டும் ரஜினி தான் ஞாபகத்துக்கு வரும் அளவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நியாயம் செய்திருப்பார்.

“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் 

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் நியாபகம் 

உறங்காமல் இருக்கின்றது


இந்தப் பாடல் எண்பதுகளின் இளசுகளின் காதல் தேசிய கீதம் என்றால், இதன் சோக வடிவில் எஸ்.பி.பி காட்டும் நளினங்களையும் ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தையும், “நான் யாருக்கும் அடிமை இல்ல” என்ற அந்தத் தெனாவெட்டையும் பிரதி பண்ணி நடித்த வாண்டுகளில் நானும் அடக்கம். 


யப்பா என்னமா இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்று உச் கொட்டி 

“நான் அடிமை இல்லை” படப் பாடல்களை

ரசித்துக் கேட்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

அதுவும் “வா வா இதயமே” பாடலைக் கேட்கும் போதெல்லாம் “என்னதான் சுகமோ நெஞ்சிலே” (மாப்பிள்ளை) பாடலுக்குள் என்னை இழுத்துப் போய் விடும்.


ஜூட் மேத்யூ என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் விஜய் ஆனந்த் அல்லது விஜயானந்த் என்று சொன்னால் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்கள் சட்டென்று இனம் கண்டு கொள்வார்கள்.


‪இளையராஜா, கங்கை அமரன், ஹம்சலேகா போலவே சினிமாவுக்காகப் பெயர் மாற்றியவர் இவர்.‬


இசைஞானி இளையராஜாவின் தனி ராஜ்ஜியமாக எண்பதுகள் திகழ்ந்து கொண்டிருக்க ஆங்காங்கே உள்ளிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் இசையமைப்பாளர்கள் பலர் வந்து உரசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களின் தாராள மனசு, என்ன நல்ல பாட்டாக இருந்தாலும் அது யார் கொடுத்தாலும் அது இளையராஜா போட்டதாகவே கண்ணை மூடிக் கொண்டு வரவில் வைத்து விடுவார்கள்.





மெல்லிசை மன்னர் காலத்தில் ஜி.கே.வெங்கடேஷ், ராஜன் நாகேந்திரா, விஜய பாஸ்கர் போல ராஜா காலத்தில் விஜயானந்த், மற்றும் ஹம்சலேகா ஆகிய கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.


அப்படி வந்தவர் தான் விஜய் ஆனந்த். ஆனால் இவரைச் சில படங்களில் விஜய் ஆனந்த் என்றும் வேறு படங்களில் விஜயனந்த் என்றும் போட்டுக் குழப்பி விட்டார்கள்.


இந்த விஜயானந்த் ஐப் பரவலாக அறிமுகப்படுத்தியது “நான் அடிமை இல்லை”.

ஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த 

Nee Bareda Kadambari

படத்தை இயக்கிய துவாரகீஷ் அப்படியே கதையோடு அதே படத்தின் இசையமைப்பாளர் விஜயானந்தையும், ரஜினியின் கால்ஜீட்டையிம் வைத்து இந்தப் படத்தை இயக்கினார்.

ஏற்கனவே கன்னடத்தில் கொடுத்த பாட்டு

“ஒரு ஜீவன் தான்” பாடலின் மூலம் “நீ மீட்டிடா” (சந்தோஷம்) 


https://youtu.be/XdrL41v2hms?si=cLn0LalQWxEwUqcm


சோகம்


https://youtu.be/fHTr_wY-s8Q?si=LoqydbsRUoiP_qpL


 என்று தமிழுக்கும் வருகிறது. அத்தோடு புதிதாகவும் “வா வா இதயமே” பாடலோடு இன்னொரு அற்புதமான பாடலான

தேவி தேவி 


https://youtu.be/uHNR2d--vAE


பாடலையும் கொடுத்தார் விஜயானந்த்.


போனாப் போகுது புடவை பறக்குது என்ற சில்மிஷப் பாடலும் ரசிக்க வைக்கும்.


“நான் அடிமை இல்லை” பாடல்களைக் கேட்க


https://youtu.be/aLYD-SFxNN4


பெரும்பாலும் விசு இயக்கிய படங்களில் இசை என்பது கோதாவரி கோட்டைக் கிழிடி என்று ஒட்டாமல் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கும். 

ஆனானப்பட்ட இளையராஜாவோடு இணைந்த கெட்டி மேளம் படப் பாடல்களே பெட்டிக்குள் போனவை.

ஆனால் அதிசயமாக விசு பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார். அதில் இந்த விஜய் ஆனந்தும் ஒருவர் என்பது இன்ப ஆச்சரியம். குறிப்பாக ஊருக்கு உபதேசம், வாய்ச் சொல்லில் வீரனடி,

நாணயம் இல்லாத நாணயம், காவலன் அவன் கோவலன் ஆகிய படங்களுக்கு விஜய் ஆனந்த் தான் இசை. அதிலும் நாணயம் இல்லாத நாணயம் படத்தில் 

அழகே நீ பிறந்து இவளிடம் தானோ


https://youtu.be/DRNGfHcmafo


என்ற அட்டகாசமான பாடலையும் கொடுத்திருக்கிறார். விசு கொஞ்சம் விரசத்தை அதிகப்படியாகப் போட்டு எடுத்த

காவலன் அவன் கோவலன் படத்தில் வரும்

சிட்டான் சிட்டான் குருவி 


https://youtu.be/cfN3IyOztqM


அற்புதமான பாட்டு. இந்தப் பாட்டு விஜய் ஆனந்தின் சாகித்தியத்தைப் பறை சாற்றும் இன்னொரு இனிய மெட்டு.


அந்தக் காலத்தில் விஜிபி போன்ற நிறுவனங்கள் தான் புத்தம் புதுப் படங்களின் வீடியோப் பிரதிகளை வெளியிடும். அப்போது 

ஒரு படத்தின் பின்னால் வரப் போகும் புதுப் படங்களின் முன்னோட்டத்தில் 

“வெற்றி” என்ற சொல் வந்து இன்னொரு “வெற்றி” என்ற சொல் கீழே போட்டு இரண்டுக்கும் இடையில் “மேல்” என்ற சொல்லோடு அறிமுகமான “வெற்றி மேல் வெற்றி” பெரியதொரு எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பிரபு, சீதா நடித்த அந்தப் 

படத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு வழியான உருவாக்கத்திலும் புதுமையாக இருந்தாலும் படம் எடுபடவில்லை. அந்தப் படத்திலும் விஜய் ஆனந்த் தான் இசை. அதில் வரும் ஜேசுதாஸ் பாடிய கண்ணான கண்மணியே

https://youtu.be/wIMGDc3bEgc


அதிகம் விரும்பிக் கேட்கும் சோக கீதமானது.


எண்பதுகளில் கை கொள்ளும் அளவு தமிழ்ப் படங்கள் இசைத்தாலும் மறக்க முடியாத “நான் அடிமை இல்லை” பாடல்களால் காலத்துக்கும் நினைப்பில் இருப்பார் விஜயானந்த் என்ற விஜய் ஆனந்த்.


கானா பிரபா

07.02.2024

Friday, February 2, 2024

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ ❤️🙏

“திருவாசகத்துக்கு உருகாதார் 

ஒரு வாசகத்துக்கும் உருகார்"

என்னும் வாக்குக்கேற்ப, மணிவாசகர் தில்லையிலே “திருக்கோத்தும்பி” ஐ அருளிச் செய்தார்.

“பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த

நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்

சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ”

https://www.youtube.com/watch?v=-P2pdcmNRTY

அரச வண்டே! 

பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய 

திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. 

(பொருள் விளக்கம் நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)

என்ற பொருட்படும் அந்தப் பாடலோடு தொடரும் “திருகோத்தும்பி”

ஐத் தன் திருவாசக இசைப் பாடல்களில் பயன்படுத்திய போது தன் மகள் பவதாரிணியை இணைத்துப் பாடவைத்திருக்கிறார்.



இசைஞானி இளையராஜாவின் பக்தி இசை இலக்கியங்களான “அம்மா பாமாலை”, ரமண மாலை (ஆராவமுதே) ஆகியவற்றில் தன் செல்வமகள் பவதாரிணிக்கும் பாடல்களைப் பகிர்ந்தளித்து வழங்கியவர் தன் ஆன்மிக இசைப் பயணத்தில் கூடவே வைத்திருந்தார்.

முறையே தன் திருவாசக இசைப் பணியில் சரியாக இருபது வருடங்களுக்கு முன், சிவனோடு ஐக்கியம் கொள்ள வைக்கும் பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாட வைத்தன் பொருளை பவதாரிணியின் இன்மையோடு பொருத்திப் பார்த்து உணர்வு வசப்பட்ட நிலையில் இருக்கின்றேன்.

“தாயான இறைவன்” எனும் ஈசன் திருவடிகே அழைத்துப் போகும் அந்தப் பாடல் பவதாரிணியின் ஆன்ம ஈடத்துக்குப் போய்ச் சேரட்டும். 

(அறிவுச் சமூகம் - இசை ஆய்வு நடுவகம் ஒருங்கிணைப்பில் தமிழிசைத் தென்றல் பவதாரிணி நினைவேந்தலில் நான் பகிர்ந்த அஞ்சலிப் பகிர்வின் ஒரு பகுதி இது)

கானா பிரபா

02.02.2024

பவதாரிணி ஒளிப்படம் நன்றி : மு.உதயா

Friday, January 26, 2024

ராஜா மகள் பவதாரிணி ❤️ ஒளியிலே தெரிவது நீ இல்லையா....?

“பல்லாக்கு வந்திருக்கு

 ராணி மகராணிக்கு

 நில்லாம சுத்தும் கண்ணு

 தேடுதவ சோடிக்கு”

https://www.youtube.com/watch?v=wH4pDX05nck

என் வானொலிக் காலத்தின் ஆரம்ப நாட்களில் பெண் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக அர்ப்பணிக்கும் போது, மானசீகமாக இளையராஜா தன் மகளைப் பல்லக்கில் சுமக்க வைத்த பாட்டு என்று எண்ணுவேன்.

இசைஞானி இளையராஜா தன் மனைவியைப் பிரிந்த போது நட்பு வட்டத்தில் நம் குடும்பத்தில் எழுந்த இழப்பாக நாம் பரிதவித்த அதே உணர்வை இன்றைய விடிகாலை பவதாரிணியின் இழப்பை எதிர்கொண்ட போது உள் வாங்கினேன்.

“பாடகக் குரல்களில் பவதாரிணியின் குரல் தனித்துவமானது" என்று இளையராஜா பொது மேடையில் சொன்ன போது, தந்தையின் நேசமோ என்று எண்ணுபவர்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் சிற்பி வெற்றியின் உச்சாணிக் கொம்பில் இருந்த போது, பவதாரிணியின் குரலைச் சிலாகித்துப் பேட்டி கொடுத்ததை ஞாபகத்தில் எழுப்ப வேண்டும்.

பவதாரிணி குழந்தைப் பாடகியாகத் தன் எட்டாவது வயதில் குழந்தைப் பாடகியாகத் தன் தந்தை இளையராஜா இசையிலேயே அறிமுகமானது, இந்தியாவின் முதல் 3D திரைப்படமான “மை டியர் குட்டிச் சாத்தான்” படத்துக்காக, “தித்தித்தே தாளம்” என்ற மலையாளப் பாடலின் வழியே.“குயிலே குயிலே குயிலக்கா” 

https://www.youtube.com/watch?v=NOvNMnpJ-9U

பாடலை சித்ராவோடு “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்துக்காக குழந்தைப் பாடகியாகத் தந்தை இளையராஜா இசையில் பாடிய வகையில் நூறைத் தொடும் திரையிசைப் பாடல்களைத் தன் தந்தை இசையில் பாடியிருக்கிறார்.

தவிர “அம்மா பாமாலை” போன்ற தனி இசை வெளியீடுகளிலும் தன் மகளின் குரலை இசைக்க வைத்திருக்கிறார்.

"பவதாரிணியோடு, வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா இவர்களை இணைத்து, சித்ராவோடு  பாடவைத்தேன்" என்று பவதாரிணியின் சித்தப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பாடல் “கோயில் மணியோசை” படத்துக்காக அமைந்த 

“ஓடப்பட்டி பிச்சமுத்து”

https://www.youtube.com/watch?v=UHU4WOAghTw

இளையராஜா, கங்கை அமரன் தவிர்ந்து, தன் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஆகியோர் இசையிலும் பாடியவர் சிற்பியின் இசையில் “ஆல்ப்ஸ் மலைக்காற்று” வழி புகழ் சேர்த்தவர்.

தன் அண்ணன் கார்த்திக் ராஜாவின் முதல் படத்தில் “நதியோரம்” (அலெக்சாண்டர்) பாடலில் உன்னிகிருஷ்ணனோடு ஜோடி சேர்ந்து பாடியவர், இந்த ஜோடிக் குரல்கள் அதிகம் ஹிட் கொடுத்திருக்கின்றன என்று சொல்ல வைத்தன. 

யுவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் தோள் கொடுத்தவர் பவதாரணி. யுவன் முதலில் இசையமைத்த “ஆல் த பெஸ்ட்” (அரவிந்தன்),  “நீ இல்லை என்றால்” (தீனா), “மெர்க்குரிப் பூவே” (புதிய கீதை” என்று அது நீளும்.

பெண்களை முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்களாக வைத்து நடிகை ரேவதி இயக்கிப் பெரும் புகழைப் பெற்ற மித்ர் மை ப்ரெண்ட் (2002) படத்தின் மூலம் இசையமைப்பாளரான பவதாரிணி கடந்த 22 ஆண்டுகளில் , “இலக்கணம்”, “அமிர்தம்” தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடத்தில் பத்துப் படங்களை இசையமைத்திருக்கிறார்.

பாவலர் வரதராஜன் சகோதர்கள், அவர்களின் வாரிசுகளில் ஒரே பெண் வாரிசு இசையமைப்பாளராகத் தனித்துவம் படைத்தார்.

“மங்காத்தா” படத்தின் இசையுருவாக்கத்தில் யுவன், பிரேம்ஜி மட்டுமல்ல, கூட்டு முயற்சியில் பவதாவும் கூட உதவினார் என்று வெங்கட் பிரபு கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.

“அஞ்சலி” படத்தின் குழந்தைப் பாடல்கள், அப்படியே தென்றல் சுடும் படத்தில் ஜானகியோடு ‘தூரி தூரி” என்று தொடர்ந்த பவதாரிணியின் பாட்டுப் பயணத்தில் “பாரதி” தேசிய விருதை வாங்கிக் கொடுத்தார்

“மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக. இதை எழுதும் போதே

“வண்டியில வண்ண மயில் நீயும் போனா

சக்கரமா என் மனசு சுத்துதடி”

என்று காதுக்குள் ரீங்காரமிடுகிறார் பவதாரிணி.

இளையராஜாவின் இசையில் பவதாரிணியின் அடுத்த பயணம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அமைந்த போது

“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப்பஞ்சாயத்து), மஸ்தானா மஸ்தானா (ராசையா), உன்னை விட மாட்டேன் (இரட்டை ரோஜா), என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே” (ராமன் அப்துல்லா), “பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா? “, “அக்கா நீ சிரிச்சாப் போதும்” (கிழக்கும் மேற்கும்), “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), “இளவேனிற்காலப் பஞ்சமி” (மனம் விரும்புதே உன்னை), “காயத்ரி கேட்கும்” (காக்கைச் சிறகினிலே), “தவிக்கிறேன்” (டைம்), “ஓ பேபி பேபி” (காதலுக்கு மரியாதை), தென்றல் வரும் வழியை” (ப்ரெண்ட்ஸ்), “மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்” (கரிசக்காட்டுப் பூவே), “ஏதோ உன்னை நினைச்சிருந்தேன்” (சொல்ல மறந்த கதை), “ஆலாபனை செய்யும்” (பொன் மேகலை), “காற்றில் வரும் கீதமே” (ஒரு நாள் ஒரு கனவு), “கண்ணனுக்கு என்ன வேண்டும்” (செந்தூரம்) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்கள் அடங்கும்.

“இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” பாடல் ஒரு தசாப்தம் பல லட்சம் தமிழர் வீட்டுப் பிறந்த நாள் பாட்டுக் குரலாகவே ஆகிப் போனார். 

“ஒளியிலே தெரிவது தேவதையா” அழகியின் அடையாளக் குரலாக இன்று வரை பவதா தெரிகிறார்.

ஆத்மாத்தமாக பவதாரிணியின் குரல்களில் 

“உன் காதலன்” (நானும் ஒரு இந்தியன்/தேசியப் பறவை)

https://www.youtube.com/watch?v=OBT2WFCpalQ

மற்றும் 

“ஆலமரம் மேல வரும்” (செந்தூரம்)

https://www.youtube.com/watch?v=ZHSPM7EiQpg

ஆகிய பாடல்களைத் தேடி ரசிப்பேன்.

“அலை மீது விளையாடும் இளம் தென்றலே”

https://www.youtube.com/watch?v=zxwJMG1OKz8

ஒரு சின்னப் பாட்டுக்குள் பேரலையாய் நம்மை ஆக்கிரமிப்பார் பவதாரிணி.

“கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி”

https://www.youtube.com/watch?v=fYzDNepWXLI

இந்தப் பாடலை இப்போது நினைத்துப் பார்த்தால் மனதை ஏதோ செய்கிறது.

“பவதா!” என்று ராஜா தன் மகளை அழைக்கும் பாங்கை நினைத்துப் பார்ப்பேன். 

“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.

வெளி உலகம் தெரியாது இசையே உலகமாகக் கொண்ட இளையராஜாவின் பிறந்த நாட்களில் அவருக்குப் பக்கத்தில் சின்னக் குழந்தை போல கேக் ஊட்டி மகிழும் அந்தச் செல்வ மகளின் பூரித்த கண்கள் தான் மனதில் நிறைந்திருக்கிறது.

எம் பெருமான் சிவனை நினைக்கும் போது எழும்

“ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி நாகமணி”

https://www.youtube.com/watch?v=cqGblneQY2w

பாடலை இந்த நேரத்தில் மனசாரக் கேட்டு, எங்கள் பவதாரிணி இறைவனின் பாதத்தில் இளைப்பாறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

கானா பிரபா

26.01.2024

Tuesday, January 16, 2024

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதியோடு விடை பெற்ற இசையமைப்பாளர் கே.ஜே.ஜாய் (K. J. Joy)

மலையாளத்தின் மகோன்னதமான இசையமைப்பாளர்களில் ஒருவர், நமக்கெல்லாம் “சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி” (யாருக்கு யார் காவல்)

https://youtu.be/4qshfRBf78Y?si=pEu2ZnqGHN0Uvp8f

பாடல் வழியாக அடையாளம் கொடுத்தவர் நேற்று 15.01.2024 இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார்.

பெண் என்றால் பெண் படத்துக்காக, 1967 இல் எம்.எம்.விஸ்வ நாதனிடம் முதன் முதலில் வாத்தியக் கலைஞராகப் பணியாற்றியவர். 

அந்த நேரத்தில் மங்கள மூர்த்தி, பென் சுரேந்தர் ஆகியோர் அங்கு அவருக்கு முன் மூத்த வாத்தியக் கலைஞர்களாக இயங்கியுள்ளார்கள்.

அக்கார்டியன் வாத்தியத்தைத் தானே சுயமாகக் கற்ற சுயம்பு இவர்.


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விவநாதனைத் தன் இசை வழிகாட்டியாகக் கொண்டு 71 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதே அவரின் இசைச் சாதனை சொல்லும். கானா பிரபா

அக்கார்டியன் வாத்திய விற்பன்னராக இருந்தவர் 1969 முதல் கீபோர்ட் வாத்தியக் கலைஞராகவும் தன்னை ஆக்கிக் கொண்டார். @கானாபிரபா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் ஏராளம் இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர்.  முதல் கீபோர்ட்டை வாங்குவதற்காகத் தான் காரை அடகு வைத்து 20,000 ரூபாவுக்கு வாங்கினாராம்.

ஆராரோ ஆராரோ அச்சன்ட மோள் ஆராரோ

https://youtu.be/YMNyFMD9jxk?si=3edyInAHigNlwESC

இவரின் புகழ் பூத்த பாடல்களில் ஒன்று.

கே.ஜே.ஜாய் கொடுத்த பேட்டி

https://youtu.be/lyJbUxmJGFs?si=4Tvgj6i_APTfO7bj


அவரின் இசையில் மிளிர்ந்த பாடல்கள் சில

https://youtu.be/eVzEp1WxBIM?si=If9Fehzcm6GOLP5D

தமிழில் “வெளிச்சம் விளக்கைத் தேடுகிறது”, “அந்தரங்கம் ஊமையானது” உள்ளிட்ட படங்களுல்கும் மேலும் இசை வழங்கியுள்ளார்.

“காதல் ரதியே கங்கை நதியே

 கால் தட்டில் காணும் ஜதியே”

https://youtu.be/_TToXX2JVYw?si=7fLlKWAdVE802Z3X

பாடல் எல்லாம் அந்தக் காலத்து இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளைக் கிளப்பி கே.ஜெ.ஜாய் அவர்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு “சிப்பியின் உள்ளே” மற்றும் “காதல் ரதியே” பாடல்கள் அவரின் புகழ் கிரீடத்தை அலங்கரித்த முத்துகள்.

ஆழ்ந்த இரங்கல்கள் கே.ஜே.ஜாய் (K. J. Joy) 🙏

கானா பிரபா

16.01.2024



Wednesday, January 10, 2024

❤️❤️❤️ கருப்பு நிலா விஜயகாந்துக்கு கான கந்தர்வன் ஜேசுதாஸ் ❤️❤️❤️

ஏதோ நினைவுகள்.....

கனவுகள்......

மனதிலே....மலருதே....

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே.....

https://www.youtube.com/watch?v=rUyraZFVPA8

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரையுலகத் திறவுகோல்

பாட்டு, நம்மில் பலருக்கோ வசந்த கால நினைவுகளைக் கிளப்பும் நெம்புகோல் அது.

இப்படியாக போர்க்குணம் கொண்ட இளைஞன் விஜயகாந்தின் ஆரம்பம் தொட்டு அவர் தம் முக்கியமான படங்களிலே குரலாக அணி செய்தவர் கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ்.

“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே”

“புலன் விசாரணை” என்றொரு திகிலூட்டும் படத்தில் விறைப்பான அதிகாரியின் கனிவான முகத்தை அணி செய்ய ஜேசுதாஸ் குரலே போதுமானதே?

“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு” கேட்டால் அந்த நிறை மாதப் பெண்ணைத் தாங்கும் கணவன் குரலோடு கேப்டனின் முகமும் அல்லவா நிறைந்திருக்கும்?

கேப்டனுக்காக எழுச்சி முரசாகவும், ஜோடிக் குரலாகவும் T.M.செளந்தரராஜன் தொட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் என்று அடுத்த யுகத்தின் முன்னணிப் பாடகர் வரிசை நீண்டு கொண்டு போகும்.

“உள்ளமெல்லாம் தள்ளாடுதே

 உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் போராடுதே”

https://www.youtube.com/watch?v=YGBrg32T2U0

என்று இந்தியத் திரையிசையின் மேதமையான சலீல் செளத்ரியுடமும் தப்பாமல் ஜேசுதாஸ் விஜயகாந்திடம் போய்ச் சேர்ந்தவர், அளவு கணக்கில்லாத இளையராஜா பாடல்களில் எல்லாவிதமான உணர்வோட்டங்களிலும் தீனி போட்டிருக்கிறார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கொடுத்த விஜயகாந்தின் ஜேசுதாஸ் பாடிய “ஶ்ரீரஞ்சனி” https://youtu.be/hMRuCrsojbE?si=7zS1MRda0cpNEIne பாடலை இதுவரை கேட்காதவர்கள் கேட்டுவிட்டு ஓடி வாருங்கள். அரிதாக விளைந்த திரையிசை முத்து அது.

அதுபோலவே இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் இளையகங்கை இசையமைத்த “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” பாடலை இன்னும் கூட இலங்கையின் பண்பலைகள் விட்டுக் கொடுக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

“தோடி ராகம் பாடவா...

 மெல்லப் பாடு....”

அன்று ஆல் இந்தியா ரேடியோவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்ட காலத்து ஞாபகங்களை சந்திரபோஸ் ஜேசுதாஸ் ஊடாக விஜயகாந்த் வழி கடத்துவார்.

ஒரு சில படங்களே இசையமைத்த தேவேந்திரனிடம் கூட

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” என்றும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” என்றும் 80களின் இளைஞர்களின் சோக ராகத்தை ஜேசுதாஸ் விஜயகாந்த் வழி கடத்தினார்.

சங்கர்- கணேஷ் இசையமையத்த ஒரு தொகை படங்களாய் விஜய்காந்த் நடித்த போது “சித்திரமே உன் விழிகள்” பாடலையும் அவர்கள் தம் பங்குக்குக் கொடுத்ததையெல்லாம் இலங்கை வானொலியின் பொற்காலம் பறையும்.

விஜய்காந்த் என்றதோர் ஆக்ரோஷமான நாயகனுக்கு ஜெயேட்டனும், தாஸேட்டனும் அளவெடுத்த குரலாய் அமைந்ததுதான் ஆச்சரியம்.

அதனால் தான் கொண்டாட்டம், தத்துவம், சோகம் என்று எல்லாவிதமான கலவைகளிலும் அவருக்காக அவர்கள் பாடியபோது அவரே ஆகினர். 

“நிலைமாறும் உலகில் 

நிலைக்கும் என்ற கனவில் 

வாழும் மனித ஜாதி

அதில் வாழ்வதில்லை நீதி"

கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாட்டு வந்தது என்னவோ விஜய்காந்தின் “ஊமை விழிகள்" திரைப்படம் தான். ஆனால் அவருக்காக அந்தப் படத்தில் அமைந்ததல்ல. இருந்தாலும் என்ன, அவரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாவிடை கொடுக்க, தொலைக்காட்சி ஒன்று அடிக்கடி இந்தப் பாடலை ஒலிபரப்பி சோக வலையில் சிக்கி இருந்தது அன்றைய தினம்.  

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த படங்களிலும், இன்னொருவருக்கான குரலாகவும் அவ்விதம் அணி சேர்த்த ஜேசுதாஸ், அன்று கேப்டனின் தோழன் சந்திரசேகருக்கான ஜோடிப் பாடலான 

“ரெண்டு கண்ணும் சந்தனக் கிண்ணம்" (சிவப்பு மல்லி)

கொடுத்ததைக் காலம் தான் மறந்து போகுமா?

அதுபோலவே “நம்பினால் கெடுவதில்லை” என்று அதே பெயரில் வெளிவந்த படத்திலும், “கண்ணே வா” (குழந்தை ஏசு), “ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை” (மக்கள் ஆணையிட்டால்), “ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு" (சட்டம் ஒரு விளையாட்டு) என்று விஜயகாந்த் படங்களில் இன்னொருவருக்காக ஜேசுதாஸ் பாடியவை என்ற கணக்கு நீண்டு செல்லும்.

ஜேசுதாஸை இணை நாயகன் ரகுமானுக்குப் பாட வைத்து, விஜயகாந்துக்கு சுரேந்தரைப் பாடவைத்த “நான் உள்ளதைச் சொல்லட்டுமா?” (வசந்த ராகம்) தந்த புதுமையை மறக்கத்தான் முடியுமா? ஆரம்ப காலத்தில் எஸ்.என்.சுரேந்தர் தான் விஜயகாந்தின் பின்னணிக் குரலாகவும் இருந்தவர். கானாபிரபா

தொடந்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்காக அன்று தொட்டு ஈராயிரம் வரை குரல் கொடுத்த கே.ஜே.ஜேசுதாஸின் பாடல் தொகுப்பை இங்கே முழுதுமாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. எதோ நினைவுகள் – அகல்விளக்கு (இளையராஜா)

2. உள்ளமெல்லாம் தள்ளாடுதே – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

3. இன்றோ மனம் கலங்கி – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

4. சித்திரமே உன் விழிகள் – நெஞ்சிலே துணிவிருந்தால் ( சங்கர் – கணேஷ்)

5. மச்சமுள்ள பச்சக்கிளி – சபாஷ் (சங்கர் – கணேஷ்)

6. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள் (இளையராஜா)

7. அலை அலையாய் – நாளை உனது நாள் (இளையராஜா)

8. பூவோ பொன்னோ – புதுயுகம் (கங்கை அமரன்)

9. ஒரே ராகம் – அமுத கானம் (இளையராஜா)

10. மாலைக் கருக்கலில் – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

11. மாலைக் கருக்கலில் (சோகம்) – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

12. உன் பார்வையில் – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

13. உன் பார்வையில் (தனித்து) – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

14. இச்சென்று முத்தம் – எனக்கு நானே நீதிபதி (இளையராஜா)

15. ஊருக்கு உழைத்தான் – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

16. தொடு தொடு – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

17. ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை ( இளையராஜா)

18. உணவினிலே நஞ்சு வைத்தான் – வேலுண்டு வினையில்லை ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

19. வங்காளக் கடலே – மனதில் உறுதி வேண்டும் (இளையராஜா)

20. ராத்திரிக்கு கொஞ்சம் – காலையும் நீயே மாலையும் நீயே ( தேவேந்திரன்)

21. சிந்திய வெண்மணி – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

22. அடி கானக் கருங்குயிலே – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

23. ஶ்ரீரஞ்சனி – தம்பி தங்கக் கம்பி ( கங்கை அமரன்)

24. முத்துக்கள் பதிக்காத கண்ணில் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

25. வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

26. மீனாட்சி கல்யாண வைபோகமே – மீனாட்சி திருவிளையாடல் ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

27. குயிலே குயிலே – புலன் விசாரணை ( இளையராஜா)

28. ஓ தென்றலே – சந்தனக் காற்று (சங்கர்-கணேஷ்)

29. அதிசய நடமிடும் – சிறையில் பூத்த சின்னமலர் ( இளையராஜா)

30. காலை நேரம் – மாநகர காவல் (சந்திரபோஸ்)

31. தோடி ராகம் பாடவா - மாநகர காவல் (சந்திரபோஸ்)

32. சந்தனக் கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

33. ஆகாயம் கொண்டாடும் – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

34. – ஆகாயம் கொண்டாடும் (சோகம்) – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

35. சந்தன மலர்களைப் பார்த்து – காவியத் தலைவன் (அரவிந்த் சித்தார்த்தா)

36. வண்ணக்கிளி வண்ண – காவியத் தலைவன் ( அரவிந்த் சித்தார்த்தா)

37. குங்குமம் மஞ்சளுக்கு – எங்க முதலாளி ( இளையராஜா)

38. வண்ணமொழி மானே – சேதுபதி ஐபிஎஸ் ( இளையராஜா)

39. ரோஜா வண்ண ரோஜா – வாஞ்சி நாதன் (கார்த்திக் ராஜா)

40. தந்தனத் தந்தன தை மாசம் – தவசி (வித்யாசாகர்)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நாமும் அவர் தம் பாடல்களோடு கொண்டாடி மகிழ்வோம்.

கானா பிரபா

10.01.2024