Pages

Wednesday, December 30, 2015

தமிழ்த் திரையிசை - 2015 தந்ததில் நான் ரசித்தது


இந்த 2015 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்குப் பின் ந்ன் வேலைத்தளப் பயணத்தின் முக்கால்வாசியை கார்ப் பயணம் பங்கு போட்டதால் நிறைய தமிழ் பண்பலை ஒலிபரப்புகளை Tunein app வழியாகக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் பெரும்பாலான நேரத்தில் புதிய பாடல்களையே கேட்க வேண்டிய வாய்ப்பு வந்ததால் அவற்றில் நான் ரசித்தவற்றை ஆண்டு முடிவதற்குள் கொடுக்கலாம் என்ற நோக்கில் பகிர்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பு சார்ந்தது, இவற்றில் விடுபட்டவை ஏதும் உங்கள் ரசனையில் இருப்பின் பின்னூட்டம் வழியாகத் தரலாம். ஊஃஃஃப்ப்ப் மூச்சு வாங்குது எவ்வளவு பெரிய டிஸ்கி.

இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட இசையமைப்பாளர் என்றால் அனிருத் தான். அதில் துரதிஷ்டம் என்னவென்றால் நல்ல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பேரெடுத்து இறுதியில் பீப் என்ற கறையில் மாட்டுப்பட்ட வகையில் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்தது அவருக்கு. 

இந்த ஆண்டு ஓட்டத்தில் மற்றைய இசையமைப்பாளர்களில் இருந்து அனிருத் எவ்வளவு தூரம் தனித்து நிற்கின்றார் என்பதற்கு அழகான உதாரணம், "நானும் ரவுடி தான்" படத்தில் வந்த "நீயும் நானும்" http://youtu.be/wo8PLSPW88c அனிருத் ஏற்கனவே மெல் இதம் தரும் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் இந்தப் பாட்டைப் பொறுத்தவரை தனித்த நிறம் கொண்டது. இசையும், மெட்டமைப்பும், பாடகர் தேர்வும் கூடவே தானும் சேர்ந்து பாடும் பாங்கும் என்று முதலிடத்தில் வைத்துப் போற்றக் கூடிய பாட்டு இது.
இதே படத்தில் வந்த "தங்கமே தங்கமே" கேட்கும் ரகம் தான்.

அனிருத் ஐப் பாடகராக எனக்கு மிகவும் பிடிக்கும். லேசான உதார் தனத்துடன் அவரின் பாடும் பாங்கு சிறப்பானது. "ஆளைச் சாய்ச்சுப் புட்டே தன்னாலே" http://youtu.be/zZipMA0aN4Y பாட்டு அனிருத் பாடி இசையமைத்ததாகவே நினைக்குமளவுக்கு அவரின் பாணி இருக்கும். ஆனால் அந்தப் பாட்டு வில் அம்பு படத்துக்காக நவீன் இசையமைத்தது. இந்த ஆண்டு நான் அடிக்கடி கேட்ட துள்ளிசைப் பாடலில் இதற்குத் தான் முதலிடம். இதே போல "டண்டனக்கா" பாடல் கூட ரோமியோ ஜூலியட் படத்துக்காக அனிருத் பாட இமானின் இசையில் வெளிவந்து வெகுஜன அந்தஸ்துப் பெற்றது. 
அனிருத் இசையில் மாரி படத்தில் வரும் "டானு டானு டானு" பாடலும் துள்ளிசையில் என்னைக் கவர்ந்த பாட்டு. 
ஆகக் கூடிய எதிர்பார்ப்போடு வெளிவந்த வேதாளம் படப்பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டும் என்னளவில் திருப்தி அடையாத இசை. ஆலுமா டோலுமாவின் சின்னச் சின்ன இசைச் சங்கதிகளில் மட்டும் ஜாலம்.
அனுருத் இசையில் இந்த ஆண்டின் நிறைவுப் படமாக வந்த "தங்க மகன்" இல் "ஜோடி நிலவே" http://youtu.be/-wZTrV0M6Yo பாடல் தான் முதலில் பிடித்தது ஆனால் அதை மேவி இப்போது ரசிக்கும் பாட்டு "என்ன சொல்ல" http://youtu.be/5iR5V9sHEtQ

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு சுளையாக மூன்று பெரும் படங்கள் அதுவும் தொடர்ந்து கமல்ஹாசனோடு. என்னைப் பொறுத்தவரை ஜிப்ரானுக்கு இந்தளவு புகழ் வெளிச்சம் கிடைக்க முன்னர் கொடுத்ததெல்லாம் பொன் என்பேன். இந்த ஆண்டு ஏமாற்றம் தரும் ஆண்டு. "யேயா என் கோட்டிக்காரா" (பாபநாசம்) மட்டும் மன்னிக்கலாம் ரகம்.

ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை நாயகன் என்று பேரெடுத்த ஜெய்சங்கர் போல சமீப ஆண்டுகளில் இசையமைப்பாளர் டி.இமானின் காட்டில் மழை. ஆனால் அதுவே இன்னொரு சவாலையும் இவருக்கு உண்டு பண்ணியிருக்கிறது. தனக்குப் பாதுகாப்பான சூழலில் நின்று விளையாடும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்று இவரும் ஒரே வார்ப்புருவில் இசையமைக்க வாழ்க்கைப்பட்டுட்டாரோ என்று நினைக்குமளவுக்கு சமீப காலங்களில் டி.இமான் கொடுத்ததெல்லாம் ஒரே மாதிரியாகப் படுகிறது. நல்ல உதாரணம் "ரஜினி முருகன்" பாடல்கள் இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம். "உம் மேல ஒரு கண்ணு" http://youtu.be/slMqJRSfPfc பாட்டு என்னதான் இதமாய் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் ஜில்லாவுக்கு அழைத்துப் போகிறது. 
சிலுக்கு மரமே (பாயும் புலி) இந்த ஆண்டு இமானுக்கு வெகுஜன அந்தஸ்தைக் கொடுத்த இன்னொரு பாட்டு என்றாலும் என் விருப்பப் பட்டியலில் இல்லை.
"ஆகா காதல் வந்து" (வலியவன்) http://youtu.be/VjkrjyKUZRA பாடல் ரசிக்க வைக்கிறது.
இந்த ஆண்டு டி.இமானை மனதில் நிறுத்தி ரசிப்பதற்கு "ஆனாலும் இந்த மயக்கம்" (10 எண்றதுக்குள்ள) http://youtu.be/KwYoNNAjspw பாட்டு ஒன்றே போற்றி ரசிக்கக் கூடிய ஒன்று.

ஹாரிஸ் ஜெயராஜ் ஐ நம்பிப் பாட்டுக் கேட்கலாம். அவரும் பெரிதாக அலட்டிக் கொண்டு எங்களையும் கஷ்டப்படுத்த மாட்டார், தெரிந்த சங்கதியில் சந்துல சிந்து பாடுவார்
என்ற நம்பிக்கை தான்.  உண்மையில் இந்த ஆண்டு அனைத்தும் அட்டகாசமான பாடல்கள் என்ற ரீதியில் வந்த மிகச் சில படங்களில் இவரின் அனேகனும் சேர்த்தி. இந்த நிமிஷம் வரை "ரோஜாக் கடலே" http://youtu.be/9iX4HQeW1aM (படமாக்கலும் அட்டகாஷ்) , "ஆத்தாடி ஆத்தாடி" http://youtu.be/MGjBQDrtGbA பாடல்கள் என் போதை மருந்து என்றால்
"பூவெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா" http://youtu.be/oiCgukqSnMU காதில் விழும் கணம் காதலியை மீண்டும் புதிதாகப் பார்க்கும் ஒரு புத்துணர்வு. இந்த ஆண்டு எனது பாலொத் தீவு பயண இலக்கியம் வெளிவந்த அதே வேளை நண்பேன்டா படத்தில் வந்த இந்தப் பாட்டு படமாக்கப்பட்டதும் பாலித்தீவின் சரஸ்வதி ஆலயம் என்பது ஆச்சரியமான ஒற்றுமை. எனக்குத் தெரிந்து வேறெந்தத் தமிழ்ப் பாடலும் இதற்கு முன்னர் இந்த ஆலயத்தில் படமாக்கப்படவில்லை.
"உனக்கென்ன வேணும் சொல்லு" http://youtu.be/SdcAN3dobz4 கேட்டால் அழுது விடுவேன், அவ்வளவுக்கு என் செல்ல மகள் இலக்கியா என் அருகில் இருந்தாலும் இந்தப் பாட்டு தரும் பிள்ளை நேசம் சொல்லில் எழுதி மாளாது. தனிப்பதிவு எழுத வைத்திருக்கிறேன் இந்தப் பாட்டுக்காக. இந்தப் பாடல் தவிர இதே "என்னை அறிந்தால்" படத்தில் வந்த "மழை வரப்போகுதே" பாட்டு வழக்கமான சங்கதி என்றாலும் பிடிக்கும் எனக்கு. "அதாரு உதாரு" பிச்சை வேண்டாம் ஆளைப் பிடி ரகம்.

இந்த ஆண்டின் சிறந்த அறிமுகப் பாடலாசிரியர் விருது எனக்குக் கொடுக்கும் உரிமை எனக்குக் கிட்டினால் மெல்லிசை படத்தில்  "வெள்ளைக் கனவொன்று" https://m.facebook.com/kana.praba/posts/10208068246129283 எழுதிய ரஞ்சித் இற்குக் கொடுப்பேன். மெல்லிசை படம் இசையமைப்பாளர் சாம்.C.S இற்கு முதல் படமோ என்னும் அளவுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரே படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்குப் பிடித்துப் போவதென்பதும் அதுவே வளர்ந்து வரும் இசையமைப்பாளருக்கு என்பதும் உழைப்போடு கூடிய வரம் தானன்றி வேறென்ன. 

"அலை பாயுதே" காலத்துக்கு 15 வருடங்கள் காத்திருப்பா என்னுமளவுக்கு இயக்குநர் மணிரத்னத்தோடு கூட்டுச் சேர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் "ஓ காதல் கண்மணி" இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.  என் தனிப்பட்ட தேர்வில் "நானே வருகிறேன்"
 "காரா ஆட்டக்காரா" http://youtu.be/VVoO9cdk5Eo இரண்டும் விருப்பப் பட்டியலில்.

2015 இன் அழகான ஒரு இளமைத் துள்ளல் "வாய்யா என் வீரா" http://youtu.be/uwk-fMOVKRM எனக்கு மிகவும் பிடித்த இன்னொன்று. இந்தப் பாட்டை ஏற்கனவே இசையமைத்து 
யூடியூபில் பகிர்ந்ததைக் கண்டு இயக்குநர் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா 2 இல் பயன்படுத்த அனுமதியெடுத்ததாக இதன் வழி அறிமுகமான இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத் திரைப்படப் பாடல்களில் பாடும்  கூட்டுக் குரல்களில் ஒருவர் நோயல் ஜேம்ஸ். தற்போது பாடும் திறனை இழந்திருப்பதாக அவரின் மகன் இந்த லியோன் ஜேம்ஸ் சொன்னதைச் சமீபத்தில் படித்தேன்.
காஞ்சனா 2 இல் "மொட்டப் பையன்" http://youtu.be/OG8uQMm2pHI சித்ராவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அழகான பாட்டு. தமன் இசையில் ரசித்துக் கேட்கலாம் இதை.

"பச்சைத் தீ நீயடா" http://youtu.be/qIef34bj_xY என்ற பாகுபலி படப் பாட்டு கீரவாணி இசையிலும், "ஜிங்கிலியா" http://youtu.be/Ky8bo-l7Jkk புலி படப் பாட்டு தேவி ஶ்ரீ பிரசாத் இசையிலும் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு என்றாலும் கேட்கப் பிடித்தது.

என்னவொரு நல்ல இசையமைப்பாளர் நடிச்சு நாசமாகுறாரே என்று என் சக தர்மிணியே கவலைப்படும் அனுதாபப் பாத்திரம் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த ஆண்டு வெளிவந்த டார்லிங் படத்தில் அவர் கொடுத்த "உன்னாலே" http://youtu.be/4gMV4Dn02tI பாட்டு மட்டும் தொடர்ந்து ரசிக்கக் கிடைத்தது. கொம்பன், இது என்ன மாயம் என்றெல்லாம் இசையமைத்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பழைய பாடல்களைக் கேட்கும் போது 2016 இலாவது அவர் மீண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த ஆண்டு கலக்கலான வெற்றிக் கனியைப் பறித்த இசையமைப்பாளராக Hiphop தமிழா
தனியொருவன் படத்தின் அதகள வெற்றியோடு கூட்டுச் சேர்ந்துள்ளார். "கண்ணோரமா" http://youtu.be/7dDeAE2V0oM இந்த ஆண்டின் ஆகச் சிறந்த காதல் பாடல்களில் ஒன்று.
இதே படத்தில் வந்த "காதல் கிரிக்கெட்" பாட்டும் கேட்கும் ரகம். "தீமை தான் வெல்லும்" http://youtu.be/yLFm1i6YVdI பாட்டு நன்றாக இருந்தாலும் "யார் யார் சிவம்" பாட்டைத் தேடி ஓடுது எனக்கு மட்டும்.


இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது கொடை  "தாரை தப்பட்டை" பாடல்களும், பின்னணி இசைப் பகிர்வுகளும்  2015 ஐ நிறைவானதொரு ஆண்டாக்கியிருக்கின்றன. சமீப நாட்களாக இவற்றில் கட்டுண்டு கிடக்கின்றேன். இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது 2015 ஆம் ஆண்டின் நிறைவான எனது வானொலி நிகழ்ச்சியில் "தாரை தப்பட்டை" பாடல்கள் சிறப்பு அறிமுகமாக ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு.

2016 ஆம் ஆண்டை நல்லிசையோடு  வரவேற்போம். 

Wednesday, November 18, 2015

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ

கஷ்டப்பட்டுப் பெறும் எதுவும் அதன் பெறுமதியை அவ்வளவு சுலபத்தில் இழப்பதில்லை. அது போலவே ஒரு காலத்தில் பாட்டுக் கேட்ட அனுபவங்களும். 90 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தில் இருந்து பெயர்ந்த 1995 ஆம் ஆண்டு வரை முழுமையான மின்சாரம் இல்லாத போர்க் காலச் சூழல். மாலை ஆறு மணியானால் இருட்டுக் கட்ட, கை விளக்குத் தான் மொத்தக் குடும்பத்துக்கும் ஒளியூட்டும். அப்போதும் பாட்டுக் கேட்கும் ஆசை விட்டால் தானே. சைக்கிளில் பொருத்தியிருக்கும் டைனமோவில் இருந்து மின்சாரத்தை வானொலிப் பெட்டிக்குக் கடத்துவதற்காக சைக்கிளைத் திருப்பிக் கிடத்தி, அதன் மிதியடியை வலித்துச் சக்கரத்தை உருட்டி டைனமோவோடு உரசி, அது கடத்தும் மின்சாரத்தை வானொலிக்குப் பாய்ச்ச ஒரு வயர் இணைப்பைப் போட்டு, சக்கரத்தை ஒரு கையால் சுழற்றிச் சுழற்றிக் கை வலி தெரியாமல் மனசு நிறையக் கேட்ட காலம் அது. அப்போது வந்தது தான் "கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ" பாட்டு. அந்த நேரத்தில் எங்களைப் பொறுத்தவரை திரைகடல் ஓடித் திரவியம் பெற்ற நிலை.

"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ" பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் தனித்துவமான குரலால், இன்னொரு பாடகரை உரிமை கொண்டாட முடியாத, அவருக்கேயானது. 
பல்லவி அடிகள் முடிவுறும் ஓகாரத்தை அவர் நோகாமல் நிறுத்தி மேவுவார். மூல அடிகள் வரும் இடத்தில் ஆர்மோனியம் பின்னணியில் வர, தாள லயத்தில் வில்லிசையைக் கொடுத்து சரணம் வரும் இடத்தின் பகுதிகளில் இன்னொரு வடிவத்திலும் மீண்டும் ஆர்மோனியம், வில்லிசை என மாறும் ஆனால் நெருடல் இருக்காது. அதுதான் இசைஞானியின் சாகித்தியம்.
இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தின் முன்னிசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் நர்த்தனத்தையும் அதை ஆமோதித்குக் குதூகலிக்கும் கூட்டு வாத்திய ஆர்ப்பரிப்பையும் தீரா வெறியோடு கேட்கும் ஆவலில் திரும்பத் திரும்ப ஒலி நாடாவை முன்னோக்கி ஓட விட்டுக் கேட்ட காலங்களை நினைத்துச் சிரிக்கிறேன்.
அந்தப் புல்லாங்குழல் ஒலி அப்படியே அடுத்த சரணம் வரை குதூகலிக்கும். திரு.நெப்போலியன் அவர்களின் வாசிப்பு.

முதலாவது சரணத்தின் முன்னிசையில் இயங்கும் புல்லாங்குழல் இசை இன்னோர் நளினத்தை வெளிப்படுத்தியிருக்கும். தோல் வாத்தியங்களின் இரு வேறு பரிமாணம் வில்லிசைப் பானை மேளத்தின் ஒலியிலும், தபேலா ஒலியிலுமாக இந்தப்  பாடலில் பங்களித்திருக்கும்.

இதே காலகட்டத்தில் வந்த "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது" பாடலிலும் சக்தியைப் போற்றிப் பாடும் தொனியில் அமைந்திருக்கும். 

தொண்ணூறுகளின் ஆரம்பம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஒலித்தரத்தில் உச்சம் பெற்ற காலம். இந்தப் படத்தின் பாடல்களை குறிப்பாக "கலைவாணியோ" பாடலை எந்த டப்பா வானொலியில் கேட்டாலும் பட்டுச் சேலைப் பகட்டாக இருக்கும்.

சன் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதே கங்கை அமரன் எப்போதாவது சொல்லும் சின்னத் சின்னத் தகவல் சுவாரஸ்யங்களுக்காகத் தான். இந்த வார நிகழ்ச்சியை நேற்றிரவு பார்க்கும் போது "கலைவாணியோ" பாடலை ஒரு குட்டிப் பையன் பாடினார். இந்தப் பாட்டு இடம்பெற்ற வில்லுப்பாட்டுக்காரன் படத்தை இயக்கியதை விலாவாரியாகச் சொல்லாவிட்டாலும், வில்லுப்பாட்டு என்ற கலை வடிவத்தைச் சென்று பரப்பியதில் சுப்பு ஆறுமுகம் அவர்கள், அவருக்கும் முன்னோடியான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்.எஸ்.கேயின் உதவியாளராக இருந்த குலதெய்வம் ராஜகோபால் போன்றோரை நினைவு கூர்ந்தார். 

கரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடிச் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தமிழரின் தொல்லிசைக் கலை வில்லுப்பாட்டு என்ற இசை வடிவத்தை மையமாக வைத்து கங்கை அமரன் இயக்கிய படம். இடையில் வெவ்வேறு கருப் பொருளில் படங்களை எடுத்திருந்தார். இதே படத்தில் வரும் "தந்தேன் தந்தேன்" என்று மலேசியா வாசுதேவன் பாடும் பாட்டு சமீப வருடங்களாகத் தான் என்னைக் கட்டிப் போட்டிருக்கின்றது. அவ்வளவு தூரம் இதே படத்தில் வந்த "கலைவாணியோ ராணியோ" சந்தோஷம் மற்றும் சோகப் பாடல்கள் மற்றும் எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடிய "சோலை மலையோரம்" ஆகிய பாடல்களே போதும் எனுமளவுக்கு மீண்டும் மீண்டும் கேட்டவை.
கங்கை அமரன் புகழ்ந்தேற்றிய வில்லிசைக் கலைஞர் மற்றும் நடிகர் குலதெய்வம் ராஜகோபால் இந்தப் படத்தில் மனோவுடன் சேர்ந்து "தந்தனத்தோம் என்று சொல்லியே" பாடலில் ஆமாப் போட்டுப் பாடியிருப்பார்.
"பொன்னில் வானம் போட்டது கோலங்களே" என்று எஸ்.ஜானகி பாடும் பாடலைக் கேட்டுப் பாருங்கள். "காலைத் தென்றல் பாடி வரும் ராகம்" பாடலுக்கு நிகராகப் போற்றப்பட்டிருக்க வேண்டிய பாட்டு அது.
சித்ரா பாடும் சோகப் பாட்டு "வானம் என்னும்" ராஜாவின் கோரஸ் 500 போட்டியில் சேர்த்த பாட்டு.

"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ" நேற்றுக் காலை வேலைக்குப் பயணிக்கும் போதும், வீடு திரும்பும் போதும் என் ரயில் பயணத்தில் இந்தப் பாடலை அளவு கணக்கில்லாமல் கேட்டாலும் அடங்க மறக்கும் மனம் இன்றும் தொடர்கிறது. தாய்ப் பசுவின் மடியில் இடித்து இடித்துக் குடிக்கும் கன்றின் நிலைக்கு ஒப்பானது இது.

http://www.youtube.com/watch?v=6S4se0nCIJ0&sns=em

காட்சியோடு ரசிக்க

 http://www.youtube.com/watch?v=IxWX0w4m6_g&sns=tw

Wednesday, November 11, 2015

படிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் படிக்காதவன் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 வருடங்கள் ஆகி விட்டதாக ட்விட்டரில் இழை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. 11.11.1985 தீபாவளிக்கு வந்த ஒரு வெற்றிச் சித்திரம் இது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன் வரிசையில் படையப்பாவுக்கு முந்தி இணைந்த படம் இதுவாகும். இந்த நான்கு படங்களிலுமே சிவாஜி மற்றும் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களின் தனித்துவம் பேணப்பட்டிருந்தாலும் படிக்காதவன் படம் ஒப்பீட்டளவில் சிவாஜி கணேசனுக்கு கெளரவ வேடத்தை அளித்த படம்.

ரஜினிகாந்த் உடன் பயணிக்கும் காருக்கு லஷ்மி என்று பெயரிட்டிருப்பார். இந்தப் படம் வந்ததில் இருந்து இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் நம்மவர் சிலர் லஷ்மி என்று தமது வாகனத்தை அடைமொழியிட்டு வேடிக்கையாக அழைப்பதன் நதிமூலம்/ரிஷிமூலம் இது.

எண்பதுகளின் ரஜினிகாந்த் படமென்றாலே கண்ணை மூடிக் கொண்டு எஸ்.பி.முத்துராமன் தானே இயக்கம் என்று சொல்ல முன்பு இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் இற்கு நட்சத்திரப் படங்களை அளித்த வகையில் இயக்குநர் ராஜசேகரும் குறிப்பிடத்தக்கவர். முழு நீள மசாலா சண்டைப் படங்கள் மட்டுமன்றி கதையம்சம் பொருந்திய குடும்பப் படங்களையும் ராஜசேகர் கொடுத்திருந்தாலும் "மலையூர் மம்பட்டியான்" இவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. இதுவே பின்னர் ரஜினிகாந்த் படங்களுக்கான இயக்குநர் தேர்வில் இவரையும் சேர்த்துக் கொள்ள ஒரு காரணியாக இருக்கலாம்.
 படிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை வரிசையில் தர்மதுரை படம் இயக்குநர்  ராஜசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்திருந்தது. தர்மதுரை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜசேகர் இறந்ததும் மறக்க முடியாத வரலாறு.
இந்தக் கூட்டணியில் அமைந்த படங்கள் அனைத்துக்கும் இசைஞானி இளையராஜா இசை.

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் முத்துகள் என்று சொல்லவா வேண்டும். கவிஞர் வாலி, கங்கை அமரன், வைரமுத்து வரிகளில் அமைந்தவை.
ரஜினிகாந்த் இற்கு ஆரம்ப காலத்தில் அதிக பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் பாடிய பெருமையைய் பெறுகிறார்.
ஒரே படத்தில் நாயகனுக்கான குரலாக கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று பெரும் பாடகர்களும் பாடிய வகையில் இன்னொரு சிறப்பு.

"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி" விரக்தியுன் விளம்பில் இருந்த அந்தக் காலத்து இளைஞரின் தேசிய கீதம்.
இந்தப் பாடலின் வெற்றி பின்னர் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் "ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா" என்று சங்கர் கணேஷ் கூட்டணியும் ஆசையோடு எடுத்தாண்டது.
நாயகனுக்கான ஸ்துதிப் பாடல்கள் "ராஜாவுக்கு ராஜா", "சொல்லி அடிப்பேனடி" இரண்டும் தலா எஸ்.பி.பி, மலேசியா என்று தத்தமது பாணியில் சாரம் கெடாது கொடுத்த துள்ளிசை.
"ஒரு கூட்டுக் கிளியாக" மலேசியா வாசுதேவன் பாடும் போது டி.எம்.செளந்தரராஜனின் இளவலாகக் குரல் விளங்கும்.

"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு" எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடும் போது அப்படியே என்னை மண் வாசனை படத்தின் "ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை" பாட்டுக்கு இழுத்து விடும்.

"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு 
  சொந்தக் கிளியே நீ வந்து நில்லு
  கன்னிக் கிளி தான் காத்துக் கெடக்கு கண்ணுறங்காம 
பட்டுக் கிளி இதைக் கட்டிக் கொள்ளு
தொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு"
என்று எஸ்.ஜானகி ஆலாபனை கொடுத்து நிறுத்துகையில் ஆர்ப்பரிப்போடு வரும் இசை தான் எண்பதுகளின் பிரமாண்டத்தின் அறை கூவல்.
இப்படியான நிஜமான வெற்றியை இனிமேல் காணுமோ இந்தத் திரையுலகு.

Monday, October 26, 2015

பாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐம்பதுக்கு ஐம்பது


இன்று பாடகர் மனோவின் பிறந்த நாள் என்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அறிந்து கொண்டேன். அவருக்கு இசைஞானி இளையராஜா இசை கொடுத்த பாடல்களோடு என் இளமைப் பருவமும் இசைந்ததால் இவரின் பாடல்களை வைத்தே பல்வேறு பதிவுகளைப் பகுதி பகுதியாகக் கொடுக்க இருந்தேன்.

இன்று பாடகர் மனோவின் 50 வது பிறந்த நாளில் திடீர் சமையலாக, இசைஞானி இளையராஜா இசையில் அவர் பெண் பாடகிகளோடு ஜோடி கட்டிப் பாடிய ஐம்பது தலை சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பைக் கொடுக்கிறேன்.
இதில் அவரின் தனிப்பாடல்களான "தேன்மொழி எந்தன் தேன்மொழி" (சொல்லத் துடிக்குது மனசு) "மலையாளக் கரையோரம்" (ராஜாதி ராஜா),"தூளியிலே ஆடவந்த" (சின்னத் தம்பி) போன்ற பாடல்களும், சோகப் பாடல் வரிசையில் "அடி கானக் கருங்குயிலே (பொன்மனச் செல்வன்), "குடகு மலைக் காட்டில் வரும்" (கரகாட்டக்காரன்) , வெண்ணிலவு (சின்ன மாப்ளே), "வா வா மஞ்சள் மலரே" (ராஜாதி ராஜா) போன்றவற்றோடு இன்னும் ஏராளம் பாடல்களைப் பதிவின் போக்கினை மாற்ற முடியாததால் சேர்க்க முடியவில்லை.
தொடர்ந்து இதோ ஐம்பது வயசுக்கு ஐம்பது பாட்டு :-)

1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்
3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்
4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை
6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை
7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி
8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு
9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே
10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி
11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)
12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்
13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்
14. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்
15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே
16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்
17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்
18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே
19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை
20. அன்பே நீ என்ன - பாண்டியன்
21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்
22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்
23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்
24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி
26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்
27. மலைக்கோவில் வாசலில் - வீரா
28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்
29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி
30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்
31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்
32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை
33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்
34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா
36. சிங்கார மானே தேனே - தாய் மொழி
37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை
38. மானே மரகதமே - எங்க தம்பி
39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்
40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா
41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்
42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா
43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி
44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்
45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்
46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்
48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள
49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்
50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே

Thursday, October 15, 2015

"மனசோடு பாடிய பெண் குயில்கள்" இசைஞானி இசையில்

"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை"

இன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி "மாலையில் யாரோ மனதோடு பேச". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.

நம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள். 

அந்த வகையில் "மாலையில் யாரோ மனதோடு பேச" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.

ஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின்  தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே. 
இதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.

1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)
 http://www.youtube.com/watch?v=QwS3i0_iLOg&sns=tw

2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் -  சித்ரா (புன்னகை மன்னன்)
 http://www.youtube.com/watch?v=OrV5yxTDsRI&sns=tw

3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)
 http://www.youtube.com/watch?v=lL-7q3g0k3k&sns=tw

4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)
 http://www.youtube.com/watch?v=hcFwEAkcBxw&sns=tw

5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)
  http://www.youtube.com/watch?v=Uje_MqHKYEE&sns=tw

6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)
 http://www.youtube.com/watch?v=_j3goSKLjaw&sns=tw

7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு
(பி.சுசீலா (வைதேகி காத்திருந்தாள்
  http://www.youtube.com/watch?v=nhpo86rMDlQ&sns=tw

8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம் 
(ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
 http://www.youtube.com/watch?v=jnZ2gPfkxoo&sns=tw

9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
(எஸ்.பி.சைலஜா (தனிக்காட்டு ராஜா)
 http://www.youtube.com/watch?v=D3XWdfLBUM8&sns=tw

10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)

11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)
 http://www.youtube.com/watch?v=0heiukbzv1E&sns=tw


12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)
 http://www.youtube.com/watch?v=vfzl0gkO58g&sns=tw

13.  பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)
 http://www.youtube.com/watch?v=6NdExQZKNro&sns=tw

14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)

16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)

Saturday, October 10, 2015

எட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்

B

"வடிவேலுவோடு தமிழ் சினிமாவின் நகைச்சுவை போம்" என்று சமீபத்தில் ட்விட்டியிருந்தேன்.
வடிவேலுவின் அரசியல் வருகையும், தமிழ் சினிமாவின் ரசனைப் போக்கும் சமகாலத்தில் பாதாளத்தில் போய்ச் சேர, இன்றைய மோசமான இறப்பர் நகைச்சுவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பவர் எல்லோருமே இதை ஏற்றுக் கொள்வர். இன்று 24 மணி நேர நகைச்சுவைச் சின்னத்திரை அலைவரிசைகளில் இவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.

"கருப்பு நாகேஷ்" என்றும் "வைகைப் புயல்" என்றும் அடைமொழியோடு சிறப்பிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் வடிவேலுவின் பிறந்த நாள் இன்றாகும். தமிழ் சினிமாவில் நாயகர்களில் இருந்து குணச்சித்திர நட்சத்திரங்கள் வரை பார்க்கும் போது விரல் விட்டுப் பார்க்கும் ஒரு சிலருக்கே தமிழ் மண்ணின் அடையாளம் வாய்த்திருக்கிறது. அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம கிராமத்து ஆளு ஆகி விடுகிறார்.

டி.ராஜேந்தரின் "என் தங்கை கல்யாணி" யில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடம், பின்னர் சில வருடம் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த "என் ராசாவின் மனசிலே" வில் கவனிக்கத்த ஒரு வேடம் என்று வடிவேலுவின் திரைப்பயணம் ஆரம்பித்த போது பின்னர் ராஜ்கிரணை விடவும் வெகு சிறப்பாகப் பயன்படுத்திய ஆரம்ப கால இயக்குநர் என்ற வகையில் ஆர்.வி.உதயகுமார் அவர்களே புண்ணியம் கட்டிக் கொள்கிறார். "சின்னக் கவுண்டர்" இல் ஆரம்பித்தது இந்தக் கூட்டுப் பயணம்.
"தேவர் மகன்" வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கும் பாலம் போட்டுக் கெளரவப்படுத்தியது.
பாரதிராஜா "கிழக்குச் சீமையிலே" எடுத்த போது வடிவேலுவை ஏகமாகக் கொண்டாடியதை அன்றைய சினிமா உலகை அறிந்தவர்களுக்குப் புரியும். 
சுந்தர்.C எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய இயக்குநர் அல்ல, இவரின் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காலத்தில் முன்னணியில் கோலோச்சிய நடிகர்களை மீளவும் பயன்படுத்தியிருப்பது ஒரு சிறப்பு என்றால் இன்னொரு சிறப்பு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை நகைச்சுவை சார்ந்த முழு நீள அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களின் முதல்தர இயக்குநர் என்றால் சுந்தர்.C தானே. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இவரோடு இணைந்த படங்களில் "வின்னர்" முத்திரை பதித்த நகைச்சுவைக்கு உதாரணமாகியது. கிரி, தலைநகரமும் சேர்க்க வேண்டியது.

வெளியில் என்னதான் மாறுபட்டுக் காட்டிக் கொண்டாலும் நம் எல்லோருக்குள்ளும் வடிவேலுவின் குணாதிசியம் ஒட்டி உறவாடுகிறது. அந்தப் பலவீனத்தைக் , கோழைத்தனத்தைத் தன் நகைச்சுவையில் பலமாக வெளிப்பட்டுத்தி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் இவர். இதன் தொடக்கமாக நான் "அரண்மனைக் கிளி"யைச் சுட்டுவேன். https://m.youtube.com/watch?feature=youtu.be&v=1wWfZL9rVxo

வடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத "இளையராஜாவின் மோதிரம்" என்றொரு படம்  வடிவேலுவை நாயகனாக்கி எடுக்க முயற்சித்தார்கள். ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு முன்னோடி ஆகியிருக்கும்.

இசைஞானி இளையராஜா இசையில் "எல்லாமே என் ராசா தான்" படத்தில் "எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்"பாடலாசிரியன் பொன்னடியான் வரிகளில்  வடிவேலு முதன்முதலில் பாடிய முழு நீளப் பாடல். ஜே.பி.சந்திரபாபுவுக்குப் பின் ஒரு நகைச்சுவை நடிகர் தேர்ந்த பாடகராக அடையாளப்படுத்தப்படுவது வடிவேலு வழியாகவே. அதன் பின் நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். "எட்டணா இருந்தா" பாடல் ஒலிப்பதிவின் போது வடிவேலுவின் சேஷ்டைகளைப் பார்த்து இளையராஜா விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது அப்போதைய சினிமாச் செய்தி.
 http://www.youtube.com/watch?v=7LTrDF-S0Kk&sns=tw


அது சரி, "எட்டணா இருந்தா" பாடலைப் பற்றி எழுத வந்து வடிவேலு புராணமே பாடிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்




Thursday, October 8, 2015

வேதாளம் வந்திருக்குது

அப்போதெல்லாம் படம் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒரு நண்பர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோவும் இருக்கும். வீட்டுப் பெரியவர்கள் கையில காலில விழுந்து அனுமதி கேட்டுத்தான் படம் பார்க்க முடியும். 

அப்படித்தான் ஒருமுறை கந்தசஷ்டி விரதம் முடிந்து எங்களூர் கந்தசுவாமி கோயிலில் சூரனை முருகன் வேட்டையாடிய சூரசம்ஹாரம் முடிந்த கையோடு எங்கள் திருவிளையாடலைக் காட்டினோம். இணுவில் சந்தியில் இருந்த வீடியோக்கடையில் வாடகைக்குப் படக் கொப்பியும் எடுத்தாச்சு. 
நண்பரின் பெரியப்பா முறையானவர் பக்திப் பழம். விரதக் களைப்போடு ஆர்வமாக "என்ன படம் தம்பி போடுறியள்" என்று கேட்க
"சூரசம்ஹாரம்" என்று நாங்கள் சொல்லவும் அவருக்குப் புழுகம் தாங்க முடியவில்லை அவரும் வந்து படக் கோஷ்டியோடு குந்திக் கொண்டார். எமக்கோ அந்த நாளில் வந்த பொம்மை, பேசும்படம் சஞ்சிகைகளில் சூரசம்ஹாரம் படக் காட்சிகளைக் கண்ட அனுபவத்தில் திண்டாட்டம். படம் அரைவாசிக் கட்டத்துக்குப் போக முன்பே பெரியப்பா வீரவாகு தேவர் ஆனார் என்பதையும் எழுத வேண்டுமா?

போதைவஸ்தின் கேட்டை மையைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் ரஜினி "ராஜா சின்ன ரோஜா" கமல் "சூரசம்ஹாரம்" என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அந்தக் காலத்தில் மண்வாசனை உள்ளிட்ட படங்களின் பிரப தயாரிப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக  இருந்த அவர் "சூரசம்ஹாரம்" மூலம் இயக்குநர் அந்தஸ்த்துப் பெற்றார். சித்ரா லட்சுமணனை முன்னர் வானொலிப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது சூரசம்ஹாரம் படம் இயக்கிய அனுபவத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
அக்னி நட்சத்திரம் வந்த சூட்டோடு சூடு கிளப்பிய நடிகை நிரோஷா, உச்ச நட்சத்திரம் கமலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது அப்போது எங்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது. அப்போது நிரோஷா மைதிலி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் மைதிலி என்றே குறிப்பிடப்படுகின்றார்.

"வேதாளம் வந்திருக்குது" பாடலை இளையராஜா எழுத மற்றையவை கங்கை அமரனின் கை வண்ணம். 

பாடகர் அருண்மொழி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே "நான் என்பது நீ அல்லவோ", "நீலக்குயிலே" பாடல்கள் இரண்டைத் தன் அறிமுகப் படத்தில் பாடியது புதுமை. முதலில் கங்கை அமரன் தான் பாடுவதாக் இருந்ததாம்.
சுசீலா அவர்கள் தன் குரலை அப்படியே மாற்றம் செய்யாது கொடுத்திருந்தாலும் "ஆடும் நேரம் இதுதான்" பாடலைக் கேட்கும் போதெல்லாம் போதையோடு பாடும் பாங்கைக் கொடுக்கும் உணர்வு. இசையும் அந்தப் பாடலை முறுக்கேற்றியிருக்கிறது. இந்தப் பாடலைச் சில வருடம் முன் முதன்முதலில் யூடியூபில் அரங்கேற்றிய பெருமை எனக்கே :-))

இசைஞானி இளையராஜா தன் முன்னணிப் பாடகர்களின் இயல்பான குரலை மாற்றிப் பாட வைக்கும் வகையில் ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது குறித்த ஒரு தனிப்பதிவும் எழுத உள்ளேன். 
பாடகர் மனோ "முக்காலா" "அழகிய லைலா", "ஏ ஷெப்பா" போன்ற பாடல்களில் இம்மாதிரித் தன் குரலின் இயல்பை மாற்றிப் பாடி அந்தப் பாடல்களும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக அமைவது "வேதாளம் வந்திருக்குது". கூடப் பாடிய சைலஜாவுக்குக் குரலை மாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை.

"பாடிப் பார்க்கலாம் ஒரு தேவாரம்" (நீலக் குயிலே), "வந்து தேவாரம் பாடி நிக்குது (வேதாளம் வந்திருக்குது) என்று ஒரே படத்தின் இரு பாடல்களில் தேவாரம் வருகிறது. (என்னே ஆராய்ச்சி என்னே ஆரய்ச்சி :p

வேதாளம் பாட்டுக்கு மூத்த அக்காள் முறை எஞ்சோடி மஞ்சக்குருவி.

இந்தப் பாடலை இன்று ஒரு அதி நவீன ஒலித்தரம் பொருந்திய ஸ்பீக்கரின் வழியாகவோ, ஹெட்போன் வழியாகவோ கேட்டுப் பாருங்கள். இன்றைய நவீன இசையையும் கடந்த அந்தத் துள்ளிசையிம் ஆரம்பம் தொட்டு முற்றுப் புள்ளி இசை வரை அதகளம் தான், பாடலில் பயன்படுத்தப்பட்ட எல்லா இசைக் கருவிகளின் உச்ச தாண்டவம் இந்தப் பாட்டு.

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=OcnWFDXNEd8

Thursday, October 1, 2015

பாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே

அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும்
கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

பாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.

இந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.
அந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.

சந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.
இசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் "சந்திரலேகா" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை. 
"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.

"அரும்பும் தளிரே" பாடல் 
அருண்மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும், 
http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Chandraleka/Arumbum_Thalire_Bit.mp3
அப்படியே சோக ராகமாய் "தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.
http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Chandraleka/Tharai_Varaamal.mp3

"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே"
 ராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.
 http://www.youtube.com/watch?v=CBPQBR5eY08&sns=tw

SoundCloud இல் குளிக்க

Monday, August 24, 2015

"கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் டயரிக்குறிப்பிலிருந்து


 "விவித்பாரதி" வர்த்தக சேவையில் கட்டுண்டு கிடந்த 90களின் ஆரம்பம் அது. அப்போதெல்லாம் ஆகாசவாணியின் விவித்பாரதி எடுத்து வரும் வெகிவர இருக்கும் திரைப்படங்களுக்கான குறு விளம்பரங்களினூடே சில நொடிகள் மட்டும் அறிமுகமாகும் பாடல்களே அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணுவதுண்டு.
அப்படியாக அறிமுகமானது தான் கேளடி கண்மணி படப் பாடல்கள்.
"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" என்று வாத்திய இசையைத் தொடரும் எஸ்.பி.பியின் குரல் அப்படியே குறைய கேளடி கண்மணி விளம்பரம் ஆரம்பிக்கும் பின்னர் "தென்றல் தான் திங்கள் தான்" என்று ஜேசுதாஸ் தொடங்கி சித்ராவின் கைக்குப் போக முன்பே, மீண்டும் படத்தின் விளம்பரம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து அப்படியே "நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றித் தூங்காது கண்ணே" 
என்று ஆளுக்குத் தலா இரண்டு அடிகள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் பட அப்படியே கேளடி கண்மணி பட விளம்பரம் ஓய்ந்து விடும்.
நம்மூரில் கடும் யுத்தம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க, மின்சாரமும் நின்று போக, கிடைத்த பேட்டரிகளில் சிலதை வைத்துக் கொண்டு தான் இந்த விவித்பாரதி நிகழ்ச்சியை இரவில் கேட்பேன். சரியாக எட்டு மணிக்குத் திரை விளம்பரங்கள் வரும் என்று நினைவு.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அந்த பேட்டரி சக்தியில் இயங்கிய டேப் ரெக்கார்டர் வழி "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் மீதான மோகம் தலைக்கேற  அந்தச் சில நிமிடத் துளிகளை ஒலிப்பதிவு செய்து பேட்டரியின் கையிருப்பைக் குறைத்துக் கொண்டது தனிக்கதை. பின்னர் அந்த பேட்டரிகளை நிலத்தில் வீசி அடித்து மீண்டும் டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்ட கதையாகத் தொடர்ந்தது.

யுத்தம் கடுமையானதால் என் படிப்பைக் கொழும்பில் தொடர வைக்கலாம் என்று வீட்டார் முடிவுகட்டியதன் விளைவாக, அம்மாவுடன் தலைநகருக்கு வந்தேன். பிள்ளை தனியாகத் தங்கிப் படிக்கப் போகுது என்று என் மேல் அளவு கடந்த கரிசனை அம்மாவுக்கு. 
அப்போது வெள்ளவத்தை சவோய் தியேட்டருக்கு எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கடை வளாகம் இருந்தது. அதன் மேல் அடுக்கில் ஒரு பெரிய ரெக்கார்டிங் பார். தனியனாக ஒரு நாள் கொழும்பைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய எனக்கு அந்த ரெக்கார்டிங்க் பார் கண்ணில் படவே அங்கு போய் வித விதமாக அடுக்கி வைத்திருந்த எல்.பி.ரெக்காட்ஸ் ஐ எல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி என்று ஓரமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒலி நாடாக் குவியலில் "கேளடி கண்மணி" தெரிந்தது.அள்ளிக் கொண்டேன் அதை.
கொழும்பில் உறவினர் வீட்டில் என்னை விட்டுவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் போகத் தயாரானார் அம்மா. "எனக்கு இஞ்சை இருக்கப் பிடிக்கேல்லை நானும் உங்களோட வாறன்" என்று அழுது புலம்பியதும் அம்மா என் சூட்கேசையும் சேர்த்து அடுக்கினார். சூட்கேஸ் ஓரமாக அந்தக் "கேளடி கண்மணி" ஒலிநாடாப் பேழையை வைத்தேன்.  எஸ்.பி.பாலசுப்ரமணியம் முகம் மட்டுமே பெரிதாக வைத்து அழகாக வடிவமைக்கப்படிருந்த அந்தப் பேழையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிய பயணம். வழியில் வவுனியா இராணுவச் சோதனைச் சாவடியில் ஆட் பரிசோதனைக்காக இன்னொரு பஸ்ஸில் எம்மை ஏற்றினார்கள். சூட்கேஸ் ஐயும் திறந்து காட்டி விட்டுத்தான் வருவார்களாம். எமக்கான சோதனை முடிந்து பஸ் நடத்துனரோடு கூட இருந்த கைத்தடிகளிடமிருந்து  சூட்கேஸைப் பெற்றுத் திறந்தால் "கேளடி கண்மணி" மாயம். 
"கேளடி கண்மணி" வந்து ஐந்து ஆண்டுகளுப் பின்னரேயே சொந்தமாக அந்தப் படப் பாடல்கள் என் கையில் நிரந்தரமாகக் கிட்டும் வாய்ப்பு வந்தது, இருந்தாலும் அந்த எக்கோ ஒரிஜினல் "கேளடி கண்மணி" ஒலி நாடாப் பேழை தொலைந்த கவலை எனக்கு இன்னமும் உண்டு.

ஒரு காலத்தில் விவித் பாரதியில் ஒரு துளி பாடலைக் கேட்கத் தவமிருந்த காலம் போய் பின்னாளில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ஆகி "காதலர் கீதங்கள்" என்ற தொகுப்பில் அளவுகணக்கில்லாமல், ஆண்டுக்கணக்காக "நீ பாதி நான் பாதி கண்ணே" பாடலை ஒலிபரப்புவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். "நீ பாதி நான் பாதி கண்ணே" கவிஞர் வாலி முத்திரை, இதே வாலி முன்னர் இதே கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன் கூட்டணிக்கு "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று இன்னொரு அற்புத
 படையலையும் கொடுத்த கணக்கே தீராது,

"மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ" சாதனை படைத்த பாடல் காதலின் வேதனை துடைத்த பாடல் என்றெல்லாம் அப்ஸராஸ் இன்னிசை வார்ப்புகள் மெல்லிசைக் குழு அப்போது கொண்டாடியிருந்தது இந்தப் பாடலை.  "எடேய் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியிருக்கிறாராம்" என்றெல்லாம் கூட்டாளிமாரிடம் வியந்து கொண்டே உள்ளுக்குள் நாமும் பாடிப் பார்க்கலாமே என்று விஷப்பரீட்சை எல்லாம் செய்ததுண்டு.
ஆனால் மெல்பர்னுக்கு ஒருதடவை கங்கை அமரன் உடன் இசைக்கச்சேரிக்கு வந்திருந்த எஸ்,பி.பி "மூச்சு விடாமப் பாடினா மனுஷன் செத்துடுவான் இல்லியோ" என்று சொல்லி அந்தச் சிதம்பர ரகசியத்தைப் புஸ்வாணம் ஆக்கினார். அத்தோடு "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் பாவலர் வரதராஜன் அவர்கள் எழுதியது என்று ரெக்கார்டில் போட்டிருந்தாலும் அது உண்மையில் கங்கை அமரன் அவர்களே எழுதியது என்று அதே மேடையில் சொன்னார் எஸ்.பி.பி.

"தென்றல் தான் திங்கள் தான்"இந்தப் பாடலை ராஜா சார் கம்போஸ் பண்ணும் போது எனக்குப் பிடிக்கவே இல்லை. வேற ஒரு மெட்டு கொடுங்களேன் சார் என்று கேட்டேன். ராஜா சாரோ "நீ இருந்து பாரேன்" என்று தன்னைச் சமாதானப்படுத்தியதாகவும் பின்னாளில் அந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெற்றது என்பதையும் "கேளடி கண்மணி" இயக்குநர் வஸந்த் ஒருமுறை ராஜ் டிவி பேட்டி ஒன்றில் சொல்லக் கேட்டுக் கப் என்று அந்தத் தகவலைப் பிடித்து வைத்துக் கொண்டேன்.
"தென்றல் தான் திங்கள் தான்" (பாடலாசிரியர் பிறைசூடன் எழுதியது) பாடல் குறித்து ஒரு முழு நீளப் பதிவையும் எழுதியிருக்கிறேன் இங்கே http://www.radiospathy.com/2011/11/blog-post_08.html

"கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ" என்ற ஆண்டாளின் திருவாய்மொழியை  "காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா" பாடல் உருவாக்கத்தின் போது இளையராஜா, கவிஞர் வாலியிடம் பகிர்ந்ததைக் கேட்டபோது கற்பனை செய்து பார்த்தேன். இம்மாதிரியான பாடல்களின் உருவாக்கங்களின் போது தேவார, திருவாசகம் தொட்டு நாலாயிரத் திவ்ய பிரபந்தம் வரை இசைஞானியின் ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பிரசவிக்கப்படும் தருணங்களில் பேசு பொருளாக இருக்குமோ என்று. குறிப்பாக வாலி கலந்து கொள்ளும் அந்தச் சபைகளில்.
இங்கே "கேளடி கண்மணி படத்தில் ஆண்டாளே வந்திருக்கிறார். "வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து" பாடல் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் தனித்தனியாக அந்தப் பாசுரத்துக்கு மெய்யிசை சேர்க்கப்பட்டு உயிரோடு உலாவ விடப்பட்டிருக்கிறது.

"என்ன பாடுவது என்ன பாடுவது" விளையாட்டுத்தனமான துள்ளிசை, கங்கை அமரன் வரிகளில் அவர் அண்ணன் குழுவினரோடு பாடியது. "எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்" பாடலின் உறவு முறை.

"தண்ணியில நனைஞ்சா" பாடல் தான் கேளடி கண்மணி படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாட்டாக இருக்கும். அந்தப் பாடலை எழுதியது மு.மேத்தா. ஆனால் வட்டியும் முதலுமாக இன்னொரு பாடலில் தன் பேரை அழுத்தமாக பதிய வைத்து விட்டார் அதுதான் 
"கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று"

"கற்பூர பொம்மை ஒன்று" பாடலை இலக்கியா பிறக்கும் முன்னரும் எத்தனையோ தடவை கேட்டு அழுதிருக்கிறேன். இப்போதும் கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சரணத்தில் கண்ணில் நீர் முட்டுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வளவு தூரம் உணர்வைச் சீண்டிப் பார்க்கும் பாடல் இது. தாயாகவும் என்னக் உணரும் சந்தர்ப்பங்கள் பலவற்றில் இந்தப் பாடல் மடி சுரப்பது போல அமைந்து விடுகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நாயகனாக நடித்த படங்களில் முக்கியமானதொரு வெற்றி படமாக "கேளடி கண்மணி" அமைந்தது. அப்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது.
கேளடி கண்மணி படம் ஓடி முடிந்த சில வருடங்களில் ஆனந்த விகடனில் சிறுகதை ஒன்று. அதில் குறிப்பிட்ட கதைக்களத்தில் "கேளடி கண்மணி" படத்தின் கடைசி நாள் காட்சியில் ஹவுஸ்புல் என்றதொரு குறிப்போடு கதாசிரியர் எழுதிவிட்டார். அடுத்த இதழில் ஒரு வாசகர் அதைச் சுட்டிக் காட்டி "எப்படி கடைசி நாள் காட்சி ஹவுஸ்புல்லாக இருக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தொடர்ந்து மறு வாரம் வந்த விகடன் இதழில் இன்னொரு வாசகர் "சேலம் விஷ்ணு" படம் ஏதோவொரு தியேட்டரில் இம்மாதிரி கடைசி நால் ஹவுஸ்புல்லாக ஓடியது என்று ஆதாரத்தோடு எழுதியிருந்தார். 

"கேளடி கண்மணி" படத்தின் தலைப்பு வடிவமைப்பைப் பாருங்கள். எவ்வளவு கலை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் இம்மாதிரித் தலைப்பைச் செதுக்கிக் காட்டுவதிலேயே தேர்ந்ததொரு கலா ரசனை மிளிரும்.

"புதிய பாதை" என்ற படத்தைத் தயாரித்து 1989 இல் வெளியிட்ட விவேக் சித்ரா சுந்தரம் (விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர்)அவர்கள் அந்தத் தேசிய விருதுப் படத்தைத் தொடர்ந்து "கேளடி கண்மணி" என்ற இந்தத் தேசிய விருந்தை 1990 இல் ஆக்கிப் படைத்தார். இந்த ஆண்டோடு இந்தப் படம் வெள்ளி விழா காண்கிறது.
"கேளடி கண்மணி" பொன் விழா கடந்தும் நினைவு கூரப்படும்.


Thursday, August 20, 2015

செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது


அப்போதெல்லாம் அயற் கிராமமான சுன்னாகம் பொது நூலகத்திற்கு ஓடுவேன். தமிழகத்தில் இருந்து வரும் வித விதமான பத்திரிகைகள் படிக்க. அதுவும் குறிப்பாக தினத்தந்தி வெள்ளிமலர்.  

தினத்தந்தி வெள்ளிமலரில் கலர் கலரான அழகான வடிவமைப்புடன் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடான  பட விளம்பரமொன்று வந்தபோது இசைஞானி இளையராஜாவைத் தவிர மிச்சது எல்லாமே அறிமுகமற்றதாக அமைந்திருந்தது. வழக்கம் போல இளையராஜா என்ற அமுதசுரபியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அப்போதைய பொருளாதார நெருக்கடியில் ( ஹிஹி நமக்கெல்லாம் பாக்கெட் மணியும் இல்லை உசிலைமணியும் இல்லை) கையில் இருந்த காசை முதலிட்டு றெக்கோர்டிங் பார் இல் பதிவு பண்ணி ஆசையாகக் கொண்டு வந்து கேட்டால் அமுதசுரபி கை விடுமா என்ன?
அதுதான் செவ்வந்தி படப் பாடல்கள்.

"அன்பே ஆருயிரே" என்றொரு காதல் சோகப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது.  http://www.youtube.com/watch?v=q70UdcTpeKc&sns=tw கடந்த வருடம் சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.பி வந்திருந்த போது ஒரு பையன் பாட, இந்தப் பாடலைத் தான் பாடியதையே மறந்து விட்டதாகச் சொன்னபோது நமக்குத் தான் ஆச்சரியம் கிளம்பியது. ஆனால் ரெக்கார்டு படைத்தவருக்கு இதுபோல் இன்னும் பல மறந்தே போயிருக்கும்.

ஜெயச்சந்திரன் & சுனந்தா  ஒரு அட்டகாஷ் பாட்டு ஜோடி. சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரனோடு ஜோடி கட்டிய "காதல் மயக்கம்" பாடலால் நிகழ்ந்ததால் செவ்வந்தி படத்துக்காகக் கூடு கட்டிய "செம்மீனே செம்மீனே" 
பாட்டிலும் அதே ரசதந்திரம்.
செம்மீனே செம்மீனே பாடலைக் கல்யாணக் கொண்டாட்டப் பாடலோடு சேர்த்து விடுவோம்.
 http://www.youtube.com/watch?v=BBeOajpOadA&sns=tw 
வாத்தியக் கூட்டிசையோடு கூடிக் குலாவும் சேர்ந்திசை குரல்கள் (கோரஸ்) ஐத் தவிர்க்காமல் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டும்.

இதே போல் இன்னொரு மெல்லிசை குரல் கூட்டணி அருண்மொழி & ஸ்வர்ணலதா. இருவரும் சேர்ந்து பாடிய "புன்னைவனப் 
பூங்குயிலே பூமகளே வா" 
 http://www.youtube.com/watch?v=upXge9OLt2E&sns=tw 
செம்மீனுடன் போட்டி போட்ட ஹிட். என் தனிப்பட்ட விருப்புப் பாடல் ஒப்பீட்டளவில் "புன்னைவனப் பூங்குயிலே" தான் அதுவும்
"என் கண்கள் சொல்லும் மொழி காதலே" என்று ஸ்வர்ணலதா உருகும் தருணம் கரைந்து விடுவேன்.
அது போல் "அலை ஓய்ந்து போகும் " என்று அருண்மொழி தொடங்கும் வகையறாவும்.

ஸ்வர்ணலதாவுக்கு இரட்டைப் பரிசு இந்தப்  படத்தில். "பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு"  http://www.youtube.com/watch?v=nZEJ4xHWQ58&sns=tw என்று கோரஸ் குரல்கள் பாடி ஆரம்பிக்க மனோ, ஸ்வர்ணலதா கொடுக்கும் இந்தச் சரக்கு பிரபு போன்றோர் படங்களுக்கு அப்போது சென்று சேர்ந்திக்க வேண்டியது.

படத்தில் பெண் தனிக்குரல் பாடலாக உமா ரமணன் பாடும் "வாசமல்லிப் பூவு பூவு" http://stream.shakthi.fm/ta/Sevanthi_www.shakthi.fm/shakthi.FM-Vasamally.mp3 இந்தப் பாடல் எல்லாம் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டிய பாடல் ஹும்.

பாடல்களை கவிஞர் வாலி, முத்துலிங்கம், பொன்னடியான், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

ஒளிப்பதிவாளர் நிவாஸ் எழுபதுகளிலே கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு போன்ற படங்களை இயக்கி மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கிய படம் இந்த செவ்வந்தி.
அப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவில் அமைச்சராக விளங்கிய அரங்கநாயகத்தின் மகன் சந்தனபாண்டியன் தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்றும் கண்டுபிடிச்சாச்சு. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீஜா அப்போது தமிழில் மெளனம் சம்மதம், சேரன் பாண்டியன் படங்களில் நடித்தார். செவ்வந்தி அவருக்கு தனி நாயகி அந்தஸ்த்தையும் கொடுத்தது.

செவ்வந்தி படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு தூரம் நன்மை கிட்டியிருக்குமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி திரையைத் தாண்டி நிஜத்திலும் மணம் முடித்தனர். சந்தனபாண்டியன், ஶ்ரீஜாவின் மகள் பேட்டி கூட சமீபத்தில் வந்தது. வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்.

சரி சந்தனபாண்டியன் & ஶ்ரீஜாவை விட்டு இசை ரசிகர் நமக்கு இந்தப் படத்தால்  21 ஆண்டுகள் தாண்டியும் தெவிட்டாத தேன் கிட்டியது இன்னொரு பேறு.


இந்தப் படத்தின் உதவி இயக்குநர் ரதன் சந்திரசேகர் இப்பதிவைக் கண்டு பகிர்ந்தது.
நன்றி KANA PRABA... உங்கள் பதிவில் இணையிலாப் பெருமகிழ்ச்சி எனக்கு....நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம். படம் பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்தபோதும் - முதல்நாள்தொட்டு கடைசிநாள் வரை பணியாற்றிய ஒரே உதவி இயக்குனர் நான்தான்.  அப்பா....என்னவோர் அனுபவம்...என் இயக்கத்தில் வெளிவரப்போகும் 'என் பெயர் குமாரசாமி' படத்தை இயக்கும்போது எனக்கு பல இடங்களில் கை கொடுத்தது இந்தப் படத்தின் 'அசிஸ்டென்ட் ' அனுபவங்கள்தாம்.  என் பெயர் குமாரசாமியின் டைட்டிலிலும்  'முதல் வணக்கம் - ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ்.நிவாஸ்.' என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். 

செவ்வந்தி பாடல்களை  சுளைசுளையாக சுவைத்திருக்கிறீர்கள்...நன்றி. பாடல்கள் குறித்து நீங்கள்  பதிவிட்டிருப்பதனால்...'பொன்னாட்டம் பூவாட்டம்' பாடல் குறித்த ஒரு சுவையான தகவலை கீழே பகிர்ந்திருக்கிறேன்....உங்களுக்கு பயன்படக் கூடும்......

நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம் 'செவ்வந்தி'. 

அந்தப்  படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பிய நேரத்தில்...இளையராஜா படு பிசி. அவரது பாடல்களுக்காக க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள் .  படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நிவாஸ் அவர்களுக்கு ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. நாங்கள் இருப்பதோ ஊட்டியில் உள்ளத்தி என்கிற ஒரு மலை கிராமத்தில். இளையராஜாவிடம் வந்து ட்யூன் கேட்டு வாங்கி வர நேரமில்லை. நிவாஸ் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா?

'ஜானி' படத்தின் ஒரு பாடல் காசெட்டை வாங்கி வரச் செய்து...அதில் வரும் 'ஆசையக் காத்துல தூதுவிட்டு.....'பாடலை டேப் ரெக்கார்டரில் ஒளிபரப்பி அதற்கு நடனத்தை கம்போஸ் செய்யும்படி டான்ஸ் மாஸ்டர் சின்னாவிடம் கூறினார். 'ஜானி' படப் பாடலுக்கு நடன அசைவுகள் படமாக்கப்பட்டன. சினிமா தெரியாத நாங்கள் சிலபேர்  (வடிவேலு வார்த்தையில் சொல்வதானால் 'அப்ரசண்டிசுகள்'....)   முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

படப்பிடிப்பு முடித்து அந்தப் பாடலுக்கான புட்டேஜுகளை  எடிட் செய்து 'ஜானி' பாடலை உருவிவிட்டு  இளையராஜாவிடம் கொண்டு போய்  'பப்பரப்பே' எனக் காட்டினோம். அதற்கு ஓரிரு மணிநேரத்தில் ட்யூனையும் பின்னணி இசையையும் கம்போஸ் செய்து அடுத்த நாள் வாலியை வரச் சொல்லி பாடல் எழுதி வாங்கி , பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் இசைஞானி. நாங்கள் மலைத்து நின்றோம். எங்களைப் பார்த்து நிவாஸ் அவர்கள் சிரித்த நமுட்டுச் சிரிப்பில் இளையராஜாவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தெறித்து விழுந்தது. 

 'பொன்னாட்டம் பூவாட்டம்' வீடியோவில் 'ஜானி' பாடலைப் பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் நெஞ்சில் நெடுநாளாய்க் கிடக்கிறது....


Thursday, August 13, 2015

இசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு


கலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாளராகவும் விளங்கி வந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற பதிவின் வழியாக அவரின் ஆரம்ப காலத்துப் படங்களில் இருந்து சிலவற்றைப் பகிருந்திருந்தேன் இங்கே
அந்தப் பதிவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பாடல்கள் தொடரும் என்றிருந்தேன். ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் கங்கை அமரன் அவர்களுக்குப் புகழ் சேர்த்த இன்னும் சில பாடல்களோடு சந்திக்கிறேன்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி கண்ட "பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த நடிகர் பாண்டியராஜனுக்கு இன்னொரு சுற்று படங்களைக் குவிக்கவும் வழிகோலியது. அந்தப் படத்தின் வசனகர்த்தா அந்தக்காலத்தில் புகழ்பூத்த நகைச்சுவை எழுத்துக்காரர் சித்ராலயா கோபு. பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த தெம்பும் காரணமாக இருக்கக் கூடும், பாண்டியராஜனை இரட்டை நாயகராக வைத்து "டில்லி பாபு" என்ற படத்தை இயக்கினார் சித்ராலயா கோபு. பாண்டியராஜன், ரஞ்சனி, சீதா நடித்த இந்தப் படத்தின் இசையைக் கவனித்துக் கொண்டார் கங்கை அமரன். "டில்லி பாபு" படத்தில் வந்த "கூரைப் புடவை ஒண்ணு வாங்கி வா நாந்தான் உன் சொந்தமல்லவா" பாடலை எண்பதுகளின் திரையிசைக் காலத்தில் வாழ்ந்து கழித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் உச் கொட்டி ரசிப்பார்கள். அந்தளவுக்கு இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் ஏக பிரபலம். இரு வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் நான் இயங்கும் வானொலி வழியாகவும் இந்தப் பாடலைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் என் சார்பில் ஒலிபரப்பி என் கணக்கைத் தீர்த்துக் கொண்டேன். இந்தப் பாடலின் இடையிசை, குறிப்பாக இரண்டாவது சரணத்துக்கு முன்னீடு தான் கங்கை அமரன் கொடுத்த இசையில் அவர் கொடுக்கும் முத்திரை என்பது அவரின் பாடல்களை அறிந்து ரசிப்பவர்கள் உணர்வார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும்  அந்த இனிய பாடல் இதோ

ஆக்க்ஷன் கிங் என்று புகழப்பட்ட பாம்பு கராத்தே நடிகர் அர்ஜீன் ஒரு கட்டத்தில் முழு நீள அடி,உதை அலுத்துவிட எண்பதுகளின் இறுதியில் கொஞ்சம் தாய், தங்கை பாசக் கணக்கை வைத்துப் படங்களில் நடித்தார். அதிலும் கூடப் பழிவாங்கல் இருக்குமே.
அப்படி ஒரு படம் தான் "எங்க அண்ணன் வரட்டும்". அந்தக் காலகட்டத்தில் பெயரே கொஞ்சம் புதுமையாக வைத்து எடுத்த படம் அது. அர்ஜூன், ரூபிஅனி ஜோடி போட்டது.
இந்தப் படத்தில் கங்கை அமரன் அவர்கள் கொடுத்த முத்திரைப் பாடலாக நான் கருதுவது "பூவெடுத்து மாலை கட்டி". இதை அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவும் அடிக்கடி மெய்ப்பித்தது. ஆனால் எனக்கிருந்த பெரும் மனக் கவலை என்னவென்றால் இந்தப் பாடலை ஏதோ ஒரு காதல் ஜோடிப் பாடல் என்றே அனுபவித்துக் கேட்டிருந்தேன். பல காலத்துக்குப் பின்னர் தான் இது அண்ணன் தங்கை பாடல் என்று வரிகளை உன்னிப்பாகக் கவனித்து உணர்ந்து நொந்தேன். உண்மையில் இது காதல் ஜோடிப் பாடலுக்கே வெகு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைவடிவம். 
சமகாலத்தில் இந்தப் பாட்டின் இசை நேர்த்தி கூட கங்கையின் இளைய அண்ணன் கொடுத்த இசையோ என்ற தடுமாற்றமும் கூட இருந்ததுண்டு.

மேலே சொன்ன "கூரைப் புடவை ஒண்ணு" பாடலோடு இங்கே தரும் "பூவெடுத்து மாலை கட்டி பொண்ணுக்கொரு சேலை கட்டிப் பாரு"
பாடலை அடிக்கடி பொருத்திக் கொள்வேன். இந்தப் பாடல் சோல வடிவிலும் உண்டு. சந்தோஷப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

"மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் நான் குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்" http://shakthi.fm/ta/player/play/s3db4b511# 
மறக்க முடியுமா "பிள்ளைக்காக" படத்தில் வந்த இந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை. எத்தனை தடவை இலங்கை வானொலியின் வாழ்த்துப் பாடல்களில் பல நாட்கள் இது தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த அழகான பாடலைக் கூட்டுக் குரல்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடியது போன்று தனிப்பாடலாக இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாடியிருப்பார். கங்கை அமரன் இசையமைக்கும் படங்களில் இவ்வாறு இரட்டைப் பாடல்களில் அவரே ஒன்றைப் பாடுவது அரிதான காரியம். அந்த வகையிலும் இது சிறப்புச் சேர்த்தது. சந்திரபோஸ் ஆக இருக்குமோ அல்லது சங்கர் கணேஷா என்ற குழப்பத்துக்குக் கூட முடிவுகட்டியது கங்கை அமரன் பாடிய இரண்டாவது வடிவம்.


சின்னத்தம்பி என்ற பேரலை அடிக்க முன்னர் பிரபு, பி.வாசு கூட்டணியில் அமைந்த "பிள்ளைக்காக" படத்துக்கு முன்னர் இந்த இருவரும் சேர்ந்து அப்போது ஒரு வெற்றிக் கூட்டணியை "என் தங்கச்சி படிச்சவ" படத்துக்காக அமைத்திருந்தனர். "சொந்த சுமையைத் தூக்கித் தூக்கிச் சோர்ந்து போனேன்" http://youtu.be/KM5gpixtacU
பாடலைச் சொன்னால் இப்போது பலர் படத்தை அடையாளம் காண்பர். அந்தப் படத்திலும் கங்கை அமரனின் இசையும் கை கொடுத்தது என்பதை அந்தப் பாடலின் வெற்றியே மெய்ப்படுத்தும்.

"சின்னத்தம்பி பெரியதம்பி" படத்தில் வந்த "ஒரு காதல் என்பது" பாசலைத் தான் எல்லாரும் சிலாகிக்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடல் மட்டும் அண்ணன் இளையராஜா கொடுத்தது. ஆனால் இதே படத்தில் இன்னொரு அழகான பாட்டு இருக்கே அதை நீங்க யாரும் ஏன் அதிகம் பேசுவதில்லை என்ற தொனியில் கங்கை அமரன் கொடுத்த வாக்குமூலத்தில் முன் மொழிந்த பாடல் தான் "மழையின் துளியில் லயம் இருக்குது" ஆகா என்னவொரு இனிமையான மழைத்தூறல் போலச் சாரலடிக்கும் பாட்டு என்று என்று மனது தாளம் போட சித்ரா பாடுவதை லயிக்காமல் இருக்க முடியாதே. மணிவண்ணனின் ஆஸ்தான நாயகன் சத்யராஜ், பிரபுவோடு கூட்டணியில் நதியாவும் இணைந்த கலகலப்பான படத்தில் கங்கை அமரனின் முத்திரைப் பாட்டு இது.


"நெற்றித் திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே" என்று மேலேழும் அந்த டி.எம்.செளந்தரராஜன் என்ற மேதையின் குரலில் இருந்து சிலாகித்துக் கொண்டே முன்னோக்கி நகரவேண்டும் "பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே" பாடலுக்கு, அப்போது தெரியும் கங்கை அமரன் அவர்களின் சாகித்தியத்தின் மாண்பு.
"நீதிபதி" திரைப்படத்துக்காக கங்கை அமரன் இசையமைத்தது இந்தப் பாட்டு. கே.பாலாஜி அவர்களின் தயாரிப்பில் அண்ணன் இளையராஜாவின் ஆரம்பகாலத்துப் படங்களில் "தீபம்" ஒளியேற்றி வைத்த பாட்டுத் திறத்தில் சகோதரர் கங்கை அமரனும் பாலாஜி அவர்களின் படங்களில் பங்கேற்ற வகையில் இந்தப் படமும் சிறப்புக்குரியது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் என்று அந்தக் காலகட்டத்தில் கே.பாலாஜியோடு இயங்கிய போது ஒன்றை நான் என் கருத்து வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.
கங்கை அமரனின் இசை இளையராஜாவினது ஊற்றோ என எண்ணுமளவுக்கு அமைந்த பாடல்கள் ஒருபுறமிருக்க, நீதிபதி படத்தின் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் முத்திரை போன்று அமைந்திருக்கும். இரு மேதைகளையும் போற்றி விளங்கும் கங்கை அமரனுக்கு இம்மாதிரி வாய்ப்பு எதேச்சையாகவோ  அமைந்து போனது வெகு சிறப்பு.
எண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் இந்தப் பாடல் மணமகள் அழைப்பில் காட்சியோடு பின்னப்பட்டிருக்கும் அளவுக்கு அப்போது பிரபலமானது. இப்போதெல்லாம் உரிமையோடு நண்பர்களின் கல்யாண வீடுகளில் இதை நான் பரிந்துரைக்கும் போது "கிவ் மீ மை தாலி மை லைஃபே ஜாலி ஜாலி" போன்ற வஸ்துகளை  அவர்கள் மோகிக்கும் போது காலத்தின் கொடுமை என்றறிக.
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.சைலஜா குரல்களில் வரும் "பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே" பாடலை முடிந்தால் உங்கள் கல்யாண வீட்டுப் பாடல்களில் சேருங்கள், அமோகமாக இருக்கும். கங்கை அமரனின் இசையில் விளைந்த உன்னதங்களில் இந்தப் பாட்டுக்கு மட்டும் தனிப்பத்தி எழுத வேண்டும் அவ்வளவு மகத்துவம் நிறைந்த பாட்டு. சிலவேளை என் கண் உடைப்பெடுத்துச் சாட்சியம் பறையும் அளவுக்கு இந்தப் பாட்டை நேசிக்கிறேன்.

கங்கை அமரன் கொடுத்த இசை முத்துகளும் கரையில ஆகவே இன்னொரு தொகுப்பிலும் வருவார்.