Pages

Thursday, January 24, 2008

சிறப்பு நேயர் - புதுகைத்தென்றல்

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடரை கடந்த வாரம் நண்பர் ஜீவ்ஸ் பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைத்தார். அவரின் கைராசி நன்றாகவே வேலை செய்து வியாபாரம் சூடு பிடித்து விட்டது. அண்ணாச்சியின் படம் வேறு முதல் தடவை வலையில் அரங்கேறியதால் தல ரேஞ்சுக்கு ஆளோட புகைப்படம் வேறு வெகு பிரபலமாற்று.

மை பிரண்ட் போன்ற சகோதரங்கள் ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் வீதம் போடுங்கண்ணா என்று அன்புத் தொல்லை வேறு. ஆனாலும் "இது ஆவுறதில்ல" என்று கவுண்டர் பாஷையில் சொல்லி விட்டு வாரா வாரம் பிரதி வெள்ளி தோறும் இந்த றேடியோஸ்பதி சிறப்பு பதிவர்களைக் கொண்டு வர இருக்கின்றேன்.

இப்பதிவில் உங்களுடைய ஆக்கங்களும் இடம்பெற வேண்டுமானால், உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உங்களை ஈர்த்த அம்சங்களையும் சொல்லி வைத்து ஒரு மடலை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்.

சரி நண்பர்களே, இனி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.

இந்த வாரம் வலம் வரும் நேயர் புதுகைத் தென்றல் என்ற பெயரில் கடந்த நவம்பர் 2007 இல் பதிவுலகுக்கு வந்து
புதுகைத் தென்றல்

பாட்டுக்குப் பாட்டு

என்று பதிவுகளை அள்ளிக்குவிக்கும் பெண் நேயர். கொழும்பில் தற்காலிகமாக இருந்து கொண்டு இலங்கையில் இயற்கை வனப்பை அணு அணுவாக அவர் ரசிப்பது இவர் சுட்டிருக்கும் புகைப்படங்களிலும் பதிவுகளிலும் தெரிகின்றது.


புதுகைத் தென்றல் சற்று வித்தியாசமாக இலங்கை வானொலியில் வலம் வரும் "இவ்வார நேயர்" பாணியிலேயே தன் விருப்பப் பாடல்களைக் கொடுத்திருக்கின்றார். கேட்டு ரசியுங்கள்.


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்,

வணக்கம். அன்பு நெஞ்சங்களே! நமது இன்றைய கருத்தும் கானமும் நிகழ்ச்சியில் வளமைப்போல் நேயர் ஒருவரின் பாடல் தெரிவு இடம்பெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு வீதி, இலக்கம் 2037 ஐ சேர்ந்த நேயர்
"தென்றல்" அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு போகலாமா?


1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். "சரணாகதி" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
முருகா! முருகா! முருகா!
Get this widget Track details eSnips Social DNA


2. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் "விகடம்" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல "நச்".
அந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்
"அவள் ஒரு தொடர்கதை".

கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.

Get this widget Track details eSnips Social DNA


3.இன்றைய "கருத்தும் கானமும்" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயர் கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்" படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்ணுக்கு மெய்யழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு.
Get this widget Track details eSnips Social DNA



4. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது
அந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். "பூந்தோட்ட காவல்காரன்"
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.
Get this widget Track details eSnips Social DNA


5. குழந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா?
இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,
"நினைத்ததை முடிப்பவன்" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.


இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்
பட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.

Get this widget | Track details | eSnips Social DNA


என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.
மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்
வரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான

கே... எஸ்.. ராஜா.

Sunday, January 20, 2008

சிறப்பு நேயர் - ஜீவ்ஸ்

இசைப் பிரியர்களுக்காக றேடியோஸ்பதியின் வலைப்பதிவு காலத்துக்குக் காலம் புதிய தொடர்களை அறிமுகப்படுத்தி வந்திருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் முயற்சியாக இன்று முதல் அறிமுகப் படுத்தப்படும் தொடர் " றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர்".

இந்தத் தொடரில் நீங்களும் பங்கேற்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியவற்றைக் கீழே தருகின்றேன்.

1. உங்கள் ஆயுசுக்கும் பிடிச்ச பாட்டுக்கள் ஐந்தைத் தேர்ந்தெடுங்கள்.
2. தேர்ந்தெடுத்த பாடல்களின் சிறப்பை உங்கள் எழுத்து நடையில் அவற்றைச் சிலாகித்து
எழுதுங்கள்.
3. பின்னர் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்.
4. அனுப்பப்படும் பதிவர் வரிசைப்படி இந்தப் பாடல் தொகுப்பு இடம்பெற இருக்கின்றது.

பாடல்கள் மீதான ரசனையை மேம்படுத்தும் விதத்தில் இந்தத் தொடர் உங்கள் ஆதரவோடு இடம்பெற இருக்கின்றது. அந்த வகையில் இந்த முதல் பதிவின் பிள்ளையார் சுழியாக
"றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராகச்" சிறப்பிக்கப்படுகின்றார் பதிவர், நண்பர் "ஜீவ்ஸ்".
எண்ணங்கள் இனியவை, தமிழில் புகைப்படக்கலை, இயன்றவரையிலும் இனிய தமிழில் ஆகிய வலைப்பதிவுகளில் தன் கைவண்ணத்தைக் காட்டும் இவர் தேர்ந்தெடுத்த ஐந்து பாடல்களையும் பார்ப்போம் இனி. இப்பதிவைச் சிறப்பித்த ஜீவ்ஸ் இற்கு இனிய நன்றிகள்.

படம் நினைவெல்லாம் நித்தியா ..

இந்தப்பாடல் கேக்கும் போதெல்லாம்... மனசை அள்ளிட்டுப்போகும்.

இளையராஜாவின் இசையில் அற்புதமா வந்திருக்கும்.

" ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்.. பொன்மேகம்"...

இதில் எனக்குப் பிடித்த வரிகள்

" வசந்தங்கள் வாழ்த்தும் பொழுதில் உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் வரையில் மகிழ்ந்து உனக்கு வேராவேன்"


இன்பத்திலும் துன்பத்திலும் உனக்கு உறுதுணையா இருப்பேன்னு இதை விட
அழகா சொல்ல முடியுமா ?
Get this widget | Track details | eSnips Social DNA


******************

படம்: மன்னாதி மன்னன்
பப்பியம்மாவின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒண்ணுன்னு தான் சொல்லுவேன்.

காட்சியமைப்பும் நடிப்பும் அட்டகாசம். பாடல்வரிகள் கண்ணதாசன்.

கண்கள் இரண்டும் என்று
உன்னைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?
...


இதுல தனிப்பட்டு எந்த வரிகளைச் சொல்லறது. ? படத்தின் சில பகுதிகளைப் பாடலே நகர்த்திச் செல்லும்

" கணையாழி இங்கே.. மணவாளன் எங்கே.. காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே "

எல்லாத்தையும் விட இந்தப்பாட்டுல வசீகரம் செய்யறதுன்னா .. சுசீலாம்மாவோட குரல் தான்.
Get this widget | Track details | eSnips Social DNA


******************

"கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)"


பாவாடை காற்றோடு ஆட-ஆட
பருவங்கள் பந்தாட ஆட-ஆட "

விரசமே இல்லாமல் பருவத்தின் இளமையை அதன் அழகை சொல்லும் பாங்கு... கவியரசு கவியரசு தான்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு தமிழின் சுவையும் இனிமையும் நெஞ்சினுள்ளே இனிக்கும்.


இந்தப்பாடலிலே கவியரசர் செய்த சறுக்கல் என்று அவரே சொன்னதாகப் படித்தேன். அது பின் வரும் வரிகள் தாம்

"பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! "

பல்லாடுவது ஒன்று கிழவிக்கு அல்லது குழவிக்கு.. குமரிக்குப் பல்லாடலாமா?
Get this widget | Track details | eSnips Social DNA


***********************



ஓ மனமே.. ஓ மனமே..
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே.. ஓ மனமே..
சில்லு சில்லாய் உடைவது ஏன்

மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளியைத் தந்தது யார்
பூக்கள்தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்?
---

ஒரு வாரத்தில் கிட்ட தட்ட 15 முறை நான் பார்த்தப் படம் இது வரைக்கும் இது மட்டுமே

ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதே அந்தக் கல்லூரிச்சூழலில் நாம் இருப்பதைப் போல்
உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியலை. முக்கியமாய் இந்தப் பாடல்.

இரைச்சலில்லாத இசையை மீறி காதில் தெளிவாக கேட்கும் பாடல் வரிகளுக்காகவே இதை பலமுறைக் கேட்கலாம்.

ஜீவா - ஒரு அருமையான இயக்குனரைத் தமிழ் திரையுலகம் இழந்து நிற்கிறது.


" துளைகள் இன்றி நாயனமா ?"
Get this widget | Track details | eSnips Social DNA

***********************


குமுதம் படத்துல இருந்து.

" மாமா மாமா மாமா ..
ஏம்மா ஏம்மா ஏம்மா "


நடிகவேள் நடிச்சிருக்கும் படம். எவ்வளவு பழைசு.. இருந்தாலும்.. இன்னைக்கும் இந்தப் பாட்டுக் கேக்கும்போதே எழுந்து ஆடத்தோனும்.
இந்தப்பாட்டுல எம்.ஆர். ராதாவும் சில இடத்துல ஆடிருப்பார்.


இனிமையான இசை. இன்றைய சினிமாக்காரர்களின் வார்த்தையில்.. செமக் குத்தாட்டம். அதே நேரம் காதில் தெளிவாக விழும்
பாடல் வரிகள்.

ஹ்ம்ம்ம்... இன்றைய சினிமா எவ்வளவு தூரம் உச்சரிப்பிலும், பாடல் வரிகளில் இருந்தும் விலகி இரைச்சலுக்கு முக்கியம் கொடுத்துக்
கொண்டிருக்கிறது.
Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 18, 2008

துபாயில் பாடிய நிலா பாலு


ஆறு தேசிய விருதுகள் வாங்கியிருக்கின்றார்,
23 மாநில விருதுகள் வாங்கியிருக்கின்றார்,
ஒரே நாளில் தமிழில் 18 பாட்டு பாடியிருக்கின்றார்,
ஒரே நாளில் ஹிந்தியில் 19 பாட்டு பாடியிருக்கின்றார்,
ஒரே நாளில் உபேந்திராவின் கன்னடப்படத்துக்காக கம்போஸ் பண்ணி
17 பாட்டு பாடியிருக்கின்றார்,

The Legend,
one and only
பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் துபாயில் நடந்த இளையராஜாவின் இசைப்படையெடுப்பில் பாட வந்தபோது நடிகர் ஜெயராம், மற்றும் நடிகை குஷ்பு வழங்கும் அறிமுகத்தோடு மேடையில் பாடிய பாடல்களான "இளையநிலா பொழிகிறது", மற்றும் "பொத்தி வச்ச மல்லிக மொட்டு" பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
இவ் ஒலிப்பதிவைத் தந்துதவிய நண்பர் கோவை ரவிக்கும் இனிய நன்றிகள்.












Get this widget Track details eSnips Social DNA

Monday, January 7, 2008

நீங்கள் கேட்டவை 25

மீண்டும் ஒரு நீங்கள் கேட்டவை தெரிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பாடல் தெரிவுகளும் இயன்றவரை அரிதான ஆனால் இனிமையான பாடல்களாகத் தருகின்றேன். கடந்த பாடல் தெரிவில் விருப்பத்தைக் கேட்ட நேயர்களில் சிறீகாந்த் இன் பாடல் தெரிவுகள் மட்டும் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. ஏனையோரில் ஐந்து பேரின் விருப்பப் பாடல்களோடு என் விருப்பமும் இணைந்து வருகின்றது.

முதலில் என் விருப்பமாக "அறுவடை நாள்" திரைக்காக இசைஞானியின் இசைமைத்துப் பின்னணி ஹோரஸ் கொடுக்க சித்ரா பாடும் "தேவனின் கோயில் மூடிய நேரம்" என்றதோர் இனிய பாடல். இந்தப் பாடலை எத்தனை முறையும் அலுக்காது கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் மேடைகளில் பாடப்படுவது வெகு அரிது.


அடுத்து ஒரு மலையாளப் பாடல். றேடியோஸ்பதியின் பெருமைக்குரிய கொ.ப.செ கோபியின் விருப்பமாக மல்லுவூட்டின் All time favourite ஆன "தும்பி வா, தும்பக் குளத்தே" என்று எஸ்.ஜானகி பாட இளையராஜா இசையமைப்பில் "ஓளங்கள்" திரைக்காக இடம்பெறுகின்றது.


காமிரா கவிஞர் சிவிஆர் விரும்பிக் கேட்ட "பாஞ்சாலங்குறிச்சி" திரைப்பாடல் சுவர்ணலதா குரலில் தேவா இசையமைப்பில் வருகின்றது. தன் விருப்பமாக மட்டுமன்றி இசைப்பிரியர்களுக்கும் இந்தப் பாடல் சென்றடைய வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் இந்த indoor & outdoor ஸ்பெஷலிஸ்ட் ;-)


தங்கமலை ரகசியம் திரையில் இருந்து ஒரு தங்கபுதையலைக் கேட்டிருக்கின்றார் வசந்தன்.
பி.சுசீலா பாடும் "அமுதைப் பொழியும் நிலவே" என்ற அந்தப் பாடலை ரி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருக்கின்றார்.



இன்று தொடந்து ஒரே தனிப் பெண் குரல் பாடல்களாக ஒலிக்கிறதே என்று சலிப்பவர்களை ஆறுதல்படுத்த நிறைவாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் ஜோடிப்பாடல் ரிஷான் ஷெரிப் விருப்பமாக "அண்ணா நகர் முதல் தெரு" திரையில் இருந்து சந்திரபோஸ் இசையில் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டாக" ஒலிக்கின்றது.


பாடல்களைக் கேட்பதோடு உங்கள் விருப்பப்பாடல்களையும் அறியத் தாருங்கள். இலகுவில் கிடைக்காத அரிய பாடல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேடித் தருகின்றேன். அவற்றுக்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படுவதையும் பொறுத்தருள வேண்டுகின்றேன்.