Pages

Tuesday, June 2, 2026

இசைஞானி இளையராஜா எனும் இயக்கம் ❤️


இசைஞானி இளையராஜா ❤️

அவர் ஒரு இயக்கம்.

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து இன்னும் உழைக்கும் இசைத் தொழிற்சாலை.

இந்த இசைக்குப் பெரியது, சின்னது என்று எதுவுமே தெரியாது

பிரமாண்டங்களிலும் உழைப்பார், கலைப்படங்களிலும் தன் இசையால் இழைப்பார்.

தென்னகத்தின் தமிழ் - தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் இசையமைப்பாளராகச் சம காலத்தில் இயங்கிய அந்தச் சாதனை இனி எப்போதும் நிகழ்த்திக் காட்ட முடியாத அற்புதம்.

அன்று தேவராஜ் – மோகன் தொடங்கி இன்று தியாகராஜன் குமாரராஜா, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் என்று அந்த வளையம் பெருக்கிறது. 

இப்போது பயணிப்பவர்களின் வயதுகளோடு ஒப்பிட்டால் இவரின் இசைப் பயணத்தின் இரண்டு மடங்கு கொள்ளும்.

தன் இசை மேடைகளில்  வயலின் தொடங்கி ஒவ்வொரு வாத்தியத்துக்குமாக சாரி சாரியாகக் கலைஞர்களை மேடையில் நிரப்பி, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தன் பாடல்களை மீண்டும் இசைக்கும் போது, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்ற சொலவாடையையும் தாண்டி, ஒத்திசைவாக எல்லாக் கலைஞர்களும் பிசிறின்றி இசைக்கும் போது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.

அன்னக்கிளியில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம், தமிழ் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஒரே சமயத்தில் இருந்தது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. இதைத்தவிர ஹிந்தி, மராட்டி மொழி சார்ந்த படைப்பாளிகள் இவரைத் தேடி வந்து தம் படைப்புக்கு இசையால் சிறப்பும், பெருமையும் சேர்க்கவேண்டும் என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. ஒருமுறை ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் "இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது" என்று சொல்லியிருந்தார். மேம்போக்காக ஒரு படத்தில் வரும் நான்கோ ஐந்தோ பாடல்களின் ஹிட்டை வைத்துப் பார்க்கும் சராசரி ரசிகனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஆயிரமாயிரம் பாடல்களைக் கடந்து அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குநராக நின்று செயற்பட்டிருக்கிறார்.  

இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குநருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். 

எத்தனையோ இயக்குநர்களை நான் வானொலிப் பேட்டி கண்ட போது அவர்கள் பிரமித்துச் சொன்ன விஷயம் இது. நாட்கணக்காக ஸ்கிரிப்ட் எழுதி எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குநர் பால்கி தன்னுடையை "பா" படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, "இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்" என்று சிலாகித்திருந்தார். 

ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான தீம் ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். 

இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான்.

கைரளி மலையாளத் தொலைக்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. பாருங்கள், எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குநருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது.

இதன்பிறகு கற்பூர முல்லை" திரைப்படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது.  இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன.கானா பிரபா

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. எண்பதுகளிலே இந்த இரண்டு எல்லைகளையும் கவனித்துக் கொண்டது ராஜாவின் இசை.

நாயகன், ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப்புழகாங்கிதத்திலேயே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.

இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது. இசைஞானி இளையராஜாவோடு மணிரத்னம் இணைந்து கொண்ட அஞ்சலி, தளபதி போன்ற படங்களின் பின்னணி இசை பற்றிப் பேசப்போனால் ஒரு சில கட்டுரைகளில் முடக்கிப்போட முடியாத அளவுக்குச் சாகித்யம் நிரம்பியிருக்கும்.

"சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது

கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்களிலே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த "ஆண்பாவம்" முக்கியமானது. வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.

ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.

இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.

கேரளத்தின் பெரும் எழுத்தாளர் M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குநர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.

இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசிராஜா பின்னணி இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணரமுடிந்தது. காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.

ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.

ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான்.

பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது கீதாஞ்சலி என்ற தெலுங்குப்படம் இது இதயத்தைத் திருடாதே என்று தமிழில் மொழிமாற்றம் கண்டது. மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமும் , இசைஞானி இளையராஜாவும் படம் முழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".

இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று இந்தப்பாடலைப்பாடிய பாடகி சித்ரா சிட்னி சொல்லியிருந்தார்.

ஆவாரம் பூ, படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது "ஆவாரம்பூ" பாடல்களின் அணி.

"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 

பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார்.

இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.

கடலோரக்கவிதை படத்தை ஓடவிட்டு இறுதிக்காட்சியை ஒரு முறை கவனித்துப் பாருங்கள், கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.

பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது குணா படத்தின் உட்பொருள், இப்படியான படங்களில் ராஜாவின் தேவை எவ்வளவு தூரம் பொருந்தியிருக்கிறது என்பதை "பார்த்தவிழி பார்த்தபடி பார்த்து இருக்க" பாடலில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியில் குணா, அபிராமி மலையுச்சியிலிருந்து பாய்ந்து தம்மை மாய்த்து கூடு விலகல் வரை உணர்த்தப்படும். இதே மாதிரியான கமல் - ராஜா அலைவரிசையின் ஒத்திசைவு ராஜபார்வை, விருமாண்டி, ஹேராம் என்று பட்டியல் நீளும்.

"ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்" இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குநர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.

கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque கை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.

தன் காலத்தைத் தாண்டிச் சிந்தித்துப் படைப்பாற்றல் பண்ணியவர்கள் காலம் கடந்துதான் இன்னும் அதிகம் பேசப்படுவார்கள். அதை இளையராஜாவின் இசையாற்றலுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். அவர் சினிமா உலகுக்கு வந்த காலம் தொட்டு இன்று வரை கொடுத்த இசை நுணுக்கங்களை உள்வாங்கும் பக்குவம் எவ்வளவு தூரம் அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களுக்கு இருந்திருக்கின்றது என்பது கேள்விக்குரியதொன்று. ஆயிரமாயிரம் பாடல்களால் வசீகரித்த இந்த இசையமைப்பாளனின் முழுமையான பக்கம், பல நூறு படங்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையை விலாவாரியாக எடுத்து ஆராயும் போதுதான் புலனாகும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன? அவரோடு பணியாற்றிய இயக்குநர்களுக்கே இளையராஜா தம் படைப்புக்களுக்குக் கொடுத்த சங்கதிகளைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி இசை ஆவணங்களாகக் கொடுக்கும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் அடிமனதில் தானாக வரும். இசைஞானி இளையராஜா காலத்தில் நாம் வாழ்வது என்பது பெருமை அல்ல, தவப்பேறு.

வயது மட்டுமல்ல, தன் சாதனைகளும் வெறும் இலக்கமே என்ற ஓய்வறியாச் சாதனையாளர்

இளையராஜா என்ற இசைப் பேராளுமை நமக்கு ஒரு வாழ்வியல் பாடம்.

ஜூன் மூன்றில் அகவை எண்பத்து மூன்றாய்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசைப்பேரலையே !


கானா பிரபா

02.06.2026

Monday, May 25, 2026

ஒரு முல்லைப்பூவிடம் ❤️



 TMS & சுசீலா ஜோடி இணைந்தது ஒரு யுகக் கணக்கு. அது நிகழ்த்திய அற்புத விளைச்சல் என்பது காலம் தாண்டியது.

இந்த இருவரையும் இணைத்து விட்டு ஒரு பாட்டு கொடுத்தாலே அது அந்தக் காலம் ஆகி விடும்.

ஆனால் இந்தப் பாடலின் அங்க இலட்சணங்கள் எல்லாவற்றிலும் அந்தக் காலம் தான் பேசும்.

லல்லா லாலலா தொடங்கும் போதே, அந்த மிடுக்கனோடு கூட சாரட் வண்டியில் ஏறி உட்கார்ந்து உற்சாகத் தாளம் போடும் வாத்தியக் குழாம்.

ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும்

பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா

ஒர்ர்ரு என்ற நறுக்கு உச்சரிப்போடு இசையரசியின் வெட்கக் குரல் தொடரும்.

இந்த மாதிரித் தாள லயம் எல்லாம் இளையராஜாவின் கோட்டையில் ஒலித்தால் வியப்பில்லை.

ஆனால் இளையராஜா காலத்தில் மனோஜ் - கியான் இரட்டையை இசைக் கோவைக்கு வைத்துக் கொண்டு தன் எண்ணங்களைச் செயல்வடிவமாக்கிய புதுமைப் பித்தர் ஆபாவாணன்.

பாடல்கள், இணை இசை என்று அவர் ஊமை விழிகளில் தொடர்ந்த பாரம்பரியத்தின் விழுதுகளில் ஒன்று இந்த “தாய் நாடு”.

இது பனித்திரை மூடிய பார்வை

அந்த பார்வையில் மாறுதல் தேவை

அந்த மாறுதல் நான் தரும் போது

அந்த திரையும் விலகலாம்

அன்று பயணம் தொடரலாம்

அந்த “மாறுதலில்” அறுபதுகளின் கட்டிளங் காளைத்தனத்துக்குப் போய் விட்டு வருவார் TMS.

“கொஞ்சம் வாடினால்” என்பதில் கூட எத்தனை நுணுக்கம் காட்டி வாடிப் போன தொனியைக் காட்டுவார் சுசீலாம்மா.

நளினம் காட்டும் அக்கார்டியன் இசைக்கருவியை வாங்கி ஆயிரம் முத்தங்கள் இட்டால் என்னவாம்.

ஒவ்வொரு வரிகளும் முடியும் போது அணி அணியாய், அந்தக் காற்று வாத்தியத்தின் அலை பாய்தல் எல்லாம் மெல்லிசை மன்னர் காலத்தை நினைப்பூட்டிப் பரவசத்தில் ஆழ்த்தும்.

பாட்டு முடியும் போது அந்த மழலைக் குரலை இணைத்தது ஒரு முத்தாய்ப்பு.

விஜயகாந்த் நடித்த “செந்தூரப் பூவே” சத்யராஜுக்குத் தான் முதலில் தேடி வந்தது. ஆனால் அதன் அருமை தெரியாமல் இருந்து விட்டேனே என்ற சத்யராஜுக்கு ஆபாவாணன் கூட்டணியில் அமைந்த படமாக தாய் நாடு அமைந்து விட்டது.

தோல்விப் படமானால் என்ன இதோ முப்பது ஆண்டுகளைக் கடந்து “ஒரு முல்லைப்பூவிடம்” நினைப்பூட்டிக் கொண்டே இருக்குமே?

ஒரு முல்லைப்பூவிடம் பாடலோடு, 

தாளம் தட்டிப் பட வந்தேன், தாய்மாமன் கைகள் பட்டு, ஓ கண்களே, நான் முதன்முதல் பாடிய பாட்டு என்று மொத்தமாக ஐந்து பாடல்களை TMS க்கு அள்ளி வழங்கி அவர் வாழும் காலத்தில் பாட்டு விழா எடுத்தது இந்தப் படம். அதில் புதுமை என்னவென்றால், தந்தை, மகன் என்று இரு சத்யராஜுக்கும் இவர் ஒருவரே குரல்.

T.M.செளந்தரராஜன் எனும் தென் இசைத் தென்றலை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாட்டும் கூட வரும்.

நல்ல ஆறுதல் நீ தரும் போது

எந்த திரையும் விலகலாம்

அன்பு பயணம் தொடரலாம் ❤️

https://youtu.be/1ACHJiUphgw?si=F49urv_qoV0gxh3u



Saturday, May 23, 2026

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் மகன் கலைவாணன் மறைவில்


 தொன்று தொட்டு இன்று வரை 

ஏழை என்னும் ஜென்மத்துக்குத் துன்பம் ஐயா

இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் 

வன்மம் கொண்டே துன்பம் தந்தால் 

தொல்லை ஐயா….

ஏழை படும் பாடு அது சொல்லி முடியாது

பொழுதே இருளானால் இனி இங்கே விடிவேது?

https://www.youtube.com/watch?v=XoszYudZyko

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் எழுதி “அவதாரம்” திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.

ஒரு சோகப் பரப்பில் எழும் விரக்தியை வரிகளிலும், ஆக்ரோஷத்தை இசையிலுமாகக் கொடுத்த வகையில்

இந்தப் படத்தின் மிக முக்கியமானதொன்று.

இப்படியானதொரு சூழலுக்கு ஒரு நாட்டுப் பண் கலைஞரைப் பாடல் எழுத வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நாசரின் தெரிவாக இருக்கக் கூடும்.

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்  என்ற வரிசையில் தான் முத்துக்கூத்தன் என்ற பாடலாசிரியர் குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

இருப்பினும் அவர் பெரும் பெரும் ஆளுமை என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

முத்துக்கூத்தன் பழம் பெரும் கவிஞர், பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர் என்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முன்னிலையிலேயே கலைவாணரின் வாழ்கையை வில்லிசைத்தவர் என்றும், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடிகராகவும், எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, நாடோடி மன்னன், அரசகட்டளை, திருடாதே ஆகிய படங்களிலும் பாடல்களை எழுதியவர் என்று விக்கிப்பீடியா குறிப்பு அவரி வாழ்க்கைச் சுருக்கத்தைப் பகிர்கிறது.

கலைவாணர் என்.எஸ்.எஸ்.கிருஷ்ணனின் மேல் நேசம் கொண்டு தன் மகனுக்குக் கலைவாணன் என்றே பெயர் சூட்டினாராம்.

“கலைமாமணி” கலைவாணன், பொம்மலாட்டக் கலை மூலம் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை, சமூக முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்.

இன்று நேற்று 68 ஆவது அகவையில் விடைபெற்று விட்டார்.

தன் தந்தையின் நீட்சியாகக் கலைப்பணியாற்றிவரின் களப்பணி ஓய்ந்து விட்டது.

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! 

Sunday, April 26, 2026

Michael திரைப் பார்வை


 ஒவ்வொரு மனிதனும் வாழும் உலகம் வேறு, தான் வாழும் உலகம் வேறு. மைக்கேல் ஜாக்சனின் வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது அவரது சுயவரலாறு தாங்கிய Michael வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் ஒரு இசைக் கலைஞன் தன் முன் எதிர்ப்படும் சவால்களை எல்லாம் முட்டி மோதிக் கடந்து சாதிப்பது போல ஏராளம் படங்களைக் கண்டிருப்போம்.

இங்கே நம் முன்னே வாழ்ந்து மடிந்த, இசையுலக சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய நாயகனின் கதையாக அது விரிகின்றது.

ஆரம்பத் துள்ளலோடு, இந்திய சினிமாவுக்கே உரித்தான நாயக அறிமுகம் கூட இங்கே நிகழ்த்தப்படுகிறது, மெல்ல மெல்ல அது அவனின் பால்யகாலம் நோக்கி நகர்த்தப்படுகிறது,

மைக்கேல் ஜாக்சன் என்ற இசைக் கலைஞனைத் தெரிந்த அளவுக்கு, அவர் வாழத்தலைப்பட உலகம், தான் வரித்துக் கொண்ட உலகம் எவ்வளவு குழந்தைத்தனமானது என்பதை ஆரம்பக் காட்சியில் இருந்து அவரின் புகழ் நிலை தொட்ட பருவம் வரை காட்டப்படுகிறது.

சார்லி சாப்ளின் படங்கள், Peter Pan கதைப் புத்தகங்கள் என்று சின்னச் சின்ன ஆசைகளோடு வாழும் அந்த இசைப் பேரரசனுக்கு செல்லப் பிராணிகளாக, குரங்குக் குட்டி, மலைப்பாம்பு, ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம் என்று காட்டப்படும் போது நெகிழ்வும், சிரிப்பும் எழுகிறது. அதே சமயம் புகழ் என்ற மாய உலகில் அந்தக் கலைஞனின் அவதியை இன்னொரு பக்கம் காட்ட முனைகிறது திரைப்படம்.



மைக்கேல் ஜாக்சனின் இன்னொரு முகம் மனித நேயம், அது படத்தில் சில காட்சிகளின் வழியே வெளிப்படுகின்றது.

இந்த இடத்தில் இன்னொரு பக்கம் போய் விட்டு வருவோம்.

மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்ட நிகழ்வில் முதன்முதலில் ரஹ்மானின் இசை நிகழ்வு இடம்பெற்றதை அண்மையில் ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர் சிவமணி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னணி இதுதான்.

1999 ஆம் ஆண்டில் MJ & Friends என்ற இசை நிகழ்வு கொசோவோ நாட்டுச் சிறுவர் நலனுக்காக நிகழ்த்தப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் “ஏகம் சத்யம்” என்றதொரு இசைப் பாடலை அரங்கேற்றினார். அப்போது இருவருக்குமான சந்திப்பு நிகழவில்ல்லை. 

ஏ.ஆர்.ரஹ்மான் மைக்கேல் ஜாக்சனுடனான நேரடிச் சந்திப்பு Slumdog Millionaire  இற்காக ஆஸ்கார் பெற்றதன் பின்னரே நிகழ்ந்தது. தன் பிள்ளைகளை அறிமுகப்படுத்திப் பேசுமளவுக்கு மைக்கேல் ரஹ்மானுடன் நெருக்கமானார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், பாப் இசையின் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்குமான கடைசி உரையாடலில் மைக்கேல் ஜாக்சன் ரஹ்மானிடம் வேண்டிக் கொண்டது,

“We are the world” பாணியில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிடுவோம் என்று.

அதை வெற்று வார்த்தைகளாக உதிர்க்காமல் எதிர்வரப் போகும் ஆல்பத்துக்கான ஒத்திகைகளிலும் அவர் இறங்கிவிட்டார்.

திடீரென்று வந்த அதிர்ச்சிச் செய்தியாக,  மைக்கேல் ஜாக்சனின் அகால மரணம் தன்னை வேதனையுறச் செய்தது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் இரங்கலை வெளிப்படுத்தியிருந்தார். 

இயக்குநர் ஷங்கர் வேண்டுகோளில் எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பாட வைக்க அணுகிய போதும் ரஹ்மானின் வேண்டுகோளை மைக்கேல் ஜாக்சன் ஏற்றிருந்தாராம்.

1983 இல் எதியோப்பியா நாடு எதிர் நோக்கிய கடும் பஞ்சத்தைப் போக்க “We are the world” என்ற இசை ஆல்பம் உருவாக்கத்தில் மைக்கேல் ஜாக்சன் , சக இசைக் கலைஞர் லயனல் ரிச்சி உடன் தன் பங்களிப்பை வழங்கியவர். அந்த ஆல்பம் அந்தக் காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Black & White என்ற மைக்கேல் ஜாக்சன் புகழஞ்சலி இசை நிகழ்வையும் ஏ.ஆர்.ரஹ்மான் சில வருடங்களுக்கு முன்னர் அளித்திருந்தார்.

பின்னாளில் The Wonderment Tour என்று ரஹ்மான் இசைப் பயணம் நிகழ்த்திய போது, மைக்கேல் ஜாக்சனின் This Is It  ஆவணப்படத்தை இயக்கிய, Kenny Ortega இந்த Wonderment என்ற சொற்பிரயோகம் மைக்கேல் ஜாக்சனுக்குப் பிடித்தமானதொன்று என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினாராம்.

இந்தியத் திரையிசையின் போக்கில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரவால் நிகழ்ந்த புத்திசையின் புதுப் பாய்ச்சல் ஒரு புறம், நடனப் புயல் பிரபுதேவா வின் வரவு நிகழ்த்திய நடன உத்தி என்று மைக்கேல் ஜாக்சனின் பிரதிபிம்பங்கள் போல இந்திய இசை உலகில் இரு பெரும் ஆளுமைகள் வெளிவந்தது காலம் எழுதிய தீர்ப்பு.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபுதேவாவை அடையாளப்படுத்தும் அளவுக்கு அது பலப்பட்டது.


இந்த மைக்கேல் ஜாக்சனின் படத்தைப் பார்த்த போது, பின்னணி இசையில் ரஹ்மானின் பங்களிப்பு இடம்பெற்றிருக்கலாமோ என்று தோன்றியது. அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஆத்மார்த்தமாகவும் அமைந்திருக்கும்.

மைக்கேல் ஜாக்சன் கதை இன்னொரு பாகமாக வரவிருக்கிறதாம்.

அப்படியே மைக்கேல் ஜாக்சனாகப் பிறந்திருக்கிறார்  Jaafar Jackson.

இவர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் Jermaine Jackson மகன். இந்தப் படத்தில் மெச்சத்தக்க விடயம் என்றால் இந்தப் பாத்திரத் தேர்வு தான். மைக்கேல் ஜாக்சனின் அந்தத் தினுசான குணாம்சத்தை அப்படியே பிறப்பெடுத்தது போலப் பிரதிபலிக்கிறார். 

இது மைக்கேல் ஜாக்சன் குறித்த ஆவணப்படமா இல்லை அவரின் சுய வரலாற்றுப் படமா என்பதில் ஏகப்பட்ட குழப்பம் நிகழ்கிறது.

தந்தை மகன் மோதல் என்பது அவரின் வாழ்வியலில் முக்கிய பங்காக இருந்தாலும் இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சன் என்ற இசை ஆளுமையின் பிறப்பெடுத்தல் இன்னும் ஆழ அகலமான திரைக்கதை அமைப்போடு வெளிப்பட்டிருக்கலாம். இதற்கு முன்னர் வெளிவந்த சுய வரலாற்றுப் படங்களில் இருக்கும் உணர்வோட்டம் இல்லாத வெறுமை தென்படுகிறது. 

சிறுவன் மைக்கேல் ஆக நடித்த பையனின் நடிப்பும், அவனின் தேடலும் சிறப்பான காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

"perfect pitch" என்று சிறுவன் மைக்கேல் ஐ வியக்கும் இசை நிறுவனத்தின் பெண்.
"we can change the world" என்ற இறுமாப்பு, தந்தையைப் பதவி நீக்கம் செய்யும் fax, MTV ஐக் கட்டுக்குள் கொண்டு வரும் காட்சிகள் என்று சினிமாத்தனமான அதிரடிகள் என்றாலும் ரசிக்க வைக்கின்றன.

இந்தியத் திரையிசையைத் தாண்டி, ஒரு மேற்குலக இசைக் கலைஞன் என்று நம் காலத்து எண்பதுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நாயகன் மைக்கேல் ஜாக்சன். 

படம் பார்த்து முடித்த பின்னரும் மனதில் தேங்கி நிற்பது, தனக்காக ஒரு உலகத்தைக் கட்டியெழுப்பி வாழ்ந்த ஜாக்சன் தான். அவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கானா பிரபா

26.04.2026


Thursday, April 23, 2026

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

 


யானையக் கொண்டாங்க.. குதுரையைக் கொண்டாங்க.. நானும் ஊர்கோலம் போக.. இந்த இடம் வரும் போது அப்படியே யானையிலோ, குதிரையிலோ ஏற்றி விட்ட மிடுக்கு எழும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்ப காலத்தில் இரண்டு தத்துவார்த்தமான பாடல்கள் வந்த அளவுக்கு பின்னாளில் அவற்றுக்கு நிகராக வந்ததில்லை என்பேன். ஒன்று தனி மனிதனின் விரக்தி நிலையின் வெளிப்பாடு. அதுதான் “தப்புத்தாளங்கள்” படத்தில் வந்த “என்னடா பொல்லாத வாழ்க்கை”

https://www.youtube.com/watch?v=hgF474VravA https://www.youtube.com/watch?v=hgF474VravA காடாறு மாதம் அப்பா.. நாடாறு மாதம் அப்பா... ராஜாக்கள் கதை இது தான்ப்பா நம்ப நிலை தேவலை யப்பா முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இப்படிப் போகும் அந்தப் பாட்டு. கவியரசு கண்ணதாசனின் அகராதியில் தத்துவார்த்தத்துக்குத் தனி இலக்கணம் இருக்கும். அப்படியிருக்க அவர் முத்திரை இல்லாமலா? இன்னொரு பக்கம் சமூகப் பார்வையை முன்னுறுத்தி எழுந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0 இதை இப்படி ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் மொழியாளுமை செய்திருப்பார் SPB. கங்கை அமரன் அவர்கள் கொடுத்த மிகச் சிறந்த தத்துவப் பாடல்களில் முதலிடத்தில் வைக்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அவர் எழுதிய ஆரம்ப காலப் பாட்டு. பின்னாளில் “ஆணென்ன பெண்ணென்ன” கூட இந்தக் கூட்டணியில் விளைந்த அற்புதம். “முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு…” என்று “என்னடா பொல்லாத வாழ்க்கை” பாடலில் கண்ணதாசன் கொடுத்தார். “கையிருக்கு உழைச்சுக் காட்டுறேன் மனசிருக்கு பொழச்சிப் பாக்குறேன்...” என்று கங்கையார் “ராமன் ஆண்டாலும்” பாடலில் தந்திருப்பார். கடவுள் மறுப்புக் கொள்கையைக் காட்டாமல் உனக்கு உதவி செய்யும் தெய்வத்தைத் தேடு என்று நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்துக் கேளுங்கடா.. என்று பொட்டில் அடித்திருப்பார். இந்தப் பாடலை SPB பாடியிருந்தாலும் மலேசியா அண்ணனுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் தொனி இருக்கிறது. ஹேய் டே..ய், நந்தாண்டா என்று SPB வேறு முரட்டு ரஜினி ஆகி விடுவார். அந்த உதார்த்தனமான நடையும், நடனமும், தாரையை வெறியோடு அடித்து உருவேற்றும் ஆக்ரோஷமுமாக ரஜினியின் அந்த உழைப்புத்தான் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான மூலதனம். இந்தப் பாடல் ஒன்றே போதும் அவர் நடிப்பின் இயல்பு கூற. இசைஞானி இளையராஜாவை என்னவென்று சொல்ல? “தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி” “ஆசையைக் காத்துல தூது விட்டு” வகையறா என்றாலும் இந்தப் பாடலில் இன்னும் மாசற்ற பூர்வகுடிகளின் இசை மொழி இருக்கும். பூர்வகுடிகள் சாமியைச் சுமந்து வரும் போது அம்மனோ பூமிக்கார் நமக்கு அம்மனோ பூமிக்கார் நமக்கு எல்லாம் நல்லதே நடக்கட்டுமே நல்லதே அம்மனோ கொடுக்கட்டுமே என்ற தமிழ் வார்த்தைகளை படுக இனத்தவர் பாடுமாற் போலக் குழைந்து கொடுத்திருப்பார். அதற்கேற்ப அந்த இசை நாதமும் பின்னணியில் இருக்கும். அந்தத் தொகையறா முடிந்து பாடலுக்குள் நுழைந்தால் எத்தனை வித பிறப்பெடுக்கும் அந்தப் பின்னணி இசை. தெம்மாங்கில் இருந்து துள்ளல் வரை கலந்து கட்டி அந்த இசைத் துள்ளல் இருக்கும். பாடல் அந்தத்தில் முடியும் போது அந்த இசை வெறித்தனம் நாட்டுப் பண் இசைஞர்களுக்கே உரிய பண்பு. தன் இசைப் படையணியோடு ஒரு ஊழித்தாண்டவத்தை நடத்தி விடுவார் ராஜா. பாடல் வந்து ஐம்பது வருடங்கள் கடந்தால் என்ன வரிகள் பொய்யாகுமா? இன்று மட்டுமல்ல நாளையும் கூட நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்துக் கேளுங்கடா.. கானா பிரபா 22.04.2026

Sunday, April 12, 2026

❤️ ❤️❤️தமிழுக்கு வந்த ஆஷா போஸ்லே ❤️❤️❤️

எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் வட இந்தியாவில் கோலோச்சிய பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே சகோதரிகள் இளையராஜா இசையில் தமிழில் தொடர்ச்சியாகச் சில படங்களில் பாடிச் சிறப்பித்தனர். இந்த இருவர் பாடிய படங்கள் வெளிவந்த ஆண்டுகளும் சம காலத்தில் அமைந்திருந்தன.

இளையராஜாவைத் தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமார், R.D.பர்மன், ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோருடன் இணைந்த பாடல்கள் மற்றும் தெலுங்கிலும் இளையராஜாவோடு இணைந்த இரண்டு பாடல்களுமாக இத்தொகுப்பைப் பகிர்கிறேன்.


🎙️கானா பிரபா கதைக்கிறேன்

https://youtu.be/QlqXGxli1cI?si=sjPK6ZBy6FfviEpn

Wednesday, March 25, 2026

பாடலாசிரியர் இரா.ரவிசங்கர்


மனசெல்லாம் பந்தலிட்டு

மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன்

உசிருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்

நேற்றில் இருந்து இந்தப் பாடலை என் அடி மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
பாடல் வரிகளைக் கட்டிய ரவிசங்கர் நினைப்பும் வந்து போனது.
இன்று மனோஜ் பாரதிராஜாவின் முதலாவது நினைவு தினம்.
“வருஷமெல்லாம் வசந்தம்" படம் மனோஜுக்குப் பேர் சொல்ல வாய்த்த படம். ஒப்பீட்டளவில் அவருக்கு வெற்றிப் படமே.
ஆனால் அந்தப் படத்தை இயக்கிய ரவிசங்கர், நாயகன் மனோஜ், உப நாயகன் குணாள் மூவருவே அகால மரணத்தை எதிர்கொண்டதொரு துர்பாக்கியம்.
“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.
பாலசந்தரும், பாரதிராஜாவும் மகனார் இழப்போடு உடைந்து போய் விட்டார்கள்.

ரவிசங்கர் ஒரு திறமையான எழுத்தாளர் என்பதை பத்திரிகையாளர் கல்யாண்குமார் அவர்கள் அடையாளம் கண்டு கொண்டது “குதிரை” என்ற சிறுகதையை அவர் சார்ந்த வார இதழிலுக்கு அனுப்பிய போது கண்டு கொண்டது. அந்தக் கதையை கே.பாக்யராஜிடம் படிக்கக் கொடுக்கவும், அவர் ரவிசங்கரைப் பாராட்டி விட்டு “இது நம்ம ஆளு" படத்தில் இருந்து உதவி இயக்குநராக வைத்துக் கொண்டராகவும், கல்யாண்குமார் சார் அவரது நினைவுப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆராரோ ஆரிரோ படத்தில் வசன உதவி இரா.ரவிசங்கர் என்று எழுத்தோட்டத்திலும் அங்கீகாரம் பெற்றார்.
பின்னர் இயக்குநர் விக்ரமன் அவர்களின் பாசறையில் ரவிசங்கர் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

தன்னுடைய இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரின். மெட்டுக்கு அழகான வரிகளை இட்டுக் கட்டுவதில் சமர்த்தர் என்று தன் உதவி இயக்குநர் ரவிசங்கரைப் பாராட்டியிருக்கிறார்.
விக்ரமனே ஆர்.பி.செளத்ரியிடம் ரவிசங்கருக்கான “வருஷமெல்லாம் வசந்தம்" படத்தைத் தயாரிக்க அறிமுகப்படுத்தி வைத்தவர்.

“சூர்ய வம்சம்" படத்தில் “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற மெல்லிசைப் பாடலுக்கு நேரெதிராக “சலக்குச் சரிகைச் சேலை” பாடலையும் எழுதி இரு பாடல்களிலும் புகழ் பூத்தவர்.

“காற்றுக்குத் தூது விட்டு
கவிதைகள் பாடச் சொல்லு...”

அந்த வரிகளைச் சிலாகிக்காதோர் உண்டோ?

அத்தோடு இன்னொன்றாக

“வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்"

என்று விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னொரு மாபெரும் வெற்றிப் படைப்பான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்திலும் தன் பாடல் வரிகளால் அணி சேர்த்தவர்.

தொடர்ந்து அதே கூட்டணியின் மிலேனியத்தின் திறவுகோலாய் அமைந்த “வானத்தைப் போல" படத்தில்
“மைனாவே மைனாவே...” என்று படத் தொடக்கப் பாடலிலேயே அவர் வரிகளோடு தான் அந்த வெற்றிச் சித்திரம்.
இந்தப் படங்களில் எல்லாம் வசன ஒத்துழைப்பு என்று இவர் பெயரும் கூடவே வந்தது.

விக்ரமன் & சிற்பி கூட்டணி மீண்டும் இணைந்த “உன்னை நினைத்து" வழியாக “யார் இந்த தேவதை”யோடு வந்தார் ரவிசங்கர்.

தன் குரு நாதருக்கு லட்டு லட்டாய்ப் பாட்டெழுதியவர் தன் படத்தில் இல்லாமலா? வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் சிற்பியோடு கை கோர்த்தவர், “அனார்க்கலி அடியே அனார்க்கலி", முதன் முதலாய்" ஆகிய வெற்றிப் பாடல்களோடு ஐந்து பாடல்களை வரவில் வைத்தார்.
இங்கே தான் படத்தின் அடி நாதமாய் அமைந்த
“எங்கே அந்த வெண்ணிலா...
எங்கே அந்த வெண்ணிலா”
பாடலையும் தன் படைப்பின் கருவூலமாகக் கொடுத்தார்.

“ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே...”

தன் சகா ராஜகுமாரனின் முதற்படமான “நீ வருவாய் என" விலும் ரவிசங்கர் தொடர்ந்தார்.

தேவாவின் இசைப் பாசறையில்
“பாரதிக்கு கண்ணமா நீ எனக்கு உயிரம்மா” (ப்ரியமுடன்),
“லட்ச லட்சமா” ( வெற்றிக் கொடி கட்டு)

உள்ளிட்ட பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார்.

ஆகோஷ் கூட்டணியில் பிறந்த
“நாடோடிப் பாட்டுப் பாட" (அரிச்சந்திரா)
இன்னொரு வெற்றிக் கதை பேசும்.

அவர் கொண்ட அறிவின் விசாலத்துக்கு அவருக்குக் கிடைத்த புகழின் உயரம் குறைவு என்பார் இயக்குநர் விக்ரமன்.

“யார் இந்த தேவதை” பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற ரவிசங்கர் இந்தப் பாடல்களையெல்லாம் மீளக் கேட்கும் போது உயிர் பெற்று வருகிறார்.

காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக....

கானா பிரபா
25.03.2026

Tuesday, March 10, 2026

தக்காளி சீனிவாசன்

தக்காளி சீனிவாசன்



ஒரு தயாரிப்பாளராக இவர்கள் வருங்காலத் தூண்கள், நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட படங்களில் இயங்கிய வகையில் எண்பதுகளின் தமிழ் சினிமா உலக ரசிகர்கள் மறக்காத அடையாளம்.

சூரசம்ஹாரம் உட்பட நடிகராகவும் மிளிர்ந்தவர், கவர்ச்சிகரமான தோற்றம். இன்னும் வாய்ப்புகள் விசாலமாக அமைந்திருக்க வேண்டும்.

ஜென்ம நட்சத்திரம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

பிரேமி - ஶ்ரீனி இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை.

குறிப்பாக நாளை மனிதன், வலது காலை வைத்து வா பாடல்கள்.


நாளை மனிதன் படத்தில் இடம்பெற்ற "சங்கமத்தின் சங்கமோ" பாடல் அந்தக் காலத்தில் பெரும் ஹிட் அடித்தது.

சாய் வித் சித்ராவில் இவரைப் பேட்டி எடுக்கத்  தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சித்ரா லட்சுமணன் அவர்கள் சொல்லியுள்ள நிலையில் அவரின் இழப்பு அதிர்ச்சிகரமானது.

இன்று (மார்ச் 10) நம்மை விட்டு மறைந்த தக்காளி சீனிவாசனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏





Saturday, March 7, 2026

கங்கை அமரன் ❤️ஆர்.சுந்தரராஜன் ❤️ இசைந்து இசைத்த புது ஸ்வரங்கள் ❤️



கங்கை அமரன் ❤️ஆர்.சுந்தரராஜன்

❤️ இசைந்து இசைத்த புது ஸ்வரங்கள் ❤️


ஆத்தோரம் மேட்டு மேலே

ஆறு முழம் சேலை கட்டி

ஆடி அசைஞ்சு வாறா

அக்கா மக

இந்தப் பாடலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது, பாடலை எழுதியது வேறு யாருமல்ல எண்பதுகளில் நட்சத்திர இயக்குநராக மிளிர்ந்த ஆர்.சுந்தரராஜன் தான்.

அதுவும் தன்னுடைய ஆத்ம நண்பர் கங்கை அமரனே பாடி, இசையமைத்தது.

அதுதான் “ஒருத்தி மட்டும் கரையினிலே” படமாக வந்தது.

கதை, வசனம் எழுதி ஆர்.சுந்தரராஜன் நடிகராகவும் அறிமுகமானது இந்தப் படத்தில் தான். படத்தை இயக்கியிருந்தவர் ஜே.ராமு.

இதே படத்தில் ஆர்.சுந்தரராஜனின் உறவினரும், விஜயை வைத்து கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தை இயக்கிய சி.ஜே.ரங்கநாதனும்

அசோசியேட் டைரக்ரடாக இயங்கி இருக்கிறார்.


ஒரு வருடம் கழித்து, இன்னொரு கதையோடு தயாரிப்பாளர் கோவைத்தம்பியிடம் போன ஆர்.சுந்தரராஜனை இயக்கவும் செய்யுமாறு வலியுறுத்தியவர், இதே கூட்டணியில் இருந்த சாகா, இயக்குநர் சிறுமுகை ரவி.

ஆட்டோவின் பின் பக்கம் எழுதியிருந்த “பயணங்கள் முடிவதில்லை”

வாசகத்தைப் படத் தலைப்பாக வைத்து ஒரு வருடம் ஓடியது வரலாறு.


அதற்கும் முன் இன்னொரு சம்பவம்.


“அழகிலே நாயகி அருகிலே நாயகன்

புதிய கதை பேசும் திரு நாளில் தென்றலும் வாழ்த்துதே”


கங்கை அமரனே தயாரிப்பாளராகி, கங்கை அமரனையே தன் படத்துக்கு இசையமைப்பாளராக்கி, கவிஞர் கண்ணதாசனை வைத்துப் பாட்டெழுதி ஆர்.சுந்தரராஜன் இயக்கவிருந்த படம்

“அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”.

ஆனால் அந்தப் பட நாயகி ஷோபாவின் இழப்போடு படமும் முடக்கப்பட்டது.


பின்னர் கங்கை அமரன் என்று இசையில் ஆர்.சுந்தரராஜன் படம் எதுவும் இயக்கவில்லை என்பதும் அவல முரண்.


ஆர்.சுந்தரராஜனின் திரையுலக வாழ்க்கையில் கங்கை அமரன் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிப் போனார் என்பதை கங்கை அமரன் இசையிலேயே இவர் பாட்டெழுதிய காலம் தொட்டு அமைந்து விட்டது.


இன்னொரு சுவையான விடயம்.

கங்கை அமரன் ஒரு இசையமைப்பாளராகத் திரையில் தோன்றியதோடு தன் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரோடு “தோகை இளமயில்” பாடலைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போல பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும். திரையில் தோன்றிய வகையிலும் இருவரும் பங்கு போட்டிருக்கிறார்கள்.


வைகறையில் வைகை கரையில்

வந்தால் வருவேன் உன் அருகில்

கங்கை அமரன் தன் பால்யகாலத்தில் எழுதியது அற்புதமானதொரு களச் சூழல் பயணங்கள் முடிவதில்லை படத்தில் அமைந்தது.

அது மட்டுமா அந்த கலகல கங்கையின் “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா”

பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.


எண்பதுகளில் இயக்குநர் ஆர்.சுந்தரராஜனின் தனித்துவம் எல்லா மேன்மை தரும் இசையமைப்பாளர்களோடும் இயங்கியது தான்.

அந்த வகையில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனோடு அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை மற்றும் தூங்காத கண்ணின்று ஒன்று ஆகிய படங்களில் இயங்கியிருக்கிறார்.

இவற்றில் கங்கை அமரன் பங்களிப்பு இல்லை.

ஆனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு இயங்கிய “சரணாலயம்” படத்தில் கங்கை அமரனுக்கு இரண்டு பாடல்களை எழு வைத்துக் கடனைத் தீர்த்தார்.


தொடர்ந்து கங்கை அமரனோடு இணைந்த வகையில் இளையராஜாவின் படங்களைப் பார்த்தால் எல்லாமே தெவிட்டாத தேன் குழல்கள் தான்.

சீர் கொண்டு வா வெண் மேகமே (நான் பாடும் பாடல்), இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே (வைதேகி காத்திருந்தாள்),

என்று தொடரும்.

குங்குமச் சிமிழ் படத்தில் “பூங்காற்றே தீண்டாதே” என்று இளையராஜாவுக்குக் கொடுத்த பாங்கில் “தலைவனை அழைக்குது” என்ற அற்புதமான பாடல் தேவா இசையில் என் ஆசை மச்சானில் அமைந்திருக்கிறது.


அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் பாடல்கள் எல்லாமே பூந்தி லட்டுகள்.

எல்லாமே கங்கை அமரன் கை வண்ணம். சின்ன மணிக்குயிலே, உன் பார்வையில், நம்ம கடை வீதி, காலை நேரப் பூங்குயில், ஒரு மூணு முடிச்சால, பூவ எடுத்து என்று எழுதும் போதே தேனருவியாய் மனதில்.

விஜயகாந்துக்குக்கு ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் என்று ஒரே படத்தில் நான்கு குரலாளர்கள் 


இன்னொரு புதுமையைச் சொல்லி வைக்க வேண்டும். மெல்லிசை மன்னர் விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் முதன் முதலில் இணைந்து இசையமைக்கும் முன்பே மெல்லிசை மன்னர் இசை கொடுக்க, இளையராஜா “ஆத்தோரம் மேட்டு மேலே” பாடலைப் பாடியிருக்கிறார். சுகமான ராகங்கள் என்ற அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜனே.


மெல்லத் திறந்தது கதவு படத்தில் பாடலாசிரியர் கங்கை அமரனாக ஊரு சனம் தூங்கிருச்சு, சக்கரக் கட்டிக்கு, என்று முத்தான பாடல்கள்.


தோல்விப் படமென்றாலும் தோல்வியாகாத பாட்டுப் படம் தழுவாத கைகள் படத்தில் இரண்டு பாடல்கள் கங்கை அமரன் எழுதவும், விழியே விளக்கொன்று ஏற்று ஒளி வீசியது.


தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் சுந்தரராஜன்.

காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் மூன்று பாட்டுகள் நான்கு வடிவங்களில் உண்டு. அவற்றை எழுதியவர் கூட கங்கை அமரனே. குக்குக் கூவென, சம்மதம் சொல்ல வந்தாள் இரண்டும் 80 களின் ரெக்கார்டிங் சென்டர் ஹிட்ஸ்.


பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் பங்கு போட்டதால் என் ஜீவன் பாடுது பாடல்கள் கங்கை அமரனுக்கு அமையவில்லை. 

தொடந்து அவரின் குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேசன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்த ராஜாதி ராஜாவில் மாமா உன் பொண்ணைக் கொடு என்று அதகளப்படுத்தினார். படத்தில் பயன்படுத்தாத உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு பாடலும் அவரே.


தாலாட்டு பாடவா பேருக்கேற்ப பாடல்களால் தாலாட்டியது. இங்கு கங்கை அமரன் இல்லாமலா? வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலயா, நீதானா நீதானா, அம்மம்மா, நீதானே, ஓடைக்குயில் ஒரு பாட்டுப் படிக்கலையா எழுதும் போதே அந்தப் பாடல்கள் எல்லாம் காதில் ரீங்காரமிட்டுப் போகும்.


இளையராஜா & ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் கங்கை அமரன் இணையாத இன்னொரு படம் எங்கிட்ட மோதாதே.

மீண்டும் வட்டியும் முதலுமாக சாமி போட்ட முடிச்சு படத்தில் கங்கை அமரன் அள்ளித் தெளிக்கிறார் பொன்னெடுத்து வாரேன் வாரேன், நீலவேணி அம்மா நீலவேணி, மாதுளங்கனியே, கோடையிடிச் சத்தம் இப்ப கேக்குதடி… 

பாருங்கள் ஹிட் அடித்த அந்தப் பாடல்கள்.


தேவா & காளிதாசன் கூட்டணி போட்டதால் ஒயிலாட்டம் படமும் கங்கை அமரனுக்குக் கிடைக்கவில்லை.

பின்னர் என் ஆசை மச்சானில் சோறு கொண்டு போற புள்ள பாடல் தேவா & கங்கை அமரன் கூட்டணியில் பிறந்தது.

காந்தி பிறந்த மண் படத்தில் பட்டாம் பட்டாம்பூச்சி தான், பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் என்ற ஜோடிப் பாடல்களும் இதே கூட்டணியில் மலர்ந்தவை தான். 

சீதனம், காலமெல்லாம் காத்திருப்பேன் அனைத்துப் பாடல்களையும்

ஆர்.சுந்தரராஜனே எழுதி விட்டார்.


குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே உக்கார்ந்து பேசலாமா?

திருமதி பழனிச்சாமி மீண்டும் கங்கை அமரனை அழைத்து வந்து குத்தாலக் குயிலோடு, ரெண்டுல ஒண்ணைத் தொடு ஐயும் தர வைத்தது.


உங்கப்பன் பேரைச்

சொல்லிச் சொல்லித் திட்ட

ஒரு புள்ள பெத்துட்டா….

இளையராஜா இசையில் அவரே பாட, கங்கை அமரன் எழுதி, 2013 இல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “சித்திரையில் ஒரு நிலாச் சோறு” படத்துக்காக அமைந்தது.

இதுவரை காலமும் ஒரு புரியாத புதிராக இருந்தது. காரணம் இளையராஜா, கங்கை அமரன் இருவரும் மனக்கசப்பில் இருந்த காலமது.

ஆனால் இந்தப் பாடலின் டியூனை வைத்து கங்க அமரனிடம் பாடலை வாங்கி ராஜாவிடம் கொடுத்ததாக

இந்த வாரம் கங்கை அமரனுடனான பேட்டியில் தான் அந்த உண்மையை உடைத்தார் ஆர்.சுந்தரராஜன்.

பாடலாசிரியர் கங்கை அமரனுக்கும், இயக்குநர் ஆர்.சுந்தரராஜனுக்கும் உள்ள உன்னதமான ஆன்ம பந்தத்தை இந்த நான்கு தசாப்தம் கடந்த இந்தப் பாடல்கள் மெய்ப்பிக்கும்

கானா பிரபா


Monday, March 2, 2026

இசையமைப்பாளர் வித்யாசாகர் ❤️ ஆரம்ப காலத்திலே



திரையிசையில் வாத்திய விற்பன்னராக ஐம்பது ஆண்டுகளைக் கடந்தவர் வித்யாசாகர். இசையமைப்பாளர் என்ற ரீதியில் துணை இசையை “சின்னப்பூவே மெல்லப் பேசு” தொட்டு அவர் தொடங்கியிருந்தார். பறவைகள் பலவிதம் கூட இவரே பின்னணி இசை.


ராபர்ட் - ராஜசேகரன் இரட்டையரில் ராஜசேகரன் முன்பே நிழல்கள் படத்திலும் நாயகனாக நடித்த வகையில் பின்னாளில் தானே ஒரு படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் தான் “பூமனம்”. ஏவிஎம் ராஜன் - புஷ்பலதா தம்பதியர் மகள் மகாலட்சுமி ஜோடி.



இந்தப் படத்துக்கு முழுமையாக இசை வழங்கியவர் வித்யாசாகர்.


சில நேரம் ஏதேதோ நடக்கும் 


https://youtu.be/hFN4IYW3fQM?si=GSwwyUj5RoTgJHpU


என்று P.B.ஶ்ரீனிவாஸ் ஐயும் உள்வாங்கி அமைந்த பூமனம் பாடல்களில் 

“என் அன்பே” 


https://youtu.be/4QEAtji8N-4?si=vJamDrFFmuLz7SeK


பாடல் அற்புதமானது.

பாடகர் தினேஷ் மற்றும் சித் ரா பாடிய பாடல் பின்னாளில் பக் பக் பக் மாடப்புறாவில் ஒரு பகுதியாகப் பயன்பட்டது.


கங்கை அமரன் பிற இசையமைப்பாளருக்குப் பாடிய வகையில் ஒரு பட்டியல் கொடுக்கலாம்.

வித்யாசாகர் கூட விட்டு வைக்கவில்லை.

பேரெடுக்கணும் 


https://youtu.be/hIE6HyPUEB8?si=sF2MVWAybHYXHXes


என்ற பாடலை ஜனகராஜுக்காகக் குரல் கொடுத்தார் கங்கை.


வித்யாசாகர் பின்னாளில் அதிகம் உள்வாங்காத பாடகர் மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சித்ராவோடு பாடிய

பாட்டுக் கொடுத்தது யாரோ


https://youtu.be/wQyAG0EEOXk?si=rpUoiEyShN_aUs4Z




அற்புதமானதொரு பாட்டு. இசையமைப்பில் இளையராஜா முத்திரை இருக்கும்.



இதே போலவே மலரே மெளனமா பாடல் வித்யாசாகருக்கு ஒரு பெரும் அடையாளத்தைத் தேடித்தந்தாலும் அந்தப் பாடல் முன்னர் தெலுங்கில் கொடுக்கப்பட்ட போது அவ்வளவு தூரம் எடுபடவில்லை.



அண்மையில் மறைந்த தமிழழகன் இயக்கிய “நிலாப் பெண்ணே” படமும் வித்யாசாகருக்கு ஆரம்பத்தில் கிடைத்த அற்புதமான வாய்ப்பு.

வித்யாசாகரின் கடினச் சாவு விசிறிகள்

“பச்சைக்கிளிகள்”


https://youtu.be/Q7gg50iQr1s?si=3nrJngnRLvFl8vXn


பாடலில் சித்ராவோடு கங்கை அமரன் அதகளப்படுத்தி இருப்பார்.

C.S.ஜெயராமன் குரலில் “ராத்திரி” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். 

நிலா பெண்ணே பாடல்களில் கொஞ்சம் புதுமை இருக்கும்.  

படத்தில் எட்டுப் பாடல்கள் என்றாலும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய “சீதா” படத்தோடு ஆத்தா நான் பாசாயிட்டேன், மாதங்கள் ஏழு படங்களுக்கும் தமிழில் இசை கொடுத்தாலும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. தெலுங்குத் திரையுலகம் தான் அவரை வாரி அணைத்துக் கொண்டது.



வித்யாசாகர் - அர்ஜூன் கூட்டணியில் ஒரு பெரும் இசைப் பாய்ச்சலை நிகழ்த்தினார். அதுவரை தனக்கான ஒரு அடையாளத்தையும் அவர் நிறுவவில்லை எனலாம்.

அதன் பின்னர் நிகழ்ந்தது வித்யாசாகரம் தான்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்ள்

இசையமைப்பாளர் வித்யாசாகர் ❤️


கானா பிரபா

02.03.2026