Pages

Wednesday, July 8, 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் SPB ❤️

பாரதிராஜாவின் படக் கதைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இசையமைத்த நிகழ்வும் அமைந்தது.

பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” படத்திலும் பாலசுப்ரமணியம் பாடும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அந்தப் படம் Toorpu Velle Railu என்று உருவான போது அந்தப் படத்தின் இசையமைப்பாளரே அவர் தான். ஆண் பாடகராக அனைத்துப் பாடல்களையும் பாடியளித்தார். 

தமிழில் சுதாகர் நாயகனாக நடித்த அதே பாத்திரத்தைத் தெலுங்கில் ஏற்றவர் எஸ்பிபிக்கு மிகவும் பிடித்த நடிகர் மோகன் தான்.

ராதிகாவை அந்தக் காலத்தில் ரயில் நடிகை என்று அழைப்பார்கள். சொல்லப் போனால் இன்னொருவரையும் ரயில் நடிகை என்று அழைக்கலாம். அதுவும் இரட்டை ரயில்.

அவர் “கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பான Toorpu Velle Railuதெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜோதி.

அதென்ன இரட்டை ரயில் என்றால், அதே ஜோதி தமிழில் அறிமுகமான திரைப்படம் T.ராஜேந்தரின் “இரயில் பயணங்களில்".

இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், பாடும் நிலா SPB யும் 

தம் திரையுலகத் தொடக்க காலத்திலேயே நட்போடு இருந்ததும், 

“மயிலு” கதையை எஸ்பிபியே “பல்லவி பிக்சர்ஸ்" இல் தயாரிக்க விரும்பியதும், அதில் அவரை டாக்டராக நடிக்க வைக்க இருந்ததும் கை கூடாமற் போனதும்,

பின்னர் “16 வயதினிலே” படத்தின் பூஜைப் பாடலான “செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்கா” பாடலையும் எஸ்பிபி பாட முடியாமல் போனதும் நாமெல்லாம் அறிந்த செய்தி.

16 வயதினிலே தெலுங்கில் Padaharella Vayasu ஆனபோது அங்கே இசைமைப்பாளர் சக்கரவர்த்தி இசையில் பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி மட்டுமே பாடகர்கள்.

புதிய வார்ப்புகள் Kotha Jeevithalu பாரதிராஜாவே தெலுங்கில் மீள எடுத்தது அங்கே எஸ்பிபி

எங்கும் நிறைந்த பாடலை தெலுங்கில் Pongi Porale என்று கொடுத்தார்கள்.

அலைகள் ஓய்வதில்லை படத்தை கார்த்திக் & அருணாவை வைத்து Seethakoka Chilaka என்று எடுத்த போது தரிசனம் கிடக்காதா? மற்றும் காதல் ஓவியம் பாடும் காவியம் இரண்டின் தெலுங்கு வடிவத்தைப் பாடியவர் எஸ்பிபி.

இப்படியாகத் தமிழில் பாரதிராஜாவின் படத்துக்கு நேரடியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் வாய்ப்பு அமையாத சூழலில் அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு “நிறம் மாறாத பூக்கள்” வழியாக பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் இசைஞானியின் இசையில் அமைகிறது.

அந்தப் பாடலின் ஆரம்பத்தை பாருங்கள், காத்திருந்து அமைந்தது போல இருக்கும், அதுதான்

“முதன்முதலாக் காதல் டூயட் பாட வந்தேனே”

இளையராஜாவின் சினிமாத்தேடலைப்  பிரதிபலிக்குமாற்போல 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முன்னோட்டப் பாடல் வாலியார் கை வண்ணத்தில் அமைகிறது. அதுவும் காட்சியொன்றில் இளையராஜாவுக்கு எஸ்பிபியே குரல் கொடுக்குமாற் போல அமையும் அந்தப் பாடல் தான், பாரதிராஜாவின் “நிழல்கள்” படத்தில் அமைந்த

“மடை திறந்து தாவும் நதியலை நான்”

பாடலாசிரியர் வைரமுத்துவின் பாட்டுப் பயணத்தின் திறவுகோலாய் அமைந்த பாட்டும் இங்கே நிகழ்கிறது.

“இது ஒரு பொன்மாலை பொழுது” ஆக.

இலங்கை வானொலியின் இசை அணித் தேர்வில் பலவாரங்கள் நின்று நிலைத்த பாட்டு அது.

தொடர்ந்து “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” SPB & ஜானகி கூட்டில் அமைந்ததும் அதுவும் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை இசைஞானியின் பாடல்களில் முத்திரைப்பாடலாக முகிழ்ந்து நிலைத்தது.

அந்த ஆரம்ப மிருதங்கத் தாள லயம், மிருதங்க விற்பன்னர் சீனாக்குட்டியின் மேதமை பறையும்.

SPB யின் பெருந்தன்மையின் மறு சான்று ஒன்றைச் சொல்ல வேண்டும். தான் பாட வேண்டிய பாடல் ஒன்றுக்காக Track இல் பாடுகிறார் தீபன் சக்ரவர்த்தி. அதைக் கேட்டவர், இது நல்லா இருக்கே இப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்.

அப்படி தீபன் சக்ரவர்த்திக்கு அமைந்த பாடல் தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் அள்ளி வழங்கிய

“பூஜைக்காக வாழும் பூவை”

“காதல் ஓவியம்” பாரதிராஜாவின் படைப்புகளில் ரசிகர்கள் கொண்டாடாத படமாக அமைந்தாலும், அங்கே வைரமுத்து வரிகளில் இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்கள் காலம் தாண்டிய காவியப் பாடல்கள்.

“குயிலே...குயிலே... எந்தன் கீதங்கள் கேட்காயோ....”

காதலர்களின் சோகராகங்களில் ஒன்றானது.

“நதியில் ஆடும் பூவனம்” கேட்கும் போதே நதி நீரில் கால் நனைத்து அலம்பும் சுகத்தை அள்ளித் தரும்.

“பூவில் வண்டு கூடும்” 

“வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்”

என்று அந்த நாட்டிய மங்கைக்கும், பாடகனுக்குமான பந்தத்தை இசை மொழி காட்டும் பாடல்கள். இவற்றோடு “அம்மா அழகே” என்று “காதல் ஓவியம்” படப் பாடல்கள் பாரதிராஜா காத்திருந்து எஸ்பிபிக்கு அளித்த விரு(ந்)து போல.

“பேசிப் பேசி ராசியானதே ஏஏஏஏ

 பொத்தி வச்ச மல்லிக மொட்டு 

பூத்திருச்சு வெக்கத்தை விட்டு”

“மண்வாசனையிலும் தன் வாசனை காட்டிய எஸ்பிபி & ஜானகி கூட்டு இன்னொரு மணிமகுடப் பாட்டு.

“ஒரு கைதியின் டைரி” படத்தில் வந்த

“நான் தான் சூரன்”

காட்சிப்படுத்தாத பாட்டு.

“கடலோரக் கவிதைகள்” படத்தில் “போகுதே போகுதே”

என்று ஒற்றைப் பாடலைத்தான் எஸ்பிபி பாடியிருந்தாலும்,

இந்தப் படக் கதையை சிரஞ்சீவியை வைத்து பாரதிராஜா “ஆராதனா” என்று மீள எடுத்த போது அவரே எல்லாப் பாடல்களிலும் மூலப் பாடகர் ஆனார்.

பாரதிராஜாவின் இன்னொரு தெலுங்குப் படமான “ஜமதக்னி”யில் எஸ்பிபி பாடாவிட்டாலும், அந்தப் படத்தை வைரமுத்து தமிழுக்காகப் பதிப்பித்து வெளிவராமல் முடங்கிப் போன “நாற்காலிக் கனவுகள்” படத்தில் அவற்றைச் சுவீகரித்தார்.

படம் வராவிட்டால் என்ன, 

“ஒரு வார்த்தை சொல்லு பாடலுக்கு” இசை ரசிகர்கள் அடிமையாகிப் போனார்கள்.

இப்படியாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பாரதிராஜா இயக்கிய படைப்புகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அணி செய்த பாடல்கள் தொடர்ந்து வரும் பயணத்தில் தொண்ணூறுகளில் அமைந்த “புது நெல்லு புது நாத்து” படத்தில்

“பூப் பூப்பூ பூப்பூத்த சோலை” ரம்யம் தந்தது.

பாரதிராஜாவின் பாசறையில் இன்னும் சில இசையமைப்பாளர்கள் இணைந்த போது அங்கேயும் அடி நாதமாக விளங்கியவர் எஸ்பிபி.

அந்த வகையில் ஹம்சலேகா இசையில் “கொடி பறக்குது” பாடல்களில்

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு”

“ அன்னை மடியில்”

“ஓ காதல் என்னை” 

என்றும்,

அப்படியே அந்த இசைக்கூட்டணியின் 90களில் “எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று”, “நந்தவனப் பூக்கள்” என்று கேப்டன் மகளிலுமாகத் தொடர்ந்தார் எஸ்பிபி.

பாரதிராஜா & தேவேந்திரன் கூட்டு நிகழ்ந்த போது “வேதம் புதிது” படத்தில் “கண்ணுக்குள் நூறு நிலவா” பெரும் புகழ் ஈட்டியது என்றால், படமாக்காத “சந்திக்கத் துடித்தேன் பொன்மானே” கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள் கிறங்கி விடுவீர்கள்.

“மருதாணி வச்சு” வித்யாசாகர் இசையில் “பசும் பொன்”, “உன்னால் முடியும்” தேவா இசையில் தமிழ்ச் செல்வன்” என்றும் பாரதிராஜா & எஸ்பிபி கூட்டணியில் அமைந்த பாட்டு வரிசை இருக்கும்.

“பச்ச ஒடம்புக்காரி பார்த்து நடக்கச் சொல்லுங்க”

இதில் வரும் அந்த எஸ்பிபியின் நெகிழ்வை பாரதிராஜா கேட்ட கணம் எப்படித் தன் உணர்வைப் பிரதிபலித்திருப்பார் என்று கேட்க ஆசைப்பட்டேன். அந்த அற்புதமான பாடல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் “கிழக்குச் சீமையிலே” படத்தில்  “மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று அமைந்தது. அந்தப் பாடலுக்காகத் தனிப் பதிவே எழுதியிருக்கிறேன். இன்று வரை தாய்மாமன் சீர் பாடகன் ஆகி விட்டார் எஸ்பிபி.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவில் தெலுங்கு தேசமும் கண்ணீர் வடித்தது. அதுவொரு காவியப் பாட்டு அவர்களைப் பொறுத்தவரை. அதனால் தான் பாரதிராஜா தெலுங்கு தேசத்தில் அதிகம் பங்களித்திருக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜா கொடுத்த அந்தப் பாடல் காலங்கள் தாண்டி இன்றும் தம் தலைமேல் உச்சமாக வைத்திருக்கும் பாட்டு.

அதுதான், அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு மொழியாக்கமாக அமைந்த Seethakoka Chilaka படத்தில் வரும் பாட்டு.

தமிழில் இசைஞானி & ஜென்ஸி பாடியதைத் தன் சகோதரியோடு கொடுத்திருப்பார் எஸ்பிபி. அதுதான்

Maate Manthramu manase bandhamu

https://www.youtube.com/watch?v=GFIuEVx2y2A

தம் உலகத்தில் இருந்து இந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருப்பார்கள் பாரதிராஜாவும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இப்போது.

கானா பிரபா

08.07.2026

Tuesday, July 7, 2026

இயக்குநர் கே.பாக்யராஜ் உடன் பாடலாசிரியர் வைரமுத்து


தங்கச் சங்கிலி

மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை

மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ ❤️

இயக்குநர் கே.பாக்யராஜ் & பாடலாசிரியர் வைரமுத்து கூட்டணியில் ஆகச் சிறந்த ஒன்று என்றால் இதுவே முன் நிற்கும்.

அத்துணை அழகு நிறைந்த பாடலது.

பாக்யராஜுக்கான ராசியான குரல் மலேசியா வாசுதேவனும், ராசியான ஜோடிக் குரல் ஜானகியும் அணி செய்த பாட்டு.

வைரமுத்துவின் பாடல்களில் பின்னாளில் எழுந்த அதீத உவமை கையாளல் போல் இல்லாமல் இந்தப் பாடலில் இயல்பான கவிதை மடை மிளிரும்.

துஞ்சியது பைந்தமிழ் சொல்லில் ஒரு கிறக்கம் எழும்.

“தன்னோடு தான் போராடினாள்” எல்லாம் வைரமுத்துவின் அழகியல் சொல்லாடல்.

“முந்தானை முடிச்சு” படத்தைப் போட்டுக் காட்ட இளையராஜாவை அழைக்கிறார் பாக்யராஜ். வைரமுத்துவும் கூட வரலாமா என்று கேட்டு அவரின் அனுமதியோடு அழைத்து வருகிறார் ராஜா.

படத்தின் இடைவேளையோடே “இந்தப் படம் நூறு நாட்கள் ஓடும்” என்கிறார் ராஜா.

“எப்படி முழுப்படத்தையும் பார்க்காமல் சொல்கிறீர்களே” என்று பாக்யராஜ் கேட்கவும்,

“இந்தக் கதைப்போக்கு சரியாகப் பயணிக்கிறது” என்றாராம் ராஜா.

கூட வந்த வைரமுத்து ஒன்றுமே பேசவில்லையாம்.

இந்தப் படைப்பில் தன் பாடல் எதுவுமே இடம்பெறவில்லையே என்ற ஆதங்கத்தைத் தான் கண்டு கொண்டதாக பாக்யராஜ் குறிப்பிட்டார்.

ஆனால் அதற்கு முன்பாகவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “எண்ணி இருந்தது ஈடேற” பாடலை அந்த 7 நாட்கள் படத்துக்காக எழுதியிருக்கிறார் வைரமுத்து.

கே.பாக்யராஜ் எந்த ஒரு பாடலாசிரியரையும் முழுமையாகச் சார்ந்திருந்தவர் அல்ல. எம்.ஜி.ஆர் காலத்துப் பாடலாசிரியர்களை மட்டுமன்றிப் புதிய புதிய கவிஞர்களையும் உள்வாங்கினார்.

இளையராஜாவின் முறை வந்தது முந்தானை முடிச்சு படத்துக்குப் பின்னர் தாவணிக் கனவுகள் படத்தில் “மாமோய் கள்ளுக்கடை” மற்றும் சின்ன வீடு படத்தில் இடம்பெற்ற “சிட்டுக்குருவி வெட்கப்படுது” ஆகிய பாடல்களை பாக்யராஜுக்காக வைரமுத்து எழுதினார்.

தீபக் இசையில் சுந்தரகாண்டம் படத்தில் வா வா பாட்டுப் பாடலாம் மட்டும் குறிப்பிடத்தக்க பாடல்.

பாக்யராஜ் இசையில் ஆராரோ ஆரிரரோ படத்தில் “எல்லோருமே லூசுங்க தான்” மற்றும் அவசர போலீஸ் 100 படத்தில் “நாகூரு பேட்டை” என்று தலா ஒரு பாடல் எழுதியவர்.

பாக்யராஜ் இசையில் அதிக பட்சம் ஒரே படத்தில் எழுதிய கணக்கில் பவுனு பவுனு தான் படத்தில்

“உச்சாணிக் கொம்பேறி”, “என்னென்ன சுட்டிக” பாடல்களோடு

“தென்மதுர பாண்டி சீமையிலே சாமி ஆளாகி நான் வாடுறேன்”

https://youtu.be/MGoAFY4Bu2M?si=SCiBl1yH7uAOgt4M

அற்புதமான விளைச்சல்.

இவ்விதம் இவர்கள் தொடர்பின் இறுதி அத்தியாயமாக, “படிச்சாப் புடிச்சிர்லாம்”என்ற

பாக்யராஜ் சுயசரிதை நூலுக்கு முன்னுரை பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து.

“தூறல் நின்னு போச்சு” படத்துக்குப் போட்ட மெட்டுக்குப் பதில் பாக்யராஜ் இன்னொன்று வேண்ட, அந்த மெட்டு தும்பி வா, சங்கத்தில் பாடாத கவிதை என்று மொழி கடந்து ஹிந்தி வரை சென்றது உப வரலாறு.

“தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி”

https://youtu.be/MFQsW2D6JMU?si=6zcGeBEmt8tgOWiI


ஒரு காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவை நகை மாட விளம்பரத்தில் ஒட்டிக் கொண்ட முன்னிசைப் பாட்டு.

காலங்கள் மாறினால் என்ன…

இவளின் கனவு

தணியும் வரையில்

விடியாது

திருமகள் இரவுகள்

தங்கச் சங்கிலி

மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ…❤️

கானா பிரபா

07.07.2026

Monday, July 6, 2026

பாக்யராஜைப் பாட வைத்த புலவர் ❤️


பச்சைமலை சாமி ஒண்ணு 

உச்சிலை ஏறுதுன்னு 

எடுடா தம்பி மேளம் 

கொஞ்சம் எதமாப் போடு தாளம்

பாக்யராஜ் அந்தப் பல்லவியையும் தானே எழுதித் தன் மெட்டுக்கட்டலைப் பாடிக் காட்டுகிறார் புலவர் புலமைப்பித்தனிடம். (பாக்யராஜ் இவ்விதம் பல்லவிகளில் அணி செய்த கை வண்ணம் பின்னொரு  பகிர்வில் வரும்)

இந்தப் பல்லவியே இருக்கட்டும் என்று புலவரவர்கள் சொல்லி விடுகிறார்.

கூடவே இன்னொன்றையும் வேண்டுகோளாக வைக்கிறார்.

“நீங்களே இந்தப் பாடலையும் பாடி விடுங்களேன்” என்று.

பாக்யராஜ் தயங்குகிறார். 

கூட இருந்த ஒலிப்பதிவாளர் சம்பத் அதை ஆமோதிக்கிறார்

“நீங்க இசையமைக்கிறதை ஊர்ல நம்புற மாதிரித் தெரியலை நீங்க பாடினால் தான் அடையாளம்” என்று அவர் வேறு விளக்கம் சொல்கிறார்.

“இது நம்ம ஆளு” படத்தின் வழியாக

இசையமைப்பாளர் பாக்யராஜ் அறிமுகமாகிறார்.

கூடவே பாடகர் பாக்யராஜ் பிறப்பெடுக்கிறார்.


“காவேரின்னு கங்கைன்னு பேரு வச்சான் 

ஆனாலும் அந்தத் தண்ணி ரெண்டும் ஒண்ணுதான் 

ஆளாளுக்கொரு சாதி இங்கே சொல்லி வச்சான்

ஆனாலும் நாம சாதியெல்லாம் ஒண்ணுதான்”


என்று புலமைப்பித்தனின் பொதுவுடமைச் சித்தாந்தம் பாடல் வரிகளில் தொனிக்கும்.


கங்கை தெற்கே பாயாதா…

காவேரியோடு சேராதா…

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு


என்று அதே ஆண்டிலேயே “உன்னால் முடியும் தம்பி”யிலும் அந்த வெளிப்பாட்டைக் காட்டியவர்.


“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா” என்று பாடும் நிலா எஸ்பிபி அவர்களுக்குப் பாட்டெழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.

பாலசுப்ரமணியம் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமான “துடிக்கும் கரங்கள்” படத்தில் கூட அந்த ராசி புலவர் ராசியாக ஜோடி போட்டிருப்பார்.


பச்சமலை சாமி ஒண்ணு


https://youtu.be/CcnI2QW3M_M?si=W_CbxeNy7Pa9c7NS


“இது நம்ம ஆளு” படத்தில் இன்னுமிரண்டு காதல் ஜோடிப் பாடல்கள்.

எஸ்பிபியுடன்

 “அம்மாடி இதுதான் காதலா” 


https://youtu.be/erJ_bMgEA7c?si=qorVc_0YybMz0h_y


என்று சித்ராவும்,

எஸ்பிபியுடன் “காமதேவன் ஆலயம்” 


https://youtu.be/w_1JYnfid5Q?si=cysrrrve3h0P2F8f


என்று எஸ்.ஜானகியுடனும்

இணைந்து கொண்ட இரண்டுமே பெரு வெற்றி பெற்ற இசையமைப்பாளர் பாக்யராஜின் பாடல்களாகி விட்டன.


புலவர் புலமைப்பித்தனுக்கும், கே.பாக்யராஜுக்குமான பந்தம் “கன்னிப் பருவத்திலே” காலத்தில் விளைந்தது.

பாக்யராஜின் திரையுலக வழிகாட்டி பாலகுரு அவர்கள் இயக்கிய அந்தப் படத்தின் கதை, வசனகர்த்தாவோடு இணை இயக்குநராகவும், வில்லனாகவும் பாக்யராஜ் தோன்றிய படமது. 

சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசையில் 

“பட்டு வண்ண ரோசாவாம்

 பார்த்த கண்ணு மூடாதாம்….”


https://youtu.be/9YfB-a6oaa4?si=OF-hokl9ZvoyDoz_


மலேசியா வாசுதேவன் குரலிலும், எஸ்.ஜானகி குரலிலுமாகத் தனித்தனியாக அமைந்தவை.


 

காத்து பட்டாலே

கரையாதோ கற்பூரம்

கரையுது எம் மனசு உன்னால…


புலவரவர்கள் அந்த வரிகளால் கரைய வைத்திருப்பார் நம் மனதை.


இதில் இன்னொரு சம கால விந்தையும் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட இதே சந்தத்தில் 1979 இல மாதக் கணக்கில் சற்றே முன்பதாக இசைஞானி இளையராஜா இசையமைப்பில்

“உச்சி வகுந்தெடுத்து” பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.


இவ்விதம் எழுபதுகளின்  “கன்னிப் பருவத்திலே” தொட்டு 90களின் நடுப்பகுதி வரை புலவர் புலமைப்பித்தனோடு கே.பாக்யராஜின் கவி இணைப்பும் இருந்தது.


பாக்யராஜ் இசையில் “பவுனு பவுனுதான்” படத்தில் வரும்

 “மாமா ஒரு மாலை சூட்டி மார்பில் எனை ஊஞ்சலாட்டு” 


https://youtu.be/38HgJNUs0KI?si=Z8dQwrKdC08U_fdB


பாடலுக்கும்

பாக்யராஜுக்கு மூத்தவர், சினிமாவுக்கு வருவதற்கு முன் ஒன்றாக நாடகம் போட்டவரும் பின்னாளில் உதவி இயக்குநருமாக அமைந்தவருமான ஆர்.பி.விஸ்வம்

இயக்கிய “ஞானப்பழம்” படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாகவும், இசையும் கொடுத்த

  “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்னு சொன்ன சாரே” 


https://youtu.be/zhW_NkUqpLU?si=rvFrgpk2OjCBekFt


பாடலுக்கும் 

என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.


பட்டு பூச்சி வாழ்க்கையது

எட்டு நாள் தானே

பறந்து வரும் ஈசலுக்கு

ஒருநாள் தானே


அவை பறக்கலையா

சிறகு விரிக்கலையா

வாழ்வை ரசிக்கலையா


பூங்குருவி பாடடி சுபராகம் தேடித்தான்

மன பாரம் தீரத் தான்


https://youtu.be/KMhvXWII6HA?si=EeX4BM31DV0QiJTK


வாழ்க்கையே ஒரு வரவு செலவு

வந்ததே ஒரு வரவு தான்


என்று நிலையாமைத் தத்துவத்தைக் காட்டி நிற்கும் அற்புதமான பாடலை “சுந்தர காண்டம்” படத்துக்காக தீபக் இசையில் புலமைப்பித்தன் எழுதி பாக்யராஜ் படங்களில் இன்னொரு மகுடப் பாடலாய் அமைத்தார்.

பாக்யராஜ் இயக்காத, நாயகனாக நடித்த "என் ரத்தத்தின் ரத்தமே" படத்தில் மூன்று பாடல்களை சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில் புலவர் புலமைப்பித்தன் எழுதினார். அந்தப் பாடல்களில் "ஓர் ஆயிரம் பெளர்ணமி நிலவு" அந்தக் காலத்தில் வெகு பிரபலமான பாட்டு.

இசைஞானி இளையராஜா & இயக்குநர் பாக்யராஜ் கூட்டில் புலவர் புலமைப்பித்தன் இணைந்து கொண்ட பாடல்களில்

“நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்” 


https://youtu.be/Cg4a0aYdjpE?si=JWmvjKMlF_pwQn3U


முந்தானை முடிச்சுக்காகவும், “பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணாகக் கூடிச்சாம்” 


https://youtu.be/1ftmovmTljY?si=x4eAlpnQ1Prm2xBl


வீட்ல விசேஷங்க படத்துக்காகவும் அமைந்த சிறப்பு மிக்கவை.

அவற்றுக்கெல்லாம் மேலாக, பாக்யராஜ் வேண்டி வாங்கும் சூழ்நிலைப் பாடலில் உன்னதமாக அமைந்த “சின்ன வீடு” படத்தில் வரும்

“வெள்ளை மனம் உள்ள மச்சான்” 


https://youtu.be/2RfG5u_8o4g?si=ZgAOZ6UUwiWO4Fbu


இந்தக் கூட்டணியில் புலமைப்பித்தனின் புலமை சாற்றும்.


“கள்ள மனம் முள்ளு தச்சி

கண்ணீரில் மூழ்குதடி…”


என்று எதிர் அலைவரிசையில் நாயகனுக்காக அவர் கொடுத்த வரிகள் அபாரம் என்றால்


செங்கரும்பை நான் மறந்து

வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…


அவன் நொந்து நிற்கும் சூழலில் “யாருமிங்கே ராமனில்லே” என்று ஆற்றுப்படுத்துவாள் புலவரின் வரிகளினூடே.


இந்தக் கட்டுரை எழுதும் போது பழைய நினைவுகளில் தேங்கியிருந்த போது ஒன்று ஞாபகத்தில் எழுந்தது.

“தங்க மகன்” படம் உருவாகும் சூழலில் தான் பூர்ணிமா ஜெயராம், பாக்யராஜை மணமுடிக்கும் செய்தி வந்தது. அதன் பின்னர் கூட பூர்ணிமா நடிப்பில் படங்கள் 

வந்திருந்தாலும், தங்க மகன் காலத்தை நினைத்தால் பூர்ணிமா & பாக்யராஜ் திருமண பந்த அறிவிப்பு நினைவில் எழும்.

அங்கே கூட புலவர் புலமைப்பித்தனின் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ” கூடவே வரும்.


இதற்கெல்லாம் முன்பாக, பாக்யராஜ் & பூர்ணிமா நிழலில் ஜோடி போட்ட காலம் அமைந்திருக்கிறது. 

“டார்லிங்…டார்லிங்…டார்லிங்…”

படத்திலே “அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே” 


https://youtu.be/PSOsKuz4d0s?si=wkF0aZZxqkb7Wmi-


என்று புலவர் புலமைப்பித்தன் எழுதியது பின்னாளில் நிஜத்தில் நிலைத்துப் போனது.

கே.பாக்யராஜின் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.


பட்டுப் போல் மெதுவாக தொட்டுக்கொள்

கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்

தலைவனின் கரம் தழுவிட வரும்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே…

இதய தாகம் அது 

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்…


கானா பிரபா

05.07.2026

Thursday, July 2, 2026

சித்ராலயா கோபு 95


" நீ தான் கோபுவா!”

“ஆமாப்பா”

“சிவாஜிக்குல்லாம் எளுதீக்கியாமே, இந்த கலாட்டாக் கல்யாணம்லாம் பாத்திருக்கேம்பா, நீ நம்மூர்க்காரன்னு தெரியாமப் போச்சேப்பா

நம்மளக் கொஞ்சம் சினிமாவுல இஸ்து வுடேன்

இந்த தேங்காய் சீனிவாசன், நாகேஷைல்லாம் பீட் பண்ணணும்"

அடப்பாவி சினிமாங்குறது எவ்ளோ பெரிய விஷயம் இவன் அசால்டா வந்து பீட் பண்ணுடுவேங்குறான் என்று மனசுக்குள் நினைக்கிறார் கோபு.

“சரி நான் சொல்றேம்பா” என்று சொல்லி அந்த மனிதனை வழியனுப்பி வைக்கிறார்.

பின்னால் அவரின் வீட்டு வேலைக்காரி வந்தாள்.

“ஐயரே! என்ன இவன்கிட்டல்லாம் பேச்சு வச்சிருக்கே நீயி,

அவன் மூணு இன்ஸ்பெக்டரை, நாலு போலீஸ்காரரைப் போட்டுத் தள்ளினவன்”

என்று திகிலூட்டி விட்டுப் போகிறாள்.

திருவல்லிக்கேணி வாசியான சித்ராலயா கோபு சந்தித்த அனுபவம் ஒரு கதையாகப் பிறக்கிறது.

ஒரு சினிமாக் கதாசிரியரிடம் ஒரு ரவுடி தன்னைச் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டுகிறார். அடுத்த நாள் அந்தக் கதாசிரியரின் வீட்டு உரிமையாளரே கேஸ் எல்லாம் வீட்டுக்கு அனுப்பி விட்டு,

“என்கிட்ட கேட்டா நானே கொண்டு வந்து கொடுத்திருப்பேனே ஏன் துரைக்கண்ணுகிட்டல்லாம் சொல்லிக்கிட்டு”

என்று அந்தக் கதாசிரியருக்கு மரியாதை எல்லாம் பலமாகக் கிடைக்கிறது.

ரவுடியைப் போட்டுப் படம் எடுத்தாச்சு, அவனுக்கும் நல்ல சந்தோஷம். கூட்டாளிகளோடு படம் பார்க்கப் போகிறான்.

ஆனால் அவனை வைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டன.

“நீ ஒண்ணும் கவலைப்படாதே, அடுத்ததா நானே கதை, வசனம், டைரக்சன் பண்ணி ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன், நீ தான் வந்து அந்தக் கட்டையை (க்ளாப்) அடிக்க வேண்டும்”

என்று ரவுடி சொல்வதாகக் கதை முடிகிறது.

“துரத்துகிறார் துரைக்கண்ணு” என்ற பெயரில் சித்ராலயா கோபு குமுதத்தில் பல்லாண்டுகளுக்கு முன் எழுதிய தொடர் அது.

இதைப் படிக்கும் போது “ஜிகர்தண்டா” படம் ஞாபகத்துக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல என்று சொல்ல மாட்டேன்.

கார்த்திக் சுப்புராஜ் தன் படம் உருவான கதைக்கு ஒரு வரலாறு வைத்திருக்கிறார்.

நாம் சந்திக்கும் மனிதர்கள், இயல்பான சம்பவங்களை வைத்தே வசனம் கொடுப்பது சித்ராலயா கோபுவின் பாணி.

தன் முன்னோர்கள் கல்கி, தேவன் போன்றவர்களை மெச்சுவார்.

“கோபு ஒரு சமுத்திரத்தில் கண்டெடுத்த முத்து நாமெல்லாம் கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள்”

என்று சித்ராலயா கோபுவைத் தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். சமீபத்தில் “காசேதான் கடவுளடா” படத்தை முதன்முறை பார்த்தேன்.

கிரேசியின் முன்னோரின் தாக்கம் பின்னாளில் எவ்வளவு தூரம் அவருக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது என்பதை உணர முடிந்தது.

காசேதான் கடவுளடா நாடகத்தை ஏவி மெய்யப்பச் செட்டியார் படமாக்க நினைத்த போது அந்தப் படத்தை சித்ராலயா கோபு அவர்களையே இயக்க வேண்டினார்.

புதுமை இயக்குநர் ஶ்ரீதரின் நண்பர், தான உத்தியோகத்தை உதறி விட்டுத் தன்னுடனேயே வருமாறு அவரும் வேண்டவும் ஶ்ரீதரின் பாசறையில் கதை வசன கர்த்தாவாக விளங்கியவர்.

“சமூகத் தொண்டி”,”மாஞ்சாக் கயிறு” என்று இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசன் வைத்து அதகளம் பண்ணியிருப்பார்.

ஏவி மெய்யப்பச்செட்டியார் இந்தப் படத்தின் குணச்சித்திர நாயகன் தேங்காய் சீனிவாசனுக்கு 16 அடி கட் அவுட் வைத்ததால் கதாநாயகன் முத்துராமனுக்கு வருத்தமும் கூட.

படத்தைத் தேடிப் பிடித்துப் பாருங்கள் இந்தக் காலத்திலும் ரசிக்கலாம்.

நம் காலத்தில் ஏவிஎம் இன் “பாட்டி சொல்லைத் தட்டாதே” வழியாகத் தான் கோபு நமக்கு அறிமுகம். இங்கேயும் அவரின் ஆஸ்தான நடிகை மனோரமோவோடு, ஒரு நகைச்சுவைக் கலாட்டாவே இருக்கும்.

ராஜசேகர் இயக்கிய அந்தப் படத்தைத் தொடர்ந்து ஏவிஎம் இன் “வசந்தி” படத்தை மோகனை வைத்து 30 நாட்களில் எடுத்து முடித்தவர் சித்ராலயா கோபு.

இவரின் கலாட்டா கல்யாணம் நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனே படமாக எடுக்க வேண்டினாராம்.

பாஸ்கியுடன் இவரின் கலகல பேட்டியைத் திரும்பத் திரும்பப் போட்டு ரசிப்பேன்.

கோபு, ஶ்ரீதரைத் தவிர இன்னொரு நண்பர் கடுகு நம் வலைப்பதிவு காலத்திலும் எழுதிய எழுத்தாளர் இந்த மூவரும் பள்ளிக்காலத் தோழர்கள். அஞ்சறைப்பெட்டி பெயரா கடுகு, மிளகுன்னு பேர் வச்சுண்டு எழுதிக்கிட்டிருந்தான் என்று கோபு சொல்வார்.

கடுகுவின் வலைப்பதிவைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இந்த உலகில் இருந்து விடை பெற முன்னர் வரை எழுதிக் கொண்டே இருந்தவர்.

கோபு, தன் ஐந்தாம் வகுப்பு நண்பர் ஶ்ரீதரோடு இணைந்த கலைப்பயணம், 

தன்னை கதை வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் அடையாளப்படுத்தினார்.

இவரின் “சிரிப்பாலயம்” புத்தகத் தலைப்பையும், அந்தப் புத்தக அட்டையில் இருக்கும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பையும் பார்த்து ரசிப்பேன்.

இன்று தனது 95 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் 

சித்ராலயா கோபு ❤️

வாழ்க வாழ்க வாழ்க

கானா பிரபா

02.06.2027

Wednesday, July 1, 2026

கவியரசு கண்ணதாசன் உடன் கே.பாக்யராஜ்

கவியரசு கண்ணதாசன் புதியவர்களின் அறிமுகங்களுக்குப் பாட்டெழுத முதலில் உட்கார்ந்தால் அவரின் வாயில் இருந்து அறச்சொல் முதலில் பிறக்காதாம்.

அப்படித்தான் இதுவும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

ஒருவர், பாரதிராஜா புதிய தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்,

இன்னொருவர் கதா நாயகனாக அரிதாரம் பூசுகிறார்,

கண்ணதாசன் தன் பேனாவை எடுக்கிறார்

வான் மேகங்களே

வாழ்த்துங்கள்.. பாடுங்கள்

https://www.youtube.com/watch?v=Rp2K0qoSS34

இவ்விதமாக கே.பாக்யராஜ் நாயக அறிமுகத்துக்குக் கண்ணதாசனின் வாழ்த்துப் பா அமைந்தது.

இரண்டு வாட்டி மெட்டைக் கேட்டு விட்டுக் கடகடவென்று எழுதி விட்டாரே என்று ஆச்சரியம் பொங்க இந்த ஆண்டு கூடப் பேசினார் கண்ணதாசன் பெருமையை கே.பாக்யராஜ்.

அவர் வியந்தது “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” 16 வயதினிலே பாடலைத்தான்.

இம்முறை பாக்யராஜ் முறை, அவர் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். கண்ணதாசன் பேனா துள்ளிக் குதிக்கிறது, அந்த பஸ்ஸில் துள்ளிக் குதித்துக் கற்பனை பண்ணும் பாக்யராஜ் போலவே, 

பாடல் பிறக்கிறது

காதல்

வைபோகமே

காணும்

நன் நாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடி கிளிகள்

கூடி இணைந்து

ஆனந்தப்

பண்பாடுமே….

https://www.youtube.com/watch?v=EruNrx2eiUw

நான் இசையமைப்பாளராக முன்பே பிறந்து விட்டாலும் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தந்தது “சுவரில்லாத சித்திரங்கள்” என்பார் கங்கை அமரன்.

“காதல் வைபோகமே” பாடல் காலம் தாண்டி இன்றும் காதலர் கீதம் தான் இல்லையா?

கங்கை அமரன் இசையில், கே.பாக்யராஜ் இயக்கிய “மெளன கீதங்கள்” படத்தில் கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார். தாம்பத்ய சங்கீதமாக அந்தப் பாடல். 

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்

இந்த மாதிரி ஒட்டுறவான பாடலைக் காட்டினால் தானே அந்தத் தம்பதியின் பிரிவின் வலியை அழுத்தமாகக் காட்ட முடியும்.

“அந்த 7 நாட்கள்”

வாத்யாரே! சொந்தமா ஒரு ட்யூன் போட முடியாமல் மியூசிக் போட சான்ஸ் கேட்டு அலையுறியே?” என்று அலுத்துக் கொள்ளும் உதவியாளன் கோபியின் வாத்தியார்

பாலக்காட்டு மாதவன். இவர்களை டாக்டர் ஆனந்த் சந்திக்கிறார். தன்னைத் தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை அழைத்துச் செல்கிறார்.

கதையின் அவுட்லைன், பாட்டு வரும் சூழலைக் கேட்கிறார் பாலக்காட்டு மாதவன்.

“நான் கதை சொல்றதை விட நீங்க general ஆ ஏதாவது ட்யூன் போடுங்க நான் கதையில சேர்த்துக்கிறேன்”

இந்த இடத்தில் பாலக்காட்டு மாதவன் சொல்லும் கருத்து அச்சொட்டாக இயக்கு நர் கே.பாக்யராஜைப் பிரதிபலிக்கும், இப்படி

“ஒரு இசையமைப்பாளர் எப்பவுமே கதை என்ன, கதாபாத்திரங்கள் என்னென்ன, 

கதாபாத்திரங்களுடைய குணாதிசயங்கள் என்ன இதை நன்றாக மனசில் வாங்கிக் கொள்ள வேண்டும்,

அப்படி இல்லை என்றால் இசைக்கும் படத்துக்கும் சம்பந்தமே இருக்காது”

டாக்டர் ஆனந்த், அதான் அந்தத் தயாரிப்பாளர் கதையைச் சொல்கிறார், 

அது பாலக்காட்டு மாதவனும் வசந்தியும் கொண்ட காதல் கதையும், அதன் நீட்சியாக வசந்தியும் ஆனந்தும் திருமண பந்தத்தில் இணைந்ததும், வசந்தி விஷம் குடித்ததுமாகச்

சொல்லச் சொல்ல, பாலக்காட்டு மாதவன் அது தன் கதை என்று தெரியாமல் உச் கொட்டுகிறார்.

இந்த இடத்தில் பாக்யராஜின் பண்பைப் பாருங்கள். அந்தக் காலகட்டத்தில் நடிகர் ராஜேஷ் பாக்யராஜின் வழிகாட்டி பாலகுருவின் “கன்னிப் பருவத்திலே” படத்தில் அறிமுகமாகி, அப்படம் வழியே பாக்யராஜுக்கும் அறிமுகமானவர். தொடர்ந்து ராஜேஷ் செய்த ஈகோத்தனத்தன் தன் வாய்ப்பை இழந்ததாக ராஜேஷ் கூடப் பேட்டியில் சொல்லி இருப்பார்.

அப்பேர்ப்பட்டவருக்கு ஒரு மறுவாழ்வுப் படம் “அந்த 7 நாட்கள்”. இந்தப் படத்தில் ராஜேஷ் இன் டாக்டர் பாத்திரம் எவ்வளவு கனதியானது என்பதை பாலக்காட்டு மாதவன் அந்தப் பாத்திரம் மீது அனுதாபப்படுவதன் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார் பாக்யராஜ் அதுதான் பாக்யராஜ்.

பாடலின் தொடக்கத்தில் அவர் சந்தம் போடும் அந்த அழகைப் பாருங்கள் எவ்வளவு தூரம் உன்னிப்பாகப் பார்த்திருப்பார்.

ச க ம ப க ம க ச நி ச நி பக ம நி ப ச

தென்றலது உன்னிடத்தில் 

சொல்லி வைத்த 

சேதி என்னவோ….

https://www.youtube.com/watch?v=T79zxMNhvbg

ஒரு நாள் முழுக்க இந்தப்  பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.பதிவு கானா பிரபா

பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார். 

“கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி, 

“தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.

“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம்.

எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய, 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.

பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை இசையோடு கேட்டால் பேரின்பம்.

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை 

இன்று தங்கரதம் ஏறியது

உன்னைப் பார்த்து சொல்லும் வார்த்தை 

இன்று கங்கையென மாறியது 

கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள் ❤️

ஒளிப்படங்கள் நன்றி : Old Tamil movie stills தளம்

கானா பிரபா

01.07.2026 

Tuesday, June 30, 2026

குருவிக்கரம்பை சண்முகம் உடன் கே.பாக்யராஜ்

அமெரிக்காவுக்குப் போய் விட்டுத் திரும்பிய தன் முதலாளியின் மகள் ராதா, தன் சிறு வயதுத் தோழி தன்னோடு பழகிய அதே நேசத்தோடே இருப்பாள் என்ற கனவோடே இருக்கிறான் ராஜா.

காரணம் அந்தப் பால்யகாலத்து நட்பு அப்படிப்பட்டது. அதைக் கூட அழகாக விபரித்திருக்கும்.  ஒன்றாக அந்தப் பள்ளி வாழ்க்கையின் ஆரம்பப் பருவத்தைப் பங்கு போட்ட சிநேகிதம். அது

ஆனால் ராதாவின் தோழிகளால்

ராஜா தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறான்.

ஊட்டிக் குளிர் காய்ந்து கொண்டு அந்தத் தோழியர் கூட்டத்தோடு இருக்கும் ராதா ராஜாவைப் பாட வேண்டுகிறாள். 

பழைய காதலியை நினைத்தாவது பாடுங்கள் என்று அவளின் கூட்டாளிகள் கிண்டலடிக்கிறார்கள்.

ஓ நெஞ்சே நீதான்

பாடும் கீதங்கள்

ஏனின்று நீர் மேல்

ஆடும் தீபங்கள்

https://youtu.be/IvdlxFfe_gM?si=AUi6DjKzAsxStdHy


ராஜா பாட ஆரம்பிக்கிறான்.

இந்த இடத்தில் 

“ராகங்கள் சொல்லாதோ

காதல் சந்தத்தை…”

இந்த வரிகள் தான் மிக முக்கியமானது.

காரணம் அவன் பாடும் இந்தப் பாடலின் சந்தம்

“Oh my lord my god 

let us sing for you…

ஊட்டிப் பள்ளியில் தானும், ராதாவும் சேர்ந்து காலைப் பிரார்த்தனையில் பாடிய அதே தோத்திரப் பாடலின் சந்தம் தான்.

திரைக்கதை மன்னன் பாக்யராஜின் பாடல் வாங்கு திறன் எப்படியிருக்கிறது பாருங்கள்.

இந்தப் படத்தில் சங்கர் - கணேஷ் இரட்டையர் இசை பிரமாதமாக இருக்கும்.

இங்கே குருவிக்கரம்பை சண்முகம் பாக்யராஜின் வாய் மொழி ஆகியிருக்கிறார்.


பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்தவர் குருவிக்கரம்பை சண்முகம்.

பாக்யராஜ் படங்களில் இம்மாதிரித் தமிழ் அறிஞர்களை உள்வாங்கியிருப்பார்.

டார்லிங் டார்லிங் டார்லிங் 

கே.பாக்யராஜ் & பூர்ணிமா ஜெயராம் ஜோடியை முதலில் நிழலில் காட்டிய படம்.

ராதிகா, சுஹாசினி, ரேவதி என்று நாயகிகள் கடந்து பூர்ணிமாவில் சேர்ந்த ஜோடிக் கணக்கு பின்னாளில் காலம் சேர்த்த நிரந்தரத் தீர்ப்பு.

டார்லிங் டார்லிங் டார்லிங் படம் பார்த்து விட்டு எம்ஜிஆர் பாக்யராஜிடம் சொன்னாராம்

“நீ அந்த சுமனுக்கும் நாலு போடு போட்டிருக்கணும்” என்று 😁

பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகமும், கே.பாக்யராஜும் இணைந்த படங்களில் இன்னொரு உச்சம் “அந்த 7 நாட்கள்” படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் “கவிதை அரங்கேறும் நேரம்”

https://youtu.be/2LSt3E7LVeI?si=U0sBDzFEPWCw_U3H

இன்னொரு ரத்தினப் பாடல் என்றால்

“தாவணிக் கனவுகள்” படத்தில் வரும் “செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது” பதிவு கானா பிரபா

https://youtu.be/mIb0TdQHo7I?si=sqkcxtJHniKdrjR9

“சின்ன வீடு” படத்தில் “ஜாமம் ஆகிப் போச்சு” இன்னொரு பாடல் கணக்கில் வரும்.

"டார்லிங் டார்லிங் டார்லிங்" வந்த காலத்தில் சற்று முந்திக் கொண்டு வந்த எம்.பாஸ்கர் இயக்கிய “தீர்ப்புகள் திருத்தப்படலாம்” படத்தில் குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய ராகம் தாளம் பல்லவி 

https://youtu.be/Zb4eR8toDIE?si=xPR1DRtNeFI_qA_B

பாடலும் அற்புதமாக இருக்கும்.

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜன் இயக்கிய கன்னி ராசி படத்தில் இளையராஜா இசையில் வாணி ஜெயராமோடு, சி.எஸ்.ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன் பாடும் 

“சுக ராகமே என் சுக போகமே”

https://youtu.be/VcJIchB96R8?si=yfFWjiep96FvRve-

பாடலை மறந்து விடத்தான் முடியுமா?

அதுவும் குருவிக்கரம்பையார் தான்.

அப்படியே கொஞ்சம் தள்ளிப் போனால் எம்ஜிஆரின் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு கதா நாயகனாக நடித்த “அக்னிப் பார்வை” படத்தில் இளையராஜா இசையில் 

“இதழ் இனிக்க இனிக்க” பாடலை எழுதியிருக்கிறார்.

இளையராஜா & குருவிக்கரம்பை சண்முகம் சேர்ந்த இன்னொரு அரிய பாடல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் வரும் “தாத்தா தாத்தா தா” கேட்காதவர்கள் ஓடிப் போய்க் கேட்டு விட்டு வாருங்கள் 

கன்னி ராசியில் பாட்டெழுத்த வைத்த பாண்டியராஜனை வைத்துப் பின்னாளில் படம் எடுப்பேன் என்று 

குருவிக்கரம்பை சண்முகம் எண்ணியிருப்பாரா என்ன?

“மாப்பிள்ளை மனசு பூப்போல” படத்தைத் தானே இயக்கி, தேவா இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதி பாண்டியராஜனை வைத்து இயக்கிய குருவிக்கரம்பை சண்முகம் நிரந்தக் கடனாளி ஆனார்.

சில வருடங்களுக்கு முன்னர் “சார் ஐ லவ் யூ” படத்தில் வரும் குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய

“இங்கே இறைவன் இன்னும் கலைஞன்” பாடலைப் பற்றி நான் சிலாகித்து எழுதிய போது அவர் ஊர்க்காரர் வந்து கொடுத்த பின்னூட்டம் அதிர்ச்சி தந்தது.

குருவிக்கரம்பை சண்முகம் சித்த சுவாதீனம் இழந்து தன் வீட்டுத் திண்ணையில் இருந்ததாக…

என்னுடைய பிள்ளைகள் பல்லவி & சரண் ஐ முதன்முதலில் பாட வைத்தது பாக்யராஜ் தான் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் சொல்லிப் போற்றியிருப்பார்.

அந்தப் பாடல் வேறொன்றுமில்லை

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் வரும் ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள் பாடலில் வரும் அந்தத் தோத்திரப் பாடல் தான்.

அந்தப் பாடலை எழுதிய குருவிக்கரம்பை சண்முகம் பின்னர் தன் மாப்பிளை மனசு பூப்போல படத்தில் “மதுரையிலே” பாடலை எஸ்பிபியோடு பாடுவது வேறு யாருமல்ல அவருடைய மகள் பல்லவி தான்.

கே.பாக்யராஜ் இன் “எங்க சின்ன ராசா” படத்தில் சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில் வந்த பாடல்கள் அனைத்தையும் வாலியின் கணக்கில் விக்கிப்பீடியா போட்டிருக்கிறது. 

ஆனால் அந்தப் படத்தில் குருவிக்கரம்பை சண்முகம் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கிறார். 

அந்தப் பாடலுக்கும் எனக்கும் ஆத்ம பந்தம் ஒன்று இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது போல் எனக்குத் தமிழக உறவுகளின் நட்பு அதிகம் இல்லாத காலம்.

முதல் தடவை தமிழகப் பயணம் போகிறேன். முன்பே ஒப்பந்தம் செய்த வாடகைக் காரில் ஊர் சுற்றிக் கொண்டு மாயவரத்தைக் கடந்து ஒரு சிறு கிராமம் வழியே கார் போய்க் கொண்டிருக்கும் சமயம் ஒரு வீட்டிலிருந்து பண்பலை வழியே ஒரு பாடல் ஒலித்தது. அந்த நேரத்தில் அந்தப் பாடலை ஒரு அந்நியச் சூழலில் நான் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை, குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய அந்தப் பாடல் இதுதான்

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

அந்தி மாலைக் காத்து வழியா

வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.

ராகங்கள் சொல்லாதோ

காதல் சந்தத்தை

ஓ நெஞ்சே…❤️

கானா பிரபா

30.06.2026

Monday, June 29, 2026

கே.பாக்யராஜ் உடன் புலவர் சிதம்பரநாதன்

பாதமலர் நோகுமுன்னு

நடக்கும் பாதைவழி

பூவிரிச்சேன் மயிலே

ஓடம் போல் ஆடுதே மனசு

கூடித் தான் போனதே வயசு…

“ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ !

https://youtu.be/LihOo9mQWFc?si=mAWVpqLRf27GN4L1

புலவர் சிதம்பரநாதன் எழுதிய அந்தப் பாடல் வரிகள், தூறல் நின்னு போச்சு படத்துக்காக இடம்பெற்றது.

படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் பாக்யராஜ் & சுலக்சனா சந்திக்கும் காட்சி வரும். அதில் திருட்டுத்தனமாகச் சந்தித்து வெட்கப் புன்னகையோடு ஓடும் சுலக்சனாவின் காலில் முள்ளுக் குத்தும். அடுத்த நாள் அந்தப் பாதையில் பூக்களால் மெத்தை போட்டிருப்பார் பாக்யராஜ். அந்த நேரத்தில் வரும் பாட்டு “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்”. பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.

அதன் பின் காட்சி மாறி கோலம் மாறியதும் சோகப் பாடலாக உருவெடுக்கும் “ஏரிக்கரைப் பூங்காத்தே” பாடலில் அந்த முள் குத்தலை புலவர் சிதம்பரநாதன் வரிகளில் வாங்கியிருப்பார் பாக்யராஜ், அதுதான் பாக்யராஜ்.

இப்படியாக எந்தப் பாடலாசிரியர் என்றாலும் அவர்களிடம் வாங்கும் திறன் கொண்டவர் அவர்.

கே.பாக்யராஜ் படங்களில் மிக அரிதாகவே முழுப்பாடல்களையும் ஒருவரே எழுதுவார். அப்படியான வாய்ப்பு கவிஞர் வாலிக்கு அதிகம் வாய்த்திருக்கிறது. ஒருமுறை வாலியே வேடிக்கையாக பொது மேடை ஒன்றில்

“இந்த பாக்யராஜிடம் எவ்வளவோ தடவை சொல்லிட்டேன் அனுபவமில்லாத பாடலாசியர்களுக்குப் பாடல் கொடுக்காதீங்கன்னு ஏன்னா அதைச் செம்மைப்படுத்த என்னிடம் வருவார்” என்று சொல்லி இருப்பார்.

பாக்யராஜுக்கு இம்மாதிரி அணி செய்த பாடலாசிரியர் வரிசையில் புலவர் சிதம்பரநாதனை மேலும் இரு படங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

இரண்டுக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

ஒன்று “ஒரு கை ஓசை” படத்தில் எஸ்.ஜானகி குரலில் இடம்பெற்ற

“நான் நீரோடையில் நீராடையில்”

https://youtu.be/yuRdd33Jxxo?si=0y1K7PZffV6kRotc

“பாமா ருக்மணி” படத்தில் இரண்டு பாடல்கள். அதில் ஒன்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணாவுடன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ஆங்கிலம் கலந்த ரகளையான பாட்டு

Take somebody love me anybody 

https://youtu.be/PrdPUXhiCOs?si=nZLAzRCDvaSYIUyk


நீ ஒரு கோடி மலர் கூடி 

உருவானவள்

எழில் உருவானவாள்

https://youtu.be/_8s8OYJyB1Y?si=pykphtwGTaCoO1QG

இந்தப் பாடலை இலங்கை வானொலியின் பொற்கால ரசிகர்கள் மறந்து விட முடியுமா என்ன?

உவமைகள் எல்லாம் 

உயர்ந்தவை அல்ல..

உன் எழில் முன்னாலே…

நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்

புலவர் சிதம்பரநாதன் எழுதிய இந்தப் பாடல் காட்சி வடிவம் பெற்ற போது இன்னொரு சிறப்புமுண்டு.

கே.பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணாவோடு அவர் ஜோடி சேர்ந்து பாடும் பாட்டு இது.

இங்கேயும் “மலர்” வந்திருக்கிறது.


பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் குறித்து இன்னும் பேசுவோம். ❤️

கானா பிரபா

29.06.2026

Tuesday, June 23, 2026

பாரதிராஜாவின் ஹம்சலேகா ❤️

 பாரதிராஜாவின் ஹம்சலேகா ❤️

எந்தப் பெண்ணிலும் இல்லாத 

ஒன்று

ஏதோ....

அடி ஏதோ...

உன்னிடம் இருக்கிறது.....

SPB எந்த இசையமைப்பாளரிடம் கூட்டுச் சேர்ந்தாலும், தன்னுடைய உணர்வுரீதியான பரிமாறலில் குறை வைத்ததே இல்லை என்பதைக் காட்டும் ஒரு வசீகரப் பாட்டு.

பாரதிராஜா இளையராஜாவை விட்டு விலகிய காலத்திலும், 

வானொலிக்காரர்கள் விடாமல் வேதம் புதிது (தேவேந்திரன்), கேப்டன் மகள் (ஹம்சலேகா) வை இளையராஜா இசை என்றே பரிமாறும் பாரம்பரியமும் நடந்திருக்கிறது.

பாரதிராஜாவின் படங்களில் ஒரு இயக்குநர் எவ்வளவு தூரம் தான் வேண்டியதை வாங்கும் திறன் கொண்டவர் என்பதற்கு இவ்விரு இசையமைப்பாளர்களும் சான்று.

அதுவும் ஹம்சலேகாவைத் தன் இரண்டு படங்களில் (கொடி பறக்குது, கேப்டன் மகள்) பாரதிராஜா பயன்படுத்திக் கொண்டது ஆகச் சிறப்பு.

கேப்டன் மகள் படத்தில் இன்னொரு அறியப்படாத பொக்கிஷப்பாட்டு  உண்டு. அது  "நந்தவனப் பூக்கள் பூத்ததே".

அந்தப் பாடல் பிடித்துப் போனதுக்குக் காரணமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொடுக்கும் அந்த கெத்தான குரல் தான். 

“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடலில் மெது மெதுப்பாகப் பாடும் எஸ்பிபியா இப்படி ஒரு மிரட்டல் குரலில் பாடுவது என்ற பிரமிப்பும் கூடவே.

மென்மையாக ஒடுங்கும் சித்ரா குரலுக்கு மாறுபட்ட வில்லத்தனம் மிளிரும் குரல் நெப்போலியனுக்கான முதல் பாடல் என நினைக்கிறேன். இதே மாதிரித் தானே "மண வினைகள் யாருடனோ" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முதலாக ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார்.

அந்தக் காலத்தில் “கொடி பறக்குது” பாடல்கள் ஒரு புறம் பட்டையைக் கிளப்ப, இன்னொரு புறம் “கொடி பறக்குது” சேலைக்கும் ஏக மவுசு. ஒரு படத்தில் நாயகி அணியும் வித்தியாசமான நிற வடிவமைப்புக் கொண்ட சேலைக்கு அந்தப் படத்தின் பெயரையே வைத்து விடும் பாரம்பரியம் அது. சேலைக் கடைகளில் தீபாவளிக்கு “கொடி பறக்குது” சேலை என்ற விளம்பரம் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதி விளம்பர ஒலிபரப்பு லவுட்ஸ்பீக்கட் வழியே பரவியது இன்னும் பசுமையாக நினைவில்.

தமிழில் இளையராஜா & பாரதிராஜா கூட்டணியில் விரிசல் வந்த போது இசையமைப்பாளர் தேவேந்திரனோடு “வேதம் புதிது” வழியாக ஒரு மெல்லிசைக் கூட்டணி எழுந்தது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, அமலாவோடு பாரதிராஜா சேர்ந்து எதிர்பார்ப்பைக் கிளப்பிய படமாக “கொடி பறக்குது” வந்தது. அம்சலேகாவோடு முதன்முறை இணைந்தார் பாரதிராஜா.

சொல்லி வைத்தது போலக் கில்லி அடித்தது கொடி பறக்குது படப் பாடல்கள். தன் பாணியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் அறிமுகம் வேறு கொடுத்துச் சிறப்பித்திருந்தார் “கொடி பறக்குது” இசைப் பேழையில் பாரதிராஜா.

“ஓஓஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை”

இரண்டு வடிவங்களில் ஒலிப்பதிவானது.

ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு வாணி ஜெயராம், இன்னொன்று சித்ரா சேர்ந்தது. படத்தில் வந்தது எஸ்பிபி & சித்ரா சேர்ந்தது தான்.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” எண்பதுகளின் பாடல் தொகுப்புகளில் தவிர்க்க முடியாத பாட்டு. கூடவே சேலைக் கடைகளுக்கான வானொலி விளம்பரங்களுக்கும் கை கொடுத்தது.

எஸ்பிபியின் “அன்னை மடியில்” உருக வைத்தது, மொத்தத்தில் கொடி பறக்குது படம் வணிக ரீதியாகப் போகா விட்டாலும், பாடல்கள் இளையராஜாத்தரமாக இருந்தன.

ரஜினிக்கும் ஹம்சலேகாவுக்கும் அப்படி என்ன ராசியோ, கொடி பறக்குது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் எதிர்பார்த்த அளவில் போகாத சூழலில், இன்னொரு படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது அதுதான் “நாட்டுக்கு ஒரு நல்லவன்”. ரஜினி ரசிகர்களே இந்தப் படத்தைக் கெட்ட கனவாக மறக்க நினைக்கும் வேளை இங்கேயும் அம்சலேகா தான் கை கொடுக்கிறார்.

கர்னாடகா எல்லை தாண்டி தமிழகத்தில் ஊடுருவி ஒரு மிகப் பெரிய இசைத் தாக்கத்தை, அதுவும் இளையராஜா காலத்தில் நிகழ்த்திக் காட்டியது “பருவராகம்”.

தமிழராக இருந்தாலும் கன்னட சினிமா உலகில் கடை விரித்தவர் தயாரிப்பாளர் வீராச்சாமியும் மகனும் நடிகனுமான ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் நடித்த கன்னடத் திரைப்படமான “பிரேம லோகா”  மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவே தமிழில் “பருவ ராகம்” ஆனது.

பருவராகம் படத்தில் பஞ்சு அருணாசலம் பங்களிப்பு உண்டு.

ரஜினிகாந்த் பாரதிராஜாவைப் படம் பண்ண அழைத்த போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு வேண்டியவர் பஞ்சு அருணாசலம். ஆகவே இந்த ஹம்சலேகா பரிந்துரை கூட அவரின் தெரிவாக இருக்கலாம்.

இதை உறுதிப்படுத்த பஞ்சு அருணாசலமும் இல்லை, பாரதிராஜாவும் இல்லை நம்மோடு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசையமைப்பாளர் ஹம்சலேகா!

கானா பிரபா

23.06.2026 

Monday, June 22, 2026

பாடகர் விஜய் உடன் பாடகி ஷோபா சந்திரசேகர்

பாடகர் விஜய் உடன் பாடகி ஷோபா சந்திரசேகர்


பாடகராக விஜய் மூன்றாந் தலைமுறையைச் சேர்ந்தவர். 

விஜயின் தாய் வழிப் பாட்டி லலிதா நீலகண்டன் 25 ஆண்டுகளாகத் திரையிசையில் கூட்டுக் குரல் பாடகியாகத் திகழ்ந்தவர்.

திரையிசையில் பாடகியாக ஷோபா சந்திரசேகர் அறிமுகமானது மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் 1967 இல் வெளியான இருமலர்கள் என்ற திரைப்படத்தில் T.M.செளந்தரராஜன், சதன் ஆகியோருடன் இணைந்து மழலைக் குரலாக "மகராஜா ஒரு மகராணி என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.

அந்த வகையில் ஷோபா சந்திரசேகர் அடுத்த ஆண்டு பாடகியாக 60 ஆண்டுகளைத் தொடுகிறார். ஷோபா சந்திரசேகர் குறித்த விரிவான பகிர்வை முன்பே எழுதி வைத்துள்ளேன், கால நேரத்தில் அதுவும் வரும்.

கடந்த ஆண்டு, விஜயின் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தர் விஜயிற்காகப் பாடிய பாடல் தொகுப்பைக் கொடுத்திருந்தேன்.

விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த “சட்டம் ஒரு விளையாட்டு” படத்தில் தாயார் ஷோபா குரல் கொடுத்துப் பாடிய “ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது” 

https://www.youtube.com/watch?v=ntfwYT4LdZw

பாடலில், ஷோபாவோடு, அவரின் சகோதரி ஷீலாவும் இணைய, மூலப் பாடகர்களாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் அணி செய்திருப்பார்கள். பாடல் காட்சியில் விஜயிற்குக் குரல் கொடுத்தவர் அவரின் சித்தி ஷீலாவின் குரலாகவே படுகிறது. (ஆர்த்தி) கணேஷ் மற்றைய சிறுவன், அவருக்கு ஷோபா குரல்.

இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படம்.

சமீபத்தில் வைரல் ஆகிய “இது எங்கள் நீதி" படத்தில் “சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு" மனோ பாடிய அந்தப் பாடலை விட இன்னொரு கனமான பாடல் உண்டு. பதிவு கானா பிரபா

அதை ஷோபா சந்திரசேகர்தான் பாடியிருக்கிறார் கூடவே மனோ, சித்ரா, பிரபாகர் இணைந்துள்ள அந்தப் பாடல்

“புத்திசாலி ராஜா வெற்றிமாலை சூடு,

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க"

https://www.youtube.com/watch?v=Lo0NsbAA3no

விஜய் தனது அம்மா ஷோபாவுடன் பாடிய பாடல்கள் வரிசையில்,

தேனிசைத் தென்றல் தேவா இசையில் “விஷ்ணு" படத்துக்காக,

“தொட்டப்பெட்டா ரோட்டுல கொத்து பரோட்டா”

“ஒன்ஸ்மோர்" படத்துக்காக 

“ஊர்மிளா....ஊர்மிளா” ஆகிய பாடல்கள் அமைந்திருக்கும்.

“ரசிகன்” படத்தில் விஜயோடு பாடமுடியாவிட்டாலும், எஸ்பிபியுடன், ஷோபா பாடிய 

“L O V E லவ்வு மாமா”

இந்தப் படங்களையும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கியுமிருந்தார்.

“சிவகாசி" படத்தில் “கோடம்பாக்கம் ஏரியா” பாடலில் ஶ்ரீகாந்த் தேவா இசையில் திப்பு, ஶ்ரீலேகாவுடனும், சுறா படத்தில் மணி சர்மா இசையில் “நான் நடந்தால் அதிரடி” பாடலில் நவீன், ஜனனி மதன் உடனும், 

“வேட்டைக்காரன்" படத்தில் விஜய் ஆன்டனி இசையில் “என் உச்சி மண்டைல" பாடலிலும் பாடகர் குழுவில் ஷோபாவும் இருப்பார்.

நடிகராகவும், பாடகராகவும் விளங்கிய விஜயின் பிறந்த நாட்களில் இந்த ஆண்டு கூடுதலாகத் தமிழக முதல்வர் என்ற பதவியோடு கொண்டாடுகிறார்.

கானா பிரபா

22.06.2026

Wednesday, June 17, 2026

பாரதிராஜா பெயரில் உள்ள பாரதிராஜாவின் பெயரில் இல்லாத மருத்துவமனை



பாரதிராஜா பெயரில் உள்ள பாரதிராஜாவின் பெயரில் இல்லாத மருத்துவமனை

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் நீண்டு நிமிர்ந்திருக்கிறது பாரதிராஜா மருத்துவமனை. அதன் முகப்பில் பாரதிராஜாவின் படம் போட்டு “இங்கே Seniors க்கு முதல் மரியாதை” என்று பதாகை கூட இருக்கிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த சமயம், அவருக்கென்ன சொந்தமா பெரிய மருத்துவமனையே இருக்கிறதே என்று கூடப் பேசினார்கள்.

ஆனால் உண்மை என்ன?

டாக்டர் C.நடேசன் பாரதிராஜாவின் குடும்ப மருத்துவர். அவர் குடும்பத்தில் ஏதேனும் என்றால் ஓடோடி வருவாராம்.

அத்தோடு ஏழைகளுக்குக் கருணையோடு மருத்துவ உதவி செய்யும் நற் சிந்தனை கொண்டவராம்.

நிறம் மாறாத பூக்கள் படம்

எடுத்துக் கொண்டிருந்த சமயம், பாரதிராஜாவிடம் ஒரு படம் பண்ண வேண்டி ஒரு லட்சம் ரூபா கொடுத்தாராம். ஆனால் படம் உருவாகவில்லை. பதிவை எழுதியவர் கானா பிரபா

சில காலம் பின் அவரின் தங்கை திருமண ஏற்பாடுகளைச் செய்வதை அறிந்து, முன்பு கொடுத்த ஒரு லட்சத்தோடு மேலதிகமாகப் போட்டு இரண்டு லட்சமாகக் கொடுக்கிறார் பாரதிராஜா.

தன்னுடைய உதவியாளர் வடுகநாதன்,  தயாரிப்பு நிர்வாகி ஜெயக்குமார் ஆகியோருக்கு உதவி செய்வோமே என்று நினைத்து “கடலோரக் கவிதைகள்” படத்தை அவர்களைத் தயாரிப்பாளர்களாக வைத்து எடுக்கிறார். 

படம் முடிந்து, வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகு என்னுடைய கையில் 24 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது. இந்தப் பணத்தைத் தயாரிப்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்க நினைத்தபோதுதான் என் நினைவுக்கு வந்தார் டாக்டர் சி.நடேசன்.

இந்த நேரத்தில்தான் “ஏன் நடேசனையும் இந்தக் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ஒரு பார்ட்னராகச் சேர்க்கக் கூடாது…?” என்ற எண்ணம் எனக்குள் வந்தது. உடனேயே அவரை சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். அவர் முதலில் தயங்கினார். ஆனால் நான் விடாப்பிடியாக “நீங்களும் இந்தப் படத்துல ஒரு பார்ட்னர்தான்…” என்று சொல்லி கையெழுத்து வாங்கினேன்.

அதன் பின்பு வடுகநாதனையும், ஜெயக்குமாரையும் அழைத்து அவர்களிடத்தில் இதைச் சொன்னேன். அவர்களோ “நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கு சரிதான் ஸார்…” என்று சொல்லிவிட்டார்கள். உடனேயே அந்தப் படத்தின் மூலம் லாபமாகக் கிடைத்த 24 லட்சம் ரூபாயை 3 பங்காகப் பிரித்து அந்த மூவருக்கும் பிரித்துக் கொடுத்தேன்.

அந்தப் பணத்தை வைத்து டாக்டர் நடேசன் மேற்கு மாம்பலத்தில் ஒரு சின்ன இடத்தை வாங்கி அதில் மருத்துவமனையைக் கட்டினார். காலப்போக்கில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் என்னுடைய பெயரிலேயே மிகப் பெரிய மருத்துவமனையைக் கட்டிவிட்டார். பதிவை எழுதியவர் கானா பிரபா

இப்போதுவரையிலும் அந்த மருத்துவமனை என்னுடையது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் துளியும் உண்மையில்லை. அந்த மருத்துவமனை முழுக்க, முழுக்க டாக்டர் சி.நடேசனுக்கு மட்டுமே சொந்தமானது..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

இதை அவரது YouTube தளத்திலும் 4 வருடங்களுக்கு முன்னர் காணலாம்.

ஆனால், இந்த வாரம் கடலோரக் கவிதைகள் படத்தைப் பார்க்கும்

போது அந்தப் படத்தில் மருத்துவராக வந்தவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்து படத்தின் LP record ஐப் பார்த்தேன். அதில் தயாரிப்பாளரில் ஒருவராக டாக்டர் C.நடேசனும் இருக்கிறார்.

அப்படியானால் படம் தயாரிக்கப்படும் போதே அவரையும் பாரதிராஜா உள்வாங்கி இருக்க வேண்டும்.

ஒளிப்பதிவாளரும், கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தவருமான இளவரசு அவர்களிடம் மீண்டும் உறுதிப்படுத்த

“அந்த டாக்டர் பாத்திரத்தில் நடித்தவர் டாக்டர் C.நடேசன் தானே?”

என்று கேட்டேன். 

“அவரே தான்” என்றால்

பாரதிராஜாவின் பகிர்வில் நினைவுத் தப்பலால் படம் ஓடிய லாபம் என்று சொல்லி இருக்கலாம்.


உண்மையில் பாரதிராஜாவுக்கு  இப்படியொரு “முதல் மரியாதை” செய்திருக்கிறார் டாக்டர் C.நடேசன்.

இன்று சென்னையில் இருக்கும் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக வானளாவி நிற்கிறது.

அதை மேலிருந்தும் பார்த்து பூரிப்பில் இருப்பார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

அதுதான் “பாரதிராஜா மருத்துவமனை”.

கானா பிரபா

17.06.2026

Tuesday, June 16, 2026

பாரதிராஜாவின் படத்தில் பாடகர் கிருஷ்ணசந்தர்

பாடகர் கிருஷ்ணசந்தர், அருமையான பாடகர் மட்டுமல்ல, கலையுலகில் எளிமையாகப் பழகும் மிகச்சிறந்த மனிதர் இவர்.

தாமரப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னிக்கும்

சண்டையே வந்ததில்ல…

இந்த ஜென் ஸீ யுகத்திலும் அடிப்பொளியாகக் கொண்டாடப்படும் பாட்டு.

பாடலைப் பாடிய கிருஷ்ணசந்தரும், ஜென்ஸியும் கூட ஒரு பாடலில் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதுவும் பாரதிராஜா படத்துக்காக.

இசைஞானி இளையராஜா இசையில் பாரதிராஜா இயக்கத்தில் “டாப் டாக்கர்” என்ற படத்தை, கமல்ஹாசனை நாயகனாக வைத்து எடுக்கத் திட்டமிடுக்கிறார்கள்.

அந்தப் படத்துக்காக ஒரு பாடலும் பதிவாகியது, பாடலைப் பாடியவர்கள் கிருஷ்ணசந்தர் மற்றும் ஜென்ஸி. ஆனால் அந்தப் படம் கிடப்பில் போடப்படுகிறது.

குறித்த பாடலை மீளவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா வை வைத்துப் பாட வைத்து, அதே கமல்ஹாசன். ராதா நடிப்பில் “காதல் பரிசு” படத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

அந்தப் பாடல் தான் “புறாக்களே…புறாக்களே” என்ற பாடல்.

கமல்ஹாசனுக்கு மென்மையான குரல்கள் என்ற வரிசையில், ஜேசுதாஸ், ஜெயசந்திரன், உன்னிமேனன், அருண்மொழி வரிசையில் கிருஷ்ணசந்தரும் இடம்பிடிக்க வேண்டிய பாட்டு அது.

அதே போல், பாரதிராஜாவின் படத்திலும் இந்த வாய்ப்பு தவற விடப்படுகிறது.

கிருஷ்ணசந்தர் பாடகராக இருந்த காலத்தில் சந்தூர் போன்ற வாத்தியக் கலைஞராக விளங்கியவர் வித்யாசாகர், ஆரம்ப காலத்தில் ஒரு தொலைக்காட்சி நாடகத்துக்கு வித்யாசாகர் இசையமைத்த போது கிருஷ்ணசந்தர் பாடல் பாடியுமுள்ளார்.

ஆனால் காலம் போட்ட கணக்கைப் பாருங்கள். அதே இயக்குநர் இமயம் பாரதிராஜா 1995 இல் “பசும்பொன்” படத்தை எடுக்கிறார். அதில் வித்யாசாகர் கிருஷ்ணசந்தரைப் பாட அழைக்கிறார். இதில் முன்னேற்பாடு எதுவுமே இல்லை. எல்லாமே தானாக அமைந்தது என்று கிருஷ்ணசந்தர் சாரிடம் பேசும் போது சொன்னார்.

பாரதிராஜாவின் திரைச்சரித்திரத்தில் இந்தப் பாடலும் ஒரு மைல் கல் தானே?

“அந்த நெலாவைத் தான் கையில புடிச்சேன்” போல இரண்டாவது நாயகன், நாயகிக்கான பாட்டு என்பது பாரதிராஜாவின்  இன்னொரு முத்திரைப் பாணி.

இந்த “தாமரைப் பூவுக்கும்” பாடல் சற்று முன்னே வந்த “ஆத்தங்கரை மரமே” பாடலுக்கும் மிக நெருங்கிய சூழல் பாட்டு.

இரண்டிலும் பொதுப் பாடகி சுஜாதா. பின்னாளில் மலையாளத்தில் “தெய்வத்திண்டே மகன்” படத்திலும் வித்யாசாகர் இசையில் சுஜாதா & கிருஷ்ணசந்தர் ஜோடி போட்டுக் கலக்கி இருப்பார்கள்.

ஐயாறெட்டு

நெல்லைப் போல

அவசரமா..சமஞ்ச

ஐத்தமக

மஞ்சதுக்கு

ஆதரமா..அமஞ்ச

“தாமரைப் பூவுக்கும்” பாடலில் கிருஷ்ணசந்தர் & சுஜாதா கூட்டணி மிகக் கச்சிதமாக இருக்கும் போட்டி போட்டு அதகளம் பண்ணியிருப்பார்கள். கூடவே வித்யாசாகர் உய்ய்ங் உய்ங்ங் இசையில் மகுடி தான் போங்கள் 🙂

நாக்குல மூக்கையே..ஹே..ஹே

தொட்டவன் நானடி

பார்வையால் உசுரையே..ஓ..ஹோ

தொட்டவ நீயடி

இங்கே கிருஷ்ணசந்தர் அவர்களது மென் குரல் வார்த்தைகளில் துள்ளிக் குதிக்கும் மீனாட்டம் இருக்கும்.

கானா பிரபா

16.06.2026

Monday, June 15, 2026

பாசத்துக்குரிய பாரதிராஜாவின் பாட்டுக்கார மலேசியா வாசுதேவன் ❤️

பாசத்துக்குரிய பாரதிராஜாவின் 

பாட்டுக்கார மலேசியா வாசுதேவன் ❤️


ஜூன் மாதம் 15 ஆம் திகதி பின்னணிப் பாடகர்  மலேசியா வாசுதேவன் அவர்களின் பிறந்த தினம். 


இம்முறை பல வருஷங்களுக்குப் பிறகு பாரதிராஜாவும், மலேசியா வாசுதேவனும் விண்ணில் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லையா?


“16 வயதினிலே” எத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்தது பாருங்கள்.

இயக்குநராக பாரதிராஜாவுக்கும், உதவி இயக்குநராக கே.பாக்யராஜுக்கும்,

அறிமுகப் பாடலாசிரியராக கங்கை அமரனுக்கும், இன்னும் 

“இந்தப் படத்தில் தான் எனக்குப் பின்னணி இசையமைக்கக் களம் (space) கொடுத்திருக்கிறாய்” என்று இளையராஜா மனம் விட்டுச் சொல்லவும்,

இவர்களை எல்லாம் தாண்டி மலேசியா வாசுதேவன் என்ற அற்புதமான மண்ணின் குரலுக்கு வாழ்வு கொடுத்ததுமாக அமைந்து விட்டது.


மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972) , அதைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும் பாடியவர், ஏன் இளையராஜா இசையிலேயே “உறவாடும் நெஞ்சம்” படத்தில் “Dear Uncle” பாடலைப் பாடுவதற்காக இளையராஜாவே தன் காரில் அழைத்துக் கொண்டு தன் குருநாதரின் ஆசியைப் பெற வைத்து, பாட வைத்ததாக மலேசியா வாசுதேவன் குறிப்பிட்டிருப்பார்.

உறவாடும் நெஞ்சம் பாடும் போது என் மகன்  தாய் வயிற்றில் ஆறு மாசம், யுகேந்திரன் பிறந்ததும்16 வயதினிலே பாட்டு என்பார்.

மலேசியா வாசுதேவன் என்ற முழுமையான பாடகனைப் பிறக்க வைத்ததும் இந்தப் படமானது.


16 வயதினிலே படப் பூஜைப் பாடல் 

பெரும் திருப்புமுனையாக “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்காவாய்ப்பு இசைஞானி இளையராஜா இசையில் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கெட்டுப் போனதால் பூஜைக்குப் பாடிய பாடலே இவரின் தலையெழுத்தை மாற்றியது. 

இதில் ஒரு புதுமை என்னவென்றால் SPB தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று அறிமுகமான போது அவரோடு முதன் முதலில் ஜோடி கட்டிய குரல் P.சுசீலா.

எனக்கு ராசியான குரல் சுசீலாம்மா என்பார் SPB.

இங்கே மலேசியா வாசுதேவனின் தலையெழுத்தை மாற்றிய பாடலிலும் ஜோடி அவரே.

உண்மையில் 16 வயதினிலே படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு முழுப் பரிமாணத்தை அளித்தது “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடல்.

அதுவே பின்னாளில் அவருக்கான முப்பரிமாணப் பாடல்களுக்கும் வித்திட்டது.

சப்பாணிக்கு ஒரு பாட்டு என்று கங்கை அமரன் சொன்ன ஆட்டுக்குட்டி முட்டை என்ற எடுத்தாளலை உள்வாங்கி கண்ணதாசன் கடகடவென்று எழுதித் தள்ளியதாக ஆச்சரியப்பட்டிருப்பார் கங்கை அமரன்.

இந்தப் பாடலில் இவ்விதம் இரண்டு ஆச்சரியங்கள்.


“தென்றலே ஆசை கொண்டு 

 தோகையைக் கலைந்ததம்மா”

அவர் இந்த இடத்தில் வரும் போது எழும் உணர்வூட்டத்தைப் பாருங்கள்.

அதுதான் மலேசியா வாசுதேவன் எனும் மந்திரக் குரலின் ஜாலம்.

“புதிய வார்ப்புகள்” அறிமுக நாயகன் பாக்யராஜின் குரலாக வந்தவர் பின்னாளில் பாக்யராஜின் குரலாளனாக எத்தனை எத்தனை முத்துகளைக் கொடுத்தார்.

“என் மனது தாமரைப்பூ

உன் மனது முல்லை மொட்டு

காலம் வருமே நீ கூட பெண்ணாக, 

கோவில் மணி ஓசை கேட்டதாரோ…”

இங்கே அறிமுக நாயகன் சுதாகருக்கு மலேசியா வாசுதேவன் குரலைப் பொருத்துகிறார் பாரதிராஜா.

அதே படத்தில் வராத மாமணிப் பாட்டு “மலர்களே நாதஸ்வரங்கள்” எப்படித்தான் மறப்போமோ?

பூமியில் மேகங்கள்..

ஓடியாடும் யோகமே…

மலையின் மீது

ரதி உலாவும் நேரமே…

சாயாத குன்றும்

தாளாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் 

தாயாகுமோ…

ஆயிரம் மலர்களே

மலருங்கள்..

உதவி இயக்குநராக இருந்த விஜயனை அரிதாரம் பூச வைத்து நாயகனாக்கிய நிறம் மாறாத பூக்களில் கூட மலேசியா வாசுதேவனே கதாநாயகன்.

“தோப்பிலொரு நாடகம் நடக்குது” கல்லுக்குள் ஈரம் பாடலின் தொடக்கத்தில் இளையராஜாவின் குரல் அறிமுக நாயகன் பாரதிராஜாவுக்கும், மலேசியா வாசுதேவன் குரல் சுதாகருக்குமாக அமைந்து விடுகிறது.

மலேசியா வாசுதேவனை “கொலுசு” திரைப்படம் வழியாக கே.எஸ்.மாதங்கன் நடிகராக அறிமுகப்படுத்தினார். 


“நடிக்க ஆரம்பிச்சாச்சா?” என்று 

பாடகராக ஒரு திருப்பு முனை கொடுத்த அதே பாரதிராஜாவே ஒரு கைதியின் டைரி வழியாக மலேசியா வாசுதேவன் என்ற நடிகர் தொடர்ந்து புகழ்பூத்த நடிகராக விளங்கத் திருப்புமுனை கொடுத்தார்.

“தோட்டத்திலே பல பூக்கள் உண்டு

நீதானே என் சிகப்பு ரோஜா,

இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது”

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு என்று விளங்கிய பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் பாட்டுகள் இரண்டில் ஒன்று மலேசியாவுக்கே.

“ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்”,

“அரிசி குத்தும் அக்கா மகளே” “அட மூக்கியரெ மூக்கம்மா” என்று முத்தான மூன்றை “மண்வாசனை” பாண்டியனுக்கு மலேசியா வாசுதேவனைப் பாட வைத்து அழகு பார்த்தார்கள்.

“அழகே உன்னை”, “டக்கர் டக்கர் பேபி” என்று இன்னும் இரண்டு, பாரதிராஜாவின் திரையோட்டத்தின் கரும்புள்ளி “வாலிபமே வா வா” விலும் கூட மலேசியா வந்தார்.


“ஓ…. ஒரு தென்றல் புயலாகி வருமே” வேட்கையோடு எழும் “புதுமைப் பெண்” ணுக்காக ஆதரவுக் குரலாக அங்கும்.

கடலோரக் கவிதைகளில் எல்லோரும் பாடினாலும் என்ன

“அடி ஆத்தாடி” என்று சோக ராகத்துக்கு மலேசியாவை அழைத்து வந்து விடுவார்கள்.

அது போலவே தேவேந்திரனோடு சேர்ந்த போதும் பாரதிராஜாவின் ஜோடிக் குரல் 

“மாட்டு வண்டிச் சாலையிலே” வேதம் புதிதில்

பாடியது. 


ஹம்சலேகாவுடன்” கொடி பறக்குது” இசையிலும் “தொண்டைக்குள்ளே” பாட்டுக் கொடுத்தார் பாரதிராஜா.

அந்த வரிசையில் “பசும்பொன்” வித்யாசாகர் இசைக் கூட்டணியிலும் “ஏலே ஏலே” பாட்டுக் கிட்டியது இவருக்கு.தேவாவும் தன் பங்குக்கு கடல் பூக்களில் ஒரு பாட்டளித்தார்.

“ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா” பாடல் பதிவாகி விட்டது. அப்போதுதான் மலேசியா வாசுதேவனை அழைத்துக் கொண்டு வருகிறார் பாரதிராஜா. இவரின் குரலையும் சேர்த்து ஒலிப்பதிவு செய்யுங்கள் என்ற வேண்டுகோளில் அது பரிபூரணம் ஆனது.

அந்த என்னுயிர்த் தோழனில்

“குயிலுக் குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன…”

மலேசியாவைத் தாண்டி யாரை நினைக்க முடியும்?

“ஏலமலைக் காட்டுக்குள்ளே”

அந்த நாடோடிப் பாட்டுக்காரன் குரல் கேட்கவில்லையோ நாடோடித் தென்றல் வழியே…


“தென்கிழக்கு சீமையில

செங்காத்து பூமியில

ஏழைப்பட்ட சாதிக்கொரு 

ஈரமிருக்கு…”

“கிழக்கு சீமையிலே” இன் அடிநாதம் இவர் தானே?

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக

“காடு பொட்டல் காடு”

பாரதிராஜா & மலேசியா வாசுதேவன் கூட்டணியை முதன் முதலில் ஜோடி போட வைத்து அழகு பார்த்தார் “கருத்தம்மா”வில் ரஹ்மான்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இன்மையில் “முதல் மரியாதை” ஐ நினைக்காத உள்ளங்கள் ஏது?

அங்கே சிவாஜி கணேசன் என்ற நடிப்பரசனின் பாட்டு அரசனாகி நிற்கிறார் மலேசியா வாசுதேவன்.

“ஏ குருவி”, “ஏறாத மலை மேலே” வகையறாக்களோடு நெஞ்சை அள்ளும் இரண்டு பாட்டுகள்.

“வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்”

“பூங்காற்று திரும்புமா?”

பாரதிராஜாவின் பொற்காலத்தைப் பேசும் போது இளையராஜாவோடு மலேசியா வாசுதேவனும் கூட வருவார்.

இனி “பூங்காற்று திரும்புமா” பாடலை ஏக்கத் தொனியோடு கேட்கும் போது மலேசியா வாசுதேவனுடன் பாரதிராஜாவும் கூட வருவார்.

கானா பிரபா


Saturday, June 13, 2026

பாரதிராஜாவும் பாவலர் சகோதரர்களும்


“நான் பண்ணைப்புரத்துக்கு சுகாதாரப் பரிசோதகரா வந்தப்ப பாஸ்கர் தான் முதலில் ஒட்டிக்கிட்டான்,

அப்புறமா கங்கை அமரன் சர்ச் இல் நடக்கும் பிரசங்கத்துக்குக் கூட்டிட்டுப் போவான்

ராஜா தன்னோட வீட்டுக் கதவில் கம்பி கட்டி வாசிப்பான், மூங்கிலைச் சுட்டுப் புல்லாங்குழல் ஆக்குவான்,

அப்புறம் ஒன்றாக நாடகம் போட்டோம்”

இப்படி பாரதிராஜா பண்ணைப்புரம் சகோதரர்களைச் சந்தித்த கதையைச் சொல்லி இருப்பார்.

“நமக்கு வாய்ப்புத் தேடி ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குவார் அண்ணன் பாஸ்கர்” 

என்று இளையராஜா தன் சகோதரர்களைப் பற்றிச் சொல்லி இருப்பார்.

பாஸ்கர் எண்பதுகளின் இறுதிவரை இளையராஜாவுக்காக இயங்கிய ஒரு நிழல் பொதுசனத் தொடர்பாளர். 

அவரைப் போல போல ஒரு இயல்பான, நட்பான மனிதரைப் பார்க்கவே முடியாது என்பார் சித்ரா லட்சுமணன். 

“என்னோட மருத்துவச்சி (அன்னக்கிளி) கதை இளையராஜா இசையில் தான் வரணும்னு இருந்தேன்”

என்பார் கதாசிரியர் செல்வராஜ்.

அவரே பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி அன்னக்கிளி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கிறார்.

“இவங்க பாவலர் சகோதரர்கள் என்னோட சகோதரர்கள் மாதிரி” என்று எஸ்பிபிக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. எஸ்பிபியோடு கூட்டணி போட்டுப் பாட்டுக் கச்சேரிகள் நடத்தினார்கள்.

இளையராஜா இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இடம் உதவியாளராகச் சேர்ந்த பின்னர், புட்டண்ண கனகல் இன் பெல்லி மோடா கன்னடப் படத்தைப் பார்த்த பாரதிராஜா அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்த, ஜி.கே.வெங்கடேஷ் உதவுகிறார். அது குறித்து இன்னொரு விரிவான பகிர்வைப் பகிர்கிறேன்.

மேற்கண்ட வரலாறு எல்லாமே தானாக வந்தது. காலம் அவர்களை ஒன்று சேர்த்தது.

சாதனையாளர் ஆனார்கள்.

இதை வைத்தே அற்புதமானதொரு திரைக்கதை அமைக்கலாம்.

வெற்றியை காலமும், சந்தர்ப்பமும் தீர்மானிக்கும். அது எல்லாமே முற்கூட்டியே நம்மை அறியாமல் தீர்மானிக்கப்பட்ட கணக்கு.

கானா பிரபா

Friday, June 12, 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா & பாடும் நிலா SPB நட்பு

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவின் போது எனக்கு முதலில் நினைவுக்கு வந்த இன்னொருத்தர் SPB.

காரணம், 2014 ஆம் ஆண்டு தெலுங்கு ETV  'ஸ்வராபிஷேகம்' என்ற நிகழ்ச்சியில் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB), இயக்குநர் பாரதிராஜா உடனான தனது அரிய நட்பு மற்றும் நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை இன்னொரு பகிர்வு கொடுக்க அப்போது தேடினேன் கிட்டவில்லை.

இப்போது அந்தத் தொலைக்காட்சியே பகிர்ந்திருக்கிறது பாருங்கள்

https://www.youtube.com/watch?v=9bhAZY92mkU&t=132s

SPB சொன்ன கருத்துகளைத் தமிழாக்கித் தருகின்றேன்

பாரதிராஜா ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துகொண்டிருந்த காலத்திலிருந்தே எஸ்பிபியின் நட்புத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் பாரதிராஜா தமிழில் நாடகங்களை எழுதி, அவரே அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அப்போது வளர்ந்து வரும் பாடகராக இருந்த எஸ்பிபி, அந்த நாடகங்களுக்குப் பின்னணி பாடியதோடு புல்லாங்குழலும் வாசித்துள்ளார். ஒரு நாடகக் காட்சியின் போது பாரதிராஜாவுக்கு ஒரு நல்ல சட்டை தேவைப்பட்டது. அப்போது 'ஆராதனா' படத்தில் ராஜேஷ் கன்னா அணிந்தது போன்ற ஒரு புதிய கிரீம் நிற சட்டையை எஸ்பிபி வைத்திருந்தார். நாடகத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் தருமாறு பாரதிராஜா கேட்க, எஸ்பிபியும் தனது சட்டையைக் கொடுத்துவிட்டு பாரதிராஜாவின் சட்டையை அணிந்துகொண்டார். ஆனால், மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்த பாரதிராஜா, அந்த அவசரத்திலும் ஆவேசத்திலும் எஸ்பிபியின் சட்டையைக் கிழித்துவிட்டார்! அதன் பிறகு அந்தச் சட்டை எஸ்பிபிக்குத் திரும்பக் கிடைக்கவே இல்லை.


எஸ்பிபி சொந்தமாகக் கார் வாங்கி, டிரைவர் இல்லாமல் அவரே ஓட்டிச் சென்ற காலங்களில், அவர் தூங்கிவிடக் கூடாது என்பதற்காகப் பாரதிராஜா முன் இருக்கையில் அமர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவார். '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களின் கதைகளை 45 வருடங்களுக்கு முன்பே பாரதிராஜா தன்னிடம் கூறியதாக எஸ்பிபி குறிப்பிடுகிறார். "யார் இதையெல்லாம் பார்ப்பார்கள், மிகவும் அட்வான்ஸாக இருக்கிறதே" என்று எஸ்பிபி கேட்டதற்கு, "ஒரு நாள் நான் இதை படமாக எடுத்து மக்களைப் பார்க்க வைப்பேன்" என்று பாரதிராஜா சவால் விட்டார். அவர்கள் இருவரும் இணைந்து முதலில் '16 வயதினிலே' படத்தின் தமிழ் பதிப்பைத் தயாரிக்கத் திட்டமிட்டனர். எழுத்துப் பதிவு கானா பிரபா.

ஆனால், இருவரிடமும் போதிய பணம் இல்லாததால் அந்தத் திட்டம் தள்ளிப்போனது.

இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களை எஸ்பிபியிடம் முதலில் அனுப்பி வைத்தவர் பாரதிராஜா தான். மெட்ராஸில் தனது வீட்டில் எஸ்பிபி ஒரு சிறிய இசைக்குழுவுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது, பாரதிராஜா இவர்களை அனுப்பி எஸ்பிபியின் இசைக்குழுவில் வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். பாரதிராஜாவின் படங்களில் வரும் பின்னணி இசையின் சிறு துண்டுகள் கூட அவருடைய சொந்த கற்பனையில் உதித்தவை. எஸ்பிபி தான் 'படமதி சந்தியாராகம்' (Padamati Sandhya Ragam)  என்ற படத்திற்கு இசையமைக்கும் போது, பாரதிராஜாவின் இந்த இசை உத்தியை உத்வேகமாகப் பெற்றுப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த 'முதல் மரியாதை' படத்தின் கதையை முதலில் எஸ்பிபியிடம் கூறி, அவர்தான் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுள்ளார். படப்பிடிப்பிற்குத் தொடர்ந்து 40 நாட்கள் தேவைப்பட்டதால், தினமும் 6 பாடல்கள் வரை பாடிக்கொண்டிருந்த எஸ்பிபியால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது தனக்கு இழப்பு என்றாலும், ஒரு சிறந்த காவியமாக அந்தப் படம் உருவாகி தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றது குறித்து பெருமைப்படுவதாக எஸ்பிபி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பகிர்வு : கானா பிரபா

இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள், தெலுங்கின் ஜாம்பவான்களோடு, இயக்குநர் இமயம் பாரதிராஜா மெய் சிலிர்த்துக் கண்ணீருடன் எஸ்பிபி பேச்சை ரசிக்கிறார். கூடவே இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் இருக்கிறார்.

Tuesday, June 2, 2026

இசைஞானி இளையராஜா எனும் இயக்கம் ❤️


இசைஞானி இளையராஜா ❤️

அவர் ஒரு இயக்கம்.

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து இன்னும் உழைக்கும் இசைத் தொழிற்சாலை.

இந்த இசைக்குப் பெரியது, சின்னது என்று எதுவுமே தெரியாது

பிரமாண்டங்களிலும் உழைப்பார், கலைப்படங்களிலும் தன் இசையால் இழைப்பார்.

தென்னகத்தின் தமிழ் - தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் சூப்பர் இசையமைப்பாளராகச் சம காலத்தில் இயங்கிய அந்தச் சாதனை இனி எப்போதும் நிகழ்த்திக் காட்ட முடியாத அற்புதம்.

அன்று தேவராஜ் – மோகன் தொடங்கி இன்று தியாகராஜன் குமாரராஜா, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் என்று அந்த வளையம் பெருக்கிறது. 

இப்போது பயணிப்பவர்களின் வயதுகளோடு ஒப்பிட்டால் இவரின் இசைப் பயணத்தின் இரண்டு மடங்கு கொள்ளும்.

தன் இசை மேடைகளில்  வயலின் தொடங்கி ஒவ்வொரு வாத்தியத்துக்குமாக சாரி சாரியாகக் கலைஞர்களை மேடையில் நிரப்பி, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தன் பாடல்களை மீண்டும் இசைக்கும் போது, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்ற சொலவாடையையும் தாண்டி, ஒத்திசைவாக எல்லாக் கலைஞர்களும் பிசிறின்றி இசைக்கும் போது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.

அன்னக்கிளியில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம், தமிழ் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஒரே சமயத்தில் இருந்தது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. இதைத்தவிர ஹிந்தி, மராட்டி மொழி சார்ந்த படைப்பாளிகள் இவரைத் தேடி வந்து தம் படைப்புக்கு இசையால் சிறப்பும், பெருமையும் சேர்க்கவேண்டும் என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. ஒருமுறை ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் "இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது" என்று சொல்லியிருந்தார். மேம்போக்காக ஒரு படத்தில் வரும் நான்கோ ஐந்தோ பாடல்களின் ஹிட்டை வைத்துப் பார்க்கும் சராசரி ரசிகனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஆயிரமாயிரம் பாடல்களைக் கடந்து அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குநராக நின்று செயற்பட்டிருக்கிறார்.  

இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குநருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். 

எத்தனையோ இயக்குநர்களை நான் வானொலிப் பேட்டி கண்ட போது அவர்கள் பிரமித்துச் சொன்ன விஷயம் இது. நாட்கணக்காக ஸ்கிரிப்ட் எழுதி எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குநர் பால்கி தன்னுடையை "பா" படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, "இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்" என்று சிலாகித்திருந்தார். 

ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான தீம் ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். 

இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான்.

கைரளி மலையாளத் தொலைக்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. பாருங்கள், எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குநருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது.

இதன்பிறகு கற்பூர முல்லை" திரைப்படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது.  இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன.கானா பிரபா

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. எண்பதுகளிலே இந்த இரண்டு எல்லைகளையும் கவனித்துக் கொண்டது ராஜாவின் இசை.

நாயகன், ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப்புழகாங்கிதத்திலேயே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.

இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் "மெளன ராகம்" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது. இசைஞானி இளையராஜாவோடு மணிரத்னம் இணைந்து கொண்ட அஞ்சலி, தளபதி போன்ற படங்களின் பின்னணி இசை பற்றிப் பேசப்போனால் ஒரு சில கட்டுரைகளில் முடக்கிப்போட முடியாத அளவுக்குச் சாகித்யம் நிரம்பியிருக்கும்.

"சிந்து பைரவி" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே "சிந்து பைரவி" உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது

கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்களிலே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த "ஆண்பாவம்" முக்கியமானது. வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.

ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.

இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.

கேரளத்தின் பெரும் எழுத்தாளர் M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குநர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.

இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசிராஜா பின்னணி இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணரமுடிந்தது. காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.

ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் "உதயம்" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.

ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான்.

பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது கீதாஞ்சலி என்ற தெலுங்குப்படம் இது இதயத்தைத் திருடாதே என்று தமிழில் மொழிமாற்றம் கண்டது. மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராமும் , இசைஞானி இளையராஜாவும் படம் முழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".

இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று இந்தப்பாடலைப்பாடிய பாடகி சித்ரா சிட்னி சொல்லியிருந்தார்.

ஆவாரம் பூ, படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது "ஆவாரம்பூ" பாடல்களின் அணி.

"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 

பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார்.

இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.

கடலோரக்கவிதை படத்தை ஓடவிட்டு இறுதிக்காட்சியை ஒரு முறை கவனித்துப் பாருங்கள், கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.

பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது குணா படத்தின் உட்பொருள், இப்படியான படங்களில் ராஜாவின் தேவை எவ்வளவு தூரம் பொருந்தியிருக்கிறது என்பதை "பார்த்தவிழி பார்த்தபடி பார்த்து இருக்க" பாடலில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியில் குணா, அபிராமி மலையுச்சியிலிருந்து பாய்ந்து தம்மை மாய்த்து கூடு விலகல் வரை உணர்த்தப்படும். இதே மாதிரியான கமல் - ராஜா அலைவரிசையின் ஒத்திசைவு ராஜபார்வை, விருமாண்டி, ஹேராம் என்று பட்டியல் நீளும்.

"ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்" இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குநர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.

கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque கை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.

தன் காலத்தைத் தாண்டிச் சிந்தித்துப் படைப்பாற்றல் பண்ணியவர்கள் காலம் கடந்துதான் இன்னும் அதிகம் பேசப்படுவார்கள். அதை இளையராஜாவின் இசையாற்றலுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். அவர் சினிமா உலகுக்கு வந்த காலம் தொட்டு இன்று வரை கொடுத்த இசை நுணுக்கங்களை உள்வாங்கும் பக்குவம் எவ்வளவு தூரம் அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களுக்கு இருந்திருக்கின்றது என்பது கேள்விக்குரியதொன்று. ஆயிரமாயிரம் பாடல்களால் வசீகரித்த இந்த இசையமைப்பாளனின் முழுமையான பக்கம், பல நூறு படங்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையை விலாவாரியாக எடுத்து ஆராயும் போதுதான் புலனாகும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன? அவரோடு பணியாற்றிய இயக்குநர்களுக்கே இளையராஜா தம் படைப்புக்களுக்குக் கொடுத்த சங்கதிகளைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி இசை ஆவணங்களாகக் கொடுக்கும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் அடிமனதில் தானாக வரும். இசைஞானி இளையராஜா காலத்தில் நாம் வாழ்வது என்பது பெருமை அல்ல, தவப்பேறு.

வயது மட்டுமல்ல, தன் சாதனைகளும் வெறும் இலக்கமே என்ற ஓய்வறியாச் சாதனையாளர்

இளையராஜா என்ற இசைப் பேராளுமை நமக்கு ஒரு வாழ்வியல் பாடம்.

ஜூன் மூன்றில் அகவை எண்பத்து மூன்றாய்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசைப்பேரலையே !


கானா பிரபா

02.06.2026

Monday, May 25, 2026

ஒரு முல்லைப்பூவிடம் ❤️



 TMS & சுசீலா ஜோடி இணைந்தது ஒரு யுகக் கணக்கு. அது நிகழ்த்திய அற்புத விளைச்சல் என்பது காலம் தாண்டியது.

இந்த இருவரையும் இணைத்து விட்டு ஒரு பாட்டு கொடுத்தாலே அது அந்தக் காலம் ஆகி விடும்.

ஆனால் இந்தப் பாடலின் அங்க இலட்சணங்கள் எல்லாவற்றிலும் அந்தக் காலம் தான் பேசும்.

லல்லா லாலலா தொடங்கும் போதே, அந்த மிடுக்கனோடு கூட சாரட் வண்டியில் ஏறி உட்கார்ந்து உற்சாகத் தாளம் போடும் வாத்தியக் குழாம்.

ஒரு முல்லை பூவிடம் கொஞ்சும்

பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா

ஒர்ர்ரு என்ற நறுக்கு உச்சரிப்போடு இசையரசியின் வெட்கக் குரல் தொடரும்.

இந்த மாதிரித் தாள லயம் எல்லாம் இளையராஜாவின் கோட்டையில் ஒலித்தால் வியப்பில்லை.

ஆனால் இளையராஜா காலத்தில் மனோஜ் - கியான் இரட்டையை இசைக் கோவைக்கு வைத்துக் கொண்டு தன் எண்ணங்களைச் செயல்வடிவமாக்கிய புதுமைப் பித்தர் ஆபாவாணன்.

பாடல்கள், இணை இசை என்று அவர் ஊமை விழிகளில் தொடர்ந்த பாரம்பரியத்தின் விழுதுகளில் ஒன்று இந்த “தாய் நாடு”.

இது பனித்திரை மூடிய பார்வை

அந்த பார்வையில் மாறுதல் தேவை

அந்த மாறுதல் நான் தரும் போது

அந்த திரையும் விலகலாம்

அன்று பயணம் தொடரலாம்

அந்த “மாறுதலில்” அறுபதுகளின் கட்டிளங் காளைத்தனத்துக்குப் போய் விட்டு வருவார் TMS.

“கொஞ்சம் வாடினால்” என்பதில் கூட எத்தனை நுணுக்கம் காட்டி வாடிப் போன தொனியைக் காட்டுவார் சுசீலாம்மா.

நளினம் காட்டும் அக்கார்டியன் இசைக்கருவியை வாங்கி ஆயிரம் முத்தங்கள் இட்டால் என்னவாம்.

ஒவ்வொரு வரிகளும் முடியும் போது அணி அணியாய், அந்தக் காற்று வாத்தியத்தின் அலை பாய்தல் எல்லாம் மெல்லிசை மன்னர் காலத்தை நினைப்பூட்டிப் பரவசத்தில் ஆழ்த்தும்.

பாட்டு முடியும் போது அந்த மழலைக் குரலை இணைத்தது ஒரு முத்தாய்ப்பு.

விஜயகாந்த் நடித்த “செந்தூரப் பூவே” சத்யராஜுக்குத் தான் முதலில் தேடி வந்தது. ஆனால் அதன் அருமை தெரியாமல் இருந்து விட்டேனே என்ற சத்யராஜுக்கு ஆபாவாணன் கூட்டணியில் அமைந்த படமாக தாய் நாடு அமைந்து விட்டது.

தோல்விப் படமானால் என்ன இதோ முப்பது ஆண்டுகளைக் கடந்து “ஒரு முல்லைப்பூவிடம்” நினைப்பூட்டிக் கொண்டே இருக்குமே?

ஒரு முல்லைப்பூவிடம் பாடலோடு, 

தாளம் தட்டிப் பட வந்தேன், தாய்மாமன் கைகள் பட்டு, ஓ கண்களே, நான் முதன்முதல் பாடிய பாட்டு என்று மொத்தமாக ஐந்து பாடல்களை TMS க்கு அள்ளி வழங்கி அவர் வாழும் காலத்தில் பாட்டு விழா எடுத்தது இந்தப் படம். அதில் புதுமை என்னவென்றால், தந்தை, மகன் என்று இரு சத்யராஜுக்கும் இவர் ஒருவரே குரல்.

T.M.செளந்தரராஜன் எனும் தென் இசைத் தென்றலை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாட்டும் கூட வரும்.

நல்ல ஆறுதல் நீ தரும் போது

எந்த திரையும் விலகலாம்

அன்பு பயணம் தொடரலாம் ❤️

https://youtu.be/1ACHJiUphgw?si=F49urv_qoV0gxh3u



Saturday, May 23, 2026

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் மகன் கலைவாணன் மறைவில்


 தொன்று தொட்டு இன்று வரை 

ஏழை என்னும் ஜென்மத்துக்குத் துன்பம் ஐயா

இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் 

வன்மம் கொண்டே துன்பம் தந்தால் 

தொல்லை ஐயா….

ஏழை படும் பாடு அது சொல்லி முடியாது

பொழுதே இருளானால் இனி இங்கே விடிவேது?

https://www.youtube.com/watch?v=XoszYudZyko

பாடலாசிரியர் முத்துக்கூத்தன் எழுதி “அவதாரம்” திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.

ஒரு சோகப் பரப்பில் எழும் விரக்தியை வரிகளிலும், ஆக்ரோஷத்தை இசையிலுமாகக் கொடுத்த வகையில்

இந்தப் படத்தின் மிக முக்கியமானதொன்று.

இப்படியானதொரு சூழலுக்கு ஒரு நாட்டுப் பண் கலைஞரைப் பாடல் எழுத வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நாசரின் தெரிவாக இருக்கக் கூடும்.

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்  என்ற வரிசையில் தான் முத்துக்கூத்தன் என்ற பாடலாசிரியர் குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

இருப்பினும் அவர் பெரும் பெரும் ஆளுமை என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

முத்துக்கூத்தன் பழம் பெரும் கவிஞர், பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர் என்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முன்னிலையிலேயே கலைவாணரின் வாழ்கையை வில்லிசைத்தவர் என்றும், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடிகராகவும், எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, நாடோடி மன்னன், அரசகட்டளை, திருடாதே ஆகிய படங்களிலும் பாடல்களை எழுதியவர் என்று விக்கிப்பீடியா குறிப்பு அவரி வாழ்க்கைச் சுருக்கத்தைப் பகிர்கிறது.

கலைவாணர் என்.எஸ்.எஸ்.கிருஷ்ணனின் மேல் நேசம் கொண்டு தன் மகனுக்குக் கலைவாணன் என்றே பெயர் சூட்டினாராம்.

“கலைமாமணி” கலைவாணன், பொம்மலாட்டக் கலை மூலம் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை, சமூக முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்.

இன்று நேற்று 68 ஆவது அகவையில் விடைபெற்று விட்டார்.

தன் தந்தையின் நீட்சியாகக் கலைப்பணியாற்றிவரின் களப்பணி ஓய்ந்து விட்டது.

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! 

Sunday, April 26, 2026

Michael திரைப் பார்வை


 ஒவ்வொரு மனிதனும் வாழும் உலகம் வேறு, தான் வாழும் உலகம் வேறு. மைக்கேல் ஜாக்சனின் வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது அவரது சுயவரலாறு தாங்கிய Michael வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் ஒரு இசைக் கலைஞன் தன் முன் எதிர்ப்படும் சவால்களை எல்லாம் முட்டி மோதிக் கடந்து சாதிப்பது போல ஏராளம் படங்களைக் கண்டிருப்போம்.

இங்கே நம் முன்னே வாழ்ந்து மடிந்த, இசையுலக சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய நாயகனின் கதையாக அது விரிகின்றது.

ஆரம்பத் துள்ளலோடு, இந்திய சினிமாவுக்கே உரித்தான நாயக அறிமுகம் கூட இங்கே நிகழ்த்தப்படுகிறது, மெல்ல மெல்ல அது அவனின் பால்யகாலம் நோக்கி நகர்த்தப்படுகிறது,

மைக்கேல் ஜாக்சன் என்ற இசைக் கலைஞனைத் தெரிந்த அளவுக்கு, அவர் வாழத்தலைப்பட உலகம், தான் வரித்துக் கொண்ட உலகம் எவ்வளவு குழந்தைத்தனமானது என்பதை ஆரம்பக் காட்சியில் இருந்து அவரின் புகழ் நிலை தொட்ட பருவம் வரை காட்டப்படுகிறது.

சார்லி சாப்ளின் படங்கள், Peter Pan கதைப் புத்தகங்கள் என்று சின்னச் சின்ன ஆசைகளோடு வாழும் அந்த இசைப் பேரரசனுக்கு செல்லப் பிராணிகளாக, குரங்குக் குட்டி, மலைப்பாம்பு, ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம் என்று காட்டப்படும் போது நெகிழ்வும், சிரிப்பும் எழுகிறது. அதே சமயம் புகழ் என்ற மாய உலகில் அந்தக் கலைஞனின் அவதியை இன்னொரு பக்கம் காட்ட முனைகிறது திரைப்படம்.



மைக்கேல் ஜாக்சனின் இன்னொரு முகம் மனித நேயம், அது படத்தில் சில காட்சிகளின் வழியே வெளிப்படுகின்றது.

இந்த இடத்தில் இன்னொரு பக்கம் போய் விட்டு வருவோம்.

மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்ட நிகழ்வில் முதன்முதலில் ரஹ்மானின் இசை நிகழ்வு இடம்பெற்றதை அண்மையில் ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர் சிவமணி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னணி இதுதான்.

1999 ஆம் ஆண்டில் MJ & Friends என்ற இசை நிகழ்வு கொசோவோ நாட்டுச் சிறுவர் நலனுக்காக நிகழ்த்தப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் “ஏகம் சத்யம்” என்றதொரு இசைப் பாடலை அரங்கேற்றினார். அப்போது இருவருக்குமான சந்திப்பு நிகழவில்ல்லை. 

ஏ.ஆர்.ரஹ்மான் மைக்கேல் ஜாக்சனுடனான நேரடிச் சந்திப்பு Slumdog Millionaire  இற்காக ஆஸ்கார் பெற்றதன் பின்னரே நிகழ்ந்தது. தன் பிள்ளைகளை அறிமுகப்படுத்திப் பேசுமளவுக்கு மைக்கேல் ரஹ்மானுடன் நெருக்கமானார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், பாப் இசையின் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்குமான கடைசி உரையாடலில் மைக்கேல் ஜாக்சன் ரஹ்மானிடம் வேண்டிக் கொண்டது,

“We are the world” பாணியில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிடுவோம் என்று.

அதை வெற்று வார்த்தைகளாக உதிர்க்காமல் எதிர்வரப் போகும் ஆல்பத்துக்கான ஒத்திகைகளிலும் அவர் இறங்கிவிட்டார்.

திடீரென்று வந்த அதிர்ச்சிச் செய்தியாக,  மைக்கேல் ஜாக்சனின் அகால மரணம் தன்னை வேதனையுறச் செய்தது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் இரங்கலை வெளிப்படுத்தியிருந்தார். 

இயக்குநர் ஷங்கர் வேண்டுகோளில் எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பாட வைக்க அணுகிய போதும் ரஹ்மானின் வேண்டுகோளை மைக்கேல் ஜாக்சன் ஏற்றிருந்தாராம்.

1983 இல் எதியோப்பியா நாடு எதிர் நோக்கிய கடும் பஞ்சத்தைப் போக்க “We are the world” என்ற இசை ஆல்பம் உருவாக்கத்தில் மைக்கேல் ஜாக்சன் , சக இசைக் கலைஞர் லயனல் ரிச்சி உடன் தன் பங்களிப்பை வழங்கியவர். அந்த ஆல்பம் அந்தக் காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Black & White என்ற மைக்கேல் ஜாக்சன் புகழஞ்சலி இசை நிகழ்வையும் ஏ.ஆர்.ரஹ்மான் சில வருடங்களுக்கு முன்னர் அளித்திருந்தார்.

பின்னாளில் The Wonderment Tour என்று ரஹ்மான் இசைப் பயணம் நிகழ்த்திய போது, மைக்கேல் ஜாக்சனின் This Is It  ஆவணப்படத்தை இயக்கிய, Kenny Ortega இந்த Wonderment என்ற சொற்பிரயோகம் மைக்கேல் ஜாக்சனுக்குப் பிடித்தமானதொன்று என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினாராம்.

இந்தியத் திரையிசையின் போக்கில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரவால் நிகழ்ந்த புத்திசையின் புதுப் பாய்ச்சல் ஒரு புறம், நடனப் புயல் பிரபுதேவா வின் வரவு நிகழ்த்திய நடன உத்தி என்று மைக்கேல் ஜாக்சனின் பிரதிபிம்பங்கள் போல இந்திய இசை உலகில் இரு பெரும் ஆளுமைகள் வெளிவந்தது காலம் எழுதிய தீர்ப்பு.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபுதேவாவை அடையாளப்படுத்தும் அளவுக்கு அது பலப்பட்டது.


இந்த மைக்கேல் ஜாக்சனின் படத்தைப் பார்த்த போது, பின்னணி இசையில் ரஹ்மானின் பங்களிப்பு இடம்பெற்றிருக்கலாமோ என்று தோன்றியது. அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஆத்மார்த்தமாகவும் அமைந்திருக்கும்.

மைக்கேல் ஜாக்சன் கதை இன்னொரு பாகமாக வரவிருக்கிறதாம்.

அப்படியே மைக்கேல் ஜாக்சனாகப் பிறந்திருக்கிறார்  Jaafar Jackson.

இவர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் Jermaine Jackson மகன். இந்தப் படத்தில் மெச்சத்தக்க விடயம் என்றால் இந்தப் பாத்திரத் தேர்வு தான். மைக்கேல் ஜாக்சனின் அந்தத் தினுசான குணாம்சத்தை அப்படியே பிறப்பெடுத்தது போலப் பிரதிபலிக்கிறார். 

இது மைக்கேல் ஜாக்சன் குறித்த ஆவணப்படமா இல்லை அவரின் சுய வரலாற்றுப் படமா என்பதில் ஏகப்பட்ட குழப்பம் நிகழ்கிறது.

தந்தை மகன் மோதல் என்பது அவரின் வாழ்வியலில் முக்கிய பங்காக இருந்தாலும் இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சன் என்ற இசை ஆளுமையின் பிறப்பெடுத்தல் இன்னும் ஆழ அகலமான திரைக்கதை அமைப்போடு வெளிப்பட்டிருக்கலாம். இதற்கு முன்னர் வெளிவந்த சுய வரலாற்றுப் படங்களில் இருக்கும் உணர்வோட்டம் இல்லாத வெறுமை தென்படுகிறது. 

சிறுவன் மைக்கேல் ஆக நடித்த பையனின் நடிப்பும், அவனின் தேடலும் சிறப்பான காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

"perfect pitch" என்று சிறுவன் மைக்கேல் ஐ வியக்கும் இசை நிறுவனத்தின் பெண்.
"we can change the world" என்ற இறுமாப்பு, தந்தையைப் பதவி நீக்கம் செய்யும் fax, MTV ஐக் கட்டுக்குள் கொண்டு வரும் காட்சிகள் என்று சினிமாத்தனமான அதிரடிகள் என்றாலும் ரசிக்க வைக்கின்றன.

இந்தியத் திரையிசையைத் தாண்டி, ஒரு மேற்குலக இசைக் கலைஞன் என்று நம் காலத்து எண்பதுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நாயகன் மைக்கேல் ஜாக்சன். 

படம் பார்த்து முடித்த பின்னரும் மனதில் தேங்கி நிற்பது, தனக்காக ஒரு உலகத்தைக் கட்டியெழுப்பி வாழ்ந்த ஜாக்சன் தான். அவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கானா பிரபா

26.04.2026