Pages

Sunday, February 25, 2018

ஶ்ரீதேவி 💐💐💐


“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து இன்றும் காண முடிகின்றதொன்று.
பாலிவூட் எனும் ஹிந்தித் திரையுலகில் வைஜெயந்திமாலா, ஹேமமாலினி காலத்துக்குப் பின் அவர்களைத் தாண்டிய பெரியதொரு அலை ஶ்ரீதேவியினால் தான் நிகழ்ந்தது. இன்று வட நாட்டில் இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர்.ரஹ்மானை மையப்படுத்திய உச்சபட்ச அங்கீகாரம் போன்றதொரு நிலையைத் தமிழுலகில் இருந்து சென்று எண்பதுகளில் நடிப்புத்துறையில் நிறுவினார் ஶ்ரீதேவி.

“ஶ்ரீதேவி செத்துப் போனார்” என்ற செய்தி மனசு முரசறிவித்த போது, தன் முகத்தை ஒருக்களித்துச் சாய்த்து வாய் விட்டுக் கொடுக்கும் அவரின் அந்த டைப்ரைட்டர் முத்திரைச் சிரிப்புத் தான் ஞாபகத்தில் வந்து போனது. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு அறிமுகமாகிப் பின்னர் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தன் இளவயதிலேயே கனமானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்த வகையில் அவரின் அடுத்த சுற்று ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் திரை வாழ்வில் மறக்கமுடியாத உயர் படைப்புகளில் ஶ்ரீதேவியின் பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து விட்டது.

தன் காதலனைக் கொன்றவன் வீட்டில் அவனின் சித்தியாகச் சென்று வில்லனுக்கே வில்லத்தனம் காட்டும் மூன்று முடிச்சிலும், பட்டுக்காட்டுப் பூமியில் ஏட்டறவு கிட்டிய அளவுக்குப் பட்டறவு இல்லாத வெள்ளாந்தி மயிலு ஆகப் 16 வயதினிலே என்றும், சேலையை வாரி மூடிக் கட்டிய தோற்றத்தில் பாடகி அர்ச்சனாவாக  ஜானியிலும் பயணித்தவருக்குக் காத்திருந்து வந்து சேர்ந்தது போலக் கிட்டியது விஜி என்ற வெகுளிப் பாத்திரம். விஜி தன் பிரியமுள்ள நாய்க்குட்டி சுப்பிரமணியோடும் தன் காவலன் சீனுவோடு ஒட்டி உறவாடிப் பாசமழை பொழியும் காட்சிகள் எங்கள் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்ட ஒருத்தரின் வாழ்வில் நடந்தது போலவிருக்கும்.
சீனு விஜிக்கு நரிக்கதை சொல்லும் காட்சியில் https://youtu.be/vPsHZYU1lVo விஜி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டுப் போனதன் சிறுதுளி அது. பின்னர் பாலிவூட் திரையுலகை “சத்மா” வழியாகத் தட்ட இப்படமே அவருக்குப் பாலமாக அமைந்தது.

ஒரு காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னி ஶ்ரீதேவி. ஆனால் பாருங்கள் இந்த மாதிரியானதொரு ஈர்ப்பை ஏற்படுத்த அவர் கவர்ச்சி என்னும் அஸ்திரத்தை அப்போது பயன்படுத்தவில்லை. ஶ்ரீதேவி வெளிப்படுத்தியது பாந்தமானதொரு அழகு. அதுவே இந்த ஈர்ப்பின் மைய விசை. சுரேஷ் - நதியா காலத்துக்கு முன்பே கமல்ஹாசன் - ஶ்ரீதேவி என்ற ஜோடி தமிழ்த் திரையுலகின் ஏக பிரபலம். 

தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஶ்ரீதேவி படங்கள் என்றால் “தனிக்காட்டு ராஜா”, “வறுமையின் நிறம் சிகப்பு” ஶ்ரீதேவிகள் தான் அதிகம் பிடிக்கும். அதிலும் வேலை ஒன்றும் கிட்டாத விரக்தியிலிருக்கும் காதலனிடமிருந்து விலகி மீண்டும் சேரும் கணங்களில் தன்னை நிரூபிப்பார். தனிக்காட்டு ராஜாவிலும் காதல் முறிவோடு நிற்கும் தனிமரமாகக் குடும்ப வாழ்வை எதிர்கொள்வார்.
மலையாளத்து முன்னணி இயக்குநர்  ஐ.வி.சசி கொடுத்த பகலில் ஓர் இரவு ஶ்ரீதேவிக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருந்தது. இன்னும் மூன்றாம் பிறை, கல்யாணராமன், வாழ்வே மாயம் எல்லாம் நினைப்பில் வரும் போது மீண்டும் கோகிலா மடிசார் பொண்ணை எப்படி மறக்க முடியும்? பெண் பார்க்கும் போது நாணிக் குறுகி முறுவலோடு பாடும் அந்தக் கன்னி மணம் முடித்த பின் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைக்கத் துடிக்கும் குடும்பப் பெண்ணாக மாறுவாரே அங்கே தெறிக்கும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி.
கவரிமான் படத்தில் தப்பார்த்தம் கற்பித்துத் தன் தந்தையோடு முரண்படும் மகளாவும் பின்னர் தன்னைக் காக்க வந்த பின் உண்மை தெரிந்து குமுறும் கட்டம் எல்லாம் உச்சம்.

“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” (16 வயதினிலே), “”மலர்களில் ஆடும் இளமை புதுமையே” (கல்யாணராமன்), “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே” (ஜானி) என்று பாடல்களில் எல்லாம் வியாபித்து நிற்பார் அவர். எண்பதுகளில் ஜெய்சங்கர்த்தனமான படங்களில் நடித்துத் தள்ளினாலும் ஶ்ரீதேவிக்கேன்றே அமைந்த படங்களில் தன் இருப்பை அவர் காட்டத் தவறியதில்லை. 

சத்மாவுக்கு முன்பே அவர் ஹிந்தியில் நுழைந்திருந்தாலும், தெலுங்கின் மசாலா மன்னன் இயக்குநர் கே.ராகவேந்திரராவ் மீள எடுத்த ஹிந்திப்படம் ஹிம்மத்வாலா அதிரி புதிரி வெற்றியோடு நாகினா, சாந்தினி, மிஸ்டர் இந்தியா என்று ஶ்ரீதேவிக்கான வட நாட்டு, தெலுங்கு திரைப்பயணம் நீண்ட விரிவான கட்டுரையாக எழுதப்பட வேண்டியது.

ஹிந்திக்குப் போன ஶ்ரீதேவிக்குத் தமிழ்ப் பட வரவுகள் கதவைத் தட்டினாலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தால் மெல்ல அவரின் இடத்தைப் பலர் நிரப்பினார்கள். “நான் அடிமையில்லை” படம் கூட ஒரு சிறு இடைவேளைக்குப் பின் நடித்து வந்ததது.

மீண்டும் சில வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வந்தார். ஆனால் "காதல் தேவதை" என்ற மொழி மாற்றப் படம் மூலமாக.
"ஜெகதீக வீருடு அதி லோக சுந்தரி" என்ற தெலுங்குப் படம், தெலுங்கு தேசத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோடு ஶ்ரீதேவி நடிக்க வெளியானது. அந்த ஊர் எஸ்.பி.முத்துராமன் என்று சொல்லக் கூடிய மசாலா மன்னர், வசூல் சக்கரவர்த்தி கே.ராகவேந்திரராவ் இயக்கிய படம் அவரின் ராசியை மெய்ப்பிக்கும் விதமாக ஓட்டம்  ஓடி வசூல் மழை பொழிந்தது. தமிழுக்கும் "காதல் தேவதை" என்ற பெயரில் 1990 இல் மொழி மாற்றப்பட்டு வந்தது. 

“எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குதாம்மா?” என்று 
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு விழாவில் வைத்து ஶ்ரீதேவியிடம் கேட்டதே செய்தி ஆகுமளவுக்கு இடைவெளியிருந்தது. மலையாள மூலம் தமிழுக்கு வந்த தேவராகம் படத்தில் அப்போதைய முன்னணி நாயகன் அர்விந்த்சாமியுடன் ஜோடி கட்டியும் படம் எடுபடாமல் போனது.

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த சுற்றை ஒரு பெரிய இடைவேளை எடுத்து விட்டு வந்தாலும் நாங்கள் மறக்கவில்லை என்று ஶ்ரீதேவியை அங்கீகரித்தார்கள். அதற்குப் பின் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் முக்கிய செய்தி ஆனது இறுதி வரை.

நடிகைகள் மீதான மோகம் எல்லை கடந்து, இவர் என் மனைவி என்று வழக்குப் போடும் மோகம் ஶ்ரீதேவி காலத்தில் ஶ்ரீதேவிக்கும் நிகழ்ந்தது. அது பொய்ச் செய்தியாக இருந்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது ஊடகங்களின் வாயில். இந்த ஶ்ரீதேவி மோகம் இன்று தெலுங்கு, ஹிந்தி முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மாவுக்குப் பித்து தலைக்கேறும் அளவுக்கு இருக்கிறது.

தன் தாய் அல்லது பாதுகாவலர் கண்காணிப்போடு நடிக்க வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் அந்தப் பாதுகாப்பை இழக்கும் போது நிர்க்கதியாகும் நிலையை நடிகை காஞ்சனா காலத்தில் இருந்து கனகா வரை கண்டிருக்கிறோம். நடிகை ஶ்ரீதேவியின் தாயார் மரணத்தைத் தொடர்ந்து துரத்திய சொத்துப் பிரச்சனையால் உடன் பிறந்தோரால் வழக்கு, நீதிமன்றம் என்று அலைக்கழிக்கப்பட்டார். 
ஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் சகோதரருமான போனி கபூரை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க வேண்டிய நிலைக்குக் காரணமே இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தேடிய ஶ்ரீதேவியின் இறுதி அடைக்கலம் எனலாம்.

“நினைவலைகள் தொடர்ந்து வந்தால் 
நேரமெல்லாம் கனவலைகள்”

ஶ்ரீதேவி என்ற நம் காலத்து நாயகி இனி ஞாபகங்களில் மட்டும்.

கானா பிரபா
25.02.18

Saturday, February 24, 2018

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி💚



சங்கீதம் எனும் கடலில் அங்கே பழக்கப்பட்டு அங்கேயே வாழ்க்கைப்பட்ட ஒருவர் எவ்வளவு தூரம் அங்கே ஆகச்சிறந்ததொரு வித்தகனாக இருப்பார் என்பதற்கு  கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு வாழும் உதாரணம். இன்று காலை வானொலி ஒலிபரப்பின் போது “கங்கைக்கரை மன்னனடி” என்ற வருஷம் 16 பாடலை ஒலிபரப்பிக் கொண்டே அதில் மூழ்கியிருந்த அந்தக் கணங்களில் இந்த இசை மேதையிலிருந்து புறப்பட்ட  சாதகப் பரிமாறல்களில் வியப்பு, நெகிழ்வு, மெய்சிலிர்ப்பு என்று கலவையான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

தமிழ்த் திரையிசையில் முழுமையான சாஸ்திரிய இசை நெறிகளோடு அமைந்த ஏராளம் பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் பொதுத்தன்மை, காட்சிச் சூழல் மட்டுமன்றி படத்தின் முழுமையான ஓட்டமே அந்த இசை மரபு சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் இசைஞானி இளையராஜாவுக்கு முந்திய திரையுலகம் இந்தப் பாணியில் இன்னும் வெகு இறுக்கமாகவே இருந்து வந்தது. 
 ஆனால் ஒரு பொழுதுபோக்கு சார்ந்த திரைப்படத்திலும் சாஸ்திரிய இசையை முழுமையாக மையப்படுத்திய பாடலைக் கொடுத்து என் போன்ற கடைக்கோடி ரசிகனையும் கவர முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களோடு ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத முடியும். முந்திரிக் கொட்டையாக “தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி” என்ற எனக்குள் ஒருவன் பாடல் இந்த நேரத்தில் நினைவில் வந்து நிற்கிறது. அந்த வகையில் “கங்கைக்கரை மன்னடி” பாடலையும் எடுத்து நோக்க முடியும். ஒப்பீட்டு நோக்கில் இவ்விரு பாடல்களுமே தலைவன் துதியாக அதைத்  தலைவியின் பார்வையிலும், தலைவன் பார்வையிலுமாக அமையும் பொதுத்தன்மையும் கொண்டு விளங்கி நிற்கின்றன.

“கங்கைக் கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி” இந்தப் பாடலை எடுத்து நோக்கினால்

“கண்மணியே ராதை என்னும் - காதலியே 
நான் விரும்பும் பெண்மணியே....
ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க - 
கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட - மேடையிலே வட்டமிடு”

என்றொரு தொகையறாவை நிதானமாகக் கொடுத்து விட்டு கடல் நீரைச் சுழித்து ஓடும் படகை நேர்த்தியாகவும், நிதானமாகவும் அதே நேரம் வேகம் தப்பாமலும் எடுத்துச் சென்று பயணிக்கும் ஒரு கடலோடியாக மாறுகிறார் ஜேசுதாஸ். 
முதல் சரணமும் இரண்டாவது சரணமும் இன்னும் இவ்விரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை வெளிப்படுத்தும் போது 
“உள்ளத்தை எடுத்தேன்” தொடங்கி “மீனைப் போல் துடித்தேன்” வரை நெகிழ்வான ஓட்டமும் பின்னர்
“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்” தொடங்கி “இமை தான் விரிய” என்று முடியும் போது ஜதிகளில் காட்டும் துள்ளிசையும், பின்னர் மீண்டும் பழைய பல்லவிக்கு மாறும் நெகிழ்வான ஓட்டமுமாக இருக்கும்.
மீனொன்று  உள்ளிருந்து எட்டி வெளியே கடற்பரப்புத் தாண்டி வந்து மீண்டும் உள்ளே போகுமாற் போலொரு பிரவாகம் அது.
இந்தப் பாட்டைக் கூர்ந்து நோக்கினால் அல்லது இந்தப் பாட்டுக்குள்ளேயே போய்க் குடியிருந்து பார்த்தால் தெரியும் இங்கே கே.ஜே.ஜேசுதாசின் நாவில் அற்புதமான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியிருப்பதை.

“முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழின் சந்தம் நிறைந்த இந்தப் பாட்டு ஒன்றும் வெகு சாதாரணமாகக் கடந்து விடக்கூடியதொன்றல்ல. அசுர சாதகம் என்பார்களே அது மாதிரி. ஒரு அற்புதமான சிலையை உருவாக்கி விட்டு அதே மாதிரி இன்னொன்றை எப்படி உருவாக்க முடியாதோ அது போலவே இந்தப் பாடல் எப்படி உருவானதோ அதை எப்பேர்ப்பட்டும் எந்தவொரு உச்ச பாடகராலும் இதே உணர்வோடு கொடுக்கவே முடியாது என்பேன். 

“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் - நடை தான் பழக
கத்தும் கடல் நீரலை போல் - இங்கு குழல் தான் நெளிய” என்று தொடங்கும் பகுதியில் துள்ளும் ஒலி எப்படி இசையாக மொழி பெயர்க்கப்படுமோ அதுவே தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலின் வெளிப்பாடு.

தன் காதலியின் அரங்கேற்றம், வேட்டையாட வரும் விரோதியிடமிருந்து காத்து நிற்க வேண்டிய பொறுப்பில் அந்தக் காதலன். இந்தத் திருவிழா மட்டும் குறையின்றி நடந்தால் அதுவே போதும் தெய்வக் குற்றத்தில் இருந்து தப்பி வாழலாம் என்றொரு சூழல் இதெல்லாம் அமைந்த அந்தப் படத்தின் முடிவிடத்தில் இந்த மாதிரிப் பாடலைக் கொடுக்கும் போது அந்த “அவதி” ஐப் பிரதிபலிக்கப் பிரயத்தனப்படும் இசையில் தான் எவ்வளவு போராட்டம்.... அதையே வயலின் குழாமும்  தபேலா கூட்டணி சேரக் கண் முன்னே காட்டுகின்றது. பாடலின் வரிகளில் கூட வாலியார் அந்த நெருக்கடி மிகு அழகியலைக் காட்டுகிறார். வருஷம் 16 படம் வந்த போது அதைப் பார்த்து எவ்வளவு தூரம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருந்தேனோ அதை இன்றும் அந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் எழுப்பி விடும். “கரையாத மனமும் உண்டோ” https://youtu.be/37eraRW1xGU என்று இந்தப்
படத்துக்காகப் பதிவாகி வெளிவராத பாடலைக் கேட்கும் போதும் அதே தான்.

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்

காத்திருப்பான் கை அணைக்க 
காதலியாள் மெய் அணைக்க

https://youtu.be/VPT2LxSHf8s

Tuesday, February 20, 2018

மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐



திரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் தான் (1977 - 1993) திரையிசைத் துறையில் உச்ச புகழோடு விளங்கியவர். ஆனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டிய பாடல்களில் இந்தத் தெம்மாங்கு முத்திரையில் துலங்கி நிற்பார்.


“முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே

நீர் கொடுத்த நீரையெல்லாம் 

நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்

சீராக ஏரோட்டி பார் முழுக்க 

சோர் கொடுத்து காக்க போறேன்

ஆதரிக்க வேனும்மையா”


என்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு “ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்” என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன் தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து “கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள” என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம்.


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும். பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம். “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்று பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம் ஒரு சில விதிவிலக்குகளோடு

“பெரும்பாலும்” ஒவ்வொரு படங்களிலும் அதை நிறுவித் தொடர்ந்தது. அது கிராமியம் சார்ந்தது மட்டுமன்றி “நிறம் மாறாத பூக்கள்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற நகரத்தை மையப்படுத்திய படங்களிலும் தொடர்ந்தது.

“கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ”, “மலர்களே நாதஸ்வரங்கள்” என்று கிழக்கே போகும் ரயிலிலும், “வான் மேகங்களே” என்று புதிய வார்ப்புகளிலும், “கொத்தமல்லிப் பூவே” என்று கல்லுக்குள் ஈரத்திலும், “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” என்று மண் வாசனையிலும் தொடர்ந்தது. “அரிசி குத்தும் அக்கா மகளே” அன்றைய காலத்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் மாவு அரைக்கும் சிறுகடை விளம்பரப் பாடலாக அமைந்தது உச்சம்.


“தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே” என்ற வரிகள் தொடும் போது மெய்சிலிர்க்கும் காதல் பரவசம் கொண்டு வரும் “வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்” பாடலில்.


இந்த வரிசையில் உச்சம் கண்டது முதல் மரியாதை பாடல்கள். “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” என்றொரு கனிவாக அக மகிழும் பாட்டுக்கு நிகராக “பூங்காற்றுத் திரும்புமா” என்னும் வலி மிகு பாடல், முப்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் அதே உணர்வினைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. இளையராஜா பாடல்களில் ஒரேயொரு பாடலை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்ய முனைவோருக்கு இந்த “பூங்காற்றுத் திரும்புமா” போதும். “தாலாட்ட....மடியில் வைத்துத் தாலாட்ட” என்ற வரிகளில் மலேசியா அண்ணர் காட்டும் வலியின் தொனியை அதே பாங்கில் காட்ட யாரால் முடியும்?


இளையராஜாவோடு இடைக்காலப் பிரிவினை வந்து வேதம் புதிதுவில் தேவேந்திரனோடு பாரதிராஜா கை கோர்த்த போதும் “மாட்டு வண்டிச் சாலையிலே” பாடிக் கை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவரை வைத்து அதிகம் பயன்படுத்தும் அதிஷ்டத்தை ஏனோ ஏற்படுத்த விட்டாலும் 

“தென் கிழக்குச் சீமையிலே செங்காத்துப் பூமியிலே

ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு” 

பாட்டு கிழக்குச் சீமையிலே படத்தின் நிறத்தைக் காட்டியதே?


“குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன” அன்றைய விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் “என்னுயிர் தோழன்” பட முன்னோட்டத்தைத் தொடக்கி வைக்கும் பாட்டு மீண்டும் இளையராஜா பாரதிராஜா கூட்டணி கட்டியதன் ஆர்ப்பரிப்புக் கொண்டாட்டம்  போல ரசிகர் மனதில் எழும். ஒரு நவீன மயப்பட்டுத்தப்பட்ட இசையில் கிராமியத் தனமான குரலைக் கலக்க வைத்து அந்தக் கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் இளையராஜா முத்திரையில் மலேசியா வாசுதேவன் பங்களிப்பு அதிகம். அதிலும் என்னுயிர்த் தோழனில் “ஏ ராசாத்தி ராசாத்தி” என்ற குழுப்பாடல் போல இன்னொன்று இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சாமி போட்ட முடிச்சு படத்தில் வரும் “நீலவேணி அம்மா நீலவேணி” பாடல் தான் அது. 


“கூந்தல் என்ன ஆலம்விழுதோ

குங்குமம்தான் காலைப்பொழுதோ

தேர்ந்த ரெண்டு சேரன் வில்லு புருவமாகிப்போனதோ…

கண்கள் ரெண்டு மீனோ மானோ.....

கன்னம் என்ன பூவோ பொன்னோ....

சின்ன வாயில் என்ன சாயல் பவழமாக ஆனதோ…”


என்று நீலவேணி பாடலின் இடைக்குரலாக அள்ளுவார் மலேசியா வாசுதேவன். அங்கே காதல் ரசம் வழிந்தோடும் உச்சம்.


“ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஒற்றைக் குரலில்

சோக ஒலியெழுப்பும் நாடோடித் தென்றல் மலேசியா வாசுதேவன்.


“இளம் வயசு பொண்ண வசியம் பன்னும் வளவிக்காரன் நல்ல மனசத்தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்”

அந்தத் தொடக்கமே மலேசியா வாசுதேவனுக்கு ஒப்பார் யாரும் நிகருண்டோ இப்பாட்டில் என்று அட போட வைக்கும். இந்தப் பாட்டில் அறுத்து உறுத்துத் தமிழை வளைத்துப் போட்டுப் பாடும் அழகே தனி. பாண்டி நாட்டுத் தங்கம் படத்தில் இந்தப் பாடல் தனித்து நிற்பது போலவே பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் “பட்டிக்காட்டுப் பாட்டு” பாடலில் காட்டுவார் வித்தை.


மோகன் போன்ற நாயகர்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமே அச்சொட்டாக அமைந்தது போன்ற வளையம் ராமராஜனுக்கு அமையவில்லை. ராமராஜனுக்கு ராஜா பாடினாலென்ன அன்றி இன்னும் மற்றோர் பாடினாலென்ன எல்லாமே சூடு பிடித்து மக்கள் மனதில் ஒட்டிய பாடல்கள். இங்கேயும்

 “கம்மாக் கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்” (ராசாவே உன்ன நம்பி), “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே” (கிராமத்து மின்னல்), காதல் கீதங்கலிலும் “மாரியம்மா மாரியம்மா” (கரகாட்டக்காரன்) தெய்வீகத் தேடலிலும் கிராமத்து ராஜனாக அடையாளப்பட்டார் மலேசியா வாசுதேவன்.


“நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்” குழுப் பாடலில் நாயக அந்தஸ்தோடு வெளிப்படுவார் மலேசியா வாசுதேவர் அதுவே பின்னாளில் கேப்டனுக்கான மகுடப் பாடலாக அரசியல் மேடை வரை எழுந்து நின்றது.


“தண்ணி கருத்திருச்சு” இப்படியொரு தலைப்போடு மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சி படைக்க வருகிறார் என்ற விளம்பரத்தோடு யாழ்ப்பாணத்தில் கச்சேரி படைக்க வந்தாராம். நெல்லியடியில் நடந்தது அந்த நிகழ்வு. சமீபத்தில் தான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எல்லாப் பாடல்களும் ஶ்ரீதர் இளையராஜாவின் முதல் கூட்டணி அதுவும் வெற்றிக் கூட்டணி என்று நிரூபித்தன. “ஏ முத்து முத்தா” என்று இன்னொரு அந்தத்த்தில் இழுத்து விட்டு “தண்ணி கருத்திருச்சு” என்று துள்ளிசைக் குரலுக்குள் புகுந்த விதத்தை ரசித்துக் கொண்டே அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் போது அவரின் குரலின் பன்முகப்பட்ட

பரிமாணம் துலங்கும்.


“ஆத்து மேட்டுல ஒரு பாட்டுக் கேக்குது” பாடலில் எஸ்.ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஈடு கொடுத்துத் தானும் பாடும் போது ஒவ்வொரு முதலடிகளையும் தத்தளித்துப் பாடுமாற் போலக் குரலில் மாறுபாட்டைக் காட்டியிருப்பார். உதாரணமாக “ஆஆஆத்த்து மேட்டுல” என்ற ரீதியில் அமைந்திருக்கும். கிராமத்து அத்தியாயம் படத்தில் அண்ணன் இவ்விதம் இசையமைத்துக் கொடுக்கத் தம்பி கங்கை அமரனோ “பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லே” என்று தெம்மாங்கில் ஒரு சோக மெட்டுப் போட்டுக் கொடுக்க மலேசியாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது இலங்கை வானொலியின் பாட்டுப் பெட்டகத்தின் மறக்க முடியாத பொக்கிஷப் பாடல் ஆனது.


அதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலில் மேற்கத்தேயத்தில் ஒரு புறம் கலக்கிக் கொண்டு  " ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்" அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே "இதப்பார்ரா" என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் தான். 

“அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்

அட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்” எனும் போது ஜாலியாகவும்,

“உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே

எனக்கேனம்மா” எனும் போது வெகு சீரியசாகவும் ஒரே பாட்டில் வித விதமான உணர்ச்சியோட்டம் அதுவும் “தானந்தன கும்மி கொட்டி” என்ற 

ஒரு தெம்மாங்குத் துள்ளிசையில் கொடுத்திருப்பார்.

அது போலவே அன்றைய சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பும் அதே படத்தில் வரும் “அன்னக்கிளியே” பாட்டு இதே படத்திலிருந்து. 


“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்று எடுத்த எடுப்பிலேயே பீறிட்டு கடல் தண்ணியிலிருந்து எழுந்து துள்ளிக் குதிக்கும் மீனாக இவர் குரல் செம்பருத்தி படப் பாடலில் ஒரு குறும் உற்சாகத்தைக் காட்டி விட்டு மறைவார்.


பட்டியலாகக் கொடுக்க இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று இதோ அள்ளிக் கொடுக்குது மனசு. மேலே சொல்லப்படாத மலேசியா வாசுதேவனின் தெம்மாங்கு மெட்டுகள் அந்த வரிசையில்


கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா - கும்பக்கரை தங்கைய்யா

கூடலூரு குண்டுமல்லி - கும்பக்கரை தங்கய்யா

குத்தாலக் குயிலே - திருமதி பழனிச்சாமி

அடி படகோட்டும்  - சின்னவர்

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி - சக்கரைத் தேவன்

தண்ணீர்குடம் கொண்டு - சக்கரைத் தேவன்

தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு

நான் அப்போது - பகல் நிலவு

மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்

ஏறாத மலைமேலே - முதல் மரியாதை

ஆடுதடி - மலையூர் மம்பட்டியான்

அடி மத்தாளம் தான் - மல்லுவேட்டி மைனர்

அண்ணனுக்கு - தாலாட்டு கேட்குதம்மா

எந்த வேலு வந்தாலும் - மகராசன்

என் ஆசை வாழைக்குருத்தே - கட்டளை

இன்னும் என்ன பேச்சு - ராஜா ராஜா தான்

குயிலுக்கொரு நிறமிருக்கு - சொல்லத் துடிக்குது மனசு

குத்தாலக்காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு - சின்னதேவன்

நன்றி உனக்குச் சொல்ல - உத்தம ராசா

கற்பூர தீபத்திலே - ஊரு விட்டு ஊரு வந்து

ஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி - நினைவுச் சின்னம்

ஊரெல்லாம் திரு நாளு - என்னை விட்டுப் போகாதே

பூவே பூவே பொன்னம்மா - பாட்டுக்கு நான் அடிமை

தந்தேன் தந்தேன் - வில்லுப்பாட்டுக்காரன்

உட்டாலங்கிரி கிரி மாமா - சின்னவர்

விளக்கேத்து விளக்கேத்து - பேர் சொல்லும் பிள்ளை

வெளக்கு வச்சா - சின்னப் பசங்க நாங்க


(இன்னும் இன்னும் வளரும்)

ராஜா & மலேசியா வாசுதேவன் புகைப்படம் :  நன்றி ஸ்டில்ஸ் ரவி


கானா பிரபா

20.02.2018