Pages

Saturday, March 24, 2012

றேடியோஸ்பதி வழங்கும் =>" நானும் பாடுவேன்" இதுவரை வந்த படைப்புகள்

வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தேன், தற்போது உங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்கான முடிவுத்திகதி மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை அறியதருகின்றோம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. "நானும் பாடுவேன்" என்ற இந்தப் போட்டிக்காக மார்ச் 31 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.

இதுவரை வந்த படைப்புக்களை வந்த ஒழுங்கின் பிரகாரம் இங்கே பகிருகின்றேன். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்களில் சிறந்த பாடகரை நேயர்களே தேர்ந்தெடுக்கும் வாக்குப்பெட்டி வைக்கப்படும்.

செளம்யா சுந்தரராஜன் பாடும் "நினைத்து நினைத்துப் பார்த்தால்"



திருக்குமார் பாடும் "கண்ணே கலைமானே"



ஜபார் அலி பாடும் "நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு"



கவிதா கெஜானனன் பாடும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்"



கார்த்திக் அருள் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"



மாதினி பாடும் "இதுவரை இல்லாத"



யோகேஷ் பாடும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்"




நிலாக்காலம்' (எ) நிலா பாடும் "சின்னக் குயில் பாடும் பாட்டு"



பரத்வாஜ் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"



கோபி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"





ராகவ் பாடும் "காலையில் தினமும் நான் கண்விழித்தாலே"





இதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்
1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.

2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.

3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.

4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்

5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்

6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்

7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.

8. ஆண், பெண் இரு பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.

கணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.

ஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்

Monday, March 12, 2012

ஷ்ரேயா கொஷல் எனும் இளங்காத்து வீசுதே...!

கடந்த வாரம் Zee TV இன் பாலிவூட் படங்களின் விருது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையிடையே தங்களின் பிரபல்யமான நிகழ்ச்சிகளின் படத்துண்டுகளைக் காட்டிக் கொண்டு வந்தார்கள், அப்படி வந்தது தான் "சரிகமப" என்ற இசை நிகழ்ச்சி குறித்த ஒரு சில நிமிடத்துளிகள் கொண்ட காட்சித்துண்டு. அதில் சின்னஞ்சிறுமியாக கலந்து கொண்ட ஷ்ரேயா கொசலைக் காட்டியபோது இந்தப் பத்துவருஷ காலத்தில் அவரின் நதிமூலம் எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இன்றைக்குப் பாட்டுப் போட்டி நடத்தாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம், எல்லோருக்கும் பாடி நம்மைப் படுத்த ஆசை இருக்கின்றது. அதற்கான களம் கூடக் கட்டற்று ஏன் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. ஆனால் கடந்த இருபதாண்டுகளுக்கு உட்பட்ட திரையிசையில் பாடகிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் கூட சுவர்ணலதாவுக்குப் பின் சின்மயியை ஓரளவு சொல்லி வைப்பதோடு சரி. மற்றோர் எல்லாம் கூட்டத்தில் கும்மாளம் என்ற நிலை தான். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து தன்னை நிலை நாட்டிப் பின்னர் ஹிந்தி தவிர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் சொல்வாக்குக் கொண்டிருக்கும் பாடகி என்ற பெருமையை ஷ்ரேயா கொசல் பெற்றிருக்கின்றார். இது இன்றைய கூட்டத்தில் கோவிந்தா என்ற சூழலில் அவ்வளவு சுலபமான விஷயமல்ல. தனித்துவமான திறமை ஒன்றே அவரின் மூலதனம், அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல். இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை வடநாட்டுச் சகோதரிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே கூடப் பெற்றிருக்கவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் "தேவதாஸ்" என்ற ஹிந்திப் படம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சிட்னித் திரையரங்கில் காண்பிக்கப்பட்டபோது அந்தப் படம் தரப்போகும் பிரமாண்ட்டத்துக்காக மட்டுமே தியேட்டருக்குச் சென்றேன். ஆனால் கட்டிப்போட்டது இஸ்மாயில் தர்பாரின் இசை. அதில் தான் தொடங்கியது ஷ்ரேயா கொசலின் இசைப்பயணம். எடுத்த எடுப்பிலேயே அந்த முதற்படத்தில் தேசிய விருது வேறு.



ஆனால் அவ்வளவு சீக்கிரம் தமிழுக்கு இந்தப் பாடகி வருகின்றார் என்று நினைக்கவேயில்லை, வந்தார் இங்கும் முத்திரை பதித்தார். "எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் பிடிக்குமே" ஜீலி கணபதி படப் பாடலில் உருகிய ஷ்ரேயா கொஷலின் குரல் உருக்கியது எம்மை. ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பில் பயன்படுத்திய பாலுமகேந்திரா மேல் இன்றளவும் கோபமுண்டு. இசைஞானி இளையராஜா, ஷ்ரேயா கொஷலுக்கு வள்ளலாக மாறிப் பாடல்களை அள்ளிக்கொடுக்க முன்னோடியாக அமைந்து விட்டது இந்தப்பாட்டு.



"இளங்காற்று வீசுதே" பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியின் தனிப்பாடலாகவும் இருக்கிறது, ஷ்ரேயா கொஷலோடு ஜோடி கட்டிய பாடலாகவும் இருக்கிறது. இரண்டையும் ஒருதடவை சுழல விட்டுப் பின் எடை போட்டுப்பாருங்கள் ஷ்ரேயா கொஷலின் அந்தக் கொஞ்சும் குரல் பாடலுக்குக் கொடுத்திருக்கும் வலிமையை. ஊனினை உருக்கிப் பார்க்கின்றது பாடல்.





"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை" சரணாகதி கொண்டு பாடும் அந்தத் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளாந்திக்குரலுக்குப் பின் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் உருக்கொண்டிருப்பதை யாரும் நம்ம முடியுமா?



தங்கர்ப்பச்சனின் சொல்ல மறந்த கதையிலும் அதே கதை தான் "குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ணத்தெறக்குது" புதுமனைவியின் வெட்கத்தையும் கூட அழைத்துக் கொடுக்கும் குரலில். பாடலை முழுவதுமாக ஓட்டிப்பாருங்கள்.குங்குமம் கிட்டிய கையோடு பாடும் ஒரு பெண்ணின் கிறங்கடிக்கும் குரல், அப்படியே அள்ளித் தெளித்தது போல என்ன ஒரு அனாயாசமாகப் பாடியிருக்கிறார்.



வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மலையாளிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனானப்பட்ட இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் நவீன் பாடிய மலையாளப்பாடலில் ஒலிச்சுத்தம் தேடிக் கிழித்துக் காயப்போட்டவர்கள். அப்படியிருக்க அங்கும் ஷ்ரேயா கொஷல் சென்று மயக்கினார் தன் குரலால்.
மலையாள சினிமாவின் இன்றைய இசையரசர் ஜெயச்சந்திரன் இசையில் பனாரஸ் படத்தில் பாடும் "சாந்து தொட்டில்லே"
பாடலில் அவர் கொடுக்கும் குரலின் ஜாலத்தில் கிறங்கி விருதுகள் கொடுக்குமளவுக்குப் போய்விட்டார்கள். "பிரியனொராள் இன்னு வன்னுவோ" என்று தொடங்கும் அந்த ஏக்கம் தொனிக்கும் குரல் எப்படியெல்லாம் போகிறது என்று கேளுங்களேன்.



ஷ்ரேயா கொஷல் இந்த ஆண்டோடு தன் கலைத்துறையில் பத்தாண்டுகளைத் தொடுகின்றார். இந்தப் பத்தாண்டுகளில் இஸ்மாயில் தர்பார் கொண்டு, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்தும் இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம்.
ஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Monday, March 5, 2012

றேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ


வணக்கம் மக்கள்ஸ்,

கடந்த இசைத்துணுக்குப் புதிருக்கு நீங்கள் கொடுத்த பெருவாரியான ஆதரவில் (?) மீண்டும் இன்னொரு இசைத்துணுக்குப் புதிரில் உங்களைச் சந்திக்கிறேன். இம்முறையும் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் முத்தான ஐந்து படங்களின் பாடல்களில் இருந்து இந்தப் புதிர்கள் வருகின்றன. இவற்றின் பொது அம்சம், எல்லாப் பாடல்களிலும் புல்லாங்குழல் வாத்தியத்தின் பயன்பாடு காணப்படுகின்றது. இதோ தொடர்ந்து இசையைக் கேட்டுப் பதிலோடு வாருங்கள் ;)

ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்

பாட்டு 1



சரியான பதில்: பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் இருந்து "உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது" பாடியவர்கள் மனோ, சித்ரா. இதோ முழுமையான பாடல்





பாட்டு 2



சரியான பதில்: "முத்தமிழ் கவியே வருக" தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா



பாட்டு 3



சரியான பதில்: நினைவுச்சின்னம் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "வைகாசி மாதத்துல பந்தல் ஒண்ணு போட்டு"



பாட்டு 4



சரியான பதில்: "நினைத்தது யாரோ நீ தானே" பாடல் பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இருந்து ஜிக்கி, மனோ பாடுகிறார்கள்



பாட்டு 5



சரியான பதில்: பாசப்பறவைகள் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடுகின்றார்கள் "தென்பாட்டித் தமிழே"