Pages

Saturday, December 23, 2023

🎸தமிழ்த் திரையிசை 2023 🎸 ❤️என் விருப்பத் தேர்வுகள் ❤️

இந்த ஆண்டு என்னை மிகவும் ஆக்கிரமித்த பாடல் என்றால் அது இசைஞானியின் “வழி நெடுக காட்டுமல்லி” பாடல் தான். எங்காவது வானொலி வழியாக இந்தப் பாடல் எழும் போது அந்தக் காலத்து 80கள், 90கள் காலத்து இன்பப் பரவசத்தில் தள்ளி விடும் இந்தப் பாட்டு.

ஆகவே அதிகம் கேட்ட புதுப்பாட்டு என்ற தெரிவில் இதையே நான் என் பங்கில் பரிந்துரைப்பேன்.

அத்தோடு இந்த ஆண்டின் சிறந்த ஜோடிக் குரல் பாடலாக இதற்கே அதிக ஓட்டு கொடுப்பேன். 81 வயசு இளைஞரோடு ஈடு கட்டிப் பாடுவதும், நுணுக்கமான சங்கதிகளில் பெப்பர்மிண்ட் குரலாய் மின்னும் அனன்யா பட் அழகுக் குரல் வெகு காலத்துக்குப் பின் இளையராஜாவுக்குக் கிடைத்தது என்று சொன்னாலும் மிகையில்லை.


சித் ஶ்ரீராம் அலை அதிகம் அடிக்காத ஆண்டு இதுவென்று சொல்லலாம் போல. அந்த இடத்தில் ஷான் ரால்டன் பிடித்து விட்டார். எனக்கு அவரின் நாசிக் குரல் மிகவும் பிடித்துப் போனதால் “நான் காலி” கேட்கும் போதெல்லாம் “நானும் காலி”.

இந்தப் பாடலோடு அதிகம் கேட்ட அவரின் “ஜிங்க்ர டங்கா” வும் என் பெரு விருப்பங்கள். ஆகவே 2023 இல் சிறந்த பாடகர் என்ற வகையில் ஷான் ரால்டனையே முன்மொழிவேன்.


வள்ளலார் இராமலிங்க அடிகளின் “அருட்பெருஞ்சோதி” 


https://youtu.be/bgVyPf30Zb8?si=vvlKjuun45lIKLpQ


இளையராஜாவின் கை வண்ணத்திலும் (விடுதலை 1),


பட்டினத்தாரின் “ஐயிரண்டு திங்களாய்” https://youtu.be/JSdVFmTs_BE?si=BLqnyoKZo4v2Sv2D


கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் “தண்டட்டி” படத்துக்காக இந்த 2K kids யுகத்திலும் வந்திருப்பது இன்ப அதிர்ச்சி என்றால்,

நாடி நரம்பை முறுக்கேற்றும் 

“சிவ சிவாயம்”


https://youtu.be/HCS71yTNDMo?si=0joJVGfQ_H8F3mGT


பாப நாசம் சிவனின் “என்னப்பன் அல்லவா” பாடலோடு இழைத்து சாம் C.S Sam C S கொடுத்தது ஆகச் சிறப்பு.

இந்த 2023 இசையமைப்பாளர் சாம் C.S இற்கு அதிக படங்களை வாரி வழங்கியுள்ளது.


ஒரு படத்தின் உணர்வோட்டத்துக்குப் பாடல்களின் தேவை எவ்வளவு தூரம் பொருந்த வேண்டும் என்பதற்கு “அயோத்தி” இசையமைப்பாளர் ரகுநந்தன் கச்சிதமாகத் தன் பொறுப்பை வழங்கியிருக்கிறார்.


“ஒத்தையில நின்னதென்ன” என்று வெகுளிப் பெண் ஊர்வசிக்குப் பாடிய சித்ரா,  30 வருடங்கள் கழித்து “அப்பத்தா” ஊர்வசிக்கும் 

“எங்கூரு காத்தாயி”க்கும்


https://youtu.be/jR3vaIMWONY?si=nkdcCwkMby4erqCd


குரல் கொடுத்தது காலம் சேர்ப்பித்த பொக்கிஷம்.


Modern Love Chennai தவிர்க்க முடியாத இசைப் பெட்டகம் என்பதால் அதுவும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்கின்றது.


தொடர்ந்து என் மனதைத் தொட்ட 2023 பாடல் பட்டியல். இது எந்த விதத் தரவரிசையில் அமைந்தது அல்ல.


1. வழி நெடுக காட்டுமல்லி - விடுதலை

2. ஒன்னோட நடந்தா -   விடுதலை 

3. அருட்பெரும்ஜோதி - விடுதலை

4. ஆராரிரரோ கேட்குதம்மா - வாரிசு

5. கடற்கரை காத்து வீசுதே - பொம்மை நாயகி

6. அவள் ஒரு வரம் - ரன் பேபி ரன்

7. கேசக் காதலா - டாடா

8. தங்கமணிப் பொன்னாரம் போல் - டாடா

9. சிவ சிவாயம் - பகாசுரன்

10. ஒருதலைக் காதலைத் தந்தே - வாத்தி

11. கண்ணான கண்ணே நீ - Thugs

12. காற்றோடு பட்டம் போல - அயோத்தி

13. நல்லவர்கள் கூடும் போது - அயோத்தி

14. ராவடி - பத்து தல

15. நர நர நகர - பத்து தல

16. நினைவிருக்கா - பத்து தல

17. அக நக - பொன்னியின் செல்வன் 2

18. ஆழிமழைக் கண்ணா - பொன்னியின் செல்வன் 2

19. சின்னஞ்சிறு நிலவே - பொன்னியின் செல்வன் 2

20. வா தாரகையே - திருவின் குரல்

21. ஓர் காதல் கனா - பர்ஹானா

22. ஸாரா வா முன்னாலே - பர்ஹானா

23. நான் காலி - குட் நைட்

24. ஐயிரண்டு திங்களாய் - தண்டட்டி

25. நெஞ்சமே நெஞ்சமே - மாமன்னன்

26.  நெஞ்சமே நெஞ்சமே (தேவா) - மாமன்னன்

27. ராசாக்கண்ணு - மாமன்னன்

28. ஜிகு ஜிகு ரயில் - மாமன்னன்

29. மலர்தான் விழுந்தது - அநீதி

30. எங்கூரு காத்தாயி - அப்பத்தா

31. வா நு காவாலயா - ஜெய்லர்

32. எதுதான் இங்க சந்தோஷம் - லக்கி மேன்

33. அன்னை தந்தை - Are you ok baby?

34. ஜிங்க்ர டங்கா - Modern Love Chennai

35. நெஞ்சில் ஒரு மின்னல் - Modern Love Chennai


கானா பிரபா 

21.12.2023

Thursday, November 9, 2023

"விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" பாடகர் அசோக்


விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று 

யார் கதை எதுதான் என்று நீ தான் அறிவாயோ 

என் கண்ணே.....

https://www.youtube.com/watch?v=my8E3eh4mH0

இந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது "அபஸ்வரம்" ராம்ஜி அவர்களது பதிவு ஒன்றைப் படித்த போது.

"என்னுடைய "அபஸ்வரம் " குழுவின்

அரங்கேற்றத்திலிருந்து (1976) எங்களுடன் இணைந்த

மிகத் திறமையான பாடகர் அசோக் . இரண்டு நாட்களுக்கு முன் இவர் Cardiac Arrest காரணமாக மரணித்தார் என்பது பெரும் துயரச் செய்தி . அகில இந்திய வானொலியில் இணைந்து பல வருட சேவைக்குப்பின் - மதுரை நிலைய இயக்குனராக ஒய்வு பெற்றவர்."

என்று அபஸ்வரம் ராம்ஜி சார் குறிப்பிட்டிருந்தார்.

“விடுகதை ஒரு தொடர்கதை” படத்தில் கங்கை அமரன் இசையில் முன் சொன்ன அந்தப் பாடலை எஸ்பிபி, எஸ்.ஜானகியோடு எம்.அசோக் என்ற பாடகர் பாடியிருப்பார். கங்கை அமரனால் தான் இப்படியொரு பாடகர் அப்போது அடையாளப்பட்டார்.

சொற்பமே பாடினாலும் மிகச் சிறப்பான பாடல்களை அவர் பாடியிருக்கிறார் என்பதற்கு இன்னொரு உதாரணம் “மஞ்சள் நிலா” படத்தில் இளையராஜா இசையில் 

“காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர்க் கவிதை கேட்டு”

https://www.youtube.com/watch?v=Bgl-VnjWfsU

என்று இன்னொரு சோகராகம் மீட்டினார்.

தொண்ணூறுகளில் பாலபாரதி அவர்களின் இசையிலும் இன்னொரு சோக ராகம் பாடினார்.

“அமராவதி”யில் வந்த “உடல் என்ன உயிரென்ன” https://www.youtube.com/watch?v=MRlccfL5KZs

என்று அமைந்த பாடலது. 

அதற்கு முன்பே பாலபாரதிக்கு தலைப்படமாக அமைந்த “தலைவாசல்” படத்தில் சி.எஸ்.ஜெயராமன் குரலில் அமைந்த 

“வான் நிலவே வெண் பனி நிலவே”

https://www.youtube.com/watch?v=RNx9cx5Px4U

என்று அச்சொட்டாகக் கொடுத்திருப்பார்.

திரையிசையிலும் வாழ்ந்தவர் சிலர் மின்னி மறைந்தவர் பலகோடி.

அப்படி ஒருவராக விடை பெற்று விட்டார்.

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

கானா பிரபா

09.11.2023


Tuesday, November 7, 2023

மாடப்புறாவே வா..... ஒரு கூடு கொள்வோம் வா......💛❤️💚💛


பால்ய காலத்தில் மனதில் ஊன்றிப் பதியம் போட்ட இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதை அள்ளி வழங்கிய இலங்கை வானொலிக் காலத்தின் பொற்”காலை” நினைவுகள் தானாக எழுந்து பெருமூச்சைக் கொடுக்கும்.

25 வருட வானொலி வாழ்வுக்கு உரம் போட்டவை இந்தப் பாடல்களை வழங்கியவர்கள் அன்றைய வானொலிக்காரத் துரோணாச்சாரியர்கள். அவர்களால் தான் இசையமைப்பாளர் பேதமின்றி எல்லோரையும் ரசிக்க முடிந்தது

“மாடப் புறாவே வா” இதன் இனிமையைக் கரைத்து விடும் அவலம் நிரம்பிய கதையோட்டம் கொண்டது “மதனோற்சவம்" மலையாளச் சித்திரம். அப்படியே “பருவ மழை” என்று தமிழில் வந்து அந்தக் காலத்து யாழ்ப்பாணத் திரையரங்கையும் தட்டிய ஞாபகம்.

கமலைத் தங்கள் தேசத்தவர் என்று இன்றும் உரிமையெடுக்கும் கேரளத்தவர் மண்ணில் அவர் புடமிடப்பட்ட காலத்தில் வந்த படங்களில் ஒன்று.

மலையாளிகளின் இரசனையே விநோதமானது என்பதற்கு இதுவுமொரு சான்று. இல்லையா பின்னே?

இந்தியாவின் ஒரு அந்தத்தில் இருக்கும் மேற்கு வங்கம் தந்த சலீல் சவுத்ரியை இன்னொரு அந்தத்தில் இருக்கும் தம் மண்ணில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சூப்பர் சிங்கர்களில் சலீல் சவுத்ரி இல்லாத வருஷங்கள் இல்லை எனலாம். அவ்வளவுக்கு உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.

“மாடப் புறாவே வா ஒரு கூடு கூட்டான் வா”

https://www.youtube.com/watch?v=S3xNcBXDiQE

மலையாள அசலைக் கேட்டாலேயே ஏதோ தமிழ்ப்பாட்டுக் கேட்குமாற்போல இருக்கும். ஓ.என்.வி குரூப்பின் பாடலை கூகுளில் மொழி பெயர்த்தாற் போல அன்றி, ஒரு நிலைக்கண்ணாடியை வைத்துத் தமிழாக்கியது போல கவியரசு கண்ணதாசன் கண்ணதாசன் தமிழாக்கியிருப்பார்.

இந்தப் படம் ஹிந்திக்குப் போன போதும் அங்கேயும் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் தான் குரலாகியிருப்பார்.

அங்கு சென்றும் https://www.youtube.com/watch?v=MMFAKOUFQV8

அதே ஜீவனைக் கொடுப்பார்.

இசையமைப்பாளர் சலீல் செளத்ரியின் இசைக் கோப்பில் சிக்கல் இராது. சலசலப்பில்லாத தெளிந்த நீரோடை போல இருக்கும்.

மத்திமமான ஸ்தாயியில் பயணிக்கும் அதற்குள் ஏராளம் உணர்வலைகளைப் புதைத்து வைத்திருக்கும்.

“மாடப் புறாவே வா” பாடலைக் கேட்கும் போதெல்லாம் குடும்பமாக இருந்து வானொலி கேட்டு மகிழ்ந்த, அந்த அழகிய காலம் மிதந்து வந்து மனதில் இலேசானதொரு வலியைக் கிளப்பி விட்டுப் போகும்.

நீர் வயல் பூக்கள் போல் நாம் பிரிந்தாலும்

நேர் வழியில் கண்ணே நீ கூட அரும்பு...

பாட விரும்பு...

மடியும் வரை எனது புறாவே..

தேன் வசந்த காலம்

கை நீட்டி, கை நீட்டி

வரவேற்பதால் நீ வா...

மாடப்புறாவே வா...

ஒரு கூடு கொள்வோம் வா..❤️

https://www.youtube.com/watch?v=JNGD8ibrXWw

கானா பிரபா


Thursday, October 26, 2023

மனோவை ரசித்த காலங்கள் ❤️


வாழ்த்துச் சொல்லுங்கள்

வாழச் சொல்லுங்கள்

வண்ண நிலவை வாழ்த்தச் சொல்லுங்கள்

https://www.youtube.com/watch?v=JBNW0yl5HNY

இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்தக் கால ஆல் இந்தியா ரேடியோ காலத்துக்குப் பறந்து போய் யாழ்ப்பாணத்தில் உட்கார்ந்து விடுவேன். அப்பாவின் சன்யோ டேப் ரெக்கார்டரில் இருந்து சென்னை வானொலி நிலையத்தின் அந்த ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பத்தில் இருந்து இந்தப் பாட்டுக் கேட்குமாற்போல இருக்கும்.

இசைஞானி இளையராஜாவின் பொற்காலப் பாடகர்களில் ஒருவராக நமக்கெல்லாம் பாடகர் மனோ அறிமுகமான சமயம், நாமும் அதி தீவிரப் பாடல் விரும்பிகளாகக் களத்தில் இறங்கிய சூழல் அது.

அதனால் தான் இளையராஜாவைத் தாண்டி மனோ பாடிய பாடல்களைத் தேடித் தேடி ரசிக்க முடிந்தது. அதற்கு முதற்காரணமே மனோவை அறிமுகப்படுத்திய ராஜா தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இளையராஜா இசையில் மழை போலக் கொட்டிருந்த மனோ

சந்திரபோஸ் இசையில் முதன் முதலில் பாடிய “பூ பூப்போல் மனசிருக்கு” https://www.youtube.com/watch?v=DPcxnoJYfYQ

இடம் அறிந்து பொருத்தமாக ரஜினிக்குப் போனது. 

தெலுங்கில் ரஜினி படங்களுக்குக் குரல் கொடுப்பது மனோ தானே?

அது போல் கமல் படங்கள் என்றால் எங்கள் எஸ்பிபி.

“நான் பாடும் பாடல் நீயல்லவா

 நீயே என் வாழ்வின் நிழலல்லவா

 நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா?”

https://www.youtube.com/watch?v=pY7vMkmHDPY

தேடல் மிக்க இசை ரசிகர்கள் இசையமைப்பாளர் பாரபட்சமில்லாமல் கேட்டு ரசிப்பார்கள் என்பதற்கு இந்தப் பாடல் ஓர் உதாரணம்.

சிறைக்கதவுகள் படம் வந்ததும், ஜெயதேவ் என்ற இசையமைப்பாளர் இருந்ததும் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ இப்படி ஒரு அருமையான பாடலைக் கொடுக்காமல் போயிருந்தால்?

ஏழு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பாடலை நான் பகிர்ந்த போது அதற்கு வந்த பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள் ஏதோ புதையலைத் தேடிய புளகாங்கிதம் கொண்டிருக்கிறார்கள்.

அதுதான் மகத்தான இசையின் சக்தி.

“புள்ள புள்ள வயசுப்புள்ள

பூட்டிக்கிட்டேன் மனசுக்குள்ள”

https://www.youtube.com/watch?v=od-fQz12f44

பாடலாசிரியர் கங்கை அமரன் இசையில் எத்தனை தித்திக்கும் பாடலைப் பாடியவர், அதே கங்கை அமரன் இசையில் இந்தக் “கோயில் மணியோசை” தித்திப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.

அம்மம்மா அசத்துறீங்களே

நீங்க ஆளையும் தான் மயக்குறீங்களே

https://www.youtube.com/watch?v=f8ZVjq4pQTQ

என் சித்தியின் மகன் சுதாவுக்குப் பிடித்த பாட்டு என்பதால் எனக்கும் பிடித்துப் போனது. சைக்கிள் டைனமோ சுத்திப் பாட்டுக் கேட்ட காலத்தில் வந்ததால் இந்தப் பாடலைக் கேட்டு ரசித்த “வலி” இன்னும் நெஞ்சில் நீங்காதிருக்கும்.

இசையமைப்பாளர் ராஜேஷ்கண்ணா “ நான் வளர்த்த பூவே” படத்துக்கு இசையமைத்த போது ஒவ்வொரு பிரபல பாடகர்களுக்கும் தனித்தனியாக இசை விருந்து கொடுத்திருப்பார் அப்படி மனோ கணக்கில் சேர்ந்த பாட்டு இது.

“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடல் பிறந்த போது மெல்லிசை மன்னரின் வாத்தியக்காரர்களாக இருந்தவர்கள், பின்னர் வாத்தியாரின் கலையுலக வாரிசுவின் “என் ரத்தத்தின் ரத்தமே” படத்தில் அதே பாடலை மீளுருவாக்கம் செய்தாலும் மிகவும் ரசிக்கும் படி கொடுத்தார்கள் அதுதான் சங்கர் – கணேஷ்.

அப்படி அவர்களின் இசையில் மனோ பாடியதில் எனக்குப் பிடித்த ஒன்று

“இந்த ராகமும்”

https://www.youtube.com/watch?v=GK--UVLYLpM

தன் குரு ஸ்தானத்தில் இருந்து கடவுள் உயரத்தில் வைத்திருக்கும் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள் மீண்டும் இணைந்த “எங்கிருந்தோ வந்தான்” படத்துக்கு முதலும் முடிவுமாக மனோவுக்கும் ஸ்வர்ணலதாவுக்கும் “அந்த ஶ்ரீராமனும்” பாடல் பாடும் பேறும் கிட்டியது.

புது வசந்த அலையில் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் Rajkumar Sa கைவண்ணத்தில் கொடுத்த “வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே” https://www.youtube.com/watch?v=QC9CbhoaH1I

அந்தப் படத்தின் மற்றைய பாடல்களோடு கூட்டணி போட்டு ஜெயித்தது.

மனோவை ஒரு துள்ளிசைப் பாடகராக மட்டும் அதிகம் பயன்படுத்தாமல் ஒரு அழகான இறை பக்திப் பாடலிலும் கனிவை எழுப்ப வைத்ததில் சிற்பி அவர்களின் 

“சரவண பவ என்னும் திருமந்திரம்” எப்போது கேட்டாலும் நெஞ்சை நிறைக்கும்.

https://www.youtube.com/watch?v=KkruAXBXXz8

அது போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏராளம் பாடினாலும் அவரின் ஆரம்ப கால வசந்தம் “ஹலோ ஹலோ” https://www.youtube.com/watch?v=183ZJm9VtbU மனோ குரலில் கேட்கப் பிடித்தமானது.

மல்லிகைப் பூக்களை மெல்லிய உந்தன்

புன்னகை சிந்துதடி

மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்

கண்ணே.. உன் கைகளடி

https://www.youtube.com/watch?v=6QlClbSxzb8

“சின்னஞ்சிறு பூவே உன்னைத் தொடும் போதே 

மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே”

பாடலுக்கெல்லாம் தனிப்பதிவே அர்ப்பணித்துள்ளேன் அவ்வளவுக்குத் தேனிசை தடவிய தேவா இசையில் மனோவின் குரல் ஜானகியம்மாவுடன் இனிக்கும். இதைக் கேட்கும் போது அந்தத் தொண்ணூறுகளின் வசந்தம் கண்களில் பனிக்கும்.

அந்தப் பாடல் ரசனைக்குப் பின்னால் ஒரு வலி நிறைந்த சோக வரலாறு உண்டு, அதைப் பின்னால் சொல்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மனோ

கானா பிரபா

26.10.2023

Thursday, October 5, 2023

80களின் இளைஞர்கள் நேசித்த இளையராஜா அல்லாத ஜேசுதாஸ்கள் ❤️


“தேவதாஸ் தாடியா?

இல்லை

ஜேசுதாஸ் தாடியா?”

அந்தக் காலத்து template கேள்வி இதுவாக இருக்கும். ஆனால் ஜேசுதாஸே தேவதாஸ் ஆகி சம்பவம் பண்ணியிருப்பார். மன இளகலை ஜேசுதாஸ் அளவுக்கு மென்மையாகக் கையாள யாரால் முடியும்?

80 களில் இள வட்டங்களாக், வாலிப விடலைகளாகத் திரிந்த அண்ணாமாருக்கு அந்தக் காலத்து ரெக்கோர்டிங் சென்டர்கள் கோயில்கள் எனலாம். இளையராஜா மட்டுமன்றி வகை தொகையாக எல்லா இசையமைப்பாளர்களையும் கொண்டாடிக் கொண்டிருக்க அவை வகை செய்தன. தமிழகத்தில் இருந்து இசைத்தட்டுகள் வரும் போது அவை இளையராஜா அது இது என்று பேதம் பார்ப்பதில்லை. அதனால் ரெக்கோர்டிங் சென்டர் காரர்களும் தம் கையிருப்பை விளம்பரப்படுத்தி ஆட்களை இழுக்க இவ்விதம் இன்ன பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை ஒலிபரப்பவும் அவை முகப்பில் இருக்கும் பென்னம் பெரிய ஸ்பீக்கர்களின் வழியே பீறிடும்.

அப்படியாக அந்த அண்ணன்மாரை எண்பதுகளில் சோக ராகம் பாட வைத்த கே.ஜே.ஜேசுதாஸுன் பாடல் தொகுப்பு இது

1. ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை இசை : எஸ்.ஏ.ராஜ்குமார் படம் : மக்கள் ஆணையிட்டால்

https://youtu.be/E9_AvSSyHwA?si=z_8tbOJz8S0mzmdZ

2. அழகான புள்ளிமானே - இசை : மனோஜ் - கியான் படம் : மேகம் கருத்திருக்கு 

https://youtu.be/trBiM2M4afQ?si=hZIBlFVb3tQljsqe

3. இன்னும் எந்தன் காதில் எதிரொலி - இசை: சங்கர் - கணேஷ் படம் : சட்டத்தின் திறப்புவிழா

https://www.youtube.com/watch?v=xXkKoHgpoO0

4. என் தெய்வ வீணையே - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்  படம் : தாலி தானம்

https://youtu.be/li08_dhR-uo?si=6_yht3oEoQ_j1Fqp

5. நிலை மாறும் உலகில் - இசை மனோஜ் கியான் படம் : ஊமை விழிகள்

https://youtu.be/wFUQHrQ6ILw?si=ZlaoBjNc26srSWS9

6. ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன் இசை : தேவேந்திரன் படம் : காலையும் நீயே மாலையும் நீயே

https://youtu.be/6Oz360EdiXw?si=8v7TUO0Qu_DQJLRx

7. சொந்த சுமையைத் தூக்கி இசை  : கங்கை அமரன் படம் : என் தங்கச்சி படிச்சவ

https://youtu.be/figV0WQNtxc?si=_sZCBhVjmEgdQj1o

8. வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் இசை : தேவேந்திரன் படம் : உழைத்து வாழ வேண்டும்

https://youtu.be/fo0LWd2OkzA?si=ZZgnDmIqQVC5hM0R

9. வைகைக் கரை காற்றே நில்லு இசை : டி.ராஜேந்தர் படம் : உயிருள்ளவரை உஷா

https://youtu.be/gFIsmUX_dD8?si=gs5mHCfAx0QZWDck

10. வளர்பிறை என்பதும் இசை : சங்கர் - கணேஷ் படம் : திருமதி ஒரு வெகுமதி

https://youtu.be/oIazIwtD2DM?si=CEKehkv02H9qE_Ev

11. ஒரு பொம்மலாட்டம் நடக்குது இசை : எம்.எஸ்.விஸ்வ நாதன் படம் : சிவப்பு மலர்கள்

https://youtu.be/9EFTUgnxk6M?si=DpXSKaGk68IoWK3B

12. மன்னிக்க மாட்டாயா இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் படம் : ஜனனி

https://youtu.be/m3kLdFaiiYY?si=8iBS32UGv3edaheL

13. பாடி அழைத்தேன் இசை : ரவீந்திரன் படம் : ரசிகன் ஒரு ரசிகை 

https://youtu.be/cdiC4LdMIW4?si=J9Qf-N_oBe76yIk_

14. பூங்காற்றே பூங்காற்றே இசை : கங்கை அமரன் படம் : நாளெல்லாம் பெளர்ணமி

https://youtu.be/U-_J0cxaph8?si=K1WjSSfuue4CLCyb

15. என் கோயில் இங்கே  இசை : வி.எஸ்.நரசிம்மன் படம் : புதியவன் 

https://youtu.be/mIFT82nWaEs?si=awRQJnP3k9t-73cf

தொகுப்பு : கானா பிரபா

16. ஒரு புல்லாங்குழல் ஊமையானது இசை : டி.ராஜேந்தர் படம் : உனக்காக ஒரு ரோஜா

https://youtu.be/XoIgKMSEQSY?si=TO4y9BrXCdqUvaP8

17. மனமே மயங்காதே இசை : ரவீந்திரன் படம் : கண்மணியே பேசு

https://youtu.be/xDc-eI5ZIgo?si=PWYQz7acpoli8OtW

18. வாழ்வே மாயம்  இசை : கங்கை அமரன் படம் : வாழ்வே மாயம்

https://youtu.be/mIDjMbOfJWg?si=CRp2wfGDeAAb7iHm

19. இங்கே நாம் காணும் பாசம் இசை : சங்கர் - கணேஷ் படம் : பொய் முகங்கள் 

https://youtu.be/kiQJKOCreVg?si=8U93YbVFccoVQuPw

20. காதல் காயங்களே இசை : தேவேந்திரன் படம் : ஆண்களை நம்பாதே

https://youtu.be/pXPZ-PlQXwo?si=WDCQY0LFFQ1A9Qg4

21. ஒரு காலம் வரும் இசை: சங்கீதராஜன் படம் : பூவுக்குள் பூகம்பம்

https://youtu.be/4ROZfIif3bs?si=QnNSZXI06fw3hrvb

21. எந்த கதை சொல்ல இசை : சந்திரபோஸ் படம் : தாய் மேல் ஆணை 

https://youtu.be/hgYtLCe_3LQ?si=fFt5E9mdTsJUR_ZG

22. ஏன் தான் என்னோடு இசை : சங்கீதராஜன் படம் : என் கணவர்

https://youtu.be/vwjfj8slXIQ?si=j-o4w1abp2MFTM_D

23. வானம் அருகில் ஒரு இசை : சங்கர் - கணேஷ் படம் : நியாயத் தராசு

https://youtu.be/lv42u3-uSmM?si=TSc5WRRF8juyWhvS

போனஸ்

ஏழிசை கீதமே இசை : ரவீந்திரன் படம் : ரசிகன் ஒரு ரசிகை

https://youtu.be/lTQG4nV43XU?si=1PKA_NrEmBq5AgyD

ஞாபக இடுக்குகளில் இருக்கும் பிரபல பிற இசையமைப்பாளர்களின் தொகுப்பு இது.

இவற்றைப் பகிரும் போதே

ஆகாயம் கொண்டாடும் பூபாளமே,

ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு,

சின்னத்தங்கம் எந்தன் செல்லத்தங்கம்,

பொன்வானில் மீனுறங்க,

என்று மெல்ல மெல்ல 90ஸ் சோகப் புதையலுக்கும் அழைத்துப் போவார் ஜேசுதாஸ். அவற்றை இன்னொரு தொகுப்பில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

இங்கே பகிரும் தொகுப்பை வானொலிப் படைப்பாகவோ அன்றி இன்ன பிற குழுமங்களில் பகிர விரும்புவர்கள் மறவாமல் செய்ய வேண்டியது 👇

பாடல் தொகுப்பு : கானா பிரபா



Friday, September 29, 2023

💛💛💛இளவட்டம் கை தட்டும் டும் டும் ❤️❤️❤️

கனவுக்குள் கண்ணுக்குள்

வந்தாயோ…

மனதுக்குள் நெஞ்சுக்குள்

நின்றாயோ…

“மை டியர் மார்த்தாண்டன்” இசைப் பேழையைக் கேட்டாலேயே அது ஒரு உற்சாக பானத்தை (energy drink) கொடுத்த புத்துணர்வைக் கொடுக்கும்.

ஒவ்வொரு பாடலைத் திறந்தால் Coke போத்தலின் மூடியைத் திறந்தால் பொங்கும் நுரைப் பிரவாகம் தான்.

ஒரு சமயம் “இளவட்டம் கை தட்டும் டும் டும் (எஸ்.ஜானகியுடன் எஸ்பிபி) பாடிய பாடலை எஸ்;பி.சரண் சிலாகித்துப் பாடிய போது 

“அடடே நல்ல பாடலாக இருக்கிறதே”

என்று SPB சொல்லவும், இளையராஜா இசையில் எஸ்பிபி தான் பாடிய விஷயத்தைச் சரண் சொன்னாராம். அப்போது கூட

“என்னமா இசையமைச்சிருக்கான்” என்று ராஜாவைத் தான் புகழ்ந்து தள்ளினாராம் SPB.

நமக்கெல்லாம் இந்தச் செய்தி அதிசயமாக இருக்கும் என்னடா இவ்வளவு நல்ல, பிரபலமான பாடலெல்லாம் மறந்துட்டாரா என்று. ஆனால் இது போலவே “அன்பே ஆருயிரே” (செவ்வந்தி) பாடலை சூப்பர் சிங்கரில் ஒரு சமயம் பையன் ஒருவன் பாடி முடித்ததும் இந்தப் பாட்டு நான் பாடினேனா என்று ஆச்சரியம் பொங்க SPB கேட்டிருப்பார்.

டக் டுடு டக் டக் டுடு டக் இசையோடு தொடரும்

அந்த ஆரம்பக் கூட்டுக்குரல்களே பூவில் மிதக்கும் தேனீக்கள் போல.

SPB & ஜானகி என்ற இரண்டு அசுரர்கள் பாடும் போது கேக் இல் கிரீம் பூச்சுப் போல பின்னால் ஒட்டிக் கொண்டு ஒப்புவிக்கும் கூட்டுக் குரலோசை ❤️

இடையில் SPB யின் வேலையைப் பறித்துத் தானே சிரித்து வைக்க, பதிலுக்கு SPB 

பெண்ணின் நாணம் விடுமா? என்று பாடும் போது தொனிக்க விடும் ஒரு எள்ளல்தனமான சங்கதி

சொர்க்கமய்யா இதையெல்லாம் அனுபவித்துக் கேட்டால்.

இளவட்டம் கை தட்டும் போலவே அதே சந்தத்தை வைத்து வார்த்தை விளையாட்டு போட்டிருப்பார் கவிஞர் வாலி.

பாடலாசிரியரே ராகங்களின் திறன் அறிந்தவராகவும் இருப்பதன் இலாபமென்ன?

கல்யாணி ராகம் தானய்யா இந்தப் பாட்டு என்று போகிற போக்கில் நிறுவி விடுவார். 

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடலில் ஒரு மெது நடையாகப் பயணித்த கல்யாணியா அதே கூட்டணிக் குரல் + இசையோடு துள்ளித் துள்ளிப் பாய்கிறாள்? ஆகா 😍

வாத்திக்கருவிகளில் மட்டுமல்ல ராகங்களைக் கையாள்வதிலும் புதிய புதிய உத்திகளை நிறுவ முடியும் என்பதற்கான காலத்தின் சாட்சி நம் இசை ஞானியார் ❤️

https://youtu.be/LDB3Z8RD7dI?si=C_5GCMsB8LHYu3Fx

குரல் வண்ணம் கொஞ்சட்டும்

கல்யாணி

❤️❤️❤️

கானா பிரபா

பின்னணிப் பாடகி B.S.சசிரேகா பேட்டி நிறைவுப் பாகம்


https://www.youtube.com/watch?v=EunsBl204u0


இந்தப் பகுதியில் கமல்ஹாசனோடு சேர்ந்து பாடிய பாடல், எம்.ஜி.ஆர் படத்தில் பாடிய கதை, T.ராஜேந்தர், ஆபாவாணன் படங்களிப் பாடிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.


Monday, September 25, 2023

SPB நினைவில் மூன்றாண்டுகள்

 


பக்கத்தில் 

நீயும் இல்லை…..


ஒருவர் நம்மோடு இருக்கும் நேரத்தை விட இல்லாத நேரத்தில் தான் இன்னும் இன்னும் நினைக்கப்படுவார்.

அது நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள் மட்டுமன்றி நம்மை உயிரூட்டியவர்களுக்கும் சாலப் பொருந்தும். அப்படி ஒருவர் தான் எங்கள் SPB.


அவரின் இன்மையில் தான் அவர் பாடிச் சென்ற அதுவரை கேட்காத பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டேன் ட்ரங்குப் பெட்டியைக் கிண்டிக் கிளறிப் பழைய புகைப்பட ஆல்பத்தைத் தேடியெடுத்துக் கேட்பது போலவொரு சுகத்தைக் கொடுப்பார்.


ஒரு பாடலை எப்படி

மனம் திறந்து பாட வேண்டும்

இன்னொரு பாடலை எப்படி

மனசுக்குள் பாட வேண்டும்

என்று பாடமெடுப்பார்.


இசைக் கலைஞர்கள், தன் முன்னோர்கள் தன் சமகாலத்தவர் என்று ;


SPB அளவுக்கு 

இசையமைப்பாளர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிய யாருமே இல்லை,


SPB அளவுக்கு 

இசைக் கலைஞர்களைப் பற்றி விலாவாரியாகப் பேசிய யாருமே இல்லை,


SPB அளவுக்கு 

ஒவ்வொரு பாடல்களின் பிறப்புக்கும் பின்னால் உள்ள கதையை யாரும் அதிகம் பேசியதில்லை.


அவர் நம்மோடு இல்லாத இந்தச் சூழலிலும் SPB விட்டுச் சென்ற அவரின் பாடல் நுணுக்கங்களை எத்தனை இசைக் கலைஞர்கள், பாடகர்கள் ஆழமாக ஆய்ந்து பேசுகிறார்கள் என்பது கூடக் கேள்விக்குறியே.


“இசைஞானி இளையராஜா திரையிசைத் துறையில் என்னவெல்லாம் உத்திகள், நுணுக்கங்கள் உண்டோ அவற்றையெல்லாம் நிகழ்த்திக் காட்டி விட்டார், அவர் ஒரு முழுமையான பல்கலைக்கழகம்” 

என்று அண்மையில் சாய் வித் சித்ராவில் இசையமைப்பாளர் ரகுநந்தன் சொன்னார் இப்படி.

அதை அப்படியே பாடகர் உலகத்தில் பொருத்தி விட்டால் சர்வ இலட்சணமும் SPB க்கே பொருந்தி நிற்கும்.


ஒவ்வொரு பாடல்களிலுன் அந்தந்த ஜீவனைக் கொடுக்கத் தன் ஜீவனை அவர் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.


“ஒரு பாடல் பாட வந்தவர் 

நம் பாடல் ஆகிறார்”


SPB யின் ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் அவர் உயிர் பெற்று நம்முள் ஊடுருவுகிறார்.


உயிர் பிரிந்தாலும் 

நடமிடுவேனே 🙏

SPB ❤️ 


கானா பிரபா

25.09.2023

Friday, September 22, 2023

❤️❤️❤️ பாடகி B.S.சசிரேகா பேட்டி ❤️❤️❤️ பாகம் 3


இந்தப் பகுதியில் லட்சுமி படத்தில் கிடைத்த வாய்ப்பும், கிடைக்காத பாடலும்

"வாழ்வே மாயமா" பாடலின் நீட்சிக்காக இளையராஜா கையை நீட்டிக் காட்டிப் பாடல் பயிற்சி கொடுத்த நிகழ்வு, 

மலேசியா வாசுதேவனோடு பாடிய அனுபவம்,

சங்கர் - கணேஷ் கூட்டணியில் பாடியது

போன்ற நினைவுகளைப் பகிர்கின்றார்.

பேட்டியைக் கேட்க

https://www.youtube.com/watch?v=yjLj7mEM_o0

இரவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" ❤️❤️❤️ பாடகி சசிரேகா பேட்டி பாகம் 2


இரவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட

❤️❤️❤️

"விழியில் விழுந்து இதயம் நுழைந்து"

❤️❤️❤️

பாடகி சசிரேகா பேட்டி பாகம் 2

https://www.youtube.com/watch?v=_o3MITOK1Vg&t=21s

இந்தப் பகுதியில் தனக்கு விருது மேடை ஒன்றில் கிடைத்த ஏமாற்றமும், கூட்டுப் பாடகியாகப் பிரபல பாடகிகளோடு பாடிய போது கிட்டிய திருப்தியையும் பகிரும் சசிரேகா, "விழியில் விழுந்து இதயம் நுழைந்து" பாடல் பிறந்த கதையையும் சொல்கிறார் கேளுங்கள்.

Tuesday, September 19, 2023

"என்னுயிர்த் தோழன்" பாபு


கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் அது “என்னுயிர்த் தோழன்” பாபு விஷயத்தில் கடந்த 32 வருட சாட்சியாக இருந்தது.

புகழை உழைக்கக் கொடுத்த அதிக பட்ச விலை அதுதான்.

என்னுயிர் தோழன் திரைப்படம் படமாக்கப்படும் வேளை கல்கியில் தொடராக வெளிவந்தது. பாரதிராஜாவின் எழுத்தில் வந்த இப்படம் இவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி அரசியல் வாழ்வில் ஒரு சாதாரண தொண்டன் எப்படி ஏமாற்றப்படுகின்றான் என்பதை நடப்பு அரசியலோடு பொருத்தி எடுத்திருந்தார். 

பாபு அப்பட்டமாக “தர்மா” என்ற பாத்திரமாகப் பொருந்தி இருப்பார்.

பாரதிராஜாவின் மனைவி முன்னர் ஒரு பேட்டியில் தன் கணவர் இயக்கிய படங்களிலேயே என்னுயிர் தோழனே பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளம் படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். விக்ரமனின் “பெரும் புள்ளி” மற்றும், “தாயம்மா” போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் அவர் டூப் போடாமல். நடித்து விபத்தில் சிக்கி இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் 32  வருடங்களாகப் படுக்கையில் இருந்தார்.




பாபு குறித்து தன் வாழ்க்கைத் தொடரில் பாரதிராஜா பேசியது

https://youtu.be/y1ndTbAqGxs?si=PLP7EhZM90GYmPCg

இடையில் கொஞ்சக் காலம் உடல் நிலை தேறியது போல இருந்த போது பாரதிராஜா மீண்டும் உதவி இயக்குநராக அணைத்துக் கொண்டார். ஆனால் காற்று ஊதிய பலூன் நிலையாகிப் போனார்.

தன் அண்ணன் பாபுவைக் கவனிப்பதற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த தம்பியும் திடீர் அகால மரணம். தாயின் அரவணைப்பில் பாரதிராஜா போன்ற நேசங்களின் உதவியோடு காலத்தை வலியோடும், வேதனையோடும் கழித்தார். பொன்வண்ணன்  மிக நெருக்கமாகப் பழகியவர் பாபுவின் வாழ்க்கையை ஆவணப் படமாக எடுத்தும் பின்னர் வேறு காரணத்தால் வெளியிடவில்லை.

“என்னுயிர்த் தோழன்” பாபு ஆத்மா வலி கடந்து ஆன்மா சாந்தியடையட்டும் 🙏

Friday, September 8, 2023

💚💚💚பின்னணிப் பாடகி B.S.சசிரேகா 💚💚💚💚 பிறந்த நாள் இன்று ❤️❤️❤️

70 களிலும், 80 களிலும் தமிழ்த் திரையிசை உலகில் கோலோச்சிய, காலத்தால் மறக்கவொண்ணாப் பாடகி சசிரேகா அவர்களது நீண்ட நெடும் திரையுலகப் பயணம் பொன்விழாவைக் கடந்தது.

இந்த நிலையில் அவரின் விரிவான முழு நீளப் பேட்டியை ஒவ்வொரு பாகங்களாகப் பகிரவுள்ளேன்.

அவர் மனம் திறந்து பகிரும் பல அரிய தகவல்களைத் தொடர்ந்து கேளுங்கள். 

சசிரேகா பேட்டி பாகம் 1 ஐக் கேட்க

https://www.youtube.com/watch?v=-vCmwMwYzGk

08.09.1950 ஆம் ஆண்டு பிறந்த எங்கள் பின்னணிப் பாடகி B.S.சசிரேகா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா

Wednesday, August 23, 2023

பாடகராகப் பரிணமித்த இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார்



“வாராரு வாராரு அழகர் வாராரு”

 https://www.youtube.com/watch?v=tVRV2CImzBA

கேட்டவுடனேயே அப்படியே மதுரை சித்திரைத் திருவிழாவில் கொண்டு போய் இருத்தி மெய் சிலிர்க்க வைத்து விடும் பாட்டு அது. “கள்ளழகர்”பாடலை இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவாவும், இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாருமாக இணைந்து பாடிய அந்தப் பாடல் சித்திரைத் திருவிழாவில் நிலைத்துப் போன அழியாச் சொத்தாகி விட்டது. 

பாடலைப் பிரசவிக்கும் இசையமைப்பாளரே அவர் குரலில் பாடுவதைக் கேட்பது என்பது எனக்கு உவப்பானதொரு விடயம்.

அந்த ஜீவனின் மூல நாடியை அப்படியே பகிர்ந்தளிக்கும் தன்மையை அவர்தம் பாடல்களில் உய்த்துணரலாம்.

 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது தொகையான பாடல்கள் அவற்றுக்குச் சான்று பகரும் முன்னோடிகளில் ஒன்று.

“ஏ புள்ள கருப்பாயி 

உள்ள வந்து படு தாயி”

அந்தக் காலத்தில் பட்டி தொட்டியெங்கும் வியாபித்த பாடல்.

ஒரு அறிமுக இசையமைப்பாளர், தானே பாடல் எழுதிப் பாடிய அந்தப் பாடல் எடுத்த எடுப்பிலேயே கடைக்கோடி ரசிகன் வரை எட்டியது. அவர் தான் “இசை வசந்தம்” என்ற எஸ்.ஏ.ராஜ்குமார்.

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டு விளங்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த ஆண்டோடு 35 ஆண்டுகளை இசையமைப்பாளராகத் தொட்டு நிற்கின்றார்.

“பிரியவதனா என்னை மறந்து விடாதே” (ஒரு வழிப்பாதை)

https://www.youtube.com/watch?v=Mz0WIomCaDI

எஸ்.ஏ.ராஜ்குமார் குரல் இன்றும் ஈழத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும் காதலர் கீதமாய்.

“பூந்தென்றலே ஓடோடி வா” (மனசுக்குள் மத்தாப்பு) பாடலை அப்படியே தன் அலைவரிசையில் பாடிய 

“வா கண்மணி” https://www.youtube.com/watch?v=OEbTisjMtLQ

என் மனசுக்கு நெருக்கமானது.

“கண்ணோரம் கங்கை தான்” (புரியாத புதிர்) எஸ்.ஏ.ராஜ்குமார் வடிவத்தையும் தேடிப் பிடித்துக் கேட்டுப் பாருங்கள். படத்தின் அடி நாதம் ஒலிக்கும்.

“இது முதல் முதலா வரும் பாட்டு 

நீங்க நினைக்கும் தாளம் போட்டு”

https://www.youtube.com/watch?v=TacbLzRyRqY

தன்னம்பிக்கையோடு வரும் புதியவர்களின் வாசல் திறந்து வைத்த மங்கலப் பாட்டு.

ஜனகராஜ் (ஜல் ஜல் பாட்டு வருது), மணிவண்ணன் (அழகா அழகா), வடிவேலு (சந்தன மல்லிகையில்) என்று குணச்சித்திரங்களுக்கும் அச்சொட்டாய்ப் பொருந்திப் போனது எஸ்.ஏ.ராஜ்குமார் குரல்.

இசைக் கலைஞர் செல்வராஜின் மகன் எஸ்.ஏ.ராஜ்குமார் எண்பதுகளில அடையாளப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்பதோடு தானே அக்காலத்தில் பெரும்பாலும் பாடலாசிரியராகவே இரட்டைச் சவாரியும் செய்த வகையில் தனித்துவமானவர். தன்னுடைய இசை வளத்துக்குத் தன் பால்யப் பருவத்தில் டுமீல் குப்பம் மீனவ சமூகத்தோடு வாழப் பழகி அவர்களோடு கடல் படுக்கையில் படகுச் சவாரியில் பாட்டுக் கச்சேரி படித்ததுவும் பயிற்சிக் களனாக அமைந்ததை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார் தன் “ஏ புள்ள கருப்பாயி” பாடலின் பின்னணிச் செய்தியாக.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். 

அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

“முதல் பாடல்” படத்தின் தயாரிப்பாளராகவும், “ஒரு வழிப்பாதை” படத்தில் வில்லனாகவும் கூட எஸ்.ஏ.ராஜ்குமார் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் பாடியளித்த தேர்ந்தெடுத்த பாடல்களைத் திரட்டித் தருகின்றேன்.

1. ஏ புள்ள கருப்பாயி – சின்னப்பூவே மெல்லப் பேசு

2. வா கண்மணி – மனசுக்குள் மத்தாப்பூ

3. இதயம் இதயம் அது பனி போல் – கிருஷ்ணா

4. கண்ணோரம் கங்கை தான் – புரியாத புதிர்

5. ஆகாயத்தில் தொட்டில் கட்டி – பெரும் புள்ளி

6. பிரியவதனா – ஒரு வழிப் பாதை

7. ஜல் ஜல் பாட்டு வருது – மனசார வாழ்த்துங்களேன்

8. ஞானத் தங்கமே – முதல் பாடல்

9. ஆத்தா வராளாம் – வரம் தரும் வடிவேலன்

10. வாராரு வாராரு - கள்ளழகர் 

11. டேய் டேய் பயலே – மக்கள் ஆணையிட்டால்

12. எழுந்தால் மலை – கண்ணுபடப் போகுதய்யா

13. இது முதன்முதலா வரும் – புது வசந்தம்

14. கம்பனுக்குக் கை – மறுமலர்ச்சி

15. மண்ணுக்குள்ள தங்கம் – மறுமலர்ச்சி

16. ஓ பியாரி – பூவே உனக்காக

17. சந்தன மல்லிகையில் – ராஜகாளியம்மன்

18. சிறுவாணி ஊத்தல்லோ – பாட்டாளி

19. சுருளு மீசைக்காரண்டி – வீரன் வேலுத்தம்பி

20. வெட்டவெளி மைதானத்துல – வீரன் வேலுத்தம்பி

21. தமிழ் தமிழ் நான் – திருமதி தமிழ்

22. தாலாட்டும் பூவொன்று – பூவும் புயலும்

23. திருக்குறள் இடையழகி – திருமதி தமிழ்

24. திரு நாளு தேரழகா – சூர்ய வம்சம்

25. தியாகராஜரின் தெய்வ – பெண்ணின் மனதைத் தொட்டு

26. வீரன் சிலம்புக்காரன் – தங்கத்தின் தங்கம்

27. ஏலமலைக்காற்று – ரயிலுக்கு நேரமாச்சு

28. ஒரு பொண்ணு நெனைச்சா – ஒரு பொண்ணு நெனைச்சா

29. வாராயோ மீராவைத் தேடி – இதய ஊஞ்சல்

30. பார்த்ததில்ல – திவான்

31. திருநாள் வந்ததடா – புதுப் புது ராகங்கள்

32. ஒரு ஓரமாப் போங்கடி – பாலைவன ராகங்கள்

33. ஊத்திக்கிட்டது – வள்ளுவன் வாசுகி

34. கோட்டைக்கு நீ ராஜா – ஆளுக்கொரு ஆசை

35. மழையா மழையா இப்போ – காமராசு

36. காட்டுக்குயில் போல – வண்ணத்தமிழ் பாட்டு

37. எடுடா நம்ம – கந்தா கடம்பா கதிர்வேலா

38.  சோனா சோனா – மலபார் போலீஸ்

39.  தாயே திரிசூலி – சிம்மராசி

40. அழகா அழகா – பொன்மனம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார். Rajkumar Sa

கானா பிரபா

23.08.2023


Wednesday, August 9, 2023

“பா மணக்கும்” எங்கள் பஞ்சு அருணாசலம் ❤️🧡 இணைந்த பல்வேறு இசையமைப்பாளர்கள்


“மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து
வா வா”
இப்படியொரு மங்கலகரமான வரிகளோடு பாட்டு உலகில் தன் வலது காலை எடுத்து வைத்தார் பஞ்சு அருணாசலம் அவர்கள்,
1962 ஆம் ஆண்டில் வெளியான “சாரதா” திரைப்படம் வழியாக.
ஒரு திரையிசைக் கவிஞராக 2017 இல் வெளிவந்த
“முத்துராமலிங்கம்" வரை 54 வருடங்கள் பயணித்தவர்.

தன்னுடைய முதற்பாடலின் அடிகளையே எடுத்து “மணமகளே வா” என்று முதற்படத்தை இயக்கவும் செய்தார்.
தன்னுடைய சித்தப்பா கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக
இருந்தவர் இன்னொரு மூத்த சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் தயாரிப்பில், இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கு நராக அறிமுகமான “சாரதா” படத்தில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தில் பாடலாசிரியர் என்ற அறிமுக அடையாளம் இருக்காது. எழுத்தோட்டத்தில் கண்ணதாசனின் உதவியாளர் என்றே அடையாளப்பட்டிருப்பார்.
முன்பு நான் எழுதிய “பூப்போல பூப்போல பிறக்கும்"
பாடல் குறித்த பதிவில் பின்னூட்டதில் வந்து மறவாமல் தன் முதற்பாடலையும் நினைப்பூட்டி விட்டுப் போனார். “பூப்போல பாடல் ஆர்.சுதர்சனம் இசையில் மிக அற்புதமான பாடல்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் தான் அறிமுகப்படுத்திய இளையராஜா வழி ஏராளம் பாடல்களில் இவர் தான் பாடலாசியர் என்று கடைக்கோடி ரசிகர் வரை அடையாளப்பட்டிருக்கிறார். ஆனாலும் தன்னுடைய பாட்டுச் சரித்திரத்தில் அதற்கு முன்னர் ஏராளம் பாடல்களை எழுதிக் குவித்தவர். பதிவை எழுதியவர் கானா பிரபா
இளையராஜா காலத்தில் கூட, சிவாஜிராஜா இசையில் “காற்றுக்கென்ன வேலி” படத்தில்
“ரேகா ரேகா”
என்ற இனிமை சொட்டும் பாடலை எழுதியவர்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் பல்வேறு இசையமைப்பாளர்களுக்குத் தன் பேனா மையை ஊற்றியிருக்கிறார் என்பதற்கு இலக்கணமாக,
பாட்டுப் பாட வாயெடுத்தேன் – தெய்வத்தின் தெய்வம் (இசை ஜி.ராமநாதன்) https://www.youtube.com/watch?v=YPmf_SiWLK8
எம்ஜி.ஆரின் கன்னித்தாய் படத்தின் அனைத்துப் பாடல்களும்,
“எனுங்க என்னைத் தெரியுமா” பாடலை “அல்லி” படத்துக்காகவும்,
“தாயாக மாறவா” மற்றும் “மனதில் என்ன மயக்கம்” பாடல்களை
கே.வி.மகாதேவன் இசையில் “ஏழைப் பங்காளன் படத்திலும், யாருக்குச் சொந்தம் படத்துக்கும் ஆக்கியளித்தார்.
இப்படியாகத் தன் முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் படங்களுக்கு ஆரம்பகாலத்தில் தொடர்ச்சியாக எழுதினார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும்
பொன்னெழில் பூத்தது (கலங்கரை விளக்கம் )
என்னை மறந்ததேன் (கலங்கரை விளக்கம்)
என் மனக் கூட்டுக்குள்ளே ( மனக்கணக்கு)
சின்னச் சின்ன வீடு கட்டி (மனக்கணக்கு )
ஆகிய பாடல்களோடு,
டி.கே ராம மூர்த்தி இசையில் “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” படத்துக்காக
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே
https://www.youtube.com/watch?v=KKe0-ytGL1M பாடலையும் தந்தார்.
“பொன்னென்பதோ பூவென்பதோ”
என்ற அற்புதமான பாடல் டி.ராமானுஜம் இசையில் அன்னப் பறவை படத்துக்காக, அதே படத்தில் சூடான எண்ணங்கள், பச்சைக்கிளி என்ற பாடலும் அவரே.
அழகின் அவதாரமே – காசி யாத்திரை ( இசை சங்கர் கணேஷ்
மேலும் சங்கர் கணேஷ் இசையில் “சக்க போடு போடு போடு ராஜா” , “தெய்வம் பேசுமா” படங்களிலும், அதே இரட்டையர்களுக்காக “ஜான்சி ராணி" படத்துக்கு அனைத்துப் பாடல்களும்,
இசையமைப்பாளர் வி.குமாருக்காக “தெய்வக் குழந்தைகள்” படத்தில் “மணமுள்ள மென் மலர்” பாடலும்,
காதல் படுத்தும் பாடு (அல்லிச் செண்டாடுதே பாடல்) படத்துக்காக டி.ஆர்.பாப்பா இசையிலும் எழுதிக் கொடுத்தவர்.
என்னய்யா முழிக்கிறே, உனக்கும் எனக்கும், வா இளமை அழைக்கிறது ஆகிய மூன்று பாடல்களையும் “எங்கம்மா சபதம்” படத்துக்காக
விஜயபாஸ்கர் இசையில் எழுதியவர்
“மோகனப் புன்னகை ஊர்வலமே” பாடலோடு “பனிமலர் என்ற பாடலும் சேர்த்து “உறவு சொல்ல ஒருவன்” படத்துக்காகவும்,
“முதல் முதல் வரும் சுகம்" https://www.youtube.com/watch?v=EjWSGaW0ceM
பாடலோடு “காலங்களில் அவள் வசந்தம்” படத்துக்காகவும்,
மேலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை, ஆடு புலி ஆட்டம் படங்களுக்கும் பாடல் எழுதினார்.
வேதா இசையில் வல்லவனுக்கு வல்லவன்,
மேலும் சி.என்.பாண்டுரங்கம் இசையில் “திரு நீலகண்டர்” படங்களுக்கும் எழுதியிருக்கிறார்ர்.
கார்த்திக் ராஜா இசையில்
அலெக்சாண்டர் படத்துக்காக “ராஜராஜன் நானே”
மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையில்
“ஓ மானே மானே” பாடலை ரிஷி படத்துக்காகவும் எழுதியளித்தார்.

தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு ஆதரவளித்து எடுக்கப்பட்ட “தொட்டில் குழந்தை” படத்திற்கு ஆதித்யன் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதிக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிர்ந்தவை சில உதாரணப் பாடல்கள் தான். இவற்றைத் தாண்டியும் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் தன் கை வண்ணம் படைத்தார் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
சிவகாமி….சிவகாமி….
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என்று கவியழகு நிறைந்த பாடலை அளித்தவர் தான்,

“ஆசை அலைகள்” படத்திலே
நடந்து வந்த பாதையிலே
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..
என்று தத்துவச் சிறப்பு மிக்க பாடலையும் வழங்கினார்.
“பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்”
எவ்வ்வளவு தன்னம்பிக்கை ததும்பும் வரிகளைத் தன் முதற்பாடலிலேயே வைத்திருக்கிறார் பாருங்கள்.
பஞ்சு அருணாசலம் ஐயா மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் எம் நெஞ்சில் நிறைந்து நிற்கும் அவரைப் போற்றி வணங்குவோம்.
கானா பிரபா
09.07.3023

Thursday, July 27, 2023

❤️ சின்னக்குயில் சித்ரா 💚 44 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 60🌷


ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போலாகுமா?

ஆயிரம் மொழிகள் உண்டு

அது செந்தமிழைப் போலாகுமா?

எத்தனை செல்வம் உண்டு

அவை அத்தனையும் நீயாகுமா?

https://youtu.be/FdoOZtuaEns

சின்னக்குயில் சித்ராவை  அணுக்கமாக நேசிக்க வைக்கும் ஒரு பாட்டு ஒன்று என் இலக்கியாவுக்கே நான் பாடுவது போலத் தொனிக்கும். 

இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 60 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. 

தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது.

பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் தட்டிக் கொடுப்பது மட்டுமன்றி, நுணுக்கமான சங்கதிகளைக் காட்டி அவற்றில் கவனமெடுக்க வேண்டும் என்ற ஒரு குருவின் ஆத்மார்த்த அக்கறை சித்ராவின் தனித்துவம். எஸ்பிபி அருகே அமர்ந்து இவ்விதம் அவர் கொடுக்கும் கண்டிப்பைப் பார்த்து எஸ்பிபியே கலாட்டா பண்ணியதை அறிவீர்கள். 

காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான்.

எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (எதையும் தாங்கும் இதயம்), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "சோலைக்குயிலே" (பொண்ணு ஊருக்கு புதுசு), "மலர்களில் ஆடும் இளமை புதுமையே" (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.

1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரேவதியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது. 

எங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் "இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது". சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும். 

மனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குநர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் "சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்". ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது "மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி" என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் "உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்" என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.

இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 54 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன்.

இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.

இந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான மூன்று பாடல்களும் அணி செய்கின்றன.

1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)

2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)

3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)

4. நானொரு சிந்து (சிந்து பைரவி)

5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)

6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)

7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)

8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)

9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)

10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)

11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)

12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)

13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)

14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)

15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)

16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)

17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)

18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)

19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)

20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)

21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)

22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)

23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)

24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)

25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)

26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)

27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)

28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)

29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)

30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)

31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)

32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)

33. பழைய கனவை (தாயம்மா)

34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)

35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)

36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)

36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)

37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)

38. மழலை என்றும் (சேதுபதி IPS)

39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)

40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)

41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)

42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)

43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)

44. நான் வண்ண நிலா (கட்டளை)

45. வா வாத்தியாரே (பரதன்)

46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)

47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)

48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)

49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)

50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா - மலையாளம்)

51. புழயோரத்தில் (அதர்வம் - மலையாளம்)

52. குழலூதும் கண்ணனுக்கு ( எம்.எஸ்வி & இளையராஜா - மெல்லத் திறந்தது கதவு)

53. மத்தாப்பூ ஒரு பெண்ணா (மைக்கேல் மதன காமராஜன்)

54. செங்கதிர் கையும் வீசி (ஸ்னேக வீடு - மலையாளம்)

 “கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியே” என்று அவரே பாடும் பாடல் போல மணி மணியாய்ப் பல பாடல்கள் வந்து விழுகின்றன.

 தொடர்ந்து அவர் ஜோடி கட்டிய பாடல்கள்

1. கல்யாணத் தேனிலா - மெளனம் சம்மதம்

2. பூஜைக்கேற்ற பூவிது - நீதானா அந்தக் குயில்

3. மலரே பேசு மெளன மொழி - கீதாஞ்சலி

4. வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

5. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே

6. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

7. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

8. காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ - இந்திரன் சந்திரன்

9. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

10. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்

11. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - பணக்காரன்

12. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா

13. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்

14. நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் - புதுப்பாட்டு

15. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

16. மாலைகள் இடம் மாறுது - டிசெம்பர் பூக்கள்

17. செம்பூவே பூவே - சிறைச்சாலை

18. தேகம் சிறகடிக்கும் ஹோய் - நானே ராஜா நானே மந்திரி

19. இந்த மான் உந்தன் சொந்த மான் - கரகாட்டக்காரன்

20. ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது - திருப்புமுனை

21. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே

22. சங்கத்தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

23. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர் 

24. பொன்னெடுத்து வாறேன் வாறேன் - சாமி போட்ட முடிச்சு

25. கண்மணி கண்மணி - சத்யவான்

26. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்

27. நீ போகும் பாதையில் - கிராமத்து மின்னல்

28. கம்மாக்கரை ஓரம் - ராசாவே உன்ன நம்பி

29. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

30. திருப்பாதம் பார்த்தேன் - மனித ஜாதி

31. இரு விழியின் வழியே - சிவா

32. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா

33. பூவும் தென்றல் காற்றும் - சின்னப்பதாஸ்

34. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்

35. குருவாயூரப்பா - புதுப் புது அர்த்தங்கள்

35. சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

36. ஊருக்குள்ள உன்னையும் பத்தி - நினைவுச் சின்னம்

37. அழகிய நதியென - பாட்டுக்கொரு தலைவன்

38. வெள்ளிக் கொலுசு மணி - பொங்கி வரும் காவேரி

39. ராஜனோடு ராணி வந்து - சதி லீலாவதி

40. ஹேய் ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை

41. சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே

42. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள

43. நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்

44. வா வா வஞ்சி இளமானே - குரு சிஷ்யன்

45. கரையோரக் காத்து - பகலில் பெளர்ணமி

46. இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி

47. விழியில் புதுக் கவிதை - தீர்த்தக் கரையினிலே

48. காதலா காதலா - தாய்க்கு ஒரு தாலாட்டு

49. குயிலே குயிலே - ஆண் பாவம்

50. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்

51. தென்றல் தான் திங்கள் தான் - கேளடி கண்மணி

52. சிந்துமணி புன்னகையில் - நீ சிரித்தால் தீபாவளி

53. ஆராரோ பாட்டுப் பாட - பொண்டாட்டி தேவை

54. மழை வருது மழை வருது - ராஜா கைய வெச்சா

55. தென்றல் வரும் தெரு - சிறையில் சில ராகங்கள்

56. ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

57. நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

58. நூறு நூறு முத்தம் - இந்திரன் சந்திரன்

59. என்னுயிரே வா - பூந்தோட்டக் காவல்காரன்

60. ஆலோலங்கிளித் தோப்பிலே - சிறைச்சாலை

61. கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்

62. வைகாசி மாசத்துல - நினைவுச் சின்னம்

63. நீலக்குயிலே - சூரசம்ஹாரம்

64. ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்

65. கை பிடித்து கை அணைத்து - சிறையில் சில ராகங்கள்

66. அன்பே நீ என்ன - பாண்டியன்

67. ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதயக் கோவில்

68. ஓடைக்குயில் ஒரு பாட்டு - தாலாட்டு பாடவா

69. ஒரு ஆலம்பூவு இலந்தம் பூவைப் பார்த்ததுண்டா - புண்ணியவதி

70. நான் ஒன்று கேட்டால் தருவாயா - இளைய ராகம்

71. மதுர மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன்

72. வானத்துல வெள்ளிரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னக்குயில் சித்ராவுக்கு K S Chithra

கானா பிரபா

27.07.2023


Friday, July 21, 2023

எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே❤️



வெள்ளாப்பில் எழுந்து தோட்டத்துக்குப் போக வேண்டும். தோட்டத்துக் கிணத்தில் ஊறும் நீரை மொண்டு பாய்ச்சும் ஊசிலி மெஷினின் குழாய் வழியே பீறிட்டு வளையக் குழாயாய் வந்து வாய்க்கால் வழியாக வடிந்தோடும் நீரைப் பாத்தி கட்டி ஒவ்வொரு கன்றுக்கும் ஈரம் பாய்ச்ச வேண்டும். அப்படியே பொழுதெல்லாம் தோட்ட வேலை கழிய, மாலை நேரம் மேய்ச்சலுக்கு மாடு, கன்றை அவிழ்த்து வீதி வழியே நடத்திக் கொண்டு போய் இரை மீட்க வைத்து விட்டு நுரை தள்ளத் திரும்ப அழைத்து வந்து கட்டி விட்டுக் கோயிலுக்குக் கிளம்பல். 


கோயில் கிணற்றில் அள்ளித் தோய்ந்து விட்டு, கொண்டு போன வேட்டியை இறுகக் கட்டி விட்டு சாயரட்சை பூசை பார்த்து விட்டு அப்படியே தேர்முட்டியடியில் சாய்ந்தால் மேலே வானத்து நட்சத்திரங்கள் கண்ணடிக்கும். உரத்த குரலில் பாடத் தொடங்குவார். பக்க வாத்தியங்கள் ஏதுமின்றித் தன் தொடையே தாள வாத்தியமாக. இருட்டின் வெளிச்சத்திலே டியெம் செளந்தரராஜன் குரலைப் பிரதியெடுத்துப் பாடும் இம்மாதிரி அண்ணன்மார்களோடு 

அவர்களின் அன்றைய பகல் பொழுதுக் களைப்புகளெல்லாம் இரவில் தம் உரத்த குரலில் பாடும் பாடல்களால் கரைத்துக் கொண்டிருப்பார்கள். கையிலே பாட்டுப் புத்தகம் ஏதுமின்றி பொங்கும் பூம்புனலில் இருந்து இரவின் மடியில் வரை ஒலித்த பாடல்கள் எல்லாம் மனப்பாடம்.


அப்படியொரு அண்ணன் “நானொரு ராசியில்லா ராசா” என்று அழுதும், “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு” என்று தத்துவம் பேசியும் பாடிப் பழகியவர் பாசப் பிணைப்பில் பாடிய “எந்தன் பொன் வண்ணமே” திரையிசைப் பாடல்கள் இம்மாதிரி உழைப்பாளிகளுக்குத் தான் உபயோகப்படுகின்றன. அதுவும் கிராமங்களில் மாடாய் மனிசராய் உழைக்கும் சனங்களின் ஆதார ஒலிகள் இவை. அதனால் தான் இன்று திரையிசைப்பாடல்கள் மேற்கத்தேய வரவுகளால் மாசு கண்டாலும் கிராமங்களில் அந்தப் பழைய யுகத்தின் மாசு படாப் பாடல்களோடே இன்னும் வாழ்கிறார்கள். 

எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்தாலும் சரி அவனுக்கு முந்திய தலைமுறையில் வாழ்ந்த துரோணாச்சாரியார்களின் பாதிப்பு அவன் படைப்பில் ஏதோவொரு இடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். இசைஞானி இளையராஜா ஆத்மார்த்தமாக நேசிக்கும் C.S.சுப்பராமன் அளவுக்குப் போகவில்லை. இளையராஜாவோடே சமீப காலம் வரை பயணித்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தாக்கம் இளையராஜாவின் ஆரம்ப காலங்களில் ஒட்டியிருக்கும். அப்படியொன்று தான் இந்த “எந்தன் பொன் வண்ணமே”. 

பாடல் முழுக்க எம்.எஸ்.வி தனம் இருக்கும். பிந்திய சரணத்தின் மிதப்பில் வரும் வயலின் ஆர்ப்பரிப்பில் தான் ராஜ முத்திரை இருக்கும். மற்றப்படி திருநீற்றுப் பட்டை நீற்றாகத் துலங்கும் எம்.எஸ்.வி நெத்தி போல ஒரு நேர்த்தியான பாட்டு இது. 


T.M.செளந்தரராஜனின் குரலின் கனிவும், நெகிழ்வும் இந்தப் பாட்டை அப்படியே உருக்கிப் போட்டு விடும். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எத்தனையோ மாற்றுக் குரல்கள் பொருத்தலாம். ஆனால் மாசற்ற் குரலாய் அச்சொட்டாய்ப் பொருந்திப் போனவர் TMS.


கவியரசர் கண்ணதாசன் இந்த மாதிரி எத்தனை வடிவங்களில் நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதியிருப்பார்.


காலம் வரும் அந்த தெய்வம் வரும்

அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும் காலம்தனை நான் மாற வைப்பேன்

கண்ணே உனை நான் வாழ வைப்பேன்


“நான் வாழ வைப்பேன்” தலைப்பை இரகசியமாகச் செருகியிருப்பார் கவியரசர். அதுதான் அவர் முத்திரை.


https://youtu.be/4LflC5bkNSw


கானா பிரபா

Tuesday, July 18, 2023

காலந்தோறும் வாலி ❤️


“தாய் அழுதாளே
நீ வர
நீ அழுதாயே
தாய் வர”

தாய்மையின் இதய ஓலமாய் ஒரு பாட்டு
உணர்வோட்டம் மிக்கதொரு காட்சி,
உச்சபட்ட நடிகர்கள் எல்லாவற்றையும் மேவி ஈரடியில் அதை அப்படியே உயிரோட்டம் பொதிந்த வரிகளில் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார், அவர் தான் வாலி.

கவியரசு கண்ணதாசனிடம் படத்தின் கதையைச் சொல்லி விட்டால் போதும் அதை அப்படியே கிடைக்கும் ஒரு பாடலின் ஈரடிக்குள் அடக்கும் அற்புதன் என்று பலர் சம்பவ உதாரணங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.
வாலியாரின் பாட்டுக் கிடங்கினுள் இவ்விதம் ஏராளம் வைடூரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் சினிமாவில் “பாசாங்கு இல்லாத” என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து விட்டுப் போகும் பாடலாசிரியர்களில் கவிஞர் வாலி முதன்மையானவர் என்பேன். அவர் தன் பாடல்களில் தன்னைப் பற்றிச் சிந்திப்பதை விட, அந்தப் பாடலை வாங்கப் போகும் நுகர்வோன் பக்கம் தான் அதிகம் சிந்திப்பார்.

“இட ஒதுக்கீடு உனக்காக
இடை செய்வது”

“உன்னில் உருவான ஆசைகள்
என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காதது” (தத்தியாடுதோ)

என்று அந்தந்தக் காலகட்டத்துப் பேசுபொருளைக் காதல் பாடலில் கூடக் கொண்டு வந்து விடுவார்.

“அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல
விலை ஏறி போகுது மார்க்கெட்ல
என்னாட்டம் ஏழைங்க அத வாங்கித்
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல”

“கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாடசாமி”க்குக் கூட அந்தச் சிறுவர்கள் வழியாக வேண்டுகோள் வைப்பார்.

தன் காலம் முடிவதற்கு முன்னர் கூட

“மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே”

என்று ஒரு குறும்(பு)ப் பா படைத்தவர்.

“ஓரிடத்தில் உருவாகி
வேறிடத்தில் விலை போகும்
கார்களைப் போல் பெண் இனமும்” (ராஜா கைய வச்சா)
என்று காருக்குப் பாட்டெழுதியவர்,

Net Cafe காலம் வந்த போது
“இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு Net Cafe விரைந்தோடி வா”

என்றும் கொடுத்தார் காலச் சக்கரத்தின் புள்ளியாய்..

வாலிடா 😀 இப்போ இருந்தாலும் தக்காளிக்கு ஒரு பஞ்ச் போட்டிருப்பார்.

இவ்விதம் அந்தந்த நிகழ்வுகளின் காலக் கணக்கைத் தன் கவியில் நிரப்பியவர்.

“நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே”

இன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.

கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,
தான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார்.

அதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தை இல்லையே”
பாடலும் பிடிக்கும்,

அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும்

“சின்ன ராசாவே.....
சித்தெறும்பு என்னைக் கடிக்குது”

பாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.

“அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே வந்ததே
நண்பனே.....”

என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர் தான்,

“நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா.....”

என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.
“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் 😀 போடுவது வாலியின் பண்பு.

ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.
எப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் - இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும்

“யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ்ப் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று....”

என்று இதயத்திலும்

“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”

என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.

“அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிககும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா”

தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி - இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை

“தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?”

என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில்

“நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”

எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.

“மொத்தத்தில் வந்து கூடும்
பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே”
என்று சரணத்தில் தத்துவத்தைக் கலந்தெழுதும் வாலி இதெல்லாம் நான் சொல்லவில்லை முன்பே எழுதி வைத்தது தான் என்பது போல “எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து” என்கிறார் முகப்புப் பல்லவியில்.

அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்
முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம்.

எண்பதுகளிலே பிற இசையமைப்பாளர்கள் எனும் போது வைரமுத்து தான் இதற்கும் பாட்டெழுதியிருப்பாரோ என்று எழுமாற்றாக மனதில் பதிந்த பாடல்கள் பலவற்றில் வாலியின் கைவண்ணமே இருக்கின்றது. குறிப்பாக “அண்ணா நகர் முதல் தெரு” படத்தில் வரும் “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு” இசையமைப்பாளர் சந்திரபோஸின் இசைப் பயணத்தில் தலையாய நட்சத்திரப் பாடல் இதுவென்றால் மிகையில்லை.
“உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே”
இதை வெறும் வார்த்தைப் பிரயோகமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும் ஆனால் இசை கூட்டி ரசித்தால் அசாதாரணம் காட்டும்.

இதைத்தான் இசைஞானி இளையராஜாவும்
“நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்” (சுந்தரி கண்ணால் ஒரு சேதி) வரிகளை உதாரணம் காட்டி இந்தச் சாதாராண வரிகள் எப்படி அசாதாரண வடிவம் பெறும் என்பது கவிஞர் வாலிக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

அதே சமயம்
“நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா” (முன்பே வா என் அன்பே வா) என்று விண்ணை முட்டும் கற்பனைக்கும்
சென்று விடுவார் வாலியவர்கள்.

“மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ”
இந்தப் பாடலைக் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவுக்காக வாலி எழுதிச் சமைத்ததை அறிந்து எம்.ஜி.ஆர் கூப்பிட்டு “ஓ அப்படியா” என்று தன் பாணியில் (!) விசாரித்ததாகச் சொல்வார்கள்.

“அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்தப் பக்கம் திரும்பும் ஒரு நாள் பாத்து”
என்று “போடு தாளம் போடு” புது வசந்தம் பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் அந்தக் காலத்து இளையராஜாவின் ஏக போக இசை சாம்ராஜ்ஜியத்தையும் உரசிப் பார்க்கிறார்.

“சில நேரம் ஏதோதோ நடக்கும்” என்றொரு பாடல் வித்யசாகரின் ஆரம்ப காலத்துத் திரைப்படமான “பூமனம்”இற்கான வாலி எழுதியது. இதுவுமொரு தத்துவப் பாடல் தான். இன்னொரு சிறப்பென்னவென்றால் பாடியது பழம் பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ்.

தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவியதை அவ்வளவு தூரம் மக்கள் மறந்து விடவில்லை.
வாலியின் பேனா எழுதுகிறது இப்படி
“மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே” எவ்வளவு காலச் சூழலுக்கேற்ற குறும்புத்தனமும் அதே சமயம் காட்சிச் சூழலுக்கு அதைப் பொருத்தும் வல்லமையும் இருக்கிறது பாருங்கள், அதான் வாலி. ஒரு செயற்கை ஒளியை “வெளிச்சப் பூ” என்ற கற்பனையில் வடித்த அவர் திறனை என்னவென்று சொல்ல.
இப்ப்டியாகப்பட்டவர் அதே படத்தில் “எதிர் நீச்சலடி” என்று துள்ளிசை ஆட்டம் போட்ட போது அவருக்கு வயசு 81. இந்த உலகை விட்டு அவர் பிரிந்த அதே ஆண்டு தான்.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் இன்னொன்று. வாலியின் ஆத்ம நண்பர் நாகேஷ் இற்குத் திருப்பு முனையாக அமைந்த எதிர் நீச்சல் படத்தின் அனைத்துப் பாடல்களும் வி.குமார் இசையில் வாலியின் கை வண்ணமே. அந்தக் காலகட்டத்தில் கே.பாலசந்தருக்கு எதிர் நீச்சலைத் தொடர்ந்து பூவா தலையா, இரு கோடுகள் என்று தொடர்ச்சியாக அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலியே.

“முத்து நகையே முழு நிலவே” பாடலையோ “கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா” பாடலையோ கேட்கும் போது அடடா கங்கை அமரன் போலிருக்கிறதே என்றால் அங்கே கிராமியத் தெம்மாங்குக்கும் பாட்டுக் கட்டியது வாலியே. தேவாவின் இசையில் “சாமுண்டி” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
“மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா”
சாமுண்டி வழியாக இன்றும் கிராமங்களில் துலங்குகிறார் வாலி.

கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.
இன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.

தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.

"அவ்வளவு பெரிய மூளை என்னடா காணாமப் போச்சே"
கவிஞர் வாலி இறந்த போது ஏங்கினாராம் தங்கர் பச்சான். அந்த வலி இன்னும் நம்முள் புதைந்துள்ளது.

❤️ கவிஞர் வாலி நினைவு நாள்

கானா பிரபா
18.07.2023