Pages

Thursday, July 9, 2020

My mind is always agile - கே.பாலசந்தர் 90



இப்படியொரு ஆங்கிலத்தனமான தலைப்போடு நான் தொடங்க காரணமே இதை உள்ளதை உள்ளவாறு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர் வாயால் சொன்ன போது தான். அப்போது அவர் எழுபதைக் கடந்து விட்டிருந்தார்.

ஒரு மனிதனின் சுறு சுறுப்பான இயக்கத்துக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே புதிய புதிய சிந்தனைகளோடு ஓடிக் கொண்டிருக்க வேண்டும். என் அப்பாவுக்கு அடுத்து இப்படியானதொரு சுறு சுறுப்பானதொரு இயக்கத்தை எட்ட நின்று பார்த்தது கே.பாலசந்தர் போன்றவர்கள் வழி தான்.

மேடை நாடகம்.
சினிமா,
சின்னத்திரை நாடகம்
ஆகிய களங்களில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கொடுத்த விரிவான பங்களிப்பை இனியொருவர் தமிழ்ச்சூழலில் கொடுக்கவே முடியாது.
ஒவ்வொரு களத்திலும் முந்திய களத்தின் பாதிப்பே இருக்காது. ஏனெனில் சினிமாவுக்கு மேடை நாடகம் போட்ட இயக்குநர்களின் படங்களையும் பார்த்திருக்கும் அனுபவம் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கிறது.

“என்ன இடைஞ்சல்கள் வரட்டும், அதை மீறிப் போராடித் தன்னைப் பரிபூரணமா நம்பி இறங்கியவர்கள் யாரும் வெற்றி அடையாமல் இருக்கவே முடியாது” - கே.பாலசந்தர்

“1972ல் ஹார்ட் அட்டாக், 6 மாத ஓய்வின்போது புதுசு புதுசாக படம் பண்ண யோசனை தோன்றி கலாகேந்திராவை ஆரம்பித்தோம்” என்கிறார் இயக்குநர் சிகரம். இதையெல்லாம் அவர் வாழ்ந்திருந்த காலத்தில் கொடுத்த பேட்டிகள் வந்த போது குறிப்பெடுத்து வைத்திருந்தேன். இன்று அவரின் 90 வது பிறந்த நாளுக்கு ஒப்புவிக்கக் கால நேரம் கூடியிருக்கிறது.

சிந்து பைரவி படத்தில் 14 விநாடிகளே அமையும் ஒரு காட்சி அது.
சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார்.
கையிருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார்.

அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே காமெராவின் கோணம் கார்க் கண்ணாடி வழியாக மது போதையால் நிறைந்து சித்தம் கலங்கி நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை "பூமாலை வாங்கி வந்தான்" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் 14 விநாடிகளை நிரப்பிய காட்சி தான் இது. இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.


நாடக மேடை மரபில் கட்டியக்காரனின் வருகை தனித்துவமானது. கே.பாலசந்தரது படைப்புகளைப் பார்த்தால் கண்டிப்பாக ஒரு பாத்திரம் இதே பாங்கில் அமைக்கப்பட்டிருக்கும். தனியாக ஒரு கட்டுரையில் எழுத வேண்டியது இந்தப் பார்வையில்.

அதே போல் ஒரு பாடல் கதையோட்டத்தின் கீற்றாக இருக்கும்.

“இல்லாத உறவுக்கு 
என்னென்ன பேரோ” என்றும்

“நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் 
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான் 
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் 
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்”
என்றும் சிந்து பைரவியில், வைரமுத்துவைத் துணைக்கழைத்திருப்பார்.

அது போலவே எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் கதையைப் படமாக்கிய போது அந்தப் படம் முழுக்க “மான் கண்ட சொர்க்கங்கள்” பாட்டு ஓடும். 8 நிமிடம் 21 விநாடி ஓடும் பெரும் பாட்டைப் பகுதி பகுதியாகக் காட்சிகளில் இழைய விட்டிருப்பார் கே.பாலசந்தர். 

“இந்திய தாய் நாட்டை 
எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை 
தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் 
துணையாக வாராதா இப்போது”

அவர் சொன்ன கதைச் சுருக்கத்தை அப்படியே உள்வாங்கி கவிதைச் சுருக்கமாகத் தந்தார் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் துணையோடு.

“அங்கும் இங்கும் பாதை உண்டு
  இன்று நீ எந்தப் பக்கம்”
 
என்று அவர்கள் படத்தில் நாயகி மூன்று தலைக் கொள்ளி எறும்பாகச் சிக்கித் தவிக்கும் போதும்,

“முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா”

என்று உவமைக் கவிஞர் சுரதா வழியாக நீர்க்குமிழியிலும்,

“கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா“
என்று வாலியின் துணையோடு மனதில் உறுதி வேண்டும் படத்தின் நாயகிக்கான அசரீரிப் பாட்டாகவும்,

“கல்யாண சுகமுமில்லை 
கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் 
என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும் 
எம்மைதான் கனவு கண்டாய்”
என்று “மூத்தவள் நீ இருக்க” பாடல் வழியாக அரங்கேற்றத்திலும்,

“காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்“ (ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்) என்று அபூர்வ ராகங்களிலும்,

“ஆத்திரத்தாலும் அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானாள்
ஆத்திரக்காரனையே திருத்தி ஒருத்தி சாத்திரப்படியே தாயானாள்” (நானொரு கதா நாயகி)  நச்சென்று மூன்று முடிச்சு கதை சொல்வதிலும்,

“பந்தம் என்பது சிலந்தி வலை 
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி 
இதில் சுற்றம் என்பது மந்தையடி“

என்று அவள் ஒரு தொடர்கதை நாயகி சுஜாதாவுக்குமாக ஒவ்வொரு படத்தின் கருவினைக் காட்டும் சித்திர வரிகள் இருக்கும். இதுவுமொரு நீட்டி எழுத வேண்டியதொன்று. அதில் படாபட் ஜெயலட்சுமியின் பாத்திரமும் தனியே ஆராயப்பட வேண்டியதொன்று.

“கே.பாலசந்தர் சினிமாவில் ஒரு அகிம்சாவாதி, படத்தின் வியாபாரத்துக்கு 
நாலு சண்டைக் காட்சியை வலிந்து வைக்க விடவே மாட்டார்.
கவர்ச்சி என்பது காட்சியின் பின்னணியில் இருக்கணும், முன்னணியில் துகிலுரிப்பது அல்ல என்பதைச் செய்து காட்டியவர்” என்கிறார் இயக்குநர் சக நடிகர் மெளலி.

இயக்குநர் சிகரம் கே.பாலச்ச்ந்தர் அளவுக்கு கின்னஸ் சாதனை படைக்குமளவுக்கு அறிமுகங்களை உருவாக்கியவர்கள் யாரும் இல்லை என்று நடிகர் விவேக் ஒருமுறை சொல்லியிருந்தார்.

உடனே “மனதில் உறுதி வேண்டும்” படம் ஞாபகத்துக்கு வர அந்தப் படத்தை YouTube இல் ஓட விட்டு எண்ணினேன். சுஹாசினி தவிர முன்னணி நட்சத்திரங்களாக அந்தப் படத்தில் மட்டும் 
12 பேரை அறிமுகங்களாக இறக்கி விட்டிருக்கிறார். இம்மட்டுக்கும் சிந்து பைரவி என்ற ஒரு பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு அடுத்ததாக இது, எப்பேர்ப்பட்ட துணிச்சல். 

தன் திரையுலக வாழ்வுக்கு வழிகாட்டியாக இருந்த ஆனானப்பட்ட எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே “தண்ணீர் தண்ணீர்” (மூலக்கதை கோமல் ஸ்வாமிநாதன்)
எடுத்துச் சிக்கலையும் சம்பாதித்தவர்.

“விசுவின் இந்த மேடை நாடகத்தைப் படமாக்குவோம்” என்று கவிதாலயா நிர்வாகி நடராஜன் சொன்னபோது இதையெல்லாம் சினிமாவா எடுக்கக் கூடாது” என்று கே.பாலசந்தர் மறுத்து விடுகிறார். ஆனால் விடாப் பிடியாக எடுக்கிறார்கள். படம் மாபெரும் வெற்றி.
அதுதான் மணல் கயிறு.

“எனக்கு இந்தப் படம் சுத்தமாப் பிடிக்கல”
அந்தப் படத்தின் வெற்றி விழாவில் எடுத்த எடுப்பியே தன் பேச்சை இப்படி ஆரம்பித்தாராம் பாலசந்தர். இதைச் சமீபத்தில் பேட்டியில் சொன்னவர் வி.நடராஜன்.
தன்னுடைய நிறுவனத் தயாரிப்பாக இருந்தாலும் படைப்பு மோசமாகப்பட்டால் பாரபட்சமின்றி விமர்சிக்கத் தவற மாட்டார்.
நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் “குணா” படத்தை முதல் காட்சி பார்த்து விட்டு “என்னடா படம் எடுத்து வச்சிருக்கிறான்” என்று கமல் குறித்து கவிதாலயா கிருஷ்ணனிடம் அலுத்தது ஒரு பக்கம், “மகா நதி” பார்த்து விட்டு மை டியர் ராஸ்கல் என்று அழுது நெகிழ்ந்து கமலைத் 
தன் பிள்ளையின் வெற்றியில் பரம திருப்தி காணும் தந்தையின் பூரிப்பிலுமாகக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அது போல தன்னுடைய பாசறையில் இல்லாத இன்னொரு இயக்குநர் சாதித்தாலும் எழுதிப் பாராட்டி விடுவார். இதைப் பல இயக்குநர்களின் பேட்டி வழியாகச்  சொல்லக் கேட்டிருக்கிறோம்.
“மதராசப் பட்டணம்” படத்தை உச்சி குளிரப் பாராட்டிய பாலசந்தரின் கடிதத்தை குமுதமோ, விகடனோ அப்போது பிரசுரித்தது.

தன்னுடைய படைப்பின் கதை மாந்தர்கள் வழியே பிரச்சார நொடி இல்லாமல் சமூகக் கருத்துகளைச் சொன்னவர்.
எனக்கு சின்னத்திரை நாடகங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாவிட்டாலும் அதன் ஆரம்ப யுகத்தில் பார்த்த விரல் விட்டு எண்ணக் கூடிய நாடகங்களில் ஒன்று 
பாலந்தரின் ரயில் சினேகம்.
இன்னொன்று துண்டு துண்டாகப் பார்த்த ப்ரேமி. இதில் ஒரு பாத்திரம் பேசும்
சமூக விமர்சனத்தை இன்னும் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன், அதன் சாரம் இது தான் ;
“சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மீது சதா விமர்சனங்களைக் கொட்டிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு உள்ளூரத் தமக்கு அந்த பிரபல அந்தஸ்து வராததின் காழ்ப்புணர்வும் ஒரு காரணம்”
இது உளவியல் ரீதியாக அனுபவித்து உணர வேண்டியது. .

“ஈர்ப்பு என்பது நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இருந்தாலும் வரலாம் நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம்” - கே.பாலசந்தர்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
இன்னமும் வாழும் இயக்குநர் சிகரத்துக்கு.

கானா பிரபா
09.07.2020

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்


"இருதயமே துடிக்கிறதா....

துடிப்பது போல் நடிக்கிறதா....❤️

“எனக்கு வரவேண்டிய வாய்ப்புகள்

எல்லாம் இவருக்கே போக வேண்டும்

என்று வேண்டிக் கொள்கிறேன்”

இப்படிச் சொன்னவர் இலேசுப்பட்டவர் அல்ல திரையிசையின் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளர் சரத், அவர் அப்படித் தன் வாய்ப்புகள் இவருக்கே போக வேண்டும் என்று கை காட்டியது இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களைப் பார்த்து.

இது நடந்தது ஒரு தசாப்தத்துக்கு முந்திய Zee தமிழ் இசைப் போட்டியின் இறுதி நிகழ்வில் நடுவராக இருவரும் வந்து சிறப்பித்தவேளை.

அதைக் கேட்ட மாத்திரத்திலேயே மெய் சிலிர்த்தது அப்போது, இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்த மானசீகமான பாராட்டைக் கேட்டு நெகிழ்வேன். போட்டி, பொறாமை நிறைந்த உலகில் இப்படியும் நிறைந்த மனத்தோடு இருக்கிறார்களே என்று எண்ண வைக்கும்.

எண்பதுகளில் எப்படி இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனுக்கு ஒரு விசாலப்பட்ட திரையிசை வாய்ப்பு கிட்டவில்லை என்று ஏங்கும் அதே பரிமாணத்தில் தான் புத்தாயிரத்தில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களையும் அடிக்கடி நினைத்துப் பார்க்க வைக்கும்.

அழகிய தீயே படத்தில் வரும் “விழிகளின் அருகினில் வானம்” பாடல் வந்த புதிதில் வெறி பிடித்தது போலத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். அது மட்டுமா இசைஞானி இளையராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்பேன் என்று கடும் விரதத்தோடு இருந்த நண்பர் ஒருவரை என் காரில் அமர்த்தி இந்தப் பாடலை ஓட விட்டு சிட்னியில் ஒரு குறும் யாத்திரை சென்று விட்டுத் திரும்பும் போது இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் அந்த நண்பர்.

நான் வெற்றிக் களிப்பில் முறுவலித்தேன்.

அதுதான் ரமேஷ் விநாயகம் அவர்கள் கொடுத்த உன்னத இசைக்கு என் கட்டை விரல் கைமாறு.

“விழிகளின் அருகினில் வானம்” பாடலை முன் சொன்ன ரமேஷ் விநாயகத்தின் அருமை நண்பர் இசையமைப்பாளர் சரத் எவ்வளவு அனுபவித்துப் பாடுகிறார் பாருங்கள். அந்த ஸ்வர ஆலாபனையிலே கட்டுக்கடங்காத காதல் பிரவாகமாகப் பரவுகிறது.

https://youtu.be/vZ_Vaa3rK1I

பூ போன்ற கன்னி தேன்

அவள் பேர் சொல்லி தித்தித்தேன்

அது ஏன் என்று யோசித்தேன்

அட நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள்

இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல்

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

நண்பர் ரஜினிராம் Rajini Ramachandran இன் சகோதரர் கவிவர்மன் எழுதிய அந்த “விழிகளின் அருகினில் வானம்” பாடலைச் சிலாகித்து எழுதவே பயம் கலந்த மரியாதை இருக்கும் எனக்கு

எனக்கு இப்படியென்றால் ரமேஷ் விநாயகம் அவர்கள் இசையமைத்த “தில் மேரா” (கஸ்தூரி மானினமே)

https://youtu.be/owdu6RGQquk

பாடலைப் பாடியது எனக்கு மிகப் பெரிய சவால் என்று ஒரு மேடையில் சிலாகித்தார் அந்தப் பாடலின் மூலப் பாடகி மாதங்கி. இந்துஸ்தானி மரபில் பிறந்த அந்தப் பாடலை ஒரு பாட்டம் சிலாகித்து விட்டுத்தான் அடுத்த கேள்விக்குப் போனார் மாதங்கி. அதில் ரமேஷ் விநாயகம் அவர்களின் சாகித்தியம் மீதான ஒரு பெரிய பிரமிப்பும், மரியாதையும் அவரின் குரலில் ஒட்டியிருந்தது.

நாயகன் படத்தின் பின்னணி இசையில் இசைஞானி காட்டிய நுணுக்கத்தை இவர் காட்சியோடு விளக்கிக் காட்டிய கணம் ஒரு ரசிகனாக இன்னோர் பக்கம் மரியாதை விளைவித்தார்.

“என்ன இது என்ன இது

என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது......”

https://youtu.be/ehL7CZEUKzM

காதலர்கள் தங்களுக்குள் மட்டுமே கேட்குமாற் போல ஒரு அமுக்கமான ஓட்டத்தில் முழுப் பாடலையும் பாடி விட முடியுமா? முடியும் என்ற விடையோடு ஒரு இசையமைப்பாளருக்கு இப்படியொரு தெள்ளமுதுக் குரலும் உண்டே என்ற அதிசயத்தையும் கொடுக்கும் பாட்டு.

தேன் குடித்து விட்டுப் பாடுவது போல வழுக்கிக் கொண்டு போகும்.

தொட்டுத் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஐஸ் காற்றிலே https://youtu.be/2DZ4aVAs994

இன்னொரு தேங்காய்ச் சொட்டு.

தேமதுரக் குரலோன் ரமேஷ் விநாயகத்தைப் பாட்டுக்காரராகவும் அழகு பார்த்த ஹாரிஸ் ஜெயராஜின் “யாரிடமும் தோன்றவில்லை”

https://youtu.be/0R2nC9sN43A

அப்படியே பட்டு விரிப்பில் பஞ்சு மெத்தை சுகம்.

கேட்காத ஓசைகள்

இதழ் தாண்டாத வார்த்தைகள

இமை ஆடாத பார்வைகள்

இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம்

இனி நில் என ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்

ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா

துடிப்பது போல் நடிக்கிறதா?

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் பிறந்த நாளில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கொண்டாடி வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய எழுத வேண்டும் உங்களைப் பற்றி அப்படியும் அடங்காது ❤️

https://youtu.be/G628iHHLgxQ

கானா பிரபா

Wednesday, July 1, 2020

இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️



இலங்கை வானொலி கடல் கடந்து கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அதன் முன்னணிக் குரல் கேஏஏஏஏ.எஸ்ஸ்ஸ்.ராஜ்ஜ்ஜ்ஜா வின் உருவத்தைத் தங்களுக்குத் தோதான கம்பீரமான நடிகராகக் கற்பனை செய்து கொண்டு அவரைப் பார்க்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையத்துக்குப் படையெடுத்தார்களாம் தமிழகத்தில் இருந்து சில வானொலிப் பிரியர்கள். அவர்கள் வந்திருக்கும் சேதி அறிந்து கூச்ச சுபாவம் கொண்டவர் வெட்கத்தோடு மறைந்தோடி விட்டாராம் அந்த கே.எஸ்.ராஜா.

வானொலிக்கு ஒரு கே.எஸ்.ராஜா போல பாட்டுக்கு ஒரு ஏ.எம்.ராஜா முன்னவர் கவர்ச்சிகரமான குரலாளன் என்றால் பின்னவர் தேன் கனிந்து சொட்டும் பாட்டுக்காரர்.
தன் முகத்தை அடையாளப்படுத்த விரும்பாத ஒலிபரப்பாளர் ஒருபுறம், ஆனால் ஏ.எம்.ராஜாவை நினைத்தால் அவரின் குரல் ஜெமினி கணேசனாக உரு மாறி விடும். நிஜத்தோற்றத்தோடு ஒட்டவே முடியாமல் அச்சொட்டாகப் பொருந்திப் போய் விடும்.
அதனால் தானோ என்னமோ எம்.ஜி.ஆர் தொட்டுப் பல நடிகர்களுக்கும் பாடியிருந்தாலும் இந்த ஏ.எம்.ராஜாவைத் தொடர்ந்து நினைக்க வைப்பவை ஜெமினி கணேசன் பாட்டுகள்.

தனது 22 வது வயதில் பாட வந்தவர் 40 வயதுக்குள் பாடகராக, இசையமைப்பாளராகக் கோலோச்சி விட்டு எழுபதுகளோடு தன் முக்கிய பாட்டுப் பயணத்தை முடித்து விட்டார். அதன் பிறகான பத்தாண்டுகள் மேடைப் பாடகராகவே அதிகம் அறியப்பட்டார். தமிழ்த் திரையிசையில் இசையமைப்பாளர்களின் ஆயுள் குறைவு, இங்கே ஆயுள் என்பது அவர்களுக்குச் சுக்கிர திசை காட்டும் காலம். ஏ.எம்.ராஜாவும் அதில் ஒருவரே.

“ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் 
என்ன வேண்டும் சொல்லு ஏன் இந்த வம்பு.......” (அன்பு ரோஜா)

https://youtu.be/6CcKN_p5Qgo

“செந்தாமரையே செந்தேன் இதழே
பெண் ஓவியே கண்ணே வருக கண்ணே வருக...” (புகுந்த வீடு)

https://youtu.be/ZIJgMsoGUu8

“எதைக் கேட்பதோ எதைச்ச் சொல்வதோ
நான் அறியாத பெண் அல்லவோ.....” (பத்து மாத பந்தம்)

என்று எழுபதுகளின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இந்த ஏ.எம்.ராஜாவுக்கு மானசீகமாகக் கொடுத்த பிரியாவிடைப் பாடல்கள் போலவே இருக்கும். 

வாழ்க்கையிலும் இணைந்த  ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியுமாக, தமிழ்த் திரையிசையின் நீண்ட நெடும் காலத்துப் பாட்டு ஜோடி.

“பழகத் தெரிய வேணும் உலகில் 
பார்த்து நடக்க வேண்டும்
பெண்ணே......”

https://youtu.be/HG6DaH_5MN0

இந்தப் பாட்டைக் கேட்டால் பெண்ணியவாதிகளுக்குக் கோபம் வராது அப்படியொரு ஆற்றுப்படுத்தும் குரல். 

“இதய வானின் உதய நிலவே 
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்....”

https://youtu.be/UuZmjOyjapU

என்னுடைய நள்ளிரவு வானொலி ஒலிபரப்புகளில் அந்தக் காலத்தில் அடிக்கடி நான் ஒலிபரப்புவது . அமரர் கல்கியின் “பார்த்திபன் கனவு” படத்துக்காக இன்னுமொரு பெரும் எழுத்தாளர் விந்தன் எழுதிய பாட்டு அது.  அந்த இருட்டுப் பொழுதுகளின் ஏகாந்தத்தை இசையால் மொழி பெயர்ப்பதாக உணர்வேன்.

“பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா...”

அதே படத்தில் கண்ணதாசனும் தன் பங்குக்குக் கொடுத்த இன்னொன்றும் சேர, ஏ.எம்.ராஜாவுக்கு இன்னொரு விதமாகப் பாடுவாரோ என்று எண்ண வைப்பார் பி.சுசீலா.

“மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ

https://youtu.be/BXUtr3fskag

ஏ.எம்.ராஜாவை ஒரு இசையமைப்பாளராக நான் அதிகம் கொண்டாடுவது இந்தப் பாடலில் தான், அதற்காக அவர் ஒரு இசையமைப்பாளராகத் தன் சாகித்தியத்தை மற்றைய பாடல்களிலும் காட்டாதவர் அல்லவே.

“நிலவும் மலரும் பாடுது
  என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது”

https://youtu.be/bXsz7BYKC50

அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.

“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”

எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.

“அருகில் வந்தாள் உருகி நின்றாள் அமைதி தந்தாளே”

https://youtu.be/q5I9V85_0Vs

களத்தூர் கண்ணம்மாவின் காதலன் ஜெமினியின் சோக ராகத்தைக் கேட்கும் போது மனசுக்குள் ஜெமினிக்குப் பொருந்துவது P.B.ஶ்ரீனிவாசா அல்லது A.M.ராஜாவா என்று குட்டிப் பட்டி மன்றம் போடும். ஆனால் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம் போல தராசின் தட்டுகள் ஒரே நிலையில் நிற்கும்.

தனிமையிலே...தனிமையிலே....தனிமையிலே
இனிமை காண முடியுமா....”

https://youtu.be/kii2WqDjJfQ

முகப்பு வரிகளை மட்டும் எடுத்து கொரோனா யுகத்தின் பாடலாகச் சொல்லி மகிழ்ந்தோம் சமூக வலைத்தளங்களில்.

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையே...நான் இல்லையே...

https://youtu.be/3ZLdDkkRMbo

உங்களுக்கு ஒரு போட்டி, மேற்குறித்த பாடலில் ஏ.எம்.ராஜா பாடும் அந்தச் சங்கதியை மட்டும் கவர்ந்து அச்சொட்டாகப் பாடித்தான் காட்ட முடியுமா?  ஒரு தேர்ந்த சிற்பியின் மை வண்ணத்தில் மெல்ல மெல்ல உருப் பெறும் சிலையாகவல்லோ இந்தப் பாடலும் பிறக்கிறது. 

ஒரு திறமையான கலைஞனுக்குத் தோதான படைப்பாளியும் தோள் கொடுத்தால் அது ரசிகர்களுக்குப் பொக்கிஷமாக வந்து விளையும், அதுதான் ஏ.எம்.ராஜாவும் இயக்குநர் ஶ்ரீதரும் இணைந்த போது கிட்டியது. கல்யாணப் பரிசு பாடல்களைக் கேட்கும் போது இசையமைப்பாளராக ராஜாவின் உச்சம் தெரியும். “உன்னைக் கண்டு நான் ஆட” படம் வந்து ஐம்பது வருடங்கள் கழித்தும் வானொலிகளின் தீபாவளிப்பாடலாக இருக்கிறது. 
வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் என்று அள்ள அள்ளக் கொட்டும் கல்யாணப் பரிசுகள்.

“ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்....”

https://youtu.be/R_k_dBlRn20

ஏ.எம்.ராஜா & சுசீலா குரல்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது இவை என்ன குரல்களா இல்லை வாத்தியங்களின் கூட்டா என்று பிரித்தறிய முடியாததொரு இசைவு.

ஏ.எம்.ராஜா என்ற தேன் நிலவின் நூற்றுக்கணக்கான பாடல் சமுத்திரத்தில் முக்குளித்து முத்தெடுக்கலாம் ஒவ்வொன்றும் தரும் இனிமையே தனி சுகம் தரும்.

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

https://youtu.be/0qV8W1z6ZZo

என்றும் பதினாறாக இருக்கும் இந்தப் பாடல் போலவே சாகாவரம் கொண்டு நம் 
இதய வானின் உதய நிலவு ஏ.எம்.ராஜா அது ஒரு தேன் நிலவு

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லையா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லையா.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
நம் இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜாவுக்கு ❤️

காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே (பாட்டுக்) கடலும் நீயே

கானா பிரபா
01.07.2020