Pages

Tuesday, October 19, 2010

"ஆண்பாவம்" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு


டிசம்பர் 5 இந்த நாளோடு "ஆண்பாவம்"திரைப்படம் வந்து 25 ஆண்டுகளைப் பிடிக்கப் போகின்றது. இந்தப் படம் வந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு விழா ஒன்று ஏற்பாடாகியிருப்பதாகச் செய்தி ஒன்றை எங்கோ படித்தேன். உடனே றேடியோஸ்பதி சார்பில் நாமும் விழா எடுக்கலாமே என்று முன்னர் போட்ட ஆண்பாவம் பின்னணி இசைத் தொகுப்பைத் தூசு தட்டி மேலும் பாடல்களையும் இணைத்து இந்தப் பதிவைத் தருகின்றேன்.

ஒருவன் தன்னிடமிருக்கும் பலம் எது என்பதை உணர்ந்து அதையே தான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் பயன்படுத்திக் கொண்டால் பெருவெற்றியடைவான் என்பதற்கு பாண்டியராஜனின் இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம். தன் குருநாதர் பாக்யராஜின் நகைச்சுவை கலந்த திரைக்கதை என்ற ஆயுதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு முழுமையானதொரு முகம் சுழிக்காத குடும்பச் சித்திரமாக ஆண்பாவம் படத்தை அளித்திருக்கின்றார்.


றேடியோஸ்பதியில் பின்னணி இசைத் தொகுப்புக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நண்பர் சி.வி.ஆர் "அந்த ஆண்பாவம் படத்தில் சீதா தண்ணிக்குடம் எடுத்துப் போகும் சீனில் வரும் பிஜிஎம் கொடுங்களேன், ரிங்டோனா பாவிக்கணும்" என்று கேட்கும் வரை இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் அவ்வளவு நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஆனால் பின்னணி இசைப்பிரிப்பைத் தொடங்கிப் பதிவு போட்டு இரண்டு வருடங்களைக் கடந்தும் மீண்டும் மீண்டும் என் பதிவுக்குச் சென்று நானே மீள ஒலிக்கவிட்டுக் கேட்கும் அளவுக்கு இந்த ஆண்பாவம் படத்தின் பின்னணி இசை தேனில் குழைத்த ஒரு கலவை என்று சொல்லலாம், இன்னும் திகட்டவில்லை.



வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.


இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் "கன்னி ராசி" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பதிவுலகத்தில் கூட பாண்டீஸ் பேமஸ் ;) பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது. பாண்டியனின் அந்தக் கள்ளமில்லாக் கிராமியச் சிரிப்பை மீண்டும் திரையில் காணும் போது நல்லதொரு கலைஞனைத் தொலைத்த கவலையும் எட்டிப்பார்க்கும்.

இந்த வேளை இதே படத்தை சச்சா ப்யார் என்ற ஹிந்திப்படமாக, ஜீஹீசாவ்லாவை ஹீரோயினாக வைத்து எடுத்த படம் இன்னும் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பது கொசுறுச் செய்தி.


ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.
இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.


தொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

றேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்



ராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்



கனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்



சண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை



சீதா அறிமுகக் காட்சி



சீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி



மாப்பிளையை புடிச்சிருக்கு


பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை



கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி



சீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்



பாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா



சீதாவை தேடி புதுமாப்பிள்ளை வரும் நேரம்



ரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்





ஆண்பாவம் படத்தின் பாடல்கள்


ஏ வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் குந்தணும் - இளையராஜா குழுவினர்



குயிலே குயிலே பூங்குயிலே - மலேசியா வாசுதேவன், சித்ரா



காதல் கசக்குதைய்யா - இளையராஜா



என்னைப் பாடச்சொல்லாதே - ஜானகி



ஒட்டி வந்த சிங்கக்குட்டி குத்துச்சண்டை போடலாமா - கொல்லங்குடி கருப்பாயி



பேராண்டி பேராண்டி பொண்ணு மனம் பாராண்டி - கொல்லங்குடி கருப்பாயி



கூத்து பார்க்க அவரு போனார் தன்னானேனானே - கொல்லங்குடி கருப்பாயி



Tuesday, October 12, 2010

றேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞருக்கு வயசு 80

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தமுறை வரும் புதிர் சற்று வித்தியாசமாக திரைப்படத்திற்கு அத்திபூத்தாற்போல நுழைந்த ஒரு கலைஞர் எடுத்த எடுப்பிலேயே அவரின் இசையமைப்பில் வெளிவந்த படத்துக்குத் தேசியவிருதைப் பெற்றுக் கொடுத்த சங்கதியை வைத்துப் புதிர் போடுகின்றேன்.

குறித்த அந்த இசைக் கலைஞர் இந்த ஆண்டோடு 80 வயதை எட்டியிருக்கின்றார், நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த அந்தப் படம் குறித்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப்படம் அது. கூடவே இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடன இயக்குனர் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதைத் தட்டிக்கொண்டது மேலதிக தகவல்.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் அடலெயில்ட் நகரில் இடம்பெற்ற படவிழாவிலும் கலந்து கொண்டதோடு சிட்னியிலும் இரண்டு காட்சிகள் காண்பிக்கப்பட இருந்தது. இந்தப் படத்துக்கெல்லாம் கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்திருந்தன. கூடவே படத்தின் கதையம்சமும் எடுத்த விதமும் கூட இயல்பானதொரு வரலாற்றுச் சித்திரமாக அமைந்தது.

சரி, கேள்வி இதுதான். எடுத்த எடுப்பிலேயே தான் முதலில் இசையமைத்த படத்தில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார்? குறித்த அந்தத் தமிழ்ப்படத்தின் பெயர் சொன்னால் போனஸ் புள்ளிகள் ;)

Sunday, October 3, 2010

ஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு


"அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது"
பலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.

"ஷிக்கார்" மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.

இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.

பலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.






இன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.
இப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.



முதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன?
காம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்
பலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.

இந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.


தலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து "குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே" என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் "பிரதிகாடின்சு" என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் "இளைய"ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.

ஷிக்கார் - மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.

மலையாளப்பாடல் "எந்தடி எந்தடி பனங்கிளியே"



தெலுங்குப்பாடல் "பிரதிகாடின்சு"