Pages

Sunday, May 29, 2022

விக்ரம் (1986) பின்னணி இசைத் தொகுப்பு.

கமல்ஹாசனின் பெரும் படைப்புகளின் விதையாக அமைந்த “விக்ரம்" திரைப்படம் வெளிவந்து இன்றோடு 36 ஆண்டுகளைத்  தொடுகின்றது. “ராஜ பார்வை” படத்துக்குப் பின் பெரும் பொருட்செலவில் ஒரு கோடிக் கனவு என்ற தொனியில் எடுத்து வெளியானது விக்ரம்.

எழுத்தாளர் சுஜாதா குமுதத்தில் “விக்ரம்” கதையைத் தொடராக வெளியிட்டிருந்தார். சமகாலத்தில் படப்பிடிப்பின் காட்சிகளும் தொடரோடு வந்தது தனிச்சிறப்பாகக் கவனிக்கப்பட்டது. அக்னி புத்திரன் என்ற ஏவுகணை சுகிர்தராஜா (சத்யராஜ்) என்ற நாசகாரனால் கைப்பற்றப்படுகின்றது. அவன் சலாமியா என்ற விநோத ராஜ்ஜியத்தில் மறைந்திருப்பது தெரிய வந்ததும் கம்பியூட்டர் என்ஜினியர் ப்ரீத்தி (லிஸி)யோடு விக்ரம் (கமல்) அந்த நாட்டுக்குப் பயணப்பட்டு எதிரியை அழிப்பது தான் கதை.

கமல்ஹாசனோடு பரிதாபமாகச் செத்துப் போகும் அம்பிகா, லிஸி (இங்கே ப்ரீத்தி என்று), சத்யராஜ், மனோரமா, ஜனகராஜ், சாருஹாசன் இவர்களோடு வட நாட்டின் முக்கிய நட்சத்திரங்கள் அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா போன்றோர் இணைந்த பெரும் எடுப்பிலான திரைச் சித்திரம் இது.

விக்ரம் படத்தின் அனைத்துப் பாடல்களும் சோடை வைக்காத சொக்கத் தங்கம். படத்துக்காகப் படமாக்கப்பட்டு வெளிவராத “சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது” https://www.youtube.com/watch?v=NxT-G1j_9oY பாடல் உட்பட. விக்ரம் படத்தில் தெலுங்குப் பதிப்பான ஏஜெண்ட் விக்ரம் 007 படத்தில் கமலுக்காகப் பின்னணி கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். “விக்ரம் விக்ரம்” பாடலைத் தெலுங்கில் கமலோடு பாடியவரும் அவரே.

கமல்ஹாசனின் எண்ணம் பெரிது, தூர நோக்கிலானது. ஆனால் விக்ரம் அதை எந்த அளவு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்ற கேள்வியை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் கேட்டால் கமலுக்குக் கூடத் திருப்தி இல்லை என்ற பதிலே வந்திருக்கும். ஆரம்பத்தில் ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் கதை அம்பிகா கொலையோடு உளவாளியைப் பிடிப்பதோடு சோர்ந்து போகின்றது. ப்ரீத்தியுடன் ஆணா பெண்ணா என்று வீண் வம்பு வளர்ப்பது, ஜனகராஜின் பச்சையான இரட்டை அர்த்த வசனங்கள், ஒரு கட்டத்தில் சலித்துப் போகும் சலாமியா மொழி என்று இடையில் சில ஓட்டைகள். 

வில்லனைக் கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் பின்னர் அவனைப் பற்றி எந்தவித கரிசனையும் இல்லாதது போலவும், வில்லன் பக்கமும் பெரிய ஆளணி இல்லாத ஜெய்சங்கர் காலம் போலவும் குழப்பம்.

எல்லாவற்றுக்கும் பெரிய ஓட்டையாக கடைசியில் வில்லன் சத்யராஜ் பாரசூட்டில் தப்பும் போது எந்தவித ஆயமும் இல்லாமல் கமலும், ப்ரீத்தியும் ஹெலிகொப்டரில் இருந்து சத்யராஜ் மேல் பாய்ந்து நடத்தும் போராட்டம் கிராபிக்ஸுக்காக வலிந்திழுத்தது போலத் தோன்றியதோடு அந்தக் காட்சியும் படு செயற்கையாகத் தெரிந்தது. ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் கூட இந்த மாதிரியான தந்திரக் காட்சி நுட்பமாகப் படமாக்கப்படும். ஒரு கட்டத்தில் விக்ரம் பட இயக்குநர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தியை மெய்ப்பிப்பது போல அந்த இறுதிக் காட்சிகள்.

விக்ரம் கதையை மிகவும் செம்மையாக மீண்டும் எடுத்திருக்க முடியும். தேவையில்லாத இடைச் செருகல்கள் இல்லாமல்.

விக்ரம் பின்னணி இசையைத் தேடித் தேடி எடுத்துக் கோவையாக்கி மீள் ஒலியேற்றம்செய்து முடித்தாயிற்று. 27 நிமிடங்களை அண்மிக்கின்றது. 

இந்த வேலையில் படத்தையும் மீளப் பார்க்கும் போது ஒன்றே  ஒன்று தான் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் சவால் விடுகிறது.

அது

இளையராஜாவின் மிரட்டலான இசை மட்டுமே. இசைஞானி இளையராஜா மட்டுமே இந்தக் கனவுப் படைப்புக்கு மானசீகமாக உழைத்திருக்கிறார் என்பது புரியும்.

இதோ

விக்ரம் (1986) பின்னணி இசையைக் கேட்டு இன்புறுங்கள்.

https://www.youtube.com/watch?v=F2RQwx-36pA

கானா பிரபா

29.05.2022

Saturday, May 28, 2022

“சுப்பண்ணா சொன்னாருன்னா சுதந்திரம் வந்ததுன்னு



“சுப்பண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
அப்பண்ணா நாம இன்னும்
அடிமைகள் தானா அண்ணா”

காலை எழுந்ததுமே காத்திருந்து காதில் போட வேண்டும் என்று நினைத்திருக்கும் போல இந்தப் பாட்டு.
உடனே ஓடிச் சென்று கேட்டு விட்டுத்தான் மறுவேலை.

பாடல் வரிகளில் தொழிலாள வர்க்கத்தின் மனக்குமுறல் வெளிப்பட்டாலும் இது இலங்கைத்தீவின் அரசியல் சீர்கேட்டை அன்றே கண்ணதாசன் பாடி வைத்துவிட்டாரோ என்றே எண்ணத் தோன்றும்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தப் பாடலும், முக்கிய காட்சிகள்
இலங்கையில் படமாக்கப்பட்ட ஒற்றுமையும் கூடவே பொருந்தும்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் இது முக்கியமானது. காரணம் கே.பாலாஜியோடு இலங்கையின் உச்ச பணக்காரர் மஹாராஜா நிறுவனம் தயாரித்தது. இலங்கைக் கலைஞர்களும் பயன்பட்டார்கள் ஆனால் பங்கு போடவில்லை. இது முழுதான ரஜினி சினிமா என்ற தோற்றப்பாடே முக்கியமாக இருந்தது.
அந்தக் காலத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அங்கே படம் எடுத்த கதைகளைப் பின்னாளில் சொல்லியிருக்கிறார்கள். மஹாராஜாவின் ஒரு பெரிய வாகனம் ஒன்று இந்தப் படத்துக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் மேல் வெளிச்சம் பட்டது.

ஒருமுறை உலகத்தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் பேட்டி என்பது எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணமாக ரஜினிகாந்தோடு தான் எடுத்த பேட்டியைச் சொல்லிச் சிரித்தார்.
ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்க வந்தாயிற்று. ஹமீத் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ரஜினி “ஆம்”, “இல்லை” என்றே சொல்லிக் கொண்டு போகிறார். என்னடா இதுவென்று இவர் முழித்து விட்டுப் பிறகு தான் புரிந்ததாம் கேள்விகளுக்குள்ளேயே பதில்களையும் வைத்துக் கொண்டு தான் கேட்டதாக 😀

1980 ஜனவரி 26 இந்தியக் குடியரசு தினத்தன்று வெளியாகி ரஜினிக்கு மாபெரும் அங்கீகாரத்தைக் கொடுத்தது “பில்லா” திரைப்படம். இன்றளவும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது அனல் பறக்கும்.
அது போல் கே.பாலாஜி மீண்டும் ரஜினியோடு இணைந்து
1981 ஜனவரி 26 இல் வெளியிட்டது “தீ”.

பில்லாவை இயக்கிய கிருஷ்ணமூர்த்தியே படத்தை இயக்கினார்.
ஒப்பீட்டளவில் “பில்லா” வின் சாதனையை “தீ” எட்டவில்லை. இரண்டுமே அமிதாப் நடித்த ஹிந்திப்படங்களின் மீள் உருவாக்கங்கள் தான், “தீவார்” படமே “தீ” ஆனது. பில்லா போலவே கெட்ட சவகாசத்தால் அழிவது போன்ற கதைப் பின்னணி இருந்தாலும், கூடவே சுமன் பங்கு போட்டது படத்தின் வெற்றியில் பாதிப்பை எழுப்பியிருக்கும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் எண்பதுகளிலும் களைப்பில்லாத சிங்கம் என்பதற்கு “தீ” படப் பாடல்களும் நல்லுதாரணம். “சுப்பண்ணா சொன்னாருன்னா” ரஜினிக்குக் கிடைத்த ஒரே பாட்டு. ரஜினிக்கான சூழல் பாடலாக எல்.ஆர்.ஈஸ்வரி பாடும்
“வாரே வா வா இது இந்திர லோகம்”
https://www.youtube.com/watch?v=23v3MkW7yVw
ஆகா என்னவொரு மயக்கக் கிறக்கம் ஈஸ்வரியார் குரலில்.

“ஐயாவுக்கு மனசிருக்கு” https://www.youtube.com/watch?v=svhmC67kYcY ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம் கூட்டணியின் இன்னொரு ஹிட். தவிர இந்தப் பாடலைத் தான் பட விளம்பரங்களின் முகப்புப் பாடலாக வானொலியில் அப்போது பயன்படுத்தினார்கள்.

“சுப்பண்ணா சொன்னாருன்னா” மலேசியா வாசுதேவனோடு, கோவை செளந்தரராஜன், எஸ்.என்.சுரேந்தர் பாடிய அற்புதமான பாடல்.

ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒண்ணு ரெண்டு வாழுது அப்பா
சோசலிசப் பாடலைக் கேக்குறோம்
பானையைப் பாக்குறோம்
ஒண்ணையும் காணோமே….

சுப்பண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
அப்பண்ணா நாம இன்னும்
அடிமைகள் தானா அண்ணா

https://www.youtube.com/watch?v=3myRaqfoN68

கானா பிரபா


Sunday, May 22, 2022

சங்கீதா சஜித் (Sangeetha Sajith) விண்ணேகினார் 💔


“தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை”

https://youtu.be/4Sj01gqgirE

பாடலை ஒலிபரப்பி விட்டு வானொலியில் “அறிவுக் களஞ்சியம்” என்ற போட்டிநிகழ்ச்சியை நடத்துவேன். ஒன்றல்ல இரண்டெல்ல 2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும். அவ்விதம் சங்கீதா சஜித் என்ற தமிழுக்கு அந்நியமான பாடகியின் குரல் மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பாட்டுக்குக் கொடுத்த மீன் துள்ளல் இசையும் பிடித்தமானது.

சங்கீதா சஜித் தனது 46 வது வயதில் இன்று இவ்வுலகில் இருந்து விடை பெற்று விட்டார்.


அந்த வசீகரக் குரல் “பார்த்தாலே பரவசம்" https://www.youtube.com/watch?v=Vg2BF1uBe8A ஈறாக உள்வாங்கப்பட்டது ரஹ்மானால். ரட்சகனின் “போகும் வழியெல்லாம்" தெலுங்குக்குப் போன போது சங்கீதா தான் பிரேமேயோடு https://www.youtube.com/watch?v=t_pHpCv-GVs பாடிச் சிறப்பித்தார்.


இசைஞானி இளையராஜாவின் “கேரளவர்மா பழசிராஜா”விலும் அவர் கூட்டிசைத்திருக்கின்றார் “ஓடத்தன்னில்" https://www.youtube.com/watch?v=vmRmf6oiNoA பாடல் வழியே.

தேனிசைத் தென்றல் தேவா "மதுமதி" படத்தில் தேனிசைத் தென்றல் தேவா "மதுமதி" படத்தில்

"ஓ மதிவாணா"

https://www.youtube.com/watch?v=yjIZmUhfMAs 

"நீராரும் கடலுடுத்த" https://www.youtube.com/watch?v=PT9CH5KefF4 வழியேயும் பயன்படுத்தினார் இந்த இளங்குரலை.

சினேகிதியே படத்தில் “கல்லூரி மலரே”, “ராதை மனதில்” பாடல்களில் சித்ரா, சுஜாதாவுடன் கூட்டாகப் பாடியவர் வேறு யாருமல்ல அவரே தான். இவ்விதம் கூட்டாகப் பாட வைத்ததில் இன்னொன்று “செல்லா நம் வீட்டுக்கு" என்று வித்யாசாகரும் இந்தக் காந்தர்வக் குரலை விட்டு வைக்கவில்லை.

“அம்பிலிப் பூ வட்டும் பொன்னுருளி"

https://www.youtube.com/watch?v=c6aZhfmw6gE


பாடிய வகையில் “என்னு ஸ்வந்தம் ஜானகிக்கு" இன்னும் மலையாளிகளோட சுகந்த கீதமாய் மனசில் நிறைய, இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களோடு தன் குரலை மட்டும் இங்கே விட்டுப் பறந்து விட்டது சங்கீதா எனும் இன்னொரு இளவயதுப் பாட்டுக் குயில்.


கானா பிரபா

22.05.2022

Monday, May 16, 2022

விஜய் மில்டன் தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி



30 வருடங்களாகத் தேடி அலைந்த பாட்டு, 

30 வருடங்களுக்குப் பின் கேட்கிறேன் இப்படி ஒரு தலைப்போடு கடந்த மார்ச் 2021 இல் ஒரு பாடலைப் பகிர்ந்திருந்தேன்.

சிறு வயசில் ஒரு கலியாண வீட்டில் கேட்ட இந்தப் பாட்டின் ஆரம்ப வரிகள், மற்றும் மெட்டு மட்டுமே நினைவில் இருந்தது.

ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் முதற் கொண்டு, யார் இசை என்றே தெரியாத சூழலில் தேடிக் கொண்டே இருந்தேன்.

வேடிக்கை என்னவென்றால் இந்தப் பாடலுக்கு இசையமைத்த வி.எஸ்.நரசிம்மனைக் கூட இடைப்பட்ட காலத்தில் பேட்டியும் எடுத்திருந்தேன்.

இணையத்தில் “தங்க நிலவு” என்று தேடினால் ரிக்‌ஷா மாமாவின் தங்க நிலவுக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. இத்தனை ஆண்டுகளாகத் தேடித் தேடி ஈற்றில் சில வருடங்களுக்கு முன் நட்பாகிய கொழும்பில் இருக்கும் நண்பர் சக இசைக் களஞ்சிய நிர்வாகி ஶ்ரீநிவாசன் அவர்களின் காதில் ஒப்புவித்தேன்.  அவருக்கு உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. நேற்று மீண்டும் நினைப்பூட்டினேன். ஏதோ நினைவில் மெட்டைப் பாடிக் காட்டினார். 

அதே தான் என்று குதித்தேன் 🙂

உடனே சுடச் சுட அனுப்பி வைத்தார் தன் பெட்டகத்தில் தேடி.

பாடலை வி.எஸ்.நரசிம்மனின் ஆஸ்தானப் பாடகி பி.சுசீலாம்மாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களும் பாடுகிறார்கள். படத்தை இயக்கிய பூவரசு தான் பாடல் வரிகள். 

என் வாழ்நாள் தவம் ஒன்று பலித்தது.😍😍😍

இப்படியாக எழுதிப் பகிர்ந்திருந்தேன்.


கடந்த சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்  பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. மேற் குறிப்பிட்ட “சித்திரம் பேசுதடி” படத்தை இயக்கியவர் சாட்சாத் அவரின் தந்தையே தான். அந்தப் “பூவரசு" என்ற புனைபெயரில் ஒளிந்திருக்கும் விஜய்ராஜ்.

விஜய் மில்டனின் தந்தை நாடகங்களை எழுதி இயக்கியவர் என்றும் அவரின் “காக்கை குயிலானது” நாடகம் தான் “சித்திரம் பேசுதடி” படமாக எடுக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் சொன்னார்.

இதற்கு முன்னர் விஜய் மில்டனின் தந்தை இயக்கிய “இதயம் தேடும் உதயம்” என்ற படம் அண்மையில் மறைந்த அன்புக்குரிய சக்ரவர்த்தி நாயகனாக நடித்து வெளிவராமலேயே போய் விட்டது. அந்தப் படத்தின் இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள்.

“இதயம் தேடும் உதயம்” படத்திலும் அற்புதமான பாடல்கள் உண்டு

https://mio.to/album/Shankar-Ganesh/Idhayam+Thedum+Udhayam+%281984%29

அது சரி விஜய் மில்டனின் தந்தை தன் மகனுக்கு ஆற்றிய உதவிதான் என்ன?

விஜய் மில்டனுக்கோ திரைப்படக் கல்லூரியில் படிக்க ஆசை, அதுவும் இயக்குநராகும் துறை சார்ந்த படிப்பு வேண்டும். ஆனால் அந்த நேரம் டிகிரி முடித்தால் தான் அந்தத் துறையில் படிக்க வேண்டும். அப்போது விஜய் மில்டனோ பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை.

அப்போது விஜய் மில்டனின் அப்பா சொன்னாராம்,

“நான் இரண்டு படங்களை இயக்கிய போதும் மீதி எல்லாத் துறையையும் இலகுவாகக் கவனிக்க முடிந்தது ஆனால் இந்த ஒளிப்பதிவாளர் வேலை மட்டும் பிடிபடவில்லை, நீ அதையே படித்து அதன் வழியா பின்னாடி இயக்குநராக வர வாய்ப்பிருக்கும்”

என்று அறிவுரை கொடுத்தாராம். அப்பேர்ப்பட்ட அறிவுரை தான் இன்று வெற்றிகரமான விஜய் மில்டன் என்ற ஒளிப்பதிவாளரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமா தன் தந்தையின் கனவும், தன் கனவுமான இயக்கத்தை வேறு செய்து காட்டியும் விட்டார் விஜய் மில்டன். எப்பேர்ப்பட்டதொரு உன்னதமானதொரு வழிகாட்டல் அது பாருங்கள்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் கேட்ட அந்தப் பாடல், இப்போது அடுத்த ஆண்டிலேயே இன்னொரு சுவையான வரலாற்றையும் கொடுத்து விட்டது. 

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் தந்தை பூவரசு என்ற பெயரில் எழுதி, நரசிம்மன் இசையில் சுசீலாம்மாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய, 30 வருடங்களாகத் தேடிய பாட்டு இதுதான்,

“தங்க நிலவு தரையில் இறங்கி

 நடந்து போகுது

அதைத் தங்கச் சொல்லி 

கெஞ்சிப் போகுது”

https://www.youtube.com/watch?v=j8Y-uGa6qWQ

கானா பிரபா


Tuesday, May 10, 2022

கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே ❤️


இசைஞானி இளையராஜாவின் தாளலயம் காலத்துக்குக் காலம் வெவ்வேறு பரிமாணத்தில் விளைந்த போது, அது தொண்ணூறுகளில் கருக்கட்டிய விதத்தை “உடல் தழுவத் தழுவ” (கண்மணி) வழியாக முன்னர் உச்சுக் கொட்டிச் சிலாகித்திருந்ததைப் படித்திருப்பீர்கள். அந்த மாதிரியான பாடல்களில் Tempo அப்படியே தொடக்கம் முதல் முடிவிடம் வரை ஒரே சீராக முடுக்கி விடப்பட்டிருக்க, முன்னால் நின்று பாடுவார்கள். அதிலிருந்து இன்னொரு பரிமாணத்தில் “ஒரு மைனா மைனாக் குருவி”, “வெண்ணிலவு கொதிப்பதென்ன” வந்தது போல அதே அலைவரிசையில் நான் ரசிப்பது இந்த

“கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே” 

https://www.youtube.com/watch?v=P9JlBumqATk

“டுக் டுக் டா டுடுடடுக் டுக் டா” அந்த Tempo தன் பாட்டுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்க, பாடுபவர்கள் மெல்லிசை கூட்டும் புதுமை இங்கிருக்கும்.

இந்தப் பாடலின் அழகியல் என்னவென்றால் போதாக்குறைக்குக் கூட்டுக் குரல்களையும் உள்ளே நுழைத்து விடுவார். அது ஏதோ வண்ண விளக்கு ஒளி பாய்ச்சிய மேடையில் கோரஸ் பாடும் வண்ணச் சிட்டுக்கள் வந்து பாடி விட்டு மீண்டும் மனோ, சித்ரா கையில் ஒப்படைத்து விட்டுப் போகுமாற் போல.

“கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே” போலீஸ் படத்துப் பாட்டுக்கு கங்கை அமரனின் குறும்புத் தனமான வரிகள்.

“உள்ளே வெளியே” படம் பார்த்திபன் மசாலா சமாச்சாரங்களை அள்ளி வீசி எடுத்த “நீங்கள் கேட்டவை” ரகம். முந்திய வருடம் குரு நாதரோடு “ராசுக்குட்டி", அடுத்த வருடம் சீடரோடு “உள்ளே வெளியே” என்று ஐஸ்வர்யா நடித்த, அவரின் தாராளமயமாக்கல் கொள்கையும் சேர்ந்து கொள்ள படம் பார்த்திபன் நினைத்தது போலவே “உங்கள் விருப்பம்" ஆனது.

“பொண்டாட்டி தேவை” படத்துக்குப் பின் இயக்குநர் பார்த்திபனோடு கை கோர்த்த இளையராஜா, இடையில் தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் என்று வெவ்வேறு இயக்குநர்களோடு பார்த்திபனை நாயகனாக்கி வந்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டதை அந்த நேரம் என்ன மனநிலையில் பார்த்திபனைப் பார்த்துச் சொல்லியிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. 

ஆனாலும் “கண்டு பிடி நீதான்” , “சக்கரக்கட்டி சக்கரக்கட்டி” பாடல்களோடு தன் கருமமே இசையாகக் கொட்டி விட்டார்.

இளையராஜாவின் காதலன் பார்த்திபன் இயக்கிய படங்களில் பிடித்த பாடல் என்றால் முந்திக் கொண்டு இந்தப் பாடலைத் தான் கையைக் காட்டுவேன்.

ஒருமுறை இந்தப் பாடலில் மூழ்கினால் அப்படியே நீர்ச்சுழி போல இழுத்துக் கொண்டு போய் அளவு கணக்கில்லாமல் கேட்க வைத்து விட்டுத் தான் அனுப்பி விடும். அப்போதும் மனம் வராமல் கரையேறுவேன்.

நேற்றும் அப்படித்தான்.

என்னை மறந்தேன்

இன்ப மருந்தே

உள்ளத்தில் எண்ணத்தில்

தித்தித்தை போடுதே

கள்ளத்தனமாக

கன்னம் வைத்த காதலியே

https://www.youtube.com/watch?v=P9JlBumqATk

கானா பிரபா


Thursday, May 5, 2022

அரிதாரம் பூசிய (சங்கர்) கணேஷ்


“நடிகனின் காதலி நாடகம் ஏனடி

ஆடலில் பாடலில் வல்லவன் நானடி....”

என்று பாடலுக்கு மட்டுமா இசைமைத்தார்? ஆடினார், பாடினார், படம் கூட இயக்கினார் (சங்கர்) கணேஷ் அவர்கள்.

“ஏ உன்னத்தான்

எங்க பாக்குறே..

உன்னத்தான்...அட...உன்னத்தான்

செப்புக்குடம் தூக்கிப் போற

செல்லம்மா.....நான்

விக்கிப் போறேன் தாகத்துலே

நில்லேம்மா...”

https://www.youtube.com/watch?v=21D3MH26j78

இலங்கை வானொலி பூத்துக் குலுங்கிய காலத்தில் மறக்கவெண்ணாப் பாடல்களில் ஒன்றாக இதையும் கொண்டாடுவார்கள் அந்தக் காலத்து 60s, 70s kids.

ஒரு காலத்தில் நாயகனே பாடி நடித்த காலம் போய், பின்னர் எல்லாமும் அவரே ஆன டி.ராஜேந்தர் காலம் வரை கண்டு இன்று ஜி.வி.பிரகாஷ்குமார் காலத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்.

ஏன் இளையராஜாவுக்குக் கூட இந்த கதாநாயக ஆசை விடவில்லை என்று முந்திய பதிவில் பகிர்ந்திருக்கிறேன். 

https://www.facebook.com/1393380529/posts/10219189976645595/?d=n

“புதிய வார்ப்புகள்” கங்கை அமரனின் குரலை மட்டும் வாங்கிக் கொண்டு பாக்யராஜுக்கு ஒட்டி வைத்தது.

ஆனால் இந்த விஷயத்தில் சமகாலத்தில் இயங்கிய (சங்கர்) கணேஷ் அவர்களுக்கும் இந்த அரிதார ஆசை விட்டு வைக்கவில்லை.

தன்னுடைய இசைக் கூட்டாளி சங்கரோடு இணைந்து இயக்குநர் ஆசையையும் “ஜகதலப் பிரதாபன்” 

https://www.facebook.com/1393380529/posts/10228182685497696/?d=n

வழியாகத் தீர்த்துக் கொண்டவர் இளையராஜா இசையில் “பங்குனிக்குப்புறம் சித்திரையே”  https://www.youtube.com/watch?v=YYCFRsCPqIk

பாடலையும் பாடி வைத்து விட்டார் இந்த இசையமைப்பாளர் ஆகிய கணேஷ் அவர்கள்.

சரி இனி அவரின் அரிதார முகத்தைப் பார்ப்போம்.

இளையராஜா ரசிகர்களுக்குத் தீனி போட்ட சாதனை, எச்சில் இரவுகள், ஆளப்பிறந்தவன், ஆயிரம் நிலவே வா போன்ற படங்களோடு எழுபதுகளில் “பட்டாம்பூச்சி” படத்தையும் இயக்கிய பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் அவர்களே இந்த (சங்கர்) கணேஷ் மனதில் நாயக ஆசையை உண்டு பண்ணி “ஒத்தையடிப் பாதையிலே” படத்தையும் இயக்கினார். அந்தப் படத்தில் கணேஷ் நடித்ததே மறந்து போன யுகத்தில் இன்றும் நினைவில் தங்கியிருப்பது அந்த “செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா” பாடல் தான். அதே படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாடல் மட்டுமல்ல மலேசியா வாசுதேவன் பாடிய “வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே” பாடலும் சேர்ந்து சங்கர் கணேஷ் இசையில் நாயகன் (சங்கர்) கணேஷ் இற்காகக் குரல் கொடுத்தார்கள்.

அடுத்தது தான் (சங்கர்) கணேஷ் இற்கு இன்னொரு மகுடமாக அமைந்தது. ஒரே படத்திலேயே T.M.செளந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகிய மூவருமே (சங்கர்) கணேஷ் அவர்களுக்காகப் பாடிய படமும் வாய்த்தது, அது 

சங்கர் கணேஷ் கூட்டணியின் புகழ் பூத்த பாடலான “நான் உன்னெ நெனச்சேன்” என்ற தலைப்பிலேயே அமைந்தும் விட்டது.

“உன்னைத் தொட்டா தோஷமில்லை” மற்றும் சில்க் ஸ்மிதாவோடும் ஆடிப் பாடும் யோகத்தோடு அமைந்த “நீ பார்த்த பார்வை புரியாத நேரம்” ஆகிய அற்புதமான பாடல்கள் எஸ்பிபி குரலில் இந்தப் படத்துக்காக சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் நாயகன் (சங்கர்) கணேஷிற்காக வாய்த்தது.

அத்தோடு அரசியலிலும் பகைக்காமல் எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் போற்றித் துதித்து செளந்தரராஜன் பாடிய “அந்த மூன்று பேருக்கும்” பாடலோடு “அடி மருதாணிப் பூவே” பாடலுமாக இந்தப் படத்தில் அமைந்தது.

“நான் உன்னெ நெனச்சேன்” பாடல்களைக் கேட்க

https://gaana.com/album/naan-unna-nenachen

“நான் உன்னெ நெனச்சேன்” படத்துக்குப் பின்னால் சில சுவாரஸ்யங்களும் உண்டு.

ஒருவாறு முட்டி மோதி ஜி.கே.வெங்கடேஷ் அறிமுகத்தோடு “வாராய் என் தோழி வாராயோ” பாடலோடு தான் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்களிடம் வாய்ப்பைப் பெற்றவர் இந்த (சங்கர்) கணேஷ்.

பாலும் பழமும், பாகப்பிரிவினை, பாதகாணிக்கை, படகோட்டி, குடியிருந்த கோயில் என்று மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்த புகழ்பூத்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

ஜி.என்.வேலுமணியின் மகன் ஜி.வி.சரவணன் அவர்களது நட்பு (சங்கர்) கணேஷுக்குக் கிடைக்கவே அந்த நட்பில், சரவணனின் சகோதரியிடம் காதலாகி “உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்” ரேஞ்சில் காதல் கவிபாடி, அந்த நேரம் அந்தப் பெரிய தயாரிப்பாளர் மகளை இந்தப் பையனுக்குக் கொடுப்பதா என்று ரசபாசமாகி ஒருவாறு ஜி.என்.வேலுமணி குடும்பத்து மாப்பிள்ளை ஆனார் (சங்கர்) கணேஷ்.




“நான் உன்னெ நெனச்சேன்” படத்துக்கு இப்போது மீண்டும் வருவோம். அந்தப் படத்தை ஶ்ரீ வேலுமணி பிலிம்ஸ் என்று குடும்பத் தயாரிப்பாக்கி, படத்தின் எழுத்தோட்டத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த படங்களின் பாடல்கள், படத் தயாரிப்பில் எடுத்த புகைப்படங்களையும் காட்சிப்படுத்தி, அந்தப் படத்தை இயக்கியது வேறு யாருமல்ல, (சங்கர்) கணேஷின் நண்பனும், மனைவி வழி மைத்துனனும் ஆன ஜி.வி.சரவணன் தான்.

அந்தப் படத்தில் சிறுவேடமும் நடித்தார் சரவணன், 

“இளவயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்” என்ற அஞ்சலிக் குறிப்போடு தான் “நான் உன்னெ நெனச்சேன்” படமும் தொடங்கும்.

ஆம், படம் வெளியான போது (சங்கர்) கணேஷுக்கு திருமண வாழ்வின் சொந்தமாக இருந்த சரவணன் மறைந்து விட்டார்.

கானா பிரபா


Tuesday, May 3, 2022

ராமராஜனால் நாயகன் ஆகிய ராஜ்கிரண்


"உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு என் ராசா 

"என் மேல் ஆசை இல்லையா....."

https://www.youtube.com/watch?v=VwLD6HMsXj0

"ராஜாதி ராஜா" படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் முழங்கிய போது அந்தப் படத்தில் ஓரமாக இருந்த மேற் சொன்ன சோகப் பாடல் மீது என் போன்றவர்களுக்கு அப்போது பெரிய ஈர்ப்பு இருந்தது.

சுசீலாம்மாவும், சித்ரா அவர்களும் கொடுத்த உணர்ச்சிப் பிரவாகமாகக் கொடுத்த அந்தப் பாடல் படத்தில் வந்திருக்கிறதா என்று யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் படியேறினால் ஏமாற்றமே மிஞ்சியது. 

90 களில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மேல் மின்சாரம் இல்லாத போர்க்கால வாழ்வியலின் ஆரம்பமும், ராஜா தியேட்டரில் ஓடிய கடைசிப் படமாக "ராஜாதி ராஜா" அமைந்து விட்டது.

அந்தப் படத்தில் ரஜினியின் ஆள் மாறாட்டக் காட்சிகளை ஒட்டி ராதா, நதியாவுக்கான பாடலாக உருவாகியிருந்தது.

அத்தோடு விட்டதா? என்றால் இல்லையே.

சில மாதங்களுக்குப் பின்னர் ராஜ்கிரண் தயாரிக்கும் “பெத்தவ மனசு” படத்தில் “உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு” என்ற அந்தப் பாடலைப் பயன்படுத்தப் போவதாக விகடன் அறைகூவியது.

ஆனால் “பெத்தவ மனசு” பட அறிவிப்போடு சரி அப்படியே இந்தப் பாடல் இரண்டாவது தடவையும் தன் ராசியை நொந்து கொண்டது.

வெற்றிகரமான பட விநியோகஸ்தராக இருந்து பின்னர் அந்த வெற்றியைத் தன் தயாரிப்பிலும் அனுபவித்தார் ராஜ்கிரண். ராமராஜனை வைத்து அவர் தயாரித்த “ராசாவே உன்னெ நம்பி”, “என்னைப் பெத்த ராசா” எல்லாம் அந்தக் காலத்து ராமராஜ யுகத்தின் வெற்றிக்கனிகள். ஆனால் இதற்கெல்லாம் முதலீடு இசைஞானி இளையராஜாவின் இசை தான். அதனால் தான் தன் படங்களிலே இசைஞானி, ராகதேவன் என்று விளம்பரப்படுத்தியதோடு இளையராஜாவின் படத்தை எப்படியாவது ஒரு காட்சியில் நுழைத்துத் தன் ராசியைக் கவனித்துக் கொண்டார் ராஜ்கிரண்.

இப்படியாக மூன்றாவதாக ராஜ்கிரண் தயாரிப்பில் ராமராஜன் நடிக்க உருவானது தான் “பெத்தவ மனசு”. 

“பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா” என்ற பாடல் ராஜ்கிரண் & ராமராஜன் கூட்டணியின் முந்தய படமான “என்னப் பெத்த ராசா” படத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு ராஜ்கிரணுக்கு ஒரு குணச்சித்திர வேடம் அளித்து அவரின் அரிதார முகத்துக்கு மறைமுகமாக ஒத்திகை பார்த்தது அந்தப் படம். இந்தப் படத்தில் அவர் தோன்றும் உருவத்துக்கும் பின்னாளில் நாயகனாகிய “என் ராசாவின் மனசிலே” உருவ அமைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சரி “பெத்தவ மனசு” படத்துக்கு என்னவாயிற்று என்ற முடிவு 32 ஆண்டுகள் கழித்து இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

அண்மையில் டூரிங் டாக்கீஸ் இல் வெளிவந்த சிஸர் மனோகரின் பேட்டியில் ஒரு வரியில் இதைச் சொல்லி விட்டுக் கடந்து விட்டார், அப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ராமராஜனோடு இணைந்து இந்தப் படத்தை எடுத்து 75 வீதம் முடித்த நிலையில் அவரின் கால்ஷீட் சிக்கலால் அப்படியே கிடப்பில் போய் விட, அந்தப் படத்தின் கதை வசனகர்த்தாவான கஸ்தூரி ராஜா அந்த நேரம் சொன்ன கதை தான் “என் ராசாவின் மனசிலே” ஆனதாக அந்தப் பேட்டியில் சொன்னார். 

ஒரு கால்ஷீட் பிரச்சனையால் “உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு” ராசியில்லாத பாடலும், ஒரு ராசியான நாயகனாக ராஜ்கிரணையும் உருவாக்கி கோடி ரூபா சம்பளக்கார நாயகனாகவும் உயர்த்தி விட்டது.

வானம் தான்

சாட்சி இருக்கு பூமி

தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்ச

தொட்டு சொல்லு என்

ராசா என் மேல் ஆசை

இல்லையா என் மேல்

ஆசை இல்லையா

https://www.youtube.com/watch?v=VwLD6HMsXj0

இந்தப் பாட்டும் என்னுடன் 32 வருடங்களாக ஏதோவொரு வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது 🙂

கானா பிரபா

ராஜாதி ராஜாவோடு விடை பெற்றுத் திருமண வாழ்வில் புகுந்த நதியாவுக்கு வாழ்த்தி மகிழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமரர் பஞ்சு அருணாசலம், “பாவலர் கிரியேஷன்ஸ்” அமரர் பாஸ்கர் மற்றும் திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தோன்றும் படம் நன்றி : Filmi Street