Pages

Tuesday, May 3, 2022

ராமராஜனால் நாயகன் ஆகிய ராஜ்கிரண்


"உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு என் ராசா 

"என் மேல் ஆசை இல்லையா....."

https://www.youtube.com/watch?v=VwLD6HMsXj0

"ராஜாதி ராஜா" படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் முழங்கிய போது அந்தப் படத்தில் ஓரமாக இருந்த மேற் சொன்ன சோகப் பாடல் மீது என் போன்றவர்களுக்கு அப்போது பெரிய ஈர்ப்பு இருந்தது.

சுசீலாம்மாவும், சித்ரா அவர்களும் கொடுத்த உணர்ச்சிப் பிரவாகமாகக் கொடுத்த அந்தப் பாடல் படத்தில் வந்திருக்கிறதா என்று யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் படியேறினால் ஏமாற்றமே மிஞ்சியது. 

90 களில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மேல் மின்சாரம் இல்லாத போர்க்கால வாழ்வியலின் ஆரம்பமும், ராஜா தியேட்டரில் ஓடிய கடைசிப் படமாக "ராஜாதி ராஜா" அமைந்து விட்டது.

அந்தப் படத்தில் ரஜினியின் ஆள் மாறாட்டக் காட்சிகளை ஒட்டி ராதா, நதியாவுக்கான பாடலாக உருவாகியிருந்தது.

அத்தோடு விட்டதா? என்றால் இல்லையே.

சில மாதங்களுக்குப் பின்னர் ராஜ்கிரண் தயாரிக்கும் “பெத்தவ மனசு” படத்தில் “உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு” என்ற அந்தப் பாடலைப் பயன்படுத்தப் போவதாக விகடன் அறைகூவியது.

ஆனால் “பெத்தவ மனசு” பட அறிவிப்போடு சரி அப்படியே இந்தப் பாடல் இரண்டாவது தடவையும் தன் ராசியை நொந்து கொண்டது.

வெற்றிகரமான பட விநியோகஸ்தராக இருந்து பின்னர் அந்த வெற்றியைத் தன் தயாரிப்பிலும் அனுபவித்தார் ராஜ்கிரண். ராமராஜனை வைத்து அவர் தயாரித்த “ராசாவே உன்னெ நம்பி”, “என்னைப் பெத்த ராசா” எல்லாம் அந்தக் காலத்து ராமராஜ யுகத்தின் வெற்றிக்கனிகள். ஆனால் இதற்கெல்லாம் முதலீடு இசைஞானி இளையராஜாவின் இசை தான். அதனால் தான் தன் படங்களிலே இசைஞானி, ராகதேவன் என்று விளம்பரப்படுத்தியதோடு இளையராஜாவின் படத்தை எப்படியாவது ஒரு காட்சியில் நுழைத்துத் தன் ராசியைக் கவனித்துக் கொண்டார் ராஜ்கிரண்.

இப்படியாக மூன்றாவதாக ராஜ்கிரண் தயாரிப்பில் ராமராஜன் நடிக்க உருவானது தான் “பெத்தவ மனசு”. 

“பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா” என்ற பாடல் ராஜ்கிரண் & ராமராஜன் கூட்டணியின் முந்தய படமான “என்னப் பெத்த ராசா” படத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு ராஜ்கிரணுக்கு ஒரு குணச்சித்திர வேடம் அளித்து அவரின் அரிதார முகத்துக்கு மறைமுகமாக ஒத்திகை பார்த்தது அந்தப் படம். இந்தப் படத்தில் அவர் தோன்றும் உருவத்துக்கும் பின்னாளில் நாயகனாகிய “என் ராசாவின் மனசிலே” உருவ அமைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சரி “பெத்தவ மனசு” படத்துக்கு என்னவாயிற்று என்ற முடிவு 32 ஆண்டுகள் கழித்து இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

அண்மையில் டூரிங் டாக்கீஸ் இல் வெளிவந்த சிஸர் மனோகரின் பேட்டியில் ஒரு வரியில் இதைச் சொல்லி விட்டுக் கடந்து விட்டார், அப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ராமராஜனோடு இணைந்து இந்தப் படத்தை எடுத்து 75 வீதம் முடித்த நிலையில் அவரின் கால்ஷீட் சிக்கலால் அப்படியே கிடப்பில் போய் விட, அந்தப் படத்தின் கதை வசனகர்த்தாவான கஸ்தூரி ராஜா அந்த நேரம் சொன்ன கதை தான் “என் ராசாவின் மனசிலே” ஆனதாக அந்தப் பேட்டியில் சொன்னார். 

ஒரு கால்ஷீட் பிரச்சனையால் “உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு” ராசியில்லாத பாடலும், ஒரு ராசியான நாயகனாக ராஜ்கிரணையும் உருவாக்கி கோடி ரூபா சம்பளக்கார நாயகனாகவும் உயர்த்தி விட்டது.

வானம் தான்

சாட்சி இருக்கு பூமி

தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்ச

தொட்டு சொல்லு என்

ராசா என் மேல் ஆசை

இல்லையா என் மேல்

ஆசை இல்லையா

https://www.youtube.com/watch?v=VwLD6HMsXj0

இந்தப் பாட்டும் என்னுடன் 32 வருடங்களாக ஏதோவொரு வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது 🙂

கானா பிரபா

ராஜாதி ராஜாவோடு விடை பெற்றுத் திருமண வாழ்வில் புகுந்த நதியாவுக்கு வாழ்த்தி மகிழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமரர் பஞ்சு அருணாசலம், “பாவலர் கிரியேஷன்ஸ்” அமரர் பாஸ்கர் மற்றும் திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தோன்றும் படம் நன்றி : Filmi Street


0 comments: