Pages

Saturday, July 31, 2021

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே





பாடல் எழும்பும் போது ஒரு ஆலாபனையை நீட்டி முழக்குவாரே இசையரசி......

அப்படியே மாடத்தில் இருக்கும் கர்ணனின் நேரெதிரே ஒளிரும் நிலவில் முகத்தில் இருந்து கீழிறங்கி அவனிடம் வரும் தொலைவிருக்கும் அந்தச் சங்கதி.

மெல்லிச மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலத்து “பாகுபலி. அது பிரமாண்டத்துக்கான ஒப்புவமை மட்டுமே. ஆனால் பின்னாளில் எழுந்த எத்தனையோ ஏகலைவ இசையமைப்பாளர்களிடம் இந்தத் துரோணாச்சாரியர்கள் தம் வித்தையைக் கடத்தி விட்டார்கள் அப்படியொரு இசைக் காவியம் இந்தக் கர்ணன்.

“கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...

கண்ட போதே சென்றன அங்கே……”

அப்படியே உடம்பு சிலிர்த்துக் கண்ணில் சில துளிகள் பிறக்கும் இந்த இசையின்பம் கேட்கும் போது. இதிலும் நீட்சியோடு தான் பிறக்கும் பாட்டு. ஆனால் அந்த ஆலாபனையில் வரிகள் மிதக்கும்.

ஒரேயொரு பாட்டுத் தான் சூலமங்களம் ராஜலட்சுமி பாடுவார், மீதிப் 16 பாட்டில் அரைக்கரைவாசி அதாவது எட்டுப் பாடல்களை பி.சுசீலாவுக்குக் கொடுத்திருப்பார்கள் இந்த இசையுலகக் கர்ணர்கள்.

“இரவும் நிலவும் வளரட்டுமே” பாடல் என்னமோ படமாக்கப்பட்டது பகட்டான மாட மாளிகை, கூட கோபுரங்களோடு தான். ஆனால் இந்தப் பாட்டைக் கற்பனையில் இன்னொரு சூழலில் பொருத்திப் பார்த்தால் எளிமையோடு இன்னும் அழகு பிறக்கும்.

அது, கருப்பு வெள்ளை நிறத்தில் தென்னந்தோப்பு கொண்ட புற்தரை வெளி, மேலே தக தகவென்று மின்னும் நிலவு, அப்படியே அந்தக் காதலர்கள் கூடும் சூழல். கூப்பிடு தூரத்தில் வீடுகள் இல்லாத் தோப்பு என்று அந்த ஏகாந்தத்தை இந்தப் பாடலோடு பொருத்திப் பார்த்தால் ஆகா ஆகா. 

இரவும் நிலவும் வளரட்டுமே 

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே


கூடவே சேர்ந்தும் பாடிப் பார்ப்பார் கர்ணன் ஆகப்பட்ட TMS ஆனால்

அங்கே “சுபாங்கி” ஆகப்பட்ட பி.சுசீலாவோ 

இரவும் நிலவும் வளரட்டுமே........


இன்னும் நீட்சியாகக் கொண்டு போவார் பாருங்கள், கர்ணனின் மனைவி அல்லவா? 

ஒரு மனுஷன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் அ நியாயத்துக்கு நல்லவனா இருக்கக் கூடாது என்று வாய் விட்டுக் கூறுவோமே அப்படி ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகிறார் இந்தக் கர்ணன்

அதுதான்.

“தரவும் பெறவும் உதவட்டுமே 

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே”


என்ன மனுஷனய்யா, காதல் கூடலும் கூட “தரவும்” “பெறவும்” என்று உம்முடைய அக்மார்க் கொடை வள்ளல் புத்தியா என்று கூவ வேண்டும் போலிருக்கும். அதையெல்லாம் தாண்டி நெகிழ வைப்பார் ஒரு இடத்தில் பாருங்கள் அதுதான்.

நெஞ்சில்

இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே....

கர்ணன் முன்னே வந்தால் கட்டிப் பிடிக்க வேண்டும் போலக் கொண்டு வந்து போட்டிருப்பார் கவியரசு.

மகாபாரத்தின் ஒரு கிளை நாயகனுக்கான காவியத்தை ஒருவர் எடுக்கிறார். இன்னொருவர் நடிக்கிறார், தன் கூட இருப்பவர்கள் வடநாட்டு வாத்தியங்களையும் கூட இணைத்து ஒரு இசைப் பேராட்சி நடத்துகிறார்கள், நான் மட்டும் என்னவாம் என்று சொல்லுமாற் போல இந்தக் கண்ணதாசன் கொடுத்ததெல்லாம் கொடை இந்தப் படத்தில், அதுவும் இந்தப் பாடலில் இன்னும் நெஞ்சம் இருக்கிற இடம் வரை.

இந்தப் பாடலின் திறத்தை அப்படியே ராகமாலிகா சென்று கேட்டும்

கொண்டாடுங்கள்.

https://www.youtube.com/watch?v=YmpQRUb1_GI

கடந்த ஒரு மணி நேரமாக இந்தப் பாடலின் காட்சியை எடுத்துத் தகுந்த உச்ச ஒலித்தரம் பொருத்தி, நிறமூட்டி உங்களிடம் கொடுக்கிறேன். அனுபவியுங்கள்.

தரவும் பெறவும் உதவட்டுமே 

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே 

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

 https://www.youtube.com/watch?v=tA4bAJQYBFw

Thursday, July 29, 2021

❤️ மலர்களே நாதஸ்வரங்கள் ♥️ ❤️ பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா ♥️ குருவுக்குக்குக் கை கொடுக்காத ஹம்ஸத்வனி சீடர் கை பிடித்தது 💚



இன்று வானம்பாடிக் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அகவை 85. அவர் இலக்கிய உலகத்துக்கு இதுநாள் கொடுத்ததெல்லாம் தமிழ் உலகம் அறியும்.  கவிஞராக, பன்முகப் படைப்பாளியாக அடையாளப்பட்டவர் திரையிசையிலும் ஒரு பாடலை எழுதிய வகையில் அங்கும் ஒரு அடையாளத்தை நிறுவியிருக்கின்றார்.

“மலர்களே.....

 நாதஸ்வரங்கள்.......

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய பாட்டு அதுதான்.

இசைஞானி இளையராஜாவின் திரையிசை இலக்கியங்களில் பெருவாரியான இலக்கிய கர்த்தாக்களும் பாடல் சமைத்திருக்கின்றனர். அவர்களில் சிற்பி அவர்களும் விதிவிலக்கல்ல என்று நிறுவிய பாட்டு.


ஆனால் இயக்குநர் சிகரம் பாரதிராஜாவின் “ராசி”க் கணக்கில் படமாக்காத ஏராளம் பாடல்களின் தொடக்கப் புள்ளியாக “கிழக்கே போகும் ரயில் படத்தில் இந்தப் பாட்டு.

“மலர்களே......நாதஸ்வரங்கள்

மங்களத்தேரில் மணக்கோலம்

வர்ண ஜாலம் வானிலே.....

https://www.youtube.com/watch?v=wp53bQPlqAg

ஒரு கல்யாண நிகழ்வினை நடத்திக் காட்டும் பாட்டு அப்படியே மணப்பெண்ணின் அலங்கார அறையின் கதவு தட்டி உள் நுழைந்து பார்க்கின்றது.

“பால் வண்ண மேனியை ஆகாய கங்கை

பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்

கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்

ரதிதேவிதான் மைதீட்டினாள்

காதல் தேவன் கைகளில் சேர.......”

அதுவரை காதலன் நிகழ்த்திக் காட்டிய அந்தக் கற்பனைத் திருமண நாளின் மணவறைக் கோலத்தில் கூட்டுச் சேரும் காதலி

“கருவிழி உறங்காமல்

கனவுகள் அரங்கேற

இளமை நதிகள் இரண்டும் 

இணையட்டுமே.......”

வெட்கத்தில் மேல் தொடராமல் அவள் ஒதுங்க அப்படியே பற்றித் தொடர்கிறான் காதலன்.

மன்மதன் திருக்கோயில்

அதில் காதல் பூஜை

எந்நாளுமே அரசாளுமே

காதல் வானம் பூமழைத் தூவ

மலர்களே...... நாதஸ்வரங்கள்

மங்களத்தேரில்......மணக்கோலம்....

மலேசியா வாசுதேவனுக்கான ஒரு மெல்லிசைக் காதலன் ரூபத்தைக் காட்டும் பாட்டு. கூடவே ஆலாபனைகளாலும், ஆங்கே இரண்டடி வரிக் குரலோடும் தோள் கொடுக்கும் காதலியாக எஸ்.ஜானகி.

“மலர்களே....” என்று மலேசியா அண்ணன் பாடும் போது அப்படியே திருமண மண்டபத்தில் உயரே எறியும் பூக்களாக மேலேழும்.

எஸ்.ஜானகியின் ஆலாபனை மட்டுமே மலேசியா வாசுதேவனோடு கூடப் பயணிக்கும். மணவறையில் இருக்கு தன்னவனுக்கான எண்ண அலைகளாக அது ஆமோதிக்கும்.

எஸ்.ஜானகி பாடும் பகுதிக்கு மட்டுமே தோழிமார் கூட்டுக்குரல் பின்னணியில் சங்கமிக்கும். 

மண அலங்காரத்தோடு மணமகள் எதிர்ப்படும் போது லாலீல லாலீ ஆலாபனையோடு மிதக்கும் சரணத்தில் தான் மலேசியா வாசுதேவன் அவரோடு நட்புப் பாராட்டுவார்கள் அந்தக் கோரஸ் குரல் தோழிமார்.

இப்படி நுணுக்கமான சங்கதிகள் கொண்ட அற்புதமான பாட்டு அது.



அதே ஹம்சத்வனி ராகத்தில் 11 வருடங்கள் கழித்து வருகிறது ஒரு பாட்டு. பாரதிராஜாவின் சீடர் மனோபாலா Manobalam Mahadevan  இயக்கிய “என் புருஷன் எனக்கு மட்டும் தான்” படத்தில் வரும்

“பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா

 புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா”

https://www.youtube.com/watch?v=SA3cIpyUOZQ

அங்கே ஹம்சத்வனியின் சந்தம் சேர்ந்தது சிற்பி எழுதியதில்,

இங்கே வாலியாரின் கை வண்ணத்தில் பூ முடித்துக் கல்யாணப் பந்தல் வருகிறது பாட்டு.

அங்கே “லாலில லாலி....” போடும் தோழிமார்,

இங்கே “மாங்கல்யம் தந்துனானே” வோடு மணப் பந்தலில் மந்திரம் ஓதுகிறார்கள்.

Made for each other என்பார்கன் இதைத் திரையிசைப் பாடல்களைக் கேட்கும் தோறும் சில பாடக ஜோடிக் கூட்டணியின் சங்கமத்தில் நினைப்பூட்டுவதுண்டு. “தென்றல் வரும் முன்னே முன்னே” என்று தர்மசீலனுக்காக அருண்மொழியும், மின்மினியும் ஜோடி சேர்ந்த போதும், “பூங்கதவே தாழ் திறவாய்” எனும் போது தீபன் சக்ரவர்த்தியையும், உமா ரமணனையும் அவர் தம் குரலில் எழும் ஒத்த அலைவரிசையின் போதும் இவ்விதம் சொல்லத் தோன்றும். அது போலவே அரிதாகப் பாடினாலும் இம்மாதிரிப் பத்துப் பொருத்தமும் வாய்த்த பாட்டு ஜோடி ஜெயச்சந்திரன் - சுனந்தா.

எப்படி ஜேசுதாஸ் வழியாக சுஜாதா இசைஞானி இளையராஜாவிடம் அறிமுகமாகினாரோ அது போலவே சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரன் வழி பிறக்கிறது. புதுமைப் பெண் படத்தில் ஜேசுதாஸ் & உமா ரமணனுக்கு “கஸ்தூரி மானே” பாடலை எழுதி வைத்தது போல, இங்கே சுனந்தாவுக்கும் ஜெயசந்திரனுக்குமாக அழகிய காதல் மயக்கம் தரும் பாட்டு. சுனந்தாவுக்குத் தமிழில் கிட்டிய அறிமுகம் வழிகாட்டியவருக்கே ஜோடியாக அமைகிறது.

“காதல் மயக்கம்” ஒரு காதலன் & காதலிப் பாட்டென்றால் அடுத்து ஒரு கல்யாணப் பாட்டு. இந்தப் பாட்டையெல்லாம் திருமண மண்டபத்தில் சத்தமாக ஒலிக்க விட்டாலே போதும் கல்யாணக் களை அந்த அரங்கம் முழுதும் வியாபித்து விடும். அதுதான் 👇

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

இந்தப் பாட்டை எவ்வளவு தூரம் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு ஒரு ஆதாரம் பல்லவி தொடங்குவதற்கு முன்னால் நெய்திருக்கும் அந்தப் புல்லாங்குழல் இசையோடு வயலின் ஆவர்த்தனத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது.

பாடலின் அந்த ஆரம்ப இசை ஒரு  வண்டியில் பொருத்தி இழுக்கப்படும் Camera வின் அசைவியக்கத்தோடு பயணப்படும்.

கூட்டுக் குரல்களை சரணத்துக்கு முன்பாக "மாங்கல்யம் தந்துனா" பாட வைத்து விட்டு பின்னர் அதே ரிதத்தை இரண்டாவது சரணத்தில் வாத்திய ஆலிங்கனம் செய்ய வைத்து அதே கூட்டுக் குரல்களை ஒலிக்க மட்டும் விடும் நுட்பம் இருக்கிறதே அதுதான் ராஜ முத்திரை. 

முதல் சரணத்துக்கு இரண்டாவது சரணத்துக்கு குழந்தைப் பேறு என்ற விதத்தில் அமையும் காட்சியமைப்புக்கு நியாயம் கற்பிப்பது போல அந்த இரண்டாவது சரண கூட்டுப் பாடகிகளின் ஓசை இன்பத் தாலாட்டாக விளங்கும்.

"மாங்கல்யம் தந்துனா" பாடி முடித்ததும் தபேலாவால் "தடு திடுதிடு தடு திடு" என்று ஓசையால் வழித்து அப்படியே ஜெயச்சந்திரனிடம் கொடுக்க "மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்" என்று அவர் ஆரம்பிக்க அந்தக் கணத்தை உச் கொட்டி ரசிக்கலாம்.

“தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா”

எனும் போது அந்த தீர்த்த என்ற சொல்லையே எவ்வளவு அழகாக நறுக்கிக் கொடுக்க முடியும் என்பதை ஜெயேட்டன் காட்டுவார். ஒரு மணப்பெண்ணுக்குண்டான வெட்கப் பூரிப்பு சுனந்தா குரலில் இருக்கும்.

இந்தப் பதிவை எழுதியதும் பாடல்களைப் பொருத்தும் போது அலெக்ஸ்  இவ்விரண்டு பாடல்களையும் ஒப்பிட்டுச் சிலாகித்துப் பேசிய காணொளியும் கடந்த வாரம் வெளியாகியிருப்பது கண்டேன்.

சொல்லப் போனால் அவரின் காணொளியொன்றை முழுமையாகப் பார்த்தது இதுதான். கலகப்பாகவும், அற்புதமாகவும் நியாயம் பண்ணியிருக்கிறார். அதை நீங்கள் முன்பே பார்த்திருப்பீர்கள்.

https://www.youtube.com/watch?v=arvrXn5qCcM

இந்தப் “பூ முடித்துப் பொட்டு வைத்த” கல்யாணப் பாடல்களுக்கு முன்னோடியாக இதே மனோபாலாவுக்காக ராஜா அந்த “லாலி லாலி”யை வைத்துக் கொடுத்த அற்புதமான கரகரப்ரியா

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட 

காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி

https://www.youtube.com/watch?v=zHq3jyS5BBw

மு.மேத்தா எழுதிய அந்தக் கல்யாணப் பாட்டில் கே.ஜே.ஜேசுதாஸுடன் சேர்ந்திருப்பதும் சுனந்தா தான்.

விந்தையாக “மலர்களே நாதஸ்வரங்கள்” பாடல் போய்ச் சேர வேண்டிய ராதிகாவும், “பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா” வில் சேர்ந்த விஜயகாந்தும் இதில் இணைந்திருகிறார்கள். 

பாருங்கள் ஒரு பாட்டை எழுதத் தொடங்கினால் “ஒரு பாடு” எத்தனை எத்தனை விஷயங்கள் பேசலாம்.

பாரதிராஜாவின் “மலர்களே நாதஸ்வரங்கள்” கல்யாண ஹம்சத்வனி

மனோபாலாவின் “பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலாவில்” ஒரு பூரண திருமணக் கொண்டாட்டதை நிகழ்த்திக் காட்டுகிறது.

ஆனாலும் இந்தக் குறும்புக்கார இளையராஜா வேண்டுமென்றே இதை மீண்டும் வைத்தாரா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

கானா பிரபா

மனோபாலா படம் உதவி : பழனியப்பன் சுப்பு

Friday, July 23, 2021

“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்


“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்
“எல்லோரிடமும் எல்லாச் சந்தர்ப்பதிலும்
பரிபூரணமான பங்களிப்பை வாங்க முடியாது.
Perfection கடவுளாக்கும்’
அப்படியே நச்சென்று வந்து மனதில் கோடு போட்டது போன்ற ஒரு வார்த்தையை உதித்தார் டி.வி.கோபாலகிருஷ்ணன்.
அவரின் முகத்தை ஒளிப்படத்தில் பார்க்கும் போதே அந்த மிடுக்கான தோற்றத்தில் ஓரச் சிரிப்பு மாதிரிப் பிரகாசம் மின்னுவதை ரசிப்பேன்.
அதுவே பேட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா?
அந்த சங்கீதக்காரருக்கே உரித்த “ஆக்கும்” சேத்து ஆக்கம் மிகுந்த ஒரு பேட்டியைக் கண்ணுற்றேன்.
நான் ரொம்பவே எதிர்பார்த்த ஒரு மகோன்னத சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன் அவர்களது பேட்டி Social Talkies இல் போய்க் கொண்டிருக்கிறது.
முதலில் மூன்றாம் பாகத்தைப் https://www.youtube.com/watch?v=DeTmgNlWMW0
பார்த்த பின் தான் முன்னைய பாகங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.
இன்று 89 வயதில் தொடர்ந்தும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து சாதகம் பண்ணும் இவரின் கற்றல் இன்னும் தொடர்கிறதாம். முதல் கச்சேரி வாசிப்பு 9 வயதில், அப்படியென்றால் 80 வது ஆண்டாக இசையின் அணுக்களைக் கற்றுத் தேர்ந்தவர் இன்னும் கற்கிறார்.
இதுதான் மேதைகளுக்கான இலட்சணம்.
இசைஞானி இளையராஜாவின் சாஸ்திரிய சங்கீதத்தின் குருவானவர் என்றே என் போன்ற ராஜா ரசிகர்களுக்குப் பரவலாக மனதில் பதிந்தவர் என்ற நிலை இருக்க, இந்திய இசை ஞான உலகில் உச்சம் தொட்டர்வர்களில் இவரும் ஒருவர் என்பதை இவர் போன்றவர்களைத் தேடிக் கற்கும் போது இன்னும் தெள்ளறத் தெளிவாகும்.
இந்த மூன்று பாகங்களிலேயே ஏகப்பட்ட அனுபவத் திரட்டுகள். இளையராஜா தொட்டு ரஹ்மான் வரை நீளும் அனுபவங்கள் ஒருபக்கம்,
தன் குருவானவர் செம்பை வைத்யநாத பாகவதர், புல்லாங்குழல் மேதை மாலி, ரவிசங்கர் என்று இன்னும் பல சங்கீதச் சிகரங்கள் குறித்த அனுபவப் பகிர்வுகள் சேர்ந்த மிகப் பெறுமதியான பேட்டித் தொடர் இது.
தன்னை நேசித்துக் கனம் பண்ணும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பற்றிய பேச்சு வரும் போது மேலே பார்த்துக் கும்பிடுகிறார்.
நாகசுர வாத்தியம் எவ்வளவு சிறப்பானது என்பதைப் பற்றி ஒரு குறும் விரிவுரை கொடுக்கிறார் பாருங்கள் எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சி அது.
இந்தப் பேட்டியைப் பார்த்து விட்டு அப்படியே இவற்றையும் தேடி ரசியுங்கள்
பொதிகையில் அற்புதமான இசை முழக்கம்
இளையராஜாவுடன் இவரின் சந்திப்பின் காணொளி
“அகாரம்” ஓதி அப்படியே பாடலோடு கலக்கும் முறைமையை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா என்று சிலாகிக்கிறார் டிவி.கோபாலகிருஷ்ணன்.
இந்த இடத்தில் அதற்கு உதாரணமாய் விளைந்த அவரைக் கொண்டே பாட வைத்த ராஜாவின் அற்புதமான பாடல்களைச் சொல்ல வேண்டும்.
“ஜொதயலி ஜெத ஜெயதலி” (கீதா) https://www.youtube.com/watch?v=tPAwMueyrSU
என்று கன்னடம் கொண்டாடும் நாற்பது ஆண்டுகள் கடந்தும் காலத்தால் அழியாத கானம் (அதன் தமிழ் வடிவம் “விழியிலே மணி விழியிலே”)
நாதர்ந்தின்னனாவுக்கு ஒரு புது காம சூத்திர இசை கற்பித்த
“அட மச்சமுள்ள மச்சான் நான் புதுவித ரகம்” (சின்ன வீடு)
அப்படியே “ ஆஆஆ நகர்தன்ன திரனன்ன திரன்ன” பரிமாணத்தில்
“அது ஒரு நிலாக்காலம்” (டிக் டிக் டிக் )
அல்லது இன்னும் பரவலாகப் போய்ச் சேர்ந்த “அந்தி மழை பொழிகிறது” பாடலில் எழும் ஆலாபனையாகவும் என்றும்
இடையிசைக் குரலாக மிளிர்ந்தவர் எஸ்.ஜானகியோடு முழுப் பாடலையே பாடியிருக்கிறார். சாஸ்திரிய இசை தவழும் அந்தப் பாடல்
“மார்கழி மாதம் முன்பனி வேளையிலே”
இசைஞானி இளையராஜா இசையில் பஞ்சமி (வெளி வரவில்லை) படத்துக்காகப் பாடியிருக்கிறார்.
இளையராஜா தன் கன்னடப் பட இசையமைப்புகளுக்குக் கூடவே அழைத்துச் செல்வாராம். நீங்கள் என் கூட இருந்தால் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் எழும் என்பாராம் ராஜா. இவரைப் பாட அழைப்பதும் இவ்விதம் தானாம் பாடல் உருவாகும் போது வெளியில் இருக்கும் டி.வி.கோபாலகிருஷ்ணனை அழைத்து வரச் சொல்லி உடனேயே பாட்டைக் கொடுத்து விடுவாராம் ராஜா.
ஒருமுறை குருவாயூருக்கு இருவரும் போய் விட்டு வரும் போது “தொரக்குனா” வை சுதி மீட்டுகிறார் டிவிஜி. அடுத்த நாள் அதே பிலஹரியில் “கூந்தலிலே மேகம் வந்து” https://www.youtube.com/watch?v=dOIPh4tIZdI பாடலைப் பிரசவிக்கிறார் ராஜா.
இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம் இசைஞானி இளையராஜாவுக்குத் தன் குரு T.V.கோபாலகிருஷ்ணனே மிருதங்கம் வாசித்தும் ஒரு பாடல் பதிவாகியிருக்கிறது.
கவரிமான் படத்தில் “புரவோ பாரமா” என்ற தியாகராஜர் கீர்த்தனை
தான் அது. அதில் இன்னொரு சிறப்பும் சொல்லாத சேதியாகப் பொதிந்திருக்கிறது. செம்பை வைத்திய நாத பாகவதரிடம் சங்கீதம் கற்ற சீடப் பிள்ளைகள் டி.வி.கோபாலகிருஷ்ணனையும், கே.ஜே.ஜேசுதாஸ் ஐயும் இணைத்து இம்மாதிரியானதொரு சங்கீதக் கச்சேரியைத் திரையில் படைத்திருக்கிறார் இளையராஜா.
தம் முன்னோர்களைப் போற்றித் துதிப்பது மட்டுமன்றித் தகுந்த நேரத்தில் அவற்றைத் தன் ஆளுமைத் திறனோடு பதிப்பிக்கும் மாண்பின் இலக்கணம் இது.
“அடியார்க்கும் அடியேன்” என்று பாடுமாற் போல இசையுலகில் இம்மாதிரியான ஆழம் நிறைந்த சங்கீத சமுத்திரத்தின் பேட்டியைக் கேட்பதும் சிலாகிப்பதும், போற்றித் துதிப்பதும் வரம்.
நம் எந்தத் துறையில் இருந்தாலும் அதன் ஆழம் தேடி நம் ஆயுள் வரை தேடுவோம் பதிப்போம். இவ்விதமான பேட்டிகள் தரும் போதனை அதுதான்,
கானா பிரபா


Friday, July 16, 2021

காதல் கோட்டை ❤️ 25 ஆண்டுகள்



கோவிலிலே நான் தொழுதேன்

 கோல மயில் உன்னைச் சேர்ந்திடவே....”

எனக்கு ஒரு விசித்திரப் பழக்கமுண்டு. என்னைக் கவர்ந்த திரைப்படைப்புகளை அந்தந்தக் காலத்தில் வாங்கி வைத்து விடுவேன். அது என்னளவில் ஆகச் சிறந்த பொக்கிஷம்.

அப்படித் தான் “காதல் கோட்டை” படத்தின் வீடியோவும் என் இருப்பாக 25 ஆண்டுகளாக நான் அடை காத்து வைத்திருக்கின்றேன்.

அதுவல்ல முக்கியம். இந்தப் படம் வந்த காலத்தில் நான் ஈழத்தில் இருந்து மெல்பர்னுக்குக் குடி பெயர்ந்து விட்ட பல்கலைக்கழக மாணவன். பகல் படிப்பு நேரம் போக வாரத்தில் பகுதி நேரம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை பார்த்து (இரவு எட்டு மணி முதல் காலை 8 மணி வரை) அப்படியே வீட்டுக்குப் போய்க் குளித்து விட்டுப் பல்கலைக்கழகம் போக வேண்டும். எண்பது டாலர் சம்பளம். யாராவது தன் காருக்கு எரிபொருளை நிரப்பி விட்டு காசு கொடுக்காமல் ஓடினால் எனக்குக் கிடைக்கும் சம்பளப் பணத்தையே அதற்காக் கல்லாப் பெட்டியில் நிரப்பி விட்டு வருவதும் உண்டு. அந்த எண்பது டாலர் சம்பாத்தியத்தில் இந்த வீடியோ காசெட் விலை 18 டாலர் அப்படியும் வாயைக் கட்டி நான் இதை வாங்கி இன்னும் பத்திரமாக வைத்திருப்பதில் இருந்து என்னளவில் இதற்காக நான் கொடுத்த பெறுமதியைப் புரிந்து கொள்வீர்கள். 



“கமலி ! உன் டிக்கெட் கன்பர்ம் ஆயிடுச்சு”

காதல் கோட்டை படத்தில் நாயகி தேவயானியைப் பார்த்து அவரின் தோழி இந்து இவ்விதம் சொல்வது தான் படத்தின் ஆரம்பம்.

தனக்குக் காதல் கோட்டையை விட்டால் வேறு படமே இல்லை இதுதான் என் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது இல்லாவிட்டால் பிறந்தகம் போய் விட வேண்டியது தான் என்றிருந்த நடிகை தேவயானியின் வாழ்க்கையின் அடுத்த 25 ஆண்டுகள் திரையுலகில் இருக்க அமைத்த கோட்டை இதுதான் என்று நெகிழ்ந்தார் தேவயானி அந்த ஆரம்ப வசனத்தை நினைவுபடுத்தி. 

“விருப்பப்படி வாழ்க்கை” 

என்று அதே ஆரம்பக் காட்சியிலேயே பூடகமாகக் கதை முடிவைச் சொல்லி விட்டதாக இயக்குநர் அகத்தியன் சொன்னார். 

அது தன் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்றார் தேவயானி.

ஒருமுறை சுஜாதா எழுதிய திரைக்கதை நுட்பத்தில் படத்தின் இடைவேளைக்கு முன்பே எல்லாப் பாத்திரங்களும் ஏதோவொரு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்ற அந்தக் கருத்து அப்போது நினைவில் வந்து மிதந்தது.

இந்த வாரம் முழுக்க Touring Talkies இல் காதல் கோட்டை படத்தின் உருவாக்குநர்களின் சிறப்புச் சந்திப்பைத் துளி விடாமல் பார்த்து ரசித்தேன் என்பதை விட நெகிழ்ந்தேன் எனலாம். எத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது பாருங்கள். 

காதல் கோட்டை படம் போல எத்தனையோ வெற்றிகளை இந்தத் தமிழ் சினிமா கண்டிருந்தாலும் இந்த 25 ஆண்டு நிகழ்வில் படத்தின் உருவாக்கம் பற்றி ஒவ்வொருவரும் பேசிய கருத்துகளைத் திரட்டினாலேயே ஆகச்சிறந்த திரைப்பட ஆக்கம் குறித்த நூல் ஆகி விடும். அவ்வளவுக்கு அற்புதமான நினைவுப் பகிர்வாக அமைந்தது.

இந்தக் கதையைத் தூக்கிக் கொண்டு அலைந்த கருணாநிதி என்ற அந்த இளம் இயக்குநர் அகத்தியன் ஆகி, அப்படியே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என்று மூன்று விருதுகள் தேசிய அளவிலும், ஏராளம் உயரிய விருதுகளுமாகக் கொடுத்துத் திக்குமுக்காட வைத்து விட்டது.

ஒரே காட்சியோடு படப் பெட்டியைத் திருப்பி அனுப்பிய (மாங்கல்யம் தந்துனானே) “ராசி” கொண்ட இதே இயக்குநர் தான்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் முதன் முறை தேசிய விருது வாங்கும் இயக்குநராக அடையாளப்படுகிறார் இந்தக் காதல் கோட்டை வழியே.

ஒரு படத்தின் ஆகச் சிறந்த எல்லாப் பாடல்களுமே ஒரே நேரத்தில் ரசிக்க வைக்காமல் இடைவெளி விட்டு ரசிக்க வைக்கும் பாங்கு நிரம்பியவை. அவ்விதமே காதல் கோட்டை வந்த காலத்தில் வகை தொகையில்லாமல் கொண்டாடித் தீர்த்த பாட்டு “நலம் நலமறிய ஆவல்”. 

“எனக்கு ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி சொன்னார் அந்த நலம் நலமறிய ஆவல் பாட்டு மாதிரி வராது என்று அடிக்கடி சொல்வார்” என்று தேவா எஸ்பிபியை நினைவுபடுத்தினார்.

பின்னர் “காலமெல்லாம் காதல் வாழ்க” பாடலில் கட்டுண்டு கிடந்தேன். இன்னொரு பக்கம் அந்தக் காலத்தில் இலங்கையில் சந்திரிகாவின் ஆட்சி. எனவே “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாட்டு அரசியல் கிண்டல் பாட்டு போலவும் எங்களவரால் பகிரப்பட்டது வேறு கதை.

நான் Oracle இல் வேலை செய்த சமயம் ஒரு தமிழக நண்பரின் காரில் வெறும் தேவாவின் கானா பாடல்கள் மட்டுமே இருக்கும். அதற்கெல்லாம் அந்தமாக அவருக்கு வெறியூட்டியது “கவலைப்படாதே சகோதரா”. இந்தப் பாட்டு இன்றும் மதுப்பிரியர்களின்  சடங்கில் தவிர்க்க முடியாத குத்துப் “பாடகி”.

வேடிக்கை என்னவென்றால் “காதல் கோட்டை” கன்னடத்தில் மீளத் தயாரிக்கப்பட்ட போது “தலைவாசல்” விஜய் இன் கெளரவப் பாத்திரத்தில் நடித்தவர் அங்குள்ள உச்ச நடிகர் விஷ்ணுவர்த்தன். தனக்கு எஸ்பிபி பாடுகிறார் தானே என்று உறுதி செய்து விட்டே படங்களில் நடிக்கத் தயாராகும் அவர் தனக்காகச் சேர்த்துக் கொண்ட குரல் எஸ்பிபியுடையது.

https://www.youtube.com/watch?v=cYxove409V8

தெலுங்குக்காரர்கள் இந்தக் கவலைப்படாதே சகோதரா தெலுங்குப் (அங்கும் தேவா) பாடியது) பாடலைப் பாடித்தான் தன்னை இன்றளவும் நினைவுபடுத்துகிறார்கள் என்றார் தலைவாசல் விஜய்.

இப்படியாக காதல் கோட்டை படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதீதமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது என்னளவில். கடந்த வாரம் கூட நண்பர் ஒருவரோடு பேசும் போது 

“சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது” பாடலை இருவரும் அக்குவேறு ஆணி வேறாக அலசி ரசித்தோம்.

அதே போல அந்தப் படத்தில் வந்த “சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது....” எஸ்பிபியைத் தன் பாட்டில் பயணிக்க விட்டு ஓரமாக நின்று ரசித்திருப்பாரோ இந்தத் தேவா, எவ்வளவு அழகுணர்ச்சியைக் கொட்டிக் கொடுத்தது அந்தப் பாட்டு.

சூழ்நிலைக் கைதியாகத் தான் பாட்டெழுத வந்த கதையை அகத்தியன் பரிமாறிக் கொண்டார். அப்போது அவருக்கு உதவியாக இருந்தவர் கவிஞர் காளிதாசன் (திருப்பத்தூரான்) என்றும் நினைவுபடுத்தினார்.

அந்தச் சபையில் பேசாத விடயம் ஒன்றை இங்கே பதிவாக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.  காதல் கோட்டை வெற்றியில் இன்னொருவர் எப்படித் துலங்கினார் என்று.

“சிவப்பு லோலாக்கு குலுங்குது” பாடலை எழுதிய “பொன்னியின் செல்வன்” உடைய இயற்பெயர் E.S.N.ரவி. இவர் வேந்தன்பட்டி அழகப்பனின் படங்களில் வசனகர்த்தாவாக “ராமாயி வயசுக்கு வந்துட்டா” காலத்தில் இருந்து இயங்கியவர்.

அழகப்பன் இயக்கி ராமராஜன் நடித்த நம்ம ஊரு நல்ல ஊரு படத்துக்கு கங்கை அமரன் இசை. அதில் பின்னாளில் திருப்பத்தூரான் ஆன காளிதாசன், அது போல் பின்னாளில் பொன்னியின் செல்வன் ஆன E.S.N.ரவி ஆகியோர் இதே பெயர்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் E.S.N.ரவி எழுதிய அழகான பாட்டு “சிங்காரக் காத்து” https://www.youtube.com/watch?v=DuhMhYTyiMY

இந்த ரவியைப் பொன்னியின் செல்வன் ஆக்கி அழகான “சிவப்பு லோலாக்கு” அணிவித்துக் காலத்துக்கும் மறக்கவொண்ணாப் பாடலாசிரியாகவும் அழகு பார்த்திருக்கிறது காதல் கோட்டை.

இந்தப் பாடலாசிரியர் பொன்னியின் செல்வனுக்கு எவ்வளவு அழகான பாடல்களை எல்லாம் தேவா கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் பாருங்கள்.

ஒரு பக்கம் கானா பாடல்களாக

White லகான் கோழி ஒண்ணு (ப்ரியமுடன்), வாங்குடா 420 பீடா (கனவே கலையாதே), கோபப்படாதே முனீமா (சந்தித்த வேளை), கொத்தவால் சாவடி லேடி (கண்ணெதிரே தோன்றினாள்), மீனாட்சி மீனாட்சி (ஆனந்தப் பூங்காற்றே), கானங்கொழுக்கு (சுயம்வரம்), 

இன்னொரு பக்கம் இனிய மெல்லிசைக் காதலாய் 

ஓ தேவதையே (தடயம்), காதலே நிம்மதி படத்தின் முத்தாய்ப்பான பாடலாக கங்கை நதியே, இவையெல்லாம் தாண்டி என் மனசுக்கு நெருக்கமான

“திருமலை நாயகனே” (மாப்பிள்ளைக் கவுண்டர்) என்று அள்ளிக் கொடுத்தார்.   இளையராஜாவின் தேவதை படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார். 

பொன்னியின் செல்வன் கடந்த 2012 இல் மறைந்து விட்டார்.

லேலோஓஓஓஓ லேலேஓஓஓ

அந்தக் கோரஸ் குரல்களில் எழும் ரம்யம். ஒரு பாட்டைக் கேட்கும் போதே காட்சிகளை மனக் கண் விரிக்கும் என்றால் இந்தப் பாட்டை விலத்த முடியாது. அப்படியே ராஜஸ்தான் கண்ணுக்குள்.

தங்கர்ப்பச்சானின் ஒளிப்பதிவு காதல் கோட்டையில் பெரு வெற்றியில் முக்கிய தூண் என்பதில் எந்தச் சந்தேகமும் 25 ஆண்டுகள் கழித்தும் வராது. ஆனால் பட உருவாக்கத்தில் அவர் கொடுத்த முக்கியமான ஆலோசனைகளும் படத்தைச் செம்மையாகக் காட்டியதை அவர்கள் பேசிய போது அவரின் அறியப்படாத பங்களிப்பைத் தெரிந்து மெச்ச முடிந்தது.

தேனிசைத் தென்றல் தேவா எப்படி இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வளைந்து கொடுத்துச் சிறு முதலீடுகளுக்குப் பெரும் அறுவடை கொடுத்தார் என்பது வெள்ளிடை மலை என்றால் அவரின் அறியப்படாத பக்கம் அவர் ஏராளமான நல்லிசைப் பாடல்களின் முத்தாய்ப்பான ஆரம்ப வரிகளுக்குச் சொந்தக்காரர், “நலம் நலமறிய ஆவல்” உட்பட.

காதல் கோட்டை 25 ஆவது ஆண்டு நிகழ்வில் தான் இவ்விதம் ஆரம்ப வரிகளைக் கொடுக்கும் தேவையைக் காட்டும் உதாரணத்தை “மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுட்டு

பொட்டொண்ணு வச்சுக்கம்மா” (சாமுண்டி)

பாடல் உதாரணத்தோடு விளக்கிய போது தேவாவின் மீதான மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.

காதல் கோட்டை படத்தில் இயங்கும் ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே தனித்தனிச் சிறுகதை எழுத முடியும், வில்லத்தனமானவரோ என்று நினைத்துப் பார்க்கும் அக்காளின் கணவர் ராஜீவ் உட்பட,

“வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்” மணிவண்ணன், 

பாண்டு என்று அது நீளும்.

ஒரு பக்கம் விஜய் இதே ஆண்டின் முற்பகுதியில் “பூவே உனக்காக” வால் ஒரு பெரும் திருப்புமுனையைச் சந்திக்க, அடுத்த சில மாதங்களில் அஜித் வருகிறார் “காதல் கோட்டை” உடன்.  இதற்கு முன்பே ஆசை படம் அஜித்துக்கு நல்லதொரு திருப்பமாக அமைந்தாலும் காதல் கோட்டையின் வாசல் அகலத் திறந்து பெருவாரியான கடைக்கோடி ரசிகன் வரை சேர்த்தது. இந்த மாதிரியான அடக்கமான வெற்றிகள் தான் பின்னாளில் பெரும் உயரங்களுக்கான படிக்கற்களாக.

இந்தப் படத்தைப் பற்றி நான் அடிக்கடி நினைப்பதை

“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை

உன்னைக் கை விடுவதுமில்லை”

இந்துத் தெய்வங்கள் உறையும் தன் தன் சுவாமி அறையில் நாயகி கமலி மேற் கண்ட பைபிளின் வாசகங்களைப் பிரித்துப் படிப்பாள்.

இந்தக் காட்சியோடு தான் 

“நலம் நலமறிய ஆவல்”

பாட்டு வரும்.

ஒரு வெற்றி கிட்டும் போது அதுவரை எல்லாமே சரிவர நடந்தது போல இருக்கும், தோல்விக்கும் அதுதான் சூத்திரம்.

இங்கே “காதல் கோட்டை”க்கு முன்னது பொருந்தும்.

வெற்றிகளை ருசிக்கும் போது கடந்து வந்த அவமானங்களையும், தோல்விகளையும் ருசிக்க வேண்டும் அப்போது தான் அந்த வெற்றிகளுக்குக் கனதி இருக்கும்.

ஈழத்தில் எங்கள் அயலூர் மானிப்பாயில் ஒரு கிறீஸ்தவத் தேவாலயம் இருக்கிறது. அதைக் கடந்து போகும் போது அந்தத் தேவாலயத்தின் வாயிலில் இருக்கும் பிரமாண்டக் கம்பிக் கதவில்

“இதய தாகம் இருப்போர் வருக”

இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்,

இந்தப் படத்தின் கமலிக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த கிறீஸ்தவ மதக் கடவுளரையும் துதிக்கத் தேவாலயம் செல்லும் பண்பை வளர்த்தது இம்மாதியான நம்பிக்கை கொடுக்கும் வாசகங்கள் தான்.

“விருப்பப்படி வாழ்க்கை”

கானா பிரபா

Monday, July 12, 2021

சந்திரபோஸ் வழங்கிய “முதலாளியம்மா” 31 வருடங்களுக்குப் பின் கேட்ட பாட்டு ♥️

அந்தக் காலத்தில் தூரதர்ஷனின் வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்” பார்ப்பதற்காக அன்ரெனாவைத் திருப்போ திருப்பென்று திருப்பி, பாயாசப் புள்ளி அலைவரிசையில் இருந்து காட்சி பிடித்த கதைகளை எல்லாம் முன்னர் பேசியிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் தூரதர்ஷனை அனுபவித்த அந்தத் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அப்போதெல்லாம் “ஒலியும் ஒளியும்” பாடல்களோடு புத்தம் புதுப் படங்களின் பாட்டுகளின் நறுக்குகளைப் போட்டு விளம்பரப்படுத்திய வகையில் அறிமுகமானது

“ஆத்தோரம் ஆலமரம்

 நாமாட ஊஞ்சல் தரும்

 நாளெல்லாம் ஆடுவமா

 தெம்மாங்கு பாடுவமா....”

https://www.youtube.com/watch?v=fGPXIx3rG78

ஆனால் பின்னர் தொடர் போர்க்காலங்கள், மின்சாரமில்லாப் பொழுதுகளால் அந்தப் பாடலை மீண்டும் கேட்க முடியாது போனது.

கொழும்பு வந்து தேடினாலும் ரெக்கோர்டிங் பார் காரர் “நாறின மீனைப் பூனை பார்ப்பது” போலப் பார்த்ததால் அப்படியே விட்டு விட்டேன்.

ஆனாலும் அந்த ஆரம்ப வரிகளை மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருப்பேன், பசுமையாகப் பதிந்ததால்.

சந்திரபோஸ் நினைத்திருந்தால் ஹிட் அடித்த தன் “காக்கிச் சட்டை போட்ட மச்சான்” போலவே இன்னும் சிலதைக் கொடுத்துத் தன்னைப் பாதுகாத்திருக்கலாம். ஆனால் துள்ளிசைப் பாடல்களில் கூட வித விதமாகக் கொடுத்து ரசிக்க வைத்ததில் இந்தப் பாட்டின் அந்த முதல் அடிகளோடு அப்படியே காலம் கழிந்து போனது. அவ்வப்போது நினைப்பூட்டினாலும் பல்லாண்டுகளாக இணையத்தில் கிடைக்காத இசைப்பொருளாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன்.

சில வாரங்களுக்கு முன்னர் எதேச்சையாக என் மூளை ஞாபகப்படுத்த மீண்டும் தேடினால் அட்டகாஷ் ஒலித்தரத்தில் இந்தப் பாடல் கிட்டியது.

சரிகம நிறுவனத்தாரும் தம் பங்குக்கு ஏற்றியிருப்பது தெரிந்தது.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் எஸ்.பி.சைலஜாவுக்குக் கொடுத்த துள்ளிசைப் பாடல்களை வைத்தே தனிக் கட்டுரை எழுதலாம். அப்படி வந்தால் இதுவும் முதல் ஐந்துக்குள் இருக்கும் பாட்டு.

திருச்சி லோகநாதனின் புதல்வர்கள் இருவருக்கும் இந்தப் படத்தில் வாய்ப்பு. அவ்விதம் இந்தப் பாடலில் சைலஜாவோடு ஜோடி கட்டியவர் அருமை அண்ணன் T.L.மகராஜன்.

இன்னொருவர் சந்திரபோஸ் அவர்களாலேயே அறிமுகப்படுத்தி

“தேடும் என் காதல் பெண் பாவை  (ஒரு மலரின் பயணம், வாணி ஜெயராமுடன்)

https://www.youtube.com/watch?v=ilxtjzq-cYY

ஏதேதோ கற்பனை வந்து ( வாய்க்கொழுப்பு, லலிதா சாகரியுடன்)

https://www.youtube.com/watch?v=wYOO-KYuYG8

இரண்டு புகழ் பூத்த பாடல்களைக் கொடுத்த T.L.தியாகராஜன் அவர்கள் இங்கே “அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம்” https://www.youtube.com/watch?v=R1YKMQNVhqc  பாடலை சைலஜாவோடு இணைந்து பாடியிருக்கிறார்.

முதலாளியம்மா படத்தில் வந்த பாடல் என்றே தெரியாமல் பலகாலமாய் அனுபவித்த அற்புதமான பாட்டு கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடிய

“என்னில் வாழும் ஜீவனே”

https://www.youtube.com/watch?v=NLnlpD_pxQA

இந்தப் பாட்டெல்லாம் கொண்டாடித் தீராச் சுகம்.

வி.சி.குகநாதனின் படமாச்சே, புரட்சிப் பாட்டு இல்லாமலா?

அந்தப் பொறுப்பை “பூமியும் தூங்குதடா” பாடலாக வாணி ஜெயராமுக்குக் கொடுத்திருக்கிறார்.மலேசியா வாசுதேவன், லலிதா சாகரிக்கு “எங்கிருந்தோ வந்தவடா” பாடலுமாக மொத்தம் ஆறு பாடல்கள்.

இயக்குநர் வி.சி.குகநாதன் & இசையமைப்பாளர் சந்திரபோஸ் இணைந்த “மைக்கேல் ராஜ்” , “கை நாட்டு” படங்களில் மு.மேத்தாவே எல்லாப் பாடல்களும் என்ற தன்மையில் இங்கே “முதலாளியம்மா” படத்தில் எல்லாமே புலவர் புலமைப்பித்தன் கை வண்ணம்.

முதலாளியம்மா படத்தின் பாடல்களில் இன்னொரு மிக முக்கியமான பாடலைக் குறிப்பிடவேண்டும். அதைக் குழுவினரோடு பாடியவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

“கங்கை என்ன வைகை என்ன

எல்லாம் இங்கு நதிகளே

தெற்கே என்ன மேற்கே என்ன

எல்லாம் இங்கு திசைகளே

நம் மனிதரில் ஏன் பிரிவுகள் 

எண்ணிப் பார்ப்போம் தோழனே.....

https://www.youtube.com/watch?v=FEAS477NvMg

இந்தப் பதிவை எழுத முன்னர் இந்தப் பாடலைக் கேட்டு விட்டுத் தான் தொடங்கினேன். அப்படியே கரைந்து போய் விட்டது மனசு.

கானா பிரபா


Sunday, July 11, 2021

இன்னிசை வேந்தர் சந்திரபோஸ் வழங்கிய ஏவிஎம் படைப்புகள்



“வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே”


https://www.youtube.com/watch?v=hCdIy7SAOWE


“மனிதன்” திரைப்படம் வெளிவந்து 34 ஆண்டுகளாகி விட்டன. இலங்கையின் ஏதாவதொரு பண்பலை வானொலியின் அலைவரிசை தேடிப் பிடித்துத் திருப்பினால் இந்தப் பாட்டு காதில் விழுமளவுக்குத் தலைமுறை தாண்டிய தத்துவ முத்தாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

எண்பதுகளில் திரையிசை வாழ்க்கையை அனுபவித்தவர்கள் அதன் ஆகச் சிறந்த பரிமாணத்தின் அந்தத்தோடு அடுத்த தலைமுறைக்குள் நுழைந்தவர்கள். அதிலும் நம் பள்ளிக்கால வாழ்க்கையில் வீதிக்கு வீதி ரெக்கோர்டிங் பார், ஒவ்வொரு வீதி முடக்கிலும் இருக்கும் அந்தப் பாட்டு ஒலிப்பதிவு கூடங்களைக் கடக்கும் போது புதிய புதிய பாட்டுகளாகக் காதில் விழும். அதில் இளையராஜா என்றும் சந்திரபோஸ் என்றும் பாரபட்சமில்லாமல் கேட்ட எத்தனை எத்தனை பாடல்களைப் பின்னாளில் தேடித் திரிந்து ஒலிப்பதிவு செய்து கேட்டிருப்போம்.
இளையராஜா காலத்தில் எத்தனையோ அருமையான இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருமே அவரவர் அளவில் உச்சம் கண்டவர்கள். இன்றைக்கும் யாராவது ஓரு ரெக்கோர்டிங் பார்க்காரரைச் சந்தித்தால் சந்திரபோஸ் பற்றிப் பேசாமல் விடமாட்டார்.

ஏன் சந்திரபோஸ் தனித்துவமானவர்? அவர் கொடுத்த ஏராளம் ஹிட்ஸ் ஒவ்வொன்ன்றுமே வேறுவேறாய் இருக்கும். ரிதத்தில் கூட ஒன்றின் சாயல் இன்னொன்றில் விழாமல் பார்த்து விடுவார். ஒரு பாட்டு ஹிட் அடித்தால் அதை வைத்தே பிழைப்பை ஓட்டமாட்டார்.

கலைமாமணி சந்திரபோஸ் அவர்களது YouTube தளத்தில் நான் வழங்கிய பகிர்வில் இதையே முன்னுறுத்திக் குறிப்பிட்டேன்.

https://www.youtube.com/watch?v=6SMQRB1CWOE


அதனால் தான் தேடித் தேடிக் கேட்டோம் அவரின் பாடல்கள்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன் திரையிசைப் பயணம் குறித்து நீண்டதொரு தொடர் எழுதப் பல்லாண்டுகளாகப் பேராவல். ஆனால் அந்தத் தொடருக்கு முன்பு அச்சாரமாக ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து இன்று தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரபோஸ் அவர்களுக்கான புகழ் மாலையாகச் சூட்ட விரும்புகின்றேன். சந்திரபோஸ் அவர்களோடு பணியற்றிய வி.சி.குகநாதன் உட்பட இயக்குநர்கள் ஒரு பக்கம், இன்னோர் பக்கம் ஏவிஎம், கே.பாலாஜி, டி.ராமாநாயுடு, கலைப்புலி தாணு என்று உச்சம் கண்ட தயாரிப்பாளர்கள் இன்னோர் பக்கம் என்று எத்தனை எத்தனை பரிமாணங்களில் அவரைப் பற்றி எழுதிக் குவிக்கலாம்.


ஏவிஎம் & சந்திரபோஸ் கூட்டணியின் தனித்துவம் என்னவெனில் அவர்களின் கூட்டில் ஆகப் பெரிய நட்சத்திரத் தயாரிப்புகளும் வந்திருக்கின்றன, இன்னோர் பக்கம் தமிழ் நாட்டின் கடைக்கோடிக் குடும்பங்கள் பார்த்து ரசிக்கக் கூடிய கதையம்சம் உள்ள படங்களும் எழுந்திருக்கின்றன.

இன்னொரு பக்கம் ஏவிஎம் நிறுவனத்தின் சின்னத்திரை முயற்சிகளில் ஆச்சி இண்டர்நேஷனல், நிம்மதி உங்கள் சாய்ஸ், சொந்தம் போன்ற பிரபல தொடர்களுக்கும் இசை வழங்கினார் சந்திரபோஸ்.


ஏவிஎம் என்ற மாபெரும் தயாரிப்பு நிறுவனத்தின் எண்பதுகளின் கணிசமான வெற்றிகளை அறுவடை செய்த படங்களில் சந்திரபோஸ் அவர்களது இன்னிசை நிரம்பியிருகின்றது.
அதன் தொடக்கமாக அமைவது “சங்கர் குரு”. ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஏற்கனவே திரையுலகில் இயங்கினாலும் அவருக்கான ஒரு பரவலான ரசிகர் வட்டத்தை எகிற வைத்ததில் சங்கர் குரு மிக முக்கியமானது.

சங்கர் குரு சம காலத்தில் தமிழ், தெலுங்கு என்று எடுக்கப்பட்ட படம். அதில் என்ன புதுமை என்றால் தமிழுக்கு சந்திரபோஸ் தெலுங்குக்கு (சின்னாரி தேவதா) சக்ரவர்த்தி தான் இசை.

அந்தக் காலத்தில் பேபி ஷாலினியை முக்கிய பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. அதனால் இங்கேயும் அவரைச் சுற்றிய கதை.

சின்னச் சின்னப் பூவே ஜேசுதாஸ் குரலில் சந்தோஷம் பாடல்

https://www.youtube.com/watch?v=5hTs4XiQc8s


அதே பாடலை எஸ்.ஜானகி சோக ராகம் இசைத்தார்

https://www.youtube.com/watch?v=XXIVD93dnXU




காக்கிச் சட்டை போட்ட மச்சான் மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா துள்ளிசையில் பட்டையைக் கிளப்ப

https://www.youtube.com/watch?v=jNRv_kXxkWE

இன்னொரு பக்கம் எஸ்பிபி & எஸ்.ஜானகி “என்னைப் பத்தி நீ என்ன நெனக்கிறே...” https://www.youtube.com/watch?v=jwIJ_FzfXZA
என்று மெல்லிசை மயிலிறகாய் வருடினார்கள்.

சந்திரபோஸ் அவர்களுடைய பாடல்களின் ஒலித்தரம் உச்சமாக இருக்கும். இன்றும் நான் “காக்கிச்சட்டை போட்ட மச்சான்” பாடலை நவீன ஒலிக்கருவிகளில் ஒலிக்கவிடும் போது அதன் இசை தெறித்துத் துள்ளும், பின்னணி வாத்தியங்களில் துல்லியம் எழும்.
அவர் காலத்தில் கொடுத்த பாடல்களில் இந்த மாதிரியான ஒலித்தரத்தை அவர் பேணியது வெகு சிறப்பு.

நடிகர் அர்ஜீன் வாழ்வில் பெரும் திருப்புமுனை கொடுத்த சங்கர் குரு படம் இன்னோர் பக்கம் சந்திரபோஸ் & ஏவிஎம் நிறுவனம் தொடர்ந்து இயங்கப் பெரும் பலமான பாலமாக அமைகின்றது.

அர்ஜீனை வைத்து பின்னாளில் ஏவிஎம் தயாரித்த படங்கள் “தாய் மேல் ஆணை” மற்றும் “சொந்தக்காரன்”. சங்கர் குரு இயக்கிய அதே ராஜா இயக்கிய படங்கள்.

“ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு”

https://www.youtube.com/watch?v=RI-LYczdEWA

இன்றும் ஊர்க்கார சொந்தங்களின் ரேடியோப் பெட்டியில் ஒலிப்பார்கள் எஸ்பிபியும் & எஸ்.ஜானகியும் “தாய் மேல் ஆணை” வழியாக.

“சின்னக் கண்ணா செல்லக் கண்ணா” பாடல் மட்டும் மூன்று குரல்களில், நான்கு வடிவங்களில் இருக்கும்

சித்ராவுக்கு சந்தோஷத்திலும்

https://www.youtube.com/watch?v=MGNncSPNm_Q

சோகத்திலும்

https://www.youtube.com/watch?v=vhog8avd2L0

ஜேசுதாஸுக்கும்

https://www.youtube.com/watch?v=rCZ6zJJeIbY

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும்

https://www.youtube.com/watch?v=R47co17b0V4

என்ற புதுமையோடு இன்னொன்றாக
கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய பெரும் பாடகர்களோடு பழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியையும் இணைத்து
“எந்தக் கதை சொல்ல நான் எந்தக் கதை சொல்ல”
https://www.youtube.com/watch?v=XJANyblxnVw

என்ற அற்புதமான பாடலையும் ஆக்கியளித்திருப்பார் கலைமாமணி சந்திரபோஸ் அவர்கள்.


“சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்”
https://www.youtube.com/watch?v=AQrgGHr_el4


உரை பேசும் கவிஞர் வைரமுத்துவையும், பாடும் எஸ்பிபியோடு சேர்த்துக் கொடுத்த தத்துவப் பாட்டு.

இங்கேயும் பாடல்களில் தன் அடையாளத்தை நிறுவினார் சந்திரபோஸ். அங்கே சின்னச் சின்னப் பூவே கொடுத்த பாங்கில் இன்னொரு மெட்டு இன்னொரு பாட்டு
கட்டித்தங்கமே உன்னைக் கட்டியணைத்தேன் ( கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி)
https://www.youtube.com/watch?v=GWXewzdihhc

அதே பாடல் சோக ராகத்திலும் உண்டு.

“சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா”

எனது ஐபோனில் சேமித்திருக்கும் இந்தப் பாடல் அனிச்சையாக காரை இயக்கும் போது ப்ளூடூத் வழி தானாக எழும் போது எனக்கே பாடுவது போன்றதொரு தத்துவ வெளிப்பாட்டைக் காட்டும்.

ஏவிஎம் நிறுவனம் - இசையமைப்பாளர் சந்திரபோஸ் - பாடலாசிரியர் வைரமுத்து வெற்றிக் கூட்டணி கொடுத்த படம் "வசந்தி".

வெற்றிக் கூட்டணி என்று இங்கே அடைமொழி கொடுக்கக் காரணம் படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தாண்டி அருமையான பாடல்களால் ரசிகர் மனதை ஆட்கொண்ட படங்களில் இதுவுமொன்று.


"ரவி வர்மன் எழுதாத கலையோ" (கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா)
https://www.youtube.com/watch?v=kODHZ4BGEag

என்ற முத்திரைப் பாடல் வைரமுத்துவின் திரையிசைப் பயணத்தில் விலத்த முடியாத பாட்டு.
அந்தப் பாடல் இடம் பிடித்தது வசந்தி திரைப்படத்தில்.
"பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதே திரைப்படத்தின் கதாசிரியர் (பழம்பெரும்) இயக்குநர் சித்ராலயா கோபு வசந்தி திரைப்படத்தை இயக்கினார்.

ஒரு பாடலை ஆண் குரல் தனித்தும் பெண் குரல் தனித்தும் பாடும் வகையில் ஏராளம் பாடல்கள் இசைஞானி இளையராஜா இசையில் வந்திருக்கின்றன. ஆனால் சந்திரபோஸ் இசையில் வெகு அரிதாகவே இது நேர்ந்திருக்கிறது. "பாட்டி சொல்லைத் தட்டாதே" படத்தின் "வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பள" பாடலைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகக் கொடுத்திருப்பார். அந்த வகையில் சந்திரபோஸ் வசந்தி படத்தில் "சந்தோஷம் காணாத" பாடலுக்கு இரண்டு வடிவம் கொடுத்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய "சந்தோஷம் காணாத வாழ்வுண்டா" பாடலுக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியதும், சித்ரா பாடியதும் தனித்தனியான வெவ்வேறு வரிக்களை சரணத்தில் கொண்டிருக்கும். ஒப்பீட்டில் சித்ரா பாடியதில் கொஞ்சம் எளிமையும் ஜேசுதாசுக்குத் தத்துவார்த்தம் சற்றே தூக்கலாகவும் இருக்கும்.
"இந்தப் பாடல் பாடுவதற்கு நான் தானே பணம் கொடுக்கணும்" என்றாராம் ஜேசுதாஸ் வைரமுத்துவிடம் பாடல் பதிவு முடிந்ததும்.
எண்பதுகளில் எழுந்த தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு என்றும் இடமுண்டு.
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் கேட்க
https://youtu.be/xal-3n8f9A0
காட்சி வடிவில்
https://youtu.be/QFk5lKCwT4Q
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - சித்ரா குரலில் கேட்க https://youtu.be/klASf89CbZU


“வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு உள்ளூரு முழுக்க உன்னைப் பத்திப் பேச்சு”

https://www.youtube.com/watch?v=c8_R-UVpw5c

அந்தக் காலத்துக் கல்யாண வீடுகளில் மட்டுமா ஒலித்தது?
கோயில் திருவிழாக்களில் கூட நாதஸ்வர மேளப் பாடல்களில் கேட்டு அனுபவித்தது ஒரு பொற்காலம். இந்தப் பாட்டு வந்த “பாட்டி சொல்லைத் தட்டாதே” ஏவிஎம் நிறுவனத்தின் ஆகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. பறக்கும் கார் அதியசத்தோடு பாடல்களையும் பறந்து பறந்து ரசித்தோம்.

“வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா” சந்தோஷத்தையும்
https://www.youtube.com/watch?v=NivyvVCdCsI

“வெத்தலை மடிச்சுக் கொடுத்த பொம்பள” சோகத்தையும்
https://www.youtube.com/watch?v=CDuDLuIFeWc

பாடலையும் கொண்டாடித் தீர்த்தோம். இன்னும் கேட்டு இன்புறுகிறோம்.

ஒரு பக்கம் பழம் பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியை வைத்து “கார் கார் சூப்பர் கார்” பாட்டு, இன்னொரு பக்கம் “ஆச்சி” மனோரமாவுக்கு அடையாளமாய் அமைந்த “டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே” https://www.youtube.com/watch?v=udsQAA0k9L8

இந்த மாதிரியான ஜாலியான படத்திலும் எத்தனை எத்தனை விதமான முத்துகளை அள்ளி வீசியிருக்கிறார் எங்கள் சந்திரபோஸ் அவர்கள்.

“பாட்டி சொல்லைத் தட்டாதே” படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனதும் அதை அப்படியே தெலுங்கிலும் ராஜசேகரே இயக்க, பானுமதி, மனோரமா வேடத்திலும், Bamma Maata Bangaru Baata என்ற பெயரில் ராஜேந்திரபிரசாத் & கெளதமி ஆகியோர் நடிப்பில் வெளியான போது அதற்கும் இசை வழங்கியது சந்திரபோஸ் தான்.
“டில்லிக்கு ராஜான்னாலும்” மனோரமா தமிழுக்கு, தெலுங்கில் பாடியது பானுமதி https://www.youtube.com/watch?v=K9GXKJokzx8 அவர்கள் என்று ஒரு தனித்துவம் கொடுத்தார் சந்திரபோஸ்.


ஒரு விடயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று உட்கார்ந்தால் சில சமயம் எதுவுமே வெளிக்காது. ஆனால் அதையே மனசில் போட்டு வைத்தால் வேறு ஏதாவது வேலை செய்யும் போது அவ்வப்போது குறித்த விடயம் பற்றி எழுத வேண்டியது, எப்படியெல்லாம் தகவல்கள் அமைய வேண்டியது எல்லாமே தானாக உதித்து விடும்.
சில பகிர்வுகளை iPhone Notes இல் சிறுகச் சிறுகக் கோர்த்து வைத்துப் பதிவாக அமைத்த அனுபவமும் உண்டு. இதையே எழுத்தாளர் முத்துலிங்கம் சொல்லுவார் “மனசுக்குள் ஊறப் போட்டு எழுதுவது” என்று.
இப்படித்தான் இசையமைப்பாளர் சந்திரபோஸ் இற்கும் ஒரு அனுபவம்.
ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஆஸ்தான இசையமைப்பாளராகவே எண்பதுகளின் இறுதிப் பகுதியில் கோலோச்சியவர் சந்திரபோஸ்.
பெரும் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து
தக்க வைக்க வேண்டிய பொறுப்பு இவருக்கு. அதை நிரூபிக்கும் வகையில் ஏவிஎம் உடன் சந்திரபோஸ் கூட்டுச் சேர்ந்த படங்கள் எல்லாமே பாரபட்சமின்றி சூப்பர் ஹிட் பாடல்களோடு அமைந்திருந்தன.
இயக்கு நர் செந்தில் நாதன் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற சூப்பர் ஹிட் படத்தை விஜய்காந்துக்குக் கொடுத்த வகையில் அவருக்கு நல்லதொரு அறிமுகம் அமைந்திருந்தாலும் தொடர்ந்து வந்த படங்கள் முதல் படம் அளவுக்கு அமையவில்லை. அப்படியிருந்தும் ஏவிஎம் தயாரிப்பில் "பெண் புத்தி முன் புத்தி" படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. வழக்கம் போல சந்திரபோஸ் தான் இசை.
இயக்குநர் செந்தில்நாதன் குறித்த காட்சியினை விளக்கி பாடலை எதிர்பார்த்து சந்திரபோஸிடம் கேட்கிறார். அந்த நேரம் பார்த்து சந்திரபோஸ் கொடுக்கும் மெட்டுகள் சந்திரபோஸ் இற்கே திருப்தி இல்லாமல் போகிறது.
அப்படியே விட்டு விட்டுக் கலைந்து போகிறார்கள்.
அடுத்த நாள் தன் காரில் பயணிக்கும் போதும் சந்திரபோஸ் நினைவெல்லாம் கொடுக்கப் போகும் பாட்டிலேயே தங்கி நிற்கிறது.
ஒரு வீதிக் கடவை நிறுத்தத்தில் கார் நிற்கிறது.
கார் இருக்கையில் இருந்த சந்திரபோஸுக்குத் திடீரென்று ஒரு மெட்டு மனதில் பிறக்கவும் கை கார்க் கதவிலேயே தாளம் போட்டுப் டம்மியாகப் பாடிப் பார்க்கிறார்.
அதுவே ஒலிப்பதிவு கூடத்தில் பாடலாக உருவாகி இன்னொரு சூப்பர் ஹிட் பாடலை ஏவிஎம் இற்குக் கொடுத்த திருப்தி சந்திரபோஸ் இற்குக் கிட்டுகிறது. அந்தப் பாடல் தான் "கொலுசே கொலுசே எச பாடு கொலுசே" https://www.youtube.com/watch?v=6eaWVkHDnN0

இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் ஆகாசவாணியும் சுவீகரித்துக் கொண்டது போல கொண்டாடிய காலம் மறக்க முடியாது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடிக் குரலாக எஸ்.பி.சைலஜா. ஏனோ சந்திரபோஸ் இற்கு எஸ்.பி.சைலஜா குரலில் ஈர்ப்பு. தன்னுடைய படங்களில் இவருக்கான தனித்துவமான வாய்ப்புகள் கிட்டியது.
ஒரு பாடலுக்கு இன்னும் மகத்துவம் செய்வதே அதன் காட்சி வடிவத்தைக் பங்கமில்லாது பயன்படுத்துவது தான். இந்தப் பாடலின் திரை வடிவமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
குறிப்பாக அந்தக் கிராமியச் சூழலும் ராம்கி, கெளதமி ஜோடியும் சிறப்புச் சேர்க்கும்.
இந்தப் படத்தில் கவுண்டமணியையும் பாட வைத்திருப்பார் சந்திரபோஸ்
போனால் போகட்டும் போடா கவுண்டமணி குரலில்
https://www.youtube.com/watch?v=9odWqTSYcCc



“வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்” இந்தப் பதிவின் ஆரம்பத்தில் கொடுத்த பாட்டு, அதுவொரு தத்துவப் பாட்டு. எனவே மேற்கொண்டு இன்னொரு தத்துவப்பாட்டா என்ற கேள்வி எழுந்தது.
“என்ன ஸார்....இவ்வளவு அழகான வரிகளைப் படத்தில் சேர்க்க மாட்டேனெங்கிறீர்களே?” என்று வைரமுத்து ஆதங்கப்பட சரி பாடல் இசைத்தட்டு, ஒலி நாடாவில் மட்டும் ஆறாவது பாட்டாக இதைச் சேர்த்து விடுவோம் என்று முடிவெடுத்தார்கள்.
ஒரு நாள் ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் இருந்த எஸ்.பி.முத்துராமனின் அறையில் குளித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் இந்தப் பாடலைக் கேட்டு விட்டார்.
“இவ்வளவு அருமையான பாட்டு படத்தில் இல்லாமல் இருப்பதா நோ நோ நிச்சயம் வேண்டும் உள்ளே போட முடியாவிட்டால் டைட்டில் கார்டில் போடலாம் நான் நடித்துத் தருகிறேன்” என்று பிடிவாதம் பிடித்து நடித்தும் கொடுத்தார் ரஜினி.

அந்தப் பாட்டுத் தான்

“மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்”
https://www.youtube.com/watch?v=OapXIwg0HEc

அந்தப் பாட்டு பெற்ற உயரத்தைத் தனியே சொல்லவும் வேண்டுமா?

“ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது”
https://www.youtube.com/watch?v=Y6PXMwgu1xE

கே.ஜே.ஜேசுதாஸின் மென் குரலை ரஜினிக்குப் பொருத்திய அழகான பாடல்களில் இதுவும் ஒன்றாய்க் கொடுத்தார் சந்திரபோஸ். சித்ரா ஜோடி போட்டார்.

சந்திரபோஸ் ஏவிஎம் இற்குக் கொடுக்கும் செண்டிமெண்ட் பாட்டு வரிசையில் வாணி ஜெயராமின் அழகான பாட்டாய்
“முத்து முத்துப் பெண்ணே முத்தம் தரும் கண்ணே”
https://www.youtube.com/watch?v=Q53jxuKrshA

மனிதன் படமும் நாயகன் படமும் வெளியான போது ரஜினியே சலனப்பட ஆனால் வென்று காட்டியது மனிதன். அந்தப் படத்தின் பெரு வெற்றியில் சந்திரபோஸ் அவர்களின் பங்களிப்பைத் தவிர்க்க முடியாது அச்சடித்து ரசிகர் மனதில் எழுதி வைத்தன பாடல்கள்.


ரஜினிகாந்தின் நட்சத்திர அடையாளத்தை நிறுவிய பாடல்களில் ஒன்றாய், பின்னாளில் “வீரத்தில் மன்னன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி” க்கு முன்னோடியாக அமைந்த பாட்டு
“காளை காளை முரட்டுக் காளை”

https://www.youtube.com/watch?v=zA_Touzz-W0

பின்னர் ரஜினிகாந்த், ஏவிஎம், எஸ்.பி.முத்துராமன் சந்திரபோஸ் கூட்டணி எழுந்த போது இன்னொரு நட்சத்திரப் பாட்டாக
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்”
https://www.youtube.com/watch?v=9MsmYMKJZqk

ராஜா சின்ன ரோஜாவில் அதே எஸ்பிபி & எஸ்.பி.சைலஜா கொடுத்தது காலம் கடந்தும் ரஜினிக்கான சின்னப் பாடலாக அமைந்து விட்டது.

“ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்”

https://www.youtube.com/watch?v=gpNhoL__Woc

கார்ட்டூன் சித்திரங்களோடு ரஜினி, ஷாலினி, குழந்தைகள் ஆடிப்பாடும் அந்தப் பாட்டு ஒரு புதுமை என்றால் அந்தப் புதுமைக்கு இசை கொடுத்த பெருமை சந்திரபோஸுக்கு.

“ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை” தத்துவம் ஜேசுதாஸுக்கு. “ஒங்கப்பனுக்கும் பே பே” என்றதொரு துள்ளிசையில் மீண்டும் எஸ்பிபி & எஸ்.சைலஜா என்று “ராஜா சின்ன ரோஜா” காட்டிலும் சந்திரபோஸின் தேனிசை மழை.

இதோ ஏவிஎம் இற்குத் தன் வழக்கமான குழந்தைப் பாட்டு
“பூ பூ போல் மனசிருக்கு”
https://www.youtube.com/watch?v=NOQ8VlfvPsE

இம்முறை மனோவை முதன் முதலில் பாட அழைத்து சந்திரபோஸ் இந்தப் பாட்டைக் கொடுத்ததை மனதோடு மனோவில் அவர் முன்னிலையிலேயே நெகிழ்ந்து சொன்னார் மனோ.

2018 இல் கலையுலகில் நாற்பது வருடங்களை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கொண்டாடிய போது குறித்த சிறப்பு நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய போது அந்த நிகழ்ச்சியின் அடி நாதமாக ஒலித்தது மாநகர காவல் படத்தில் போலீஸ் அதிகாரி விஜயகாந்த் அறிமுகமாகி
எதிரிகள் பணயம் வைத்திருக்கும் அப்பாவிகளைக் காப்பாற்ற அவர் வேட்டையாடப் போகும் போது பயணிக்கும் இசை.

https://www.youtube.com/watch?v=6_hWLRh8cBU

இந்த மாதிரி பின்னணி இசைக்கான கெளரவம் என்பது அவ்வளவு சுலமாக இளையராஜா தாண்டி வாய்க்காத தருணத்தில் இசையமைப்பாளர் சந்திரபோஸுக்குக் கிடைத்திருக்கிறது.
எண்பதுகளில் இளையராஜாவுக்கு நேரடிப் போட்டி என்றால் அது சந்திரபோஸ் தான் என்ற வகையில் ரஜினிகாந்துக்கும், விஜயகாந்துக்கும் அவ்வாறே ஒரு நட்சத்திர இசையமைப்பாளராக அமைந்தார்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் இன் திறமைக்குப் பலமாக இருந்தது ஏவிஎம் என்ற பெரும் நிறுவனம் தொடர்ந்து வழங்கிய வாய்ப்புகள் ரஜினிகாந்துக்கு
ராஜா சின்ன ரோஜா, மனிதன் என்று வெற்றிகரமான இசை பவனியாகவும் விஜயகாந்துக்கு மாநகர காவல் என்றும் அமைந்தது. சந்திரபோஸின் வெற்றிகரமான திரையுலக வாழ்வு நிறைவு நோக்கித் தள்ளப்பட்ட போது மாநகர காவல் படமே அவரின் ஆகப் பெரும் இறுதி வெற்றியாக அமைந்தது. அதை உள்ளுணர்ந்தாரோ என்னமோ எல்லாம் தேனான பாடல்கள் என்று அளித் தெளித்தார். “தோடி ராகம் பாடவா.....மெல்லப் பாடு” https://www.youtube.com/watch?v=0-EdIAvC08U

இந்தப் பாடலில் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சித்ரா கொடுக்கும் அந்தக் கனிவான மெல்லிசைக் குரல் நயம் ஆதியில் சந்திரபோஸ் தந்த “ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது” (மனிதன்) என்ற பாடலின் உறவும் சொல்லும் இனிமை.
“வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர சண்டித்தனம் செய்யலாமோ குதிர”
https://www.youtube.com/watch?v=GgSDBmFo5F4

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜா அண்ணன் தங்கை ஜோடி போட்ட பாட்டு. பாடல் முழுக்க எஸ்.பி.பி இன் நையாண்டி மேளக் குரல் தான். எவ்வளவு ஜாலியாகக் கொட்டியிருப்பார் கூடவே சைலஜாவும் ஹோய் ஹோய்.

இந்தப் பாடலின் இசையும் பாட்டுக் குரல்களுமாக ஒரே துள்ளிசைப் பரவசத்தை இறக்கி விடுவார்கள் கேட்கும் போதே. சந்திரபோஸ் பாடகி சைலஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் தனித்தும் ஜோடியாகவும் பாட நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்.
இங்கேயும் சைலஜாவுக்கு ஒரு தனிப்பாடலாகத் “திருவாரூர் தங்கத் தேர் வருது” அமைந்திருக்கிறது. அது போலத் “தலைவாரிப் பூச்சூடும் இளம் தென்றலே” https://www.youtube.com/watch?v=vfcPeZt-9OI என்று பாச மொழியில் தனித்து உருகுவார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

கே.ஜே.ஜேசுதாசுக்கும் ஒரு தனிப்பாடலாக “காலை நேரம் இதமானது”
https://www.youtube.com/watch?v=xX003Q_dDrU
என்றொரு அழகிய மெட்டு விடிகாலையில் மெல்ல மொட்டவிழ்க்கும் மலர் போல மெதுவாக, இதமாக. வழக்கமாக ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான கவிஞராக இருக்கும் வைரமுத்து பாடல்கள் எழுதாமல் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியது புதுமை.

மொத்தத்தில் சந்திரபோஸ் என்ற இசையமைப்பாளருக்கான உச்ச பட்ச இறுதி மரியாதையை இசை மீட்டியது மாநகர காவல்.

“ஊருக்குச் சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகளுண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்த போது வெளிச்சம் உண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்குக்கூட சுகங்கள் உண்டு

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆறுண்டா...”


என்றென்றும் நம்மோடு வாழும்
தமிழ் திரை அரசர் சந்திரபோஸ் அவர்களுக்கு
இனிய 71 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.