Pages

Tuesday, March 10, 2026

தக்காளி சீனிவாசன்

தக்காளி சீனிவாசன்



ஒரு தயாரிப்பாளராக இவர்கள் வருங்காலத் தூண்கள், நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட படங்களில் இயங்கிய வகையில் எண்பதுகளின் தமிழ் சினிமா உலக ரசிகர்கள் மறக்காத அடையாளம்.

சூரசம்ஹாரம் உட்பட நடிகராகவும் மிளிர்ந்தவர், கவர்ச்சிகரமான தோற்றம். இன்னும் வாய்ப்புகள் விசாலமாக அமைந்திருக்க வேண்டும்.

ஜென்ம நட்சத்திரம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

பிரேமி - ஶ்ரீனி இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை.

குறிப்பாக நாளை மனிதன், வலது காலை வைத்து வா பாடல்கள்.

சாய் வித் சித்ராவில் இவரைப் பேட்டி எடுக்கத்  தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சித்ரா லட்சுமணன் அவர்கள் சொல்லியுள்ள நிலையில் அவரின் இழப்பு அதிர்ச்சிகரமானது.

இன்று (மார்ச் 10) நம்மை விட்டு மறைந்த தக்காளி சீனிவாசனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏





Saturday, March 7, 2026

கங்கை அமரன் ❤️ஆர்.சுந்தரராஜன் ❤️ இசைந்து இசைத்த புது ஸ்வரங்கள் ❤️



கங்கை அமரன் ❤️ஆர்.சுந்தரராஜன்

❤️ இசைந்து இசைத்த புது ஸ்வரங்கள் ❤️


ஆத்தோரம் மேட்டு மேலே

ஆறு முழம் சேலை கட்டி

ஆடி அசைஞ்சு வாறா

அக்கா மக

இந்தப் பாடலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது, பாடலை எழுதியது வேறு யாருமல்ல எண்பதுகளில் நட்சத்திர இயக்குநராக மிளிர்ந்த ஆர்.சுந்தரராஜன் தான்.

அதுவும் தன்னுடைய ஆத்ம நண்பர் கங்கை அமரனே பாடி, இசையமைத்தது.

அதுதான் “ஒருத்தி மட்டும் கரையினிலே” படமாக வந்தது.

கதை, வசனம் எழுதி ஆர்.சுந்தரராஜன் நடிகராகவும் அறிமுகமானது இந்தப் படத்தில் தான். படத்தை இயக்கியிருந்தவர் ஜே.ராமு.

இதே படத்தில் ஆர்.சுந்தரராஜனின் உறவினரும், விஜயை வைத்து கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தை இயக்கிய சி.ஜே.ரங்கநாதனும்

அசோசியேட் டைரக்ரடாக இயங்கி இருக்கிறார்.


ஒரு வருடம் கழித்து, இன்னொரு கதையோடு தயாரிப்பாளர் கோவைத்தம்பியிடம் போன ஆர்.சுந்தரராஜனை இயக்கவும் செய்யுமாறு வலியுறுத்தியவர், இதே கூட்டணியில் இருந்த சாகா, இயக்குநர் சிறுமுகை ரவி.

ஆட்டோவின் பின் பக்கம் எழுதியிருந்த “பயணங்கள் முடிவதில்லை”

வாசகத்தைப் படத் தலைப்பாக வைத்து ஒரு வருடம் ஓடியது வரலாறு.


அதற்கும் முன் இன்னொரு சம்பவம்.


“அழகிலே நாயகி அருகிலே நாயகன்

புதிய கதை பேசும் திரு நாளில் தென்றலும் வாழ்த்துதே”


கங்கை அமரனே தயாரிப்பாளராகி, கங்கை அமரனையே தன் படத்துக்கு இசையமைப்பாளராக்கி, கவிஞர் கண்ணதாசனை வைத்துப் பாட்டெழுதி ஆர்.சுந்தரராஜன் இயக்கவிருந்த படம்

“அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”.

ஆனால் அந்தப் பட நாயகி ஷோபாவின் இழப்போடு படமும் முடக்கப்பட்டது.


பின்னர் கங்கை அமரன் என்று இசையில் ஆர்.சுந்தரராஜன் படம் எதுவும் இயக்கவில்லை என்பதும் அவல முரண்.


ஆர்.சுந்தரராஜனின் திரையுலக வாழ்க்கையில் கங்கை அமரன் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிப் போனார் என்பதை கங்கை அமரன் இசையிலேயே இவர் பாட்டெழுதிய காலம் தொட்டு அமைந்து விட்டது.


இன்னொரு சுவையான விடயம்.

கங்கை அமரன் ஒரு இசையமைப்பாளராகத் திரையில் தோன்றியதோடு தன் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரோடு “தோகை இளமயில்” பாடலைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போல பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும். திரையில் தோன்றிய வகையிலும் இருவரும் பங்கு போட்டிருக்கிறார்கள்.


வைகறையில் வைகை கரையில்

வந்தால் வருவேன் உன் அருகில்

கங்கை அமரன் தன் பால்யகாலத்தில் எழுதியது அற்புதமானதொரு களச் சூழல் பயணங்கள் முடிவதில்லை படத்தில் அமைந்தது.

அது மட்டுமா அந்த கலகல கங்கையின் “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா”

பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.


எண்பதுகளில் இயக்குநர் ஆர்.சுந்தரராஜனின் தனித்துவம் எல்லா மேன்மை தரும் இசையமைப்பாளர்களோடும் இயங்கியது தான்.

அந்த வகையில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனோடு அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை மற்றும் தூங்காத கண்ணின்று ஒன்று ஆகிய படங்களில் இயங்கியிருக்கிறார்.

இவற்றில் கங்கை அமரன் பங்களிப்பு இல்லை.

ஆனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு இயங்கிய “சரணாலயம்” படத்தில் கங்கை அமரனுக்கு இரண்டு பாடல்களை எழு வைத்துக் கடனைத் தீர்த்தார்.


தொடர்ந்து கங்கை அமரனோடு இணைந்த வகையில் இளையராஜாவின் படங்களைப் பார்த்தால் எல்லாமே தெவிட்டாத தேன் குழல்கள் தான்.

சீர் கொண்டு வா வெண் மேகமே (நான் பாடும் பாடல்), இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே (வைதேகி காத்திருந்தாள்),

என்று தொடரும்.

குங்குமச் சிமிழ் படத்தில் “பூங்காற்றே தீண்டாதே” என்று இளையராஜாவுக்குக் கொடுத்த பாங்கில் “தலைவனை அழைக்குது” என்ற அற்புதமான பாடல் தேவா இசையில் என் ஆசை மச்சானில் அமைந்திருக்கிறது.


அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் பாடல்கள் எல்லாமே பூந்தி லட்டுகள்.

எல்லாமே கங்கை அமரன் கை வண்ணம். சின்ன மணிக்குயிலே, உன் பார்வையில், நம்ம கடை வீதி, காலை நேரப் பூங்குயில், ஒரு மூணு முடிச்சால, பூவ எடுத்து என்று எழுதும் போதே தேனருவியாய் மனதில்.

விஜயகாந்துக்குக்கு ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் என்று ஒரே படத்தில் நான்கு குரலாளர்கள் 


இன்னொரு புதுமையைச் சொல்லி வைக்க வேண்டும். மெல்லிசை மன்னர் விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் முதன் முதலில் இணைந்து இசையமைக்கும் முன்பே மெல்லிசை மன்னர் இசை கொடுக்க, இளையராஜா “ஆத்தோரம் மேட்டு மேலே” பாடலைப் பாடியிருக்கிறார். சுகமான ராகங்கள் என்ற அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜனே.


மெல்லத் திறந்தது கதவு படத்தில் பாடலாசிரியர் கங்கை அமரனாக ஊரு சனம் தூங்கிருச்சு, சக்கரக் கட்டிக்கு, என்று முத்தான பாடல்கள்.


தோல்விப் படமென்றாலும் தோல்வியாகாத பாட்டுப் படம் தழுவாத கைகள் படத்தில் இரண்டு பாடல்கள் கங்கை அமரன் எழுதவும், விழியே விளக்கொன்று ஏற்று ஒளி வீசியது.


தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் சுந்தரராஜன்.

காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் மூன்று பாட்டுகள் நான்கு வடிவங்களில் உண்டு. அவற்றை எழுதியவர் கூட கங்கை அமரனே. குக்குக் கூவென, சம்மதம் சொல்ல வந்தாள் இரண்டும் 80 களின் ரெக்கார்டிங் சென்டர் ஹிட்ஸ்.


பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் பங்கு போட்டதால் என் ஜீவன் பாடுது பாடல்கள் கங்கை அமரனுக்கு அமையவில்லை. 

தொடந்து அவரின் குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேசன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்த ராஜாதி ராஜாவில் மாமா உன் பொண்ணைக் கொடு என்று அதகளப்படுத்தினார். படத்தில் பயன்படுத்தாத உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு பாடலும் அவரே.


தாலாட்டு பாடவா பேருக்கேற்ப பாடல்களால் தாலாட்டியது. இங்கு கங்கை அமரன் இல்லாமலா? வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலயா, நீதானா நீதானா, அம்மம்மா, நீதானே, ஓடைக்குயில் ஒரு பாட்டுப் படிக்கலையா எழுதும் போதே அந்தப் பாடல்கள் எல்லாம் காதில் ரீங்காரமிட்டுப் போகும்.


இளையராஜா & ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் கங்கை அமரன் இணையாத இன்னொரு படம் எங்கிட்ட மோதாதே.

மீண்டும் வட்டியும் முதலுமாக சாமி போட்ட முடிச்சு படத்தில் கங்கை அமரன் அள்ளித் தெளிக்கிறார் பொன்னெடுத்து வாரேன் வாரேன், நீலவேணி அம்மா நீலவேணி, மாதுளங்கனியே, கோடையிடிச் சத்தம் இப்ப கேக்குதடி… 

பாருங்கள் ஹிட் அடித்த அந்தப் பாடல்கள்.


தேவா & காளிதாசன் கூட்டணி போட்டதால் ஒயிலாட்டம் படமும் கங்கை அமரனுக்குக் கிடைக்கவில்லை.

பின்னர் என் ஆசை மச்சானில் சோறு கொண்டு போற புள்ள பாடல் தேவா & கங்கை அமரன் கூட்டணியில் பிறந்தது.

காந்தி பிறந்த மண் படத்தில் பட்டாம் பட்டாம்பூச்சி தான், பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் என்ற ஜோடிப் பாடல்களும் இதே கூட்டணியில் மலர்ந்தவை தான். 

சீதனம், காலமெல்லாம் காத்திருப்பேன் அனைத்துப் பாடல்களையும்

ஆர்.சுந்தரராஜனே எழுதி விட்டார்.


குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே உக்கார்ந்து பேசலாமா?

திருமதி பழனிச்சாமி மீண்டும் கங்கை அமரனை அழைத்து வந்து குத்தாலக் குயிலோடு, ரெண்டுல ஒண்ணைத் தொடு ஐயும் தர வைத்தது.


உங்கப்பன் பேரைச்

சொல்லிச் சொல்லித் திட்ட

ஒரு புள்ள பெத்துட்டா….

இளையராஜா இசையில் அவரே பாட, கங்கை அமரன் எழுதி, 2013 இல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “சித்திரையில் ஒரு நிலாச் சோறு” படத்துக்காக அமைந்தது.

இதுவரை காலமும் ஒரு புரியாத புதிராக இருந்தது. காரணம் இளையராஜா, கங்கை அமரன் இருவரும் மனக்கசப்பில் இருந்த காலமது.

ஆனால் இந்தப் பாடலின் டியூனை வைத்து கங்க அமரனிடம் பாடலை வாங்கி ராஜாவிடம் கொடுத்ததாக

இந்த வாரம் கங்கை அமரனுடனான பேட்டியில் தான் அந்த உண்மையை உடைத்தார் ஆர்.சுந்தரராஜன்.

பாடலாசிரியர் கங்கை அமரனுக்கும், இயக்குநர் ஆர்.சுந்தரராஜனுக்கும் உள்ள உன்னதமான ஆன்ம பந்தத்தை இந்த நான்கு தசாப்தம் கடந்த இந்தப் பாடல்கள் மெய்ப்பிக்கும்

கானா பிரபா


Monday, March 2, 2026

இசையமைப்பாளர் வித்யாசாகர் ❤️ ஆரம்ப காலத்திலே



திரையிசையில் வாத்திய விற்பன்னராக ஐம்பது ஆண்டுகளைக் கடந்தவர் வித்யாசாகர். இசையமைப்பாளர் என்ற ரீதியில் துணை இசையை “சின்னப்பூவே மெல்லப் பேசு” தொட்டு அவர் தொடங்கியிருந்தார். பறவைகள் பலவிதம் கூட இவரே பின்னணி இசை.


ராபர்ட் - ராஜசேகரன் இரட்டையரில் ராஜசேகரன் முன்பே நிழல்கள் படத்திலும் நாயகனாக நடித்த வகையில் பின்னாளில் தானே ஒரு படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் தான் “பூமனம்”. ஏவிஎம் ராஜன் - புஷ்பலதா தம்பதியர் மகள் மகாலட்சுமி ஜோடி.



இந்தப் படத்துக்கு முழுமையாக இசை வழங்கியவர் வித்யாசாகர்.


சில நேரம் ஏதேதோ நடக்கும் 


https://youtu.be/hFN4IYW3fQM?si=GSwwyUj5RoTgJHpU


என்று P.B.ஶ்ரீனிவாஸ் ஐயும் உள்வாங்கி அமைந்த பூமனம் பாடல்களில் 

“என் அன்பே” 


https://youtu.be/4QEAtji8N-4?si=vJamDrFFmuLz7SeK


பாடல் அற்புதமானது.

பாடகர் தினேஷ் மற்றும் சித் ரா பாடிய பாடல் பின்னாளில் பக் பக் பக் மாடப்புறாவில் ஒரு பகுதியாகப் பயன்பட்டது.


கங்கை அமரன் பிற இசையமைப்பாளருக்குப் பாடிய வகையில் ஒரு பட்டியல் கொடுக்கலாம்.

வித்யாசாகர் கூட விட்டு வைக்கவில்லை.

பேரெடுக்கணும் 


https://youtu.be/hIE6HyPUEB8?si=sF2MVWAybHYXHXes


என்ற பாடலை ஜனகராஜுக்காகக் குரல் கொடுத்தார் கங்கை.


வித்யாசாகர் பின்னாளில் அதிகம் உள்வாங்காத பாடகர் மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சித்ராவோடு பாடிய

பாட்டுக் கொடுத்தது யாரோ


https://youtu.be/wQyAG0EEOXk?si=rpUoiEyShN_aUs4Z




அற்புதமானதொரு பாட்டு. இசையமைப்பில் இளையராஜா முத்திரை இருக்கும்.



இதே போலவே மலரே மெளனமா பாடல் வித்யாசாகருக்கு ஒரு பெரும் அடையாளத்தைத் தேடித்தந்தாலும் அந்தப் பாடல் முன்னர் தெலுங்கில் கொடுக்கப்பட்ட போது அவ்வளவு தூரம் எடுபடவில்லை.



அண்மையில் மறைந்த தமிழழகன் இயக்கிய “நிலாப் பெண்ணே” படமும் வித்யாசாகருக்கு ஆரம்பத்தில் கிடைத்த அற்புதமான வாய்ப்பு.

வித்யாசாகரின் கடினச் சாவு விசிறிகள்

“பச்சைக்கிளிகள்”


https://youtu.be/Q7gg50iQr1s?si=3nrJngnRLvFl8vXn


பாடலில் சித்ராவோடு கங்கை அமரன் அதகளப்படுத்தி இருப்பார்.

C.S.ஜெயராமன் குரலில் “ராத்திரி” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். 

நிலா பெண்ணே பாடல்களில் கொஞ்சம் புதுமை இருக்கும்.  

படத்தில் எட்டுப் பாடல்கள் என்றாலும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய “சீதா” படத்தோடு ஆத்தா நான் பாசாயிட்டேன், மாதங்கள் ஏழு படங்களுக்கும் தமிழில் இசை கொடுத்தாலும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. தெலுங்குத் திரையுலகம் தான் அவரை வாரி அணைத்துக் கொண்டது.



வித்யாசாகர் - அர்ஜூன் கூட்டணியில் ஒரு பெரும் இசைப் பாய்ச்சலை நிகழ்த்தினார். அதுவரை தனக்கான ஒரு அடையாளத்தையும் அவர் நிறுவவில்லை எனலாம்.

அதன் பின்னர் நிகழ்ந்தது வித்யாசாகரம் தான்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்ள்

இசையமைப்பாளர் வித்யாசாகர் ❤️


கானா பிரபா

02.03.2026








Thursday, February 26, 2026

இயக்குநர் பாக்யநாதன் நினைவில்


ராதிகாவின் படமொன்று வரும் சூழலில், அவரோடு இணைந்து நடித்து வெளிவராமல் போன "சித்திரச்சோலை" படத்தின் நாயகன் பாக்யநாதனின் இறப்புச் செய்தி கிடைத்திருக்கிறது. நேற்று பெப்ரவரி 25 ஆம் திகதி அவர் மாரடைப்பால் காலமானர் என்ற செய்தியை உண்மைத்தமிழன் அண்ணன் பகிர்ந்திருக்கிறார்.

பாக்யநாதன் குள்ளத் தோற்றத்தில் ராதிகா ஜோடியாக அப்போது "சித்திரச்சோலை" படம் தொடங்கிய அறிவிப்பு வந்ததோடு சரி.

எஸ்.ஏ.சந்திரசேகரனின் "நெஞ்சினிலே" படக் கதை இவர் பங்கு. பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அப்படத்தில் பாடலும் எழுதி இருக்கிறார்.

விஜய் பாடிய பாடல் "தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்டை எழுதித் தரட்டுமா" இவரின் கைவண்ணம் தான்.

சத்யஜோதி பிலிம்ஸ் இன் "என்றும் அன்புடன்" முரளி, ஹீரா நடிப்பில் இவர் இயக்கியது. பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

அந்தப் படத்தில் பாக்யநாதன் எழுதிய பாடல் ஊர் நினைவுகளை மட்டுமல்ல இனிமேல் அவர் நினைவையும் சுமந்து வரும்.

அந்தப் பாடல் இதுதான்

துள்ளித் திரிந்ததொரு காலம்

பள்ளிப் பயின்றதொரு காலம்

 காலங்கள் ஓடுது 

பூங்கொடியே பூங்கொடியே

https://www.youtube.com/watch?v=vuMzSgl7PKg

Saturday, February 14, 2026

இசைஞானி இளையராஜாவின் தலை சிறந்த ஜோடிகள் நூறு

 

தொண்ணூறுகளின் எல்லை வரை என் மனதுக்கு நெருக்கமான பாடல்களின் பட்டியல்

பாடல் தொகுப்பு கானா பிரபா

1. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

2. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

3. வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

4. ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

5. மாலை சூடும் வேளை - நான் மகான் அல்ல

6. நானொரு பொன்னோவியம் கண்டேன் - கண்ணில் தெரியும் கதைகள்

7. பொன்னோவியம் கண்டேனம்மா - கழுகு

8. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்

9. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு

10. மீண்டும் மீண்டும் வா – விக்ரம்

11. திருத்தேரில் வரும் சிலையோ – நான் வாழ வைப்பேன்

12. ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் – உறவாடும் நெஞ்சம்

13. பூந்தென்றலே – புவனா ஒரு கேள்விக்குறி

14. காதல் ராகமும் – இந்திரன் சந்திரன்

15. ஒரு வானவில் போலே – காற்றினிலே வரும் கீதம்

16. தானா வந்த சந்தனமே – ஊரு விட்டு ஊரு வந்து

17. இந்தமான் உந்தன் சொந்தமான் – கரகாட்டகாரன்

18. சிந்து நதிக்கரை ஓரம் – நல்லதொரு குடும்பம்

19. காலம் மாறலாம் – வாழ்க்கை

20. பருவமே புதிய பாடல் பாடு - நெஞ்சத்தைக் கிள்ளாதே

21. அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம்

22. ஒரே நாள் உனை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது

23. என் கண்மணி – சிட்டுக்குருவி

24. ஏ பாடல் ஒன்று – ப்ரியா

25. எங்கும் நிறைந்த – இது எப்படி இருக்கு

26. கண்மணியே காதல் என்பது – ஆறில் இருந்து அறுபது வரை

27. நதியோரம் நாணல் ஒன்று – அன்னை ஓர் ஆலயம்

28. கீதா சங்கீதா – அன்பே சங்கீதா

29. ஏதோ நினைவுகள் – அகல் விளக்கு

30. ஆகாய கங்கை – தர்மயுத்தம்

31. மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு

32. மான் கண்டேன் நான் கண்டேன் - ராஜரிஷி

33. மயிலே மயிலே – கடவுள் அமைத்த மேடை

34. குறிஞ்சி மலரில் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

35. வாசலிலே பூசணிப்பூ – செண்பகமே செண்பகமே

36. ஆயிரம் மலர்களே மலருங்கள் – நிறம் மாறாத பூக்கள்

37. காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை

38. காதலா காதலா – தாய்க்கு ஒரு தாலாட்டு

39. மனதில் என்ன நினைவுகளோ – பூந்தளிர் 

40. ஆத்து மேட்டுல – கிராமத்து அத்தியாயம்

41. காலங்கள் மழைக்காலங்கள் – இதயத்தில் ஓர் இடம்

42. கண்மலர்களின் அழைப்பிதழ் – தைப்பொங்கல்

43. தவிக்குது தயங்குது – நதியைத் தேடிவந்த கடல்

44. சாமக்கோழி – பொண்ணு ஊருக்குப் புதுசு

45. ஓ வசந்த ராஜா – நீங்கள் கேட்டவை

46. நீ இல்லாத போது – இளமை கோலம்

47. பூங்கதவே – நிழல்கள்

48. முல்லை அரும்பே – தனிக்காட்டு ராஜா

49. வருவாய் அன்பே – கர்ஜனை

50. நீங்காத எண்ணம் ஒன்று – விடியும் வரை காத்திரு

51. ஓ நெஞ்சமே – எனக்காகக் காத்திரு 

52. தாலாட்டுதே வானம் – கடல் மீன்கள்

53. பல நாள் ஆசை – இன்று போய் நாளை வா

54. பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்

55. பொன்னான மேனி – மீண்டும் கோகிலா

56. பூபாளம் இசைக்கும் – தூறல் நின்னு போச்சு

57. பூவாடைக்காற்று – கோபுரங்கள் சாய்வதில்லை

58. பாடவந்ததோர் கானம் – இளமை காலங்கள்

59. ஏதோ மோகம் – கோழி கூவுது

60. வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை

61. இது கனவுகள் – நிழல் தேடும் நெஞ்சங்கள்

62. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் – நினைவெல்லாம் நித்யா

63. ரோஜா ஒன்று முத்தம் – கொம்பேறி மூக்கன்

64. ஒரு ராகம் பாடலோடு – ஆனந்தராகம்

65. நதியிலாடும் பூவனம்– காதல் ஓவியம்

66. ஓ வெண்ணிலாவே – ஆனந்தக்கும்மி 

67. அள்ளிவச்ச மல்லிகையே – இளமை இதோ இதோ

68. காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

69. அழகிய நதியென – பாட்டுக்கு ஒரு தலைவன்

70. சோலைப்பூவில் – வெள்ளை ரோஜா

71. விழியிலே மணி விழியிலே – நூறாவது நாள்

72. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள்

73. உன்னைத்தானே – நல்லவனுக்கு நல்லவன்

74. கஸ்தூரி மானே – புதுமைப்பெண்

75. அதிகாலை நேரமே – மீண்டும் ஒரு காதல் கதை

76. குயிலே குயிலே – ஆண்பாவம்

77. பூமாலையே – பகல் நிலவு

78. பொன்மானே – ஒரு கைதியின் டைரி

79. பெண்மானே சங்கீதம் – நான் சிகப்பு மனிதன்

80. தென்றல் வந்து – தென்றலே என்னைத் தொடு

81. கொடியிலே – கடலோரக் கவிதைகள்

82. கல்லுக்குள்ளே வந்த – மனிதனின் மறுபக்கம்

83. யார் தூரிகை – பாரு பாரு பட்டணம் பாரு

84. தில் தில் தில் மனதில் (மெல்லிசை மன்னருடன்) – மெல்ல திறந்தது கதவு

85. மயங்கினேன் சொல்ல – நானே ராஜா நானே மந்திரி

86. நீ ஒரு காதல் சங்கீதம்

87. ஓர் பூமாலை – இனிய உறவு பூத்தது

88. விழியே நலமா – தூரத்துப் பச்சை

89. ஒரு காதல் என்பது – சின்னத்தம்பி பெரியதம்பி

90. சித்திரை மாதத்து நிலவு – பாடு நிலாவே

91. வா வா வா கண்ணா வா – வேலைக்காரன்

92. விழியில் ஒரு – தீர்த்தக் கரையினிலே

93. கட்டி வச்சுக்கோ – என் ஜீவன் பாடுது

94. நீலக்குயிலே – சூரசம்ஹாரம்

95. ராசாத்தி மனசுல – ராசாவே உன்னை நம்பி

96. அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவக்காரன்

97. பொன்மானே பொன்மானே – அன்புக்கட்டளை

98. வானத்துல வெள்ளிரதம் – எங்க ஊரு மாப்பிள்ளை

99. இரு விழியின் வழியே – சிவா

100. ஒரு தேவதை வந்தது – நான் சொன்னதே சட்டம்

பாடல் தொகுப்பு : கானா பிரபா


Tuesday, February 3, 2026

இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் என்ற சங்கீதராஜன்

1955 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி மண்டலின் வாத்திய விற்பன்னர் பழநியின் மகனாகச் சென்னையில் பிறந்த எஸ்.பி.வெங்கடேஷ் என்று கேரளத்தில் கோலோச்சிய இசையமைப்பாளர், எண்பதுகளில் தியாகராஜனின் “பூவுக்குள் பூகம்பம்" வழியாக சங்கீதராஜன் என்று தமிழிலும் அறியப்பட்ட தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான இசை நட்சத்திரம்.

தனது எழுபதாவது வயதில் பெப்ரவரி 3 ஆம் திகதி நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார்.

எண்பதுகள் தொண்ணூறுகளில் மலையாளத் திரையிசைப் பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசைக்காகவும் வேண்டி அழைக்கப்பட்டவர்.

“பிரேம யுத்தா" என்ற கன்னடத் திரைப்படம் வழியாக 1981 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார்.


“ராஜாவின்ட மகன்” என்ற மலையாள சினிமா (தமிழில் மக்கள் என் பக்கம் என்று மீள எடுக்கப்பட்டது) எஸ்.பி.வெங்கடேஷ் ஐ மலையாள சினிமாவின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது.

1993 ஆம் ஆண்டில் பைத்ருகம் என்ற மலையாள சினிமா இவருக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற கேரள அரசின் விருதைப் பெற்றுத்தந்தது.

மின்னாரம், கிலுக்கம், ஸ்படிகம், மன்னர்மதி ஸ்பீக்கிங், கெளரவர், வாத்சல்யம், Johnnie Walker, காபுலிவாலா உள்ளிட்ட மலையாளத்தின் மிக முக்கியமான வெற்றிச் சித்திரங்கள் பலவற்றில் எஸ்.பி.வெங்கடேஷின் பங்களிப்பு உண்டு.

நடிகர் தியாகராஜன் தயாரித்து, இயக்கி தானே இருவேடமிட்டு நடித்த "பூவுக்குள் பூகம்பம்" என்ற திரைப்படத்தின் மூலம் 1988 இல் தமிழுக்கு அறிமுகமானவர் சங்கீதராஜன் என்று தமிழில் அடையாளப்பட்டார். அந்தப் படத்தில் வரும் "அன்பே ஒரு காதல் கீதம்" அந்தக் காலகட்டத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

சங்கீதராஜன் தொடர்ந்து காவல் பூனைகள், என் கணவர், சேலம் விஷ்ணு, தீச்சட்டி கோவிந்தன், விக்னேஷ்வர், பாட்டாளி மகன், நல்வாழ்த்துக்கள், இதுதாண்டா சட்டம், நிலாக்காலம், மறு விசாரணை, நதியோர கீதங்கள் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் கூட தமிழில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார்.



“அன்பே ஒரு ஆசைகீதம் காதில் கேட்டாயோ”, “ஒரு காலம் வரும் “ பாடல்கள் “பூவுக்குள் பூகம்பம்" படத்துக்காகவும், “மயங்கினேன் மன்னன் இங்கே” , “வளையல் சத்தம் யம்மா யம்மா” ஆகிய பாடல்கள் “சேலம் விஷ்ணு" படத்துக்காகவும் அமைந்து தமிழில் புகழ் பூத்த பாடல்களாக எண்பதுகளில் விளங்கியது.

விக்னேஷ்வர் படத்தில் இவர் கொடுத்த பாடல்களும், பின்னணி இசையும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கும்.

எஸ்.பி.வெங்கடேஷ் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்றில் இருந்து அவரின் இசைப் பின்னணியை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

 1968 ஆம் ஆண்டில் HMV records இற்காக நாகூர் ஹனீபாவின் பாடல்களுக்கு பான்ஜோ வாத்தியம் வாசித்துத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

மாஸ்டர் வேணு என்ற புகழ்பூத்த இசையமைப்பாளரின் தெலுங்குப் படத்தில் மாண்டலின் வாத்திய வாசிப்போடு திரையுலகில் நுழைந்தார். பின்னர் சலபதிராவ், பாபுராஜ், தட்சணாமூர்த்தி ஸ்வாமி, சலீல் செளத்ரி, தேவராஜன், ராகவன்,ஷியாம் என்று இவர் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் அதிகம்.

கண்ணூர் ராஜன் மாஸ்டர், அர்ஜீனன் , ரவீந்தர், ஏ.டி.உமர், ஷியாம் ஆகியோர் இசையமைப்பாளர்களாக இருந்த படங்களில் இசை ஒருங்கமைப்பாளராக விளங்கியிருக்கிறார். பதிவை எழுதியவர் கானா பிரபா

புகழ் பூத்த இசையமைப்பாளர் ஷியாம் எஸ்.பி.வெங்கடேஷின் அப்பாவின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் புகழ்பூத்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரிடம் மண்டலின், கிட்டார் போன்ற வாத்தியங்களை வாசித்தவரை 1975 இல் உதவியாளராக ஆக்கிப் பெருமை சேர்த்தார்.

1975 கோடீஸ்வரராவ் என்ற ஒலிப்பதிவாளர் விஜயபாஸ்கரிடம் எஸ்.பி.வெங்கடேஷைப் பரிந்துரைக்கவும், அற்புதமான பின்னணி இசையை ஒரு காட்சிக்குக் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.


“பிரேம யுத்தா” என்ற கன்னடப் படத்தில் இசையமைப்பாளராக உயர்ந்தார்.  

மலையாள இயக்குநர் ஜோஷியின் கவனிப்பைப் பெற்ற இவர் கொடுத்த பின்னணி இசை மலையாளத்தில் திறவுகோலானது. 

ஷியாம் இசையமைத்த “நிறக்கூட்டு” படத்தில் இடைவேளைக்குப் பின் பின்னணி இசை வெங்கடேஷுக்குக் கிட்டுகிறது. 

அதைத் தொடர்ந்து “ஷியாமா” படத்துக்கும் பின்னணி இசை கொடுத்ததால் கவரப்பட்டவர்கள், “ராஜாவிண்ட மகன்” என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆக்குகிறார்கள். ஜோஷியின் கதாசிரியர் டென்னிஸ் ஜோசப் இவரை ஊக்குவித்தவர்களில் மிகமுக்கியமானவர் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

எஸ்.பி.வெங்கடேஷ் வாய்ப்புத் தேடிய ஆரம்பகாலத்தில் தந்தையுடன் ஜேசுதாஸ் ஐச் சந்தித்த போது, இவர் பான்ஜோ வாத்தியத்தை வாசித்துக் காட்டவும்,

இரண்டு ஆப்பிள்களை எடுத்து வந்து “இந்த ஆப்பிள் போல நீ வருவாய்” என்று வாழ்த்தினாராம்.

பதிவு கானா பிரபா.

கனக நிலாவே, முத்துமணித் தூவல் தராம், தும்பிப் பெண்ணே வா வா போன்ற அற்புதமான பாடல்களை ஜேசுதாஸ் இவரின் இசையில் பாடிப் புகழ் பூத்த மலையாளப் பாடல்கள்.

இவருக்கு மிகப் பிடித்த பாடகி சித்ரா, தான் கொடுக்கும் பாடலை முழு ஈடுபாட்டோடு அற்புதமாகக் கொடுப்பாராம். சித்ரா 90 வீதமான பாடல்களை இவரிடம் பாடியிருக்கிறாராம். எம்.ஜி.ஶ்ரீகுமாரும் இவரிடம் பாடிய பாடகர்களில் மிக முக்கியமானவர்.

“துள்ளாத மனமும் துள்ளும்” படத்தின் பெங்காலி வடிவமான “சதி” என்ற திரைப்படத்துக்கு இவர் இசையமைத்து பெரும் புகழும், பெங்காலித் திரைப்பட வரலாற்றில் 10 வது வசூல் சாதனையை இன்றுவரை தக்க வைத்திருக்கிறது. 25 லட்சம் கேசட்டுகள் விற்பனையாகிச் சாதனை படைத்தன.

கண்ணெதிரே தோன்றினாள், கில்லி, பத்ரி போன்ற படங்களின் பெங்காலிப் பதிப்புகளுக்கும் இவரே இசை.

கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் பாடிய அஸ்வமேதா படப் பாடலான “கிருதய சமுத்ரா கலகி” பாடல் நட்சத்திரப் பாடலாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

மலையாளம், கன்னடம், பெங்காலி, இவற்றோடு தமிழ் சினிமா ஈறாக எஸ்.பி.வெங்கடேஷ் என்ற இசையாளுமை வசீகரித்த பாடல்களை இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இசை உலகத்தில்.

கானா பிரபா

03.02.2026

Wednesday, January 7, 2026

பொண்ணு பாக்கப் போறேன்


சலசலவென ஓடும் 

குளிரோடையின் சங்கீதமே

சிலுசிலுவென வீசும் 

பனிவாடையின் சந்தோஷமே

உன் மடிதான் என் சொர்க்கம்

அடி வீணே ஏன் துக்கம்….


https://youtu.be/q5kJLrJA8dg?si=oZUjJPIFtRFwXPTQ


ஒரு தேர்ந்த இயக்குநருக்கு உண்டான சர்வ லட்சணங்களில் ஒன்று, நல்ல இசை ரசனை. அதனால் தான் ஶ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, ஆர்.சுந்தரராஜன் தொட்டு திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜும் முக்கிய இடம் பெறுகிறார். அடிப்படையில் அவர் தன் 

உதவி இயக்குநர் பணியில் இருந்த

ஆரம்ப காலம் தொட்டு நல்ல பாடல் வரிகளை வாங்குவதிலும் சமர்த்தர்.

பின்னர் பல பாடலாசிரியர்களை உள்வாங்கியும் தன் படங்களில் பாடல்களை எடுத்திருக்கிறார்.

இதனால் தான் வாலி கூட ஒருமுறை

“சினிமாவுக்குப் பாட்டெழுதும் இலக்கணம் தெரியாதவரை அழைத்து வந்து எதுக்கு கஷ்டப்படுறே” என்று பாக்யராஜிடம் பொய்க் கோபம் கொண்டதை ஒருமுறை சுட்டியிருந்தார்.


“கொண்டைச் சேவல் கூவும் நேரம்” 


https://youtu.be/MozGC-URVWs?si=CfHPAGLo7nKq5VeO


பாடலின் மெட்டு, திருப்பதிக்குக் காரில் போகும் போது உதயமானதும் சங்கர் - கணேஷிடம் சொல்லி எங்க சின்ன ராசா படப் பாடலாக்கியதையும் பாக்யராஜ் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் அந்த மெட்டு ஹிந்திக்குப் போய் அதிரி புதிரி ஹிட் பாடலானதும் 

வரலாறு.


இங்கே தான் பாக்யராஜின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி, வெளியார் படங்கள் கூட இசையமைத்த பாக்யராஜிடம் இருக்கும் திறன் இந்த மெட்டுக் கட்டுவது.

MSV காலத்து இசை விற்பன்னர் தாஸ் டேனியலை இசைக் கோவைக்கு உதவ வைத்திருந்தார்.


“பொண்ணு பாக்கப் போறேன்” படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,

அந்தப் படத்தின் என்னவென்றால்

படத்தின் கதை மற்றும் இசை கே.பாக்யராஜ். திரைக்கதை, வசனம் அவரின் உதவியாளர் வி.சேகர். இயக்கம் என்.முருகேஷ்.


கிராமத்தை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்க வரும் சிறப்புத் தோற்றத்தில் பிரபு நடிக்க, நாயகனாக நடித்தவர் அவரின் பெரியப்பா மகன் மனோ, நாயகி சீதா.

பின்னாளில் பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்கு கும்கி போல, விலங்குகளோடு பிரபு நடித்ததில் இதுவும் இன்னொன்று எலி மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கிலப் படமும்.


“நா உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது” 


https://youtu.be/4tPkyvZODq4?si=hFN8gz_9-vxL09jD


என்ற கலக்கலான பாட்டு உண்டு.


பாக்யராஜ் இசையமைத்த சோகப் பாடல்களில் மிகவும் பிடித்தமானது 


சலசலவென ஓடும் 

குளிரோடையின் சங்கீதமே


அந்தக் காலத்து ரெக்கோர்டிங் சென்டர் காரர்களிடம் இந்தப் பாடலெல்லாம் பல ஆயிரம் பதிவு பண்ணிய வரலாறெல்லாம் இருக்கும்.

இதே பாங்கில் சம காலத்தில் வெளியான “ஆராரோ ஆரிரரோ” படத்தில் 

“ஒரு மூணாம்பிறை பாரு மேற்குப் பக்கமா” 

https://youtu.be/TRV4CJJF0xU?si=TLnuVjHJTYdTF4B0


என்றொரு அற்புத விளைச்சல் உண்டு.

இரண்டுமே வாலி எழுதியது, இரண்டுக்கும் இசை பாக்யராஜ் தான்.

இந்த இரு பாடல்களிலும் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்குமான ஒத்திசைவின் மேன்மையைப் பார்க்கலாம்.


உன் மடிதான் என் சொர்க்கம்

அடி வீணே ஏன் துக்கம்

சலசலவென ஓடும் 

குளிரோடையின் சங்கீதமே


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜ் ❤️


கானா பிரபா

Tuesday, January 6, 2026

ஏ.ஆர்.ரஹ்மான் நினைவுக் கிளப்பிகள்

 



வெட்ட வெளியில் போவோமா

அடி சிட்டுக்குருவியின் 

சிறகைக் கேள்

நட்ட நடு நிசி நேரத்தில்

நாம் சற்றே உறங்கிட 

நிலவைக் கேள்…❤️


மனசோடு ஒன்றிப் போன திரையிசைப் பாடல்கள் ஆகச் சிறந்த நினைவுக் கிளப்பிகள்.

அவை நாம் வாழ்ந்த வாழ்க்கையை, இருந்த இருப்பை, அப்போது சந்தித்த மனிதர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் எண்ணற்ற பாடல்கள் நினைவுப் பெட்டகங்களாகத் திகழ்ந்து வரும் அதே பரிமாணத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இரு பாடல்கள் தொண்ணூறுகளின் பசுமை நினைவுகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் எனக்கு.


ஒன்று, புதிய முகம் திரைப்படத்தில் இடம்பிடித்த “ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு” 

வெளிநாடு போக முன் திரிசங்கு சொர்க்கமாக இருந்த கொழும்பு வாழ்க்கையையும், அந்தக் குறுகிய காலத்தில் CIMA கற்கைக்குப் போன நினைவுகளையும் கொணார்ந்து வரும் பாட்டு.

SPB என்ற ராட்சஷன் எந்தப் புதிய கொம்பனென்றாலும் ஒரு கை பார்த்து விடுவார். அப்பேர்ப்பட்டவரை ஒரு இளம் ஜோடிக் குரல்களில் ஒன்றாக இணைத்த ரஹ்மானின் சிந்தனையை நினைத்து வியப்பேன். அப்போது உன்னி மேனன் போன்ற புதுப் புதுக் குரல்களோடு ரஹ்மான் இசை பயணப்பட்ட நேரம் என்பதால் தான் அந்த வியப்பு.


ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கிக் கொண்டே போகும் அந்த SPB குரலோடு, குழைந்து கை கோர்த்து நளினமெழுப்பும் ரஹ்மான் கால முத்திரைக் குரல் அனுபமா.


ரஹ்மான் பாட்டை இலங்கைக்கு வரவழைத்துப் படமாக்கிய முதற்பாட்டு என்பது இந்தப் பாடலுக்கு கூடுதல் சிறப்பு. பைலா பாணி இல்லாமல் ஆனால் அந்த இசை வடிவத்துக்கு அடிநாதமாய் விளங்கும் கிட்டார் தான் இந்தப் பாடலின் முக்கிய வாத்தியமாகப் பயன்பட்டிருக்கும். ஆகக் குறைந்த வாத்திய ஆவர்த்தனத்தை வைத்துக் கொண்டு ஒரு வெளி நாட்டுப் பாடலுக்குண்டான பகட்டைக் கொடுப்பார் ரஹ்மான்.

பின்னாளில் சிஞ்ஞோரே பாடலை பைலா பாணியில் கொடுத்த போதும் கிட்டாரின் பரிமாணத்தை அதற்கேற்ப வழங்கியிருப்பார்.

அதற்குப் பின் பல நூறு முறை கொழும்பு வீதிகளையும்,  

காலி முகத்திடல் கடற்கரையையும்,  கடந்திருப்பேன்.  ஆனால் அவையெல்லாவற்றுக்கும் நினைவுச் சின்னமாய் மனதில் தோன்றுவது இந்தப் பாட்டு தான்.


“ஒண்ணு ரெண்டு மூணு டா” புதிய மன்னர்கள் பாடலை இப்போது கூகுளில் தேடினாலும் கொஞ்சம் தயங்கி, சுற்றி வளைத்துத் தான் காட்டும். கவிஞர் காளிதாசன் என்ற திருப்பத்தூரான், ரஹ்மான் பட்டறையில் அரிதாக எழுதிய பாட்டு. அந்த ஒன்றும் படமாக்கப்படாமல் போன துரதிஷ்டம் கொண்டது. ஆனாலும் என்ன? 

இன்று வாரியிறைத்த பண்பலை வானொலிகளுக்கு முன்னோடியாக கொழும்பில் ஒலித்த FM 99 கொண்டாடிய பாட்டு. அப்படியே தலை மேல் சுமந்து கொண்டேன்.


ஒரு துள்ளிசைப் பாடலை எப்படி வித்தியாசமாகக் கொடுக்கலாம்? காலா காலமாக ஆண், பெண் கோஷ்டி மோதல் பாட்டுகளை அந்த தொண்ணூறு யுகத்தில் என்ன மாதிரி புத்தாடையில் கொடுக்கலாம் என்பதன் அளவுகோல் நிறைந்த பாட்டு.

மனோ, சித்ராவுக்கு ரஹ்மான் கொடுத்த எண்ணற்ற அதி சிறந்த சாகித்தியங்களைத் தாண்டி இந்தப் பாடலில் அவர்களைக் கூட்டி வைத்துக் கொடுத்த மாயாஜாலத்தைத் தான் அதிகம் ரசிப்பேன்.


டுடுக் டுடுக் டுட்டுக் டுட்டுக்

அந்த இடையிசையில் மனுசக் குரல் ஜாலமும் அதனோடு இழைந்த வாத்தியச் சுற்றுமாக அளவான பதார்த்தம்.


வவுனியா குருமண்காட்டில் தங்கி பல்கலைக் கல்லூரியில் ஒரு சில மாதங்கள் வாழ்ந்த இருப்பை நினைவுபடுத்தும் பாட்டு.


இரவு எட்டிப் பார்க்கும் நேரம் அந்தச் சிறு குடிலில் தங்கியிருந்த நாலு நண்பர்களும், ஒரு வவுனியா வாசி நண்பரும், நானுமாக சம்மணமிட்டு இருந்து ஒரு சின்ன Tape recorder இல் பாட்டைப் போட்டு விட்டு ரசிப்போம். 

எமது அதிகபட்ச சந்தோஷமே அந்த மாலை நேரப் பாட்டுக் கச்சேரி தான்.

எங்கள் எல்லோருக்கும் பாட வராது. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் இசை விமர்சகர் சுப்புடு ஒளிந்திருப்பார்.

அந்த விமர்சனங்களுக்குத் தப்பிப் பிழைத்த பாட்டு. 

பாடல் வரிகளை, சூழலைத் தாண்டி அந்த முகப்பிசையும், இடையிசையும் இன்று வரை மனசில் அலை போல் மோதி விட்டுப் போகும்.


ரஹ்மான் வாழ்க ❤️


கானா பிரபா

06.01.2026