மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
Pages
Saturday, August 22, 2026
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
Tuesday, August 18, 2026
அடுக்குமல்லி எடுத்து வந்து ❤️
மெட்டுப் போடும்
செந்தாழம் பூ
கெட்டி மேளம் போட
எட்டிப் பாக்கும் ஆவாரம் பூ
வெக்கத்தோடு ஓட
விடிகாலை சிட்னி வெளியெங்கும் ஒரு
கனரக வாகனம் ஒன்று ஒரு புகை மண்டலத்தை எழுப்பி விட்டுப் போனது போலப் பனிப்புகார்.
காலை ஏழு மணி டொட்
மகளைப் பள்ளிக்கூடத்தில் இருத்தி விட்டுத் திரும்பும் போது கனேடிய வானொலி இந்தப் பாடலை ஒலிபரப்பவும் காரை ஓரம் கட்டி, ஒலித்தரம் கொண்ட பாடலைக் கேட்டுக் கொண்டே பயணிக்கிறேன்.
அந்த மூன்றாவது நிமிடத்தில் கூட்டுக் குரல்களுக்குப் பின்னால் ஒரு துள்ளாட்டம் போடுமே ஒரு இசைக் குவியல்? அது போல ஆகிவிட்டது மனம்.
கதாநாயகியைத் தன் முதுகில் சுமந்து செல்லும் நாயகன் போலவே இந்தப் பாடலும் என்னைச் சொகுசாகச் சுமந்தது போல ஒரு உணர்வு.
பட்டம் விட்டு அலை பாயும் காதலர் போல மிதக்குது மனம்.
அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை ❤️
அதெப்படி காட்சிக்குப் பொருந்தும் போல அந்தக் காதலியைச் சுமக்குமாற் போலச் சந்தம் பாடுகிறது என்று ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் ஆச்சரியம் தான் எனக்கு.
பொம்பள எஸ்பிபி ஜானகியும், ஆம்பள ஜானகி எஸ்பிபியும் பாடிய காலத்துக்கும் நிற்கும் பாடல்களில் இதைத் தவிர்க்கத்தான் ஒப்புமோ மனம்?
அச்சாரம்...அப்பன் தந்த முத்தாரம்...
ஒரு இழுவை கொடுப்பார் பாருங்கள் 😁
சொந்தம் இங்கே வந்தாளுன்னு...
சொன்னான் அவன் லேசா...
ஜானும்மா கொஞ்சம் வெட்கம் கலக்க
இவரோ அந்தச் சந்தம் கெடாமல்
ஹஹ்ஹா போடுவார்
சந்தோஷம்...
தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும்...
கிட்ட வரும் எப்போதும்...
காத்திருந்து தீட்டுவது போல அந்த ராட்சசியும் பதம் பார்ப்பார்.
இந்த அதிகாரப் போட்டியை மாறி மாறி ரசிப்பதே சுகம்.
ஒற்றைப் புல்லாங்குழல் அப்படியே எங்காவது கிராமத்தில் கொண்டு போய் நம்மை நட்டு விட்டுத் திரும்பும்.
இந்தமாதிரிப் பாடல்களின் மெட்டைப் பங்கம் செய்யாமல் சந்தத்தின் மீதேறிப் பாட்டெழுத கங்கை அமரனே துணை.
மலையாள இயக்குநர் பரதனுக்கு பட வாய்ப்பு இல்லாத சூழலில் இளையராஜாவே தயாரிப்பாளர் கேயாரிடம் பரிந்துரைக்கிறார். கேயாரும் ராஜா சொன்னதே வேத வாக்கு என்று பரதனை ஒப்பந்தம் செய்யவும் “ஆவாரம்பூ” பூக்கிறது.
இந்தப் படம் பரதன் இயக்கி, மலையாளத்தில் ஒரு முக்கியமான படமாக விளங்கும் தகரா படத்தின் மீள் உருவாக்கமாகும்.
பாடல் மெட்டுக்கட்ட Ideal beach போனார்களாம். 15 நிமிடத்தில் ஆறு பாடல்களுக்குமான மெட்டுகளையும் போட்டுவிட்டு நிமிர்ந்தார் இளையராஜா என்று தயாரிப்பாளர் கேயார் இன்று கூட ஆச்சரியப்பட்டுப் பேசுகிறார்.
“ஆலோலம் பாடி” பாடலை SPB ஐ வைத்துப் பாட வைக்க ராஜா முடிவெடுத்தும், கேயார் இவரே வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டாராம்.
ஆக, அந்தப் பதினைந்து நிமிடத்துக்குள் பிறந்த ஒரு அபூர்வம் தான் இதுவும் ஆகிய
அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை ❤️
34 வருஷங்களுக்கு முன்னர் இந்த மெட்டைப் போடும் போது ராஜா நினைத்திருப்பாரா,
அத்தனை ஆண்டுகள் கழித்தும்
பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து ஒரு தென் அரைக்கோள முனையில் இருப்பவனுக்குப் பக்கத்தில் தான் போய் இருப்பேன் என்று?
வெற்றி மாலை
போட்டானய்யா
கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டான் அங்கே
மொட்டுப் போல ரோசா ❤️
Friday, August 7, 2026
பாவலர் சகோதரர்களின் Folk music of Tamil nadu
இசைஞானி இளையராஜா நாட்டுப்புறப் பாடல்களை மையப்படுத்தி ஒரு நாவலை உருவாக்குமாறு எழுத்தாளர் சுஜாதாவை வேண்டவும், அவரும்
“கரையெல்லாம் செண்பகப்பூ” எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பார்.
பின்னாளில் மெல்லத் திறந்தது கதவு படத்திலும் மோகன் கதாபாத்திரம் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் ஆய்வாளராக உருவாக்கப்பட்டிருக்கும்.
இதற்கெல்லாம் ரிஷிமூலம் ஒன்றுண்டு.
மேற்கில் மழை பெய்யவே ஏ ரங்கநாதசாமியோ
மேல் வாய்க்கால் தண்ணீர் வர
Youtube இல்
https://youtu.be/C12qX1XYBxs?si=7ji2BpU6DhDYIrdi
Spotify
https://open.spotify.com/track/3KBA5kwm2qjse85kPn7ide?si=-byLG1xVThqOnUHBdbG4Eg&utm_source=copy-link
இந்தத் தாலாட்டுப் பாடல்
Folk music of Tamil nadu என்ற
இளையராஜாவின் திரைப் பிரவேசத்துக்கு முன்பாக
பாவலர் சகோதரர்கள் கொடுத்த இசைப் பெட்டகம்.
சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள் சேகரித்த தமிழக நாட்டுப்புறப் பாடல்களுக்கு பாவலர் சகோதரர்கள் இசையில் பத்மா சுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
பின்னாளில் இந்தப் பாடலின் பல்லவியை அப்படியே கையாண்டு
பேராசிரியர் ஜெகன்னாதன் வரிகளில் “சிறை கதவுகள்” படத்தில் V.ஜெயசேகர் இசையில் இப்படி வந்திருக்கிறது கேளுங்கள்
https://youtu.be/6DaABIcBK0U?si=GcWRgt_C0qWjkd48
அதுவும் மெட்டுக் கூட ஒத்திசைக்கிறது
இரண்டாவது
தண்ணி கருத்திருச்சு தவளைச் சத்தம் கேட்டிருச்சு
இப்படி அந்த நாட்டுப் பண் பாடலில் வரும் வரிகளை அப்படியே
“இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் வாலியின் வரிகளோடு இணைத்து வந்திருக்கிறது கேளுங்கள்
இன்னொன்று
இந்த நாட்டுப் பண் முடியும் போது வரும் வரிகள்
மருத அழகரோ மாமதுர சொக்கரோ
இதை சுந்தர புருஷன் படத்தில் சிற்பி இசையில் வைரமுத்துவின் பாடலின் பல்லவியாக எழுதப்பட்டிருக்கும்
இப்படி
https://youtu.be/2RMtg963ovk?si=nv2f2XcW4TpR8ijS
இந்த கிராமியப் பண் பாடல்களின் தாக்கத்தால் மேலும் சில பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றைப் பின்னர் பார்ப்போம் 😊
கானா பிரபா
07.08.2026
Wednesday, August 5, 2026
நடிகர் விக்னேஷ் திரையிசைப் பாடல்கள்
நடிகர் விக்னேஷின் பேட்டி Chat with Chithra வில் போய்க் கொண்டிருக்கிறது.
பல நாட்களுக்குப் பின்னர் கூடப் பழகிய கூட்டாளியைப் பார்த்தது போலவொரு உணர்வு.
விக்னேஷ் போன்ற நாயகர்கள் வந்த காலத்தில் தான் சொந்தமாகப் பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும் மாறிய காலம் அது.
சிறு வயதிலேயே விக்னேஷின் தாய், தகப்பன் இறந்து போனதும், முட்டி மோதி வாய்ப்புத் தேடிய கதை எல்லாம் அந்தக் காலத்து சினிமாத் துணுக்குகளாக வந்ததால் இவர் மேல் ஒரு அனுதாபப் பார்வை இருக்கும்.
நடிகர் பிரேம் போலவே ஒரு படத்தில் ஒப்பந்தமாகிப் பின்னர் நீக்கப்பட்ட கதையும் நடந்தது.
வண்ண வண்ணப் பூக்கள் படத்தின் இரண்டாவது நாயகனாக ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட விக்னேஷ், இதே மாதிரி கிழக்குச் சீமையிலே படத்தில் நீக்கப்பட்ட பிரேமுக்குப் பதிலாக நடித்ததும் முரண்.
அது போலவே பாலாவின் அகிலன் படத்தில் (பின்னாளில் சேது) நடிக்கக் கைகூடாமல் போனது இவருக்கு.
அற்புதமான பாடல்கள் கிடைத்த வகையில் நடிகர் விக்னேஷ் உண்மையில் பெரிய அதிஷ்டக் கட்டை என்று தான் சொல்ல வேண்டும்.
பாரதிராஜாவின் “கிழக்குச் சீமையிலே” படத்தில் “ஆத்தங்கரை மரமே” பாடலும், “பசும்பொன்” படத்தில் “தாமரைப் பூவுக்கும்” என்று
இரண்டு படங்களிலேயே அப்படியொரு நல்வாய்ப்பு.
“ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னைப் பொறுத்தவரை காவியம்”
இன்று ஜென்ஸீயும் வைப் பண்ணும் “சின்னத்தாயி” நாயகன்,
“நான் ஏரிக்கரை மேலிருந்து” எல்லாம் இவருக்கு வாழ் நாள் வரம்.
விக்னேஷுக்குக் கிடைத்த புது இசையமைப்பாளர்கள் கூட அவருக்கு அருமையான பாடல்களை அளித்தார்கள்.
“அம்மா பொண்ணு” பாடல்களில்
“சுதியோட ஒண்ணா சேருடா”
https://www.youtube.com/watch?v=JFim27Kbmqk
ஏகாந்தன் இசையில் ஒரு மகுடிப்பாட்டு.
இளைய கங்கை இசையில் “மனதிலே ஒரு பாட்டு” படத்தில்
கண்ணே அழகிய கண்ணே
https://www.youtube.com/watch?v=F3WcYVVBPGg
இவற்றில் பெரும்பாலும் எஸ்பிபி பாடியதும் குறிப்பிடத்தக்கது.
இசைஞானி கொடுத்த “ராமன் அப்துல்லா” பாட்டு
“என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே”
https://www.youtube.com/watch?v=QodNZpcNYVg
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் “காதலி” படத்தில்
“மும்பை காற்றே மும்பை காற்றே”
https://www.youtube.com/watch?v=M8AFpflpp4s
கேட்டுப் பாருங்கள் தேனிசைத் தென்றல் தேவாவும் நிகராக அள்ளித் தெளித்திருப்பார்.
ஹரிஷ் ராகவேந்திரா போன்ற இளையவர்களும் கூட விக்னேஷுக்கு அருமையான பாடல்களைப் பாடியளித்திருக்கிறார்கள் என்பதற்கு
“பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா”
https://www.youtube.com/watch?v=32IH3ELsK-U
உதாரணம் பறையும்.
இதற்கெல்லாம் உச்சமாக ஒரு பாட்டு உண்டு. அந்தப் பாட்டு இடம்பெற்ற திரைப்படம் “செல்லக்கண்ணு”.
விக்னேஷ் பேட்டி என்றால் கண்டிப்பாக இந்தப் படம் பற்றி யாரும் பேசுவார்கள் என்றே எதிர்பார்த்தேன்.
செல்லக்கண்ணு படத்தின் சேலம் உரிமையை வாங்கி அந்தப் படம் பெரு வெற்றி பெற்று 20 லட்சம் லாபம் பார்த்ததாக (இன்றைய கணக்கில் கோடி தாண்டும்) இந்தப் பேட்டியில் விக்னேஷ் குறிப்பிட்டிருந்தார்.
செல்லக்கண்ணு படத்தில் நான் குறிப்பிட்ட அந்தப் பாடல்
“வண்டியில மாமன் பொண்ணு
ஓட்டுறவன் செல்லக்கண்ணு
எங்க வீட்டு ராணி வாரா
எல்லாம் வந்து பாத்துக்குங்க
https://www.youtube.com/watch?v=BZsC-RiejL4
இந்தப் பாடலைப் பொறுத்தவரை எஸ்பிபி & ஸ்வர்ணலதா என்ற இரட்டைக் குதிரைகளை வைத்து தேவா அதகளம் பண்ணியிருப்பார்.
ஒரு மாட்டு வண்டியின் குலுங்கல் சந்தத்தைப் பின் தாளக் கட்டுடன் கொண்டு வருவார். வண்டியின் அடியில் தொங்கும் அந்தக் கட்டை மேலும் கீழுமாக அசைந்து ஒலிக்கும் ஓசை போல.மாட்டு ஆண் பாடகர் வண்டியை ஓட்டிக் கொண்டு, மாடுகளை அரவணைத்து ஒலியெழுப்பி கூடவே ஜோடிப் பாடலாகப் கொடுப்பது ஒரு புதுமை.
தேனிசைத் தென்றல் தேவாவின் உச்சங்களில் இதுவுமொன்று.
எஸ்பிபி & ஸ்வர்ணாவின் ரகளை சொல்லவே வேண்டாம்.
இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் கூடக் கொள்ளை அழகு. விக்னேஷ் & யுவராணி ஜோடியின் அந்த கிராமத்து உடைகள் மாற்றி மாறிப் பாடலோடு அழகுணர்வைக் காட்டும்.
https://www.youtube.com/watch?v=tEVHFiKmsUw
இப்படியான பாடல்களை மீண்டும் பார்க்கும் போது நம் கிராமத்து அந்த அழகிய வாழ்வின் நினைவுகள் தான் மிதந்து வரும்.
கானா பிரபா
ஜானுவும் சுப்ரமணியமும்
கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலமாடசாமி….
https://youtu.be/CIl5itfu8yk?si=n-Afq3BJWdeDORxk
இழுத்து இழுத்து ஒரு தயக்கக் குரலோடு கொடுப்பார் அந்தக் குண்டுப் பையன்.
அதே பாட்டு தான் ஆனால் நூறு கிமீ வேகத்தோடு ஏற்றுவார் ஜானு.
https://youtu.be/biWEAGVc3nY?si=OYAaHlw6ejaQKIVt
ஒரு பாடலை ஆண் குரல், பெண் குரல் என்று தனித்தனியாக ஒரே பாடலைக் கொடுக்கும் மரபு திரையிசையில் இருக்கிறது.
அங்கு கூட எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரே உச்சபட்ச நியாயம் கற்பித்திருக்கிறார்கள்.
இன்னொன்றைப் பாருங்கள்
இங்கே மானமுள்ள
பொண்ணு ஒண்ணை
மனம் துடிக்க விட்டாக
மறுதலிக்க வச்சாக….
https://youtu.be/Rru5bWyBHoU?si=qq9y98hYO05wW3J7
அடிபட்டுக் கீழே விழுந்த குரலாய் எஸ்பிபி.
என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு
மருதையில கேட்டாக
மன்னார்க்குடியில கேட்டாக
அந்த மாயவரத்துல கேட்டாக
https://youtu.be/BobkirXNQp0?si=ocqzmVF5g_RDBb2D
தெனாவெட்டு மரிக்கொழுந்தாய் அவதாரம் எடுப்பார் ஜானகி.
இவர்கள் ஒன்று சேர்ந்த “இதயம் ஒரு கோவில்” ஜானகி ஆலாபனை கொடுத்ததிலாகட்டும்
“பாடு நிலாவே தேன் கவிதை பூமலர”
ஜோடிப் பாடலிலாகட்டும் ஒற்றைப் பாடகராக ஒரு பிரமையை எழுப்புவார்கள்.
“நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது” ஜோடியாகப் பாடியவர்கள். பதிவு கானாபிரபா அங்கே தனித்து ஜானகிக்கு ஒற்றைப் பாடல் விதைத்திருக்கும்.
இதே மாதிரியான ஜோடிப் பரிமாணத்தில் “வைகை நதியோரம்” பாடலில் இணைந்தவர்கள், இங்கேயும் ஜானகிக்கும், இளையராஜாவுக்கும் ஒற்றைப் பாடல்கள் சோக ராகம் பாடும்.
“ஆடுங்கள் பாடுங்கள்” குரு படத்தின் எஸ்பிபி குழுப் பாடல் போல ஜானகிக்கும் ஒன்றுண்டு.
“காதலின் தீபம் ஒன்று”
அலுக்க அலுக்க எஸ்பிபியைக் கேட்டாலும் அங்கேயும் ஜானகியின் தனிப் பாடலுக்கும் இதயத்தின் மறுபாதியைக் கொடுத்திருப்போம்.
ஜானகி
https://youtu.be/ix7QcsU7bmE?si=OunjvMVJPipuQwZ_
எஸ்பிபி
https://youtu.be/c6KoQ8eCbKw?si=Hnizb4wglNOCRuz-
“தேனே தென்பாண்டி மீனே”
இங்கே பாசப் பாடல் இதுவும் இரண்டு பரிமாணங்களில் அக்காவும், தம்பியும் அம்மாவுக்கும், மகனுக்காகவும் கொடுத்திருப்பார்கள்.
ஜானகி
https://youtu.be/YqFHrpOEVEk?si=SNIFd6WKpfJCBIPP
எஸ்பிபி
https://youtu.be/eIuB7XiOyuY?si=ZIO9Q1YoYU_Ljbdp
உதயகீதம் கொடுத்த அதே கே.ரங்கராஜின் “நினைவே ஒரு சங்கீதம் தரும்” இருவர் குரலில் தனித் தனியாய்,
“எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் வீணாகத் தான் போகுதே”
ஜானகி
https://youtu.be/ImpesKVIjPQ?si=JXr9byFMqV-Jவ்ச்
எஸ்பிபி
https://youtu.be/qjDPmpcZPU4?si=CeGPHXa5SKI9q1Dc
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்துநாராணநம்பி நடக்கின்றான்
கேளடி கண்மணி தந்த அந்த ஆண்டாள் பாசுரத்தில் பக்தி என்னும் ஆழியில் இறக்கி விடுவார்கள்.
ஜானகி
https://youtu.be/SFR13To0ZXk?si=Wv_nad73te47GlyV
எஸ்பிபி
https://youtu.be/rv7t0ubd0Zc?si=nGI5kk0U-HOexXNQ
இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட்டுக் கூட்டணிகள் தந்த வித்தைகள் தான் எத்தனை எத்தனை.
கானா பிரபா
05.08.2026
Friday, July 31, 2026
ஜமுனாராணி - பாட்டொன்று கேட்டேன்
இந்தியத் திரையிசையின் மூத்த பாடகி காலமானார் என்று தான் ஜமுனாராணியின் பிரிவை அறிவிக்க வேண்டும்.
வயதளவில் பி.சுசீலா அம்மா மூத்தவர், எஸ்.ஜானகி சம வயது கொண்டவர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மூத்த பாடகி ஜமுனாராணி தான்.
தன்னுடைய ஏழு வயதில் பாட வந்தவர், எண்பத்தெட்டாவது வயதில் மறைந்து விட்டார்.
நடிகை பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணாவின் தன் குடும்ப நட்பின் நிமித்தம், ஜமுனாராணியின் திறமையை அடையாளம் கண்டு “தியாகையா” என்ற படத்தில் பாடவைக்கப் பரிந்துரைக்கிறார்.
படத்தின் இசையமைப்பாளர் நாகையாவின் இசையில் ஜமுனாராணியின் திரைப்பயணம் அப்போது தொடங்குகிறது.
ஜமுனாராணிக்கு அடையாளம் நிறுவிய பாடல்களை எடுத்துக் கொண்டால் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அவை அணிவகுக்கும்.
“மரகதம்” படத்திலே “குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே” சந்திரபாபுவின் துள்ளிசைக்கு நிகராகச் சதிராட்டம் போடும் ஜமுனாராணியின் குரல்.
வி.கே.ராமசாமி தயாரித்து சிவாஜி கணேசன் நடித்த “செல்வம்” படத்திலே நாகேஷ் பரிந்துரையில் தாராபுரம் சுந்தரராஜன் ஒரு பாடலை ஜமுனாராணியோடு பாடுகிறார். அதுவே தாராபுரத்தாரின் அடையாளமாகி விட்ட “எனக்காக வா வா உனக்காக வா வா...”
கே.வி.மகாதேவனை திரையுலகத்தார் பாசமாக “மாமா” என்று அழைப்பதுண்டு. அவரின் இசையில்
“மாமா மாமா மாமா” (குமுதம்) பாடலை செளந்தரராஜன் கூட இணைந்து பாடியவருக்கு இன்னொரு சிறப்புமுண்டு.
ஆரம்பத்தில் குழுப்பாடகியாக இரட்டைப் பாடகிகளில் ஒருவராகப் பாடிவந்தவருக்கு ஒரு நாயகிக்கான குரலாக அமைய வைத்த பாடல்
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் “வளையாபதி” படத்தின் வழியாக அமைந்தது. அதுவும் அப்போது தன் திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய T.M.செளந்தரராஜனோடு இணைந்து கொண்ட இரு ஜோடிப் பாடல்கள்.
குலுங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா
தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே...
https://www.youtube.com/watch?v=qlHQ8I_4hKQ
பாவேந்தர் பாரதிதாசன் வரிகளில்அந்த வளையாபதி பாடலை மறக்கத்தான் முடியுமா?
சுதர்சனம் இசையில் “தெய்வப் பிறவி” படத்தில் ஜமுனாராணிக்குப் புகழ் சேர்த்த இரண்டு பாடல்கள். “தாரா தாரா வந்தாரா” பாடலை அவர் பாடிய விதத்தை ரசித்து “காளை வயசு கட்டான சைசு” என்று இன்னொன்றையும் கொடுத்தார்களாம்.
“ஓஓஓ தேவதாஸ் (தேவதாஸ்) தொட்டு ஜமுனாராணிக்குப் புகழ் சேர்த்த பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம், மலையாளம் என்று அவரின் குரல் மொழி கடந்தது.
"பலே பாண்டியா" படத்தில் "ஆதிமனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்" என்ற அற்புதமான பாடலை ஶ்ரீனிவாசுடன் கொடுத்தவர், அவரோடு இணைந்து இணைக்குரலாக இவரும், செளந்தரராஜன், சுசீலா இணையில் "அத்திக் காய் காய் காய்" பாடலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர் கொடுத்த அற்புதங்களில் ஒன்று.
பெண் பாட்டுக்கார ஜோடிக் குரலாகப் பலதில் அணி சேர்ந்தவர் சுசீலாவோடு “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக” என்று இரு கோடுகள் படத்தில் வி.குமாரின் இசையில் கொடுத்ததும் புகழ் சேர்த்தது. பதிவை எழுதியவர் கானாபிரபா.
கவியரசு கண்ணதாசன் பரிந்துரையில் தனக்குத் திரையிசைப் பாடல்கள் கிட்டியதைச் சொன்ன ஜமுனாராணிக்கு, கண்ணதாசன் தயாரிப்பில் “மாலையிட்ட மங்கை” படத்தில் இடம்பெற்ற “செந்தமிழ்த் தேன்மொழியாள்” தனிப்பாடலும் தனியிடம் கொடுத்தது.
"சித்திரத்தில் பெண்ணெழுதி சீர் படுத்தும் மாநிலமே" (ராணி சம்யுக்தா) பாடல் ஜமுனாராணிக்கான இன்னொரு அழகியல் பாடல்.
இந்திய வானொலியில் தமிழ்த் திரையிசைப்பாடல்களுக்குக் களம் அமைக்காத அந்தக் காலத்தில் இலங்கை வானொலியும், ஒலிபரப்பாளர் மயில்வாகனனும் பாடகர் பெயரை வெகுஜனங்கள் மத்தியில் கொண்டு போன பெருமைக்குரியவர்கள் என்று நன்றி பாராட்டுவார்.
ஜமுனாராணியின் குரல் சிங்களத்திலும் ஒலித்தது.
சினிமாஸ் குணரத்தினம் தயாரிப்பில் “சுஜாதா” திரைப்படத்தில் எஸ்.தட்சணாமூர்த்தி இசையில் அந்த வாய்ப்பு முதலில் வந்தது.
அந்தக் காலத்தில் தென்னிந்தியப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் வரவு சிங்கள சினிமாவில் இருந்ததோடு, அந்தப் பின்புலத்தில் தமிழ்த் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பங்களிப்பும் உண்டு.
தொண்ணூறுகளிலும் கூட ஜமுனாராணியின் குரல் தமிழ்த் திரையிசையில் கலந்திருக்கிறது.
ஆபாவாணனின் இணை இசையில், கியான் வர்மா இசையில் தன் தோழி ஜிக்கியோடு பாடிய
“இரவு நாடகம் இரவல் பூமுகம்”
https://www.youtube.com/watch?v=lNXsiCv8eM4
குறிப்பிடத்தக்கது.
ஜிக்கியின் அந்திம காலத்தில் அவரோடு துணைக்கிருந்தவர், தன் தோழியின் வேண்டுகோளில் “துள்ளாத மனமும் துள்ளும்” பாடலை மேடை தோறும் பாடி அவரை ஞாபகத்தில் இருத்துவேன் என்று மனதோடு மனோ நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார் ஜமுனாராணி.
“நான் சிரித்தால் தீபாவளி” என்ற “நாயகன்” படப் பாடலை
எண்பதுகளின் திரை ரசிகர்கள் நினைவுகூர்ந்து ஜமுனாராணியை அஞ்சலிக்கிறார்கள்.
அந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பிருக்கிறது.
தமிழில் மட்டுமல்ல, அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பிலும் பாடியவர் ஜமுனா ராணியே தான். பதிவை எழுதியவர் கானாபிரபா. தமிழில் இணைந்து பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி, தெலுங்கிலே சுசீலாவோடு பாடினார்.
பாட்டொன்று
கேட்டேன்...
பரவசமானேன்...
நான் அதை
பாடவில்லை...ஹோ….
காற்றினைத் தழுவி வரும் ஜமுனாராணியின் குரல் அவரை உயிரூட்டிக் கொண்டே இருக்கும்.
கானா பிரபா
Wednesday, July 29, 2026
தேனிசைத் தென்றல் தேவாவின் ஜானகியும் மனோவும்
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே
எந்தன் மன வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது.....
அப்போது இரண்டாம் கட்ட ஈழப் போ ர் சூடு பிடிக்க ஆரம்பித்த நேரம், கொழும்பில் படிப்பைத் தொடரலாம் என்று வீட்டுக்காரர் முடிவில் அங்கு போகிறேன். ஆனால் எனக்கெல்லாம் என் சொந்த ஊரே சொர்க்கம் என்று கொழும்புப் பள்ளிக்கூடத்தில் சேராமல் மூன்றாவது வாரத்திலேயே ஊருக்குத் திரும்பி விடுகிறேன்.
அந்த சில நாட்கள் கொழும்பில் இருந்த காலத்தில் என்பதாலோ என்னமோ
"சின்னஞ் சிறு பூவே உன்னைத் தொடும் போதே"
https://www.youtube.com/watch?v=6QlClbSxzb8
பாடலை எப்போது கேட்டாலும் அந்த நாட்களுக்கு இழுத்துப் போய் விடும்.
2015 ஆம் வருஷம் தமிழகத்துக்கு மூன்று நாள் சூறாவளிச் சுற்றுப் பயணம் போன போது அரை நாளை ரிட்சி தெருவுக்கும் அர்ப்பணித்திருந்தேன். அங்கே தான் எல்பி ரெக்கார்ட்ஸ் கிடைக்கும் என்ற நண்பர்களின் வழிகாட்டலில் அங்கு சென்று ஒரு கடையை மேய்ந்த போது நைந்து போய், பழுப்பேறிய அட்டைகளுடன் இருந்த எல்பி ரெக்கார்ட்ஸ் இற்கு மத்தியில் "ஆத்தா உன் கோயிலிலே" பட இசைத்தட்டு புத்தம் புதுசாக இருந்தது.
அப்போது பலதை அள்ளியதால் இது புறந்தள்ளுப்பட்டதே என்று என்னையே பின்னர் நொந்து கொண்டேன் சிட்னி வந்த பின்.
சின்னஞ்சிறு பூவே பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தக் கூட்டுக் குரல்களின் சங்கமமும், ஆரம்ப காலத்துத் தேவாத்தனமான புல்லாங்குழல் வாத்தியப்பாடும் சேர்ந்து கிறங்க வைக்கும்.
முதலில் தனித்தனியாக இயங்கும் இந்த இரண்டு இசை வரிசையும், இரண்டாவது சரணத்துக்கு முன்னர் கூட்டாக கோரஸும் புல்லாங்குழலுமாகச் சங்கமிக்கும் அந்த இசைப் பரிமாறலைக் கேட்கும் போது எழும் உள்ளக் கிளர்ச்சிக்கு எல்லையில்லை அப்பப்பா.....
எஸ்.ஜானகி & மனோ ஜோடிக் குரல்கள் இன்னொரு தனித்துவம் கொடுத்தவை. எப்படி இளையராஜாவின் இசையில் இவர்களுக்கு என்று ஒரு கொத்துப் பாடல் இருக்குமோ அது போலவே, தேவாவின் இசையில் அமைந்த பாடல்களில் இன்னும் சிலதும் உண்டு.
ஆறெங்கும் தானுறங்க
ஆறுகடல் மீனுறங்க..
ஸ்ரீரங்கம் தானுறங்க
திருவானைக்கா உறங்க.
நான் உறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது உன் ரோசா..
https://www.youtube.com/watch?v=ajomgl8MQ7E
தேவாவுக்கு அடையாளம் கொடுத்த “மனசுக்கேத்த மகராசா” படத்திலேயே இந்தக் கூட்டணி அவருக்குப் புகழ் சேர்த்திருக்கும்.
“சிந்தாமணிக் குயிலே
மணக்கும் புது செந்தாழம் பூ மடலே”
https://www.youtube.com/watch?v=mTTDgEXNNpY
நீங்கள் தேவாவின் ஆரம்பகாலத்தில் இருந்தே அவரின் தீவிர வெறியர் என்றால், ராமராஜன் & குஷ்பு நடித்து வெளிவராத படமான “மண்ணுக்கேத்த மைந்தன்” படத்தில் இடம்பெற்ற முன்சொன்ன ஜானகி & மனோ கூட்டுப் பாடலையும் விட்டிருக்கமாட்டீர்கள்.
“எருக்கஞ்செடியோரம் இறுக்கிப் பிடிச்சியே என் மாமா” என்று எஸ்பிபியுடன் ஜோடி போட்டவர் அந்தப் பாடலும்,
“தூதுவளை இலை அரச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமன்கிட்டப் பேசப் போறேன் மணிக்கணக்கா”
https://www.youtube.com/watch?v=YaXtzK2guQY
“தாய் மனசு” மனசு படத்துக்காகக் கொடுத்த ஜானகி & மனோ கூட்டணியின் இந்தப் பாடலும் இந்த ஜென் ஸீ கிட்ஸ் ஐக் கூட விட்டு வைக்கவில்லையே.
“சூரியன்” படத்தில் தேவாவின் துள்ளல் “லாலாக்கு டோல் டப்பிமா” விலும் கோஷ்டி கானம் பாடினார்கள் மனோ & ஜானகி.
“காந்தி பொறந்த மண்” படத்தில்
ஒட்டகத்திலே நீ சட்டப்படி ஏறணும்னா
https://www.youtube.com/watch?v=pjShQxNQg5Q
இப்போது மீண்டும் ஒளித்தரத்தோடு கலக்கலாக யூடியுபில் கிடைக்கும் இந்தப் பாடல்.
“ஓ ஐயாமாரே” (நாடோடிக் காதல்)
https://www.youtube.com/watch?v=VUN2_0Yd6A4
இதையும் இந்தக் கூட்டணியில் சேர்க்கும் அரிய பாட்டு.
“எங்கே எங்கே பொட்டி வச்சா” என்ற பாடலும் “சக்ரவர்த்தி” படத்தில் இந்த ஜோடியில் மலர்ந்தவை. சக்ரவர்த்தியில்
“வாழைத் தோப்புக்குள்ள வாலிபத்துக் காத்தடிக்குதே”
https://www.youtube.com/watch?v=dPULc11MpdE
அந்த ரகளையை மறக்க முடியுமா என்ன?
இன்னொரு ரகளையைக் கேளுங்கள்
“மானா மதுரையிலே என்னோட மாமன் குதிரையிலே (நாடோடி மன்னன்)
https://www.youtube.com/watch?v=110BCp3gStE
இந்தப் பாடலை எல்லாம் ஜானும்மாவைத் தாண்டி யாரை நினைக்க முடியும்?
“அதிகாலை சுபவேளை” படத்துக்காக ஒலிப்பதிவு செய்து பின்னர் “பொண்டாட்டி ராஜ்ஜியம்” படத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட
“ராகம் ஒன்று அது சுகமானது”
https://www.youtube.com/watch?v=0QaJCsolfFg
அடிக்கடி நான் கேட்கும் தேவாப் பாட்டுகளில் ஒன்று.
என்னவொரு ரம்யம் கொடுக்கும் இது.
காத்து வரும் ஜன்னலில்
ஒரு காதல் வந்தது
அது காத்துக் கிடந்த ரெண்டு நெஞ்சை
சேர்த்து வைத்தது..
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
கானா பிரபா
29.07.2026
Saturday, July 18, 2026
இயக்குநர் கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர் கவிஞர் வாலி
இன்று கவிஞர் வாலியின்
நினைவு நாள் ❤️🙏
பல்கலை வேந்தன் இயக்குநர் கே. பாக்யராஜ் இற்கு அதிக பாடல்களை எழுதியதும், அவரின் முழுப் படத்துக்கும் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் என்ற வகையிலும் கவிஞர் வாலிக்குத் தனியிடம் உண்டு.
“ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்தா, அதை வாங்கி ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார் பாக்யராஜ்,
ஒரு நாள் நான் சொன்னேன்
இந்தப் பல்லவியைப் பார்த்துக்கிட்டிருய்யா
நான் பக்கத்துல போயிட்டு வர்ரேன்
சரி! எங்கேன்னு பாக்யராஜ் கேட்பார்
திருச்சி வரைக்கும் போயிட்டு வர்ரேன் என்பேன்”
இப்படி வேடிக்கையாகச் சொல்வார் கவிஞர் வாலி.
அவர் அப்படிச் சொன்னதன் அடிநாதம், பாக்யராஜ் எவ்வளவு தூரம் தன் படப் பாடல் வரிகளில் நுணுக்கம் பார்ப்பார் என்பது தான்.
எங்க சின்ன ராசா படத்தின் கதையைச் சொல்லி விட்டு, படித்த பெண்ணான ராதாவை, படிக்காத பாமரன் பாக்யராஜ் திருமணம் முடித்த பின் எழும் பாடல்.
நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
பாக்யராஜ் சொன்ன அந்தப் பல்லவியின் ஈரடி அப்படியே இருக்கட்டும் என்று விட்டு
நல்ல வைரக்கல்லு பக்கத்தில
உப்பத்தான்
சேர்த்து வச்சது அந்த சாமி
செஞ்ச தப்புதான்
நான் உப்புதான்
என்று படத்தின் கதையையே அந்த வரிகளுக்குள் அடக்கி விட்டார் வாலி என்று வியந்து பேசியிருக்கிறார் பாக்யராஜ்.
காவடிச் சிந்து படத்துக்காக பாக்யராஜ் எழுதிய “யாரோ சொன்னாங்க என்னன்னு” பாடலின் முழுப் பல்லவியும் அப்படியே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக அனுமதித்துச் சரணத்துக்குப் போய் விட்டாராம் வாலி.
பாக்யராஜ் நடிக்காத படத்திற்கு அவர் இசையமைத்த போது வாலியாரின் வரிகளால் மாண்புறு பாடலாக அமைந்தவைகளில்
“பொண்ணு பாக்கப் போறேன்” படத்தில் அமைந்த
“சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே” பாடலெல்லாம் இருவரின் பேர் சொல்லும்.
தன்னுடைய ஆரம்ப காலத்தில் கதாநாயக அந்தஸ்து வந்த போதும், நாயகத் தனமான பாடல் வைக்கத் தயங்கிய போது,
“மூக்குத்திப் பூமேலே” (மெளன கீதங்கள்) பாடலின் சந்தோஷம், சோகம் இரண்டையும் எழுதி, பாக்யராஜுக்கு நம்பிக்கையூட்டினாராம் வாலி.
பின்னாளில் “ஒரு நாயகன் உதயமாகிறான்” பாடலைத் தாவணிக் கனவுகள் படத்துக்கு எழுதிய போது தன் வரிகளாலும் தான் சொன்னதை அங்கீகரித்தார் வாலியார்.
“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று எம்ஜிஆருக்காக “அன்பே வா” படத்துக்காக எழுதிய வாலிக்கே மீண்டும் வந்தது வாய்ப்பு அதே மெட்டினைத் தழுவிய “இந்த ராகமும்” பாடல் என் ரத்தத்தின் ரத்தமே படத்துக்காக.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “அண்ணா நீ என் தெய்வம்” படத்துக்காகக் கொடுக்கப்பட்ட பாடல்களோடு, மேலதிகமாக பாக்யராஜ் இசையோடும் அந்தப் படக் காட்சிகளை உள்வாங்கி எடுத்த அவசரப் போலீஸ் 100 படத்திலுமாக இந்த இரண்டு படப் பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டவர் வாலி மட்டுமே, ஏனையோர் அந்தந்தப் படப் பாடல்களில் தனித்து இருந்தார்கள்.
கவிஞர் வாலி & இயக்குநர் கே.பாக்யராஜ் கூட்டணியில் அமைந்த பாடல்கள்.
கங்கை அமரன்
1. மூக்குத்திப் பூ மேலே (மெளன கீதங்கள்) சந்தோஷம்
2. மூக்குத்திப் பூ மேலே (மெளன கீதங்கள்) சோகம்
3. ருத்ரா படத்தில் கங்கை அமரன் மற்றும் வாலி பாடல் எழுதியிருக்கிறார்கள்
சங்கர் - கணேஷ் இரட்டையர் இசையில்
1. பொய் சாட்சி படத்தில் எல்லாப் பாடல்களும்( ஜி.ராமகிருஷ்ணன் இயக்கம்)
மூன்று பாடல்களில் “அதோ அந்தத் தென்றல்” அந்தக் காலத்தில் ஹிட் அடித்ததொன்று.
2. என் ரத்தத்தின் ரத்தமே ( இயக்கம் கே.விஜயன் & சுந்தர் கே.விஜயன்) 2.a) வாத்தியாரே சின்ன வாத்தியாரே
2.b) இந்த ராகமும்
3. எங்க சின்ன ராசா படத்தில் இடம்பெற்ற
3.a) கொண்டைச் சேவல் கூவும் நேரம்
3.b) நான் தந்தனத்தம் பாட்டு
3.c) என் ராத்தூக்கம் போச்சு
3.d) தென்பாண்டிச் சீமை ஓரமா
தேவா இசையில் அம்மா வந்தாச்சு (P.வாசு இயக்கம்) அனைத்துப் பாடல்களும்
1. தினத்தந்தி பேப்பரிலே
2. உனக்கொரு தாயிருக்கா
3. நந்தினி ஓ நந்தினி
4. உனக்காகப் பாடும் ராகம
5. சோப்பு மேடம்
பாக்யராஜ் இசையில்
1. இது நம்ம ஆளு (பாலகுமாரன் இயக்கம்)
1.a) நான் ஆளான தாமரை
1.b) சங்கீதம் பாட
1.c) மார்கழி மாசத்து
2. பொண்ணு பாக்கப் போறேன் (N.முருகேஷ் இயக்கம்)
சல சலவென ஓடும
3. சகாதேவன் மகாதேவன் (இராம நாராயணன் இயக்கம்) படத்தில் ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி ஒரு பாடல் மட்டும் பாக்யராஜ் ஏற்கனவே இசையமைத்தது பயன்பட்டது
4. ஆராரோ ஆரிரரோ
4.a) என் கண்ணுக்கொரு நிலவா
4.b) ஒரு மூணாம்பிறை பாரு
4.c) ஓடைப்பக்கம் ஒரு குருவி
4.d) என்ன பிகர்
4.e) தானா தலையாடுண்டா
5. காவடிச் சிந்து (படம் வெளிவரவில்லை, பட்டணந்தான் போகலாமடி படத்தில் ஜாமக்கோழி பாடல் மீளப் பயன்பட்டது)
5.a) சங்கீதம் எனக்கு
5.b) யாரோ சொன்னாங்க
5.c) என்ன குறை ராசாவே
5.d) ஜாமக்கோழி கூவியாச்சு
5.e) ஒரு பூ பூத்தாட
5.f) ஒரு எட்டுமுழ வேட்டி
5.g) வெத்தலைக்காடு
5.h) மாவோவ் அடிக்கடி
6. பவுனு பவுனு தான்
6.a) தேதி ஒண்ணு பாத்திருக்கேன்
6.b) முல்லைப்பூ வாசம்
7. அவசரப் போலீஸ் 100 படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (ஶ்ரீதரின் அண்ணா நீ என் தெய்வம்) மற்றும் பாக்யராஜ் இசையில் அமைந்த பாடல்கள்
இசைஞானி இளையராஜா இசையில்
1. விடியும் வரை காத்திரு அனைத்துப் பாடல்களும்
1.a) அபி நயம் காட்டு
2.b) பேசு என் அன்பே
3.c) நீங்காத எண்ணம் ஒன்று
2. தூறல் நின்னு போச்சு
தாலாட்ட நான் பொறந்தேன்
3. தாவணிக் கனவுகள்
ஒரு நாயகன் உதயமாகிறான்
4. ராசுக்குட்டி
4.a) பாளையத்துப் பொண்ணு
4.b) வாடி என் செங்கமலம்
5. வீட்ல விசேசங்க (ஒரு பாடல் தவிர அனைத்தும்)
5.a) மலரே தென்றல் பாடும் (சந்தோஷ)
5.b) மலரே தென்றல் பாடும் (சோகம்)
5.c) இந்த பஸ்ஸு தான்
5.d) கொஞ்சம் சங்கீதம்
5.e) ஜிங்கான் ஜினுக்குத்தான்
6. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (அனைத்துப் பாடல்களும்)
6.a) வந்தாள் வந்தாள்
6.b) ராஜா ராஜா தான்
6.c) அழகு நிலா
6.d) கண்மணி காதல்
6.e) ஒரு மைனாக்குஞ்சு
6.f) எத்தனை நாளா
கவிஞர் வாலி & இயக்குநர் கே.பாக்யராஜ் கூட்டணியில் அமைந்த
90 வீதமான பாடல்கள் என் மனம் கவர்ந்தவை எனினும் இந்தப் பதிவை எழுதும் போது இரண்டு பாடல்கள் காதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒன்று
தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்தே
ஆரோ ஆரிராரோ
https://youtu.be/PFN983wbvsA?si=5plMm15hIpUWPddC
இன்னொன்று
முல்லைப்பூ வாசம் உசுப்புது மானே மானே
https://youtu.be/5NSA5xPR-To?si=Nt4bbpnmpVU8-vRL
கே.பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் இன்னும் வருவார்கள்.
கானா பிரபா
18.07.2026
Sunday, July 12, 2026
மலையாள தேசத்தில் எஸ்.ஜானகி
கிளியே கிளியே
மணி மணி மேகத் தோப்பில்
ஒரு மலர் நுள்ளான் பூக்கும்
அழகின் அழகே….
https://youtu.be/Qk5rfuCTU9U?si=Ek1vyvEg_eKO3j2s
மற்றைய மொழிக்காரர்களை விட்டு விடுங்கள். இந்த மலையாளிகள் தம்
தேசத்துப் பாட்டுக்காரர்களில் கூட அணை போட்டு வைத்திருப்பார்கள்.
ஆனாலும் ஆச்சரியங்கள் நிகழ்ந்ததுண்டு.
அண்டை வீட்டு சங்கீதக்காரர்கள்
அரிதாகவே கொண்டாடப்பட்ட காலம் அது.
விதிவிலக்காக இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை
சலீல் செளத்ரி என்றும், இளையராஜா என்றும் கொண்டாடினார்கள்.
பாடகி என்று வரும் போதே பி.லீலா போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே ஜானகியை அரவணைத்து விட்டார்கள்.
1957 ஆம் ஆண்டில் “மின்னுன்னதெல்லாம் பொன்னல்ல” படத்தில் எஸ்.என்.ரங்கநாதன் இசையில் “இருள் மூடுகையோ என் வாழ்வில்” என்ற சோகப் பாட்டு.
அந்தப் பாட்டு ஹிந்தியில் முன் அப்போது வெளியான நாகின் படத்தின் இசைத் தழுவல்.
இதே ஆண்டு தான் சலபதி ராவ் இசையில் “விதியின் விளையாட்டு” (படம் வெளிவரவில்லை) "என் ஆசை பாழானது ஏனோ" என்ற சோகப் பாடல் தொடக்கமானது.
ஆனால் அந்த முரண் ராசி எல்லாம் இந்தக் குரலரசி அடுத்த தசாப்தங்களைக் கட்டி ஆள்வதைத் தடுக்கவில்லை.
ஒரு காலம் வரை
“தும்பி வா தும்பக் குடத்தின்”
https://youtu.be/BtAoUN0-yxg?si=PyMm1rPqPnfttOpK
பாடல் தான் கேரளத்தவர் மனம் நிறைந்தது என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் காலம் நிறைய நிறைய,
மலையாளத் திரையுலகில் கூடத் தனக்கொரு சாம்ராஜ்ஜியத்தை ஜானகி நிறுவியிருப்பது துலங்கியது.
வகை தொகையில்லாமல் அங்குள்ள இசையமைப்பாளர்கள் எல்லோருமே அவர் குரலை அரவணைத்திருக்கிறார்கள்.
“பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்” என்று ரவீந்திரன் மாஸ்டர் இசையில் “ரசிகன் ஒரு ரசிகை” யில் கேட்ட அந்தப் பாடலின் நதி மூலம் அவரிசையில் ஜானகிம்மா பாடிய
“தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி”
https://youtu.be/4KdSr-_582Q?si=3-731w3tpnr6h2uF
“ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ” பாடலுக்கு மலையாள நிறம் பூசி அழகு பார்த்த இளையராஜாவின்
“வீணே வீணே வீணைக்குஞ்சே”
ஜானும்மா வாழும் காலத்திலேயே அவரின் பெருமையை அவர் பாட்டைப் பாடிப் பெருமை சேர்த்த சித்ராவின்
“மலர்க் கொடி போலே வர்ணத் துடி போலே”
https://youtu.be/b4IukJRngI4?si=0m3LPisLpeCAIvli
கேட்டுவிட்டு அப்படியே ஜானும்மா குரலுக்குத் தாவ வேண்டும்
https://youtu.be/-zuJY2MsAJY?si=w7NSIdmXNX4EMxoq
அந்த மலர்க் கொடியில் தான் எத்தனை வளைவுகள் அந்த குரலில். சலீல் செளத்ரியின் அற்புதமான சாகித்தியம் அது.
https://youtu.be/h7h9flbk7-4?si=qWecFrErhHs6gwCC
கேட்ட நாளில் இருந்து அந்தத் தேன் கூட்டிலேயே சிக்கி விட்டது மனசு.
ஜான்சன் மாஸ்டரின் “கூடெவிடே” படத்தில்
“ஆடி வா காற்றே”
https://youtu.be/E8KTUMgks9k?si=lviQ93Lx-ற்ஃட்ட்6
எம்.பி.ஶ்ரீனிவாசன் தந்த “ஏட்டுமானோர் அம்பலத்தில்”
https://youtu.be/GCAYAfIdUeM?si=FwR71X-cMtpjwpVW
என்று தொடரும் ஜானகி
ஸ்வரண முகிலே ஸ்வர்ணமுகிலே
https://youtu.be/WXgEADeRiRU?si=JI-S4qMkhcsbYnzy
என்று இது நிஜங்களோட கதா படத்தில், அவர் பாடியது, இந்தப் படத்தின் மூலமான பாலைவனச் சோலையில் நாம் கேட்ட “மேகமே மேகமே” பாடலுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாத சங்கீதம்.
பாபுராஜ் மாஸ்டரின் “காட்டுத்துளசி” படத்தில் சுசீலா, ஜிக்கி,எல்.ஆர்.ஈஸ்வரி என்று பாடகிகளுக்கு ஒவ்வோர் பாட்டு அங்கே ஜானகியின் வானம்பாடி
https://youtu.be/5QvWHZN8hO8?si=lqCBLrbN9NWimew1
தனித்துத் துலங்கும்.
இன்றும் ஏஷியா நெட், அம்ருதா போன்ற தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டி என்று வந்து விட்டால் பழைய நினைவுகளில் தோய்ந்து ஜானும்மாவின் பெருமை தனைப் பேசுகிறார்கள் இசையுலகில் கோலோச்சும் நடுவர் பெருமக்கள்.
கேரளாவுக்கு வெளியே இருந்து வந்து மொத்தம் 11 கேரள அரசு விருதுகளைப் பெற்ற பாடகி என்ற தனித்துவத்தையும் எடுத்துக் கொண்டார் ஜானகி.
இளையராஜா எங்கு சென்றாலும் நாமும் அங்கே போய் விடுவோம். அங்கேயும் ஜானும்மா இருப்பார்.
அப்படித்தான்
“கொஞ்சிக் கரையல்லே”
https://youtu.be/Yd4TOWLCof8?si=7kz1qM7lumdqDVcZ
துன்பச்சுவையை ரசித்தோம்.
தான் போகும் இடமெல்லாம் அந்த ஆலாபனைக் குயிலை விட்டு நீங்காமல் அவரும் இருப்பதால் அதே படத்தில்
“பூங்காற்றினோடும்”
https://youtu.be/ADU0B95tbvo?si=jvkHaJ7K5obnuduE
பாடலில் ஜானும்மாவின் ஆலாபனையில் சொக்கிப் போனோம்.
“கிளியே…கிளியே…”
“தும்பி வா தும்பக் குளத்தே..”
இந்த இரண்டு படங்களும் அவலச்சுவை கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் பூர்ணிமா ஜெயராம்.
பூர்ணிமா ஜெயராம் என்றதும் ஓளங்கள் படத்தில் “வேளாம்பல் கேளும்”
https://youtu.be/5mFWbNVMggU?si=xk1oC7vklgdFcy_ஜ்
ஜேசுதசைப் பாட விட்டு ஆலாபனை அரசி ஜானகி காட்டுவாரே பாட்டு முழுக்க அப்பப்பா..
அப்படியிருந்தும் செவ்வியல் சுவையோடு நினைவு மீட்டிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்.
ஜானகியின் குரலைத் தம் தாயின் தாலாட்டாக அள்ளியெடுத்துச் சுமக்கிறது.
கானா பிரபா
12.06.2026






