Pages

Tuesday, June 16, 2026

பாரதிராஜாவின் படத்தில் பாடகர் கிருஷ்ணசந்தர்

பாடகர் கிருஷ்ணசந்தர், அருமையான பாடகர் மட்டுமல்ல, கலையுலகில் எளிமையாகப் பழகும் மிகச்சிறந்த மனிதர் இவர்.

தாமரப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னிக்கும்

சண்டையே வந்ததில்ல…

இந்த ஜென் ஸீ யுகத்திலும் அடிப்பொளியாகக் கொண்டாடப்படும் பாட்டு.

பாடலைப் பாடிய கிருஷ்ணசந்தரும், ஜென்ஸியும் கூட ஒரு பாடலில் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். அதுவும் பாரதிராஜா படத்துக்காக.

இசைஞானி இளையராஜா இசையில் பாரதிராஜா இயக்கத்தில் “டாப் டாக்கர்” என்ற படத்தை, கமல்ஹாசனை நாயகனாக வைத்து எடுக்கத் திட்டமிடுக்கிறார்கள்.

அந்தப் படத்துக்காக ஒரு பாடலும் பதிவாகியது, பாடலைப் பாடியவர்கள் கிருஷ்ணசந்தர் மற்றும் ஜென்ஸி. ஆனால் அந்தப் படம் கிடப்பில் போடப்படுகிறது.

குறித்த பாடலை மீளவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா வை வைத்துப் பாட வைத்து, அதே கமல்ஹாசன். ராதா நடிப்பில் “காதல் பரிசு” படத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

அந்தப் பாடல் தான் “புறாக்களே…புறாக்களே” என்ற பாடல்.

கமல்ஹாசனுக்கு மென்மையான குரல்கள் என்ற வரிசையில், ஜேசுதாஸ், ஜெயசந்திரன், உன்னிமேனன், அருண்மொழி வரிசையில் கிருஷ்ணசந்தரும் இடம்பிடிக்க வேண்டிய பாட்டு அது.

அதே போல், பாரதிராஜாவின் படத்திலும் இந்த வாய்ப்பு தவற விடப்படுகிறது.

கிருஷ்ணசந்தர் பாடகராக இருந்த காலத்தில் சந்தூர் போன்ற வாத்தியக் கலைஞராக விளங்கியவர் வித்யாசாகர், ஆரம்ப காலத்தில் ஒரு தொலைக்காட்சி நாடகத்துக்கு வித்யாசாகர் இசையமைத்த போது கிருஷ்ணசந்தர் பாடல் பாடியுமுள்ளார்.

ஆனால் காலம் போட்ட கணக்கைப் பாருங்கள். அதே இயக்குநர் இமயம் பாரதிராஜா 1995 இல் “பசும்பொன்” படத்தை எடுக்கிறார். அதில் வித்யாசாகர் கிருஷ்ணசந்தரைப் பாட அழைக்கிறார். இதில் முன்னேற்பாடு எதுவுமே இல்லை. எல்லாமே தானாக அமைந்தது என்று கிருஷ்ணசந்தர் சாரிடம் பேசும் போது சொன்னார்.

பாரதிராஜாவின் திரைச்சரித்திரத்தில் இந்தப் பாடலும் ஒரு மைல் கல் தானே?

“அந்த நெலாவைத் தான் கையில புடிச்சேன்” போல இரண்டாவது நாயகன், நாயகிக்கான பாட்டு என்பது பாரதிராஜாவின்  இன்னொரு முத்திரைப் பாணி.

இந்த “தாமரைப் பூவுக்கும்” பாடல் சற்று முன்னே வந்த “ஆத்தங்கரை மரமே” பாடலுக்கும் மிக நெருங்கிய சூழல் பாட்டு.

இரண்டிலும் பொதுப் பாடகி சுஜாதா. பின்னாளில் மலையாளத்தில் “தெய்வத்திண்டே மகன்” படத்திலும் வித்யாசாகர் இசையில் சுஜாதா & கிருஷ்ணசந்தர் ஜோடி போட்டுக் கலக்கி இருப்பார்கள்.

ஐயாறெட்டு

நெல்லைப் போல

அவசரமா..சமஞ்ச

ஐத்தமக

மஞ்சதுக்கு

ஆதரமா..அமஞ்ச

“தாமரைப் பூவுக்கும்” பாடலில் கிருஷ்ணசந்தர் & சுஜாதா கூட்டணி மிகக் கச்சிதமாக இருக்கும் போட்டி போட்டு அதகளம் பண்ணியிருப்பார்கள். கூடவே வித்யாசாகர் உய்ய்ங் உய்ங்ங் இசையில் மகுடி தான் போங்கள் 🙂

நாக்குல மூக்கையே..ஹே..ஹே

தொட்டவன் நானடி

பார்வையால் உசுரையே..ஓ..ஹோ

தொட்டவ நீயடி

இங்கே கிருஷ்ணசந்தர் அவர்களது மென் குரல் வார்த்தைகளில் துள்ளிக் குதிக்கும் மீனாட்டம் இருக்கும்.

கானா பிரபா

16.06.2026

No comments:

Post a Comment