சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா..
மனம் துடித்து துடித்து
சேர்ந்த பின்னே
தோல்வி காணுமா..
காதலர் தாம் சந்திக்கும் போது எழும் ஐயப்பாடுகளைப் பாடலில் கொண்டு வரும் உத்தியை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கவியரசர் கண்ணதாசன் கொண்டு வந்திருப்பதை மெய்ப்பிக்க இன்னொரு பாட்டு.
வழக்கம் போல காதலியை ஆற்றுப்படுத்தி ஆறுதல் அளிக்கிறான் இந்தக் காதலன்.
இப்படியாகப் பாடலின் கவி நயத்தை வியக்க ஒரு தடவை, இன்னொரு தடவை இசைக்காக என்று கேட்டு வைக்கும் பாட்டு இது.
அள்ளி இறைத்தாலும் ஆயிரம் கொள்கலன் போதாத ஏரியின் மீதேறிப் படகில் மிதக்கும் போது ஒரு சொட்டு நீர்த்திவாலை அந்த் தண்ணீர்த் தொட்டியின் பெறுமானத்தைக் காட்டும். அது போலவே பாடல் தொடங்கும் போது எழும் அந்தச் சிறு ஒலி கூடக் காணாத காட்சியைக் கற்பனையிலே வரிக்க முகவரி எழுதும்.
கதகதப்பான குளிர் வாசம் அந்த ஆண் குரலோன் ராஜாவிடம்.
இசையரசி சுசீலாம்மாவைப் பற்றித் தனியாகப் பேசவும் வேண்டுமோ? எந்த ஆண் கூட்டில் சேர்ந்தாலும் இசைந்து போகும் அரசி அல்லவா?
பாடலூடே ஊடுருவும் அந்தப் புல்லாங்குழல் ஏரியைச் சுழித்து ஓடும் படகின் ஊடாடல் போல நிகழ்த்தும் ஆலாபனை.
அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.
“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”
எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.
தெலுங்கு தேசம் இரண்டு பாடக இசையமைப்பாளர்களைச் சம காலத்தில் பிரசவித்துள்ளது.
ஒருவர் கண்டசாலா இன்னொருவர் ஏ.எம்.ராஜா.
இனிய பிறந்த நாள் நினைவுகளோடு “எம்.ராஜாவுக்கு”
நிலை மயங்கி மயங்கி காதலினால்
ஜாடை பேசுது....
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது ❤️
https://www.youtube.com/watch?v=IiaquGWSJHI&list=RDIiaquGWSJHI&start_radio=1
கானா பிரபா
01.07.2025