Pages

Tuesday, September 29, 2020

எஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1


54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க, ஸ்பென்ஸர் பிளாஸாவில் இருக்கும் Music World போகிறேன்.
அங்கு குவிந்து கிடந்த எண்ணற்ற இசைப் புதையல்களில் இருந்து கைகள் ஒவ்வொன்றாய் ஆய்ந்து அப்படியே அடுக்கிக் கொண்டு போகச் சட்டென்று என் கவனம் திரைப்படமல்லாத தனிப்பாடல்தொகுப்பில் விழுகிறது. அங்கே “அறிந்தேன்” என்றொரு இசைப்பேழை கிடக்க அதில் என்ன ஒரேஎஸ்பிபி மட்டும் என்ற ஆர்வக் கோளாறால் அதையும் வாங்குவதற்காக எடுத்துக் கொள்கிறேன். சிட்னிவந்து தான் கேட்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
"அறிந்தேன்
நினைத்தேன்
திருப்பிக் கொடு
பிரிந்தேன்
அழைதேன்
நினைதேன்
காதலில்
மறந்தேன்"
அந்த இசைப் பேழை முழுக்க எஸ்பிபி மட்டும் தான் பாடுகிறார். இரண்டு பக்கமும் அவர்தான்.
அலுக்கவே இல்லை, அந்தப் பாடல்கள் கோவையாகக் காதலின் பரிமாணத்தை எஸ்பிபியின் குரல் தழுவிக்கொண்டாடுகிறது.
திரையிசைப் பாடல்களை விடுங்கள் இதுமாதிரி எத்தனை எத்தனை திரைசாரத் தனிப் பாடல்கள், பக்திஇலக்கியங்களின் இசை வடிவங்களைத் தன் குரலால் நிறமூட்டி விட்டுப் போயிருக்கிறார் அவர்.
இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சிலநூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கேட்கும் போது கிடைக்கும் அனுபவ வெளிப்பாட்டையே இந்தத் தொடர் கட்டுரையின் மூல இழையாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
அது என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கும்.
இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல் வித்தகர்.
அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே” இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத், அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது, அதையும் கடந்து போயிருக்கிறது.
அது கொண்டு போய் எஸ்பிபியின் தமிழுக்கான இறுதித் தேசிய விருதான “தங்கத் தாமரை மலரேயில்” கொண்டு நிறுத்தியிருக்கின்றது.
அடுத்த தலைமுறையின் இளம் காதலர் படங்களிலும் “காதலெனும் தேர்வெழுதிக் காத்திருந்த மாணவன் நான்” (காதலர் தினம்) என்றும், “சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜீனா), எந்தன் வாழ்வின் காதல் நிலவே (காதல் வைரஸ்) எஸ்பிபி தொடர்ந்திருக்கிறார். இவை சில சொட்டு உதாரணங்கள் தாம்.
புதுப் புதுக் குரல்களாகத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் ரஹ்மானாலேயே கடக்க முடியாதவர்.
போன வருடம் கூட
“எஸ்பிபி சாரிடம் நேரம் கேட்டிருக்கிறேன்
அவர் தான் இன்னமும் கொடுக்கிறார் இல்லை”
என்று எஸ்பிபி முன்னாலேயே கலகலத்திருக்கிறார் ரஹ்மான்.
“வாய்பாட்டு பாடும் பெண்ணே
மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம்
பெண்ணுக்கு ஆகாது”
“என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்” வந்த போது இளையராஜாவின் தீவிர ரசிகனாக என்னைப் போன்றவர்களை அசைத்து போட்டு ரஹ்மான் பக்கமும் இன்னமும் நெருக்கமாக காதுகொடுக்கக் கேட்க வைத்தது அந்த சிரிப்பான் எஸ்பிபியின் நளினக் குரல். அந்த வகையில் அவர் ஒரு இணைப்புப் பாலமும் கூடத்தான்.
ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.
மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால் எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல் இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிகஇலகுவாகக் கடைக்கோடி ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின் குரல்.
அந்த வகையில் எஸ்பிபியின் குரல் புதிய புதிய இசையமைப்பாளர்களுக்கு எவ்வளவு தூரம் தோதாய்த் தோள் கொடுத்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
படம் நன்றி : ஏவிஎம் நிறுவனம்

Monday, September 28, 2020

லதா மங்கேஷ்கர் 91 ❤️ இசைஞானி இளையராஜாவும் லதா மங்கேஷ்கரும் 🎸



ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண்மூட....
நாடு கடந்து, சொந்தம் அற்று, புலம் பெயர்
வாழ்வியல் சூழலில் நள்ளிரவு கடந்த வானொலி ஒலிபரப்புகளில் தனியனாக நிகழ்ச்சி செய்யும் போது இந்தப் பாடலை ஒலிபரப்பும் போதெல்லாம் ஒரு காதல் பாடலாக அன்றி தாயின் அரவணைப்பில் முதுகு தடவும்.
“ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ”
பாடல் மட்டுமல்ல இசைஞானி கொடுத்த இது போன்ற வரம் தந்த சாமிக்குச் சுகமான லாலிகள் எல்லாமே தனிமை களையும் தாயின் தாலாட்டுகள் தான். அதனால் தான் லதா மங்கேஷ்கர் என்ற பாடகியின் மொழிச் சுத்தம் கடந்து அந்த ஒலியின் கனிவோடு கட்டுண்டு கிடக்கச் செய்து விடும்.
லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியது என்றால் இன்றைய யுகத்துக்கு சத்யாவின் “வளையோசை கலகலவென”
பாடல் தான் அதிகம் தெரிந்திருக்கும். அந்தப் பாடலில் துள்ளாட்டம் போடும் எஸ்பிபிக்குத் தோதாய் ஒரு அமலாக் குரலாக
“சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது”
லதாவின் செல்லக் குரல் இருக்கும்.
ஆனால் சத்யா வந்த 1988 க்கு முன்பே
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் குரல் “ஆன்” ஹிந்தி தமிழ் வடிவம் கண்ட போதே வந்திருக்கிறது. அதில் ஆச்சரியமான ஒற்றுமை என்னவெனில் இசைஞானி மனம் திறந்து போற்றும் நெளஷத் தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். ஒரு உபரித்தகவல் நெளஷத் இசையில் Mughal-e-Azam” என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான “கனவு கண்ட காதல்” என்று வந்ததையும் சொல்லி வைக்க வேண்டும்.
நெளஷத் இசையில் வெளிவந்த வான ரதம் ( Uran Khatola என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்) படத்திலும் “இன்று எந்தன் நெஞ்சில் சக்தி”
என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார்.
ஒரு பொழுது இசைஞானி இளையராஜாவின் தெலுங்குப் பாடல்களை இசை வட்டில் கொடுத்துக் காலைத் தீனியாகச் சுவைத்துக் கொண்டிருக்கும் போது
“தெல்ல சீரக்கு தகதிமி தபனலு” https://youtu.be/NgJSt2F_8nY பாடல் வந்தது. முன்பு கேட்ட ஞாபகமும் இல்லை
ஆனால் பழக்கி வைத்த கிளியைப் போலச் சட்டென்று மனதில் உட்கார்ந்து கொண்டு விட்டது. இப்போது போலக் கேட்டுக் கேட்டுப் பழக்கப்படுத்தி ரசிக்க வேண்டிய தொல்லை இல்லையே இந்த மாதிரி ராஜா கொடுத்த பாடல்களில்.
ஆகா எவ்வளவு அபரிதமான துள்ளிசை வார்ப்பு, எஸ்.பி.பாலசுப்ரமணியமும் லதா மங்கேஷ்கரும் பாடும் அந்த உற்சாகத் தொனி அப்படியே “வளையோசை கலகலவென” பாடலைத் துணைக்கழைத்து வருகிறது. கூட்டுக் குரல்களின் உற்சாக ஆர்ப்பரிப்பு ராஜா பாடல்களில் வழமையே என்றாலும் வழக்கமாக இசை மேடையில் குஷியாகி மேலதிக சங்கதி போடும்
எஸ்.பி.பி இங்கே இடையிசையிலும் அந்த உற்சாக விளையாட்டைக் காட்டுகிறார். Aakhari Poratam திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது இந்தப் பாட்டு.
லதா மங்கேஷ்கர் பல்லாண்டுகளுக்குப் பிறகு
தமிழிலும் தெலுங்கிலும் பாட வந்த போது நானே அவருக்கு ஜோடிக் குரலாக அமைந்திருக்கிறேன் என்று பெருமை பட இந்தக் காணொளியின் பாட்டு முடிவில் எஸ்.பி.பி பேசுகிறார் பாருங்கள் https://youtu.be/otmuLVbjcQU
இசைஞானி இளையராஜா தமிழில் கொடுத்த பாடல்களையே ஆண்டு அனுபவிக்க இந்த ஆயுசு போதாது. தெலுங்கிலும் இன்ன பிற மொழிகளிலும் அவர் கொடுத்த இந்த மாதிரித் திரவியங்களை ஆண்டு அனுபவிக்க இன்னொரு பிறவி வேண்டும்.
எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
அந்தப் பள்ளி நாட்களில் அருட்செல்வம் மாஸ்டரின் டியூஷன் சென்டரின் நவராத்திரி கால வாணி விழாவில் பெரிய வகுப்பு அக்கா ஒருவர் பாடியது மனக் கிடங்கில் இன்னும் பழுது படாது பசுமையாய் இருக்கிறது.
இசைஞானி இளையராஜா தன் இசையில் ஒவ்வோர் பாடகியருக்கும் இம்மாதிரியான ஏதேதோ எண்ணம் வளர்த்த, மாலையில் யாரோ, பொன்வானம் பன்னீர்த்தூவுது
ரகங்களைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறார். அப்படி லதா மங்கேஷ்கருக்குக் கிட்டிய அபரிதமான பாட்டு இது. அதுவும் அந்த இசையோடு கூட்டுச் சேரும் போது அமானுஷ்ய உலகில் சஞ்சரித்துப் பாடுமாற் போல இருக்கும்.
லஜ்ஜா ஹிந்திப் படத்தில் இளையராஜா பின்னணி இசைத்த போது ஒரேயொரு பாடலையும் லதாவைக் கொண்டு பாட வைத்தார். அந்தப் பாட்டு இதயம் போகுதே போல ஒரு சோக ராகம் மீட்டும். அது இதுதான்.
இசைஞானி இளையராஜாவுக்கு டிசெம்பர் 4 ஆம் திகதி 1998 இல் மத்தியப் பிரதேச அரசாங்கம் லதா மங்கேஷ்கர் விருது கொடுத்துக் கெளரவித்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் லதா மங்கேஷ்கர் பாடியது சொற்பம். ஆனால் அனைத்துமே சொர்க்கம்.
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்
அன்னத்தை எண்ணம்போல் ஆடவைத்தான்
ஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ....
கானா பிரபா