Pages

Tuesday, July 30, 2024

KAMAL HAASAN — A cinematic journey ✍🏻 K.Hariharan நூல் நயப்பு ✍🏻 கானா பிரபா


KAMAL HAASAN ❤️

A cinematic journey ✍🏻 K.Hariharan

நூல் நயப்பு ✍🏻 கானா பிரபா

கமல்ஹாசன் என்ற ஆளுமையை வெறுமனே நடிகர் என்ற எல்லைக்குள் நிறுத்தி விட முடியாது.

அவர் சினிமாவின் அனைத்துக் கூறுகளையும் கற்றுக் கொண்ட, கற்றுக் கொள்கின்ற ஒரு பூரணமான படைப்பாளி.

இப்படியானதொரு ஆளுமையைப் பற்றிய ஒரு நூல் வருகிறதென்றால் அதன் மீதான எதிர்பாப்பு பல மடங்காக இருக்கும்.

காரணம் அரை நூற்றாண்டு காலமாக கமல் குறித்த பல்வேறு நுணுக்கங்களை அவரின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒரு துறைவாரியான கல்வியாளர்களும் அணுகியிருப்பதே காரணம்.

அப்படி ஒருவர் தான் கே.ஹரிஹரன்.

“ஏழாவது மனிதன்” திரைப்படத்தின் இயக்குநர் என்ற அடையாளமே ஹரிஹரனை இலகுவாக அடையாளம் காண்பித்து விடும். தற்போது க்ரியா பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கற்கை நெறியின் பேராசிரியராக இருப்பவரின் பின்னணி வரலாற்றில், திரைப்பட இயக்கம் குறித்த செயற்பாடுகள் அமைப்பு ரீதியாகவும், தனி நபராகவும் நீண்டு விரிந்தது.

ஆகவே கமல்ஹாசன் குறித்த ஒரு நூலை ஆக்க வேண்டும் என்று ஹரிஹரன் முடிவெடுத்த போது அது ஒரு Master class ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அணுகியிருக்கிறார்.

கமலின் 40 திரைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்.

1981 ஆம் ஆண்டிலிருந்தே கமலோடு பழகிய அனுபவத்தின் வெளிப்பாடுகளாக ஆங்காங்கே திரைக்குப் பின்னால் உள்ள சங்கதிகளையும் தூவியுள்ளார்.

265 படங்களை நடித்து முடித்துள்ள கமல்ஹாசனிடம்

“உங்களின் 40 படங்களைத் தேர்வு செய்திருக்கிறேன்”

என்று ஹரிஹரன் சொன்ன போது “நாற்பது தேறுமா?” என்று ஐயமுற்றுச் சிரித்தாராம் கமல். ஒரு பரிபூரண கலைஞனுக்கு இயல்பாகவே இருக்கும் திருப்தியின்மையின் வெளிப்பாடு என்றே அதை நாம் பார்க்க வேண்டும்.

கமல்ஹாசனின் தந்தைக்கு இருந்த சங்கீத ஆர்வம், தமக்கையின் நடனப் பயிற்சி இதையெல்லாம் தொட்டு அவரின் குடும்பப் பின்னணியைக் கோடிட்டுக் காட்டிவிட்டு

“களத்தூர் கண்ணம்மா” படப்பிடிப்புத் தளத்தில் எல்லா அரங்க அமைப்பும் சினிமாவுக்காக அமைக்கப்பட்ட பொய்த் தோற்றம் என்ற மாயையை சிறுவன் கமல் அறிந்து கொண்ட வியப்பு மாறாமல், சாவித்திரி பிரியமாகக் கொடுத்ததைக் கூட ஏதோ set properly என்று நினைத்துச் சாப்பிட மறுக்கும் கட்டத்தில் இருந்து இந்த நூலைப் படிக்க வேண்டிய சுவாரஸ்யத்தை ஆரம்பம் எழுப்புகின்றது.

ஆனால் அவர் தொடர்ந்து சிறுவனாக நடித்த படங்கள் குறித்தோ, தங்கப்பன் மாஸ்டரிடம் நடன இயக்குநராக இருந்தது குறித்த நீட்சியோ காண்பிக்கவில்லை.

கமலின் ஆத்ம நண்பர், இயக்குநர் ஆர்.சி.சக்தியுடன் “உணர்ச்சிகள்” படத்தை உருவாக்கிய சூழலில் இவரே நாயகனாகிய எதிர்பாராத சூழல்,

பண முடையால் இந்தப் படத்தை அப்படியே போட்டு விட்டு இதே கதையை மலையாளத்தில் “ராஸலீலா” ஆக்கி பின்னணி குறித்து நீளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கமல்ஹாசனைத் “நம்மட சொந்தம்” என்று மலையாளிகள் கொண்டாடும் அளவுக்கு மலையாளத்தில் அவர் இயங்கிய இருப்பை இந்த நூல் பதிவு செய்யவில்லை.

கமல்ஹாசனை ஒரு திறம்பட்ட கலைஞனாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய விதத்தை அரங்கேற்றம் படத்தில் இருந்து, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, அவர்கள், வறுமையின் நிறம் சிகப்பு ஈறாகத் தொட்டு அலசுகிறார் நூலாசிரியர். உன்னால் முடியும் தம்பி பேசப்படாதது பெருங்குறை.

இந்த நூலின் அதிக பக்கங்களைப் பிடிப்பது ஏறக்குறைய அந்த நாற்பது படங்களின் கதைச் சுருக்கத்தைக் கொடுத்தது. வாசிப்பு ஓட்டத்தில் ஒரு சலிப்புத்தன்மையை இது உண்டு பண்ணுகிறது.

கமல்ஹாசன் படைப்புகளைத் தேடி நுகராதவருக்கு உதவும் என்றாலும், குறித்த படைப்புகளை இன்னும் அலச வேண்டிய சூழலில் அதை நீர்த்துப் போக வைக்கிறது.

கமலை முன்னுறுத்தியே இந்த நூல் எழுதப்பட்டதால் சுற்றி இயங்கிய ஆளுமைகளைப் பற்றியோ, இணையாக இயங்கிய பாத்திரங்கள் எவ்விதம் அவரின் நடிப்பை ஒளிரச் செய்தனர் குறித்த ஆய்வு ரீதியான தேடல் இங்கில்லை.

குறிப்பாக அனந்து குறித்து தொடர் நீட்சி இல்லை, கிரேஸி மோகனின் வகி பாகம் எவ்வளவு பெரியது, கூட இயங்கிய இலக்கிய கர்த்தாக்கள் யாருமே அடையாளப்படுத்தப்படவில்லை.

திராவிட இயக்கங்களின் தோற்றம், அவற்றின் பிரிவு என்பது ஒரு சமூகப் பார்வையாக மட்டுமன்றி குடும்ப அமைப்பிலும் பொருத்திப் பார்க்க முடியும் என்ற நோக்கிலேயே நூலாசிரியர் கமல் படங்களை அணுகியிருக்கிறார். முக்கியமாக கே.பாலசந்தர் படங்களில் அத்தகு உளவியல் ஒற்றுமை இருந்ததாகவும், அதை அவரிடமேயே நேரில் சொன்னதாகவும் ஹரிஹரன் குறிப்பிருக்கிறார்.

படைப்பாளியாக கமலின் படைப்புகளை இவ்விதம் இவர் ஒப்பு நோக்கும் உரிமை உண்டெனிலும், வலிந்திழுத்துத் திராவிட அரசியலை இந்த நூலில் இணைத்து அதன் வரலாற்றோடு பயணிப்பதும் நூலின் அடிப்படைப் பண்பைத் திசை திருப்புகிறது.

போர்க்குணம் மிக்க இளைஞனான “சத்யா” வைத் தன் கருத்தியலுக்குச் சாதகமாக்குகிறார் நூலாசிரியர்.

அதே சமயம் “ஹேராம்” குறித்த இவரின் மீள் வாசிப்பு, சாகோத்ராம் என்ற பாத்திரம் குறித்த புரிதலை ஆழப்படுத்துகின்றது.

16 வயதினிலே படம் கமலை ஒரு புதிய பரிமாணத்தில், கிராமியத் தளத்தில் கொண்டு சேர்த்த விதத்தை நுட்பமாகப் பதிவு செய்த அதே வேளை "சகலகலாவல்லவன்" படத்தை இன்னொரு திசையில் வைத்தும் சிலாகிக்கிறார்.

மனச் சிதைவு கொண்ட பெண்ணை அரவணைக்கும் பாத்திரமாக மூன்றாம் பிறையிலும்,

அதே மனச்சிதைவுக்குத் தானே ஆளாகும் குணாவுமாக இரு படைப்புகளையும் தனித்தனியாக ஆய்வு செய்தும், ஒப்பிட்டு நோக்குவதும் சிறப்பான சிந்தனை.

வட நாட்டில் கமல்ஹாசனுக்கு முக்கிய திறவுகோலாக இருந்த “ஏக் துஜே கேலியே” படத்தை வாங்க ஆளே இல்லாத சூழலில் எல்.வி.பிரசாத்துக்கும் கமலுக்குமான பந்தம், அந்தப் படம் சிக்கலில் இருந்து மீண்டு வந்து வசூல் சாதனை படைத்ததை எழுதிய விதத்தை ஒரு படமாகவே கொண்டு வரலாம்.

தொடர்ந்து ஹிந்திப் படங்களில் கமலின் இயக்கத்தைப் பதிவு பண்ணவில்லை.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களின் வழியாக கே.விஸ்வநாத் என்ற படைப்பாளியோடு கமலை இணைத்தாலும், விஸ்வநாத்தின் பரிமாணத்தை ஆழப்படுத்தியிருக்கலாம்.

கமல்ஹாசன் என்ற கலைஞனின் தொடர் இயக்கத்தில் இளையராஜாவின் வகிபாகத்தை ஆங்காங்கே தொட்டுச் செல்வதன் மூலம் விலக்க முடியாத பந்தத்தை இருவரும் கொண்டிருப்பதைக் காட்டி நிற்கின்றது.

“நீ கே.பாலசந்தர் ஸ்கூலில் மட்டும் இருக்க முடியாது,

எஸ்.பி.முத்துராமன் ஸ்கூலிலும் இயங்க வேண்டும்” என்று SPM சொன்னதே கமல் பட வரலாறும் கூறுகின்றது.

KAMAL HAASAN — A cinematic journey ஒலி வடிவில் Audible இல் கிடைக்கிறது. ஒலிக் கேட்பு அனுபவத்தில் மிக மோசமான தயாரிப்பு இது.

ஒலி கொடுத்தவருக்கு தமிழ்ச் சூழல் குறித்த பூரண அறிவோ, படங்கள், பெயர்கள் குறித்த ஞானமும் தேடலும் இல்லை.

விருமாண்டி படத்தில் இடம்பெறும் முக்கிய பாத்திரமான “கோட்டைச்சாமி” ஐ “கொட்டைச்சாமி” என்கிறார். “கண்மணி அன்போடு” பாடலை “கண்மணி உன்னோடு” என்று சொல்கிறார்.

அத்தோடு கமலஹாசன் உட்பட ஆங்காங்கே வரும் இயக்குநர்கள் குரல்களை மிமிக்ரி செய்கிறேன் பேர்வழி என்று கடுப்பேத்துகிறார்.

ஒலிப்பெட்டக முயற்சியில் மிக மோசமான செயற்பாடு இது.

உலக சினிமா குறித்த விசாலமான பார்வையை நூலாசிரியரும் கொண்டிருப்பதால் கமல்ஹாசனின் நடிப்பில் இருந்த உலக நடிகர்களின் தாக்கத்தையும், அவர்களுக்கான ஒரு மரியாதையாக கமல் அவற்றைக் கையாண்டிருப்பதையும் நுணுக்கமாகப் பதிவு செய்கிறார்.

மைக்கேல் மதன காமராஜனில் நான்கு பாத்திரங்கள் இருந்தும், காமேஸ்வரன் எடுபட்டதும், ஆளவந்தான் “நந்து” எடுபடாதாதையும் ஓப்பு நோக்குகின்றார்.

நிகழ் உலகத்தில் வாழும் சினிமா ரசிகன் தான் தேடும் கனவுலகம் பொய்த்ததை கமல்ஹாசனின் படைப்பு ரீதியான தோல்விகளுக்கும் ஒரு காரணியாக முன் வைத்து உதாரணம் பறைகிறார்.

எண்பதுகளின் இறுதியில் ஒரு சினிமாப் பத்திரிகையில் (ஜெமினி சினிமா ?) கமல் தன்னுடைய படங்கள் குறித்த அனுபவப் பார்வையைக் கொடுத்திருந்தார்.

இந்த நூலைப் பொறுத்தவரை இதை ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்லலாம். Conversations with Mani Ratnam நூல் கொடுத்த திருப்தியைக் கொடுக்கவில்லை. அதே பாங்கில் பரத்வாஜ் ரங்கனோடு, ஹரிஹரனும் இணைந்து கமல்ஹாசனோடு இன்னொரு முயற்சியில் இறங்க வேண்டும். ஏனெனில் பரத்வாஜ் ரங்கனோடு ஹரிஹரன் கொடுத்த பேட்டியில் இவ்விருவர் அலைவரிசையும் கச்சிதமாக கமல்ஹாசனை அழகாக அடையாளப்படுத்தியது.


இந்தப் பகிர்வை ஒலிவடிவில் கேட்க

https://www.youtube.com/watch?v=5JWVM83-nYI

கானா பிரபா

30.07.2024


Saturday, July 27, 2024

❤️ சின்னக்குயில் சித்ரா ❤️ 🌷45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61🌷 💚 சித்ராவும் 70 இசையமைப்பாளர்களும் 💚


இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 61 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. 

தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது.

பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் தட்டிக் கொடுப்பது மட்டுமன்றி, நுணுக்கமான சங்கதிகளைக் காட்டி அவற்றில் கவனமெடுக்க வேண்டும் என்ற ஒரு குருவின் ஆத்மார்த்த அக்கறை சித்ராவின் தனித்துவம். எஸ்பிபி அருகே அமர்ந்து இவ்விதம் அவர் கொடுக்கும் கண்டிப்பைப் பார்த்து எஸ்பிபியே கலாட்டா பண்ணியதை அறிவீர்கள். கானாபிரபா

காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான்.

சின்னக்குயில் சித்ரா தமிழில் மட்டும் 70 இசையமைப்பாளர்களுக்குப் பாடிய தொகுப்பை அவரின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பாக என் 3 மணி நேர உழைப்பில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்படியொரு சாதனை அவருக்கு முன்னர் பலர் நிகழ்த்தியிருக்கலாம் ஆனால் சித்ரா அதன் நீட்சியாக நிறைவு பெறுகிறார்.


1. இளையராஜா – இந்த மான் உந்தன் சொந்த மான் – கரகாட்டக்காரன்

2. எம்.எஸ்.விஸ்வநாதன் – கஸ்தூரி மான்குட்டியாம் – ராஜ நடை

3. கே.வி.மகாதேவன் - அஷ்ட திக்கிலும் - பதில் சொல்வாள் பத்திரகாளி

4. கங்கை அமரன் – மழலையின் மொழியினில் – பிள்ளைக்காக

5. எஸ்.பி.பாலசுப்ரமணியம் - இதோ இதோ என் பல்லவி – சிகரம்

6. மரகதமணி (கீரவாணி) –– ய ய யா யாதவா உன்னை - தேவராகம் 

7. சந்திரபோஸ் – மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணா நகர் முதல் தெரு

8. தேவா – தங்கமகன் இன்று – பாட்ஷா

9. ஏ.ஆர்.ரஹ்மான் – அஞ்சலி அஞ்சலி – டூயட்

10. வித்யாசாகர் – அன்பே அன்பே – உயிரோடு உயிராக

11. எஸ்.ஏ.ராஜ்குமார் – தொடு தொடு எனவே – துள்ளாத மனமும் துள்ளும்

12. பரத்வாஜ் – உன்னோடு வாழாத வாழ்வு – அமர்க்களம்

13. வி.எஸ்.நரசிம்மன் – அழகிய கல்யாணப் பூமாலைதான் – சின்னமணிக்குயிலே

14. சங்கீதராஜன் – தேதி சொல்லட்டுமா - பூவுக்குள் பூகம்பம் 

15. மனோஜ்பட்னாகர் – கண்களா மின்னலா – என்றென்றும் காதல்

16. சிற்பி – காதல் காதல் காதல் – பூச்சூடவா

17. செளந்தர்யன் – கண்கள் ஒன்றாக – சேரன் பாண்டியன்

18. லஷ்மிகாந்த் பியாரிலால் – அழகிய நிலவிது – மங்கை ஒரு கங்கை

19. ஆர்.டி.பர்மன் – நதியா நதியா – பூமழை பொழியுது

20. சங்கர் – கணேஷ் – ஒரு காதல் தேவதை – இதயத் தாமரை

21. டி.ராஜேந்தர் – சொல்லாமத்தானே – ஒரு தாயின் சபதம்

22. தேவேந்திரன் – கண்ணுக்குள் நூறு நிலவா – வேதம் புதிது

23. அம்சலேகா – நந்தவனப் பூக்கள் – கேப்டன் மகள்

24. கே.பாக்யராஜ் - சலசலவென ஓடும் – பொண்ணு பார்க்கப் போறேன்

25. கார்த்திக் ராஜா – பாண்டியனின் ராஜ்ஜியத்தில் – பாண்டியன்

26. ஆகோஷ் – முந்தானை சேலை – அரிச்சந்திரா

27. பாலபாரதி – நீ பேசும் பூவா – கோல்மால்

28. பரணி – ஏ தன்னானே தாமரைப்பூ – பெரியண்ணா

29. யுவன் ஷங்கர் ராஜா – யாரோ யாருக்குள் – சென்னை 28

30. கண்ணன் - ரோஜா பூ ஒன்று – இரண்டாவது படம்

31. பிரேம்ஜி அமரன் – ஹே கொடி மாங்கனி – பார்ட்டி

32. ஹாரிஸ் ஜெயராஜ் – இதுதானா – சாமி

33. ஜி.வி.பிரகாஷ்குமார் – உயிரிலே – வெள்ளித்திரை

34. ஜேம்ஸ் வசந்தன் – நான் போகிறேன் – நாணயம்

35. மணிமேகலை – உடலும் இந்த உயிரும் – நாளைய தீர்ப்பு

36. தமன் – ஆராரிராரோ கேட்குதம்மா – வாரிசு

37. இமான் – என்னுயிரே – அண்ணாத்த

38. மகேஷ் – உடையோடு பிறக்கவில்லை – நம்மவர்

39. மணிஷர்மா - எல்லா மலையும் - ஏழு மலை

40. பிரேமி ஶ்ரீனி – சங்கமத்தின் சங்கமோ – நாளை மனிதன்

41. ஆதித்யன் ஒயிலா பாடும் பாட்டில் – சீவலப்பேரி பாண்டி

42. யுவராஜ் - நெஞ்சோடு ராகம் – பூவிழி ராஜா

43. எம்.எஸ்.முராரி – பூங்காற்றே கேளாயோ – சோலைக்குயில்

44. சரத் - சந்திக்காத கண்களில் – 180

45. ராஜேஷ் கண்ணா - உயிருள்ள ரோஜாப்பூவே - நான் வளர்த்த பூவே

46. நிவாஸ் கே பிரசன்னா – சேதுபதி - கொஞ்சிப் பேசிட வேணாம்

தொகுப்பு கானாபிரபா

47. விஜய் ஆனந்த் - ஒருவனுக்கு ஒருத்தி - காவலன் அவன் கோவலன்

48. வி.குமார் -   பட்டுப்பூச்சி - மீண்டும் மகாத்மா

49. ரவீந்திரன் - காலம் கனிந்தது - லஷ்மி வந்தாச்சு

50. ஸ்வரராஜ் - பொல்லாத – ஸ்வர்ணமுகி

51. தேவி ஶ்ரீ பிரசாத் - நீ வரும் போது - மழை

52. ஜிப்ரான் – மெளனம் பேசும் போது – அமர காவியம்

53. ஶ்ரீகாந்த் தேவா – எங்கள் செல்லக் கண்ணம்மா – வெற்றிவேல் சக்தி வேல்

54. வி.ஜெயசேகர் – மேற்கில் மழை – சிறைக்கதவுகள்

55. தாணு – அதிகாலை நான் பாடும் – புதுப்பாடகன் 

56. எம்.ரங்கராவ் – குடும்பம் ஒரு கோவில் – குடும்பம் ஒரு கோவில்

57. ஜெர்ரி அமல்தேவ் – புத்தம் புதியது – பூவே இளம் பூவே

58. சம்பத் செல்வன் – பூவே என்ன போராட்டம் – ஓடங்கள்

59. ஷியாம் – என்ன ஆச்சு – விலங்கு

60. ஆர்.பாண்டியராஜன் – குக்கூவென – நெத்தியடி

61. மனோஜ் – கியான் – சின்னக்கண்ணன் – செந்தூரப் பூவே தொகுப்பு கானாபிரபா

62. ராம் லக்‌ஷமன் – காதல் பித்து – காதல் ஒரு கவிதை

63. தாயன்பன் – குக்கூ குக்கூ குயிலின் குக்கூ – அன்று பெய்த மழையில்

64. குணசிங் – கண்ணுக்குள் தீபம் ஏந்தி – சங்கு புஷ்பங்கள்

65. எல்.வைத்யநாதன் – என்னை விட்டுப் பிரிவது – என் காதல் கண்மணி

66. பாபு போஸ் – என்னுயிரே என்னுயிரே – நண்பர்கள்

67. விஜி மேனுவேல் – கண்ணுக்குள் உன்னைத்தான் – இதயவாசல்

68. ராஜேஷ் – இளம் தென்றலே – புதிய காற்று

69. இளைய கங்கை – சந்தனக்கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

70. ராஜ் & கோட்டி – இன்ப ராகங்கள் – ஹலோ பிரதர்

பதிவை எழுதியவர் : கானா பிரபா

தயவு செய்து பெயரை நீக்கி விட்டு ஃபேஸ்புக் வாட்சாப் தளங்களில் பகிராதீர்கள்.


Tuesday, July 9, 2024

அனுராதா ஶ்ரீராம்

 



90’ஸ் மழலைகளில் தொட்டில் குரலாக ஒலித்தவர்களில் அனுராதா ஶ்ரீராமுக்குத் தனியிடம் உண்டு.

 

பல்வேறு விதமான பாடல்களைப் பாடும் திறனும், வாய்ப்பும் முன்னணிப் பாடகர்களுக்குத் தானாகத் தேடி வந்தாலும்,

குறித்த பாடலை மிக இலாகவமாகக் கையாளும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. 

நடிப்புக் கலைஞன் எப்படி ஒப்பனை கடந்து அந்தப் பாத்திரப் படைப்பாகவே மாறும் திறன் போலே, பாடகர்களும் அடிப்படை இசையறிவு தாண்டிய குரல் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

இந்த மாதிரியான நுட்பமும், அதைக் கையாளும் திறனும் வாய்த்தவர்களில் அனுராதா ஶ்ரீராமைத் தவிர்க்கவே முடியாது.

 

இன்று 

     முதல்

          இரவு…..

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

 

https://www.youtube.com/watch?v=9yIFgiXbV7I

 

 உன்னிகிருஷ்ணனோ சாதுவாக உருகி உருகிச் சாதகம் பண்ணிக் கொண்டிருக்க இவரோ,  கட்டைக்குரலில் பாட்டு முழுக்க அதகளம் பண்ணியிருப்பார்.


பாடகிகள் பலர் இம்மாதிரியான வித்தையைக் காட்டியிருந்தாலும் ஒரு காதல் பாடலைக் கையாளும்போது அப்படியே தொடக்கத்தில் இருந்து முடியும் வரை தம் கட்டிக் கொண்டு அடிக் கிணறுக்குள் நின்று பாடும் வித்தையெல்லாம் ஆஹா.

 

அந்த மாதிரியான குரல் வங்கியிலிருந்தா

 

வேண்டும் ஒரு 

சூரியனே

நீ அனுப்பு 

குளிர் கேட்கிறதே

 

நலம் நலமறிய ஆவல்

 

https://www.youtube.com/watch?v=lc2eM5AbmhI

 

இப்படியொரு குளிர்ப் பிரவாகம் பிறக்கிறது என்பதொரு அதிசயம் காட்டுவார்.

அப்படியே இன்னொரு பக்கம் போய்

 

“ஏண்டி சூடாமணி

காதல் வலியைப் 

பார்த்ததுண்டோடி....

 

https://www.youtube.com/watch?v=TpaNs1E-GUQ

 

 

என்று மிரட்டுவார்.

 

இதுதான் ஒரு திரையிசைப் பாடகரின் பல்பரிமாணம். கானாபிரபா

அதில் தேர்ச்சியையும் முதிர்ச்சியையும் தன்னுடைய பாட்டுப் பயணத்தின் குறுகிய காலத்திலேயே காட்டக் கூடிய வல்லமையையும், வாய்ப்புகளையும் பெற்றவர் அனுராதா ஶ்ரீராம்.

 

 

முறையான சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ச்சியோடு திரையிசையின் கதவு திறந்த அனுராதா ஶ்ரீராமுக்கு வாய்ப்பு என்ற வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் “பம்பாய்” படத்தில் கூட்டுப்பாடகியாக,

(அதில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட பாடல் மலரோடு மலரிங்கு https://www.youtube.com/watch?v=i32sVy9yEn0) அறிமுகமானவர்.

 

ஆனால் அதற்கு முன்பே  Track பாடகியாக இருந்தார் என்ற தகவலைச் சமீபத்தில் தான் விஜய் சூப்பர் சிங்கரில் பகிர்ந்தவர் அவ்விதம் பி.சுசீலாவுக்காகப் பாடிய பாடல்  இசைஞானி இளையராஜாவின் “ அரும்பாகி மொட்டாகி” என்று குறிப்பிட்டிருந்தார்.


அனுராதா ஶ்ரீராம் தன் ஆய்வுப் பட்டத்துக்காக இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எடுத்திருந்தார். இந்தப் படைப்பு நூலுருவில் வந்திருந்தால் நமகெல்லாம் வரப்பிரசாதமாக இருக்கும்.

 

“சின்ன வெண்ணிலா சாய்ந்ததே

தோளில்....”

https://www.youtube.com/watch?v=No-snJqXc9c

 

என்று காதல் ரோஜாவே படத்துக்காக இசைஞானி தன் பாடகர் குழுவோடு உள்வாங்கிக் கொண்டார்.


 

“அன்பென்ற மழையிலே” பாடலை இப்போதெல்லாம் கிறிஸ்துமஸ் காலத்தில் ஒலிபரப்பாத வானொலிகளே இல்லை எனலாம்.

இவரின் தனித்த குரலுக்கு அங்கீகாரமாக அமைந்து விட்டது அந்தப் பாடல்.

 

தொண்ணூறுகளில் தேனிசைத் தென்றல் தேவா ஒரு பக்கம் சொல்லி மாளாத பாடல்களை அள்ளி வழங்கிய போது, அனுராதா ஶ்ரீராமுக்குக் கொடுத்தவை மாமூல் தாண்டி, ரகம் ரகமாக அமைந்த ராகங்கள். அதையும் சமீபத்தில் தேவா முன்னிலையில் நன்றி பகிர்ந்தார்.

 

பாடல் வரிகளில் விரசம் இருந்தாலும், அதைத்தாண்டி அந்தப் பாடலை மோகிக்க, குறித்த குரல்களின் நளினம் ஒன்றே போதும் என்று அடிக்கடி நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று 

“ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி”

https://www.youtube.com/watch?v=UU-PJSs4X84

 

கேகேயோடு இணைந்த அந்தத் துள்ளிசைப் பாடலில் கூட ஒரு கனிவான குரலோடு பயணித்திருப்பார்.

 

 

“ஹே மச்சானே மச்சானே....

 ஐயாரெட்டு நாட்டுக்கட்டை” (மஜா)

 

https://www.youtube.com/watch?v=g4ah9ExU53Q

 

என்று சங்கர் மகாதேவன் வகையறா

 

இன்னொரு பக்கம்

 

“ஏன் மம்முதா அம்புக்கு ஏன்

இன்னும் தாமசம் ஆஆ....

 

https://www.youtube.com/watch?v=6xvTQL7ri-k

 

என்று பக்கா தெம்மாங்கும்,

 

நிதம் நிதம் தான் 

காதல் ராகம்

நிகழ்த்திட தான் 

கேட்கும் தேகம்

என் மனதைக் கொள்ளையடித்தவனே

https://www.youtube.com/watch?v=yNdcpuwfJLw

 

 

என்று மேற்கத்தேயப் பிரவாகத்திலும் ஹரிஹரன் போன்ற பாடகர்கள் தான் அனுராதா ஶ்ரீராம் என்ற பாட்டுக் குதிரைக்கு சமமான ஜோடிக் குதிரையாகத் துள்ளிக் கொண்டிருக்க, மிகவும் அமைதியாக உன்னிகிருஷ்ணனோடு இவர் கொடுத்த பட்டியல் எல்லாமே தேன் தேன் தேன் தான்.கானாபிரபா

இந்த இருவருக்கும் 90ஸ் குழவிகள் நன்றிக்கடன்பட்டவர்கள்.

 

இப்போது கூட இன்ஸ்டா ரீல் எல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும்

 

அன்று காதல் பண்ணியது, 

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல் 

இந்த நெஞ்சில் நிற்கிறது

 

மீனம்மா…..

 

https://www.youtube.com/watch?v=4k_YgQIDE3Q

 

தொடங்கி,

 

சேதுமாதவா உன்னை சேர்த்து அணைக்கவா (சந்தோஷம்)

https://www.youtube.com/watch?v=6j9DJY5owAY

ஒரு நாளும் உனை மறவேனே (வான்மதி)


https://youtu.be/vwWF5OiOQ58?si=Zk4gHw3_eUAGFeFB


 

ரோஜாபூந்தோட்டம் (கண்ணுக்குள் நிலவு)

https://www.youtube.com/watch?v=N2gjtl8TXPY

 

நந்தவனப்பூவே தூது செல்ல வா (குருபார்வை)

https://www.youtube.com/watch?v=EiBeddEf0c4

 

முன்னர் குறிப்பிட்ட “நிலவைக் கொண்டு வா” (வாலி)

என்ன இது என்ன இது (ரோஜாக்கூட்டம்)

https://www.youtube.com/watch?v=UVOysCFeES8

 

“பூ விரிஞ்சாச்சு” (முகவரி)

 

https://www.youtube.com/watch?v=8xtiVxKjCMg

 

 

ஓ வெண்ணிலா (குஷி)

 

https://www.youtube.com/watch?v=cjBQ3QGmRS4

 

முதன்முதலா உன்னைப் பார்த்தேன் (குங்குமப் பொட்டுக் கவுண்டர்)

https://www.youtube.com/watch?v=rLKkzUu3qZI

 

என்று பட்டியல் நீளும்.

 

“என்ன நெனச்சே” (சொக்கத் தங்கம்)

https://www.youtube.com/watch?v=aZj_zDTbyac

 

 

 

அந்த ராசியிலோ என்னமோ “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராக அறிமுகமான, அனுராதா ஶ்ரீராமின் சகோதரர் முருகன் அதே படத்தில் இந்த ஜோடியை வைத்து

“பொய் சொல்லலாம்” https://www.youtube.com/watch?v=m-ycM0kxKtU

 

கொடுத்தார்.

 

அப்படியே பரசுராம் ராதாவாக அனுராதா ஶ்ரீராம் தம்பதியினர் ஃபைவ் ஸ்டாருக்கு இசையமைத்த போது “ரயிலே ரயிலே” என்று ராசியான உன்னிகிருஷ்ணனும் பாடகராகப் பங்கு போட்டார்.

 

 

கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அருண்மொழி என்று கூட்டுச் சேர்ந்த பாடகர்களோடு ஹிட்டுச் சேர்த்தார்.

 

செளந்தர்யன் இசையில் “கோபுர தீபம்” பாடல்கள் ஹிட் அடித்த போது மறக்கமுடியாத வானொலிச் சொத்தானது எஸ்பிபியோடு இவர் பாடிய 

“உள்ளமே உனக்குத்தான்”

 

https://www.youtube.com/watch?v=88YaaTdxONI

 

“ஓ போடு” போட்டு மிடுக்கியாக வலம் வந்தவர்,

 இன்று ஈராயிர யுகத்தின் காற்பகுதி விளிம்பிலும் “அப்படிப் போடு போடு” (கில்லி) பாடலில் வித விதமாகக் குரல் மாற்றி வித்தை செய்தவரையும், “காட்டுச் சிறுக்கி” (ராவணன்) யாகச் சிறைப் பிடித்தவரையும் மறவாது கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில் எல்லா இசையமைப்பாளர்களிடமும் மிளிர்ந்த மிகச் சில பாடகிகளில் இவரும் ஒருவர்.

 

தமிழ்த் திரையிசையில் ஒரு காலகட்டத்துப் பாடகர்கள் பல நூறு பாடல்கள் பாடிய வரலாற்றின் கடைசி விழுதுகளில் ஒன்றானவர் அனுராதா ஶ்ரீராம்.

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பன்முகப்பாடகி அனுராதா ஶ்ரீராம் 💐


 கானா பிரபா

 09.07.2024

 

 என் பெயரை நீக்கி பேஸ்புக் மற்றும் வாட்சாப்பில் பகிராதீர்கள் 🙏