Pages

Thursday, January 30, 2014

பாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

இந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும் அந்த அளவுக்கு போதையேற்றும் பாட்டு எனக்கு இது. இந்தப் பாடலை முணுமுணுக்கிறேன் என்றால் அந்த நேரம் ஏதோவொரு நல்ல செய்தியோடு மனம் குதூகலிக்கின்றது என்றும் அர்த்தம்.

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் என்ற இந்தப் பாடல் சின்னப் பசங்க நாங்க என்ற திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி மதுரக் குரல்களில் அமைந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் இலேசான முறுவலுடன் பாடல் முழுவதும் தன் சங்கதிகளை வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் கூட்டணி என்றும் சளைக்காது என்று நிரூபிப்பது போல ஒவ்வொரு வரிகளையும் வெகு இயல்பாகக் கடத்தியிருப்பார்கள்.

சிவாஜி புரடெக்‌ஷன் என்ற மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படமான "தாலாட்டு கேக்குதம்மா" என்ற படத்தின் வழியாக அறிமுகமானவர் இயக்குனர் ராஜ்கபூர். தொடர்ந்து ராஜ்கபூருக்கு இன்னொரு குறிப்பிடத்தக்க வெற்றிப்படமாக அமைந்தது சின்னப் பசங்க நாங்க. முரளி, சாரதா ப்ரீதா இவர்களுடன் துடுக்குத்தனமான கிராமத்துப் பெண் பாத்திரம் நடிகை ரேவதிக்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பாத்திரங்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாவலர் வரதராஜன் மன்றம் என்ற பெயரில் முரளி குழுவினர் சங்கம் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.

படம் வெளியான நேரம் எங்கள் பிரதேசம் மின்சாரமில்லாத ஆண்டுகளில் இருந்த வேளை அது. திருநெல்வேலிச் சந்தியில் இருந்த ஒரு வீடியோ கடையில் அடையாள அட்டையை அடகு வைத்து வீடியோ காசெட்டை வாடகைக்கு எடுத்து வந்து மண்ணெண்ணை ஜெனரேற்றர் வழியாக மின்சாரம் பிறப்பித்துப் பார்த்த படம் இது.

இந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்களைப் பங்கு போட்டு கவிஞர் வாலியும், கங்கை அமரனும் எழுதியிருந்தார்கள். கங்கை அமரன் எழுதிய "இங்கே மானமுள்ள பொண்ணு என்று மதுரையிலே கேட்டாக" மறக்கமுடியுமா ஜானகியின் குறும்புக் குரல் பாட்டை. இதே பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோகப்பாடலாகக் கொடுத்திருப்பார்.

"வெல்வெட்டு கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டுப் போலே நிற்கும் கண்ணே உன் காலம் எல்லாம்"
என்று வாலிப வரிகளில் வாலி பூந்து விளையாடிய பாட்டு "மயிலாடும் தோப்பில்"
ராஜாவின் மெட்டோடு அணி சேர்ந்த வாத்தியக் கலவையில் இரண்டாவது சரணத்துக்குப் போகும் முன் வரும் புல்லாங்குழலின் தனியாவர்த்தனம் கவிதை.

"யோசித்து ஒவ்வொன்றாகக் காதல் பாடம்
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்" இந்த அடிகளிலே தபேலா இசை வழுக்கிக் கொண்டே அடுத்த அடிகளுக்கு மேலெழும்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த ராஜாவின் பாடல்களைக் கேட்கும் போது பெரும்பாலும் வாத்தியப் பயன்பாட்டில் ஒத்திசைவைக் காணலாம். இந்தப் பாடல் போன்ற சமகாலத்தில் வந்த காதல் பாடல்களிலும் இதே வாத்தியங்களை உற்சாகமாக விளையாட வைத்து சந்தோஷப்படுத்தியிருப்பார் ராஜா.

மயிலாடும் தோப்பில் எப்போது கேட்டாலும் இனிக்கும் எனக்கு.

Saturday, January 25, 2014

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

இன்றைய காலைப்பொழுதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கு இடையில் எனக்கு கிடைத்த நேரம் வழக்கம் போல காரில் இசையை இயக்கிவிட்டுக் கேட்டுக் கொண்டே போகிறேன்.
"புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு" சாதாரணமாக தான் ஆரம்பிக்கிறது, ஆனால் பல்லவி முடிந்து சரணத்துக்குப் பாயும் நேரம் கண்களில் முட்டி திடீர்க் குளம் ஒன்று, ஸ்டியரிங் பிடித்திருக்கும் இரண்டு கைகளிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. இந்த மாதிரி அனுபவமெல்லாம் எனக்குப் புதிதல்ல, அதிலும் குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் குறிப்பாக ஸ்வர்ணலதாவின் "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" எல்லாம் இந்தமாதிரி என்னைக் கோழையாக்கி அழ வைக்கவே படைக்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய பாடல் இம்மாதிரியானதொரு சாகசத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டதுதான் எனக்கே புரிபடாத ஆச்சரியம்.

வெளியே வாகனங்களின் போட்டா போட்டியோடு அந்தப் பெருஞ்சாலையில் இறுக மூடிய கார்க்கண்ணாடிக்குள் என் இசை உலகத்தில் கார் தன் வழி பயணிக்க, நானோ இரட்டைச் சவாரி.என்னைக் கயிற்றால் இறுகக் கட்டிவிட்டு கார் சீட்டில் பயணிக்க வைத்தது போன்றதொரு பிரமையை உண்டு பண்ணுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து சமீப ஆண்டுகளில் கேட்டதும் உடனேயே என் வசமிழந்த புதிய பாடல்களில்  மொழி திரைப்படத்தில் வந்த "காற்றின் மொழி இசையா" பாடல் தான் இதே மாதிரியான அனுபவத்தை விளைவித்திருந்தது. அதை அப்போது நான் பதிவாக்கியும் இருந்தேன்.

காற்றின் மொழி.....! http://www.madathuvaasal.com/2007/02/blog-post_13.html


 "புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன் என்னை விடு" இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருப்பவரின் திடீர் சுகப்பிரசவம் ஆகியிருக்காது. இசையமைப்பாளர்
டி.இமானின் மனதின் மூலையில் அவருக்குத் தெரியாமலேயே எங்கே ஒளிந்து கொண்டிருந்திருக்கும். செலுலாயிட் மூலம் "காற்றே காற்றே" என்று அறிமுகமான வைக்கம் விஜயலட்சுமியின் வருகைக்காகக் காலம் காத்துக் கொண்டிருக்கும். இவர்களை இணைத்து வைத்த பாலமாய் அமைந்த மதன் கார்க்கியின் வரிகள் கூட இந்த அற்புதத்துக்காகப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கும்.
அடிக்கடி சொல்லுவேன் சில பாடல்கள் இன்னார்க்கென்றே எழுதி வைத்தது என்று அப்படியானதொன்றுதான் இது. அந்த இசையைக் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு அன்னியோன்யமாகப் பாடல் வரிகளைச் சீண்டாமல் அரவணைத்துப் பயணிக்கிறது. தமிழ்ப் பாடல்களை வேற்று மொழிப்பாடகர் பாடக்கூடாது என்று கொடி பிடிக்கும் வீரர்களையும் தலை குனிய வைக்கிறது விஜயலட்சுமியின் மொழியாடல். இசையமைப்பு என்பது ஒரு உயர்ந்த தவத்தின் மிகச்சிறந்த வரமாக அமையவேண்டும்.

ரசிகனின் மனதுக்கு நெருக்கமாய்ப் பாடலைக் கொண்டு சேர்ப்பதில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மூவரின் பங்கும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத எனக்கெல்லாம் இம்மாதிரிப் பாடல்கள் தான் ஆதரவுக் குரல் கொடுக்கின்றன.

டி.இமானைப் பற்றித் தனியே நிறையப் பேசவேண்டும், ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்திருக்கும் கச்சிதமான வாய்ப்புகள் இன்னும் பெருக வேண்டும். இதே மாதிரிப் பாடல்களைக் கேட்கத் தான் நாம் இருக்கிறோம் என்று ஆதரவுக் குரலைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

ஊரெல்லாம் அலைந்து வீடு வந்து சற்று முன்னர் தான் இந்தப் பாடல் உருவாக்கத்தின் காணொளியைப் பார்க்கிறேன். பாடல் ஒலிப்பதிவு முடித்த தறுவாயில் டி.இமானும் தன் கண்ணாடியை மெதுவாகத் தூக்கிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். மீள வராது போன அவர் தாயைக் கூட இந்தப் பாடல் நினைவுபடுத்தியிருக்கக் கூடும். பாடலை அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு காரணங்களைத்தேடி செல்கிறது அல்லது காரணங்களை நினைப்பூட்டி விடுகிறது.

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!
இந்த நிமிடம் வரை தாலாட்டுத் தொடர்கிறது. இந்தப் பாடல் இன்னும் நெடு நாள் என்னிடம் தங்கிவிடும் என்று மனசு சொல்கிறது.





முழுப்பாடலையும் கேட்க



புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கிப் பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூர நான் வாழப்போகிறேன்

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரமாக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நானும் காணும் ஆசையில்


புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

யாரும் தீண்டிடா இடங்களில்
மனதைத் தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை
என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

Thursday, January 16, 2014

பாடல் தந்த சுகம்: ராத்திரியில் பாடும் பாட்டு

போகியோடு தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று காணும் பொங்கல் வரை கண்டாச்சு. கூடவே ராஜாவின் பாடல்களும் இந்தத் தினங்களோடு கூடவே வருகின்றது. அந்த வகையில் இன்று "ராத்திரியில் பாடும் பாட்டு" பாடலைப் பகிர்கின்றேன்.

அருண்மொழி, மின்மினி ஜோடிக்குரல்கள் மென்மையாக ஒரே அலைவரிசையில் இயங்கும் சிறப்பம்சம் பொருந்தியவை என்பதற்கு "தென்றல் வரும் முன்னே முன்னே" (தர்மசீலன்) படத்தின் பாடலோடு இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். மின்மினியைப் பொறுத்தவரை இந்தப் படத்திற்காக இசைஞானி கொடுத்த பலாச்சுளையான ஏழு பாடல்களில் மூன்றைக் கைப்பற்றியிருக்கிறார். உண்மையில் ஒன்பது பாடல்கள் பதிவாகி ஏழுதான் பயன்படுத்தப்பட்டது மீதியோடு இசைத்தட்டில் காணலாம். "அம்மன் கோயில்" பாடலை சுவர்ணலதாவோடும் "அடி பூங்குயிலே பூங்குயிலே" பாடலை மனோவுடனும் பாடிய மின்மினி "ராத்திரியில் பாடும் பாட்டு" பாடலை அருண்மொழி, மலேசியா வாசுதேவனோடு இணைந்து பாடியிருக்கிறார். தொண்ணூறுகளிலே மினி ஜோசப் ஐ மின்மினியாக்கி மீரா படத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தியிருந்தார் இசைஞானி. சமீபத்தில் ஒரு ஆய்வாளர் (!) ரஹ்மான் கண்டுபிடித்த குரல்களில் மின்மினியையும் வாரி வழங்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அடிக்கடி வரலாற்றை நினைவுபடுத்த வேண்டும் போல. 

அரண்மனைக்கிளி படத்தின் பின்னணி இசையை முன்னர் றேடியோஸ்பதியில் பகிர்ந்திருந்தேன். அரண்மனைக்கிளி படத்துக்காக முன்பே பாடல்களை வாங்கிக் கொண்டுதான் முழுக்கதையையும் மெருகேற்றியதாக படம் தயாரிப்பில் இருந்த வேளை ஒரு செய்தியும் வந்திருந்தது.

அந்த நிலவொளியில் குளித்து தம் நேசத்தைப் பகிர்ந்து கொள்ளும் காதலர்களாக அருண்மொழி, மின்மினி குரல்கள் இணைய, இன்னோர்புறம் தன் மண வாழ்வின் கசப்பைப் பகிரும் சோக ராகத்தை மீட்டுகிறார் மலேசியா வாசுதேவன். இவ்விதம் ஒரே பாடலில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து கட்டிக் கொடுத்த பாடல்களின் பட்டியலை வைத்து ஒரு வானொலி நிகழ்ச்சியும் செய்திருந்தேன். உதாரணத்துக்கு ஆனஸ்ட் ராஜ் படத்தில் வரும் "வானில் விடிவெள்ளி மின்னிடும் தங்கிடும் நேரம்" பாட்டில் நாயகிக்குக் குரல் கொடுத்த ஜானகிக்கு சந்தோஷம், அதே பாட்டில் மனோ தன் நண்பனின் துரோகத்தை எண்ணி மறுகும் சோக வடிவமும் பொருந்தியிருக்கும். இன்னோர் உதாரணம் அரங்கேற்ற வேளை படத்தில் "தாயறியாத தாமரையே" இதில் மனோவின் குரல் கடத்தப்பட்ட சிறுமியின் மன ஓட்டத்தின் அசரீரியாகவும், சமகாலத்தில் கோரஸ் குரல்களோடு எஸ்.பி.சைலஜாவின் களியாட்டக் குரலும் ஒலிக்கும். இப்படியாக இருவேறு மன நிலையை ஒரே பாடலில் பாடகர்களது குரல்கள், வாத்திய இசை இவற்றையெல்லாம் ஒருமிக்கப் பொருத்தி அந்த உணர்வு வெளிப்பாடுகளைக் கெடுக்காமல் கேட்கும்/பார்க்கும் ரசிகனுக்குக் கொடுக்கும் சவால் நிறைந்த பணியைக் கடப்பது எளிதன்று. அந்த விஷயத்தில் ராஜாவின் இன்னொரு வெற்றியாக இவ்வாறான உத்திகளை உதாரணப்படுத்தலாம்.

ராஜ்கிரண் நடித்த படங்களில் அவருக்கான வாயசைப்புப் பாடல்களோ பில்ட் அப் பாடல்களோ இல்லாது கவனித்துக் கொள்வார். அரண்மனைக் கிளியில் வரும் இன்னொரு ஜோடிப்பாடல் "அடி பூங்குயிலே" பாடலைக் கூட துணைப் பாத்திரங்கள் மூலம் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். ராத்திரியில் பாடும் பாட்டு பாடலில் ராஜ்கிரணுக்கான குரலாக மலேசியா வாசுதேவன் குரல் ஒலித்தாலும் அது காட்சிக்கு அவதூறு விளைவிக்கால் அடக்கமாக ஆள்கிறது. 

ஜோடிக்குரல்களிலிருந்து மலேசியா வாசுதேவனின் தனிக்குரலுக்கு நகரும்போது இணைப்பாக வரும் அந்தப் புல்லாங்குழல் ஒலியை நிறுத்தப் புள்ளியிலிருந்து கேட்கும் போது புல்லரிக்கும். 


Tuesday, January 14, 2014

பாடல் தந்த சுகம் : ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு

பாடல் தந்த சுகம் : ஆடிப்பட்டம்
தேடிச் செந்நெல் வெத போட்டு கோடிச் செல்வம் ஆடச்சம்பா பயிராச்சு

தைப்பொங்கல் என்றாலே உலகத் தமிழ் வானொலிகள் வருஷம் 16 படத்தில் வரும் "பூப்பூக்கும் மாசம் தை மாசம்" பாட்டைத் தேயத் தேயப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். அந்தப்பாடலில் வரும் முதல் மூன்று அடிகளைத் தவிர, காட்சி அமைப்பில் கூட ஒருவித ஒற்றுமையையும் தைப்பொங்கலோடு பொருத்திப் பார்க்கமுடியாத பாடல் அது. 

இதை விட அபத்தம் தீபாவளி தோறும் ஒலிபரப்பும் " நான் சிரித்தால் தீபாவளி" அந்தப் பாடலில் தீபாவளி என்ற சொல்லைத் தவிர, மீதியெல்லாம் விரகதாபத்தைப் பழைய பாடல் மெட்டில் கண்ணியமாகக் கொண்டு வந்த பாட்டு. காட்சியமைப்பே கமல்ஹாசன் விலைமாதர் வீட்டிற்கு வரும் போது தோன்றும் பாட்டு. ஆனால் தீபாவளிக்கு "பட்டாசு சுட்டுச் சுட்டுப் போடட்டுமா" பாடல் எவ்வளவு கச்சிதமாக இருக்குமோ (அதிலும் வரும் கதையோட்டம் சார்ந்த வரிகளைக் கழித்து) அதே போல மகா நதி படத்தில் வரும் "தைப்பொங்கலும் வந்தது" பாடல் ஏக பொருத்தமாகத் தைப்பொங்கலுக்கு அமையும் பாடல். 

"மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய் நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய் போகியிது போகியிது நந்தலாலா ஹோய் பொங்க வைப்போம் நாளைக்குத்தான் நந்தலாலா ஓ ஹோய்" எவ்வளவு அற்புதமாகக் கொண்டாடக் கூடிய போகிப் பண்டிகைக்கான தளபதி படப்பாடல்.

இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் பண்டிகைகளும் என்று கட்டுரை போடுமளவுக்கு மதம் கடந்து ஒவ்வொரு முக்கிய பண்டிகைக்கும் ஒரு பாட்டைக் காட்டமுடியும். அதிலும் குறிப்பாக தை பிறந்து விட்டால், தைப்பொங்கல் தினத்தில் முழுமையாக ராமராஜன் நடித்த படங்கள் உட்பட கிராமத்தின் மகிமை போற்றும் பாடல்களை அள்ளலாம். குறிப்பாக புதுப்பாட்டு படத்தில் வரும் இந்த பூமியே எங்க சாமியம்மா பாடலைக் கேட்கும் போது வேட்டி கட்டிக் கிராமத்து மண்ணைக் கால்கள் ஆசை தீர அளந்த திருப்தி வரும்.

இவையெல்லாம் தாண்டி என் மனசுக்கு நெருக்கமாகப் பொங்கல் நாளில் வானொலி நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு அமையும் போது நான் பகிரும் பாடல் "ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு" என்ற பாடல். இந்தப் பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் மனோ, சித்ரா பாடியது. இந்தப் பாடலை எந்தக் காட்சிக்காக எடுத்திருப்பார்கள் என்று நானும் பல தடவை மண்டையைப் போட்டு உடைத்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படியொரு களமே இருப்பதாகத் தெரியவில்லை. துரதிஷ்டவசமாக இந்தப் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறாமையால் இந்தப் பாடலுக்கான பரவலான அறிமுகம் கிடைக்காமல் போயிற்று. அந்த ஆதங்கமும் கூட என்னுள் இருப்பதால் நான் செய்யும் வானொலி நிகழ்ச்சியிலாவது பிரபலப்படுத்த வேண்டும் என்று பகிருவேன். 



// ஃபேஸ்புக் வழியாக நண்பர் Saravana Kumar பகிர்ந்த அரிய தகவல்  இதோ:  இந்த பாடல் அபூர்வ சகோதரர்களுக்கு பிறகு கமல் மற்றும் கௌதமி நடிப்பில் ''தென் மதுரை வைகைநதி'' என்கிற கிராமத்து கதைக்காக தயார் செய்த பாடல். அந்த படம் பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிக்க வேண்டிய படம். ஏதோ சில காரணங்களால் படம் எடுக்க படாமல் போய் விட்டது. அதில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் இந்த பாடல். அதற்க்கு பிறகு தான் மைக்கேல் மதன காமராஜன் படம் எடுத்தார்கள். அதில் இந்த பாடல் சேர்ந்து விட்டது. அந்த கிராமத்து படத்தின் நாளிதழ் விளம்பரம் இன்னும் என் கண்ணில் காட்சியாக இருக்கிறது.// இப்படிச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடலின் வரிகளை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ஒரு கிராமத்து இளம் விவசாயியும் அவன் ஜோடிப் பொண்ணும் ஒவ்வொரு வரிகளிலும் கைக்கெட்டிய வேளாண்மையைப் போற்றிப் பாடும் துதியாக இருக்கும். அடுத்த சரணத்தில் கிராமத்துக் காதலர்களின் ஆபாசம் கலக்காத காதல் மொழி வந்து கலக்கும். உறுத்தலில்லாத மெல்லிசையில் இடையிடையே புல்லாங்குழல் கொடுக்கும் சங்கதி, கிளை தாவி பறக்கும் குருவியோசையோடு பொருந்திப் போகும்.

மண்ணை நேசிக்கும் உழவருக்குப்
பொன்னாய் விளையும் பயிர் போலே, நல்லிசையைத் தேடும் ரசிகர்க்குத் தேனாய்க் கிட்டியது இப்பாடல்



Tuesday, January 7, 2014

"அக்னி நட்சத்திரம்" பின்னணி இசைத்தொகுப்பு

அக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்து விட்டன ஆனால் இன்றும் ஏதாவது பண்பலை வரிசை வானொலியில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் போது நவீனத்துவம் கெடாத இசையை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இசைஞானி இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்போடு வந்த படம், நாயகன் அளவுக்கு உச்சத்தை எட்டவிட்டாலும் கூட அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தின் வித்தியாசமான உருவாக்கத்துக்காகப் பேசப்பட்டது. அப்போது நான் இடைநிலைப்பள்ளி மாணவன், எங்களூரில் அரிதாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக, இந்தத் திரைப்படம் மனோகரா தியேட்டரில் திரையிட்டபோது, சக நண்பர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து மதில் பாய்ந்து களவாகப் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து, அப்போது அறிமுக நாயகியாக வந்த நிரோஷா குறித்துப் பகிர்ந்த சிலாகிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல :-)

அக்னி நட்சத்திரம், பிரபு கார்த்திக் கூட்டணியில் வந்த படம், நாயகன் பிரபுவின் பெயர் கெளதம் பின்னாளில் கார்த்திக் மகனுக்கே பெயராக அமைந்ததும், இந்தப் படத்தின் வாகனச் சாரதியாக இயங்கிய லட்சுமிபதி என்ற பெயரே வி.கே.ராமசாமியின் சாரதியாக நடித்த ஜனகராஜ் இற்கும் அமைந்தது எதேச்சையான விடையமோ தெரியவில்லை. பிரபு, கார்த்திக் கூட்டணி பின்னாளில் ஆர்.வி.உதயகுமாரின் முதல் படம் உரிமை கீதம், இரும்புப்பூக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ராவணன் வரை இருந்தாலும், இந்தப் படம் அளவுக்கு எந்தப் படமும் பேர் வாங்கவில்லை. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணியும் வருஷம் 16 படம் போல இந்தப் படத்திலும் சேர்ந்திருந்தார்கள் "பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்ற பிரபல வசனம் இந்தப் படம் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. ஜனகராஜ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இதே போல் இன்னொன்று படிக்காதவன் படத்தில் வரும் "என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா". நடிகர் விஜய்குமாருக்கு மீள் வரவாக அமைந்தது இந்தப் படம், அப்போது தந்தை பாத்திரம் ஏற்று நடிக்கக் கொஞ்சம் தயங்கினார் என்றும் சொல்லப்பட்டது, ஆனால் இந்தப் படம் தான் சமீப ஆண்டுகள் வரை விஜய்குமாரைத் தொடர்ந்து திரையுலகில் அடுத்த சுற்றில் நிலைத்து நிற்க வழிகோலியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.

அமலா என்ற அழகுப்பதுமை, ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று சொல்லிக்கொண்டே அஞ்சலி என்று தன் பேரைச் சொல்லும் குறும்புக்காரி, அமலாவுக்கும் இந்தப் படம் மிகவும் பேர் சொன்ன படமாக அமைந்து விட்டது. நிரோஷா வந்த காட்சிகள் சொற்பம், அவரின் வசன உச்சரிப்பும் கொழ கொழ என்றாலும் அந்த சில்க் ரக கவர்ச்சிமுகம் மறக்க முடியுமா?
நாயகன் படத்துக்கு முன்பே அக்னி நட்சத்திரம் எடுக்கப்படவிருந்ததாகவும் பி.சி.ஶ்ரீராம் தான் மணிரத்னத்தைத் தாமதிக்குமாறு சொன்னதாகவும் பி.சி.ஶ்ரீராமே அண்மையில் சொல்லியிருந்தார்.இந்தப் படத்தைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் முந்திய படங்கள் அளவுக்கு இல்லாத ஒருவரிக்கதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இசைஞானி இளையராஜா கொடுத்த ஆறுபாடல்களும் தான் மிக முக்கிய பலம். குறிப்பாக இந்த ஆறுபாடல்களில் "ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா" பாடல் அந்தக் காலத்தில் பெற்ற உச்சமே தனி. அதே பாணியில் ஒரு பாடலை மெட்டமைத்துத் தருமாறு என்னப் பெத்த ராசா படத்தில் காட்சி அமைக்கும் அளவுக்குப் பிரபலம். பின்னர் ராஜாதி ராஜா படத்தில் "மாமா உன் பொண்ணைக் கொடு" பாடலில் வாத்திய இசையாகவும் இப்பாடல் ஒலிக்கும்.
சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட "வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா" என்று நியாய தராசு படத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். அதை முன்னர் இங்கே பகிர்ந்திருக்கிறேன். http://www.radiospathy.com/2007/11/blog-post.html
இளையராஜாவின் அந்த ஒரு பாடல் தவிர மீதிப்பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை எழுதும் பணியை வாலி கையாண்டார். என்னுடைய முதல் பத்து விருப்பத்தேர்வுகளில் "வா வா அன்பே அன்பே" என்றும் இருக்கும். எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை என்று மனசு கட்டளை இடும் வரை அலுக்காமல் கேட்பேன். நின்னுக்கோரி வர்ணம் பாடல் அந்தக் காலத்து கோயில் திருவிழா மெல்லிசை மேடைகளில் உள்ளூர்ப்பாடகர்கள் பாடியபோதே பிரமித்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஏனோ தெரியவில்லை இதே படத்தைத் தெலுங்கில் கர்சனா என்று மொழிமாற்றும் போது எஸ்.ஜானகிக்குப் பதில் வாணிஜெயராம் ஐப் பாடவைத்தது சுத்தமாக எடுபடவில்லை. கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜா குரல்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமே பயன்பட்டார், சித்ரா தன்னுடைய அதே பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இதோ தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தின் 34 இசைக்குளிகைகைக் கேட்டு இன்புறுங்கள்.

முதலில், கார்த்திக் - நிரோஷா தோன்றும் காதல்காட்சிகள் மூன்றை ஒன்றாக இணைத்துத் தரும் கோப்பு



888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

பிரபு, கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய்குமாரை வேறு இடத்துக்கு மாற்றும் நீண்ட காட்சியில் வரும் நீண்ட பின்னணி இசை

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா தன் மகன் கார்த்திக்கை தன்னுடைய தந்தையின் மூத்த சம்சாரம் வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தையைத் தேடி அவரின் மூத்த சம்சாரம் வீட்டுக்கு வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தை விஜ்யகுமாருடன் உரையாடல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 குடிபோதையில் இருக்கும் தந்தையை கார்த்திக் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சொல்லும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 அமலா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு கார்த்திக் சந்திப்பு (பிரபலமாகப் பேசப்பட்ட இடிக்கும் ஓசை) 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாரைக் கண்டு அவர் மகள் தாரா போக முனையும் போது, முத்த மனைவி சுமித்ரா காணும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, அமலா காதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா - கார்த்திக் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு போலீஸ் பணியில் பதவியேற்றதை அறியும் கார்த்திக் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு,கார்த்திக் மோதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், பிரபு வீடு வந்து தாக்கும் போது பிரபுவின் தாய் சுமித்ரா காயமடையும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக் ஐக் கைது செய்யும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, கார்த்திக் இன் தாய் ஜெயச்சித்ராவுடன் போலீஸ் நிலையம் வரும் சுமித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 தன் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்குத் தந்தை விஜய்குமார் வரவில்லை என்ற கோபத்தில் கார்த்திக், கவலையில் ஜெயச்சித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜ்யகுமார் தாய் இறக்கும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக்கைக் கண்டு கோபமடைதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் இன் தங்கை தாராவை ரயில் நிலையத்தில் மிரட்டும் வில்லன் கோஷ்டி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் ஐச் சந்தித்து நிரோஷா தன் காதலைப் பகிரும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், வில்லன் வீடு தேடிப்போகும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 மருத்துவமனையில் தந்தை விஜய்குமாரைத் தேடிப்போகும் தாரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் மருத்துவமனை வந்து விஜய்குமாரைச் சந்திக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் குணமடைந்த சேதி வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாருக்கான போலீஸ் பாதுகாப்பு விலகுவதாக பிரபு அறியும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திகை சேர்த்து வைக்கும் விஜய்குமார் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் பணிக்குத் திரும்பி வில்லனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிறைவுக்காட்சி இசை, ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா பாடலோடு