Pages

Sunday, May 16, 2021

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி.....


இறுகிப் போன மன நிலையில் தன் மன ஆற்றாமையைப் பாடல் வழியாக வடிகால் தேட முனையும் ஒருவனின் உணர்வு எப்படியிருக்கும்? 

அதையே தான் எஸ்பிபி இந்தப் பாடலின் வழி பிரசவிக்கின்றார். 

“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி” அந்தத் தொடக்கமே உள்ளிருக்கும் பெருமூச்சைக் கக்குமாற் போல.

ஒரு பாடகனாக மட்டுமன்றி அந்தப் பாத்திரத்தின் மனவுணர்வைக் கேட்பவருக்குக் கடத்தி ஒரு பெருமூச்சைப் பிறக்க வைக்கிறாரே

அங்கே தான் எஸ்பிபி என்ற மகா கலைஞனின் சக்தி பொங்கிப் பிரவாகிக்கின்றது. இங்கே எந்த விதமான சங்கதிகளோ, குரல் பரிமாணமோ அன்றி வெறும் தட்டையாகவே தன்னுணர்வை அவர் பரிமாறுகின்றார். 

எடுத்த எடுப்பிலேயே தன் மனைவியின் அழகலங்காரத்தைச் சீவி முடித்துப் பின்னி முடித்து விட்டுத் தான் விஷயத்துக்கு வருகிறார்.

“பச்சமலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க”

“பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க”

“கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க”

“செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க”

எங்காவது அவன் ஊரார் கதையை நம்புகிறானா பாருங்கள்?

“சொன்னாங்க” என்று சொல்லி அதைக் கட்டுக்கதை என்று சப்பைக்கட்டுக் கட்டு வேறு கட்டுகிறான் பாருங்கள்.

அந்த ஒவ்வொரு அடியிலும் தன் மனைவியை மேம்படுத்தியே

தொடக்கி வைத்து ஊரார் பழியைத் துடைக்க முற்படுகின்றான்.

“எங்கை மேய்ஞ்சுட்டு வாறாய்” என்று ஊர்ச் சொலவாடை உண்டு.

இங்கே பாடலாசிரியரும் அவ்விதமே “மேயுதுன்னு” என்று எடுத்தாள்கிறார். 

“நாயமென்ன கண்ணாத்தா”

இளையராஜா காலத்தில் இலக்கணத்தமிழை மருவிய கிராமியச் சொலவாடலுக்கு முன்னோடியாய் எழுந்த பாடல்களில் இதுவுமொன்று என்பதால் நியாயம் என்பதை “ நாயம்” ஆக்கிக் காட்டுகிறார்.

இம்மட்டுக்கும் இப்பாடலைப் புனைந்த புலமைப்பித்தன் என்ன இலேசானவரா? இலக்கண நுட்பம் தெரிந்த, திரையிசைப் பாடல்களில் இலக்கியம் படைத்த புலவர் ஆயிற்றே. ஆனால் காட்சிச் சூழலில் தானும் இறங்கி அந்தப் பாத்திரத்தின் குரலாகவே ஆகி விடுகிறார்.

எஸ்பிபியைப் பாருங்கள். “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தின் நாயகன் வண்டிச்சோலை செம்பட்டையான் எப்படியானதொரு வெகுளி என்பதை அடையாளப்படுத்த அவரின் குரலில் எழும் வெகுளித்தனத்தை “மாமேன் (மாமன்) ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்” 

https://www.youtube.com/watch?v=XE5kKXdgRuw 

இல் அப்பட்டமாகக் காட்டியிருப்பார். 


அந்தப் பாட்டில் காட்டும் நுணுக்கமான சங்கதிகளில் அந்த வெகுளியின் பிரதிபலிப்பு. தேங்காப்பூ உதாரணம் ஒன்று


மாங்கா தோப்போரம் நான்

மறுநாள் போனேனாம்

தேங்காப் பூவாட்டம் நான்

சிரிச்சுக்கிட்டிருந்தேனாம்


இதில் “மாங்கா” “தேங்காப்பூ” இவற்றை உற்றுக் கவனித்துக் கேளுங்கள். மனுஷர் செம்பட்டையானின் நகல் ஆகி விடுவார். 


“உச்சி வகுந்தெடுத்து” எப்படித் தன் மனைவியின் கயமைத்தனத்தை அறிந்து அதை ஏற்க மறுத்து மனம் புழுங்கிப் பாடுமாற் போல அமைகிறதோ, அதே போல ஒரு இரவுப் பாடலில் இழந்து போன காதலிக்காகப் பாடும் பாட்டு “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி”. 

https://www.youtube.com/watch?v=T2mgqnNgA0A

இரண்டு பாடலிலும் இடைக் குரல்களாக தாலாட்டுப் பாடும் பெண் குரல்கள். உச்சி வகுந்தெடுத்துவில் அதை எஸ்பிபியின் சகோதரியே செய்து விட, மீதியில் வரும் 

உடுக்கை ஒலியோடு எழும் சாமியார்க்குரலாகவும் எஸ்பிபி. அதையே காத்திருந்து காத்திருந்து” பாடலிலும் இன்னோர் குரலாகக் காணலாம்.

ஆனால் “ஏ ஆரீராரோ ஆரீராரோ” மற்றும் “ரா ரா ரா ரா ஏஏஏ” என்று உச்சி வகுந்தெடுத்து பாடலில் வரும் நிதான நடைக்கு முரணாக வேகம் கொட்டும் இடைக்குரல்கள் “காத்திருந்து காத்திருந்து” வில்.

“உச்சி வகுந்தெடுத்து” பாடலைக் கேட்டு முடித்ததும் அந்தப் பாட்டுக் கொடுக்கும் உணர்வுக் கடத்தலைச் செரிமானம் கொள்ள வைக்க நேரம் பிடிக்கிறது. பின்னர் சங்கதிகளை முணுமுணுக்கும் போது

 “பட்டு வண்ண ரோசாவாம் 

பாத்த கண்ணு மூடாதாம்”

https://www.youtube.com/watch?v=xVZd7nDM-0c

என்று தொடர்புபடுத்திப் பார்க்கிறது. இதுவும் புலவர் புலமைப்பித்தன் கைவண்ணம் தான். சங்கர் – கணேஷ் இசையமைப்பில் மலேசியா வாசுதேவனுக்குக் கிட்டிய ஆகச் சிறந்ததில் இதையே முதலாவதாக வைப்பேன். இந்தப் பாடல் இடம் பிடித்த “கன்னிப் பருவத்திலே” படமும் ஒரே ஆண்டில் (1979) தான் வெளியானது. ஆனால் மூத்தவள் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”

கிராமியப் பாடல் என்றாலேயே அந்த மண்வாசனையைத் தன் நாசியில் ஏற்றி விடுவார் மலேசியா வாசுதேவன். எனவே அவருக்கு இந்த மாதிரியான பாடல் எல்லாம் கேப்பங்களி.


ஆனால் எஸ்பிபி எல்லாம் ஒரு செம்பட்டையானாகி கிராமத்து நாதமாக ஒலிப்பது என்பதெல்லாம் அபூர்வ வெளிப்பாடு அதையே “உச்சி வகுந்தெடுத்து” நிகழ்த்திக் காட்டுகிறது.


“நம்ப மனம் ஒத்துக்கல.....” அந்த ஒத்துக்கல வரும் இரண்டாம் சங்கதி மிதப்பை ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மனுஷர் நிலை குலைந்து தள்ளாடிப் போவார்.

அந்தக் காலத்தில் ஒரு பாட்டுக்குள்ளேயே பக்கம் பக்கமாக எழுதக் கூடிய இலக்கியம் சமைத்தார்கள். அதுவும் கதைக்கருவின் அடி நாதமாக அது இருக்க வேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் பிடிவாதங்களில் ஒன்று இந்தப் பாட்டு.

புலம் பெயர்வதற்கு முந்திய கிராமத்து வாழ்வியலில் இருட்டுக்குள் இருந்து கதை பேசிய காலமெல்லாம் இந்தப் பாட்டின் வழி நினைப்பில் வந்தால் நீங்களும் என் நண்பரே.


“வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ

கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க

கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத

அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க”

https://www.youtube.com/watch?v=LV0m2OCk6Ao


கானா பிரபா


Saturday, May 1, 2021

அஜித்குமார் ❤️ காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்


"ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்

நரக சுகம் அல்லவா

அமிலம் அருந்திவிட்டேன்

ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்

மருந்தை ஏனடி தர மறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே

ரகசியமாய் பூப் பறித்தவள் 

நீதானே......."


சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்


என் காதல்


தே

தை

யின்


கண்கள்


சுடு கரண்டியில் விழுந்த ஐஸ்கிரீமாய் உருகி வழியும் ஹரிஹரன் குரலைக் கேட்கையில் அஜித் இன் வாயசைப்புத் தான் நினைப்பூட்டும்.


முரட்டுத்தனமான முரணாக ஒரு மெல்லிசைக் காதல் அங்கே விழுகிறது இந்தப் பாட்டு. 


“இருதயமே துடிக்கிறதா....

 துடிப்பது போல் நடிக்கிறதா...”


எப்படி “விழிகளின் அருகினில் வானம்” வழியாக இவ்விதம் பாடலாசியர் கவிவர்மன் அரிதாகப் பாடல் பண்ணி ஈர்த்தாரோ அது போலவே


நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்

மருந்தை ஏனடி தர மறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே

ரகசியமாய் பூப் பறித்தவள் 

நீதானே


தட தடக்கும் சந்தத்தின் பின்னிசை இயந்திரப் படிக்கட்டுகளை உருட்டும் பட்டி போல இயங்க, வழுக்கிக் கொண்டே போகும் பாடலாசிரியர் விஜயசாகர் வரிகள்.


அப்போது விழுந்தவர்கள் தான் தீனா படம் வந்து இன்று 20 வருடமாகின்றது இதன் இடையிசையைக் கேட்டாலேயே மகுடி கண்ட பாம்பு போல ஆகி விடுகிறோம்.


என் காதல் தேவதையின் கண்கள்


கண்ணோரம் மின்னும் அவள் காதல்


பாட்டு முடிந்தாலும் வெளிவேற மனமில்லாமல் ஹரிஹரன் போல அனாத்திக் கொண்டிருக்கும் வார்த்தைத் துண்டுகள்.


புதுப் பாட்டுகள் வந்தால் சுடச் சுடக் கேட்பது எனக்கு ஒவ்வாமை. இருந்த போதும் சகோதரன் துஷ்யந்தன் 

விஸ்வாசம் படம் வந்த நேரம் “வானே வானே” பாடலைச் சிலாகித்திட்டிருந்த பதிவைப் படித்து அந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்கிப் போன போது அதுவே ஒரு பதிவாகப் பின்னாளில் விரிந்தது.


“வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.

தொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து “டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்?” என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.


அன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும். இவர்களில் தனியே அஜித்குமாரை மட்டும் பிரித்துப் பார்த்தேன்.

“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில் 

“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் திருக்குமார் நிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.


இப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீதி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.

ஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.

பாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும். 


தொடர்ந்து தேவா - ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,

“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.


“ஏஹேஹே கீச்சுக் கிளியே 

என் காதில் தித்தித்தாய்

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்”


புத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா? 

அதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.

ரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.


எஸ்.ஏ.ராஜ்குமாரும் விட்டு வைக்கவில்லை. 

“ஓ வந்தது பெண்ணா....

   வானவில் தானா” 

என்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.


அஜித் படமென்றாலும் இன்னொருவருக்குப் பாட்டுச் சேர்ந்த விதத்தில் “ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது. 

தோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.

ராஜா படத்திலும் மகாலஷ்மியோடு ஹரிஹரனை ஜோடியாக்கி “ஒரு பெளர்ணமி” பாடல் அர்ப்பணம் ஆனது.


‪இசையமைப்பாளர் சிற்பியின் பங்குக்கு “ராசி” படத்தில் பூமாலை கட்டினார் ஹரிஹரன்.‬


வைரமுத்து - பரத்வாஜ் - சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.

“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”

பாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.


“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது.  ‪இங்கேயும் இந்தப் பாட்டு அஜித்துக்கு இல்லாது விக்ரமுக்கு ஆனது.‬


தல என்ற கிரீடத்தை அஜித் மேல் வைத்த தீனா படத்தின் ஒவ்வொரு பாடல்களும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேனிசை. அதில் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” ஏற்ற இறக்கங்களில் ஹரிஹரனைத் தாண்டி யாரைச் சிந்திக்க முடியும்?


கார்த்திக் ராஜா, யுவன் போலவே இளையராஜா இசை கொடுத்த “தொடரும்” படத்தில் “ஷாக்கடிக்கும் பூவே” பாடலைத் தன் பங்குக்குச் சேர்த்தார்.


“அன்பே அன்பே நீ என் பிள்ளை” பாடலைக் கேட்டாலேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,

“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே  இருக்கலாம். இந்தப் பதிவுக்காக அந்தப் பாட்டைக் கேட்கத் தொடங்கியவன் வகை தொகையில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதுதான் வித்யாசாகரின் இசை மாயம்.


தேகத்துக்குள் தூங்கும் இன்பம் தட்டி எழுப்பு

தேடித் தேடி செல்களில் எல்லாம் தேனை நிரப்பு

என் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு

உள்ளே நெருப்பு….....


ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்

இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்


கானா பிரபா


#அஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித்குமார் 50 


இந்தப் பதிவில் இடம்பெற்ற பாடல்களில் அஜித்குமார் தோன்றும் பாடல்களின் காண் தொகுப்பு


https://www.youtube.com/playlist?list=PLOXBz6eZeFMdrbr-gauUg1Z_qXGyuejTI