Pages

Saturday, December 31, 2011

பதிவர்கள் பார்வையில் 2011 - ஒலிப்பகிர்வு

2011 ஆம் ஆண்டு விடைபெறப்போகின்றது. 2012 ஆம் ஆண்டை வரவேற்கும் வானொலிப் பணியில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வழியாக http://tunein.com/radio/ATBC---Australias-Tamil-Radio-s111349/ தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்தவேளை கடந்த ஆண்டு ட்விட்டர் வழியாகவும், வலையுலகம் வழியாகவும் அறிமுகமான நண்பர்களை வைத்து 2010 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்கிய பாங்கில் இந்த ஆண்டும் 2011 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்க எண்ணியபோது நண்பர்கள் கைகொடுத்தார்கள். அந்த வகையில் நண்பர் அப்பு 2011 இல் தொழில் நுட்பம், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் 2011 இல் திரையிசையுலகம், நண்பர் சதீஷ் குமார் 2011 இல் இந்தியா மற்றும் தமிழகம் ஆகிய பகிர்வுகளை அளித்திருந்தார்கள். உண்மையில் ஒரு தேர்ந்த வானொலியாளர்களின் பாங்கில் இவர்கள் கொடுத்த இந்தப் பகிர்வுகளுக்கு வானொலி நேயர்கள் மத்தியில் பாராட்டும் கிட்டியதை இவ்வேளை மகிழ்வோடு சொல்லிக் கொள்கின்றேன்.

என்னோடு கூடப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த வேளை இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து ஒலிப்பகிர்வுகளைக் கேளுங்கள்.

2011 இல் தொழில் நுட்ப உலகு - வழங்குவது அப்பு



2011 இல் திரையிசை - வழங்குவது கிரி ராமசுப்ரமணியன்



2011 இல் இந்தியா - வழங்குவது சதீஷ்குமார்




2011 இல் தமிழகம் - வழங்குவது சதீஷ்குமார்





புகைப்படம் நன்றி: http://caricaturque.blogspot.com/

Tuesday, December 27, 2011

ஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு

ஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே
அதனைத் தொடர்ந்து நண்பர் KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை இந்தப் படத்தின் பின்னணி இசையைப் பிரித்துக் கொடுக்கின்றேன் தகுந்த உரையை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற போது மனுஷர் வாக்கு மீறாது அருமையானதொரு பகிர்வைத் தந்தளித்தார். உண்மையில் படத்தின் முழு ஒலிப்பதிவயும் வழங்கியபோது எந்தவித காட்சி ஓட்டமும் இல்லாது ஒலியை வைத்தே முன்னர் அவர் பார்த்த இந்தப் படத்தினை அசைபோட்டு எழுதிக் கொடுத்தது என்னளவில் ஒரு சாகித்யம் என்பேன். ஏற்கனவே மெளன ராகம் படத்துக்கும் இதே பாங்கில் தன் முத்திரையைக் காட்டியவர். மீண்டும் இவரோடு இணைந்து இன்னொரு இசைக்காவியத்தைக் கொடுப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இனித் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சங்கீத சாம்ராஜ்யத்திற்கு கண்ணபிரான் ரவிசங்கர் துணையோடு அழைத்துப் போகின்றேன். இசையென்னும் இன்ப வெள்ளத்தை அள்ளிப் பெருகுங்கள்.

ராமாயணம்-ராஜாயணம்
* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்!

வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை...
தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = கம்பன்!
இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = இளையராஜா!!



ஒரே படத்துல 16 பாட்டை இந்தக் காலத்துல யாருப்பா கேட்பாங்க? என்னமோ BGM, BGMன்னு சொல்றாங்களே! என்ன பெருசா இருக்கு இந்த SRR - ஸ்ரீ ராம ராஜ்ஜியத்துல? பார்க்கலாமா??


இராமாயணத்தின் கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! அது மட்டுமா? ஒவ்வொருத்தரும் அவங்க சொந்த இராமாயணத்தையும் இதுல கொண்டாந்து சேர்ப்பாங்க!:)
ஆத்திகனோ, நாத்திகனோ, இலக்கியவாதியோ, புரட்சிவாதியோ - எல்லாருக்கும் இராமாயணத்தில் ஏதோ ஒன்னு இருக்கு!

தெரிஞ்ச கதை தான்! ஆனால் தெரியாத உணர்ச்சிகள்! = அதை எப்படி ஒருத்தருக்குச் சொல்வது?
* சீதை துன்பப் பட்டாள், தெரியும்!
* இராகவன் லூசுத்தனமா நடந்துக்கிட்டான், தெரியும்!
ஆனா, நமக்கு-ன்னு நடக்காத வரை, அது வெத்துக் கதை தானே!

எத்தனை பேரு, காதலில் சண்டை போட்டுட்டு, அவள் தவிக்கும் போது, ஒளிஞ்சி இருந்து பாத்து இருக்கோம்??
அட அவளா? இந்நேரம் சிக்குனு சிக்கன் பிரியாணி தின்னுக்கிட்டு இருப்பா-ன்னு நாம் நினைக்கும் அந்த அவள்...

காதல் பரிசான கைக்கடிகாரத்தை...கண்ணின் மேல் வச்சிக்கிட்டு...
அந்த நொடித் துடிப்பின் சத்தத்திலே...
தரையில் படுத்துக் கிடப்பதை...ஒளிஞ்சி இருந்து பார்த்தோம்-ன்னா?

இந்த உணர்ச்சிகளை எதில் எழுத முடியும்?
* பாட்டில் எழுதினா = காவியம்!
* இசையில் எழுதினா = இளையராஜா!
தெரிந்த கதை, ஆனால் தெரியாத உணர்ச்சிகளைப் படீர்-ன்னு நம் மனத்தில் போட்டு அடிக்கும் வித்தையைப் பார்க்கலாம், வாருங்கள்!

முதல் காட்சி! எல்லாரும் ஊருக்குத் திரும்புதல்! அயோத்தியில் இதையே தீபம் ஏத்தி வச்சி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்-ன்னும் சிலர் சொல்லுவாய்ங்க!
ராஜா ஏற்றி வைக்கும் தீபாவளி எப்படி? = ஜகதானந்த காரகா

பாட்டு ஒலிக்க, BGM ஒலிக்க..... மீண்டும் அதே பாட்டு, BGM.....
இதுலயே அந்த இன்ப மயமான தருணங்களை மாறி மாறி நெய்து விடுகிறார், ஒரு சீலையப் போல!

ரொம்ப ஆராவாரம் இல்லை...அதே சமயம், மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! = ஏன்?
ஏன்னா...ரொம்ப துன்பப்பட்டு வரும் இன்பத்தில்...அத்தனை மகிழ்ச்சி இருக்காது!
வலியின் நிழல் தங்கி, மனசுல ஒரு பக்குவமான நிலை இருக்கும்! ராஜா நெய்வதைக் கேளுங்க!




ஜகதானந்த காரகா = தியாகராஜர் பஞ்சரத்தினக் கீர்த்தனை!
ஜய ஜானகி பிராண நாயகா = என்ன ஆனாலும், அவனே அவளோட உயிரு-ன்னு மறுபடி மறுபடி ஒலிக்க வச்சி, பின்னால் வரப் போவதைக் காட்டுகிறாரோ?
ஒரு இராம சினிமாக் காவியத்தை, தியாகராஜர் மரபிசையோடு ஆரம்பிக்கணும்-ன்னு உனக்கு எப்படிய்யா தோனுது, இளையராஜா?

இது இப்படின்னா, பட்டாபிஷேகக் காட்சி = Symphony!
தியாகராஜரில் ஆரம்பிச்சி, கேட்டுக்கிட்டு இருக்கும் போதே, Symphony-இல் ஏத்தி வுடறது! அப்பப்போ, உன் டகால்ட்டி வேலையைக் காட்டிடுற ராஜா நீயி!!:)
Western என்று நெருடாமல், பட்டாபிஷேக கம்பீரம் என்றே இந்த இசை அழகாக அணி வகுக்கிறது!



Pl Note: இந்தப் படத்தில், பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்குது!
உற்று கவனிச்சிப் பாருங்க! கண்டு புடிச்சிருவீக...வேறெந்த படத்திலும் இது ராஜா செய்யாத Technique! மெளன ராகம் உட்பட...

சீதையைக் காட்டுக்குத் துரத்தும் BGM பற்றி நான் இங்கே பேசப் போவதில்லை! எனக்கு ரொம்ப வலிக்கும் காட்சிகள் அவை!
நாடு-நாட்டு மக்கள் கருத்து தான் முக்கியம்-ன்னா, தம்பி கிட்ட நாட்டைக் குடுத்துட்டு, தானும் அவளோடு போயிருக்கலாமே??
தம்பிகள் ஒத்துக்க மாட்டாங்கன்னா....யானை யாருக்கு மாலை போடுதோ...அவங்களை மன்னன் ஆக்கிட்டு.....தம்பிகளோடு...அவளுடன் போய் இருக்கலாமே??
- அப்படிச் செஞ்சி இருந்தியானா....கோயிலில் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பேன்...ஏனோ உன்னைக் கோயிலில் பார்க்க மட்டுமே தோன்றுகிறது! வணங்க அல்ல!!:(



இராம கதையைச் சொல்லும் மூன்று பாட்டு!
* தேவுள்ளே மெச்சிந்தி (Practice Song)



* ராமாயணமு (அயோத்தி தெருக்களில்)



* சீதா-ராமு சரிதம் (அரண்மனையில்...கம்பீர இசை)




தெருக்களில் பாடும் போது, அயோத்தி மக்களை இடிக்கும் இசை...டேய், ஒங்களாலத் தான் ஒரு அப்பாவி தனியாக் கிடந்து துடிக்குறா...பாட்டு வரிகளும் அப்படியே! எழுதியது யாரோ?

சீதையும் ராமனும் சந்திப்பது போலான மாயக் காட்சி! மெய்நிகர் (Virtual Reality)
இந்த இடத்தில் ராஜா போடும் BGM கேட்டாத் தெரியும், எதுக்கு எல்லாரும் ராஜா ராஜா-ன்னு அனத்துறானுங்க-ன்னு :))
* பழைய பாடலையே BGM ஆக்கி, Flashback காட்டுவாரு!
* அதே சமயம், பழைய பாடலில் எல்லாமே புதுப்புது வாத்தியங்கள்!
என்னமா இசையால் ஒரு Flashback இயக்கம்! யோவ் இளையராஜா - நீ என்ன படத்தின் இயக்குனாரா? வெறும் இசை இயக்குனர் தானே? :))

அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டானோ இல்லையோ, அவள் அவனை நல்லாப் புரிஞ்சி வச்சிருக்கா!
அவளா சந்தேகப்படுவா?...தன் புருசன் இன்னோரு கண்ணாலம் கட்டிக்கிட்டானோ?-ன்னு...

இல்லை!
ஆனா, ஊரு சொன்னா எதையும் செய்யத் துணியும் லூசு ஆச்சே தன் புருசன்!


ஏதோ நாட்டுக்காக அஸ்வமேத யாகம் செய்யறான், பொண்டாட்டி பக்கத்துல இல்லாமச் செஞ்சா, நாட்டுக்கே ஆபத்து-ன்னு ஒத்தைப் பிராமணன் கெளப்பி விட்டாப் போதுமே...
ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி ஐயா, இன்னோரு கண்ணாலம் கட்டிக்குவாரா?

இராமன் என்ன நிலையில் இருக்கான்-ன்னு பாக்கத் துடிக்குது அவளுக்கு! தன்னை ஊர் அறிய மறுதலித்தவன்...இப்போ உள்ளத்து அளவிலும் மறுதலிப்பானோ?-ன்னு படக்படக்...
வால்மீகி மூலமா, ஆவியாகி, anonymous ஆக உள்ளே வரும் சீதை...தனக்குப் போட்டியாக...இன்னொருத்தியைக் காணும் காட்சி...


சீதையின் சிலையை வடிச்சி வச்சிக்கிட்டு...நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!!!
அவன்-அவள் = ஊர் அளவில் பிரிஞ்சாலும், உள்ளத்து அளவில் பிரிவதே இல்லை!
இந்த BGM இல் கல்லும் கரையும்! காதலிச்சி இருக்குறவன் எவனும் கட்டாயம் இந்த BGM கேட்டு கண் பனிக்கும்!!
ராமரின் பள்ளியறைக்கு சீதை ஆவியுருவில் வந்து, ராமர் தன் நினைவில் என்றும் இருக்கும் உண்மையைக் கண்டுணரும் போது



படத்தின் Grand Finale & Graphic Effort - ஒருத்தியின் தாங்கும் எல்லை தான் எவ்ளோ?
இலங்கையில் மரத்தின் கீழ் தற்கொலை முயற்சி, அப்பறம் பலர் முன்னிலையில் மறுதலிப்பு-தீக்குளித்தல்.....அப்படியே தொடர்ச்சியா ஒவ்வொன்னா....
பூமி பிளந்து, அவள் உணர்ச்சியை எல்லாம் ஒட்டு மொத்தமாய் விழுங்கும் சுனாமிக் காட்சி!


பாலகிருஷ்ணா = இராமரா? நயன்தரா = சீதையா?
அடக் கொடுமையே-ன்னு கேலி பேசுபவர்களையும்....பாலகிருஷ்ணா/நயன் முன்னேயும் பின்னேயும் இசையை ஓடவிட்டு, அவர்கள் நடிக்காததையும், உணர்ச்சியால் கொண்டு வந்து தந்த படம் இது!

படத்தில், பாடல்களின் இசையைச் சொல்ல, தனிப் பதிவு தான் போடணும்! இங்கு BGM பற்றி மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் பேசினோம்!

இவ்வளவு பெரிய புராணப் படத்துக்கு, ராகங்கள் இல்லாத பாட்டா?
சின்னக் கண்ணன் அழைக்கிறான்-ரீதிகெளளை புகழ் இளையராஜா...இந்தப் படத்தில் போட்ட ராகங்கள் என்ன-ன்னு அறிஞ்சவங்க வந்து சொல்லட்டும்! நமக்கு இலக்கணம் அம்புட்டு போதாது:)

ஸ்ரீராம லேரா = அம்சாநந்தி-ன்னு மட்டும் தெரியுது!

கலி நிங்கி நீரு = கீரவாணியா?

சீதா சீமந்தம், அதை விட, தாண்டகம் என்னும் இசைப் பகுதி அமர்க்களம்! கேட்டுப் பாருங்க!



படம் முழுக்க தபேலா + வீணையின் ஆட்சி!
BGM-இல் வீணையை இம்புட்டு புழங்கி இருப்பது, இதுவாத் தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

SPB = கலக்கல்! ஸ்ரேயா கோஷல் = ஓக்கே, நல்லாப் பண்ணி இருக்காங்க!
சித்ரா = ஒரே ஒரு பாட்டு தானா?
இந்த ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செஞ்சாரு?

BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!

தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...
அதே சமயம், உணர்ச்சிகள் பேச வேண்டிய இடத்தில், இசை மட்டுமே பேசி ஏங்க வைக்கும் இசை!

BGM இல்லாம, காதுல பஞ்சி வச்சிக்கிட்டு.....இன்னொருகா அரங்கத்தில், ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாருங்க...
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

மனித உணர்வுகளை.......இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் நாகரீக keyboard காலத்திலும்...வீணை, தபேலா, நாதசுரம், புல்லாங்குழல் போதாது-ன்னு, இன்னும் என்னென்னமோ Western Instruments.....
நூறு வாத்தியக் கருவி, ஒன்னா வந்து, உங்க முன்னாடி வாசிச்சா எப்படி இருக்கும்???

பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்கும் புது முயற்சி!!
ஏ, மாயக் காரனே, இளைய-ராஜாவே......
* அன்று கம்பன் செய்த இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இன்று நீ செய்த இராமாயணம் = இசைக் காப்பியம்!
திருவாசகத்துக்குப் பின்....இந்தப் படத்தால்.....
கம்பனைப் போல்.........."காவியப்" புகழ் உனக்கு!
இறவா இசையோடு இருப்பாய் நீ!

முகப்பு இசை



ராமர், சீதை மஞ்சத்தில் காதல் மொழி பேசும் நேரம்




ராமர் சீதையோடு மஞ்சத்தில் இருக்கும் போது ஆராய்ச்சி மணி ஒலிக்க, சீதை தடுத்தும் ராமர் நீதி கேட்கப் புறப்படும் போது


சீதை குறித்த அபாண்டத்தை பத்ரன் தயங்கித் தயங்கி ராமரிடம் கூறும் போது





சீதை குறித்த புறணியைக் கேட்டு ராமர் மதி கலங்கும் போது





ராமரின் கட்டளைப்படி இலக்குவன் சீதையைக் காட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சி



வால்மீகி முனிவர் காட்டுக்குள் சீதை வரவேற்கப்படும் போது



சீதைக்கு முறையான வளைகாப்பு நடத்தவில்லையே என்று ஆதங்கப்படும் கோசலை தன் மனக்கண்ணில் அந்த நிகழ்வைக் காணும் போது




ராமர் இன்னும் தன் நினைவில் இருப்பாரோ அல்லது இன்னொரு துணை தேடியிருப்பாரோ என்று கலங்கும் சீதை



ராமர் செய்யும் அஸ்வமேத யாகம்



அஸ்வமேத யாகத்தில் பயணித்த குதிரையை லவ குச சகோதரர்கள் காட்டுக்குள் கட்டிப்போடும் போது இலக்குமணன் தன் படையோடு வந்து அவர்களோடு போர் புரியும் காட்சி



லவகுச சகோதரர்களைச் சந்திக்க வரும் இராமர், சீதையைக் காண்பதும் லவ குச சகோதர்கள் தன் பிள்ளைகள் என்று உணர்வதும், இறுதியில் பூமாதேவியிடம் சீதை தன்னை ஒப்புவிப்பதும். இது நீண்டதொரு இசைத்துண்டு



Tuesday, December 6, 2011

இசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க


வணக்கம் மக்கள்ஸ்! இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான அறிமுகத்தைக் கொடுத்துவருவது உங்களில் பலர் அறிந்ததே.
தற்போது இன்னொரு அறிவிப்பும் இணைந்திருக்கின்றது. அதாவது இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பினால் அவற்றை மேடையில் இசைக்கக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். இசைரசிகர்களாகிய எமக்கு, குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் பல்லாயிரம் முத்துக்களில் எந்த முத்தைக் கோர்ப்பது என்பது சவாலான காரியம். ஆனாலும் ஜாலியாக நாம் எல்லோருமே பின்னூட்டம் வாயிலாக எம் ஒவ்வொருவருக்கும் பிடித்த இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைப் போடுவோமா?
எங்கே ஆரம்பிக்கட்டும் ஆட்டம்.

Youtube: shivshiva85's Channel




Saturday, December 3, 2011

The Dirty Picture ஒரு நடிகையின் ப(பா)டம்

எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் அவரின் தற்கொலையோடு முடிவுக்கு வருகின்றது அந்த நடிகையின் பயணம். சினிமா ஆசை என்ற பெருங்கனவில் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வரும் ரேஷ்மா ஒரு வறிய குடும்பத்துப் பெண் தன் முன் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் எல்லாம் தொலைத்துத் தன்னையும் தொலைத்த கதைதான் இந்தப் படத்தின் கரு.


"அவளோட புகழ் சோளப்பொரி போல, மேலே போனது கீழே வரத்தான் செய்யும்" சூர்ய காந்த் என்ற உச்ச நடிகர் ஒரு இடத்தில் பேசுவார், சினிமாவில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவர் எப்போது கீழே விழவேண்டும் என்று காத்திருக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. வித்யாபாலன் என்ற நடிகைக்கு ரேஷ்மா என்ற அபலைப்பெண்ணில் இருந்து சில்க் என்ற உச்ச நடிகையாக மாறி அந்தப் பாத்திரமாகவே வாழவைத்திருக்கின்றது இந்தப் படம். வித்யாபாலனுக்கும் சில்க் இற்குமான தோற்ற நிலையில் ஏற்கமுடியாது ஆரம்பிக்கும் படம் முடியும் போது வித்யாபாலனின் உழைப்புக்கு சபாஷ் போட வைக்கின்றது.

சினிமா என்ற கனவுலகத்தைத் தேடிப் போய் அவமானங்கள் பட்டு ஜெயிக்கும் ரேஷ்மா என்ற சில்க், ரசனை மாறும் போது தனக்குப் போட்டியாக வரும் நாயகியை ஏற்றுக் கொள்ளா முடியாத ஒரு சராசரி மனித மனம் என்ற அளவுக்கு இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சினிமா என்ற கனவுத்தொழிற்சாலையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கனவுத்தொழிற்சாலை ஆக்கியபோது விகடனில் நடிகை லட்சுமியின் கண்டனத்தோடு கூடிய சந்திப்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஒரு நடிகையின் கதை என்ற தோரணையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாடி நடிகை சுஹாசினி தலைமையில் அவருக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடந்தது வரலாறு. ஆனால் உண்மையில் ஒரு நடிகையாக வாழ்க்கைப்பட்டவளைச் சுற்றி சூழலில் எந்தப் பெண்ணுமே உடல் அல்லது உணர்வு ரீதியான காயத்துக்கு ஆளாகாமல் தப்பமுடியுமா என்பது கேள்விக்குறி. அதைப் பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கின்றது இந்தப் படம்.

ஏப்ரஹாம் என்ற தலைசிறந்த இயக்குனர்(இம்ரான் ஹசானி) சினிமாவில் கவர்ச்சி மாயை வெறுத்து நல்ல கதை தான் ஜெயிக்கும் என்ற உணர்வோடு இருப்பவர். அவரின் அசரீரிக் குரலாகத் தான் சில்க் என்ற நடிகையின் வாழ்க்கை இந்தப் படத்தோடு பயணிக்கின்றது. ஏப்ரஹாம் வெறுத்து ஒதுக்கும் சில்க், தயாரிப்பாளர் செல்வ கணேஷ் இன் பார்வை பட்டு சினிமாவில் நுழையவும், கூடவே சூர்யகாந்த் என்ற முது வயது சூப்பர் ஹீரோவின் அரவணைப்புக் கிட்டி மெல்ல மெல்ல அவள் பெரும் புகழ் என்ற உச்சாணிக்கொம்பை அடைவதும், கூடவே அவளின் தோல்விக்காகவும் தன் வெற்றிக்காகக் காத்திருக்கும் ஏப்ரஹாம் என்ற இயக்குனரும் என்று இந்த முக்கிய புள்ளிகளே கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

ஒரு நடிகையை ஒரு எல்லைக்கோட்டுக்கு மேல் ஏற்காத வெளிச்சமூகம் மட்டுமல்ல திரையுலகத்துக்குள்ளும் அதே நிலை என்பதையும் வெறும் பாலியல் ரீதியான பந்தத்தை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண்களிடமிருந்து உண்மையான அன்பைத் தேடும் சில்க் ஆகவும் இந்த நடிகையின் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது.

பரபரப்புப் பத்திரிகையாளர் பாத்திரத்தை நாம் வழக்கமான வாராந்த சஞ்சிகையின் எழுத்தில் தரிசிக்க முடிந்ததைத் திரையில் காணமுடிகின்றது.

வேலையிடத்தில் சந்திக்கும் சவால்கள் என்பது பொதுவான ஒரு விடயம். ஆனால் கலை என்று வரும் போது அங்கே உணர்வு ரீதியான பல சவால்களைச் சந்திக்க வேண்டும். ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குதிரை சட்டென்று தாமதித்தால் கூடவரும் குதிரைகள் முன்னே ஓடிவிடும் அல்லது இடறித்தள்ளிவிடும். என் ஊடகத்துறையில் கடந்த பதினோரு ஆண்டுகளில் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த காழ்ப்புணர்வுகளைத் திரையில் ரேஷ்மா என்ற சில்க் பாத்திரத்தோடு பொருத்திப் பார்க்க முடிகின்றது. உன்னால் ஏராளமான வெற்றிகளைக் கொடுத்து ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிகின்றதே அதே வெற்றி உன் ஒரு படத்தின் தோல்வியால் அழிக்கப்பட்டு விடும் என்று ஏப்ரகாம் சொல்லும் உண்மை எல்லோருக்கும் பொருந்தும்.

சில்க் என்ற நடிகையின் கதை என்ற மையத்தை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான காட்சிக் கோர்வை, புத்திசாலித்தனமான வசனங்கள் என்று போவதால் படத்தை ரசிக்க முடிகின்ற அதே சமயம் இயக்குனர் எப்ரகாம் , சில்க் காதலும் கூடவே வரும் பாடலும் ஸ்பீட் ப்ரேக்கர்.

இளமையாகக் காட்டிக் கொண்டு தொப்பை மறைத்து ஹீரோயிசம் காட்டும் நஸ்ருதின் ஷா கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் "சத்யா மூவீஸ்" தங்க மகன் போஸ்டரில் இருந்து ப்ளஸ் டூ பாஸ் ஆகித் தன் தாய் மடியில் செல்லம் கொட்டும் காட்சியிலும், தொய்ந்து விழும் திறந்த உடம்போடு அவர் போடும் ஆட்டமும் ரஜினியில் இருந்து தென்னக மூத்த நடிகர்கள் எல்லோரையும் பதம் பார்க்கின்றது. முழுமையாகக் கோடம்பாக்கத்தின் சூழலும் வருவதால் படத்தின் முகப்பில் இருந்து ஒரு சில காட்சிகள் வரை "அட்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க" பாடலும் தமிழ்ப் பேசுவதோடு பாத்திரங்கள் எல்லாமே தென்னிந்திய வாடையோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

என்னடா இது, பகையாளி கூட என்னை எதிர்க்கமுடியாத நிலை என் நிலை என்று மருகுவதாகட்டும், அப்பாவிப்பெண்ணில் இருந்து படிப்படியாகச் செல்வாக்கு மிக்க நடிகையாக மாறுவதும் தேய்வதும் அவரது நடிப்பின் வாயிலாகவே காட்டிச் சிறப்பிக்கின்றார். தன் கனவைத் தொட்டுவிடத் துடிக்கும் ஏழைப்பெண், சாதித்துக்காட்ட முனையும் வெறி, சவால்களை எதிர்கொள்ளும் விதம், எல்லாம் தொலைந்து நிர்க்கதியான நிலை எல்லாவற்றையும் தாங்கி வெளிப்படுத்துகின்றார் வித்யா பாலன். கவர்ச்சி நடிகையின் படம் என்பதால் இந்திய சினிமா தொடமுடியாத உச்சங்களையும் தொடுகின்றார்.

இப்படியான உணர்வுபூர்வமான கதையை வைத்து கோடம்பாக்கத்து பாபுகணேஷ் போன்ற மொக்கைகள் கைமா பண்ணிக் காசு பார்த்திருப்பார்கள். ஆனால் நேர்த்தியான திரைக்கதை, வசனம், தேர்ந்த நடிகர்கள், புத்திசாலித்தனமான இயக்கம் (Milan Luthria) என்று இந்தப் படம் சிறப்பானதொரு படைப்பாக வந்திருக்கின்றது.
எண்பதுக்கே உரிய மண்ணிறச் சாயம் கொண்ட ஒளிப்பதிவின் சொந்தக்காரர் Bobby Singh.

புகழ் என்ற நட்சத்திரத்தை அடைய நினைப்பவர்கள் அந்த எல்லையைத் தொட்டதும் தடுமாறாமல் பயணிக்க வேண்டிய சதுரங்க ஆட்டத்தில் நின்று நிலைப்பதென்பது எவ்வளவு சவாலானதொரு நிலை என்பதோடு, காலவோட்டத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பிக்காதவன் ஓரம் கட்டப்பட்டு விடுவான் என்பதை மறைமுகமாகச் சொல்லிவைப்பதில்
The Dirty Picture, a neat film

பிற்குறிப்பு: இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமே உகந்தது

Sunday, November 20, 2011

ஶ்ரீ ராம "ராஜா" ராஜ்ஜியம்

மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே "சீனி கம்" (ஹிந்தி), "ரசதந்திரம்", "பாக்யதேவதா" (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.

இராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.

இசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி "ஜெகதானந்த" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.

அதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.

படத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.

இசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.

இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.
இந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.

ஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).

பாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.


சீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.


என்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.

ஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.

Tuesday, November 8, 2011

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்...

வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ரயில் பிடிக்கப் பாய்கின்றேன். இடைப்பட்ட நேரத்தில் மினி சூறாவளி சிட்னியைத் தாக்கியதன் விளைவு ரயில்கள் தாமதித்துத் தம் ஓட்டத்தைக் கவனிக்க, எனக்கோ இருக்கவே இருக்கிறது என்று ஐபாட் இற்குள் ஐக்கியமாகின்றேன். வழக்கமான இந்த நேரம் ஹலோ எஃப் எம் இன் RJ கே.கே தன் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பி அத்துணை நேரம் கனத்திருந்த வேலைக்களைப்பை மறக்கடிக்க வைப்பார். இன்று எடுத்த எடுப்பில் "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்" பாடல் காதுக்குள் விழுந்த முதல் தேனாறாகப் பாய, இந்தப் பாடலை ரசித்தவாறே பயணிக்கிறேன்.

வழக்கமாக ஒரு படத்தின் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஒருகட்டத்தில் அந்தப் பாடல்கள் கேட்டுத் தித்தித்த கணத்தில் அதே படத்தில் அதுவரை கவனிக்கப்படாத இன்னொரு பாடலைக் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றும். அதுவரை சீண்டாதிருந்த பாடலின் வசீகரம் அடடா இதுநாள் வரை இதை விட்டுவைத்து விட்டேனே என்று எண்ணத் தோன்றும் அப்படி ஒரு வகையறா தான் இந்த "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்".

அப்போது "கேளடி கண்மணி" படம் வரப்போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் விவித்பாரதி விளம்பரங்களில் மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபியின் "மண்ணில் இந்தக் காதல் இன்றி"யும் அவ்வப்போது "நீ பாதி நான் பாதி" "கற்பூர பொம்மை ஒன்று" பாடல்களின் ஒரு சில வரிகளும் இடம்பெறும் ஆனால் "தென்றல் தான் திங்கள் தான்" பாட்டுக்கு எடுத்த மாத்திரத்தில் அறிவிப்பாளரும் அங்கீகாரம் கொடுக்கவில்லைப் போலும். நாளாக நாளாக "கேளடி கண்மணி" படத்தில் அதுவரை முன்னிலையில் இருந்த பாடல்களுக்கு நிகராக "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை உயர்த்திய பெருமை ஞாயிற்றுக்கிழமை நாலுமணி நேயர் விருப்பம் கேட்கும் சென்னைவானொலி நேயர்களைத் தான் சென்று சேரும். அப்படி உயர்ந்தது தான் இந்தப் பாடல், ரசிகமனங்களில்.


2006 ஆம் ஆண்டு, உலகின் கலையழகும் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் அவுஸ்திரேலியாவின் அடையாளமாகவும் திகழும் ஒபரா ஹவுசில் முதன் முதலில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி. அதுவும் தமிழ்திரை இசை மட்டுமன்றி மலையாள தேசத்தின் நவீன இசைக்கடவுளாக ரசிகர்களால் உயர்த்தி நோக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்வு. அரங்கம் கொள்ளாத கூட்டம். அங்கே எல்லோருக்கும் பரவலாகப் பிடித்த புகழ்பெற்ற பாடல்களைப் பாடிக் கைதட்டல் வாங்கிவிடலாம் என்ற சபலம் எந்தவொரு இசைக்கலைஞனுக்கும் வந்தால் வியப்பில்லை. ஆனால் அங்கே கே.ஜே.ஜேசுதாஸ் அனுபவித்துப் பாடியது "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்"


"தென்றல் தான் திங்கள் தான்" பாடலை ஓடவிடும் போதெல்லாம் பாடலோடு இழைத்திருக்கும் இசையும் வயலினும், புல்லாங்குழலும் கதை பேசிக்கொள்ளும் சங்கதிகளையும் கடந்து இன்னொரு திசைக்கு மெட்டு மாறும் கட்டம்
"காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்" என்று நாயகன் பாட
"தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்" என்று அவள் ஒத்திசைக்க
இன்னொரு திசைக்குப் பயணிக்கும். எந்தவித உபத்திரமும் கொடுக்காமல் பாட்டு வளைந்து நெளிந்து ஓடக் கேட்கின்ற மனசும் அதற்கேற்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். பாட்டுக்குப் பின்னணியில் ஒரே தாள லயத்தோடு ட்ரம்ஸ் இசை.
இதுவே இன்னொரு இசையமைப்பாளர் கையில் வாய்த்தால் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிப் போடும் எலியின் செய்கை ஆகிவிடும்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன இந்தப் பாட்டுக்கு. அதுமட்டுமா, ராஜா கொடுத்த மெட்டுக்கு இட்டுக் கட்டிய பிறைசூடனும் காதல் சந்தம் பண்ணியிருக்கிறார்.
நான் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அனுபவித்த அளவுக்கு நீங்களும் கேட்கவேண்டும் என்ற ஆசையில் இதோ, எத்தனை முறை இன்று இந்தப் பாடலை நான் கேட்கப்போகின்றேன் என்று கணக்கில் வைக்கின்றேன் நீங்களும் உங்கள் பங்கிற்கு =>



Sunday, November 6, 2011

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா நினைவில்



பழம்பெரும் பாடகரும் இசையமைப்பாளருமான பூபேன் ஹஸாரிகா மும்பையில் நவம்பர் 5, 2011 சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 85.

சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா இசையமைத்த Dil hoom hoom பாடலை இன்று மட்டும் கணக்கில்லாமல் கேட்டிருப்பேன். என்னவொரு ரம்யமான பாடலது. மெல்லிசையை மென்மையான உணர்வுகள் சேர்த்துக் குழைத்த பாடல். பூபேன் ஹஸாரிகா குறித்த ஒரு அஞ்சலிப்பகிர்வை றேடியோஸ்பதியில் இடவேண்டும் என்று அவர் இசையமைத்த Dil hoom hoom என்ற Rudaali 1(1993) திரைப்படப்பாடலை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் (கே.ஆர்.எஸ்) இடம் பகிர்ந்த போது அப்பாடலின் தமிழ் வடிவத்தை அழகாக எழுதித் தந்தார். இதோ அந்த மூலப்பாடலும் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதித்தந்த பாடலின் தமிழ் வடிவமும்.


பூபேன் ஹஸாரிகா குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல்



அதே பாடலை லதா மங்கேஷ்கர் பாடுகின்றார்



Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!

Ghan dham dham kare, darr jaaye
வானம் இடிஇடி என இடி..க்குதே, பயத்தாலே!

Ek boond kabhi paani ki, mori ankhiyon se barsaaye
இரு விழிகளில் நீர் ஆறு
ஒரு சுருளாய்ப் பாய்..கிறேதே

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
---------------

Teri jhori daaroon, sab sukhe paat jo aaye
உன் நினைவு என்னைத் தீண்டி, பழுப்பிலைகள் உதிர்க்கின்றேனே!

Tera chhua laage, meri sukhi daar hariyaaye
உன் கைகள் என்னைத் தீண்ட, பசுமரம் போல் துளிர்க்கின்றேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
--------------

Jis tan ko chhua tune, us tan ko chhupaaoon
நீ தொட்டுப் பருகிய மேனி, அதை மூடியே வைத்தேன் அன்று!

Jis man ko laage naina, voh kisko dikhaaoon
நீ நெருங்கி நோக்கிய இதயம், அதை யாரிடம் காட்டுவேன் இன்று?

O more chandrama, teri chaandni ang jalaaye
ஓ நிலவே...நளிர் நிலவே...நீ எரித்து விடாதே என்னை

Teri oonchi ataari maine pankh liye katwaaye
மலை மேலே சென்று விட்டாயே, என் சிறகுகள் அறுத்து விட்டேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!



பூபேன் ஹசாரிகா குறித்து தினமணி நாளிதழிலும், விக்கிபீடியாவிலும் கிடைத்த தகவல்கள்.


அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.

1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.

ஹஸாரிகா "பிரம்மபுத்திராவின் பறவை' என்று அழைக்கப்பட்டார். பாரம்பரிய அசாமி இசை மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு வகையில் புகழ்பெற்றார்.

பின்னர் ஹிந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். 1976-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். அசாம் சட்டப் பேரவை உறுப்பினராகி மக்கள் பணியாற்றினார்.

அவருக்குக் கிடைத்த விருதுகள்

சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருது (1975)
பத்ம பூசன் (2001)
தாதாசாகெப் பால்கே விருது (1992)
அசாம் ரத்னா (2009)
சங்கீத நாடக அகாதமி விருது (2009)
1993ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசியா பசிபிக் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தித் திரைப்படம் ருடாலியின் இசையமைப்பிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.
சிறந்த நிகழ்கலை நாட்டுக் கலைஞராக அனைத்திந்திய விமர்சகர் சங்க விருது (1979)

பெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.

Tuesday, November 1, 2011

திருமதி ஜீவா இளையராஜா - இசைரசிகர்கள் தரும் அஞ்சலி

இன்று காலை இசைஞானி இளையராஜாவின் மனைவியார் ஜீவா அம்மையாரின் மறைவை இணையத்தின் வாயிலாக அறிந்த போது எமது வீட்டில் நிகழ்ந்த ஓர் துன்பியல் நிகழ்வாக எடுத்துக் கொண்டது மனம். எனக்கு மட்டுமல்ல என்னைப்போல இருக்கும் பல்லாயிரக்கணக்கான
இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கும் இதே உணர்வுதான் இருக்கும். இசைஞானி என்ற மாபெரும் கலைஞனைக் கைப்பிடித்த நாள் முதல் அவரின் சாதனைகள் பலவற்றுக்கும் நிழலாகத் துணையாக நின்று சோரா மனம் கொண்டிருக்க வைத்தவர். இனிமேல் இளையராஜாவிற்குத் துணையாக அவரின் தொடர்ந்த வாழ்வியல் பயணத்தில் இவர் இருக்கமாட்டார் என்ற துயர் தரும் சேதியையும் இவரின் மரணம் எழுதி வைத்துப் போயிருக்கின்றது.











நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் மனைவிக்கான ஒரு அஞ்சலிப்பகிர்வை வானொலிக்காக ஏற்பாடு செய்யப் பெரிதும் உதவினார், அவரோடு இசைஞானியின் தீவிர ரசிகரான நண்பர் அலெக்ஸ் ராஜாவும் இணைந்து கொள்ள, இளையராஜாவின் வாத்தியக்குழுவில் இயங்கும் பகவதி (இவர் நடிகர் டி.கே.பகவதியின் பேரன் கூட) அவர்களுமாக மூவரும் சேர்ந்து இசைஞானியின் இல்வாழ்க்கைத் துணை திருமதி ஜீவாவிற்கான ஒரு சிறு அஞ்சலிப்பகிர்வைச் சமர்ப்பிக்கின்றோம். இந்த முயற்சியில் பெரிதும் உதவிய நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் பொக்கிஷப்புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் அலெக்ஸ் ராஜாவுக்கும் இந்த வேளை நன்றிகளைப் பகிர்கின்றேன்.

தொடர்ந்து திருமதி ஜீவா இளையராஜாவிற்கு இசைரசிகர்கள் தரும் அஞ்சலி



இறுதி நிகழ்வில்

Sunday, October 30, 2011

இளையராஜா இசையில் பாடகி மின்மினி

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். பாடகி மின்மினி விஷயத்திலும் அப்படித்தான் அமைந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் "மீரா"திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக வந்த அவருக்கு, அந்த ஆரம்ப காலத்தில் நிறையைப் பாடல்களைக் கொடுத்து வாய்ப்பளித்திருக்கின்றார் ராஜா. மலையாள தேசத்துக் குரல்களின் மீது ஏனோ ராஜாவுக்குத் தீராக் காதல். சுஜாதா, சித்ரா, சுனந்தா, செர்ணலதா (இவர் எம்.எஸ்.வி இசையில் தான் அறிமுகமானார் ஆனால் ராஜா கொடுத்த பாடல்களால் கிடைத்த புகழை இங்கே சொல்லவா வேண்டும்), என்று நீளும பட்டியலில் மின்மினியும் இணைந்து கொண்டார். ரோஸில்லி என்ற இயற்பெயர் கொண்ட

மினி ஜோசப் என்ற பெயரிலேயே வலம்வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான். செர்ணலதா போல இவருக்கும் ஓரவஞ்சனை இல்லாது நிறைய நல்ல நல்ல பாடல்களை ராஜா கொடுத்திருக்கின்றார். ஆனால் அன்றைய சூழலில் ஜானகி, சித்ரா போன்ற முதல் வரிசைப் பாடகிகள் அளவுக்கு வராமற் போயிருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமாக, அந்தப் படத்தின் முத்திரைப் பாடல் "சின்னச் சின்ன ஆசை" பாடல் மின்மினிக்குக் கிடைக்க அவர் அதுவரை தொடாத உயரங்களைத் தொட்டார் இந்தப் பாடல் கொடுத்த புகழால். இசைஞானியின் பாடகிகளில் செர்ணலதாவையும், மின்மினியையும் வைத்து ரஹ்மான் தன் ஆரம்ப காலப் படங்களில் நிறையவே கொடுத்திருக்கின்றார். ஆனால் மின்மினி என்பது வானத்தில் ஒளிர்ந்து மறையும் என்பது இவரின் வாழ்க்கையிலும் எழுதப்பட்ட துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. மின்மினிக்குத்க் திடீரென்று பேச்சாற்றால் இழக்கப்பட, அதுவரை சேர்த்த அத்தனை புகழும் அங்கீகாரமும் ஒரே நாளில் கலைந்து போகின்றது. பாடகி மின்மினி, தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகள் இளையராஜா, ரஹ்மான் தவிர தேவா உள்ளிட்ட மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடினாலும் இந்த இரு இசையமைப்பாளர்களிடம் இருந்து பெற்ற பாடல்கள் அளவுக்கு இல்லை என்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

மாலைச் சந்திரன் (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) பாடலை எஸ்.பி.பி என்ற ஜாம்பவானுடன் பாடும் போது அதில் வரும் 2.28 நிமிடத்துளிகளில் மின்மினி அனாயாசமாக "மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மன்மத ராகத்திலே" என்று பாடுவதிலாகட்டும் "ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) என்று ( 2.47 நிமிடம்) அதுவரை கலாய்த்துப் பாடிய எஸ்.பி.பி, சுந்தரராஜன் குழுவுக்குப் போட்டி போட்டுப் பாடுவதிலாகட்டும் மின்மினியின் குரலின் கனிவுக்கு சில சான்றுகள். "அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக் கிளி) பாடலில் மனோவோடு இணைந்து பாடும் மின்மினிக்கு மாற்றீடாக இந்தப் பாடலில் இன்னொரு குரலைப் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளராக இருந்து இயக்குனராக வந்த செய்யாறு ரவியின் இயக்கத்தில் வந்த தர்மசீலன் படத்தில் வரும் "தென்றல் வரும் முன்னே முன்னே" பாடல் மின்மினிக்கு ராஜா கொடுத்த அங்கீகாரங்களில் ஒன்று. வள்ளி படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" என்ற பாடலில் சொர்ணலதா வழியாக ஏங்கும் காதலியின் உணர்வைக் கொண்டு வந்த ராஜா, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் "தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே" பாடலை மின்மினிக்குக் கொடுத்து அதே பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக என் மனசுக்கு நெருங்கிய பாடல்களில் ஒன்றான "நல்ல தலைவனும் தலைவியும்" (பிள்ளைப்பாசம்) பாடலில் "எங்கும் பொழியுது ஒளிமழை வண்ண விளக்குகள் பலவகை... ஊரெல்லாம் திருவிழா" என்று பாடும் அந்தக் கணங்களில் நெஞ்சில் நிறைந்த் நிற்கின்றார்.

இந்தப் பகிர்வில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி மின்மினிக்குக் கிட்டிய பாடல் முத்துக்கள் சிலவற்றைப் பகிர்கின்றேன். கேட்டு அனுபவியுங்கள்.

"லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு" (மீரா) மனோவுடன் மின்மினி



"மாலைச் சந்திரன் மலரைத் தேடுது" (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) எஸ்.பி.பியுடன் மின்மினி



"அம்மன் கோயில் வாசலிலே" (திருமதி பழனிச்சாமி) எஸ்.பி.பி, சுந்தரராஜன், மின்மினி


"தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே" (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்) மின்மினி தனித்து


"தென்றல் வரும் முன்னே முன்னே" (தர்மசீலன்) அருண்மொழியுடன் மின்மினி


"நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்" (பிள்ளைப்பாசம்) மனோவுடன் மின்மினி


"அடி பூங்குயிலே பூங்குயிலே" (அரண்மனைக்கிளி) மனோவுடன் மின்மினி

Thursday, October 20, 2011

றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?


வணக்கம் வணக்கம் வணக்கம்,

நீஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின்னர் றேடியோஸ்புதிர் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் புதிரும் ஒரு அட்டகாசமான ராஜாவின் அறிமுகம் சார்ந்த கேள்வியாக அமைந்திருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவுக்கு கேரளத்துக் குயில்களின் குரல்களில் ஏனோ மோகம், அந்தவகையில் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மலையாளப்பாடகர்கள் பட்டியல் நீண்டது. அப்படி வந்தவர் தான் இந்தப் பாடகி. இந்தப் பாடகி ஏற்கனவே மலையாளத்தில் ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும், தமிழில் இசைஞானி இளையராஜாவின் முத்திரைப் பாடலைப் பாடக் கிடைத்தது அவருக்கு ஒரு கெளரவம்.

ஆனால் நாகூர் பாபு, பாடகர் மனோ ஆனது போல, மினி ஜோசப் என்று வந்த இந்தப் பாடகியின் பேரை மாற்றினார் இசைஞானி. அப்போது பெரும் எதிர்பார்ப்பில் வந்த படத்திற்காக நல்லதொரு பாடலொன்றை இந்தப் பாடகிக்காக வழங்கினார் ராஜா. தொடர்ந்து இளையராஜாவின் பல படங்களில் பாடகியாகச் சிறப்பிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது இன்னொரு இசையமைப்பாளரால். ஆனால் என்ன பயன். இவருக்குக் கிடைத்த அந்தப் பெரும் புகழ் இருக்கும் போதே தன்னால் பாட முடியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். மீண்டும் பாட வந்தபோது ஏற்கனவே புதுக்குயில்கள் பல கூடாரமிட்டிருந்ததால் முற்றாகவே மறக்கடிப்பட்ட பாடகியாகிப் போனார். யார் இந்த மினி ஜோசப் இவர் பாடிய அந்த முதற்பாட்டு என்ன, இவரின் பெயரை இசைஞானி எப்படி மாற்றி அமைத்தார் என்பது தான் இந்தப் புதிரின் கேள்வி

மண்ணெண்ணை தீப்பிடிப்பது போலச் சட்டென்று வரவேண்டும் பதில்கள் ;)

போட்டி இனிதே ஓய்ந்தது

பதில் இதுதான்
அந்தப் பாடகி மினி ஜோசப் என்ற மின்மினி
ராஜா அறிமுகப்படுத்திய படம்: மீரா
பாடல்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு
பிரபலமாக்கிய இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

Friday, October 14, 2011

கேட்டதில் இனித்தது: நடந்தால் இரண்டடி....இருந்தால் நான்கடி

பதினாறு வருஷங்களுக்கு முந்திய என் தீபாவளி சொந்த பந்தங்கள், நட்புக்களைப் பிரிந்து சந்தித்த முதல் தீபாவளியாக மெல்பனில் அப்போது பல்கலைக்கழக மாணவனாகப் புலம்பெயர்ந்தபோது அமைந்தது. தீபாவளிக்கு ஒரு சில தினங்கள் முன்னர், தங்கியிருந்த வீட்டுத் தபால்பெட்டியைத் திறக்கிறேன். ஊரில் இருந்து ஒரு தீபாவளி வாழ்த்து மடல். மடலைப் பிரித்துப் பார்த்தால் "அன்புள்ள பிரபு அண்ணாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்", சித்தியின் மகள் தன் கைப்பட எழுதிய அந்த வாழ்த்துமடலில் பிரசாந்த் இன் படம் போட்டிருந்தது. குறும்பாக என்னைப் பிரசாந்த் அண்ணா என்று அப்போது என் தங்கை அழைப்பது வழக்கம். அதன் வெளிப்பாடே வாழ்த்துமடலிலும் பிரதிபலித்திருந்தது. அந்த நேரம் வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, வண்ண வண்ணப்பூக்கள், உனக்காகப் பிறந்தேன் என்று பிரசாந்த் இன் படங்களும் தொடர்ச்சியாக வந்து கொட்டமடித்துக் கொண்டிருந்த நேரமது. அந்த வாழ்த்துமடலைப் பத்திரப்படுத்தி இன்னமும் வைத்திருக்கின்றேன். நாகரீகமும், தொழில்நுட்பமும் மறக்கடிக்க வைக்கின்ற நல்ல விஷயங்களில் ஒன்று நமது பண்டிகைகளுக்கு வரும் வாழ்த்துமடல்கள்.

இன்று யதேச்சையாக ராஜ் டிவியைப் போட்டபோது, "நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி" என்ற பாடல் போய்க்கொண்டிருந்து. சிலைபோல இருந்து பாடலை ரசித்து விட்டு, மீண்டும் மீண்டும் ஐபொட் இல் கேட்டும் தீரா ஆசையோடு கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். அப்போதெல்லாம் டியூசன் சென்ரர் காலத்துக் காதலில், தேர்ந்தெடுத்த சந்தோஷம் கொட்டும் பாடல்களையும், அவள் வராதவிடத்து வந்து போகும் "குடகுமலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி" போன்ற காதல் அலைவரிசையில் வரும் சோக மெட்டுக்களையுமே கேட்டுக் கேட்டுத் தீர்ப்பது வழக்கம். தத்துவம் கொட்டும் பாடல்களைச் சீண்டாது ஒதுக்கி வைப்பேன். அப்படியான பாடல்களைக் கேட்டால் "நீ அது ஆகிறாய்" என்ற தத்துவமசி விளக்கத்துக்கு இலக்கணமாகி விடுவோமோ என்ற பயமும் ஒருபுறம். அப்படி இருக்கையில் விதிவிலக்காக மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது தான் இந்த "நடந்தால் இரண்டடி" பாட்டு. செம்பருத்தி படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். எல்லாப் பாடல்களுமே கேட்டுச் சலிக்காத மெட்டுக்கள். அத்தோடு அந்த நேரம் மேம்படுத்தப்பட்ட ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வந்த பாடல்களில் இதுவுமொன்று. பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எடுத்த நேரமோ மொத்தம் முக்கால் மணி நேரம் என்று செல்வமணி முன்னர் தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அப்படி வந்த மெட்டுக்களில் ஒன்றுதான் நடந்தால் இரண்டடி. இப்போதெல்லாம் முக்கால் மணி நேரம் முப்பது பாட்டுக்கள் போடுமளவுக்கு நம்ம இசையமைப்பாளர்கள் அங்க இங்க கைவச்சு ஒப்பேத்திவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பாட்டிலும் துளிகூட இன்னொருவர் சாயல் கலக்காது எட்டுப்பாட்டுக் கொடுப்பது அசாத்தியம். அது ராஜாவால் மட்டுமே முடியும்.


மெளத் ஆர்கனை வைத்துக் கொண்டு பாடலின் ஆரம்பத்தைத் தொடுத்து அப்படியே பாட்டு முழுக்க வரும் பின்னணித் தபேலாவும், இன்னபிற வாத்தியங்களும் வார்த்தைகளைச் சேதாரமின்றிக் கரை சேர்க்கின்றன. பாட்டியம்மாவின் வீடு தேடி வரும் பேரன், அவள் அரவணைப்புக் கிட்டாத விரக்தியில் பாடும் இந்தப் பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் பிறைசூடன். பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள், விரக்தியில் இருந்தாலும் நேர்மறைக் கருத்தற்ற நம்பிக்கையோடு அவன் பாடும் வரிகள் உங்களையும் கட்டிப்போடும்.

Monday, October 10, 2011

இயக்குனர் டி.கே.போஸ் & இசைஞானி இளையராஜா கூட்டணி


எண்பதுகளிலே இசைஞானி, தனிக்காட்டு ராஜாவாக இருந்த நேரம். அவருடைய படத்தை போஸ்டரின் மேல் முகப்பில் ஒரு வட்டத்துக்குள் போட்டாலே போதும் வேறு எந்த சமரசங்களும் இல்லாமல் தயாரிப்பாளர் போட்ட காசுக்கு மேலாக எடுத்துக் கொண்டு போய்விடுவார். அந்த நேரத்தில் ராஜாவின் நாலு பாட்டுக் கிடைத்தால் போதும் அதற்கேற்றாற்போலக் கதை பண்ணிக் காசு பார்த்து விடலாம். இந்த நிலையில் கே.ரங்கராஜ், கங்கை அமரன் போன்ற இயக்குனர்கள் ராஜாவின் இசைக்குத் தோதான கதையைப் பொருத்திப் படம் பண்ணினார்கள். அதிலும் எண்பதுகளிலே கே.ரங்கராஜ் இன் படங்களுக்குத் தான் இசைஞானி இளையராஜா அதிகம் இசையமைத்தார் என்ற பெருமை வேறு.

இந்த வட்டத்தில் இருந்த இன்னொரு இயக்குனர் தான் டி.கே.போஸ். டி.கே.போஸ் இயக்கிய படங்கள் பெரும்பாலும் கங்கை அமரனின் மாமூல் கதைகளாக இருந்த காரணத்தால் அதிகம் தெரியாமலேயே மறைந்து போனவர் இவர். அந்த நேரத்தில் பேசும் படம், பொம்மை போன்ற சினிமா இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அந்த இதழ்களில் புதுப்படங்கள் குறித்த கண்ணோட்டத்திலேயே டி.கே.போஸ் என்ற இயக்குனர் கவிதை பாடும் அலைகள் என்றதொரு படத்தை இயக்குவதாக அறிந்து கொண்டேன். அப்போது தான் எங்கே படித்த ஞாபகம் , டி.கே.போஸ் உம் இசைஞானி இளையராஜாவும் பால்யகால நண்பர்கள் என்று. கவிதை பாடும் அலைகள் படத்துக்கு முன்பதாகவே என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ராசாவே உன்னை நம்பி ஆகிய படங்களை இசைஞானி இளையராஜாவோடு கூட்டணி அமைத்து இயக்கியிருக்கின்றார் இவர். அப்போதெல்லாம் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு உடம்பெல்லாம் சுதி ஏற்றிக் கொண்டு திரிந்த வேளை, பாட்டுக் காட்சியையும் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வீடியோ கடைகளில் இந்தப் படங்களைத் தேடியெடுத்து நண்பன் வீட்டு வீசிஆரில் போட்டுப் பார்த்ததுண்டு. நாலு பாட்டுக்காக ஒரு முழு நீளப்படத்தையே இரண்டரை மணி நேரம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது. ரஜினி, கமல் என்று கோஷ்டி அமைத்துப் படம் பார்க்கும் நண்பர் கூட்டத்தில், இளையராஜாவுக்காக ராமராஜனையும், புதுமுகத்தையும் பார்க்கும் சகிப்புத் தன்மை எனக்கு இருக்கலாம், கூட்டாளிகளுக்கு இருக்குமா? அடிக்கடி பல்பு வாங்கினேன். அதிலும் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தை நான் பரிந்துரைக்கப் போய், வீடியோக்கடையில் வாங்கி வீட்டுக்காரரோடு படம் பார்த்த இன்னொரு நண்பன் கொடுத்த சாபம் இன்றுவரை நினைவில் இருக்கு.
ஆனாலும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டியது அந்தப் படத்தில் வந்த எல்லாப் பாடல்களுமே அப்போது சென்னை வானொலியில் பிரபலப்படுத்தப்பட்டவை.


டி.கே.போஸ் என்ற இயக்குனர் தன்னளவில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய படங்களை அதிகம் கொடுக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜாவோடு இணைந்த இந்தப் படங்களே அவருக்கான விலாசத்தைக் கொடுத்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 18, 2011 இல் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த இவரின் நினைவாக, டி.கே.போஸ், ராஜாவோடு கூட்டணி அமைத்த படங்களின் பாடற் தொகுப்பை இங்கே தருகின்றேன்.



பொங்கி வரும் காவேரி படத்திற்காக வரும் "வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணுமணி" அருண்மொழியோடு சித்ரா


ராசாவே உன்னை நம்பி படத்தில் வரும் "ராசாத்தி மனசுல இந்த ராசாவின் நெனப்புத் தான்" மனோவோடு பி.சுசீலா


என்னை விட்டுப் போகாதே படத்திற்காக"பொன்னப்போல ஆத்தா" பாடும் இசைஞானி இளையராஜா


கவிதை பாடும் அலைகள் படத்தில் வரும் முத்தான மூன்று பாடல்கள் இனி

"உன்னைக் காணாமல் நான் ஏது" அருண்மொழி, சித்ராவோடு


"வானிலா தேனிலா வாடைப்பூ நிலா" மனோவும், சித்ராவும்


"கண்ணே என் கண்மணியே" மனோவும், சித்ராவும்

Tuesday, September 27, 2011

எழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்

தமிழ் படைப்புலகில் ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளரைக் கடைக்கோடி வாசகனும் தெரிந்து வைக்குமளவுக்குப் பரவலாக அறிமுகமானவர் தன் எழுத்து மூலம். "க்ரைம் கதைகளின் மன்னன்" என்று சிறப்பிக்குமளவுக்கு இவரின் திகில் நாவல்கள் வாசகர்களிடையே பெருமதிப்புப் பெற்றவை. சின்னத்திரை வைரஸ் வராத காலகட்டத்திலும், செல்போன் செல்லரிக்காத யுகத்திலும் இவர் தான் நெடுந்தூர பஸ் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் கூடவே தன் நாவல் மூலம் வந்து போகும் ஸ்நேகிதர். இன்றைக்குப் பாக்கெட் நாவல்கள் பொலிவிழந்து போனாலும் அவற்றை இன்னும் தாங்கிப்பிடிக்கும் எழுத்தாளர்கள் என்றவகையிலும், அந்தப் பாக்கெட் நாவல்களுக்கு முத்திரை கொடுக்கும் வகையிலும் ராஜேஷ்குமாரின் இடம் தனித்துவமானது.

நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களைப் பேட்டி எடுக்க அணுகியபோது துளியும் பந்தா இன்றி உடனேயே "எப்பவேணாலும் பண்ணலாம் பிரபா" என்று முழுமனதோடு சம்மதித்துச் செய்தும் காட்டினார். இந்த வானொலிப்பேட்டியில் ராஜேஷ்குமாரின் எழுத்துலக அறிமுகத்தில் இருந்து இன்றுவரை அவர் கடந்து சென்ற எழுத்துலகத் தரிசனமாக அமைகின்றது. இதில் குறிப்பாக அவரின் துப்பறியும் நாவல்களை வாசித்த காவல்துறையில் இயங்குபவர் ஒரு கொலைக்கேஸ் இற்கு உதவ அழைத்தது, வேட்டையாடு விளையாடு சினிமா திருடிய தன் நாவல், கின்னஸ் சாதனைப் பயணத்தில் இவரின் எழுத்துக்கள் என்று மனம் திறந்து பேசுகின்றார். பேட்டியின் ஒருங்கமைப்பில் உதவிய அன்பின் ரேகா ராகவன் அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த வேளை பகிர்கின்றேன்.

தொடர்ந்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் பேசுவதைக் கேட்போம்


Download பண்ணிக் கேட்க

Sunday, September 18, 2011

இசைஞானி - சத்யன் அந்திக்காடு கட்டிய "ஸ்நேக வீடு"


நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதாவது மாயக்கண்ணாடி பாடல் தொகுப்புக்குப் பிறகு சுடச்சுட வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல்கள் குறித்த என் பார்வையைப் பதிவாக்க ஆவல் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் இன்றைக்கு திரை இசை உலகம் இருக்கும் நிலையில் அதீத எதிர்பார்ப்பை வைத்து, ஒரு படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று தேடவைத்த படங்களில் இதுதான் இப்போதைக்குத் தேறியிருக்கின்றது என்ற நிலை. அதற்குப் பல காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன்.

சத்யன் அந்திக்காடு, மலையாள சினிமா உலகில் 31 ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெற்றிகரமான இயக்குனர். ஜனரஞ்சகம் மிகுந்த சினிமா என்றால் என்ன என்பதை இன்றளவும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு இன்றுவரை அதை வெற்றிகரமாகப் பதிவாக்கி வருபவர். சத்யன் அந்திக்காடு இன் காலத்தில் வந்தவர்களும் சரி, அவருக்குப் பின்னால் வந்தவர்களும் சரி, ஆரம்பத்தில் நல்ல பல படைப்புக்களைத் தந்து ஒரு எல்லையில் தாமும் தடுமாறி மக்களையும் குழப்பி ஜனரஞ்சகக் கிரீடத்தைத் தொலைத்த இயக்குனர்கள் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் காணலாம். ஜி.வி.பிரகாஷ்குமார் வரை வித்தை பண்ணி வெற்றி தேடிப்பார்க்கும் இயக்குனர் இமயம் வரை இது தொடர்கிறது.
சாதாரண மனிதர்களின் உணர்வுகளின் பகிர்வாக, எளிமையான எல்லோருக்கும் புரியத்தக்க படைப்பாகக் கொடுத்து அழுத்தமான தீர்வையும் முன்வைக்கும் பாணி தான் சத்யன் அந்திகாடு அன்றிலிருந்து இன்றுவரை பிடிவாதமாகக் கைக்கொள்வது. அந்தப் பிடிவாதம் தான் அவருக்கான அங்கீகாரத்தை எப்போதும் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் "ஸ்நேக வீடு" என்றதொரு மலையாளச் சித்திரம் திரைக்கு வரவிருக்கின்றது. இது சத்யன் அந்திக்காடு இன் 51 ஆவது படம்
"அம்முக்குட்டி அம்மாயுடே அஜயன்" என்ற பெயர் சூட்டப்பட்டுப் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் தான் "ஸ்நேக வீடு" ஆக மாறியிருக்கின்றது. மோகன்லால், ஷீலா, பத்மப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களோடு சத்யனின் படங்களில் பெரும்பாலும் விடாமல் வந்து போகும் இன்னசெண்ட், கே.பி.ஏ.சி.லலிதா, மம்முக்கோயாவும் இருக்கின்றார்கள்.

சத்யன் அந்திக்காட் உடன் இசைஞானி இளையராஜா இணைந்து இதுவரை கொடுத்த எட்டுப்படங்களையும் பார்த்திருக்கின்றேன். அதைப் பதிவாகவும் கொடுத்திருக்கின்றேன் இங்கே. மலையாள சினிமாவில் பாடல்கள் என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்லது அதற்கும் கீழே தான். இசையைச் சார்ந்து வெளிவரும் படங்கள் தவிர மற்றெல்லாப் படங்களில் ஒன்றோ இரண்டோ அதிக பட்சம் மூன்றோ தான் இருக்கும். படத்தின் முக்கிய திருப்பத்தில் ஒரு சோகச் சம்பவத்துக்கான குரலாக ஜேசுதாஸ் வந்து போவார். பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு ராஜாமணி போன்ற மாமூல்களையும் வைத்து ஒப்பேற்றிவிடுவார்கள். இப்போது தமிழ் சினிமாவைக் காப்பியடித்துக் குட்டிச் சுவராகிக்கொண்டிருக்கும் மலையாள மசாலாக்கள் இங்கே விதிவிலக்கு.

ஆனால் சத்யன் அந்திக்காடு இதுவரை இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய அனைத்துப் படங்களிலும் பாடல்களுக்குக் கொடுத்திருக்கும் கெளரவம் என்பது இசைஞானி இளையராஜா மீதான காதலின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். இளையராஜா கொடுத்த மூன்று பாடல்களை வைத்துக்கொண்டாவது சத்யன் அவற்றைப் பொருத்தமான தருணங்களில் நுழைத்துக் காட்சியின் மீதான கெளரவத்தை அதிகப்படுத்திக் கொள்ளவைப்பார். எண்பதுகளில் பாரதிராஜா, மணிரத்னம் போன்றோர் செய்து காட்டிய வித்தை தான் இது. "ஸ்நேக வீடு" பாடல்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் வந்திருக்கின்றது, படம் இன்னும் வரவில்லை என்ற நிலையில் அந்தப் பாடல்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைச் சொல்கிறேன்.


எடுத்த எடுப்பிலேயே நான் கேட்ட முதற்பாட்டு கிட்டார் இசையை மீட்டிக் கொண்டே ஆரம்பிக்கும் "அம்ருதமாய் அபயமாய்" ஹரிஹரன் குரலில் வரும் இந்தப் பாட்டுத் தான் படத்திற்காகப் போட்டிருக்கும் மற்ற நான்கு மெட்டுக்களில் இருந்து முதல் இடத்தை மனசுக்குள் பிடிக்கின்றது. அருமையான மெலடி, கண்டிப்பாக சத்யன் இந்தப் பாடலைத் தன் வழக்கமான ஸ்நேகபூர்வமான காட்சி ஒன்றுக்குப் பயன்படுத்தவெண்ணி ராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்கவேண்டும். ஹரிஹரன் குரலைப் பழுது சொல்லும் யோக்கியதை எனக்கில்லை. ஆனால் சிலசமயம் தேர்ந்த ஆட்டக்காரர் கொடுக்கும் வழக்கமான சிக்ஸர்களை விட அதே ஆட்டத்தில் ஆடும் இன்னொரு இளம் வீரர் அடித்து ஆடும் ஆட்டம் வெகுவாகக் கவர்ந்து விடும். அப்படித்தான் இதே பாடலைப் பாடும் ராகுல் நம்பியாரின் குரலின் மீதான நேசம். இந்தப் பாடலை ஹரிஹரன் பாடும் போது ஊதித் தள்ளிவிடும் அனுபவம், ராகுல் நம்பியார் பாடும் போது இசைஞானி என்ற ஜாம்பவானிடம் பெற்ற மெட்டைத் தன்னளவில் உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற துடிப்பே அவரின் பாடலை மனதுக்கு நெருக்கமாக வைக்கின்றது. ராகுல் நம்பியார் ஏற்கனவே "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய மல்ச கன்னிகே" என்ற பாக்ய தேவதா பாடலில் ராஜாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பாடகர். அந்த நம்பிக்கையை நன்னம்பிக்கை ஆக்கிக் காட்டியிருக்கின்றார். இந்தப் பாடலில்.

அடுத்ததாக ஸ்நேக வீட்டில் என்னைக் கவர்வது வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியாவையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஸ்ரேயா கொசல் பாடும் "ஆவணித்தும்பி" என்ற பாடல். கதாநாயகிக்காக ஒதுக்கி வைத்திருக்கும் பாடல் என்று எண்ணத் தோன்றும் இந்தப் பாடல் எடுப்பான, எளிமையான இசையோடு ஸ்ரேயா கொசலுக்காகவும் கேட்கக் கேட்கத் தோன்றும் மீண்டும் மீண்டும்.

"செங்கதிர்க்கையும் வீசிப் பொன்புலர்ப்பூங்காற்றே" என்ற பாடலையும் இரண்டாவதாகப் பிடித்துப் போன "ஆவணித் தும்பி" பாட்டுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் சித்ராவின் குரலைக் கேட்கும் போது இருக்கும் நேசமும் சேர்ந்துகொள்ளப் பாடல் மீதான காதலைப் பின்னாளில் இன்னும் அதிகப்படுத்தலாம்.

மீண்டும் ராகுல் நம்பியார் இம்முறை ஸ்வேதாவோடு கூட்டணி கட்டிப் பாடும் "சந்த்ர விம்பத்தின்" பாடல் மலையாளத்துக்கே உரித்தான எளிமையும் தமிழ்த் திரையிசைக்கு அந்நியமான மெட்டாகவும் பதிகின்றது. காட்சியோடு பார்க்கும் போது பிடிக்கலாம் போலப்படுகின்றது. ஏனென்றால் இதே மாதிரி பாக்ய தேவதா படத்தில் வந்த, கார்த்திக் பாடும் பாடலான "ஆழித் திரதன்னில் வீழ்ன்னாலும் " என்ற பாடலும் எனக்குக் கேட்டமாத்திரத்தில் அதிகம் ஒட்டிக்கொள்ளவில்லை. படத்தின் காட்சியோடு சேர்த்துப் பார்த்தபின் தவிர்க்க முடியாத பாட்டாகி விட்டது. பாடகி மஞ்சரிக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய ஆறுதல்.

மலையாளம் புரியாத மொழி என்பதை விடத் தேடிப்புரிந்து போற்றும் மொழியாக அமைய சத்யனின் படங்களும் ஒரு காரணம் என்னளவில். சத்யன் - இளையராஜா படங்களில் அமைந்த பாடலாசிரியர்களில் ஆரம்பத்தில் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியை வைத்தும் பின்னிரண்டு படங்களில் வயலார் சரத் சந்திர வர்மாவையும் பாடலாசிரியர்களாக வரித்துக் கொண்டலும், எனக்கென்னமோ, வைரமுத்து - ராஜா கூட்டணி போல எண்ணிப்பார்க்க வைக்கும் கிரிஷ் புத்தன்சேரி - ராஜா என்ற கெமிஸ்ட்ரி இன்னும் வெகுவாகப் பிடிக்கும். அச்சுவிண்டே அம்மா படத்தில் வரும் ஒரு முக்கிய திருப்புமுனையில் ஒரு பாடல் அதில் எந்த வித வார்த்தை ஜாலங்களும் இன்றி "எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே" என்ற சாதாரண வரிகளுக்குக் கிடைக்கும் அழுத்தம் போல இன்னும் பல உதாரணங்கள் கிரிஷ் புத்தன்சேரியும் ராஜாவும் கூட்டணி கட்டி மெட்டுக்கட்டிப் போட்ட பாட்டுக்களில் கிட்டும்.இன்னொன்று, மனசினக்கரே படத்தில் வரும்"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா". ஆனால் கிரிஷ் புத்தன்சேரி இரண்டு வருஷங்களுக்கு முன்னால் காலமாகிவிட்டார் என்ற துயரமும் இங்கே பதிவாக்க வேண்டும். பின்னொரு நாளில் இவ்விருவர் கூட்டணி குறித்து விலாவாரியாக அலசலாம்.

சத்யன் அந்திக்காடு - இசைஞானி இளையராஜாவின் கத தொடருன்னு , ஸ்நேக வீட்டிலும் கூட.

"அச்சுவிண்டே அம்மா" படத்துக்காக "எந்து பறஞ்சாலும்" பாட்டைப் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறார் சத்யன் அந்திக்காடு, கூடவே ராஜா மெட்டுப் போட, சித்ரா பாடுகிறார்.


இசைஞானி குறித்து சத்யன் அந்திக்காடு சொல்கிறார் இப்படி