Pages

Wednesday, April 4, 2018

விழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕



2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல். 

அந்தப் பணியிடத்தில்  ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.
ஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.

தென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.
“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும். 

“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார். 
கீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.

தமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில் 
இந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.

நதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு 
எங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்
“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து
ஐக்கியமாகி விழுவதைக் காணலாம்.

பாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.
இருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்?
இந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.

ஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.
ஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU

வீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்
இன்னொரு பரவச அனுபவம்
https://youtu.be/vq3amtfXZf4

“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)

https://youtu.be/txf--Sx4r_4

“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)

https://youtu.be/ZKn68DQJ6jk

“ஜானே தோ நா” (சீனி கம்)

https://youtu.be/88LD0Gn_Fjc

இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி