Pages

Monday, June 2, 2025

இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காத இளையராஜா ❤️❤️❤️ பாடலாசிரியர் இளையராஜாவின் உலகியல் 💚❤️💛


இசைஞானி இளையராஜாவின் பாட்டுச் சரித்திரத்தில் அவரின் இன்னொரு முகமாக அறியப்படுவது தேர்ந்தெடுத்த பாடலாசிரியர் என்றதோர் முகம்.

இளையராஜாவின் வெண்பா கட்டும் திறனை கவிஞர் வாலி மற்றும் கவிஞர் முத்துலிங்கம் போன்றோர் உதாரண விளக்கங்களோடு காட்டிய சம்பவங்கள் உண்டு.

“என் பாவக்கணக்குக்குப் பட்டியல் போட்டால் சொல்ல நடுங்குதம்மா”

இப்படியாகச் சித்தர் பாடலை உதாரணம் காட்டி,

“அப்பன் என்றும் அம்மையென்றும்” பாடலை கவிஞர் வாலியிடம் வாங்கிய அனுபவத்தை குணா படப் பாடல் ஒலிப்பேழை சான்று பகிர்கின்றது. அவ்வளவுக்கு ஆழமாகக் கவிதைகளையும், பழதமிழ் இலக்கியங்களை நேசிக்கும் ஒரு உன்னதமான இசையமைப்பாளர் அவருக்கு முன்பும் பின்பும் உண்டா என்பது கேள்விக் குறி.

தாம் பசியோடிருந்து வாய்ப்புத் தேடிய காலத்திலும், பாட்டுக் கச்சேரிக்குப் பஞ்சமில்லை என்று மாலை வேளைகளிலே 

கால மகள் கண் திறப்பாள்

சின்னையா

நாம் கண் கலங்கி

கவலைப் பட்டு என்னையா

நாலு பக்கம் வாசலுண்டு

சின்னையா

அதில் நமக்கும் ஒரு வழியில்லையா

என்னையா...

ஆனந்த ஜோதி திரைப்படத்தில் சுசீலா பாடிய, கண்ணதாசன் வரிகள் சமைக்க விஸ்வ நாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையமைத்த அந்தப் பாடலைப் பாடச் சுற்றமுள்ளவர்களின் இசைப் பசியாற்றிய தம் வாழ்வியல் அனுபவத்தை இளையராஜாவின் இளஞ்ச்சகோதரர் கங்கை அமரன் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடல் தான் பின்னாளில் ஒரு பெரும் இசையமைப்பாளராக இளையராஜா வருவதற்கு அச்சாரமாக அமைந்த தன்னம்பிக்கைப் பாட்டு என்று சொல்லியும் இருக்கிறார்.

அதனாலோ என்னமோ பாடலாசிரியர் இளையராஜா என்று வரும் போது அவர் ஆன்மிகம், காதல், இயற்கை, காட்சிப் பின்புலம், பொதுவானதொரு முகப்புப்பாட்டு என்று பல்வேறு சூழலுக்கும் இருநூறைக் கடக்கும் பாடல்களை எழுதினாலும், அவற்றில் அதிகம் விஞ்சி நிற்பது தத்துவ விசாரங்களே.

அதாவது ஒரு படத்தின் நாயக பாத்திரத்துக்கோ அல்லது குறித்த காட்சியின் கனத்தைப் பின்னணிப் பாடலாகக் கொடுக்க வேண்டிய சூழலிலோ அந்தப் படைப்புக்கு மட்டுமன்றி, கேட்கும் ரசிகனுக்கும் தன்னம்பிக்கையை அல்லது விரக்தியை ஆற்றுப்படுத்தும் கையாகவும் தோள் பற்றுகின்றது அவரின் பாடல்கள்.

வாலியார் சொல்லும் “உள்ளங்குரங்கை” ஒரு கட்டுக்குள் கொண்டு வருவன அவை.

பதிவை எழுதியவர் : கானா பிரபா 

பாடலாசிரியராகத் தன் ஆரம்ப வாழ்வியலில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய வகையில் “ஆளப்பிறந்தவன்” படத்தில் மக்களின் குறை தீர்க்க ஒரு மகாராஜா பாத்திரத்தில் உருவெடுக்கும் நாயக துதியாக “கொடி கட்டிப் பறக்குற ராஜா எங்க மகராஜா” பாடலில் மக்களின் பொதுவான பிரச்சனைகளை இனம் காட்டி அவற்றுக்கான தீர்வே அந்த நாயகன் என்ற வகையில் ஒரு நேரடிக் கருத்தைப் பதித்திருப்பார். 

அதே பாத்திரம் சமூக அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் சூழலில் 

“என்னால் முடியாது சும்மா இருப்பது” பாடலின் வழி 

“உண்பதும் உடுப்பதும் படுப்பதும் 

அனைவரின் அன்றாடம்

கெடுப்பதைத் தடுப்பதும்

கொடுப்பதும் எந்தன் அன்றாடம்”

என்று பொதுவுடமைக் கருத்தோடு கோடிட்டிருப்பார்.

“கல்லிலே உயிரைக் கண்ட

 மனிதன் ஒரு கலைஞன் தானே

சிலையிலே உணர்வைத் தந்த

கலைஞன் அவன் இறைவன் தானே”

இப்படியாகப் பொடி வைத்தவர், 

“உயிராய் இங்கு வாழ்ந்திடும்

பெண் உணர்வைக் கல்லாய் மாற்றிடும்

இந்தப் பாவம் அதைச் செய்யச் சொன்னதாரோ...”

என்று “இரவுப் பூக்கள்” படத்துக்காக 

“இந்தப் பூவுக்கொரு கதை உண்டு” பாடலில் அந்த அபலைப் பெண்ணுக்காக அனுதாபம் கொட்டியிருப்பார்.

காயப்பட்ட இன்னொரு பெண்ணின் மனசுக்கு ஒத்தடமாக

“கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா”

என்று “தென்றல் சுடும்” பாடலில் அனுதாபக் குரலாய் அமைந்திருப்பார்.

பயணம் செய்யும் வண்டியிலே

தலை மேல் ஏண்டி பாரம் பாரம்

பாரங்களை கீழாய் வைத்தால்

சுமந்தே வண்டி போகும் போகும்

எல்லோருக்கும் பாரம் உண்டு

இல்லாதவர் யார் தான் இங்கே

பொல்லாதவர் வாழும் ஊருள்

வேண்டும் துணை அன்பே அன்பே

என்று “கண்ணம்மா கண்ணம்மா” (தென்றல் சுடும்) என்று அதீதமாகத் தோள் கொடுத்துத் தாயாகி நிற்கும் ராஜ வரிகள்.

“வீதியில் இசைத்தாலும்..

வீணைக்கு இசை உண்டு...

வீணாகி போகாது,

கேட்கின்ற நெஞ்சுண்டு…”

“உன் குத்தமா” (அழகி) இன்னொரு வாழ்வு கொண்ட பெண்ணை ஆற்றுப்படுத்தும் கீதம்.

“காயமே இது பொய்யடா 

 வெறும் காற்றடைத்த பையடா”

என்ற சித்தர் பாடலை அடிநாதமாகக் கொண்டு

“தேகம், அது சந்தேகம்

இந்த காயம், அது வெங்காயம்

அட வாழ்க்கை என்பதும்

தேகம் என்பதும்

பாசம் என்பதும் ஒன்னும் இல்ல..”

என்ற வரிகளைக் கட்டிக் கொடுத்தார் “காலிப் பெருங்காய டப்பா” (மந்திரப் புன்னகை) பாடலில்.

இளையராஜா பாடலாசிரியராக அதிக பாடல்களை எழுதிக் குவித்தது 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான். பதிவை எழுதியவர் கானா பிரபா 

“அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோ” என்று சின்னக் குயில் பாடுது திரைப்படத்துக்காக எழுதிப் பாடியிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் தனிமையில் இருந்த தாய்க்காக, பிள்ளைகளே திருமணம் நடத்தி வந்தது இப்போது உங்கள் கண்முன்னே வந்திருக்க வேண்டுமே?

கலைவாணர் போல காலத்துக்கு முந்திய சிந்தனையெழுச்சியின் வெளிப்பாடு இது.

“வசந்தமும் இங்கே வந்ததென்று

வாசனை மலர்கள் சொன்னாலும்

தென்றலும் இங்கே வந்து நின்று

இன்பத்தின் கீதம் தந்தாலும்

நீ இன்றி ஏது வசந்தம் இங்கே” 

“எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்” பாடல் காதல் பாடலாக இருந்தாலும் தனிமை விரும்பிகளின் தோழனாக அரவணைக்கும் ராஜாவின் வரிகள்.

என்னை விட்டுப் போகாதே படம் இளையராஜா முழுமையாகப் பாடல்களை எழுதி இசையமைத்தது.

அங்கேயும் சித்தர் வாய்மொழிகளுக்கு இசைவாக

“எலும்பாலே கூடு கட்டி

 தோலாலே மூடிப்புட்டு

 உசுரக் குடுத்து ஆட்டிப் படைக்கிறான்”

என்ற தத்துவப் பாடலைக் குழுவோடு சேர்ந்து பாடினார். அங்கேயும் சாதி மத, கட்சி பேதத்தைத் தன் வரிகளின் துணையோடு சாட்டை போடுவார்.

“வெள்ளை நிறத்தொரு பச்சைக் கிளிப்பிள்ள்

“திட்டி திட்டி பேசினாலும்

வட்டியில சோறு வைப்பா

ஒட்டிபோன ஒடம்புன்னாலும்

உசுர விட்டு பாசம் வைப்பா...,

பொன்னப் போல ஆத்தா 

என்னைப் பெத்துப் போட்டா”

என்று அதே படத்துக்காகத் தன் அம்மா வாழும் காலத்திலேயே எல்லா அம்மாக்களுக்குமாக எழுதியளித்தார்.

பின்னாளில் அதே தொனியில் “பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா” (படம்: என்னைப் பெத்த ராசா), “அம்மான்னா சும்மா இல்லேடா” (படம் : திருப்புமுனை), “சொந்தம் என்று வந்தவளே ஆத்தா” (படம் : தாலாட்டு பாடவா) கொடுத்திருக்கிறார்.

“கொஞ்சம் பசிச்சா ..

நெஞ்சு கொதிக்கும்

தாயி போலத்தான்…

நண்பன் அவனே

சாமி கிட்டத்தான்

ஒன்ன நெனச்சு…

வேண்டி இருக்கும்

அன்பன் அவனே

அன்னையப் போல் நண்பனும் உண்டு..”

என்று தாயை நண்பனுக்கு ஒப்பிடுவார் “அம்மான்னா சும்மா இல்லேடா” பாடலில்.

“மாடிழுத்த வண்டியெல்லாம் 

இழுத்துப் பார்த்தேன்

 நான் மனுஷனா மிருகமா

உழைச்சுப் பார்த்தேன்...

கஷ்டப்பட்ட போதிலும் 

காசு வந்து சேரல...”

பாட்டாளி வர்க்கத்தின் குரலாய் ஒலிப்பார் கிருஷ்ணன் வந்தான் படத்துக்காக. தேங்காய் சீனிவாசனின் தயாரிப்பில் அவரின் நடிப்பிலேயே அந்தப் பாடல் இடம்பிடித்திருக்கும். இந்தப் பாடல் போலவே அவரும் கடன் சுமையில் அல்லற்பட்டது வலிக்கும் நிஜம்.

“பிள்ளையரே...பிள்ளையாரே நாட்டைக் காக்கப் போகும் பிள்ளை யாரு...” என்று கடவுளாரிடம் தன் தேசம் குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்திய முகப்புப் பாடல் “ராசாவே உன்னெ நம்பி” திரைப்படத்தில்.

தன் தம்பி கங்கை அமரனுக்கு மட்டுமா ஏராளம் கூடப் பிறக்காத தம்பியருக்காக ஒரு தன்னம்பிக்கைப் பாட்டு “வெளுத்துக் கட்டிக்கடா” (படம்: செண்பகமே செண்பகமே).

“பூமிக்குள் ஊறிடும் நீரதுதான்

ஆறாக ஊரெங்கும் ஓடுவது

ஆறோடும் பாதையை யாரு இங்கே

நேராக சீராக ஆக்கியது

என்னதென்றும் உன்னதென்றும்

பேதங்கள்தான் ஏனோ

என்ன இது என்ன இது கேவலங்கள் தானோ?”

என்றும்,

“மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று

வைரக்கல் என்றதை யார் சொன்னது

கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும்

சின்ன புத்தி அதை யார் தந்தது”

என்றும் ஒரு இயற்கையை நேசிக்கும் “கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே” (படம் : தீர்த்தக் கரையினிலே) பாடலில் கூட சமூக விழிப்புணர்வைக் கொண்டு வந்து காட்டுவார்.

இளையராஜா ஒரே படத்தில் அதிக பாடல் எழுதிய கணக்கில் வரும் வாழ்க வளர்க்க படம்.

“சிட்டுக்குருவி பாரு கட்டுகளும் ஏது” மற்றும்

“ஈசுவரனே ஈசுவரனே 

பொம்பளைய என்னத்துக்கு 

தலையில் வச்சான்

பொம்பளை இல்லாட்டி 

உலகம் இல்லடா”

ஆகிய பாடல்களிலும் சுதந்திர வேட்கையும், பெண்ணியமும் பேசப்பட்டிருக்கும்.

“கண்ணே நவமணியே உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ” (படம் : என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு) பாட்டு பின்னாளில் தன் செல்வமகள் பவதாரிணி பிரிவின் பாடலாக அமையும் என்று நினைத்திருப்பாரா?

“பணத்தைத் தேடும் பிணங்களே 

 மனத்தைத் தேடிப் பாருங்கள்”

என்ற அடிநாதத்தோடு “கொலைகள் செய்தல் குற்றம் என்று சட்டம் இருக்குது (படம் : நான் சொன்னதே சட்டம்) என்று நீதி தேவன் சாட்சியமாக வருபவர்,

“உலக வாழ்க்கையே இங்கே ஜெயிலு வாழ்க்கை தான்” என்று சிறைத்துறையை ஒப்புவமை காட்டுவார் ராஜாதி ராஜாவில்.

சிறைக்குள் சிந்தனையைத் தட்டி எழுப்ப இன்னொன்றாக

“நீ உள்ள பொறந்து வெளியே போன கண்ண பிரானே” என்று “எதிர்க்காற்று” படத்திலும் தந்திருப்பார். அதே படத்தில்

“சாமியாரப் போனவனுக்கு சம்சார நினைப்பெதுக்கு” என்ற எள்ளலும் கொடுத்தார்.

“பாட்டாலே புத்தி சொன்னார்” தன் வாய்மொழிப் பாடலாகக் கரகாட்டக்காரனில்  கொடுத்தாலும், அங்கே ஒரு இசைக்கலைஞனின் உள்ளார்ந்த கிடக்கை வெளிப்பட்டிருக்கும். 

பின்னாளில் வந்த “என்னை ஒருவன் பாடச் சொன்னான்” பாடலும் அதே தொனியில்.

“சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன”

“ஏலே இளங்குயிலே என்னாசைப் பைங்க்கிளியே”

இரண்டையும் தனக்காகவும், சுசீலாவுக்காகவும் எழுதி நினைவுச் சின்னத்துக்காகக் கொடுத்தாலும் அங்கே வயது கடந்து எல்லோருக்குமான தாலாட்டு பொதிந்திருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இரண்டு தத்துவப் பாடல்கள்,

ஒன்று “உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி” இன்னொன்று “மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்”. அந்த இரண்டாவதை இளையராஜாவிடமிருந்து பிரிந்த காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்து கேட்டு மெய் சிலிர்த்ததை நடிகர் மாரிமுத்து சாட்சியம் பறைந்தார்.

பின்னாளில் “நிலவே முகம் காட்டு” படத்துக்காக எழுதிய “தன்னந்தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு அதில் நானுண்டு” பாடலுக்கு “உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி முன்னோடி.

“வேல வேல எல்லோர்க்கும் உண்டு (படம்: பிக் பாக்கெட்) பாடல் ஒரு ஜாலியாக அமைந்திருந்தாலும் அங்கேயும் நாம் செய்யும் எல்லாமே வேலை தான் என்ற மெய்த்தன்மையைக் காட்டி உற்சாகப்படுத்துவார்.

“தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான்”

என்ற உலகியல் யதார்த்தம் “பொன்மனச் செல்வன்” படத்தின் காட்சிச் சூழலோடு ஒட்டி வெளிப்பட்டிருக்கும்.

இதே அலைவரிசையில் இன்னொன்று 

“எங்கே நிம்மதி நிம்மது என்று தேடிப்பார்த்தேன்” (படம்: நடிகன்).

கட்சிக்காக ஓடாய் உழைத்த தொண்டனைத் தட்டி எழுப்பி

“தம்பி! நீ திரும்பிப் பாரடா” என்று அரசியல் அழுக்குகளைக் காட்டி நிற்பார் “என் உயிர்த் தோழன்” இல்.

அதிகம் கவனிக்கப்படாத ஒரு அதிமதுரம், பாடகர் மலேசியா வாசுதேவன் இயக்கிய “நீ சிரித்தால் தீபாவளி” படத்தில் இடம்பெற்ற

“பாசம் என்னும் நூலில் ஆடும் பொம்மை எல்லோரும்”

“பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்குத் தெரியும்”

படத்தின் காட்சியோட்டத்தில் ஈர்க்கப்பட்ட இளையராஜா கொடுத்த “என் ராசாவின் மனசிலே” முரண்பட்ட தாம்பத்ய பந்தத்தினைக் காட்டி நிற்கும்.

“இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு” ஜாலியாகக் இளைஞர்களுக்காகக் குரல் கொடுத்த “வா வா வசந்தமே” பாட்டு, அது இனித்த அளவுக்குப் பரவலாகப் போய்ச் சேராதது.

“சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ” என்று “திருநெல்வேலி”க்காக அமைந்த விழிப்புணர்ச்சிப் பாடல்.

“பணம் மட்டும் வாழ்க்கையா” (படம் : சொல்ல மறந்த கதை), 

“காட்டு வழி கால் நடையா போற தம்பி) அது ஒரு கனாக்காலம் பாடல் இவரின் தம்பியார் கங்கை அமரன் எழுதிய “ஆலோலம் பாடி” (படம் : ஆவாரம் பூ) பாடலைப் போன்று தனிமையின் தோழனாகத் தோள் கொடுக்கும்.

ராஜாவின் ரமண மாலையில் இருந்து மீண்டும் திரைக்காக எடுத்தாண்ட “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்) நான் கடவுள் படப் பாடல் சம நேரத்தில் ஆன்மிகமும், தத்துவமும் பறையும்.

அதே பாங்கில் சம அர்த்தத்தில் 

“காட்டுவழி துன்பம் இல்லை” என்று தொடங்கும் பாட்டு சுமைகளெல்லாம் சுமையே இல்லை (படம் : தாண்டவக் கோனே)  என்ற தத்துவார்த்தத்தோடு அமையும்.

இப்படி நீளும் தத்துவப் பாடல்களை எழுதியதோடு பெரும்பாலானவற்றைத் தானே பாடியும் கொடுத்திருப்பார். அங்கே தான் பாடலின் ஆன்மா வெளிப்பட்டிருக்கும்.

“தன் திரையிசையில் ஒரு ஒழுக்கத்தைக் கற்றுத்தந்தவர் இசைஞானி இளையராஜா” என்று இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் போற்றுமளவுக்குத் தலைமுறை கடந்து நேர்மையான இசை கொடுக்கும் வள்ளல்.

“நெல்லுக்குள்ளே மணியை

நெருப்பினிலே ஒளியை

உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்

உனக்கு இல்லையா தம்பி

நமக்கு இல்லையா...

கால மகள் கண் திறப்பாள்

சின்னையா...”

என்று தன் இசைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் வேட்கையோடு கேட்ட அந்தப் பாடலின் தாக்கம் பின்னாளில்

மரத்த வச்சவன்

தண்ணி ஊத்துவான்

மனச பாத்துதான்

வாழ்வ மாத்துவான்

ஏ மனமே கலங்காதே

வீணாக வருந்தாதே

பாரங்கள் எல்லாமே

படைத்தவன் 

எவனோ அவனே சுமப்பான்

என்று தன் கோடிக்கணக்கான ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் ஆறுதல் வரிகளாகக் கொடுத்து “மன வாழ்வு” தந்த இசை வள்ளல்.

தன் அடுத்த சாதனை பற்றித் துடிப்போடு சிந்தித்துக் கொண்டிருக்கும்

“இளவல்”

இமைப் பொழுதும் எம் நெஞ்சில் வாழும் 

இசைஞானி இளையராஜாவுக்கு (ஜூன் 3) பிறந்த தின வாழ்த்து.

கானா பிரபா

02.06.2025

0 comments: