சிகரம்” படப் பிடிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருக்கிறார்.
அந்தச் சமயம் துணை நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் தன் மகளின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழை அந்தப் படக் குழுவில் இருந்த உதவியாளர்களிடம் கொடுப்பதைப் பார்த்து விட்டார்.
கவிதாலயா கிருஷ்ணனை அழைத்து
“எனக்கு அழைப்பில்லையா?” என்று கேட்டாராம் எஸ்பிபி.
“நீங்க ஐந்து மொழியில் பாடிட்டிருக்கிற பிசி ஆன ஆள் நம்ம வீட்டுக்கெல்லாம் வர நேரம் இருக்குமா? “
என்று கவிதாலயா கிருஷ்ணன் சமாளிக்கவும்,
“அழைப்பது உன்னோட கடமை” என்று எஸ்பிபி சொல்லி இருக்கிறார்.
தன் மனைவியோடு எஸ்பிபி வீடு போய் முறைப்படி தன் மகள் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார்.
அந்த நாளில் மும்பையில் ஒரு பாடல் பதிவு இருக்கு என்று எஸ்பிபியின் நண்பரும் உதவியாளருமான விட்டல் பக்கத்தில் நின்று ஞாபகப்படுத்தினார் எஸ்பிபிக்கு.
“கவிதாலயா” கிருஷ்ணன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து இரவு எட்டரை மணி இருக்கும்.
வீட்டுக்கு வெளியே அழைப்புக் குரல்.
எஸ்பிபி தன் மனைவியோடு நிற்கிறார்.
கதவைத் திறந்து வீட்டுக்குள் போய், அப்போது தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மகளை எழுப்பி வாங்கி வந்த ஜிமிக்கியை அணிவித்து விட்டுத் திரும்பிய எஸ்பிபியிடம்
“சார் நான் என்ன பெரிய தயாரிப்பாளரா இல்லை இயக்குநரா? எதுக்கு இவ்வளவு சிரமம்?”
என்று நெகிழ்ந்த கவிதாலயா கிருஷ்ணனிடம்,
"இல்லடா நீ மனுஷன்டா"
என்றாராம் எஸ்பிபி
அதைப் பார்த்துக் கொண்டிருந்த கவிதாலயா கிருஷ்ணனின் அப்பா அழுதுட்டாராம்.
இதற்காகவே மும்பையில் இருந்து வந்தவர் மீண்டும் மும்பை புறப்பட்டாராம்.
கவிதாலயா கிருஷ்ணனின் அம்மா ஏதோ தன்னுடைய மகனின் நட்பு என்ற உரிமையில், எஸ்பிபிக்கு போன் பண்ணி நான் சிங்கப்பூர் போகணும் உதவி பண்ண முடியுமா? என்று கேட்ட போது
அவரின் முழுப் பயண ஏற்பாடுகளையும் பண்ணிக் கொடுத்தாராம் அந்தப் பரபரப்பிலும்.
இன்னொரு சம்பவம்,
குணச்சித்திர நடிகரும் ஆஸி வாசியுமான சுரேஷ் சக்கரவர்த்தி மெல்பர்னில் ஒரு உணவகம் நடத்துகிறார். இங்கே எஸ்பிபி வரும் போதெல்லாம் கச்சேரி முடிச்சு, நேராக உணவகம் வந்து அங்கே சமையல்காரர்களோடு சிரிச்சுப் பேசிக் கும்மாளம் அடிச்சு, சுடச் சுடப் பரிமாறுவதைக் குழந்தை போலச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களோடு கூட்டத்தோடு இருந்து ஸ்பெஷலாகப் பாட்டுப் பாடி மகிழ்விப்பாராம்.
எஸ்பிபி என்ற மகா கலைஞனை விட்டு விடுங்கள்.
இப்படி மகா கனம் பொருந்தி மனிதனை எப்போது பார்க்கப் போகிறோம்?
கடந்த ஆண்டு மறைந்த என் அன்பு நண்பன் ஹரியின் அம்மா எனது “SPB பாடகன் சங்கதி”
நூலைப் படித்து விட்டு ஒரு காணொளிப் பகிர்வை அனுப்பி வைத்து மானசீகமாகப் பாராட்டினார்.
இப்படி வயது வேறுபாடின்று எல்லோரின் நேசிப்புக்குமான ஒரு மகா ஆத்மா எங்கள் எஸ்பிபி.
இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சில நூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கும். இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர்.
இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல்
வித்தகர். பதிவை எழுதியவர் : கானா பிரபா
அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே” இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத
குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத்,
அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது,
அதையும் கடந்து போயிருக்கிறது.
ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.
மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால்
எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்.
புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல்
இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை
நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிகஇலகுவாகக் கடைக்கோடி
ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின்
குரல்.
நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும், ஒவ்வொரு
இசையமைப்பாளரின் பாணியும் ஒவ்வொரு தினுசாக இருக்கும்.
அந்தந்த இசைக் கலவைக்கு ஈடு கட்டி எப்படிப் பாம்புச்சட்டை போலத்
தன்னை உருமாற்றுகிறார் இந்தப் பாடும் நிலா என்றஆச்சரியத்துக்கு
விடை காண முடிவதில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த எங்கள் நேசிப்புக்குரிய ஆளுமை ஒருவரைப் பற்றி நேற்று நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவரிடம் நான் சொன்னது இதுதான்.
“அவர் எங்களிடம் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் அவர் எங்களோடுதான் இருக்கிறார்
என்ற உணர்வோடு இருப்பதில் என்ன பிரச்சனை?”
என்று.
கவிஞர் வாலி இருந்திருந்தால் அதையே
“இருக்கிறானா இல்லையா
எனும் ஐயத்தை எழுப்புவது
மூவர்”
என்று திருத்தி எழுதியிருப்பார்.
சோகப் பாடல்களைக் கேட்காமல் தவிர்ப்பதுண்டு. ஆனால் “நிலாவே வா செல்லாதே வா” பாடலோடு நேற்று நான் கட்டுண்டு கிடந்தேன்.
பொதுவாக எஸ்பிபியின் பாடல்களைத் தன் நிலையில் வைத்து நாம் பார்ப்பதுண்டு.
உதாரணத்துக்கு “இந்தத் தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்”
ஆனால் இங்கே சொல்லும் இன்னொரு பாடலின் வரிகள் மட்டும் அவர் எமக்காகவும், நாம் அவருக்காகவும் சொல்லுமாற் போல வாலியிடம் சங்கதி வாங்கிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.
அதுதான் இது
நினைவாலே அணைப்பேன் 🤎🤎🤎
பதிவை எழுதியவர் : கானா பிரபா
எஸ்பிபி எனும் ஏகாந்தன் அகவை 79
0 comments:
Post a Comment