Pages

Tuesday, April 25, 2023

எம்.எஸ்.ராஜேஸ்வரி செல்லம் கொஞ்சும் குரலின் நினைவில் ஐந்தாண்டுகள் ❤️

“அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே” 

கலையுலகில் கலைஞானி கமல்ஹாசனின் 62 வருடகால ஓய்வறியாத் திரை இயக்கத்தைக் காட்டும் போதெல்லாம் இந்தப் பாடல் தான் மனத்திரையில் அங்கேறும். 

என்று களத்தூர் கண்ணம்மாவில் தன் முப்பது வயது குரலில் அப்போதைய ஆறு வயதுக் குழந்தைக் கமலுக்குக் குரல் கொடுத்தவர் தான்,  தன் அறுபது வயதில் பேபி ஷாம்லியின் ஆறு வயதுக் குரலாக  

“பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு” (துர்கா),

https://www.youtube.com/watch?v=ndMacY2PdYs&t=21s

“யக்கா யக்கா யக்கா கிளியக்கா” (செந்தூர தேவி) 

https://www.youtube.com/watch?v=qBniaRcPXIo

பாடிய புதுமை படைத்தவர். இவ்விதம் சங்கர் – கணேஷ் ஆட்சியிலும் குழந்தைக் குரலாக இருந்தவர்.

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய 

“மண்ணுக்கு மரம் பாரமா

 மரத்துக்கு இலை பாரமா

 கொடிக்கு காய் பாரமா

 குழந்தை தாய்க்குப் பாரமா”

பாடலின் தாளக் கட்டு பின்னாளில் பல இசையமைப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து “கேவிஎம் ரிதம்” என்றே அதனை அடையாளக் குறியிட்டுச் சிறப்பிப்பார்களாம்.

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

என்று கே.வி.மகாதேவனே இதே தாளக்கட்டில் இவருக்குப் பாட்டளித்துத் தொடர்ந்து சிறப்பித்தவர்.

“அம்புலிமாமா வருவாயா”

https://www.youtube.com/watch?v=VqN7T25mBOk

கே.வி.எம் இவருக்குக் கொடுத்த இன்னொரு பாட்டு.

“பூப்பூவா பறந்து போகும்

பட்டுப்பூச்சி அக்கா

நீ பளபளன்னு போட்டிருப்பது

யாரு கொடுத்த சொக்கா”

https://www.youtube.com/watch?v=BWqfrLY-BUg

“திக்குத் தெரியாத காட்டில்" பாட்டெல்லாம் அன்றைய இலங்கை வானொலியின் பொற்காலப் பாட்டுகளில் ஒன்று.

“புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே” (பராசக்தி), 

“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” (டவுண் பஸ்),

போன்ற காதல் பாடல்களிலும் தன்னை அடையாளப்படுத்தியவர்.

 “நான் சிரித்தால் தீபாவளி” 

 நாளுமிங்கே ஏகாதசி”

என்று நாயகன் பாடலில் புழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணியுடன் 

பழமைத் தொனியில் பாடியவர்.

சந்திரபோஸ் இசையிலும் இவரைக் குழந்தையாக்கி 

“எந்தக் கதை சொல்ல”

https://www.youtube.com/watch?v=vidLHP4Ph6M

பாட வைத்ததோடு புதுமையாக அதில் கே.ஜே.ஜேசுதாஸையும், எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோரையும் இணைத்தார்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் – கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல இளையராஜாவும் தன் பங்குக்கு இவரைக் குழந்தையாக்கி

“ஒரு பாட்டு உன் மனசை இழுக்குதா”

https://www.youtube.com/watch?v=OhkvSwG0CCw

“பாசமழை” பாடலில் அழகு பார்த்தார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் புகழ்பூத்த பாட்டுப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம், நூறைத் தாண்டும்.

இன்னும் எனக்கு மனசுக்கு நெருக்கமாக இருக்கும் பாட்டு ஒன்று உண்டு. அது “மகாதேவி” படத்தில் இடம்பிடித்த, பாலசரஸ்வதியோடு இணைந்து பாடிய

“சிங்காரப் புன்னகை 

கண்ணாரக் கண்டாலே 

சங்கீத வீணையும் 

ஏதுக்கம்மா……”

https://www.youtube.com/watch?v=ljIlGUsw8Ww

குழந்தைத் தனம் கொண்ட குரலாள் எம்.எஸ்.ராஜேஸ்வரியை 

என்றும் நினைவில் கொள்வோம்.

கானா பிரபா

25.04.2023

Sunday, April 23, 2023

எஸ்.ஜானகி 85 ❤️

திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். 

"எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை" 

என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.

பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

எண்பதுகளின் இலங்கை வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாத பாடல்களில் ஒன்று "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". 

ருசி கண்ட பூனை திரைப்படத்துக்காக பாடகி எஸ்.ஜானகி மழலைக் குரலாக மாறிப் பாடிய 

இந்தப் பாடல் அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. 

"கண்ணா நீ எங்கே" பாடலுக்குப் பின்னால் பலரும் அறியாத செய்தி ஒன்றும் இருக்கிறது. இந்தப் பாடலைப் பாடியது மட்டுமன்றி எழுதியதும் எஸ்.ஜானகி தான் என்பதே அது.

இப்படியாகப் பன்முகக் குரலாட்சி செய்யும் எஸ்.ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு பேரு, பல்வேறு இசையமைப்பாளர்களோடு அவர் பாடிச் சிறப்பித்தது.


இங்கே இன்னொரு விடயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எஸ்.ஜானகி அவர்கள் "மெளனப் போராட்டம்" என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். 

எஸ்.ஜானகி என்ற இசையமைப்பாளர், தன் ஆத்ம பந்தப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இணைந்து பாடிய

“லோலிலிட்டா லோலிலிட்டா”

https://www.youtube.com/watch?v=QZ5lKR-1DK8

ஏக பிரபலம் கொண்டு இன்னும் விளங்குகிறது தெலுங்கு தேசத்தில்.

எஸ்.ஜானகி இசையமைத்த தெலுங்குப் படமான “மெளனப் போராட்டம்” படத்தில் உதவி இசையமைப்பாளராகவும், பின்னணி இசை வழங்கியவராகவும் இருந்தவர் எஸ்பிபி. 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குப் பெரும் புகழைக் கொடுத்த, அவர் இசையமைத்த “மயூரி” திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய “இதினா ப்ரிய நர்த்தன வேளா” 

https://www.youtube.com/watch?v=QZ5lKR-1DK8

பாடலுக்குத் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று எஸ்பிபி ரொம்பவே எதிர்பார்த்தாராம்.

மயூரி திரைப்படத்தில் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இணைந்து பாடிய 

“மெளனம் நாணம்” 

https://www.youtube.com/watch?v=7fyPxhquT1A

பாடல் இப்போது கேட்டாலும் இனிக்கும். கானாபிரபா

பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் ஒரு சில படங்களுக்கு இசையமைத்த போது, அங்கும் பாடிச் சிறப்பித்தவர் எஸ்.ஜானகி.

அப்படியாக வெளிவந்த ஒரு படம் “கொலுசு”.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவனுடன் இவர் பாடிய பாடல் 

“மச்சான் கண்ணு”

https://www.youtube.com/watch?v=1poUG7KJuSg


பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படும் இன்னொரு ஆளுமை எம்.எஸ்.ஶ்ரீகாந்த். இவரின் பெயரைக் கேட்டால் வாணியம்மாவுடன் பாடிய 

“நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு”

ஞாபகம் வருகிறதல்லவா?

இது போலவே, எம்.எல்.ஶ்ரீகாந்த் இசை வழங்கிய “கல்யாண வளையோசை” படத்தில் எஸ்.ஜானகியோடு பாடிய 

“வள்ளுவன் குறளில் சொல்லெடுத்து”

https://www.youtube.com/watch?v=yrsvV3Q3PL8

இவருக்கு இன்னொரு புகழ் கொடுத்த பாடல். எஸ்.ஜானகியின் அற்புதமான ஆலாபனையோடு மிளிரும் அற்புதம்.

இன்னும் கொஞ்சம் காலத்தைப் பின்னோக்கி இழுத்துப் போனால் அங்கே மிதப்பது ஏ.எம்.ராஜா என்ற ஒப்பற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.ஜானகியோடு கூட்டுச் சேர்ந்த பாடலகள்.

தேனான பாடல்களைக் குழைத்துக் கொடுத்த ஏ.எம்.ராஜா இசைத்துத் “தேன் நிலவு” தந்த

“ஓஹோ எந்தன் பேபி

 நீ வாராய் எந்தன் பேபி”

https://www.youtube.com/watch?v=_I5kqlNUfu8

பாடல் அந்தக் காலத்து எஸ்.ஜானகிக்கும் புகழை வழங்க ஏதுவானதைச் சொல்லவும் வேண்டுமா?

எஸ்.ஜானகிக்கு மிக அற்புதமான பாடல்களை வழங்கிய ஷியாம் அவர்களின் இசையில் நன் முத்துகளைத் தோண்டத் தோண்டக் கிட்டும். அப்படியொன்று “பஞ்சகல்யாணி”.

இந்தப் படத்தில் ஒரு புதுமை, 

படத்துக்கு இசை வழங்காத இசையமைப்பாளரான சந்திரபோஸ் அவர்களோடு, எஸ்.ஜானகி பாடியிருக்கும் 

“ராசா வந்தாண்டி”  

https://www.youtube.com/watch?v=iMFsRVLTfQI

எனும் பாடல்.

இம்மாதிரி இன்னொரு இசையமைப்பாளர் வேறொருவர் இசையில் பாடிய பாடல்களில் எஸ்.ஜானகியும் இணைந்திருக்கும் புதுமையின் நீட்சியாகச் சொல்லிக் கொண்டே போனால்

T.V.ராஜூ அவர்களின் இசையில் “ரிஷ்ய சிருங்கார்” படத்தில்

“விண்ணாளும் சுந்தர ரூபம் 

https://www.youtube.com/watch?v=KmCmkSE_NGI

பாடலை இன்னொரு இசையமைப்பாளர் மற்றும் புகழ் பூத்த பாடகர் கண்டசாலாவுடன் பாடியது சாட்சாத் ஜானகியம்மாவே தான்.

“Kaise Kahoon”

https://www.youtube.com/watch?v=I8btjaXIaUY

தமிழில் வந்த ஹிந்திப் பாட்டு. அதிலும் ஓர் புதுமை, இன்னொரு பாடகர் P.B.ஶ்ரீநிவாஸ் பாட்டெழுத, ஹிந்தியில் கோலோச்சிய வாத்திய விற்பன்னர், இசையாளர், கடந்த 2022 இல் நம்மை விட்டு மறைந்த பூபேந்திர சிங் அவர்கள் எஸ்.ஜானகியோடு இசைஞானி இளையராஜா இசையில் பாடிய பாட்டு.

இங்கே ஒரு விடயம், தமிழில் தான் இத்தனை இசையமைப்பாளர்களோடு ஜோடி கட்டிய ஜானகி அவர்கள் இன்னும் மற்றைய மொழிகளிலும் தோண்டி எடுத்தால் இன்னும் பல கிட்டும்.

இளையராஜாவின் குரு நாதர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களால் எஸ்.ஜானகிக்குக் கிடைத்த அற்புதமான கன்னட, தெலுங்குப் பாடல்கள் தமிழில் அவருக்கு இருந்த இடைவெளியை நிரப்பிய காலங்கள். பின்னர் தமிழில் பெரும் சகாப்தம் அவர் படைக்க “அன்னக்கிளி” இளையராஜா வந்தார். அன்னக்கிளி பாடல் வரலாற்றில் எஸ்.ஜானகி அவர்கள் எத்துணை தூரம் புதிய இசையமைப்பாளரின் ஒத்திகை நிகழ்விலும் ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது உப வரலாறு.

இங்கே ஜி.கே.வெங்கடேஷ் அவர்களைத் தன் இசையில் எஸ்.ஜானகியின் பாடலொன்றின் முகப்புக் குரலாய் இணைத்து அணி செய்திருக்கிறார் இளையராஜா. 

அதுதான் “கவிக்குயில்” கொண்ட

“மானத்துலே நீயிருக்க” தொகையறாவோடு

“உதயம் வருகின்றதே”

https://www.youtube.com/watch?v=r6_9zhS10LY


“அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் சிலம்புவதைக் கேள்?

https://www.youtube.com/watch?v=oE8kjdqQ3RA

இன்று தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் தவிர்க்க முடியாத சங்கீர்த்தனம் இந்தப் பாடல். இங்கே ஜானகியோடு ஜதி சொல்லிப் பாடும் T. S. ராகவேந்திரா, “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் ரேவதியின் தந்தையாகவும் நடித்திருப்பார். அவரின் இன்னொரு முகம் விஜயரமணி என்ற இசையமைப்பாளர். 

விஜயரமணி என்ற T. S. ராகவேந்திரா தன் ஆரம்ப காலத்து இசை நட்பு இளையராஜாவோடு எண்பதுகளில் இயங்கிய போது பல புதிய பாடகிகளை ராஜாவுக்கு அறிமுகம் செய்து பாடல்களை வாங்கிக் கொடுத்தவர் என்பதும் ஒரு உபரித் தகவல்.

இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விளங்கிய கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் பல இசையமைப்பாளருக்குப் பாடியிருக்கும் போது தன் அண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன? 

இளையராஜா இசையில் எஸ்.ஜானகி & கங்கை அமரன் கூட்டணி பாடல்கள் பலது இருந்தாலும்,

“பொங்கும் ஆகாய கங்கை” 

https://www.youtube.com/watch?v=0MtPuQRocE8

என்று காதல் ரசம் கொண்டு பாடும் பாடுவதும்,

“வாடி என் பொண்டாட்டி நீதானே”

https://www.youtube.com/watch?v=9qNJxv-b53Q

என்று ரகளையாகப் பாடியதும் இருக்க,

எனக்கு ஆத்மார்த்தமாக இனிக்கும் பாடலொன்று உண்டு.

அதுதான்

“மனித ஜாதி” படத்தில் கங்கை அமரனும், எஸ்.ஜானகியும் பாடும்

“புதுசு புதுசு புதுசு

உன்னோட கொலுசு கொலுசு கொலுசு”

https://www.youtube.com/watch?v=L500Xj21LSw

என்றதோர் இனிமை சொட்டும் அரிய பாட்டு. கானாபிரபா


இவ்விதம் இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்னொரு இசையமைப்பாளருக்காக எஸ்.ஜானகிக்காகப் பாடிய இன்னொன்று என்றால் எல்.வைத்தியநாதன் அவர்களின் இசையில் வந்த “ஏர்முனை” படப் பாடலான

“முத்துசாமி பேர”

https://www.youtube.com/watch?v=fCQ1adugj2Q

“அள்ளி அள்ளி வீசுதம்மா

 அன்பை மட்டும் அந்த நிலா நிலா”

https://www.youtube.com/watch?v=v6Ls9ylLrPU

இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையில்  தனக்குப் பிடித்த பாடல் என்று மெல்பர்ன் இசை மேடையில் புகழாரம் சூட்டியவர் எஸ்.ஜானகி. 

“காலம் நேரம் வந்தாச்சு” 

https://www.youtube.com/watch?v=lT5tVdoZciY

என்ற பாடல் கங்கை அமரன் இசையில் “அர்த்தமுள்ள ஆசைகள்” படத்தில் இடம்பெற்ற போது மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு துணைப் பாடகராகவும் பாடிச் சிறப்பித்தார்.

கங்கை அமரன் இசையில், இளையராஜா & எஸ்.ஜானகி பாடிய "போடய்யா ஒரு கடுதாசி" 

https://www.youtube.com/watch?v=CskQxI8lSrI

பாடியளித்ததும் சிறப்பு. 

 

இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தி சுவாமிகளை, இளையராஜா இசையில் எஸ்.ஜானகியோடு பாட வைத்துப் பெருமை சேர்த்தது "மரகத வீணை". அதில் வரும்

"சுதா மாதுர்ய பாஷண"

https://www.youtube.com/watch?v=ad110ow5w3Y

இந்த வரலாற்றை எழுதி வைத்தது.

“மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக

கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே”

https://www.youtube.com/watch?v=IDYAjpR0xQ4


அப்படியே காற்றில் அலைந்து திரிவோமே இதைக் கேட்கும் தோறும்?

இசைஞானி இளையராஜா எத்தனையோ பின்னணிப் பாடகிகளோடு ஜோடி சேர்ந்தாலும், “கவிதை சொல்லும்” எஸ்.ஜானகி குரலோடு சேரும் போதெல்லாம் 

“உந்தன் கிள்ளை மொழியினிலே

உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்”

என்று அவர் பாடலில் சொல்வது போலத் தான்.

இவ்விருவர் கூட்டுப் பாடல்களைக் கூட்டிப் பார்த்தாலே இன்னொரு தொகை பதிவு தேறும்.

“காற்றில் மிதக்கும் புகைபோலே

அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே

மனவீடு அவன் தனிவீடு அதில்

புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ....

“சொல்லத் தான் நினைக்கிறேன்”

https://www.youtube.com/watch?v=wxvpmaSKM54

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடியளித்த மிகச் சில காதல் ஜோடிப் பாடல்களில் அதி சிறந்தது என்று நானும் சொல்லத்தான் நினைக்கிறேன். 

எஸ்.ஜானகியம்மா தலைமுறை தாண்டி நிலைத்து நிற்கும் குரல் என்பதற்கு முன் சொன்ன தலைமுறை இசையமைப்பாளர்களோடு கூட்டுச் சேர்ந்ததில் மெல்லிசை மன்னர் தம் பங்குக்கும் இவருக்கு முதல் மரியாதை செய்திருக்கிறார்.

சொல்லப் போனால் இந்தப் பதிவை எழுத எனக்கு மூல காரணியாக மூளையில் அந்த எண்ணம் தோன்ற ஏதுவாக அமைந்ததே இந்தப் பாடல் தான். 

“ஆஹா 

சொல்லத்தான் நினைக்கிறேன்

உள்ளத்தால் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன் 

ஆஹா...”

நினைத்துப் பார்த்தாலே போதும், இந்த வரிகளில் ஜாலம் காட்டி, வளைந்தும், நெளிந்தும் ஓடும் ஓர் மலையருவியாக நிலைப்பார்

எஸ்.ஜானகி.

கானா பிரபா

23.04.2023



Thursday, April 6, 2023

SPB, Drums சிவமணிக்காகத் தானே எழுதி தானே இசையமைத்துத் தானே இசையமைத்த ஆங்கிலப் பாடல்

இந்திய இசை உலகில் ட்ரம்ஸ் வாத்தியக் கலையில் சிவமணி 

ஒரு தனி அத்தியாயம். 

தன்னுடைய 13 வது வயதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களால் இசையுலகுக்குத் தத்தெடுக்கப்பட்டவர். 

உங்கள் மகனை நான் இசைச் சுற்றுலாவுக்கு 

அழைத்துப் போகப் போகிறேன்

என்று சிவமணியின் தந்தையிடம் உரிமையோடு கேட்டு

அனுமதி பெற்றுத் தன் பக்கம் வைத்திருந்தவர் தான் ஒன்றல்ல இரண்டல்ல 35 வருடங்கள் சிவமணியைத் தன் பக்கமே வைத்திருந்தார் எஸ்பிபி.

சிவமணி தன் இசை உலகில் God Father ஆகச் சொல்லிக் கொள்வது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைத் தான்.

“உங்களோடெல்லாம் இணைஞ்சு வேலை பண்ணுனது

எனக்கு ரொம்ப சந்தோஷம்

கடவுள் எப்போதும் நம்மிடம் இருப்பார்”

என்று சிவமணிக்கு எஸ்பிபி அனுப்பிய குறுஞ்செய்தி அவரின் கடைசி நாட்களில் ஆத்மார்த்தமாக அனுப்பியதில் ஒன்றாகி விட்டது.

“படமத்தி சந்தியா ராகம்" (Padamati Sandhya Ragam ) என்ற தெலுங்குப் படம் பிரபல தெலுங்கு இயக்குநர் ஜண்டியாலாவின் கை வண்ணத்தில் 1987 இல் வெளிவந்தது.

அமெரிக்க வாலிபனை, இந்திய ஆசாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் திருமணம் முடிப்பதால் எழும் கலாசாரச் சிக்கலைப் பேசிய படம்.

இதில் நாயகியாக விஜயசாந்தியும், அவர் காதலிக்கும் அமெரிக்க வாலிபனாக ஹாலிவூட் நடிகர் Tom Jane நடித்தார். விஜயசாந்தியைக் காதலிக்கும் ஒரு கறுப்பின வாலிபராக நடித்தது வேறு யாருமல்ல ட்ரம்ஸ் சிவமணி தான். இந்தப் படத்தில் சிவமணி ஏற்றிருந்த இசைக்கலைஞர் பாத்திரமும் அத்தோடு ஒத்துப்போனது.

படத்துக்கு இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அதாவது எஸ்பிபி இசையமைத்த 45 படங்களில் இதுவுமொன்று. கானா பிரபா

இந்தப் படத்தில் சிவமணியின் பாத்திரமும் முக்கியமானது, எனவே அவருக்கு ஒரு ஆங்கிலப் பாடலையும் வைத்தார்கள்.

அதுதான்

Life is Shabby

https://www.youtube.com/watch?v=Xba3RvcYD2U

தன்னுடைய இசை வளர்ப்புக்கு இப்படியொரு வாய்ப்பைத் தானாக அமைத்ததும் எஸ்பிபி சொன்னது போல,

“கடவுள் எப்போதும் நம்மோடு” 

என்பதாக்கும்.

Padamati Sandhya Ragam வெளிவந்து இந்த வாரத்தோடு 35 ஆண்டுகளைத் தொடுகின்றது. படம் ஏப்ரல் 3, 1987 இல் வெளியானது.

இந்த பதிவை நான் எழுத வேண்டும் என்று மாதக் கணக்கில் காத்திருந்தது எதிர்பாராமல் அமைந்திருக்கிறது.

கானா பிரபா

06.04.2023

Tuesday, April 4, 2023

எஸ்.ஜானகி “பாடகியாகப்” பிறந்த நாள் ❤️

எஸ்.ஜானகி அம்மாவின் தீவிர ரசிகர் ஶ்ரீனிவாசன் என்ற நண்பர் எனக்குத் தொடர்ந்து ஜானகிம்மா குறித்த செய்திகளைப் பகிர்வார். இன்றும் அவருக்குக் கிடைத்த இந்த அரிய படத்தைப் பகிர்ந்துதவினார்.

எஸ்.ஜானகி அவர்கள் 04.04.1957 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாடிய இந்தப் படம் பெயர் என்ன தெரியுமா? 

விதியின் விளையாட்டு

படம் கூட வெளிவரவில்லை.

ஆனால் அதன் பின்னர் எத்தனை தசாப்தங்கள் 

அவர் திரையிசையில் சகாப்தமாகக் கோலோச்சினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


Monday, April 3, 2023

ஹரிஹரனிஸம் ❤️💛💚

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் 

ஸ்வரங்களை அவனே கொடுத்தான்

மனிதரில் இதை யாரும் அறிவாரோ

நான் பாடும் பாடல் எல்லாம் 

நான் பட்ட பாடே அன்றோ

பூமியில் இதை யாரும் 

உணர்வாரோ……..!

மு.மேத்தாவின் வரிகள் இசை வார்த்த இளையராஜாவுக்கு மட்டுமல்ல, பாடிக் கொடுத்த ஹரிஹரனுக்கும் கூடப் பொருந்திப் போகும். அப்படியானதொரு கடந்து வந்த பாதையில் தான் இன்று 

ஒட்டுமொத்த இசை வானில் 45 வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் அவரின் பின்னணி தொடங்கியது.

தனது எட்டு வயதில் தந்தையை இழந்து தாயாரின் குடும்பத்தினரின் தலைப் பிள்ளையாகச் சீராட்டப்பட்ட அவரின் இசைப் பயணத்துக்குத் தன் அம்மாவே உறுதுணையாக இருந்ததை நன்றி பெருக அண்மையில் Zee Tamil சரிகமப நிகழ்ச்சியில், அவரின் பக்கத்தில் இருந்தவாறே சொன்னார் ஹரிஹரன்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் விளம்பரப் பாட்டுக்கு வந்த ஹரிஹரனிடம், தன்னுடைய முதல் படத்திலேயே பாட அழைத்தார்.

“தமிழா தமிழா 

நாளை நம் நாளே”

பாட்டு வரிகள் கட்டியம் கூறினவோ?

1992 இல் தொடங்கியது, ஆகக் குறைந்தது ஒரு தசாப்தம் தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரமாக ஹரிஹரன் கொண்டாடப்பட்டவர் இன்றும் அந்த அலையின் சுழலில் இருக்கிறார்.

தொண்ணூறுகளின் நிறம், அல்லது அடையாளம் என்றால் அங்கே ஹரிஹரன் தான்.

ரோஜா தொடங்கி அந்தத் தொண்ணூறுகளின் குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்குப் பின்னால் ஹரிஹரனும் இருப்பார்.

“உயிரே....உயிரே...

வந்து என்னோடு கலந்து விடு....”

என்று காதலன் ஏக்கத் தொனியாக மட்டுமன்றி,

“கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

கண்டதை எல்லாம் நம்பாதே”

என்று புரட்சிக் குரலாக நிறமூட்டினார்.

தன்னை ஒரு பன்முகப் பரிமாணத்தில் காட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மானே என்று ஹரிஹரன் மனம் விட்டுப் புகழ்ந்திருக்கிறார்.

தமிழுக்கு அந்நியமான பாடகர்கள் முன்பும், பின்பும் வந்திருந்தாலும் எல்லா இசையமைப்பாளர்களாலும் கொண்டாடப்பட்டவர்கள் மிகச் சிலர். அதில் ஹரிஹரனும் முதல்வர்களில் ஒருவர்.

ஒரு பக்கம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புத்திசை மேல் காதல் கொண்டு இயங்கிக் கொண்டே, இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா மேல் அளவற்ற பயபக்தியோடு தோள் கொடுத்தார்.

“என்னைத் தாலாட்ட வருவாளோ” இளையராஜா ரசிகர்கள் பால் ஹரிஹரனை இழுத்தாலும், ராஜாவிடம் ஹரிஹரன் பாடிய ஆகச் சிறந்தவை இன்னும் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

அப்படியொன்று “மீட்டாத ஒரு வீணை”.

“காசி”யில் ஆறும் ஹரிஹரனைச் சேர்ந்ததும், இளையராஜா ஹரிஹரன் மீதான ஆத்ம பந்தத்தின் வெளிப்பாடெனலாம்.

“இரவா பகலா என்னை ஒன்றும் செய்யாதடி”

யுவனுக்குப் புகழ் வெளிச்சம் கொடுத்த பாடல் என்ற ரீதியில் அங்கேயும் ஹரிஹரன் இருக்கிறார். All the Best  என்று அறிமுக யுவனுக்காகப் பாடியவர் தான், 

“சொல்லாதே சொல்லச் சொல்லாதே” என்று அறிமுக இசையமைப்பாளர் பாபியின் பாடலிலும் அவரே இருப்பார்.

"ஓ காதலின் அவஸ்தை 

எதிரிக்கும் வேண்டாம்

நரக சுகம் அல்லவா

அமிலம் அருந்திவிட்டேன்

ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்

என் காதல் தேவதையின் கண்கள்”

சுடு கரண்டியில் விழுந்த ஐஸ்கிரீமாய் உருகி வழியும் ஹரிஹரன் குரலைக் கேட்கையில் அஜித் இன் வாயசைப்புத் தான் நினைப்பூட்டும்.

முரட்டுத்தனமான முரணாக ஒரு மெல்லிசைக் காதல் அங்கே விழுகிறது இந்தப் பாட்டு. 

“இருதயமே துடிக்கிறதா....

 துடிப்பது போல் நடிக்கிறதா...”

எப்படி “விழிகளின் அருகினில் வானம்” வழியாக இவ்விதம் பாடலாசியர் கவிவர்மன் அரிதாகப் பாடல் பண்ணி ஈர்த்தாரோ அது போலவே

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்

மருந்தை ஏனடி தர மறந்தாய்

வாலிபத்தின் சோலையிலே

ரகசியமாய் பூப் பறித்தவள் 

நீதானே

தட தடக்கும் சந்தத்தின் பின்னிசை இயந்திரப் படிக்கட்டுகளை உருட்டும் பட்டி போல இயங்க, வழுக்கிக் கொண்டே போகும் பாடலாசிரியர் விஜயசாகர் வரிகள்.

அப்போது விழுந்தவர்கள் தான் தீனா படம் வந்து இன்று 23 வருடம் கடந்து விட்டது. இதன் இடையிசையைக் கேட்டாலேயே மகுடி கண்ட பாம்பு போல ஆகி விடுகிறோம்.

“என் காதல் தேவதையின் கண்கள்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்….”

பாட்டு முடிந்தாலும் வெளிவேற மனமில்லாமல் ஹரிஹரன் போல அனாத்திக் கொண்டிருக்கும் வார்த்தைத் துண்டுகள்.

“வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.

தொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து 

“டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்?” 

என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.

அன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும். 

“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில் 

“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் திருக்குமார் நிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.

இப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீதி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.

ஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.

பாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும். 

தொடர்ந்து தேவா - ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,

“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.

“சின்னச் சின்னக் கிளியே” என்று மீண்டும் பிரசாந்துக்காகக் கொடுத்தது கண்ணெதிரே தோன்றினாள் வெற்றியில் பங்கு போட்டுக் கொண்டது.

“ஏஹேஹே கீச்சுக் கிளியே 

என் காதில் தித்தித்தாய்

இசையாலே எனது புதிய நாளை,

நீ இன்று திறந்தாய்”

புத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா? 

அதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.

ரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.

“ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

 ஒன் பேரச் சொல்லும் ரோசாப்பூ”

தொண்ணூறுகளை விட்டுப் பிரியாத மினி பஸ்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஹரிஹரனை இவ்விதம்

எஸ்.ஏ.ராஜ்குமாரும் விட்டு வைக்கவில்லை. 

“மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு

பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு”

என்னவொரு அற்புதமான கிராமியத் தெம்மாங்குக்கு, ஹரிஹரனுக்கு வேட்டி கட்டிப் பாட வைத்திருப்பார்.

ஒரு பக்கம் விஜய்க்கு

“எனக்கொரு சினேகிதி சினேகிதி”

“தொடத் தொட எனவே”

“இருபது கோடி நிலவுகள் 

கூடிப் பெண்மை ஆனதோ”

என்று கொடுத்துக் கொண்டே, 

“ஓ வந்தது பெண்ணா....

   வானவில் தானா” 

என்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.

 “ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது. 

தோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.

வைரமுத்து - பரத்வாஜ் - சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.

“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”

பாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.

“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது.  ‪‬

“சிரித்து சிரித்துசிறையிலே,

சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

ரகசியமாய் ரகசியமாய்

புன்னகைத்தால் பொருளென்னவோ?”

கார்த்திக் ராஜாவை இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே அந்தக் கொண்டாட்டத்தின் திறவுகோலாய் இந்தப் பாடல் இருக்கும்.

“அன்பே அன்பே நீ என் பிள்ளை” 

பாடலைக் கேட்டாலேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,

“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே  இருக்கலாம். 

“ஒரு தேதி பார்த்தா 

தென்றல் வீசும் 

ஒரு கேள்வி கேட்டா

முல்லை பேசும்”

விஜய்யின் ஆரம்ப காலத்துப் படைப்புகளில் கூடப் பாடல்கள் இனிக்கும் என்று வித்யாசாகர் தன் பங்குக்குக் கொடுத்திருப்பார்.

இதெல்லாம் மாயாஜாலம்.

அப்படியே லிங்குசாமிக்கு வெற்றி சமைத்த ரன்னில்

கொடுத்த

“கண்களால் கண்களில்

தாயம் ஆடினாய்

கைகளால் கைகளில்

ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்

ஐய்யயோ தப்பித்தாய்

கண் மூடி தேடத்தான்

கனவெங்கும் தித்தித்தாய்”

ஒவ்வொரு அடுக்குகளிலும் ஜாலம் காட்டிச் செல்வார் இந்த வித்தகர்.

அந்தி மஞ்சள் மாலை

ஆளில்லாத சாலை

தலைக்கு மேலே போகும்

சாயங்கால மேகம்

முத்தம் வைத்த பின்னும்

காய்ந்திடாத ஈரம்

எச்சில் வைத்த பின்னும்

மிச்சமுள்ள பானம்

கன்னம் என்னும் பூவில்

காய்கள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம்

ப்ரியம் ப்ரியம்

ப்ரியம் ப்ரியம்

ப்ரியம் ப்ரியம்

பனித்துளியை விட மெதுமெதுப்பாய் வார்த்தைகளைக் கையாளும் ஹரிஹர ஜாலம் ஆஹா, இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே நீளுமே?

“Muscle memory” என்றதொரு நுட்பத்தை ஹரிஹரன் கோடிட்டுக் காட்டினார். அதாவது தொடர்ச்சியும், பயிற்சியும் தான் ஒரு பாடகனை முழுமையாக்கும் என்று.

அந்தக் கூற்று பாடகர்களின் அகராதி என்று வைத்துக் கொண்டால,

நமக்கோ ஹரிஹரன் பாடலை யார் பாடினாலும் நம் memory இல் ஹரிஹரனின் குரல் தான் அதை மேவியதாக வந்தொலிக்கும்.

நம் ஊனில் உறைந்து போன memory என்பதாலோ?

நேற்று சிட்னியில் இசை விருந்து படைத்து விட்டு

இன்று தனது பிறந்த நாளில் கங்காரு தேசத்தில் இருக்கிறார்.

இன்று எங்கள் திருமண நாள்.

திருமண வீடியோவில் இளையராஜா பாட்டுகள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று வீடியோ எடுத்த ஜெகதீசன் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் அவர் ஹரிஹரன் பாட்டு ஒன்று வைத்தார். அது இதுதான்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

https://www.youtube.com/watch?v=GO1ciIWZJmM 

என் கோபமெல்லாம் அதைக் கேட்டுப் பறந்துடுச்சு 😀

என் சுவாசம் உன் மூச்சில்

உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் 

என் வாழ்வே வா.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

பாடகர் ஹரிஹரன் அவர்களுக்கு

கானா பிரபா

03.04.2023


Saturday, April 1, 2023

ஷெனாய் மேஸ்ட்ரோ பண்டிட் பாலேஷ்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஸகரி ம கரிஸநி

ஸநிப ம பநி ஸகரி

https://www.youtube.com/watch?v=lrdErxdLQek

“எந்தன் நெஞ்சில் நீங்காத 

 தென்றல் நீதானா” பாடலின் 3.03 வது நிமிடத் துளியில் மிதக்கும் 

ஆலாபனையைக் கேட்டு விட்டு, அப்படியே ஓடிப் போய்

https://www.youtube.com/watch?v=4NIgHgQmpus

2.50 வது நிமிடத்தில் துள்ளிப் பாயும் “மகாநதி" ஷெனாய் என்ற இசை என்ற இன்ப ஊற்று “ஶ்ரீரங்க ரங்க நாதன்" ஐக் கண்ட புளகாங்கிதத்தில் கொட்டுவதை அப்படியே அள்ளிப் பருகவும்.

முன் சொன்ன அந்த ஆலாபனை குரலும், பின்னால் வந்த அந்த இசைப் பொழியலும் ஒருவரே, அவரே பண்டிட் பாலேஷ் அவர்கள்.

இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது காலகட்டத்து வாத்திய விற்பன்னர் கூட்டில் எண்பதுகளின் இறுதியில் தொடங்கித் தொண்ணூறுகளிள் ஷெனாய் மழை பொழிந்த பாடல்களின் வாசிப்பாளராகவும், பாடல்களின் இடையே ஒலித்த ஆலாபனைக் குரலாகவும் விளங்கியவர் பாலேஷ் அவர்கள். அதுமட்டுமல்ல பின்னணி இசைத் துணுக்குகளின் அடுக்குகளிலும் அவரின் அடையாளத்தை இனிமேல் தேடிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ரமேஷ் நாயுடு, ஷியாம், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், ஏ.ஆ.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி என்று இந்தியாவின் ஆகக் கூடிய இசையமைப்பாளர்களிடம் வாசித்த பெருமையும் பாலேஷ் அவர்களைச் சாரும்.


தன் பிள்ளை தகவல் தொழில் நுட்பத் துறையில் கற்றுத் தேர்ந்தாலும், தன்னுடைய தாய்த் துறையான ஷெனாய் ஐ கிருஷ்ணா பாலேஷ் ஐ இசை மேதை உஸ்தான் பிஸ்மில்லா கான் அவர்களிடம் கற்க வைத்து அந்தத் துறையிலேயே கலை படைக்கவும், இசைக் கற்கை கொடுக்கவும் வழி காட்டியிருக்கிறார்.

இந்த இசைக் கூட்டை நீங்களும் பருக

https://www.youtube.com/watch?v=y-5EdjZrX1k

தென்னிந்திய மொழிகளில் எஸ்பிபியும், இளையராஜாவும் கோலோச்சுவது போல, இசைத்துறையில் இன்றும் பெருமதிப்புடன் பார்க்கப்படும் ஒரு ஆளுமை பாலேஷ் அவர்கள்.

அதனால் தான் ராவணனில் ஏ.ஆர்.ரஹ்மானும், பாகுபலியில் கீரவாணியும் என்று விடாமல் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

பத்மஶ்ரீ விருது உட்பட ஆந்திரா, கர்னாடகம் எல்லாம் அவருக்கு விருதுகளாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாகசுரம் ஒரு தேவ வாத்தியம், அது கொடுக்கும் இசையின் கனதி மிக அதிகம் என்று வாயாப் போற்றியவர் இசைஞானி இளையராஜா. அதனால் தான் நாகசுர வாத்தியப் பாவனைக்கு மாற்றீடாக இந்த ஷெனாய் ஐ அவர் அதிகம் உள்வாங்கி, திரைப்படத்தின் மங்கலக் காட்சிகளிலும் பயனபடுத்தியிருக்கிறார்.



தொண்ணூறுகளில் நூற்றுக்கணக்காக இளையராஜாவின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இசைத் திறமை கொண்டோர் பலர் இருக்கலாம், ஆனால் அந்த Tone கைவரப்பெற்றவர்களே பாலேஷ் போல இசையமைப்பாளரின் அபிமானம் பெற்றவராய் இருக்க முடியும்.

பாலேஷ் ஐ மனதோடு மனோ, ஆதன் பேட்டி தவிர சுகாவும் விரிவாக சொல்வனம் இதழில் பேட்டியாகப் பகிர்ந்துள்ளார்

அதைத் தவறாமல் படியுங்கள்.

https://solvanam.com/2011/03/24/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/


இன்னொரு வேடிக்கையான நிகழ்வு

“மதுரை மரிக்கொழுந்து வாசம்” பாடலில் https://www.youtube.com/watch?v=EJmyGS5RW8Q

1.29 வது நிமிடத்தில் ஒலிக்கும் ஷெனாய் வாத்தியக் கீற்றை பாலேஷ் இற்கு முன்னவர் இளையராஜாவின் வாத்தியக் குழுக் கலைஞர் சுபான் வாசித்ததை, பின்னர் தெலுங்கில் 

Jagadeka Veerudu Atiloka Sundari படத்தில் “யமஹோ நீ”

https://www.youtube.com/watch?v=1ssBzlc4fWE

பாடலில் பாலேஷ் ஐ வைத்து இன்னொரு வித்தியாசமான இசைக் கோவையாகக் கொடுத்திருப்பார் ராஜா.

“ஆலப் போல் வேலப் போல்”

https://www.youtube.com/watch?v=1Bmpg3s46L8

பாடலில் “தும்தும் தத் தும் தும்தும்” கூட்டுக் குரல்களைத் தொடர்ந்து பாலேஷ் இன் ஷெனாய் கல்யாண வீட்டுப் பன்னீர் தெளித்தல் போல வஞ்சனை இல்லாமல் வாரியிறைக்கும்.

கல்யாணக் காட்சியையும்,  இறுக்கமான மன நிலையையும் கலந்த சூழலில் கள்ளப்பார்ட் நடராஜன் (ரேவதியின் தந்தை) ஐயா என்று நெகிழ்வோடு கைகூப்பப் பிறக்கும்

https://www.youtube.com/watch?v=iIYSpTO3Ev8

அந்த இசையைக் கேட்டாலேயே மெய் சிலிர்த்துப் போய் கண்கள் குளமாகும். அப்பேர்ப்பட்ட இசையின் ஆக்க கர்த்தா 

பாலேஷ் அவர்கள் பல்லாண்டு காலம் இசையோடு வாழ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.