Pages

Friday, May 30, 2008

சிறப்பு நேயர்கள் ஆஷிஷ் & அம்ருதா

கடந்த வாரம் ஷைலஜாவின் சிறப்பு வாரம் வந்து போனது. இந்த வாரம் வலம் வர இருப்பது குழந்தைகள் சிறப்பு பதிவு. இவர்களின் பெற்றோரும் கூட முந்திய சிறப்பு நேயர்களாக வந்து சிறப்பித்தவர்களே. புதுகைத் தென்றல் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர்களின் அம்மா மற்றும் தந்தை ஸ்ரீராம் ஆகியோரே அவர்களாவர். வலைப்பதிவில் பல குட்டிப் பதிவுகள் வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வார சிறப்பு நேயர்களாக வரும் ஆஷிஷ் அம்ருதாவும் கூட ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள் என்ற பெயரில் சொந்த வலைப்பதிவு வைத்திருக்கின்றார்கள். ஆனால் பாருங்க பொதுவா குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் ஹோம் வேர்க் செய்ய சொன்னா அவங்க அப்பா/அம்மாவே செய்து கொடுத்து அனுப்புவது போல இந்தப் பதிவுகளின் பின்னணியில் இருக்கும் அந்த உதவிக்கரம் அம்மாவா, அப்பாவா? ஆஷிஷ் அம்ருதாவுக்கே வெளிச்சம் ;-)
ஆனாலும் என்ன குழந்தைகளுக்கான நல்ல வாசிப்புத் தீனி கொடுக்கும் பதிவுகள் பல இங்கே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சரி, இனி ஆஷிஷ் அம்ருதா சொல்வதைக் கேட்போமா.


வணக்கம் மாமா,
நலமா?

எங்களுக்கு பிடித்தமான பாடல்களை இங்கே கொடுத்திருக்கோம்.
அதை சிறப்பு நேயர் விருப்பத்தில் கொடுக்க முடியுமா மாமா?


1. ராஜா சின்ன ரோஜா படம்
ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனானாம் - பாடல்

இந்தப் பாட்டு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பாடலில் வரும் கதை,
தரும் மெசெஜ் அருமை.

"நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.
தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது"

கார்ட்டுன் வடிவங்களுடன் ரஜினி அங்கிள்
நடித்திருப்பாங்க நல்லா இருக்கும்.எங்களுக்கு மிகவும்
பிடிக்கும்.

வீடியோவில் பார்க்க




2. சங்கர் குரு படத்திலிருந்து "சின்னச்சின்னப்பூவே கண்ணால் பாரு போதும்"
இந்தப்பாட்டை ஜானகி ஆண்ட்டி பாடி இருக்காங்களாமே.
சின்னக்குழந்தை மாதிரி ரொம்ப நல்லா இருக்கு.

இந்தப் பாட்டை யூட்யூபில் பாத்திருக்கோம். ரொம்ப பிடிக்கும்னு சொன்னது
அம்ருதா.

வீடியோவில் பார்க்க




3.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்ருந்து
இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.

ஆஷிஷ், அம்ருதா ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்டு.

ஒரே குறும்பு... லூட்டி நல்லா இருக்கும்.

வீடியோவில் பார்க்க




4.அன்னை ஒர் ஆலயம் படத்தில்
"அப்பனே எங்கப்பனே பிள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா"
பிடிக்கும்னு சொன்னது அஷிஷ்.

பாட்டு ரொம்ப பிடிக்கும்.
ரஜினி அங்கிள் யானையைப் பார்த்துவிடக்
கூடாதுன்னு
செய்யற கலாட்டா பார்க்க நல்லா இருக்கும்.

"அன்பு எனக்கு ரொம்ப இருக்கு,
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு"
இந்த வரி நல்லா இருக்கும்.

வீடியோவில் பார்க்க




5.அஞ்சலி படத்திலிருந்து "அஞ்சலி அஞ்சலி"
குட்டி பாப்பா சோ ஸ்வீட்.

இந்தப் படத்தில வர்ற பாட்டு எல்லாமே
சூப்பர் என்றாலும், இந்தப் பாட்டு சூப்பரோ
சூப்பர். அஞ்சலி பாப்பாக்கூட எல்லோரும்
டான்ஸ் ஆடறது நல்லா இருக்கும்.

வீடியோவில் பார்க்க




இது எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கும்.

இவைதான் எங்களுக்கு பிடிச்ச பாடல்கள் மாமா.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி
அன்புடன்
ஆஷிஷ், அம்ருதா

Tuesday, May 27, 2008

அமர்க்களமான இசையமைப்பாளர் பரத்வாஜ்

சரணுடன் இணைந்து கூட்டணி அமைத்து காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பரத்வாஜ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்கறிஞர். காதல் மன்னன் முதல் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ரோஜா வனம், பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் என்று இவரின் பெரும்பாலான படங்களில் தனித்துவமான இவரிசையை ரசித்திருக்கின்றேன். பல படங்களின் மண்டலின் இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தியிருப்பார் இவர். இளைராஜா - வைரமுத்து காலம் ஓய்ந்த பின் வைரமுத்துவை சிறப்பாக அதிகம் பயன்படுத்தி வருபவர் இவர். பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் போன்ற பசுமை நினைவுகளை மெல்லிசையால் வருடியவர்.

இன்றைக்கு முன்னுக்கு இருக்கும் இளம் இசையமைப்பாளர்களை விட நுணுக்கமாக மெட்டும், இசைக்கலவையும் கொடுக்கக் கூடிய சில நல்ல இசையமைப்பாளர்கள் இன்னும் அதிகம் பேசப்படவில்லையே என்று நான் நினைப்பதுண்டு. அதில் ஒருவர் ரமேஷ் விநாயகம் (அழகிய தீயே), மற்றவர் பரத்வாஜ்.
நேற்றைய றேடியோஸ்புதிரில் ஜே ஜே படத்தில் வரும் உனை நான் பாடலினை நினைவுபடுத்தும் வயலின் இசை கொடுத்திருந்தேன்.



அந்த மெட்டின் சோக வடிவம்



ஜே ஜே திரையில் இருந்து "உனை நான்" பாடல்



பரத்வாஜின் ஆரம்ப கால இசைமைப்புக்களில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.

காதல் மன்னன் படத்தில் வரும் "வானும் மண்ணும்" பாடலில் புல்லாங்குழலைக் கையாண்ட இலாவகம்.



பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வரும் "எனக்கென ஏற்கனவே" பாடலில் மண்டலினைச் சிறப்பாக இடையிசையில் கொடுத்திருப்பார்.



அமர்க்களம் படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" பாடலின் சிறப்பான மெட்டும் இசையும்



பரத்வாஜ் அமர்க்களமான ஆனால் அடக்கமான இசையமைப்பாளர்.

Monday, May 26, 2008

றேடியோஸ்புதிர் 8 - இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும் பாட்டு

கடந்த சில வாரங்களாக இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பின்னணி இசை கொடுத்துப் புதிரைக் கொடுத்திருந்தேன். யூகேஜி, எல்கேஜி பசங்க அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து புதுசா வந்த இசை கொடுங்க, கலக்குவோம் என்றார்கள். எனவே இந்த வாரம் ஒரு புது இசை. கடந்த சில ஆண்டுகளுகளுக்கு முன் வந்த படத்தின் இசை இது. இந்த இசையமைப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து தொடர்ந்து பல படங்களில் இயங்கியிருக்கிறார்கள். இந்த இசையமைப்பாளர் அடிப்படையில் ஒரு சார்டட் எக்கவுண்டண்ட்.
ஒரேயொரு படத்தை மட்டும் இப்பட இயக்குனர் வேறு இசையமைப்பாளரோடு இணைந்து பணியாற்றியிருந்தார், அந்தப் படத்தையும் கண்டு பிடித்தால் போனஸ் வாழ்த்து.

இங்கே நான் தரும் இசை, இப்படத்தில் வரும் ஒரு பாடலை நினைவுபடுத்தும். மிகவும் சுலபமானது. கண்டு பிடியுங்களேன் படத்தை.



puthir8.mp3 - KanaPraba

Thursday, May 22, 2008

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜா


கடந்த வாரம் சர்வே மன்னரின் பதிவு வந்தாலும் வந்தது அதன் புண்ணியத்தில் சர்வேசர் ஒரு வாக்கெடுப்புப் பதிவும், ஜி.ரா ஒரு சுசிலா - ஜானகி கதம்பமாலைப் பதிவும் இட்டு விட்டார்கள். ஆக ஒன்று மூன்றாகியது ;-)

சரி, இந்த வாரம் வலம் வரும் சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம். இந்த வார சிறப்பு நேயர் ஒரு வானொலிப் படைப்பாளியும் கூட. அதனாலோ என்னவோ சற்று வத்தியாசமாகத் தன் தேர்வுகளைப் பாடி, அப்பாடல்களைச் சிலாகித்து ஒலி வழி தந்திருக்கின்றார். அவர் தான் கர்நாடகாவில் இருந்து சைலஜா.


எண்ணிய முடிதல் வேண்டும் என்பது இவரின் தனித்துவமான வலைத் தளமாகும். கூடவே கண்ணன் பாட்டு, தமிழ்ச் சங்கம் போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதி வருகின்றார். வலைப்பதிவில் கவிதை, கட்டுரை என்று படைத்து வரும் இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்.தமிழின் சிறப்பைத் தன் பதிவுகளில் இட்டு வரும் இவரின் படைப்பு ஒரு எட்டு பார்த்து விட்டுத் தான் வாருங்களேன்.

தொடந்து சைலஜா படைக்கும் குரல் வழிச் சிலாகிப்பும் முத்தான பாட்டிசையும் கேட்போம்.

"அத்திக்காய் பாடலுக்கு" (படம்: பலே பாண்டியா) இத்திக்காய் ஷைலஜாவிடமிருந்து சிறு விளக்கம்.கண்ணதாசனின்
கற்பனை வளம் தமிழின் அழகு ஆளுமை எல்லாம் இப்பாடலில் தெரியவருகிறது...

இரண்டு தம்பதிகள் நிலவை நோக்கிப்பாடுவதான பாடலிது

முதல் ஜோடி சொல்வது ஆண்...முதல் வரி நிலாவுக்கு

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணீலவே

அத்திக்காய் ஆலங்காய் போல தன் வெண்ணிலாமுகக்காதலி கோபத்தில் சிவந்திருக்கிறாள்
என்றும் அர்த்தம் கொள்ளலாம்

அந்த திசை நோக்கி ஒளிவீசு நிலவே (ஏனெனில்
இந்தப்பெண்ணுக்கு நீ என்னைப்பார்ப்பதாய் லேசாய் பொறாமை!)

ஆல் போல பலகாலமாய் வானில்வாழும் வெண்ணிலவே (இப்படியும் சொல்லலாம்)

2ஆம் வரி தன்னருகில் நிற்பவளுக்கு

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இந்த திசையில் கடிந்துகொள்ளாதே பெண்ணே என் உயிரே நீதானே?


பெண்---

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

இந்தப்பெண் உனீது ஆசைகொண்ட காதல்கொண்ட பாவை இப்போது கோபமாக
இருக்கிறாள்(பாகற்காய் கசப்பினை கோபமாகக்கொள்ளலாம்)

அங்கே

காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
அங்கே திட்டு அவரைத் திட்டு மங்கையான எந்தன் மன்னனை(கோ) திட்டு

ஆண்..
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
மாதுளம்பழம் வெளியே காய்போல முரடாக இருக்கும்(உள்ளே பழம் முத்துக்களாய்)
பெண்ணே(மாது) உன் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ?
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
இரவு காய் ஆனது உறவு காய் ஆனது அதற்கு ஏங்கும் இந்த ஏழையை நீ திட்டு


இரவுக்காக உறவுக்காக ஏங்குகின்ற இந்த ஏழைக்காக
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
நீயும் திட்டு தினமும் திட்டு(எல்லாம்) நேர்ல நிற்கிற இவளால்
நீயும் ஒளிவீசு நிதமும் ஒளிவீசு நேரில் நிற்கும் இவள் மீது ஒளிவீசு
பெண்-
-உறவும் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
கோபத்துல உறவு இப்போ காய் மாதிரி இருந்தாலும் என் பருவம் கனிந்ததல்லவா
அதுஇவரைக்கடிந்துகொள்ள அனுமதிக்குமா?


என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ?
என்னை நீ திட்டாதே நீயும் என்மாதிரி பெணல்லவா?
(நிலா சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுபோல் பெண் தன் கணவனின் மதிப்பினால்
ஒளிவீசுகிறாள் எனும் உள் அர்த்தம்!)
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு
(இதில்
இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)
ஜாதிக்காய் கெட்டது போல் தனிமை இனபம்கனியக்காய்
ஜாதிகளை ஒழித்ததுபோல் எங்களிடையே உள்ள பிரசசினைதீர்த்து தனிமையின் இனபம் கனிய
ஒளிவீசு


(ஜாதிக்காய் கெட்டாலும் மணம்வீசும் அந்த மணம் போல தனிமையில் இன்பம்
மணக்கட்டும் என இருக்கலாம்)


இரண்டாவது ஜோடி
ஆண்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணீலா
இவ்ளொ நேரம் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா போய் அவகிட்ட தூது சொல்லிவிளக்கு
சொன்னதெல்லாம் விளாங்காய் மாதிரி மேல் ஓடு கடினமானாலும் உள்ளே
கனிவானதுதான் (தூதுவழங்காய் ஏதோ மருத்துவ செடி?)


உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
உள்ளம் என்ன காரமான மிள்காயா அதான் ஒவ்வொருபேச்சும் உரைப்பா?(காரமா)

உள்ளம் எல்லாம் இளகாதா உன் ஒவ்வொரு பேச்சும் உரைநடைமாதீரி இருக்கிறதே(ஐஸ் ஐஸ்!)
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரித்தாயே
பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல)
கோதையெனைக்காயாதே கொற்றவரங்காய் வெண்ணீலா
கோதை என்னைதிட்டாதே கொற்றவர் (என் மன்னர்)அங்கே அவரைத்திட்டு வெண்ணிலா


கோதை என்மேல ஒளிவீசாதே நீ மெலிந்து கொத்தவரங்காய் ஆன வெண்ணீலா(கிண்டல்)


இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
எங்க இருவரையும் திட்டாதே போய் தனிமையில் போய் ஏங்கிக்கொள்
இருவர் மேலயும் ஒளிவீசவேண்டாம் தனிமையிலே போய் ஒளிவீசிக்கொள்


(அதாவது ஜோடிகள் சமாதானம் ஆகிவிட்டார்கள் நிலாவுக்கு டாட்டா
சொல்லிவிட்டார்கள்

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க
-------------------------------

"ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி" (படம்: மகாநதி)
வாலியின் அற்புதப்பாடல் இது
பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் இந்தப்பாடல் என்னை கேட்கும் போதெல்லாம் அங்கு கொண்டு செல்லும். எளிமையான அர்த்தம் கொண்ட அழகான பாடல்!


சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க


-------------------------------

"அலைபாயுதே கண்ணா" அலைபாயுதே படத்தில் வரும் இந்தப்பாடல் எனது 3வது தேர்வு. கனடாராகத்தில் அமைந்த பாடல் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் எழுதியது
ஒரு பெண்ணின் மனநிலையை இதைவிட அருமையாய் சொல்லவும் முடியுமோ?


தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?


என்னும்போது கண்ணன் ஓடி வந்துவிடக்கூடாதோ என்று இருக்கிறது.
இந்தப்பாடல் பெண்களுக்குப்பெரும்பாலும் ஆண்களுக்கும் பிடித்திருக்கும்!!


சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க


------------------------------------
"பொய் சொல்லக் கூடாது காதலி" ரன் படத்தின் இந்தப்பாடல் ஹரிஹரனின் குரலில் கேட்டிருக்கீங்களா?
வார்த்தைகளை அனுபவிச்சி பாடி இருப்பார். பொய்சொன்னாலும் நீயே என் காதலி என்கிற அளவுக்கு உயர்ந்த காதல்! கண்மூடி தேடினால் காதலி கனவில் தித்திக்கிறாளாம்! ஆஹா பாடல் எழுதியவரைப் பாராட்டுவதா பாடியவரையா இசை அமைத்தவைரையா?
ஒன்றும் வேண்டாம் இப்போ அமைதியா கண்மூடி இந்தப்பாட்டைக் கேட்கலாமா?!

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க


------------------------------

"உருகுதே மருகுதே"பாடல் வெய்யில் படத்திலிருந்து
இதற்கு உருகாத மருகாத மனமும் இருக்குமா?
படம் வெய்யில் ஆனால் பாடல் மழை ஆமா கானமழை!

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க

Monday, May 19, 2008

என்னுயிர்த் தோழன் - பின்னணி இசைத்தொகுப்பு


என்னுயிர் தோழன் திரைப்படம் படமாக்கப்படும் வேளை கல்கியில் தொடராக வெளிவந்தது. பாரதிராஜாவின் எழுத்தில் வந்த இப்படம் இவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி அரசியல் வாழ்வில் ஒரு சாதாரண தொண்டன் எப்படி ஏமாற்றப்படுகின்றான் என்பதை நடப்பு அரசியலோடு பொருத்தி எடுத்திருந்தார்.



பாரதிராஜாவின் மனைவி முன்னர் ஒரு பேட்டியில் தன் கணவர் இயக்கிய படங்களிலேயே என்னுயிர் தோழனே பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளம் படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் எதிர்பாராத விபத்தில் சிக்கி இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் இருக்கின்றார்.



இளையராஜாவுக்கும் பாரதிராஜாவுக்கும் கடலோரக் கவிதைகள் படத்தைத் தொடர்ந்து இவர்கள் நட்பில் விரிசல் விழுந்தது. பாரதிராஜா அம்சலேகா, தேவேந்திரன் என்று பிற இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டார். அப்படங்களில் பாடல்கள் சிறப்பாக இருந்தும் படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. என்னுயிர் தோழனே இளையராஜாவையும் பாரதிராஜாவையும் மீண்டும் இணைத்த திரைப்படமாகும். வைரமுத்து மட்டும் சேரவில்லை. இப்படத்தில் கங்கை அமரனே பாடல்களை எழுதினார். ஆனால் இப்படமும் தொடர்ந்து வந்த புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் போன்ற இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.



என்னுயிர்த் தோழனில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி குழுவினர் பாடும்

"ஏ! ராசாத்தி...ரோசாப்பூ வா வா வா" பாட்டு








என்னுயிர் தோழனில் வில்லன் சக இரண்டாவது நாயகன் தென்னவன், ரமா சந்திக்கும் காதல்காட்சிகளில் புல்லாங்குழல் கலந்து வரும் இசையைக் கையாண்டிருப்பார் இளையராஜா. படத்தின் பெரும்பாகத்தை புல்லாங்குழலில் இழையோடும் இசை தான் நிரப்பியிருக்கும். கண்ணனின் லீலைகள் என்ற மறைபொருளில் கூட இந்த இசைவடிவை அர்த்தம் கற்பிக்கலாம். தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளின் பின்னணி இசைத் தொகுப்பு இதோ:



நாயகி முதற்சந்திப்பில் நாயகன் கவிதையால் வர்ணிப்பு (பாரதிராஜா குரல்)






கள்ளமாக மறைந்திருக்கும் பார்க்கும் காதலியை அடியொற்றிய இசை (அட்டகாசமான இசைக்கலவை)






மேயாத மான் பாட்டை பாடிக் காட்டும் காட்சி






புல்லாங்குழலைக் களவாக வாசிக்கும் காதலியை சீண்டும் காட்சி, கூடவே காதல் கவிதை, பின்னணியில் இசைச் சிதறல்






காதலன் பிரிவில் புல்லாங்குழல் சோக இசை






ஒரு பிரிவின் பின் மீண்டும் காதலர் காணும் காட்சியில் புல்லாங்குழலோடு வயலின், பிற வாத்தியங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி






கோபத்தை வெளிப்படுத்தும் புல்லாங்குழல் பின்னணி






Sunday, May 18, 2008

றேடியோஸ்புதிர் 7 - இந்தப் புல்லாங்குழல் இசை வரும் படம்?


கடந்த வாரம் நான் குறிப்பிட்டது போன்று திரையிசை அளவிற்கு பின்னணி இசை குறித்து அதிகம் நாம் கவனம் செலுத்தாது அதன் சிறப்பை ஒதுக்கிவிடுகின்றோம். இப்படியான புதிர்ப்போட்டிகள் மூலம் அவற்றின் சிறப்பைப் பகிர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். எனவே இன்றும் ஒரு பின்னணி இசை வரும் புதிர் ஒன்றைத் தருகின்றேன்.

இதுவும் இளையராஜாவின் இசையில் வந்த ஒரு திரைப்படமாகும். ஒரு பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் வந்த அரசியல் சாயம் கொண்ட கதைக்கரு கொண்டதாகும். இப்படத்தில் நடித்தவர்கள் நாயகன், நாயகி உட்பட புதுமுகங்களே. இப்படத்தின் நாயகன், இதே படத்தின் இயக்குனரின் உதவி இயக்குனராகவும் இருந்தவர். இப்படத்தின் கதை கல்கி வார இதழில் தொடராக வந்திருந்தது. இந்தப் படத்தின் மூலம் பரவலாகப் பேசப்பட்ட நாயகன் தொடர்ந்து பல படங்களில் நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் விதி யாரை விட்டது?

இப்படத்தில் காதற் காட்சிகளில் புல்லாங்குழலுக்கும் இடம் இருந்தது. அதனால் இசைஞானி புல்லாங்குழலை வைத்து ஒரு ராஜாங்கமே நடத்திவிட்டார். அந்தப் பின்னணி இசையில் ஒரு புல்லாங்குழல் ஒலித்துண்டத்தத் தருகின்றேன்.

சரி இனி இந்தப் படத்தைக் கண்டுபிடியுங்களேன்?



அல்லது இந்த இணைப்பு

Thursday, May 15, 2008

சிறப்பு நேயர் "Surveyசன்"


கடந்த வார சிறப்பு நேயராக கயல்விழி முத்துலெட்சுமி வந்தாலும் வந்தாங்க, பதிவர்கள் தி.நகர் ஜவுளி நெரிசல் கணக்கா வந்து கு(ம்)மிஞ்சிட்டாங்க.

சரி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.

ஒரு இரண்டு வருஷங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தை வழக்கம் போல் உலாவலாம் என்று பக்கத்தைத் திறந்தால் எடுத்த எடுப்பிலேயே புள்ளிவிபர இலாகாவிலிருந்து கேட்குமாற் போல யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார். வழக்கமான பதிவுகளில் இருந்து விலகியிருக்கிறாரே என்று நினைக்கமுன்னரே சரசரவென்று ஒவ்வொரு நாளும் விதவிதமான கேள்விக் கொத்தோடு பதிவுகளைக் குவித்தார். பாராட்டு, விமர்சனம் என்று சம அளவில் இந்தப் புள்ளிவிபரப்பதிவுகளுக்குக் கிடைத்தது. ஆனாலும் விட்டாரா மனுஷன், நான் "ஆக்கியவன் அல்ல அளப்பவன்" என்று தொடர்ந்தும் தன் "பணியை" செய்து ராமராஜன் லெவலுக்கு திடீர் ஹீரோவாகிவிட்டார். அவர் தான் நம்ம சர்வேசன்.

ஆனால் இவருக்கு புள்ளி விபரம் தான் எடுக்கத் தெரியும் என்று கணக்கு போடுபவர்களின் நினைப்பை மாற்றி "நேயர் விருப்பம்" போன்ற கலக்கல் இசைத் தொடர்களையும் ஆரம்பித்தார். மனசு ரிலாக்ஸாக இருக்க சில பதிவர்களின் பதிவைத் தேடிப்படிப்பது வழக்கம். அதில் சர்வேசனும் ஒருவர். நச் சென்ற விமர்சனமும், குறும்புத்தனமும், கலந்த எழுத்தும் அளவான கஞ்சத்தனமான பதிவும் இவரின் தனித்துவம். தமிழில் புகைப்படக்கலை போன்ற கூட்டுவலைப்பதிவுகளில் கலக்கினாலும் Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்
என்ற இவரின் பதிவு தனித்துவமானது. எம்.எஸ்.வி ஐ வாழும் காலத்தில் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் இவரின் முனைப்பு இன்னும் ஒரு படி இவர் மேல் மதிப்பை ஏற்படுத்துகின்றது.

தொடர்ந்து நண்பர் சர்வேசனின் முத்தான ஐந்து பாடல்கள் பற்றி என்ன சொல்கின்றார் என்று கேட்போம்.


கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் புதுப்புது யுக்திகளை புகுத்தி வருகிறார்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிறப்பு நேயர்' பதிவில், பதிவர்களின் டாப்-5 விருப்பப் பாடல்களை அருமையாக தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் திரைப்படங்களில் ஆயிரமாயிரம் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும் ரகம். அதிலிருந்து வெறும் ஐந்து பாடல்களை மிகவும் பிடித்தது என்று எடுத்துத் தருவது ரொம்பக் கஷ்டமான வேலை.கூட்டிக் கழிச்சுப் பாத்தாகூட ஒரு ஐநூறு பாட்டாவது மிகப் பிடித்த தர வரிசையில் இடம்பெறும்.

அதனால, இந்த ஈ.மடலை தொகுக்கும் இந்த ஞாயிறு மதியம், மனதில் உதிக்கும் ஐந்து பாடல்களை தரலாம் என்று முடிவு. (எழுதி அனுப்பின தினம் பெப்ரவரி 25)
பலப் பல பாடல்கள் பிடித்தாலும், சில பாடல்களின் ஆரம்ப இசை கேட்டதும், மனதில் ஒரு சிலீர் தோன்றும். அப்படிப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஆயிரமாயிரம் பாடல்களில் ஐந்து உங்கள் பார்வைக்கு.

1) ஒரே நாள் உனை நான்..
இளமை ஊஞ்சலாடுகிறது (இளையராஜா)


இந்தப் பாட்டு பாத்த ஞாபகம் இல்லை.
சின்ன வயசுல, ரேடியோல அடிக்கடி போட்டிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.
அதனாலத்தான் என்னவோ, எப்ப இந்த பாட்ட எங்க கேட்டாலும், நான் மேலே சொன்ன 'சிலீர்' அனுபவம் கிட்டும்.
ஆரம்ப, கிட்டார் strumming ம், அதைத் தொடரும் வயலினும் போதும், இது எப்பேர்பட்ட பாட்டு என்பதைச் சொல்ல.
ஒவ்வொரு interludeல் வரும் கிட்டாரும் சுண்டி இழுக்கும்.
Vow! what a song!
அந்த கால SPB குரல், சொல்லணுமா? கட்டியணைக்கும் ரகம்.
வாணி ஜெயராமின் கணீர் குரலும் அமக்களமா இருக்கும்.

வீடியோவில் பார்க்க

கேட்க



2) எங்கேயும் எப்போதும்...
நினைத்தாலே இனிக்கும் (MSV)


யப்பா யப்பா யப்பா. என்னமாதிரியான பாட்டு இது. இந்த மாதிரி ஒரு துள்ளலான பாடல், இதுக்கு முன்னாடி இருந்ததும் இல்லை, இதுக்கப்பரமும் வந்ததில்லை.
ஆரம்ப கிட்டாரும், பின்னணி ட்ரம்ஸும், அதைத் தொடரும் ட்ரம்பெட்டும் சாமி ஆடவைத்துவிடும்.
இந்தப் பாடலின் ஒரே குறை, கமலின் ஆட்டமும், நம் சூப்பர் ஸ்டார் கிட்டாரை சொறிவதும் தான் ;)
ஒருவேள படம் வந்த நேரத்துல, இந்த டான்ஸ் 'சகித்தல்' ரகமா இருந்திருக்குமோ என்னமோ :)
கண்ணதாசனின் எளிமையான வரிகளும், MSVன் அதிரடி இசைக் கோர்வையும் கேட்டால் ஆடாத கால்களும் ஆடும்.
வழக்கம் போல், SPB இந்த பாடலை பின்னி பெடலெடுத்திருப்பார்.
'இங்கும் எங்கும் நம்முலகம்'னு அசத்துவாரு பாருங்க அசத்தல்.
அடேங்கப்பா, திக்குமுக்காடவைக்கும் பாடல் இது.
MSVக்கும், கண்ணதாசனுக்கும், SPBக்கும் தலை வணக்கங்கள்!

வீடியோவில் பார்க்க

கேட்க



3) என்னைத் தாலாட்ட வருவாளா...
காதலுக்கு மரியாதை (இளையராஜா)


ஹரிஹரன் சின்ன வயசுல ராஜா கிட்ட சான்ஸ் கேட்டு அலஞ்சாராம். ராஜா கண்டுக்காம விட்டுட்டாராம். அவரும் அக்கடான்னு கஜல்ஸ் பாடிக்கிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தாரு. ரஹ்மான் புண்ணியத்துல சினிமால தலைகாட்டி, அவரு வித்த காட்டினது நமக்கு தெரியும்.
சினிமால பாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகியும், ராஜா ஹரிஹரனுக்கு சான்ஸ் கொடுக்கல. (சான்ஸ் கொடுக்கர மாதிரி பாடல்கள் அமையலையோ?)
90களில் ரஹ்மான் வந்தப்பரம், ராஜாவின் ஆட்டத்தின் வேகம் குறைந்தது போல் தோன்றியது. ரஹ்மான் புகுத்திய புதுமையில் நம்மாளுங்கெல்லாம் மெய்மறந்து கெடந்தோம். சின்ன சின்ன ஆசை, சிக்கு புக்கு ரயிலே, ஒட்டகத்த கட்டிக்கோன்னு மந்திரிச்சு விட்ட மாதிரி இருந்தோம் எல்லாரும்.
ராஜாவும், அப்பப்ப electronics percussion எல்லாம் அங்கங்க போட்டு என்னென்னமோ பண்ணிப்பாத்தாரு எடுபடல.
ஒரு ரெண்டு மூணு வருஷம் பெருசா ஹிட்டும் வரல ராஜாகிட்டயிருந்து.
ஜனமும், ராஜா ரிட்டையர் ஆகவேண்டியதுதான்னு அனத்த ஆரம்பிச்சிருந்த காலம்.
லன்ச் டின்னர் டிஸ்கஷனிலெல்லாம், ரஹ்மான் ஸைட், ராஜா ஸைட்னு டீம் கட்டி சண்டைகள் வலுப்பெற்றிருந்த காலம். ராஜா வலுவிழந்து இருந்தாலும், விட்டுக் கொடுக்காம சண்ட போட்டோம்ல :)

அப்ப வந்ததுங்க இந்த 'காதலுக்கு மரியாதை' படம்.
ஹரிஹரனுக்கு முதல் வாய்ப்பு, ராஜாவின் இசையில்.
அருமையான கதைக்களம் உள்ள படம்.
பாடல் சிச்சுவேஷனும் அருமை.
ஆரம்ப ட்ரம்ஸும் அருமை. அப்படியே, இதையத் துடிப்பு மாதிரி ஆகிடுச்சு.
FMல அந்தப் பாட்டு ஒரு நாளைக்கு நூறு வாட்டி போட்டானுங்க.
டி.வி.ல எல்லாச் சேனல்லயும் இந்தப் பாட்டுதேன்.
ஹரிஹரன் அதுக்கு முன்னாடி எவ்ளவோ பாடல்கள் பாடியிருந்தாலும், இந்த பாடல் தந்த பன்ச் வேற எதுவும் தந்ததில்லை.
பவதாரணியின் ஹம்மிங்குடன் தொடங்கும் இந்தப் பாடல் பலருக்கு காதல் அரும்பக் காரணமான ஒரு பாடல் ;)

வீடியோவில் பார்க்க

கேட்க



4) தூங்காத கண்ணென்று ஒன்று...
குங்குமம் (கே.வி.மகாதேவன்)
சுசீலாவின் குரலில் வரும் இந்தப் பாட்டு கேட்டாலே மனசு இளகிடுது. படத்தின் வீடியோ கெடச்சா யாராவது போடுங்க. இதுவரை பாத்ததா ஞாபகம் இல்லை.

கேட்க



5) காற்றில் எந்தன் கீதம்..
ஜானி (இளையராஜா)


டாப் லிஸ்ட்ல, எஸ்.ஜானகி பாடின பாட்டு இல்லன்னா என் தலை சுக்கு நூறாயிடும் ;)
ஜானகி பாடர மாதிரி ஒரு ஸ்டைல், வேறு பெண் பாடகியர் பாடி நான் கேட்டதில்லை. சுசீலா பாடரதும் பிடிக்கும், ஆனா அவங்க, ரூல்ஸ் படி பாடிட்டு போயிடுவாங்களோ? ஜானகி, SPB மாதிரி, இவங்களுக்கான ஒரு ஸ்டைல் பாடலில் சேர்த்து, மேலும் மெருகேத்துவாங்கங்கரமாதிரி ஒரு தோணல் எனக்கு.
ஜானியில், வரும் "காற்றில்.." பாட்டும் சிலீர் ரகம்.
கிட்டார் ஒரு புறம், மழை சத்தம் மறுபுறம்.
நடுவில், அந்த ஹம்மிங், 'ஹா.. ஆ..ஆ.அ.ஆ. ஆ. ஆ" ன்னு நானும் எவ்ளவோ முயற்சி செய்து பாத்துட்டேன். வர்ல. :)
இந்தப் பாடலின் இசைக் கோர்வை ப்ரமிப்பூட்டும்.
ஃப்ளூட்டு, ட்ரம்பெட்டு, கிட்டாரு, ட்ரம்ஸு, இடி, மழை எல்லாம் சேந்து ஒரு ப்ரவாகமா மாறி மதிமயக்க வைக்கும் பாடல்.
stageல யாராச்சும் இந்த ஹம்மிங்க சரியா பாடினா கண்டிப்பா விசில் அடிச்சு அவங்களுக்கு மரியாதை செய்வேன், எல்லா வாட்டியும்.
ஜானகி மேடம், Salutes!

வீடியோவில் பார்க்க

கேட்க



ஐயோ, அஞ்சு ஆயிடுச்சா அதுக்குள்ள? ஹ்ம். லிஸ்ட்ல எதையாச்சும் எடுத்து, வேற பாட்ட நொழைக்கலாமான்னு தோணுது. ஆனா, அப்படிப் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு முடிவேயில்லாம போயிட்டே இருக்கும்.
செந்தாழம் பூவில், உறவுகள் தொடர்கதை, சின்னக் கண்னன் அழைக்கிறான், ஞாயிறு என்பது பெண்ணாக, எங்கிருந்தாலும் வாழ்க, நினைவெல்லாம் நித்யா, கனவு காணும் வாழ்க்கையாவும், பூமாலையில் ஓர் மல்லிகை, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தென்றல் வந்து தீண்டும்போது, கீரவாணி, ஓம் நமச்சிவாயா, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, லாலி லாலி, கற்பூர பொம்மை ஒன்று, சுந்தரி, தேனே தென்பாண்டி, மண்ணுக்கு மரம் பாரமா, நீதானே என் பொன்வசந்தம், உன்னை நான் சந்தித்தேன், .... இப்படி எழுதிக்கிட்டே போலாமே மக்களே. :)

நல்ல பாடல்களைக் கேளுங்க. கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்னி!

Tuesday, May 13, 2008

வருஷம் 16 பின்னணி இசைத்தொகுப்பு


நேற்று றேடியோஸ்புதிரில் ஒரு படத்தின் ஆரம்ப இசையை ஒலிபரப்பி சில தகவல்களையும் கொடுத்து அது என்ன திரைப்படம் என்று கேட்டிருந்தேன். வருஷம் 16 என்று சரியான விடையைப் பலர் அளித்திருந்தீர்கள்.

இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் "என்னென்னும் கன்னெட்டானே" (Ennennum Kannettante) என்ற பெயரில் 1986 இல் வெளிவந்து கேரள அரசின் "Best Film With Popular Appeal and Aesthetic Value" என்ற விருதைப் பெற்ற படமே பின்னர் தமிழில் "வருஷம் 16" என்று 1989 இல் வெளிவந்திருந்தது. மலையாளப்பதிப்பில் கதாநாயக நாயகிப் பாத்திரம் ஏற்றவர்கள் மிக இளம் வயது நடிகர்களாக இருந்தார்கள். மலையாளத்தில் இசை ஜெர்ரி அமல்தேவ்.அந்தப் படத்தையும் பாத்திருக்கின்றேன்.


வருஷம் 16 திரையில் கார்த்திக் நாயகனாகவும், குஷ்பு நாயகியாகவும் நடித்திருந்தார்கள். குஷ்புவிற்கு ஒரு திருப்புமுனை இப்படத்தின் மூலம் கிடைத்தது. புதிரில் நான் கேட்டது போன்று பூர்ணம் விஸ்வநாதன் பெரிய தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

பாசில் படங்களுக்கு இளையராஜாவின் தனிக்கவனிப்பு இருப்பது போல் இந்தப் படத்திலும் உண்டு. பாடல்கள் மட்டுமன்றி இப்படத்தின் பின்னணி இசையும் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒரு டைட்டில் இசையை பின்னர் படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு அதே இசையை எப்படி உருமாற்றிக் கொடுத்திருக்கின்றார் என்று இங்கே தருகின்றேன். கேட்டு ரசியுங்கள்.

படத்தின் ஆரம்ப இசைக்கோர்ப்பு



அதே இசைக்கோர்ப்பு சோக ஒலியாக



அதே இசை காதலர் சந்திக்கும் காட்சியின் பின்னணியில்



அதே இசைக்கோர்ப்பு இறுதிக்காட்சியில் இப்படி

Monday, May 12, 2008

றேடியோஸ்புதிர் 6 - இந்த முகப்பு இசை எந்தப் படம்?

கடந்த வாரம் ஒரு பாடலின் இடை இசையோடு புதிர் போட்டேன். இந்த வாரம் ஒரு படத்தின் முகப்பு இசையைத் தந்து அப்படம் எதுவென்று புதிர் போடுகின்றேன். காரணம் தமிழ்த் திரையுலகில் பாடல்களை விதந்து சிலாகிக்கும் அளவுக்கு அப்படத்தில் சிறப்பாக இருக்கும் பின்னணி இசை பேசப்படுவதில்லை. குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையமைத்த எழுநூற்றுச் சொச்சம் திரைப்படங்களில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ரசிகர்களால் கவனிக்கப்பட்டு நேசிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் போடும் புதிர் ஒரு பின்னணி இசையாகவே கொடுக்கப்பட்டு எவ்வளவு தூரம் அந்த இசையை நீங்கள் கவனித்திருக்கின்றீர்கள் என்பதை அறியும் ஒரு முயற்சியாக இருக்கின்றது. எனவே கஷ்டப்பட்டு இந்த இசையை படத்தின் காட்சியில் இருந்து பிரித்தெடுத்து இங்கே தந்திருக்கின்றேன்.

இங்கே நான் தரும் இந்த இசை எண்பதுகளில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முகப்பு இசையாக (Title music) இருக்கின்றது. இது வேற்று மொழியில் வந்து பின்னர் மீளவும் தமிழில் புதிதாக எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் தலைப்பில் இலக்கம் (number) இருக்கும். இப்பட நாயகன் எண்பதுகளில் அறிமுகமாகிப் பிரபலமான நாயகன். நாயகிக்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இன்று வரை இந்த நாயகி அதே புகழோடு இருக்கின்றார். இப்படத்தின் பாடல் ஒன்று பண்டிகை நாள் ஒன்றை நினைவுபடுத்தும். இப்படத்தில் தோன்றிய முக்கிய பாத்திரங்களில் ஒருவரான பூர்ணம் விஸ்வநாதனை இங்கே படமாகக் கொடுத்திருக்கின்றேன். சரி இனி இந்தப் பின்னணி இசையைக் கேட்டு இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.



Thursday, May 8, 2008

சிறப்பு நேயர் "கயல்விழி முத்துலெட்சுமி"


கடந்த வாரம் கண்ண(னின்) தாசன் கண்ணபிரான் ரவி சங்கர் கலவையாக ஐந்து பாட்டுக் கேட்டுவிட்டுப் போனார். அவர் பக்திமார்க்கமாகத் தான் பாடலுக்குப் போவார்னு நினைச்சவங்க வாயில் மண் மன்னிக்கவும் அவல் ;-) தொடர்ந்து உங்கள் விருப்பத் தேர்வுகள் ஐந்தைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி உங்கள் பாணியில் எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் விருப்பத் தேர்வுகளும் இடம்பெறக்காத்திருக்கின்றன. நீங்கள் பதிவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, பதிவுலக வாசகராகவும் இருக்கலாம்.


இதோ இந்த வாரச்சுற்றுக்குப் போவோம். இந்த வார றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வருபவர் "கயல்விழி முத்துலட்சுமி". கடந்த 2006 இல் தான் பதிவுலகிற்கு வந்தாலும் வகை வகையான பதிவு விருந்து கொடுத்து தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றார்.
சிறு முயற்சி என்பது இவரின் தனித்துவமான வலைப்திவாகும். கூடவே தேன் கிண்ணம், சாப்பிட வாங்க போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் இடம்பிடித்தாலும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இவரின் இன்னொரு பங்கு வலைச்சரத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி.
வலைச்சரம் என்னும் கூட்டு வலைப்பதிவில் ஒரு தேக்கம் களைந்து சமீப காலமாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த சகவலைப்பதிவர்களை ஒழுங்கமைத்து இப்பதிவில் எழுத வைப்பது இவரின் சிறப்பான பணிகளில் ஒன்று. இவரின் பதிவுகளிலேயே மிகவும் பிடித்தது "எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி" காரணம் தொழில்நுட்ப விஷயங்களை இலாகவமாக இவர் தந்திருந்த விதம்.

தொடர்ந்து கயல்விழி முத்துலட்சுமி தன் முத்தான ஐந்து தேர்வுகள் குறித்து என்ன சொல்கிறார், கேட்போமா?


பாட்டு பாட்டு ன்னு படிப்பைக்கூட கவனிக்காம பாட்டு கேட்கும் பழக்கம் சின்னவயசில் இருந்தே இருக்கிறது.

ரேடியோவை அணைக்காம ராத்திரி பாட்டை கேட்டுகிட்டே தூங்கி அப்பா வந்து பாத்து அணைப்பது கூட உண்டு. டிவியில் கூட படங்களை விட பாட்டு நிகழ்ச்சி வரும் நிகழ்ச்சிகள் தான் பிடிக்கும்.. முன்பு etc ஒரு சேனல் வந்துது இந்தி பாட்டு மட்டும் பாடும் .. அதே ஓடும் சில நேரம். தமிழ்நாடு வந்தா டிவியில் எப்ஃஎம் போடறாங்களே அதுவோ இல்லாட்டி சன்ம்யூசிக்கோ தான் போட்டுப்பாப்பேன் அந்த அளவு பாட்டு தான் பிடிக்கும். இப்படி இருக்கும் போது அஞ்சு பாட்டுன்னா எதை சொல்றது எதை விடறது கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யறேன்..

"அன்புள்ள மான்விழியே"

" மெதுவான இசை , அழகான அந்த கண்களோடு ஜமுனா உதட்டை சுழித்து " ஆசையில் ஒர் கடிதம் அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் " பெரிய கண்ணை அங்கயும் இங்கயும் உருட்டி பாட்டை கண்களால் நாட்டியம் ஆடி பாடுவதும் என்று தனி அழகு..
"

நலம் நலம் தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் " ரசித்து கேட்கலாம் ரசித்து பார்க்கலாம்




"அழகிய கண்ணே உறவுகள் நீயே"

.. அஸ்வினி ...சாந்தமான அந்த முகமும் சரி அந்த பாட்டின் இசையும் சரி மனசை கொள்ளை யடிக்கும்..
"

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே" ஆகா சிறுமி அஞ்சு வின் சிரிப்பை விட்டுட்டேனே... அதையும் சேர்த்துக்கோங்க..




"பூவிலே மேடை நான் போடவா"
... ஜெயச்சந்திரன் எனக்குபிடித்த பாடகர் அந்த குரலில் ஒரு மென்மை இருப்பது போல தோன்றும் ..".பூவிதழ் போல முல்லை என் கிள்ளை " சின்ன தாலாட்டு ..




"பூங்கதவே தாள் திறவாய்"

ஒன்னும் சொல்றதுக்கில்ல இசை தான் கிறக்குமே... என்ன பாட்டு என்ன பாட்டு.. அதுல தீபனும் உமாவும் வேற உருகி இருப்பாங்க பாட்டுல .... ""ஆஹா ஹா ஆனந்தம் '' பாட்டுலயே சொல்றாங்க பாருங்க...




"உலவும் தென்றல் காற்றினிலே"
இந்தப்பாட்டு கேட்கும் போதே நாமும் படகுல உக்காந்து போற மாதிரியே இருக்கும்...


"அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே .." நாயகன் பாட

"உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே"

.. நாயகி புகழ...
பதிலுக்கு அவரு

"இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே " ன்னு மடக்க
"தெளிந்த நீரைப்போல தூயக்காதல் கொண்டோம் நாம்" ன்னு நாயகி பாட
"களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் "ன்னு மடக்க
"குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ" ன்னு .. கதாநாயகி மயங்க
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே

... என்ன ஐஸ் பாருங்களேன்..
எத்தனை பேரு இந்த பாட்டை இந்த காலத்துலயும் ரசிப்பாங்கன்னு தெரியாது



..
இன்னும் எத்தனையோ பாட்டு ஹ்ம்

.. இன்னொரு முறை வாய்ப்பளிக்குமாறு கானாப்பிரபாவை கேட்டுக்கிறேன்..

--
கயல்விழி முத்துலெட்சுமி

Tuesday, May 6, 2008

அந்தப் பாட்டு: பாரிஜாதப் பூவே அந்த தேவலோக தேனே


நேற்றுக் கேட்டிருந்த பாடல் புதிருக்குப் பல நேயர்கள் சரியான விடையளித்திருக்கின்றீர்கள்.

இதோ விளக்கத்துடன் கூட விடை.

அந்தப் பாடல் "பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே"
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: என் ராசாவின் மனசிலே
வெளிவந்த ஆண்டு: 1991
இப்பாடலைப் பாடியவர்கள் சுரேந்தர் மற்றும் சித்ரா.
பாடகர் சுரேந்தர் பாடகராகப் புகழடைந்ததை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் ராஜ்கிரண் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இயக்கியிருந்தவர் கஸ்தூரி ராஜா. இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது. படம் வெற்றியடையும் போது வரும் சர்ச்சை போல இந்தப் பட நாயகன் ராஜ்கிரணுக்கும் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும் டூ விட்டுக் கொண்டு போய்விட்டார்கள். அண்மையில் கூட ஒரு பேட்டியில் இன்றைய காலகட்டத்துக்கு "என் ராசாவின் மனசிலே" படத்தை எடுத்தால் ஊத்திக் கொண்டுவிடும் என்று பேட்டி கொடுத்து வெறுப்பேற்றினார் கஸ்தூரிராஜா

இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. இப்படத்தின் அறிமுக நடிகர் ராஜ்சந்தரும், இரண்டாவது நாயகியாக நடித்த சாரதா ப்ரீதாவும் படத்தில் பாடி ஆடியிருக்கின்றார்கள். (பாரதிய நவீன இளவரசே விளக்கம் தந்தாச்சு).
கைப்புள்ள சொன்னது போல் இந்த ராஜ்சந்தர் வால்டர் வெற்றிவேலில் சத்யராஜ் தம்பியாக நடித்திருப்பார். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள் ;-)

பாடலைக் கேட்க



பாடலை கூமுட்டையின் யூடிபில் பார்க்க

Monday, May 5, 2008

றேடியோஸ்புதிர் 5 - இந்தப் பாட்டு எந்தப் பாட்டு?

கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பாட்டுப் புதிரோடு வந்திருக்கின்றேன். இங்கே ஒரு பாடலின் இடையே வரும் இசைத் துண்டைத் தருகின்றேன். இது எந்தப் பாட்டு என்று கண்டு பிடியுங்களேன்.

இதோ சில உதவிக்குறிப்புக்கள்.
இப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.

இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள். கண்டு பிடியுங்களேன்.

பி.கு: இந்தப் பதிவு புதுத் தமிழ்மணத்தில் சோதனையோட்டம் ;-)

Friday, May 2, 2008

சிறப்பு நேயர் "கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)"


கண்ணபிரான் ரவிசங்கர், பெயரிலேயே கண்ணனின் திருநாமத்தை முகவரியாக்கிக் கொண்ட இவர் வலைப்பதிவுலகில் கண்ணன் பெருமையைச் சுவைபடக் கூறும் பதிவர். ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால் பார்ப்போம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.

முன்பு நண்பர் ஜீ.ராகவனைப் பற்றிச் சொல்லும் போது தோன்றிய எண்ணங்களே கே.ஆர்.எஸ் ஐப் பற்றி எழுத ஆரம்பித்த போதும் வந்து முளைத்தன.தான் எழுத எடுத்துக் கொண்ட எந்த விடயம் என்றாலும் விரிவான நடைகொடுத்து, நல்ல தமிழ் சொற்கோர்த்து இவர் எழுதும் பாணியே சிறப்பானது. எதையும் ஆராய்ந்து பொருத்தமான வேளையில் கொடுக்கும் இவர் பதிவுகள் பலரின் தேடல்களுக்கு விடைகள் ஆகின்றன.

ஒவ்வொரு பதிவுக்கும் கொடுக்கும் தலைப்பே KRS தான் இந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று காட்டிக்கொடுத்துவிடும் அளவிற்கு அதிலும் தனித்துவம் காட்டுவார். குறிப்பாக இன்னது தான் சிறப்பானது என்று பொறுக்கி எடுத்துச் சிலாகிக்க முடியவில்லை. காரணம் எழுத முன்னரேயே இவை தான் பதிவுலக வாசகரைப் போய்ச் சேரவேண்டும் என்று அவரே முடிவெடுத்துவிட்டது போலத் தனித்துவமான பதிவுகள் பலவற்றைக் கொடுத்திருக்கின்றார்.

மாதவிப்பந்தல் என்பது இவரின் தனித்துவமான வலைப்பதிவு, கூடவே ஒரு கூடை கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதிவருகின்றார் கே.ஆர்.எஸ். இதோ KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் தான் தேர்ந்தெடுத்த முத்தான ஐந்து பாடல்கள் குறித்து என்ன சொல்கின்றார் என்று கேட்போம், பார்போம்.



நான் காபி அண்ணாச்சி என்று அழைக்கும் நம்ம கானா பிரபா அண்ணாச்சியைக் கண்மூடித்தனமா கண்டிச்சிட்டு இந்த றேடியோஸ்பதி கச்சேரியைத் துவங்குகிறேன்! பின்னே என்னவாம்?
ஒரு ரொமாண்டிக் பவுர்ணமி இரவில், வீட்டு மொட்டை மாடியில், காதலியுடன் அழகாய்க் கதைத்துக் கொண்டிருந்தேன்! அப்போ, கண் முன்னே தோன்றியது காதல் தேவதை! நீலவானில் கொட்டிக் கிடக்கும் தாரகைகளை எல்லாம் ஒரு பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தது.

கூடையில் உள்ளதில், ஐந்து பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ள உனக்கு வரம் தருகிறேன் என்று தேவதை கூறியது! இப்படியெல்லாம் கொக்கி போட்டு வரம் கொடுத்தா கோபம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!
அந்தக் கூடையில் மின்னி மினுக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்படியே அள்ளி அள்ளிக், காதலியின் மேல் பொழிய மனசு துடிக்குது! ஆனால் தேவதையோ "லிமிட் ஃபைவ்" என்கிறது!

அது போல இருக்கு காபி அண்ணாச்சி சொல்லும் றேடியோஸ்பதி "லிமிட் ஃபைவ்" கணக்கு! சரி, கொடுத்த வரத்தை இப்போதைக்கு வாங்கிக் கொள்வோம்! அமிழ்தினும் இனிய தமிழ்த் திரையிசையில் இதோ...எனக்குப் பிடித்த ஐந்து நட்சத்திரங்கள்!

--------------------------------------------------------------------------------

1. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்!
படம்: டிஷ்யூம்
குரல்: ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆன்டனி
வரி: புவன சந்திரா


என்னை வழிக்கு கொண்டு வருவது எப்படி என்று என் நெருங்கிய நண்பர்களுக்கு நல்லாத் தெரியும்! இந்தப் பாட்டு தான்! :-)
மனம் கனமாக இருக்கும் போது, சட்டென்று இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துருச்சின்னா போதும், உடனே லைட்டாகி விடுவேன்! ஏன் என்றால் இந்தப் பாட்டில் சோகமும் இருக்காது! சந்தோஷமும் பிச்சிக்கிட்டு கொட்டாது! "நிறைவு" என்று சொல்கிறோமே, அது!

"எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் - இன்னும் பூமுகம் மறக்கவில்லை" என்று காதலன் பாடுவான்! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!
பாட்டில் ஜீவாவும் சந்தியாவும் தோன்றும் காட்சிகள், அதிலும் அந்தப் படகுவீட்டில் முதலிரவு நடப்பதாய் வரும் கனவு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :-)

விஜய் ஆன்டனி சில ஹிட்களே கொடுத்த இளம் இசையமைப்பாளர். அதுக்கு அப்புறம் இவரை ரொம்பக் காணவில்லையே! இதில் பாடுபவர்களும் புதுமுகங்கள் தான்! ஆனாலும் பாட்டு செம ஹிட். பாட்டின் மெட்டு கொஞ்சம் க்ளாசிக்கல் என்றாலும், மெலடி பாடல்களில் இது ஒரு மகுடம் தான்!
இந்தப் பாட்டோட ராகம் பிருந்தாவன சாரங்கா என்று பிற்பாடு ஒரு நண்பர் சொன்னார்! நமக்கு எங்க அதெல்லாம் தெரியப் போகுது? பிருந்தாவனம் கண்ணனுக்குப் பிடிச்சதாச்சே! அதான் என் கூடவே ஒட்டிக்கிச்சி போல! :-)

பாட்டின் ஹை-லைட் வரிகளே...நட்சத்திரத்தை எல்லாம் கூப்பிட்டுக் காதலைச் சொல்ல முடியுது, ஆனா அவளிடம் மட்டும் சொல்ல முடியலையே என்ற ஏக்கம்!
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே...

பாடலைப் பார்க்க
படிக்க

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பாட்டே
நெஞ்சாங்கூட்டில் முதலில் நிற்கிறாய்!!




--------------------------------------------------------------------------------

2. உச்சி வகிந்தெடுத்து
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
குரல்: SPB
இசை: இளையராஜா
வரி: புலமைப்பித்தன்


காலத்தால் அழியாத பாடல்-னு சொல்லுவாங்களே (Evergreen Song)! அதில் இது ஒன்னு!
பொதுவா எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள்-னா ரொம்பவே உசுரு! (கானா ஊர்ஸ்ல நாட்டார் பாடல்-ன்னு சொல்லுவாய்ங்களாம்). இதுல பெருசா தாம் தூம்-னு இசை இருக்காது. அலங்காரமாச் சொற்களும் இருக்காது! இசைக் கருவிகளும் சாதாரண டொய்ங்க் டொய்ங்க் கருவிகள் தான்! ஆனா எந்த வேஷமோ முகமறைப்போ பாசாங்குகளோ இல்லாம, இதயத்தோடு நேரடியாப் பேசும் பாடல்கள் இவை.

என் கொஞ்ச நாள் வாழைப்பந்தல் கிராம வாசம் இன்னும் எனக்குள்ளாற வீசிக்கிட்டே தான் இருக்கு! அதுவும் எங்க ஆயா பாடிய நாட்டுப் பாடல்கள்! அதுலயும் தாலாட்டுப் பாட்டுங்கனா ரொம்பவும் பிடிக்கும். (சரியான கும்பகர்ணன் என்பதை எப்படி எல்லாம் டீஜன்டா சொல்லுறான்-ன்னு அங்க யாருப்பா சவுண்டு வுடறது? :-)
நான் தான் தூங்கிட்டனே-ன்னு நெனச்சி பாட்டைப் பாதியில் நிறுத்திருவாங்களாம்! ஆயா மறந்துட்டாங்க போல-ன்னு மீதியை நான் அப்பவே எடுத்துக் கொடுப்பே-ன்னு இப்பவும் வூட்ல சொல்லிச் சிரிப்பாய்ங்க!

பிச்சிப்பூ, ராக்கொடி, சித்தகத்தி, வட்டக்கருப்பட்டி-ன்னு கிராமச் சொற்களா இந்தப் பாட்டில் வரும்! சிவகுமார் தன் மனைவியைப் பத்தி ஊரு என்னென்னமோ சொல்லும் போது, நம்பவும் முடியாம, தள்ளவும் முடியாமப் பாடுவாரு! எப்பமே ஸ்டைலாப் பாடும் SPBயா இதப் பாடுறாரு-ன்னு நமக்கே சந்தேகம் வந்துரும்! பாட்டுல கிராம வாத்தியங்களும் ஒலிக்கும். என்னென்ன-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

நம்ம மேல யாராச்சும் அபாண்டமாச் சொல்லிட்டாங்கன்னா...இல்லை ஆபீஸ் அரசியல்...இல்லை பதிவு அரசியல்...எதுவா இருந்தாலும்.....இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்க!
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
ஆரீராரோ! ஆரீராரோ! ஆரீரா-ரீராரி-ஆரீராரோ!
அப்படியே தட்டித் தட்டித் தூங்க வைப்பது போல்! ராஜா என்னிக்குமே ராஜா தான்!

பாடலைப் பார்க்க
படிக்க



--------------------------------------------------------------------------------

3. அற்றைத் திங்கள் வானிடம்
படம்: சிவப்பதிகாரம்
குரல்: மது பாலகிருஷ்ணன், சுஜாதா
இசை: வித்யாசாகர்
வரி: யுகபாரதி


இந்தப் பாடலைக் கேட்ட பிறகு கல்லுக்குக் கூட காதல் ரசம் சொட்டும்! Husky Voice என்பார்களே, அதுக்கு இந்தப் பாடல் நல்ல எடுத்துக்காட்டு! சுஜாதா மிக அழகாகப் பாடி இருப்பார்கள். நான் அடிக்கடி இரவில் கேட்கும் பாட்டு! Yeah, this is absolutely a night song! :-)

அற்றைத்திங்கள் வானிடம், அல்லிச்செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம், சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம், நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

இந்தப் பாட்டைக் கொஞ்சம் உன்னிப்பாக் கேளுங்க! அந்த "ம்" சத்தம் ஒவ்வொரு வரியிலும் கேட்கும்! காதலன்-காதலி பேச்செல்லாம் கொஞ்சம் கொஞ்சமா எப்படி அடங்கும்-னு நினைக்கறீங்க? அந்த "ம்" சத்தத்தில் தானே? அதைப் பாட்டில் அழகா கொண்டு வந்திருப்பாரு கவிஞர்! தூய தமிழ்ச் சொற்கள் புழங்கும் பாட்டு இது!

நடுங்கலாம் குளிர் வாடையில், அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில், உறங்கலாம் அதிகாலையில்
-ன்னு ரசம் கொஞ்சம் ஸ்ட்ராங்காத் தான் இருக்கும்! ஆனா ராங்கா இருக்காது! :-)

பாடலைப் பார்க்க
படிக்க




--------------------------------------------------------------------------------

4. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
படம்: ஷாஜகான்
குரல்: உன்னி மேனன்
இசை: மணிசர்மா
வரி: வைரமுத்து


இந்தப் படத்தைப் பார்த்ததில்லை! ஆனா இந்தப் பாட்டை எத்தனை வாட்டி கேட்டிருக்கேன்னு எனக்கே தெரியாது! இளையராஜாவாக்கும் தான் முதல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன். அப்பறம் தான் தெரிஞ்சிச்சி, மணிசர்மாவாம்! உன்னியும் நல்லாவே பாடி இருப்பாரு!

பாட்டு முழுக்க தட்டல் ஓசை, பாட்டுக்கே ஒரு ஜீவ களை சேர்க்கும்! அதை விட சிறப்பம்சம், பாட்டில் வரும் வயலின் இசை! ஏக்தார்-ன்னு ஒரு ஒற்றைத் தந்தி கருவி! அதில் வரும் இசையை அப்படியே வயலினில் போட்டிருப்பார் மணிசர்மா! It's just awesome!

அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா-ன்னு வரும் வரிகளை அழுத்தி அழுத்திப் பாடி, நண்பர்கள் என்னை அடிக்கவும் வந்திருக்கிறார்கள்!
தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜன்மம் மரணம் ரெண்டும் தருபவளே - நிஜமாலுமே வைரமுத்துவின் வைர வரிகள் தான்!:-)

பாடலைப் பார்க்க
படிக்க




--------------------------------------------------------------------------------

5. ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்
இசைவட்டு: கிருஷ்ண கானம்
குரல்: SPB
இசை: MSV
வரி: கண்ணதாசன்


மீண்டும் இன்னொரு தாலாட்டா-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! நான் தான் முன்னமே சொன்னேனே என்னைப் பத்தி!
மெல்லிசை மன்னர் பல அருமையான பக்திப் பாடல்களைத் தந்திருக்காரு! ஆனா இது பக்திப் பாடல்-ன்னே சொல்ல முடியாது அளவுக்கு, தாலாட்டும் தாய்மையும் மட்டுமே மிஞ்சி நிற்கும்! SPB குரலின் மென்மையில் கிறங்கி உறங்கி விடலாம்.

வீட்டில் பெருசா ஏதாச்சும் சண்டை வந்தா, சாப்பிடாமல் தூங்கிருவேன். நள்ளிரவில், தட்டில் ரசம் சாதம் போட்டு எடுத்துக்கிட்டு வருவாங்க! ரோஷத்துல கொஞ்சமா சாப்பிட்டு விட்டு, மீண்டும் தூங்கப் போயிருவேன்! யார் கூடவும் பேச மாட்டேன்!

அவங்களும் தரையிலேயே படுத்துப்பாங்க! கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்தப் பாட்டு சன்னமா, ஹம்மிங் டோன்ல கேக்க ஆரம்பிக்கும்!
பேசாத ரோஷக்காரன்..."அம்மா"ன்னு கூப்பிட.....அட, இதுக்கு மேல சொல்ற சக்தி இல்லீங்க!

பாடலைப் படிக்க
பார்க்க




இனிய நினைவுகளை எல்லாம் அசை போட வைத்த காபி அண்ணாச்சிக்கு நன்றி!:-)
anbudan, krs