Pages

Saturday, August 24, 2019

❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸









இன்றைய நாள் ஆகஸ்ட் 12 ஆம் திகதி கலைஞானி கமல்ஹாசன் தனது திரையுலகப் பயணத்தில் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறார். நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவில் பாதி நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருக்கும் கமல்ஹாசனை வெறுமனே நடிகராக அன்றி, தமிழ் சினிமா அதன் அடுத்த பரிமாணத்துக்கு இட்டுச் செல்ல பல்வேறு தொழில் நுட்ப மாறுதல்கள், தமிழ் சினிமாவின் வியாபார உத்திகள் என்று அதன் மாற்றத்துக்கு வழிகோலியவர்களில் தனித்துவமானவர் எனலாம். எப்படி இசைஞானி இளையராஜாவால் திரையிசைப் போக்கில் ஒரு மாற்றம் வந்ததோ அது போலவே கமலின் பங்களிப்பும் இன்னொருவரோடு ஓப்பு நோக்கவோ வாரிசைத் தேடவோ முடியாத தனித்துவம் கொண்டது. கமல்ஹாசன் குறித்து நீள அகலமான தொடரே எழுதலாம் எனினும் இந்தப் பதிவு ஏற்கனவே தீர்மானித்துக் கொடுக்க எண்ணிய “இந்திரன் சந்திரன்” படத்தின் 30 ஆண்டுக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.
1989 ஆம் ஆண்டில் மட்டும் தமிழில் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மலையாளத்தில் சாணக்யன், தெலுங்கில் இந்துருடு சந்துருடு மூன்று மொழிகளில் நான்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கிறார் கமல், இதை நண்பர் முரளி கண்ணன் கூட ட்விட்டரில் சிலாகித்திருந்தார். இப்படியொரு பன்முக வெற்றியை அப்போதும் இப்போதும் நினைத்துப் பார்க்க முடியுமா? வட இந்தியா உட்பட, தென்னிந்திய மொழிகளில் இன்னும் தூக்கலாகக் கொண்டாடப்பட்ட ஒரே நடிகர் கமல்ஹாசன் என்பதற்கு இந்த 1989 நல்ல சான்று
“இந்துருடு சந்துருடு” திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முக்கியமானதொரு மசாலாச் சித்திரம். இன்று வரை இதன் இசைக்காகவும், கமலின் நடிப்புக்காகவும் உச் கொட்டும் ஆந்திரா வாலாக்களோடு பழகியிருக்கிறேன். தெலுங்கு தேசத்தில் ஒரு வருடம் ஓடிச் சாதனை கண்ட படம் என்று அண்மையில் இதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொல்லியிருந்தார். “சத்யா” திரைப்படம் வழியாக கமல்ஹாசனை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா காட்டில் தொடர்ந்து அடுத்த ஏழு ஆண்டுகள் தொடர் வெற்றிகள். அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் இப்பேர்ப்பட்ட பேரதிஷ்டத்தை.
அதிலும் குறிப்பாக இப்போது பொன் விழாக் கண்டிருக்கும் சுரேஷ் புரடெக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷின் தந்தை தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு
சுரேஷ் கிருஷ்ணாவுக்கு இரட்டைப் பரிசை வழங்குகிறார். 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் “பிரேமா” படம் வெளியாகிறது. தெலுங்கில் உச்சம் கண்ட காதச் சித்திரமாக வெங்கடேஷ், ரேவதி நடிப்பில் இது ஓடிக் கொண்டிருக்க அடுத்ததாக கமல்ஹாசன் மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி நடிக்க “இந்திருடு சந்துருடு” படத்துக்கும் சுரேஷ் கிருஷ்ணாவையே ஒப்பந்தம் செய்கிறார் டி.ராமாநாயுடு. 1989 ஆம் ஆண்டு
நவம்பரில் “இந்துருடு சந்துருடு” வெளியாகி வசூல் சாதனை படைக்கிறது தெலுங்கு தேசத்தில்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சின்னத்திரை உலகம் வராத காலத்தில் வீடியோ சஞ்சிகைகள் வெகு பிரபலம். பூமாலை என்றோர் சஞ்சிகையை சன் டிவி கலாநிதி மாறன் வெளியிட, இன்னொரு பக்கம் அப்போது வீடியோ வெளியீடுகளை நடத்தி வந்த ஏக்நாத் கூட இதே பாங்கில் வீடியோ சஞ்சிகை ஆரம்பித்திருந்தார். பின்னாளில் இளையராஜாவின் ராஜா ஆடியோவும் ஏக்நாத்தும் இணைந்த கூட்டு முயற்சியும் சிங்கார வேலன் காலத்தில் இருந்தது.
இந்த ஏக்நாத் அவர்களே தமிழில் “இந்திரன் சந்திரன்” ஆக மொழி மாற்றி வெளியிட்டார். படத்தின் இறுதிக் காட்சியிலும் நடித்திருப்பார்.
இந்திரன் சந்திரனின் மூலத் திரைப்படத்தின்
திரைக்கதையை கமல்ஹாசன் கவனிக்க, தமிழில் வந்த போது வசனம் எழுதியவர் கிரேசி மோகன்.
தெலுங்கின் புகழ் பூத்த கதாசிரியர் பருச்சூரி பிரதர்ஸ் கதையமைப்பில் இந்த இந்திரன் சந்திரன் என்ற இந்துருடு சந்துருடு வெளியாகியது. ஆந்திர அரசின் சிறந்த நடிகருக்கான நந்தி விருதை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.ராதாவின் பாதிப்பில் ஒரு வில்லத்தனமான நடிப்பு, வழக்கமான வெகுளிப் பையன் என்று இரட்டை வேடம் கமலுக்கு. அந்தத் தொப்பையும் நடையுமாக மேயராக அவர் நடிக்கும் பாங்கை ரசித்து அது போலவே தொப்பை மாதிரி உடம்பை வளைத்தெல்லாம் நடந்து பார்த்திருக்கிறேன் அப்போது 😀
அபூர்வ சகோதரர்கள் போலல்லாது நகைச்சுவைக்குத் தனியான பாகம் இல்லை, கமல்ஹாசன், நாகேஷ் போன்றோரே கிடைத்த இடைவெளிகளில் அடித்தாடி விடுகிறார்கள். விஜயசாந்தி தவிர ஶ்ரீவித்யா, சரண்ராஜ் என்று தமிழுக்கு அறிமுகமான முகங்கள், கதைக்களம் என்பதால் ஒரு முழு நீளத் தமிழ்ப் படத்தின் வாசனையே அடிக்கும்.
மேயர் திகைத்துப் போய்ப் பார்க்க அவர் கண்கள் வழியாக காரின் முன் விளக்குகளின் ஒளி பாய்ச்சப்படும் காட்சியாக மாறுமளவுக்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு கமல்த்தனமாக இருக்கும்.
இந்திரன் சந்திரன் படத்தைப் பற்றிப் பேசும் போது இசையை விலக்கிப் பார்க்க முடியுமா என்ன?
எடுத்த எடுப்பிலேயே இந்தப் படத்துக்காக ஒரு பாட்டு பாடப் போய் தன் குரல்வளைத் திசு உடைந்து எஸ்.பி.பி ஆறு மாத ஓய்வில் இருந்தது தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். குரல் மாறிப் பாடிய “Nachina Fuddu Vechani Beddu" பாட்டால் தான் வந்தது வினை.
“சந்த்யா ராகபு” தெலுங்கு தேசத்தவர் ராஜாவைக் கொண்டாடும் தலை சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்றாக இருக்கும்.
“காதல் ராகமும் கன்னித்தமிழும்” பாடலைப் பற்றி உருகி உருகி ஒரு முழுப் பதிவே எழுதுவேன். அவ்வளவு பிடிக்கும் எனக்கு. “நூறு நூறு முத்தம் தந்தானே” அந்தக் காலத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பத்தில் ஏராளம் முத்தங்கள் பதித்த பாட்டு. அந்த சீனக் குரலோடு வரும் “அடிக்கிற கொட்டம்” ஒரு கில்மா ஜாலித் துள்ளல்.
தமிழில் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுத, மனோ & சித்ரா பாடினார்கள். தொடர்ந்து அன்பு சின்னம், இதயத்தைத் திருடாதே போன்ற பட வாய்ப்புகள் போனதுக்கு எஸ்பிபியின் குரல்வளை சத்திர சிகிச்சை காரணமாயிற்று.
கமல் நான்கு படங்களில் பட்டையைக் கிளப்ப இளையராஜா மட்டும் இளைத்தவரா என்ன? அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்திரன் சந்திரன் இம்மூன்றின் பாடல்களும், பின்னணி இசையும் ஒவ்வொரு பரிமாணமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்துருடு சந்துருடு பாடல்களைக் கேட்க
https://youtu.be/F_DJTEg8o_k
இந்திரன் சந்திரன் பாடல்களைக் கேட்க
https://youtu.be/pNETsQHDBWQ
தொடர்ந்து இந்திரன் சந்திரன் பின்னணி இசையை அனுபவிப்போம்.
இந்திரன் சந்திரன் முகப்பு இசை
http://www.radio.kanapraba.com/indranchandran/ic1.mp3
மேயர் ஜி.கே.ராயுடுவுக்கான அடி நாத (theme) இசை
http://www.radio.kanapraba.com/indranchandran/ic2.mp3
மேயரின் சில்மிஷங்களோடு அவர் குரலில் “அழகிய தமிழ் மகள் இவள்”
http://www.radio.kanapraba.com/indranchandran/ic3.mp3
மேயருக்கு எதிராக எழுதும் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்படும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic4.mp3
பத்திரிகையாளர் சந்தியா (விஜயசாந்தி) மேயரின் ஆசை நாயகி அவரின் உதவியாளர் கிருபாகரின் மனைவி என்ற உண்மையைச் சொல்லும் நேரம் மேயரின் ருத்ர தாண்டவம் இசையில் மிரட்டலாக வெளிப்படும்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic5.mp3
அதுவரை கொடுமைக்காரத் தந்தையாக இருந்த மேயர் தன் வீடு சென்று குழந்தையிடம் பாசமழை பொழியும் நேரம் நெகிழும் புல்லாங்குழல்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic6.mp3
மேயர் கிருபாகரனை வேட்டையாட வந்த போது கிருபாகரால் கொல்லப்படும் நேரம்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic7.mp3
மேயர் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட சந்திரனை ஆள் மாற்றுச் செய்யும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic8.mp3
சந்திரன் மேயர் போல நடை பழகும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic9.mp3
சந்தியா & சந்திரன் காதல் வேளை
http://www.radio.kanapraba.com/indranchandran/ic10.mp3
கொல்லப்பட்ட மேயரின் உடலை சந்திரன் காணும் போது
சந்திரன் மேயர் வடிவில் இருந்து கொண்டே நல்ல மனிதராக, நல்ல கணவராக, நல்ல தந்தையாகத் தன்னை அடையாளப்படுத்தும் போது
http://www.radio.kanapraba.com/indranchandran/ic12.mp3
தன்னுடைய தாயைக் காப்பாற்றப் போராடும் சந்திரன்
http://www.radio.kanapraba.com/indranchandran/ic13.mp3
இந்திரன் சந்திரன் இறுதிக் காட்சி
http://www.radio.kanapraba.com/indranchandran/ic14.mp3
கானா பிரபா
12.08.2019

அபூர்வ சகோதரர்கள் 💃🏃🏾‍♂️ முப்பது ஆண்டுகள் ❤️





கலைஞானி கமலஹாசனின் பொன் விழா கடந்த திரை வாழ்வில் மட்டுமல்ல நூற்றாண்டு கண்ட சினிமா வாழ்விலும் தவிர்க்க முடியாத படைப்பு இந்த அபூர்வ சகோதரர்கள் என்றால் அதற்கு மிகையில்லை. இந்த முப்பது ஆண்டுகள் கடந்தும் அண்மையில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்த Zero படத்தை ஒப்பிட்டு கமலுக்கு முன் யாரும் இந்த மாதிரி முயற்சியைச் சாத்தியப்படுத்த முடியாது என்ற விமர்சனங்கள் வழியாக இந்த அபூர்வ சகோதரர்கள் “அப்பு” இன்னும் ஜீவித்துக் கொண்டேயிருக்கிறார்.
முன்னர் இதே பெயரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த தமிழ்ப்படத்தில் எம்.கே.ராதா மற்றும் இதே கதை ஹிந்தியில் படமான போது ரஞ்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள். கமல்ஹாசன் அந்தக் காலத்துப் படத் தலைப்புகளைத் தன் படங்களில் மீளப் பாவிக்கவும் அபூர்வ சகோதரர்கள் அடிகோலியது.
தமிழ்த் திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாசலமே இந்த அபூர்வ சகோதரர்கள் கதை உருவாக்கத்தில் தன்னுடைய பங்கு இருந்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். அதுவரை எடுத்த காட்சிகள் திருப்தி இல்லாத சூழலில் கமலின் வேண்டுகோளுக்கிணங்க ஒரே வாரத்தில் கதையை மாற்றிக் கொடுத்த கதையைத் தன் திரைத்தொண்டர் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
சேதுபதி என்ற மிடுக்கான போலீஸ் அதிகாரி, அப்பு என்ற வேடிக்கையும் பழிவாங்கும் குணமும் நிறைந்த அப்பு, ராஜா என்ற அசட்டுப் பையன் என்று மூன்று வேடங்களில் கமல் அதகளம் பண்ணியிருப்பார். கூடவே ஶ்ரீவித்யா, மனோரமா, கெளதமி, ரூபிணி என்று பெண் பாத்திரங்களுக்கும் நிறைவான காட்சிகளோடு இந்தப் பக்கம் நாகேஷ், டெல்லி கணேஷ், ஜெய்சங்கர் என்று ஆண் நடிகர் கூட்டமும் பளிச்சிடும்.
இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளர் P.C.ஶ்ரீராம், லெனின் - V.T.விஜயன் (படத்தொகுப்பு) போன்ற உன்னத படைப்பாளிகளுடன் கை கோர்ப்பு.
கணினித் தொழில் நுட்பம் இல்லாத அந்தக் குட்டி கமல் வித்தை இன்று வரை புரியாத தொழில் நுட்பம்.
“தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க” என்று நெகிழ்ந்துருகும் கான்ஸ்டபிள் ஆர்.எஸ்.சிவாஜி,
“பாடி அம்பு
அம்புல பாடி பாடில அம்பு
அம்பு எதுல இருந்து வரும்?
வில்லுல இருந்து
வில்லுல இருந்து அம்பை யார் விடுவான்?
ராஜா
பாட்டு, வில்லு,
வில்லுப்பாட்டு
கண்டுபிடிச்சிட்டேன்....”
என்று கொக்கரிக்கும் ஜனகராஜ் நிலத்தில் ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டே துப்பறியும் காட்சிகளை இப்போது பார்த்தாலும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைக்கும்.
கிரேஸி மோகன் என்ற அற்புதமான வசனகர்த்தா தொடர்ந்து கமலோடு இணைந்து பணியாற்ற சிறப்பான அடித்தளமிட்டது இந்த அபூர்வ சகோதரர்கள். பழிவாங்கும் கதையை எவ்வளவு ஜாலியாகச் சொல்லலாம் என்பதை இந்தப் படம் பாடமெடுத்துக் காட்டியது. அதுவும் ஒவ்வொரு பழிவாங்கலுக்கும் அப்பு கமல் தன் எல்லைக்குட்பட்டுத் தயார் பண்ணும் கொலைக்கருவிகள், ஜெமினி சார்க்கஸ் களம் வரை சாமர்த்தியமான அணுகுமுறை இந்தப் படத்தில் இருக்கும். ஒரு வெற்றிகரமான படத்தில் எல்லாமே தானாகவே சரியாக அமைந்து விடும் என்பதற்கு இதுவொரு சான்று.
1989 ஆம் ஆண்டு சித்திரை வருடப் பிறப்பு வெளியீடாக வந்த இந்தப் படத்தின் வழியாக சிறந்த நடிகர் விருதை கமல்ஹாசன் தமிழ்நாடு அரசு மற்றும்
பிலிம்ஃபேர் வழியாகப் பெற்றார்.
குள்ள கமலை வில்லனின் அடியாட்கள் தூக்கிக் கொண்டு வரும் போது “பாதி தான் வருது மீதி எங்கேடா” என்று நாகேஷ் shooting spot இல் திடீரென்று அடித்த பஞ்ச் எல்லாம் இந்தப் படத்தின் பின்னணி வரலாறு கூறும் பக்கங்கள். அபூர்வ சகோதரர்கள் பட உருவாக்கம் குறித்து கமல் மனம் திறந்து ஒரு புத்தகம் போட்டாலும் தகும். கூடவே இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவும் பங்கெடுக்க வேண்டும்.
“ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே” அந்தக் காலத்து றெக்கோர்டிங் பார்களில் தொடங்கிய காதல் சோக கீதம் இன்னும் விடாமல் ஒலிக்கிறது. முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்றைய விடலைகளுக்கு அது ஓர் ஒத்தடம். வாழ வைக்கும் காதலுக்கு ஜே, புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல, அண்ணாத்தே ஆடுறார் என்று எதை எடுக்க எதைத் தவிர்க்க எல்லாமே வாலிகளின் வரிகளில் இசைஞானியாரின் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிச் சரித்திரம் படைத்தன. புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா ஒலிக்காத அன்றைய கல்யாண வீடுகளிலில்லை. “அம்மாவை நான் காலைத் தொட்டு கும்புடணும் டோய்” என்ற ஏற்கனவே கமல் பாடி பதிவு செய்த பாட்டு (ராஜா கைய வச்சா காட்சிச் சூழலில் கமலின் அம்மாவாக காந்திமதி நடிப்பில்) சமீபத்தில் ரமி இசைத்தட்டில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபூர்வ சகோதரர்கள் 25 வாரங்கள் ஓடிய வெற்றிச் சித்திரம். இன்றளவும் அதைத் தினமும் சிந்திக்க வைக்கும் அளவுக்குப் பாடல்களும், பின்னணி இசையுமாக இளையராஜாவின் வெற்றிகளில் ஒரு மாணிக்கக் கல் இது.
சரி இனி கலைஞானி கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படத்திலிருந்து இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான பின்னணி இசையைத் தொகுத்து இங்கே தருகின்றேன்.
தொடக்கத்தில் இருந்தே பரபரப்பு, ஓட்டம், கிலி, சோகம், ஹாஸ்யம், வன்மம், துள்ளல் என்று பின்னணி இசையின் மிரட்டல் அனுபவத்தை நீங்களும் அனுபவியுங்கள்.
எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)
எழுத்தோட்டத்தில் வரும் பின்னணியில் கமல் கொல்லப்பட, ஸ்ரீவித்யா மட்டும் தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (புல்லாங்குழல், பல வயலின்கள், தனி வயலின் என்று மாறும்) இந்த இசை பின்னர் சென்னை 28 இலும் கையாளப்பட்டிருக்கும்.
குழந்தைகள் ஆளுக்கொரு பக்கம் பிரிதல் (வயலின்)
அப்பு சர்க்கஸில் தோன்றும் முதற்காட்சி (வயலின்)
ரூபிணி அறிமுகக் காட்சிக்கு சர்க்கஸ் குழு வாசிக்கும் பாண்ட் வாத்தியம்
அப்பு கமலின் கல்யாண சந்தோஷம் (பாண்ட் வாத்திய இசை)
அப்பு கமலின் காதல் தோல்வி (முகப்பு இசையின் வயலின் மீண்டும் ஒன்றிலிருந்து பல வயலின்களாக)
அப்பு தற்கொலை முயற்சி ( பல வயலின்களின் கூட்டு ஆவர்த்தனம்)
அப்புவின் பழிவாங்கும் காட்சி ஒன்று (பல வாத்தியக் கூட்டு)
அப்புவின் பழிவாங்கும் காட்சி இரண்டு
இறுதிக்காட்சியில் மீண்டும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை கலக்கின்றது
கானா பிரபா
07.08.2019