Pages

Saturday, October 29, 2022

வேட்டி கட்டிய சரஸ்வதி வாலி ❤️

“தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்

வைகாசி வெய்யில் போல வாட்டுதே”

https://www.youtube.com/watch?v=A2Sb6x1F9o0

அனிச்சையாக அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் இதுவுமொன்று. அதுவும் இன்று வாலியார் பிறந்த நாளில்

காலையில் முகத்தில் முழித்ததும் இந்தப் பாடலோடு தான்.

“சொல்லவா சொல்லவா ஒரு காதல்கதை” பாடலெல்லாம் ராஜாத்தனமான மெட்டும், இசையுமாக தேவா கொடுத்த உச்சம்.

அதில் சரிபாதி பங்கு இயல்பாகக் கவசகுண்டலமாக ஒட்டிக் கொண்ட வாலி அவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

"மை அளந்த கண்ணும்

என் கையளந்த பெண்ணும்

மின்சாரம் பாய்ச்சுமா"

"கள்ளிருக்கும் கிண்ணம்

என்னுள்ளிருக்கும் வண்ணம்

உன் பார்வை பார்க்குமா"

என்று சொற்களோடு சிலம்பம் ஆடுவார்.

வாலியாரை “வேட்டி கட்டிய சரஸ்வதி” என்று விழித்தது சாட்சாத் தேவாவே தான். “வாலிப வாலி” நிகழ்வில் https://www.youtube.com/watch?v=WjvZw6nysFM

தன்னுடைய முதற்பாடலுக்கு நல்ல சகுனமாக வாலியார் தொடக்கி வைத்த வரிகளோடு நெகிழ்ந்து பேசியிருப்பார் தேவா. 

வாலியை நினைத்தால் நூறு தலைப்புகள் வரும். சரி வாலியும் தேவாவும் என்று கணக்குப் போட்டால் அதைப் பிரித்தாலேயே ஏகபட்ட கிளை பரப்பும். ஆகவே “சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை”யின் நீட்சியாக அந்தப் பாடலின் பாட்டுடைத் தலைவன் சரத்குமாருக்காக வாலி(ப) வரிகளில் தேவா கொடுத்த பாடல்களை அலசிப் பார்த்தேன்.

“சூரியன்” திரைப்படம் தேனிசைத் தென்றல் தேவா வாழ்வில் வெளிச்சம் பரப்பிய பிரமாண்டம். அந்தப் பிரமாண்டத்தில் அணி சேர்ந்தவர் வாலி அவர்களும்.

எப்படி “மஸ்தானா மஸ்தானா”வுக்கும், “முக்காலா முக்காப்புலா”வுக்கும் அர்த்தம் தேடத் தேவை இல்லாமல் இசையின் தள லயத்தோடு வரிகளை ரசித்தோமோ அது போல ஒரு பாட்டு

“லாலாக்கு டோல் டப்பிமா”. ஆனால் இந்தப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த மர ஆலையில் வேலை செய்பவர்களின் களைப்பு நீங்க ஒரு பாட்டு. அங்கே பாமரத்தனமாக, நாட்டுப்புற மனிதர்களுக்கான சொல்லாடலாகவே பாடலும் அமைகின்றது.

அதே சமயம் சூரியன் படத்தின் ஏனைய பாடல்களைப் பார்த்தால்

கந்த சஷ்டி கவசத்தில் இருந்து உருவிய சந்தத்தில் “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு” இந்தப் பாடலில் வாலியின் சொல்லாடல் எவ்வளவு தூரம் இலாவகமாக வந்து அமரும் என்பதற்கு உதாரணம் பறையும்

“பக்கம் நெருங்கிட.. 

விருந்திட.. ஆசை விடுமா”.

வளைகாப்புச் செய்யும் பெண்ணுக்கு ஒரு பாட்டு “கொட்டுங்கடி கும்மி” 

https://www.youtube.com/watch?v=p6o7rKU3P0I 

“சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்

புள்ளப் பொறக்கணும்

அது சூர்யகாந்தி பூவைப் போல

மெல்ல சிரிக்கணும்”

போகிற போக்கில் ஒரு அழகியலைப் பூப்போல எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார் வாலி.

“தூங்கு மூஞ்சி மரங்களெல்லாம்” பாடலும் அது போலத் தான், 

பூமிக்கு என்னென்ன தாகங்களோ பங்குனி மாதத்திலே

பூவைக்கு என்னென்ன மோகங்களோ பூ பூத்த காலத்திலே"

இயற்கையையும், காட்சிச் சூழலையும் இணைத்து அழகு பார்ப்பார்.

சூரியனின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம். அவற்றுக்கான வரிகளில் வாலி காட்சிப்படுத்தியிருக்கும் எளிமையும், பிரமாண்டமுமே காலம் தாண்டி மனசில் நிக்க வைக்கின்றது.  உணர்வு பூர்வமான நெகிழ வைக்கும் பாட்டாய் “மன்னாதி மன்னன்” கேட்டால் கண்கள் கசியும். 

வசந்த காலப் பறவை படத்தின் வெற்றியே சூரியனிலும் அதே வாலி & தேவா வெற்றிக் கூட்டணி தொடர வழி வகுத்திருக்கும். அடுத்த “இந்து” படத்திலும் அப்படியே ஆயிற்று. இம்மூன்றிலும் சரத்குமார் இருந்தாலும் சூரியனில் நாயகனாக மிளிர்ந்தார்.

“பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது

வீட்டுக்குள் நீ இருந்தால்......” 

https://www.youtube.com/watch?v=GtPCGimwZGI

எஸ்பிபியை 90களில் முழு வீச்சில் பயன்படுத்திய விதத்தில் தேனிசைத் தென்றல் தேவா குறையே வைத்திருக்க மாட்டார்.

கனத்த போர்க்காலத்தில் மின்சாரமில்லாப் பொழுதுகளில்

சைக்கிளில் இருக்கும் டைனமோ வழியாக மின்சாரம் கொடுத்து

இந்தப் பாட்டைக் கேட்ட காலமெல்லாம் நினைப்பில் வரும்

ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் பயணிக்கும் பஸ் இல் மீண்டும்

கேட்கும் போதெலாம். பேண்டு மாஸ்டர் படத்தில் இந்தப் பாடலின் சந்தோஷ & சோக வடிவங்களை மட்டும் வாலியாரை வைத்து எழுதி வாங்கியிருப்பார் தேவா.

சரத்குமாருக்காக தேவா இசைத்ததில் “மகா பிரபு” படத்தின் அனைத்துப் பாடல்கள் கணக்கில் இன்னொரு முத்து

“மைனா மைனா மடியிலே”

https://www.youtube.com/watch?v=xQ5IsSgDY6E

தேவா இசையில் சரத்குமாருக்கான படமாக வந்த “முன் அறிவிப்பு” பாடல்கள் அனைத்துமே பெண் குரல்கள். அவற்றையும் வாலியே எழுதினார்.

“நீலகிரி மலை ஓரத்தில ஒரு செவ்வந்தி மெட்டு”

https://www.youtube.com/watch?v=daoeLKrbZgs

அப்படியே 90களுக்கு அழைத்துப் போய்விடும். வாலி அவர்கள் எழுதிய அந்தப் பாடலோடு மொத்தம் நான்கு பாடல்களைக் கொடுத்தார் தேவா இசையில் “நம்ம அண்ணாச்சி” சரத்குமாருக்கு.  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “தோஸ்து” படத்தின் அனைத்துப் பாடல்களும் வாலி கொடுத்தவையே.

இன்றும் தாயகப் பயணத்தில் நம்மூரை மிதித்தால் எங்கோ ஒரு வீட்டில் இருந்து தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த தொண்ணூறுகளில் ஒன்று காதில் விழும். அதில் தவிர்க்க முடியாதது “முத்து நகையே முழு நிலவே” பாடல். அதுவும் கலியாண வீடு என்றால் பாட்டுப் போடுபவர் மறவாது இந்தப் பாட்டு சீடியையும் எடுத்து வந்து விடுவார் போல. 

“மண்ணுக்குள் வைரம்” புகழ் இயக்குநர் மனோஜ்குமார் தொண்ணூறுகளில் பழி வாங்காத வில்லனே இல்லை எனுமளவுக்குப் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். ஆனால் அதிலும் குடும்ப sentiment மசாலாவை அதிகம் தூவி விடுவார். நடிகர் சரத்குமார் நாயகனாக அரிதாரம் பூசிய போது கூடவே வித்தியாசமான தோற்றங்களும் கிட்டிய அதிஷ்டக்காரர். மனோஜ்குமார் இயக்கிய சாமுண்டி அப்படி இன்னொன்றாக அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் தேனிசைத் தென்றல் தேவாவோடு படத்தின் முழுப்பாடல்கள் அல்லது அதிகபட்சப் பாடல்கள் என்று கணக்கு வைத்து எழுதிய காளிதாசன் இல்லாத படங்கள் அரிது. அப்படி அரிதாக தேவாவோடு கவிஞர் வாலி கூட்டணி அமைத்த படமே “சாமுண்டி”.

“முத்து நகையே.. முழு நிலவே.. 

குத்து விளக்கே.. கொடி மலரே”

https://www.youtube.com/watch?v=Onkgvb0cppw

பாடலில் மெட்டும், இசைக் கோப்பும் அப்பட்டமான இசைஞானி இளையராஜாவின் தாக்கத்தால் கொடுத்த பாட்டு.

எஸ்.பி.பி & எஸ்.ஜானகியின் குரல்களில் அப்படியே கிறங்கி விடுவோம். இந்தப் பாட்டு முழுக்க வாலியாரின் வரிகளும் தெம்மாங்கு இசையும் அப்படியே வயற்காட்டுக்கு இழுத்துப் போய் விடும்.

“மண்ணத் தொட்டு கும்பிட்டுட்டு 

பொட்டொண்ணு வச்சுக்கம்மா” 

https://www.youtube.com/watch?v=uCLBMbNOPt0

தங்கை பாசத்தோடு கலந்து வரும் படத்தின் முகப்புப் பாடல். முத்து நகையே பாடலுக்கு நிகராகக் கொண்டாடப்படுவது.

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் வெள்ளையத் தேவன் படத்தில் இளையராஜா கொடுத்த “தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு” பாடல் வந்து ஞாபகமூட்டும். அதுவும் வாலியார் கைவண்ணம் தான்.


கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா” 

https://www.youtube.com/watch?v=ZRa-FFtxsIc

அந்தக் காலத்து தொண்ணூறுகளின் தேவா முத்திரைப் பாட்டு. எஸ்.பி.பியோடு இதில் ஜோடி கட்டிப் பாடுபவர் சித்ரா. 

“ஏத்துங்கடி ஏத்துங்கடி நல்ல கார்த்திகை தீபம்”

சித்ரா மற்றும் குழுவினர் பாடும் பாடல் வட இந்திய இசையமைப்பாளர் கொடுத்த இசையமைப்போ எனுமளவுக்கு அதன் ஆரம்பம். கிராமியத் துள்ளிசையாக இனிக்கும்.

எஸ்.ஜானகி பாடும் “கும்மணும் கும்மணும்” பாடல் அதிகம் எடுபடாத பாடல்.  “கதவ சாத்து கதவ சாத்து மாமா”  அந்தக் காலத்துப் பட்டிமன்ற மேடைகளில் திரையிசைப் பாடல்களை எள்ளி நகையாடக் கை கொடுத்த பாட்டு.

இளையராஜாவின் இசையை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அந்த இசை அளிப்பில் காலத்துக்குக் காலம் மாற்றமொன்று நிகழ்வதை அவதானிக்கலாம். தொண்ணூறுகளிலும் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் தேவாவின் வருகை இளையராஜாவின் பாடல்களைத் தழுவிய போக்கில் ரசிகனை ஈர்க்கும் வண்ணம் முந்திய காலகட்டத்துப் பாணியைக் கலந்து கொடுத்து தேனிசைத் தென்றல் தேவா ஆட்கொண்டார். அதில் இந்த சாமுண்டி படத்தில் கவிஞர் வாலியோடு இணைந்து அனைத்துப் பாடல்களைக் கொடுத்ததும் ஒரு புதுமை. ஏனெனில் இதே தொண்ணூறுகளில் இளையராஜாவின் இசையில் முழுப் படப் பாடல்கள், அதிக பாடல்கள் என்று சம காலத்தில் மீட்டர் ஏற்றிக் கொண்டிருந்தார் வாலி.

கண் இரண்டும்

மயங்கிட கன்னி மயில்

உறங்கிட நான் தான்

பாட்டெடுப்பேன் உன்னை

தாய் போல் காத்திருப்பேன்

இன்னொரு பிறவி இருந்தால் கவிஞர் வாலியாக அல்ல, மனிதர் வாலியாக ஜாலியாக வாழ்வைக் கொண்டாடிய மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றொரு ஆசை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நம் இறவாக் கவிஞருக்கு.

கானா பிரபா

29.10.2022


Friday, October 28, 2022

💚 Arziyan saari main…….❤️

ரஹ்மான் தமிழுக்கு அதிகம் தருவதே இல்லை என்ற குறையை கேட்டிருப்போம். ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட போது எனது எண்ண அலை வேறாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழையும், ஹிந்தியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 

இரண்டு களங்களிலும் ரஹ்மானுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பார்த்தால் ரஹ்மானின் வற்றாத இசை வெள்ளத்துக்கு வடிகாலாகவும், அவரின் இசைத் தேடலுக்கு வாய்ப்புகளாகவும் ஹிந்தியில் எப்பேர்ப்பட்ட வெவ்வேறு பரிமாணங்களில் எல்லாம் மனுஷரைப் பாவித்திருக்கிறார்கள் என்று புரியும்.

இந்த விஷயத்தில் மணிரத்னம், கெளதம் எல்லோருமே ரஹ்மானுக்கான சரியான களத்தைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். 

ஒரு பக்தி இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்?

அது இந்து மதமோ அல்லது கிறீஸ்தவமோ என்று இஸ்லாமியப் பாடலோ எதுவாகிலும் மதம் கடந்து கைகூப்பித் தொழ வைக்கும். 

அதனால் தான் 

“கனலில் கருவாகி புனலில் உருவான கந்தன் ஊர் எந்த ஊர்”

“தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே”

“ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான்”

என்றெல்லாம் கேட்டபோது மெய்யுருகி நிற்கும் நம் சிந்தை.

ஏ.ஆர்.ரஹ்மான் புகழேணிக்கு வந்த பின்னர் அவரின் தனி ஆல்பங்களைக் கேட்டு ரசித்த போது இஸ்லாமியப் பாடல்கள் கொண்ட “தீன் இசைமாலை” ஐக் கூட விட்டுவிடாமல் ரசித்தோம்.

புகழேணியில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் பக்தி இலக்கியங்களைத் திரையிசையிலும், அது கடந்தும் செய்திருக்கிறார்கள். 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனின் “கிருஷ்ண கானம்” தொட்டு, வி.குமார், இளையராஜா, ஆயிரம் பக்திப் பாடல்களுக்கு மேல் இசையமைத்த தேவா என்போரெல்லாம் ஆகச் சிறந்த உதாரணங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் வட இந்தியருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டவரல்ல, அவர்களைத் தன் பக்கம் ஈர்த்து விட்டுத் தான் அவர்களின் அடையாள செவ்வியல் இசையிலும் தன்னால் கொடுக்க முடியும் என்று தான் கற்ற சுபி இசை மரபுகளையும் கொடுத்தார்.

ரஹ்மான் தன் திரையிசையில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவற்றை வெவ்வேறு பரிமாணத்தில் காட்டிச் சென்றார்.

இந்து, முஸ்லீம் காதலின் அடி நாதமாய் விளையும் பாட்டு,

பாடலில் அப்படியே ஹிந்துஸ்தானியும், கவாலியும் நாத வெள்ள சங்கமமாய்.

Raanjhanaa படத்தில் கொடுத்த Piya Milenge

https://www.youtube.com/watch?v=QlHeJ7cWD38

அதற்கு முன்பு கொடுத்த 

Tere Bina  (Guru)  

https://www.youtube.com/watch?v=7HKbt19q3Rc

வில் காட்டிய பரிமாணம், அதைத் தாண்டி 

ஜோதா அக்பரில் நிகழ்த்திய இசைப் பெரு வெள்ளம் Khwaja Mere Khwaja

https://www.youtube.com/watch?v=4YbAaRFk70o

கேட்கும் போதெல்லாம் இசை ஒரு அசையும் உருவமாக வந்து அரவணைத்து சிலிர்த்து அழ வைக்கும். அதுதான் தெய்வீக இசையின் அடி நாதம்.




“மெய்யான இசை கேட்பவனிடம் வன்முறை எண்ணம் தோன்றாது” என்ற ராஜாவின் கூற்றின் ஆழத்தை நிரூபிக்கும் பாடல்கள் என்று என் எண்ணம் பல்வேறு திசைகளையும் தொட்டுக் கிளற வைத்து விட்டது இந்த Delhi 6 படப் பாட்டு.

Delhi 6 வந்த காலத்தில் இருந்தே வீட்டம்மா Masakali https://www.youtube.com/watch?v=SS3lIQdKP-A பாடலை ஆயிரத்துச் சொச்சம் தடவை கேட்டிருப்பார், அவர் மட்டுமல்ல இந்தப் பாடலை அதிகம் கொண்டாடியதால் இதே படத்தில் இடம்பெற்ற மற்றைய வைர மணிகளையும் அதிகம் கொண்டாடத் தவறி விட்டோமோ என்று எண்ண வைக்கிறது. ஒரு நல்ல இசை ஆல்பத்தில் ஒரு பாடல் தான் இன்னொரு பாடலுக்கு எதிரி.

ஆனால் நம் போலன்றி வட இந்தியர்கள் இன்னும் அதிகம் நேசித்துக் கொண்டாடுவது இந்த Arziyan ஐத் தான்.

இந்தப் பாடலுக்கு YouTube இல் பின்னூட்டியவர்களின் கருத்துகளைப் படித்துப் பாருங்கள். மதவாதம், இனவாதம் எல்லாம் கரைந்து விடும் இந்த மாதிரி நல்லிசையால்.

இந்து முஸ்லீம் ஒருமைப்பட்டின் ஒரு கூற்றாக விளைந்த இந்தப் படத்தில் ரஹ்மான் தன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொடுத்த பாடல்  Arziyan.

ஜாவேத் அலியின் குரல் என்னமோ செய்கிறது, கூடவே கைலாஷ் கர் சேரும் போதும் அது கிளை பிரிந்து இன்னோர் வகை உணர்வலைகளைக் கிளப்புகிறது. ஜாவேத் அலியை அணுக்கமாகக் கேட்டால் ஒரு ஊதுபத்தியின் சுழல் புகை பேசுவது போலிருக்கும்.

இந்த இரண்டு நதிகளையும் இணைக்க வைத்த ரஹ்மானிய சிந்தனைக்கு ஒரு சபாஷ் போடலாம் இல்லையா?

ஜாவேத் அலி தேர்ந்த சுபி இசை வல்லுநர்  அதை மேடையில் பிரதிபலிக்கும் பாங்கையும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=7z-3JjHT2v4

கைதட்டல் தான் எல்லா மதங்களையும் இணைக்கிறது. இரு கை ஓசை தான் ஒற்றுமையின் வெளிப்பாடு. இந்தப் பாடலின் அடி நாத இசையில் தபேலாக் கட்டும் அதையே பிரதிபலிக்கிறது.

Arziyan பாடலால் இந்த வெள்ளிக்கிழமை என் மனமெல்லாம் ஊதுபத்தியின் சந்தன மணமாக வெள்ளமாக நிறைந்திருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=JA09HEGTzCU

Saturday, October 15, 2022

ஆயிரம் மலர்களே மலருங்கள் ❤️🌷


இக்கட்டான நேரத்தில் தான் அற்புதமான படைப்புகள் பிறக்கின்றன.
அப்படிப் பிறந்தது தான் இந்தப் பாட்டுமாம். ஒரு பின்னணி இசை வேலை நெருக்கடியில், பாரதிராஜா இடையில் வந்து ஒரு காதல் பாட்டுக் கேட்கவும், கவிஞர் கண்ணதாசனிடம் அந்த நேரத்தில் தோன்றிய மெட்டை வரிக்கு வரி சொல்லச் சொல்ல அவர் ஒவ்வொன்றையுன் தன் வரிகளால் உயிர்ப்பித்துக் கொண்டு போன அந்த கதையை இளையராஜாவே சொல்லக் கேட்போம்.
அதை இன்னும் விலாவாரியாகப் பேசியது இங்கே
இன்று காலை இந்தப் பாடல் எதேச்சையாகக் காரின் இசை வட்டு வழியே பிரவாகிக்கும் போது தோன்றிய எண்ண அலைகளுக்கு அளவு கணக்கே இல்லை.
அந்தக் காலத்து இலங்கை வானொலியின்
“திரைய்ய்ய்ய்ய்ய் விருந்த்த்த்த்து”
என்று எங்கள் கே.எஸ்.ராஜா கொடுத்த “நிறம் மாறாத பூக்கள்” ஐச் சொல்லவா?
இல்லை இந்தப் படத்தை “நியூ விக்டர்ஸ்” வீடியோ கடையில் வாடகைக்கு எடுத்து அண்ணன்மார் போட்டுக் காட்டிய கதை சொல்லவா?
அதையும் தாண்டி
“ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்று வரும் போது அந்த இசைத் துள்ளல் நாயகி ரத்தியின் துள்ளலாகவே மனப் பிரமை எழுப்புவதையா?
பாடலின் ரிதத்திலேயே ரத்தியின் துள்ளலைக் காட்சிப்படுத்தி விடும் இசை.
இரண்டு காதல் கதைகளும் சங்கமமாகும் “கதா சங்கமத்தின்” அற்புதமான விளைச்சல் இந்த நிறம் மாறாத பூக்கள். கே.பாக்யராஜ் கதையை மீண்டும் பாரதிராஜா படமாக்கிய காதல் காவியம்.
தன்னை ஒரு கிராமியப் படைப்பாளி என்ற முத்திரையை நீக்க முதலில் “சிகப்பு ரோஜாக்கள்” இப்போது “நிறம் மாறாத பூக்கள்”. இதில் கமலுக்குப் பதில் சுதாகர், ரஜினிக்குப் பதில் விஜயன். அதுவும் அந்த விஜயனுக்கு பாரதிராஜாவின் குரல். அதை அந்தக் காலத்தில் ஒலிச்சித்திரமாகக் கேட்கும் போதெல்லாம் அது கொடுத்த அதிர்வு அப்பப்பா இப்போதும் அதிரும்.
இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கே பிறப்பெடுத்தது போலவே ஜென்ஸிம்மா பாடும் போது கொஞ்சம் துள்ளலுமாக.
அந்த ஆரம்பக் குரலோசை மலை முகடு எங்கெணும் தொட்டுத் தொட்டுப் போவது போல. இதையே நிறம் மாறாத பூக்கள் பட விளம்பரத்தின் ஆரம்பத்திலும் சேர்த்திருப்பார் கே.எஸ்.ராஜா.
அந்த இரண்டு பேரச் சுற்றியும் காட்சியைப் பாருங்கள். இயற்கையோடே உலாவ விட்டிருக்கிறார். ஆனால் கண் வெட்டாது பார்க்க முடியும் ஒரு பிரமாண்ட உணர்வு. அதுதான் பாரதிராஜா.
“பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே…,”
மலேசியா வாசுதேவன் வந்து கலக்கும் இடத்தை ஆரம்ப மெட்டிலேயே போட்டாலும் அதுவும் தொடக்கம் போலவிருக்கும். மலேசியா அண்ணனுக்கு இந்தப் பாடல் எல்லாம் மணி மகுடம். பாத்திரமாகவே ஆகி உருகித் தள்ளியிருப்பார் மனுஷர்.
காட்சிப் பொருத்தத்துக்கு ஏதுவாக சைஜலாவும் வந்து முடித்து வைப்பார். படத்தின் தலையெழுத்தே இந்தப் பாடல் தான்.
ஒரு பக்கம் பாடகர்களின் அந்த வசியத்துக்குக் கட்டுப்படுவதா இல்லை அதைச் சுற்றிப் பரவிய இசைத் துணுக்குகள் ஒவ்வொன்றாக மகரந்தத்தை நக்கும் தேனீ போல ஒன்று விடாமல் ஒற்றி ஒற்றிக் கேட்பதா என்ற இரு தலை மனது.
அதுவும் “குபுக் குபுக்” என்று நுரை தள்ளும் புல்லாங்குழல் பிரவாகத்தில் தேன் உண்ட களிப்பில் பூவை வட்டமிடும் வண்டாக மனசு.
“ராகங்கள் நூறு
பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும்
ஒன்றல்லவோ”
போகிற போக்கில் தமக்குத்தாமே வாழ்த்தி மகிழ்வது போல் கவியரசரும் இசைஞானியும்.
ராஜா அந்தக் காணொளியில் கவியரசர் பற்றிச் சொன்னதை மெய்ப்படுத்துவார் தன் வரிகளில்.
“பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி
உலாவும் நேரமே…..
சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல்
தாயாகுமோ…..”

Wednesday, October 12, 2022

ஒனக்காகப் பொறந்தேனே எனதழகா 💚💛♥️


ஒரு பாடல் தொடங்கும் போதே மெலிதான புன்முறுவல் வந்து விடும். அப்படியாகப்பட்ட பாட்டு இது.


“உனக்காக” என்ற சொல்லை “ஒனக்காக” ஆக்கி விடும் அந்தக் காலத்து சுசீலாம்மாவைப் பிரதியெடுத்த சந்தியாவின் குரலோடு, 

P.B.ஶ்ரீனிவாஸ் இன்றிருந்தால் “இங்கே வா பைய்யா” என்றழைத்து இவர் கைகளைப் பிடித்து இறுக்குவாரோ எனத் தோன்றும் பால்ராம் என்று அப்படியே ஐம்பது வருடம் முன்னகர்த்தி விடும் பிரமை அல்லது பிரமிப்பான குரல்கள்.


இந்தப் பாடலை எழுதும் போது என்ன தோன்றியது என்று கேட்டால் கதை கதையாகச் சொல்வாரோ வாலி ஐயா என்று காலம் கடந்த ஞானத்தால் மனம் நொந்து கொள்கிறது.


திரையிசையில் தொன்மம் தழுவிய சம காலத்துப் பாடல்கள் பலவற்றைக் கேட்டிருக்கிறோம்.

இந்தப் பாடலில் ஜோடி சேர்ந்த சந்தியா (சுசீலாம்மா மருமகள்) கூட 

“பூங்கொடியின் புன்னகை” ( இருவர்)


https://youtu.be/Jb4S3MCRt7Y


சற்று முன்னோக்கினால் சுரேந்தர் & சித்ரா “பாரிஜாதப் பூவே”


https://youtu.be/-m-M6yTaolI


ஜிக்கியம்மா தொண்ணூறுகளில் பாடியவை அதே பழைய பிரதிபலிப்பில் அதுவும் குறிப்பாக அபூர்வ சக்தி 369 இல் “இள வாலிபனே”


https://youtu.be/4sM5qDFoPRs


இன்னும் கொஞ்சம் பத்தாண்டுகள் முன்னோக்கினால் C.S.ஜெயராமனை அடியொற்றி மலேசியா வாசு தேவன் பாடிய


“இந்த அழகு தீபம்” (திறமை) உமா ரமணனுடன்,


https://youtu.be/NYe-8gNGQMI


சைலஜாவுடன் “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே” (மணிப்பூர் மாமியார்) 


https://youtu.be/eEqNxMvBfM8


என்றெல்லாம் கொட்டும்.


முன் சொன்ன பாடல்கள் எல்லாம் இனிமை சொட்டும். அதில் சந்தேகமென்ன. ஆனால் அவற்றின் காட்சி வடிவத்தில் ஒரு பொய்மை இருக்கும், இருவர் நீங்கலாக. (மணிப்பூர் மாமியார் வரவில்லை).


இவற்றைத் தாண்டி “உனக்காகப் பிறந்தேனே” பாடலின் இசையின்பம், குரலின்பம், போடப்பட்ட வரிகளின்பம், இவை எல்லாமும் பிரதிபலிக்கும் காட்சி இன்பம். ஆகா 😍


இந்தப் பாடல் வெளிவந்து சில நூறு முறை கேட்டிருப்பேன். அவற்றில் பாதிக்கு மேல் காட்சியோடு ரசித்தது தான்.

ஒருமுறை கேட்க வேண்டும் என்று மனம் உந்திக் கேட்டால் விடாது நாலைந்து தடவையாவது கேட்க வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும்.


“ஒருவாட்டி என்னை

ஓரசாட்டி உன்னை

உறுத்தும் பஞ்சன மெத்தையும்

ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில…”


காட்சிக்கு என்ன தேவையோ அதை ஏற்கனவே வரிகளில் வடித்திருப்பார் வாலியார்.

மின் வெட்டு நாளில் “வெளிச்சப் பூ” என்றவர் இங்கே கை விளக்கை “பூத்திரி” என்கிறார். என்னவொரு உவமை 😍


இந்தப் பாட்டு முழுக்க தன்னுடைய இயல்பில் இருந்து விலகிய கரிசக்காட்டுக் கவிஞர் ஆகி விடுவார் வாலி.


குறும்புக்காரக் கணவர் ஜெயபிரகாஷ், வெட்கப் புன்னகை துளசி இவர்களுக்குள் இருக்கும் அழகான தாம்பத்ய பந்தத்தை ஒரு மூன்று நிமிடப் பாடல் முன்னூறு பக்க நாவலாக்கி விடுகிறது.

பாட்டு அது பாட்டுக்குப் பயணிக்க, அதன் சின்னச் சின்ன அசைவுகளிலும் இவர்களின் ஹைக்கூ காதல் ❤️


இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்ற பொய்க்கோபம் இலக்கியா அம்மாவுக்கு 😀

இந்தப் பாடலே பெரு நிறைவு கொடுக்கிறது எனக்கு.


❤️


“ஒனக்கு வாக்கபட்டு வருசங்கள் போனா என்ன

போகாது உன்னோட பாசம்

என் உச்சி முத பாதம் வரை

என் புருஷன் ஆட்சி

ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த

முத்தாலம்மன் சாட்சி”


இந்தப் பாட்டைக் கேட்டுக் கேட்டு ஆனந்தக்  கண்ணீர் வந்ததுமுண்டு. என்னவொரு இசை வார்ப்பு ஜஸ்டின் பிரபாகரா 😍


ஒரு சுவையான உணவைச் சாப்பிட்ட பின் சப்புக் கொட்டும் நாக்குப் போல கேட்ட பின்னும் மனமும், நாவும் அசையும்.


ஒனக்காக பொறந்தேனே 

எனதழகா

பிரியாம இருப்பேனே 

பகலிரவா 


❤️

இறுக அணைத்துக் கொள்ளும்

பாட்டு


https://youtu.be/FEd-cRfygIk


கானா பிரபா

Tuesday, October 11, 2022

அஜித்குமாரின் தலைவிதியை மாற்றிய பாட்டு ❤️

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களில் இப்போதும் தேடி ரசிப்பது என்னமோ அன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆர்ப்பாட்டம் பண்ணாது அடக்கமாக இருந்த இம்மாதிரிப் பாடல்கள் தான். அப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ் உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான்.

படத்தில் "உயிரும் நீயே" , "அழகு நிலவே" பாடல்களோடு "கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி" என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் "ஹைர ஹைர ஐரோப்பா" வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். 

நீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.

எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும், அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக "செவ்வானம் சின்னப்பெண் சூடும்" பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.

ரஹ்மான் ஒவ்வொரு புதுக்குரல்களையும் புதுப்புது வாத்தியம் போலப் பயன்படுத்தும் அழகே தனி. அந்த வகையில் பல்லவியின் குரல் அவரின் இசையில் மிளிர்ந்தது எனலாம்.

“செவ்வானம் சின்னப் பெண் சூடும்" பாடல் உண்மையில் Yoddha படத்துக்காக முதலில் பாவித்த இசை வடிவம். அந்தப் பாடல்

“மாம்பூவே” https://www.youtube.com/watch?v=0W30AXI5CZA கே.ஜே.ஜேசுதாஸ் & சுஜாதா பாடியதன் மீள் வார்ப்பு. மலையாளிகள் தங்களுக்குத்தான் முதலில் ரஹ்மான் இசையமைத்தார்கள் என்று பெருமையடிக்கும் படம் இது. எனக்கென்னமோ முன்னதை விட “செவ்வானம்” தான் அருமையாக, இளமையாக வந்திருப்பது போன்றதொரு உணர்வு.

அண்மையில் சாய் வித் சித்ராவில் கலந்து கொண்ட நடிகர் விச்சு என்ற விஸ்வநாத் ஒரு தகவலைச் சொன்ன போது “செவ்வானம்” பாடல் மீது இன்னும் நெருக்கம் அதிகமாகி விட்டது.

அந்தச் சமயம் தன்னுடைய புதுப்படமான “பவித்ரா”வுக்கு இளம் நாயகனை கே.சுபாஷ் தேடிய போது பிரபுதேவா எல்லாம் பரிசீலனையில் இருந்தாராம். ஆனால் அதையும் தாண்டி அஜித்குமாரைப் பரிந்துரைத்தவர் “அமராவதி” இயக்குநர் செல்வா. 

ஆனால் அஜித்குமாரோ நடிப்பில் ஆர்வம் இல்லாமல் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் இருந்தாராம். அப்போது அவர் மோட்டார் பைக் விபத்தில் அடிபட்டு இருந்த நேரமும் கூட. 

ஆனால் இந்த ஒரேயொரு படத்தில் மட்டும் நடியுங்கள், அதுவும் நீங்கள் அடிபட்டு இருப்பதால், படத்தின் நாயகன் மருத்துவமனைக் கட்டிலில் இருக்கும் காட்சியமைப்புக்கும் பொருந்தும் என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார்களாம்.

அப்படியாக அஜித்குமாரும் “பவித்ரா” படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடைய அடுத்த படத்துக்கு நாயகன் தேடிக் கொண்டிருந்த இயக்குநர் வஸந்த் கண்ணில் “செவ்வானம் சின்னப் பெண் சூடும்” பாடல் அகப்படுகிறது. அப்படியே அஜித்குமாரை ஒப்பந்தம் செய்து ‘ஆசை” படத்தை உருவாக்குகிறார்.

“ஆசை” பட வெற்றிக்குப் பின் அஜித்குமார் தலையெழுத்தும் மாறிப் போனது உலகறிந்தது. அதற்கெல்லாம் அச்சாரமாக இருக்கிறது இந்த

“செவ்வானம் சின்னப் பெண் சூடும்

குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்

மல்லிகை ஆகாதோ

கண்ணால் உன்னை வரவேற்று

பொன் கவிக் குயில் பாடாதோ

கண்ணாளன் தோளில் இடம் கேட்டு

என் வண்ணக்கிளி சாயாதோ”

https://www.youtube.com/watch?v=6iaFid2gqt4

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பரிந்துரையில் அஜித்குமாருக்கு நாயக வாய்ப்புக் கிட்டியது. அஜித்குமாரின் தொடர்ச்சியான ஓட்டத்துக்கு எஸ்.பி.பல்லவியின் பாடல் ஏதுவாக அமைந்தது ஒரு ஆச்சரிய இன்பம். 


கானா பிரபா

11.10.2022



Thursday, October 6, 2022

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

 


ஆற்றுக்குப் பாதை இங்கு 

யாரு தந்தது 

தானாகப் பாதை கண்டு 

நடக்குது 

காற்றுக்குப் பாட்டுச் சொல்லி 

யாரு தந்தது 

தானாகப் பாட்டு ஒன்னு 

படிக்குது  🏝️❤️


உன்னால் முடியும் தம்பி படத்துக்குப் புலவர் புலமைப் பித்தன் பாட்டெழுகிறார். 

“இதழில் கதை எழுதும்” பாடல் கவிஞர் முத்துலிங்கம், “என்ன சமையலோ” இளையராஜா எழுத மீதி எல்லாம் அவரே. “உன்னால் முடியும் தம்பி தம்பி” என்றொரு நம்பிக்கை விதையை முகப்புப் பாடலில் கொடுத்திருப்பார்.


அதில் நாயகன் உதயமூர்த்தியின் சமூகப் பார்வைக்கு இலக்கணமாய் இரண்டு பாடல்கள் கிடைக்கின்றன.

அந்த இரண்டு பாடல்களிலும் இருக்கும் சொற்கட்டுமானத்தைப் பாருங்கள். பாடலாசிரியர் என்பவர் வெறும் மெட்டுக்கு இட்டுக் கட்டுபவர் இல்லை என்று துலங்கும்.

ஒன்று, சாஸ்திரிய இசை மேடையில் அங்கே புழங்கும் தமிழாக அமையும்,


மானிட சேவை துரோகமா

கலைவாணி நீயே சொல்


வீதியில் நின்று தவிக்கும் பராரியை

பார்ப்பதும் பாவமா?


https://youtu.be/0gCyzsG8VkE


என்றமையும் புலமைத்துவமான தமிழைக் கையாண்டிருப்பார் சங்கீத சபையில் மேடையேறும் பாடலை.


இன்னொன்று தான்,


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு 

பொங்கிவரும் கங்கை உண்டு 

பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க 

பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல


வீதிக்கொரு கட்சியுண்டு 

சாதிக்கொரு சங்கமுண்டு 

நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம்? 

நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது 

நாடா இல்ல வெறும் காடா - இதை 

கேட்க யாரும் இல்லை தோழா 


இந்தப் பாடலின் வரிகளை மட்டும் ஒருதரம் பாடிப் பாருங்கள். மலை மேட்டிலிருந்து உருண்டு வரும் குதூகலத்தைக் காட்டியிருப்பார் எளிமை மிகு தமிழால். அதில் பாட்டாளி வர்க்கத்தின் அவலமும், அவன் எப்படியாவது உயர வேண்டும் என்ற ஆதங்கமும் தொனிக்கும். இதுதான் என்னுடைய களம் என்று சொல்லாமற் சொல்லுவார்.


அந்த எளிமைக்கு ஒரு சோறு பதமாக “சனம்” என்ற சொல்லாடலைக் கையாண்டிருப்பார்.


உன்னால் முடியும் தம்பி படத்தில் ஏலவே அமைந்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை என்றாலும் இந்த இரண்டு பாடல்களும் புலவர் புலமைப்பித்தனின் எழுத்தாளுமையை ஒரே படத்தில் ஒப்பு நோக்க உதவும்.


இசைஞானி இளையராஜாவை சப்தங்களின் நாயகன் என்று சொன்னால் மிகையில்லை என்பதை அவர்களின் பாடல்களே சான்று பகிரும்.  

“பருவமே புதிய பாடல் பாடு”வில் கால் குதிப்புகள், “போட்டா படியுது படியுது” பாடலின் இடையிசையில் சைக்கிள் மணி, ஆட்டோ வாகன ஒலி, நெரிசல் எல்லாம் வருவது போல, “சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி” பெண் பார்க்கும் படலத்தில்” தேநீர்க் குவளை வைப்பதில் இருந்து 

பாக்கு இடிக்கும் சத்தம், அப்படியே மைக்கேல் மதன காமராஜனின் “பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்” 

முக்கிய காட்சியோடு இணைந்த பாடலில் உருட்டுக் கட்டை ஒலி என்று இதைப் பற்றி எழுதப் போனால் ஒரு ஆய்வுக் கட்டுரை அளவுக்கு ரயில் விடலாம் 😀


அந்த வரிசையில் வரும் “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” பாடலின் முகப்பு இசை அப்படியே மரம் வெட்டும் தோப்புக்குள் கடத்திக் கொண்டு போய் விடும் உணர்வோடு பின்னப்பட்டிருக்கும். அந்த மரம் வெட்டும் ஓசை மெல்ல மெல்ல இசைச் சங்கமமாகி பாட்டுக்குள் போகும் கணம் இருக்கிறதே ப்பாஆ “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்று இறைவனைப் பாடிய தருணத்தைத் தன் இசை வித்தையால் மெய்ப்பித்திருக்கிறார் எங்கள் பாட்டுக்கார ராஜா.


உன்னால் முடியும் தம்பி படத்தின் மூலம் தெலுங்கில் ருத்ர வீணா வில் இதே காட்சியமைப்புக்கு இன்னொரு மெட்டில் சிரஞ்சீவிக்குக் கொடுத்த பாடலும் வெகு இனிமையானது. ஒரே காட்சி தான் ஆனால் அதற்கு இரண்டு விதமான பாடலைத் தன்னால் தரமுடியும் என்று செப்படி வித்தை காட்டும் ராஜா, ஒரே மெட்டை வைத்துக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் வீரர்களுக்கும் சவால் விடுகிறார்.

“தரளி ராத தனே வசந்தம்” 


https://youtu.be/2Cuwg9zVXKU


என்ற “ருத்ர வீணா” பாடலின் முன்னிசையைப் பாருங்கள். மரக் குற்றியை வெட்டிச் சரிக்கும் அதே சூழல் தான். ஆனால் அந்த ஒலியை எவ்விதம் வேறுபடுத்தியிருக்கிறார் பாருங்கள்.


இசைஞானி இளையராஜாவுக்குக் கலைஞானி 

கமல்ஹாசன் எப்போதும் விசேஷமானவர் தான். அதனாலோ என்னமோ “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” பாடலையும் அதே விசேஷத்தோடு ரசிக்க முடிகிறது. “தந்தந்தானா தந்தந்தந்தானா தந்தந்தானா தானா” என்று ஜதிகளைப் போடும் போதே கமல் இதற்கு எப்படி அபிநயம் பிடிப்பார் என்று ராஜா கற்பனை செய்திருக்கக் கூடும். ஆனால் இங்கே கமல் ஒரு குறும்புத் தனம் செய்வார் பாருங்கள். அந்த அடிகள் வரும் சமயம் வெட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பக்கமிருந்து மரத் துகள் ஒன்று கமலின் கண்ணில் அறையும். அதை அப்படியே தட்டிவிட்டு நிறுத்தாது மரம் வெட்டுவதைத் தொடருமாறு சைகை காட்டுவார். இந்த இடத்தில் வாசிப்பதை விட்டு விட்டு நான் சொன்ன அந்தக் கணத்தைக் காட்சியில் பாருங்கள். இப்போது தெரியும் ராஜா ஆற்றில் போட்டாலும் அளந்து போடுவதில்லை ஆனால் கமல் நடிப்பு  ஒரு தெப்பக் குளம் என்றுணர்ந்து கொடுத்த இசையென்று. 


மேலும் அந்த மனிதத் தலைகளில் ட்ரம்ஸ் வாசிப்பது கோடரிகளைத் தேய்த்து இசைக் கேற்ப லயிப்பது, கோடரியை அருவாக் கத்தியில் தட்டிப் பார்ப்பது, 

“காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது 

தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது” வரிகளில் மேலிருந்து சொரியும் பூக்கள் என்று எத்தனை எத்தனை காட்சி இன்பத்தைப் பொருத்தியிருக்கிறது இந்தப் பாடல், 

அந்த ஜனகராஜ் தலையாட்டலும் நளினமும் ஆகா 😀


பொதுவுடமைக் கருத்துகளைத் திரையிசைப் பாடல்களில் காட்சியோடு ஒட்டிக் கொடுக்கும் முறைமை தமிழ் சினிமா வரலாற்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தாண்டி நீண்ட வரலாறு கொண்டது.

இங்கே புலவர் புலமைப் பித்தன் அந்தக் காரியத்தை எடுத்து எவ்வளவு அழகாக, இயல்பான மொழி நடைக்குள் அடக்குகிறார் பாருங்கள். இந்தக் காட்சிக்கு “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்” போன்ற சிவப்புச் சிந்தனையின் உக்கிரம் நிறைந்த வரிகளைக் காட்டியிருந்தால் இங்கே அது பொருந்தாது அந்நியப்பட்டிருக்கும்.


“வானத்தை எட்டி நிற்கும் 

உயர்ந்த மாளிகை 

யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது” 

எனும் போது காட்சியில் மார் தட்டும் அந்த ஏழைத் தொழிலாளி போலவே பாமரருக்கும் சென்று சேரக் கூடிய வரிகளோடே பயணப்படுகிறது இந்தப் பாடல்.

ஒரு கடவுள் மறுப்பாளராக இயங்கும் புலவர் புலமைப்பித்தன் சமுதாய சீர்திருத்தம் காண

இங்கே இறைவனை வேண்டவில்லை, போரடச் சொல்கிறார். 


தன்னுடைய வாழ்வின் இலட்சியத்தோடு பொருந்தக் கூடிய ஒரு படைப்பை ஆக்கச் சொல்லிக் கேட்பது ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு மகத்தான கெளரவம். அதைச் சிரமேற்கொண்டு எழுதித் தந்த புலவர் புலமைப்பித்தன் வரிகள் காலத்தைத் தாண்டி நிற்கும்.


🌼🌼🌼

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் 

நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு 

வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு 

🍃🍃🍃


https://youtu.be/Kyv_1k1SMu8


நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கும்

புலவரய்யா புலமைப்பித்தனுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

❤️


கானா பிரபா

Wednesday, October 5, 2022

ராதா…ராதா… நீ எங்கே…..❤️



அந்த ஆரம்ப ஆலாபனையிலேயே நம்மை மிதக்க வைத்து முகில் கூட்டங்களில் ஒன்றாக்கி விடுவார்கள் ஜானகிம்மாவும், ராட்சச பாலசுப்ரமணியத்தாரும்.


கொஞ்சம் நிதானித்து மேகத் திரை விலக்கினால் ஶ்ரீ கிருஷ்ணரின் வாத்திய அடையாளத்தை நிறுவி விட்டு மீண்டும் அந்த அகண்ட வெளியில் பிருந்தாவனமாய், ஓரமாய் நம்மைத் தூக்கி இருத்தும் இசை.


ஒரு நவயுக கிருஷ்ணரும், ராதையும் காதல் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை நிறுவும் வாத்தியக் கூட்டு.

சகியே….

பிராணநாதா….

காலம் கடந்தாலும் அதை நினைப்பூட்டும்

ராதா….ராதா

கண்ணா…கண்ணா….


இந்தப் பாடலின் சந்தத்தை மட்டும் எடுத்துப் பார்த்தால் படிக்கட்டில் குதிப்பது போலொரு சாகசம் இருக்கும் ஆனால் வரிகள் இட்டது கவியரசர் ஆயிற்றே.


பாடலைக் கேட்கும் போது இந்த நூற்றாண்டுக் காதலில் இவ்விருவரும் இணைந்து பாடுவது போலிருக்கும்.  காட்சியமைப்பிலும் ஏக குறும்பு. மயிலிறகு முளைத்த நவீன தொப்பி, 80ஸ் டிஸ்கோ சட்டை சகிதம் கமலும், தானும் ஆடிக் கொண்டு பொறுப்பாக கமலின் ஆடையைச் சரி செய்து விடுவதுமாக ஶ்ரீதேவி. 

கமல், மறு கரையில் ஆடிக் கொண்டே போனவர் திடீரென்று வழுக்கி விழுவார்,

“நாணலில் பாய் விரித்து

 நானதில் பள்ளி கொண்டேன்”

என்று விட்டுத் தன் பின்னால் இருக்கும் ஒரு புல்லை எடுத்துப் பார்த்து விட்டு வீசி விடுவார். இப்படிச் சின்னச் சின்னக் குறும்புத்தனங்கள் கொண்ட காட்சியமைப்பு 


https://youtu.be/GqrCm5F3m7Q


அந்த கிட்டார் துள்ளலைக் கேட்கும் போது கால் தாளம் அமைந்து துள்ளி வரும் ராதையான ஶ்ரீதேவி மனக்கண் முன் வருவார்.


“கண்ணா கண்ணா நீ எங்கே” ஜானகிம்மா உருகித் தள்ளி விடுவார்.  எஸ்பிபி மட்டும் என்னவாம்?

“என்னுள்ளம் புதுவெள்ளம்” எனும் போது தரை தட்டி விடுவார்.


பாட்டு முழுக்க அந்த இசை நர்த்தனத்தில் மகுடியான பாம்பாகி விடுவோம் அதுவும் அந்த வயலின் சிணுங்கலெல்லாம் புல்லாங்குழல் ஓசை போல் அர்த்தப்படும் என்றாலும்,

இரண்டாவது சரணத்துக்கு முந்திய கிட்டார் இசையோடு பரிணமிக்கும் இசைக்கூட்டு தான் மீண்டும் மீண்டும் இழுத்துப் போய் முன்னிருந்து கேட்க வைக்கும். அப்படி நேற்று மட்டும் ஒரு மணி நேரம் கடந்து இந்தப் பாடலில் மூழ்கியிருந்தேன்.


அதுவும் கோபால் நாதஸ்வரம் இசைக்குழு மேடையில் செண்பராஜ் உடன் சுர்முகியும் இணையும் போது மூலப் பாடலை மாசற்ற பிரவாகமாகத் தந்திருப்பர்.


https://youtu.be/FPgm2YaB4ds


கமல் & ஶ்ரீதேவி ஜோடி எவ்வளவு அச்சாப் பொருத்தம் என்பதை “மீண்டும் கோகிலா” நிரூபிக்க,

இதே கண்ணன் ராதையாக


தெலுங்கில் “ஒக ராதா இதரு கிருஷ்ணுலு” (தமிழில் “ஹரே ராதா ஹரே கிருஷ்ணா”) இதே குறும்பாட்டம்.


பிரபல நாவலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் இன் கதையில் பிரபல இயக்குநர் கோதண்டராமி ரெட்டி இயக்கியது. 


“பருவம் உருக இதயம் தவிக்க

இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க 

அலை பொங்க.....

இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா 

கை சேராதோ நீ வா 

என் கண்ணா”


 https://youtu.be/YwJ6_k52Jzo


வாலியார் கை வண்ணத்தில் மிளிர்ந்திருக்கும்.


தெலுங்கு மூலம்


https://youtu.be/yrxYD24UUA8


எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கல்பனா மேடை நிகழ்ச்சி

https://youtu.be/R_402rzLNXw


மூலப் பாடல் துல்லிய ஒலிப்பதிவில்

https://youtu.be/8LqTzsz0Geg


மீண்டும் கோகிலா படத்தின் ஒவ்வொரு பாடல்களும் தித்திப்பு. அதுவும் “சுத்த சாவேரி” யில் சுருட்டிய இந்தப் பாடலோ மலை முகட்டில் இருந்து அசரீரி போடும் அந்த ஆரம்ப ஆலாபனை போல். 


கிருஷ்ண பரமாத்மாவிடம் கிட்டாரைக் கொடுத்தது போலொரு ரம்மியம்.


❤️ 

என் உள்ளம் புது வெள்ளம்

பூ வண்ணம் உன் வண்ணம் 

பொன் வண்ணம்

ராதா ராதா 

நீ எங்கே

கண்ணன் எங்கே 

நான் அங்கே….❤️


https://youtu.be/Yq13-kA-ல்3ச்


கானா பிரபா