Pages

Friday, January 26, 2024

ராஜா மகள் பவதாரிணி ❤️ ஒளியிலே தெரிவது நீ இல்லையா....?

“பல்லாக்கு வந்திருக்கு

 ராணி மகராணிக்கு

 நில்லாம சுத்தும் கண்ணு

 தேடுதவ சோடிக்கு”

https://www.youtube.com/watch?v=wH4pDX05nck

என் வானொலிக் காலத்தின் ஆரம்ப நாட்களில் பெண் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக அர்ப்பணிக்கும் போது, மானசீகமாக இளையராஜா தன் மகளைப் பல்லக்கில் சுமக்க வைத்த பாட்டு என்று எண்ணுவேன்.

இசைஞானி இளையராஜா தன் மனைவியைப் பிரிந்த போது நட்பு வட்டத்தில் நம் குடும்பத்தில் எழுந்த இழப்பாக நாம் பரிதவித்த அதே உணர்வை இன்றைய விடிகாலை பவதாரிணியின் இழப்பை எதிர்கொண்ட போது உள் வாங்கினேன்.

“பாடகக் குரல்களில் பவதாரிணியின் குரல் தனித்துவமானது" என்று இளையராஜா பொது மேடையில் சொன்ன போது, தந்தையின் நேசமோ என்று எண்ணுபவர்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் சிற்பி வெற்றியின் உச்சாணிக் கொம்பில் இருந்த போது, பவதாரிணியின் குரலைச் சிலாகித்துப் பேட்டி கொடுத்ததை ஞாபகத்தில் எழுப்ப வேண்டும்.

பவதாரிணி குழந்தைப் பாடகியாகத் தன் எட்டாவது வயதில் குழந்தைப் பாடகியாகத் தன் தந்தை இளையராஜா இசையிலேயே அறிமுகமானது, இந்தியாவின் முதல் 3D திரைப்படமான “மை டியர் குட்டிச் சாத்தான்” படத்துக்காக, “தித்தித்தே தாளம்” என்ற மலையாளப் பாடலின் வழியே.“குயிலே குயிலே குயிலக்கா” 

https://www.youtube.com/watch?v=NOvNMnpJ-9U

பாடலை சித்ராவோடு “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்துக்காக குழந்தைப் பாடகியாகத் தந்தை இளையராஜா இசையில் பாடிய வகையில் நூறைத் தொடும் திரையிசைப் பாடல்களைத் தன் தந்தை இசையில் பாடியிருக்கிறார்.

தவிர “அம்மா பாமாலை” போன்ற தனி இசை வெளியீடுகளிலும் தன் மகளின் குரலை இசைக்க வைத்திருக்கிறார்.

"பவதாரிணியோடு, வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா இவர்களை இணைத்து, சித்ராவோடு  பாடவைத்தேன்" என்று பவதாரிணியின் சித்தப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பாடல் “கோயில் மணியோசை” படத்துக்காக அமைந்த 

“ஓடப்பட்டி பிச்சமுத்து”

https://www.youtube.com/watch?v=UHU4WOAghTw

இளையராஜா, கங்கை அமரன் தவிர்ந்து, தன் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஆகியோர் இசையிலும் பாடியவர் சிற்பியின் இசையில் “ஆல்ப்ஸ் மலைக்காற்று” வழி புகழ் சேர்த்தவர்.

தன் அண்ணன் கார்த்திக் ராஜாவின் முதல் படத்தில் “நதியோரம்” (அலெக்சாண்டர்) பாடலில் உன்னிகிருஷ்ணனோடு ஜோடி சேர்ந்து பாடியவர், இந்த ஜோடிக் குரல்கள் அதிகம் ஹிட் கொடுத்திருக்கின்றன என்று சொல்ல வைத்தன. 

யுவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் தோள் கொடுத்தவர் பவதாரணி. யுவன் முதலில் இசையமைத்த “ஆல் த பெஸ்ட்” (அரவிந்தன்),  “நீ இல்லை என்றால்” (தீனா), “மெர்க்குரிப் பூவே” (புதிய கீதை” என்று அது நீளும்.

பெண்களை முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்களாக வைத்து நடிகை ரேவதி இயக்கிப் பெரும் புகழைப் பெற்ற மித்ர் மை ப்ரெண்ட் (2002) படத்தின் மூலம் இசையமைப்பாளரான பவதாரிணி கடந்த 22 ஆண்டுகளில் , “இலக்கணம்”, “அமிர்தம்” தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடத்தில் பத்துப் படங்களை இசையமைத்திருக்கிறார்.

பாவலர் வரதராஜன் சகோதர்கள், அவர்களின் வாரிசுகளில் ஒரே பெண் வாரிசு இசையமைப்பாளராகத் தனித்துவம் படைத்தார்.

“மங்காத்தா” படத்தின் இசையுருவாக்கத்தில் யுவன், பிரேம்ஜி மட்டுமல்ல, கூட்டு முயற்சியில் பவதாவும் கூட உதவினார் என்று வெங்கட் பிரபு கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.

“அஞ்சலி” படத்தின் குழந்தைப் பாடல்கள், அப்படியே தென்றல் சுடும் படத்தில் ஜானகியோடு ‘தூரி தூரி” என்று தொடர்ந்த பவதாரிணியின் பாட்டுப் பயணத்தில் “பாரதி” தேசிய விருதை வாங்கிக் கொடுத்தார்

“மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக. இதை எழுதும் போதே

“வண்டியில வண்ண மயில் நீயும் போனா

சக்கரமா என் மனசு சுத்துதடி”

என்று காதுக்குள் ரீங்காரமிடுகிறார் பவதாரிணி.

இளையராஜாவின் இசையில் பவதாரிணியின் அடுத்த பயணம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அமைந்த போது

“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப்பஞ்சாயத்து), மஸ்தானா மஸ்தானா (ராசையா), உன்னை விட மாட்டேன் (இரட்டை ரோஜா), என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே” (ராமன் அப்துல்லா), “பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா? “, “அக்கா நீ சிரிச்சாப் போதும்” (கிழக்கும் மேற்கும்), “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), “இளவேனிற்காலப் பஞ்சமி” (மனம் விரும்புதே உன்னை), “காயத்ரி கேட்கும்” (காக்கைச் சிறகினிலே), “தவிக்கிறேன்” (டைம்), “ஓ பேபி பேபி” (காதலுக்கு மரியாதை), தென்றல் வரும் வழியை” (ப்ரெண்ட்ஸ்), “மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்” (கரிசக்காட்டுப் பூவே), “ஏதோ உன்னை நினைச்சிருந்தேன்” (சொல்ல மறந்த கதை), “ஆலாபனை செய்யும்” (பொன் மேகலை), “காற்றில் வரும் கீதமே” (ஒரு நாள் ஒரு கனவு), “கண்ணனுக்கு என்ன வேண்டும்” (செந்தூரம்) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்கள் அடங்கும்.

“இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” பாடல் ஒரு தசாப்தம் பல லட்சம் தமிழர் வீட்டுப் பிறந்த நாள் பாட்டுக் குரலாகவே ஆகிப் போனார். 

“ஒளியிலே தெரிவது தேவதையா” அழகியின் அடையாளக் குரலாக இன்று வரை பவதா தெரிகிறார்.

ஆத்மாத்தமாக பவதாரிணியின் குரல்களில் 

“உன் காதலன்” (நானும் ஒரு இந்தியன்/தேசியப் பறவை)

https://www.youtube.com/watch?v=OBT2WFCpalQ

மற்றும் 

“ஆலமரம் மேல வரும்” (செந்தூரம்)

https://www.youtube.com/watch?v=ZHSPM7EiQpg

ஆகிய பாடல்களைத் தேடி ரசிப்பேன்.

“அலை மீது விளையாடும் இளம் தென்றலே”

https://www.youtube.com/watch?v=zxwJMG1OKz8

ஒரு சின்னப் பாட்டுக்குள் பேரலையாய் நம்மை ஆக்கிரமிப்பார் பவதாரிணி.

“கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி”

https://www.youtube.com/watch?v=fYzDNepWXLI

இந்தப் பாடலை இப்போது நினைத்துப் பார்த்தால் மனதை ஏதோ செய்கிறது.

“பவதா!” என்று ராஜா தன் மகளை அழைக்கும் பாங்கை நினைத்துப் பார்ப்பேன். 

“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.

வெளி உலகம் தெரியாது இசையே உலகமாகக் கொண்ட இளையராஜாவின் பிறந்த நாட்களில் அவருக்குப் பக்கத்தில் சின்னக் குழந்தை போல கேக் ஊட்டி மகிழும் அந்தச் செல்வ மகளின் பூரித்த கண்கள் தான் மனதில் நிறைந்திருக்கிறது.

எம் பெருமான் சிவனை நினைக்கும் போது எழும்

“ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி நாகமணி”

https://www.youtube.com/watch?v=cqGblneQY2w

பாடலை இந்த நேரத்தில் மனசாரக் கேட்டு, எங்கள் பவதாரிணி இறைவனின் பாதத்தில் இளைப்பாறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

கானா பிரபா

26.01.2024

Tuesday, January 16, 2024

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதியோடு விடை பெற்ற இசையமைப்பாளர் கே.ஜே.ஜாய் (K. J. Joy)

மலையாளத்தின் மகோன்னதமான இசையமைப்பாளர்களில் ஒருவர், நமக்கெல்லாம் “சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி” (யாருக்கு யார் காவல்)

https://youtu.be/4qshfRBf78Y?si=pEu2ZnqGHN0Uvp8f

பாடல் வழியாக அடையாளம் கொடுத்தவர் நேற்று 15.01.2024 இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார்.

பெண் என்றால் பெண் படத்துக்காக, 1967 இல் எம்.எம்.விஸ்வ நாதனிடம் முதன் முதலில் வாத்தியக் கலைஞராகப் பணியாற்றியவர். 

அந்த நேரத்தில் மங்கள மூர்த்தி, பென் சுரேந்தர் ஆகியோர் அங்கு அவருக்கு முன் மூத்த வாத்தியக் கலைஞர்களாக இயங்கியுள்ளார்கள்.

அக்கார்டியன் வாத்தியத்தைத் தானே சுயமாகக் கற்ற சுயம்பு இவர்.


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விவநாதனைத் தன் இசை வழிகாட்டியாகக் கொண்டு 71 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதே அவரின் இசைச் சாதனை சொல்லும். கானா பிரபா

அக்கார்டியன் வாத்திய விற்பன்னராக இருந்தவர் 1969 முதல் கீபோர்ட் வாத்தியக் கலைஞராகவும் தன்னை ஆக்கிக் கொண்டார். @கானாபிரபா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் ஏராளம் இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர்.  முதல் கீபோர்ட்டை வாங்குவதற்காகத் தான் காரை அடகு வைத்து 20,000 ரூபாவுக்கு வாங்கினாராம்.

ஆராரோ ஆராரோ அச்சன்ட மோள் ஆராரோ

https://youtu.be/YMNyFMD9jxk?si=3edyInAHigNlwESC

இவரின் புகழ் பூத்த பாடல்களில் ஒன்று.

கே.ஜே.ஜாய் கொடுத்த பேட்டி

https://youtu.be/lyJbUxmJGFs?si=4Tvgj6i_APTfO7bj


அவரின் இசையில் மிளிர்ந்த பாடல்கள் சில

https://youtu.be/eVzEp1WxBIM?si=If9Fehzcm6GOLP5D

தமிழில் “வெளிச்சம் விளக்கைத் தேடுகிறது”, “அந்தரங்கம் ஊமையானது” உள்ளிட்ட படங்களுல்கும் மேலும் இசை வழங்கியுள்ளார்.

“காதல் ரதியே கங்கை நதியே

 கால் தட்டில் காணும் ஜதியே”

https://youtu.be/_TToXX2JVYw?si=7fLlKWAdVE802Z3X

பாடல் எல்லாம் அந்தக் காலத்து இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளைக் கிளப்பி கே.ஜெ.ஜாய் அவர்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு “சிப்பியின் உள்ளே” மற்றும் “காதல் ரதியே” பாடல்கள் அவரின் புகழ் கிரீடத்தை அலங்கரித்த முத்துகள்.

ஆழ்ந்த இரங்கல்கள் கே.ஜே.ஜாய் (K. J. Joy) 🙏

கானா பிரபா

16.01.2024



Wednesday, January 10, 2024

❤️❤️❤️ கருப்பு நிலா விஜயகாந்துக்கு கான கந்தர்வன் ஜேசுதாஸ் ❤️❤️❤️

ஏதோ நினைவுகள்.....

கனவுகள்......

மனதிலே....மலருதே....

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே.....

https://www.youtube.com/watch?v=rUyraZFVPA8

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரையுலகத் திறவுகோல்

பாட்டு, நம்மில் பலருக்கோ வசந்த கால நினைவுகளைக் கிளப்பும் நெம்புகோல் அது.

இப்படியாக போர்க்குணம் கொண்ட இளைஞன் விஜயகாந்தின் ஆரம்பம் தொட்டு அவர் தம் முக்கியமான படங்களிலே குரலாக அணி செய்தவர் கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ்.

“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே”

“புலன் விசாரணை” என்றொரு திகிலூட்டும் படத்தில் விறைப்பான அதிகாரியின் கனிவான முகத்தை அணி செய்ய ஜேசுதாஸ் குரலே போதுமானதே?

“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு” கேட்டால் அந்த நிறை மாதப் பெண்ணைத் தாங்கும் கணவன் குரலோடு கேப்டனின் முகமும் அல்லவா நிறைந்திருக்கும்?

கேப்டனுக்காக எழுச்சி முரசாகவும், ஜோடிக் குரலாகவும் T.M.செளந்தரராஜன் தொட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் என்று அடுத்த யுகத்தின் முன்னணிப் பாடகர் வரிசை நீண்டு கொண்டு போகும்.

“உள்ளமெல்லாம் தள்ளாடுதே

 உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் போராடுதே”

https://www.youtube.com/watch?v=YGBrg32T2U0

என்று இந்தியத் திரையிசையின் மேதமையான சலீல் செளத்ரியுடமும் தப்பாமல் ஜேசுதாஸ் விஜயகாந்திடம் போய்ச் சேர்ந்தவர், அளவு கணக்கில்லாத இளையராஜா பாடல்களில் எல்லாவிதமான உணர்வோட்டங்களிலும் தீனி போட்டிருக்கிறார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கொடுத்த விஜயகாந்தின் ஜேசுதாஸ் பாடிய “ஶ்ரீரஞ்சனி” https://youtu.be/hMRuCrsojbE?si=7zS1MRda0cpNEIne பாடலை இதுவரை கேட்காதவர்கள் கேட்டுவிட்டு ஓடி வாருங்கள். அரிதாக விளைந்த திரையிசை முத்து அது.

அதுபோலவே இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் இளையகங்கை இசையமைத்த “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” பாடலை இன்னும் கூட இலங்கையின் பண்பலைகள் விட்டுக் கொடுக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

“தோடி ராகம் பாடவா...

 மெல்லப் பாடு....”

அன்று ஆல் இந்தியா ரேடியோவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்ட காலத்து ஞாபகங்களை சந்திரபோஸ் ஜேசுதாஸ் ஊடாக விஜயகாந்த் வழி கடத்துவார்.

ஒரு சில படங்களே இசையமைத்த தேவேந்திரனிடம் கூட

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” என்றும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” என்றும் 80களின் இளைஞர்களின் சோக ராகத்தை ஜேசுதாஸ் விஜயகாந்த் வழி கடத்தினார்.

சங்கர்- கணேஷ் இசையமையத்த ஒரு தொகை படங்களாய் விஜய்காந்த் நடித்த போது “சித்திரமே உன் விழிகள்” பாடலையும் அவர்கள் தம் பங்குக்குக் கொடுத்ததையெல்லாம் இலங்கை வானொலியின் பொற்காலம் பறையும்.

விஜய்காந்த் என்றதோர் ஆக்ரோஷமான நாயகனுக்கு ஜெயேட்டனும், தாஸேட்டனும் அளவெடுத்த குரலாய் அமைந்ததுதான் ஆச்சரியம்.

அதனால் தான் கொண்டாட்டம், தத்துவம், சோகம் என்று எல்லாவிதமான கலவைகளிலும் அவருக்காக அவர்கள் பாடியபோது அவரே ஆகினர். 

“நிலைமாறும் உலகில் 

நிலைக்கும் என்ற கனவில் 

வாழும் மனித ஜாதி

அதில் வாழ்வதில்லை நீதி"

கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாட்டு வந்தது என்னவோ விஜய்காந்தின் “ஊமை விழிகள்" திரைப்படம் தான். ஆனால் அவருக்காக அந்தப் படத்தில் அமைந்ததல்ல. இருந்தாலும் என்ன, அவரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாவிடை கொடுக்க, தொலைக்காட்சி ஒன்று அடிக்கடி இந்தப் பாடலை ஒலிபரப்பி சோக வலையில் சிக்கி இருந்தது அன்றைய தினம்.  

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த படங்களிலும், இன்னொருவருக்கான குரலாகவும் அவ்விதம் அணி சேர்த்த ஜேசுதாஸ், அன்று கேப்டனின் தோழன் சந்திரசேகருக்கான ஜோடிப் பாடலான 

“ரெண்டு கண்ணும் சந்தனக் கிண்ணம்" (சிவப்பு மல்லி)

கொடுத்ததைக் காலம் தான் மறந்து போகுமா?

அதுபோலவே “நம்பினால் கெடுவதில்லை” என்று அதே பெயரில் வெளிவந்த படத்திலும், “கண்ணே வா” (குழந்தை ஏசு), “ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை” (மக்கள் ஆணையிட்டால்), “ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு" (சட்டம் ஒரு விளையாட்டு) என்று விஜயகாந்த் படங்களில் இன்னொருவருக்காக ஜேசுதாஸ் பாடியவை என்ற கணக்கு நீண்டு செல்லும்.

ஜேசுதாஸை இணை நாயகன் ரகுமானுக்குப் பாட வைத்து, விஜயகாந்துக்கு சுரேந்தரைப் பாடவைத்த “நான் உள்ளதைச் சொல்லட்டுமா?” (வசந்த ராகம்) தந்த புதுமையை மறக்கத்தான் முடியுமா? ஆரம்ப காலத்தில் எஸ்.என்.சுரேந்தர் தான் விஜயகாந்தின் பின்னணிக் குரலாகவும் இருந்தவர். கானாபிரபா

தொடந்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்காக அன்று தொட்டு ஈராயிரம் வரை குரல் கொடுத்த கே.ஜே.ஜேசுதாஸின் பாடல் தொகுப்பை இங்கே முழுதுமாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. எதோ நினைவுகள் – அகல்விளக்கு (இளையராஜா)

2. உள்ளமெல்லாம் தள்ளாடுதே – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

3. இன்றோ மனம் கலங்கி – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

4. சித்திரமே உன் விழிகள் – நெஞ்சிலே துணிவிருந்தால் ( சங்கர் – கணேஷ்)

5. மச்சமுள்ள பச்சக்கிளி – சபாஷ் (சங்கர் – கணேஷ்)

6. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள் (இளையராஜா)

7. அலை அலையாய் – நாளை உனது நாள் (இளையராஜா)

8. பூவோ பொன்னோ – புதுயுகம் (கங்கை அமரன்)

9. ஒரே ராகம் – அமுத கானம் (இளையராஜா)

10. மாலைக் கருக்கலில் – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

11. மாலைக் கருக்கலில் (சோகம்) – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

12. உன் பார்வையில் – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

13. உன் பார்வையில் (தனித்து) – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

14. இச்சென்று முத்தம் – எனக்கு நானே நீதிபதி (இளையராஜா)

15. ஊருக்கு உழைத்தான் – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

16. தொடு தொடு – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

17. ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை ( இளையராஜா)

18. உணவினிலே நஞ்சு வைத்தான் – வேலுண்டு வினையில்லை ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

19. வங்காளக் கடலே – மனதில் உறுதி வேண்டும் (இளையராஜா)

20. ராத்திரிக்கு கொஞ்சம் – காலையும் நீயே மாலையும் நீயே ( தேவேந்திரன்)

21. சிந்திய வெண்மணி – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

22. அடி கானக் கருங்குயிலே – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

23. ஶ்ரீரஞ்சனி – தம்பி தங்கக் கம்பி ( கங்கை அமரன்)

24. முத்துக்கள் பதிக்காத கண்ணில் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

25. வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

26. மீனாட்சி கல்யாண வைபோகமே – மீனாட்சி திருவிளையாடல் ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

27. குயிலே குயிலே – புலன் விசாரணை ( இளையராஜா)

28. ஓ தென்றலே – சந்தனக் காற்று (சங்கர்-கணேஷ்)

29. அதிசய நடமிடும் – சிறையில் பூத்த சின்னமலர் ( இளையராஜா)

30. காலை நேரம் – மாநகர காவல் (சந்திரபோஸ்)

31. தோடி ராகம் பாடவா - மாநகர காவல் (சந்திரபோஸ்)

32. சந்தனக் கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

33. ஆகாயம் கொண்டாடும் – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

34. – ஆகாயம் கொண்டாடும் (சோகம்) – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

35. சந்தன மலர்களைப் பார்த்து – காவியத் தலைவன் (அரவிந்த் சித்தார்த்தா)

36. வண்ணக்கிளி வண்ண – காவியத் தலைவன் ( அரவிந்த் சித்தார்த்தா)

37. குங்குமம் மஞ்சளுக்கு – எங்க முதலாளி ( இளையராஜா)

38. வண்ணமொழி மானே – சேதுபதி ஐபிஎஸ் ( இளையராஜா)

39. ரோஜா வண்ண ரோஜா – வாஞ்சி நாதன் (கார்த்திக் ராஜா)

40. தந்தனத் தந்தன தை மாசம் – தவசி (வித்யாசாகர்)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நாமும் அவர் தம் பாடல்களோடு கொண்டாடி மகிழ்வோம்.

கானா பிரபா

10.01.2024