Pages

Monday, January 31, 2011

"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - பாடல் பிறந்த கதை

கவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.




பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?


நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
"நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க" என்று சொன்னார்.
"இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க" என்றேன்.
"வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க" என்றார்.
"இல்லை வேண்டாம்" என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
"கந்தனுக்கு மாலையிட்டாள்" - பாடியவர் வாணி ஜெயராம்


உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் "பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்" அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?

அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.

முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,

"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்

Wednesday, January 26, 2011

பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

44 ஆண்டுகளாகப் இசையுலகில் மங்காது பாடும் நிலா பாலுவுக்கு இன்று இன்னொரு மணி மகுடம். 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது கிட்டிய செய்தி தற்போது வந்திருக்கின்றது. 1966 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று முக்கிய மொழிகளிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி அன்றும் இன்றும் ரசிகர்களது உள்ளத்தில் நிரந்தர சிம்மாசனத்தில் இருப்பவர். பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குக் கிட்டிய விருதுகளின் பட்டியலை வாசிக்கவே ஒரு நாள் போதுமா? எனவே தேசிய விருது என்ற வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பெற்றுக் கொண்ட விருதுகளையும் குறித்த பாடல்களையும் பத்மபூஷண் விருதுக்கான சிறப்புப் படையலாக வழங்கி அவரை வாழ்த்துகின்றேன்.


1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "ஓம்கார நாதானு"



1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே ஹிந்தித்திரைபடத்திற்காக விருது பெற்ற பாடல் "தேரே மேரே"



1983 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் சாகர சங்கமம் தெலுங்குத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "வேதம்"



1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் ருத்ரவீணா தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "செப்பாலனி உண்டி"



1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி என்ற கன்னடத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "குமண்டு குமண்டு"

Get this widget | Track details | eSnips Social DNA


1997 ஆம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மின்சாரக்கனவு தமிழ்த்திரைப்படத்துக்காக விருதைப் பெற்ற "தங்கத்தாமரை மகளே"



வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்னி ஒபரா ஹவுசில் பாடிய நிலா பாலு


இசையமைப்பாளர் பாலசுப்ரமணியம் இசையில் எனக்குப் பிடித்த பாடல் சிகரம் படத்தில் இருந்து "இதோ இதோ என் பல்லவி"



எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மபூஷண் கிட்டிய செய்தியை உடன் பகிர்ந்த நண்பர் சொக்கனுக்கும் தேசிய விருதுப்பட்டியலுக்கு உதவிய விக்கிபீடியாவுக்கும் நன்றி

Monday, January 24, 2011

கவிஞர் முத்துலிங்கத்தின் "பாடல் பிறந்த கதை" - தஞ்சாவூரு சீமையிலே

ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் "பாடல் பிறந்த கதை" தான்.

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இந்த ஆண்டு "முத்து மணி மாலை" என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் "பாடல் பிறந்த கதை" என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார். அவற்றைத் தொடர் பகுதியாக வானொலியில் ஒலிபரப்பும் அதே வேளை றேடியோஸ்பதி வாயிலாகவும் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தொடர்ந்து பாடலாசிரியர் முத்துலிங்கம் பேசுவதைக் கேட்போம்.



வணக்கம் கவிஞர் முத்துலிங்கம் அவர்களே


வணக்கம் ஐயா

ஒரு பாடலாசிரியராக அன்றும் இன்றும் பிரபல்யத்தோடு விளங்கும் நீங்கள் சென்னையில் வந்து இந்த இடத்தைப் பிடிப்பதற்கு முன் உங்கள் இளமைப்பிராயம், குறிப்பாக தமிழ் மீதான காதல் உங்களுக்கு எப்படி வந்ததென்று சொல்லுங்களேன்.

தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் "இலக்கியம்" என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.

அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக?" என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது
நான் எழுதினேன்,
"திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
பறக்கின்ற நாவற்பழம்"
அப்படின்னு எழுதினேன்.
இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். "பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.


அந்தப்பாடலைப் பற்றிச் சொல்லும் போது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட முன்னர் அவர் இசையமைக்க நீங்கள் எழுதிய பாடல் என்ற பெருமையும் இருக்கின்றது என்று அறிந்துகொண்டேன் அப்படித்தானே?


ஆமாமா, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் ராஜா. முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார். நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும். அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார் அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல. அந்தப் படத்தில் அவர் இயக்குனர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம். இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ் சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் "என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப்பாருய்யா அதை வச்சு எழுதுங்க"ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு. அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.

இதோ அந்த "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் எண்பதுகளின் பிரபலக் குயில்களில் ஒன்றாக விளங்கிய பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு என்பதும் கொசுறுத் தகவல்






முத்துலிங்கம் இன்னும் பல பாடல் பிறந்த கதைகளைச் சொல்லுவார்.....

Tuesday, January 11, 2011

பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி

இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு.

"என் வானிலே ஒரே வெண்ணிலா" செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ
"ஆராணு" பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில்
கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன்.
"இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா" என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று "சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்" என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் திடீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி.


பேட்டியைக் கேட்க


Download பண்ண இங்கே அழுத்தவும்

வணக்கம் ஜென்சிம்மா

வணக்கம் வணக்கம்


ஆஸ்திரேலிய நேயர்கள் சார்பிலே ஒரு ரசிகனாகவும் கூட உங்களை வானலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
உங்களை நீங்கள் எப்படி ஒரு பின்னணிப்பாடகியாக வளர்த்தெடுத்துக் கொண்டீர்கள், உங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது?


எனக்கு ஐந்து ஆறு வயசிருக்கும் போதே சர்ச்சில் எல்லாம் பாடயிருக்கிறேன், அப்புறம் 10 , 11 வயதிலேயே வெளியே அறிமுகமாகி மேடைக்கச்சேரிக்கெல்லாம் போவதுண்டு, அதில் சுசீலாம்மா, ஜானகி அம்மாவோட தமிழ் மலையாளப்ப்பாடல்கள் எல்லாம் படிப்பேன். அப்புறம் அப்பாவின் நண்பர் மலையாள சினிமா இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜீனன் மாஸ்டரின் வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கம். அவர் என்னுடைய நிறையப்பாடல்கள் கேட்டிருக்கின்றார். அவர் தான் எனக்கு முதல் சினிமா வாய்ப்பை மலையாளத்தில் கொடுத்தார்.

அதாவது உங்களின் எத்தனை வயதில் ஒரு திரையிசைப்பாடகியாக அறிமுகமானீர்கள்?


அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசிருக்கும்.

உங்களின் முதல் அறிமுகப்படம் ஞாபகம் இருக்கிறதா?

ஆமாம், அந்தப் படம் அவள் கண்ட லோகம்

பின்னர் தமிழ்த்திரையுலகிலே ஒரு பெரும் பின்னணிப்பாடகியாக நீங்கள் மாறக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள், அவருடைய அறிமுகம் எப்படிக் கிட்டியது?


அந்த நேரம் 10 பாட்டுக்களுக்கு மேல் பாடி இருந்த வேளை , ஜேசுதாஸ் அண்ணாவோடு நிறையக் கச்சேரிகள் உள்ளூரிலும் , வெளியூருக்கும் போவதுண்டு. அந்த அறிமுகத்தில் தாஸண்ணா இளையராஜா சாரிடம் இந்தப் பெண்ணின் குரல் பிடிச்சிருந்தா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டார். அப்போது ராஜா சார் தாஸண்ணாவின் செக்கரட்டரிக்கு அழைத்து என்னை ஸ்டூடியோ வரச் சொல்லிக் கேட்டிருந்தார். அடுத்த நாளே நானும் அப்பாவுமாக சென்னைக்குப் போய் ராஜா சார் முன்னிலையில் வாய்ஸ் டெஸ்ட் பண்ணி அன்றைக்கு மத்தியானமே எனக்கு பாடறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.

வாய்ஸ்ட் டெஸ்ட்டுக்கு ராஜா சாருக்கு எந்தப் பாடலையெல்லாம் பாடிக்காட்டினீர்கள்?

ஒரு மலையாள கிளாசிக்கல் பாட்டு, அப்புறம் ஹிந்திப்பாட்டு "சத்யம் சிவம் சுந்தரம்" (பாடிக்காட்டுகிறார்) அப்புறம் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ராஜா சார் பாட்டு அப்போது தான் அந்தப் பாட்டு வந்திருந்த நேரம் கூட. அன்று மத்யானம் ஜானகி அம்மா கூட எனக்கு முதல் பாட்டு பாடக் கிடைச்சுது

எந்தப் பாடலை நீங்கள் தமிழுக்காக முதலில் பாடினீர்கள்?

திரிபுரசுந்தரி படத்தில் ஜானகி அம்மாவோடு கூடப்பாடும் "வானத்துப் பூங்கிளி" என்ற பாட்டு

திரிபுர சுந்தரி படத்தைத் தொடர்ந்து திரையுலகில் ஒரு எண்பதுகளிலே நிறையப்பாடல்களைப் பாடி நிறை ஹிட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா?

நிறைய இல்ல ஒரு நாற்பது ஐம்பது பாட்டுக்கள் பாடினேன்

அந்தக் காலகட்டத்தில் உங்களைப் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்த பாடல் என்றால் எதைச் சொல்வீர்கள்?

எனக்குத் தோணுறது "என் வானிலே ஒரே வெண்ணிலா (பாடிக்காட்டுகிறார்) என்று நினைக்கிறேன், அப்புறம் தெய்வீக ராகம் திகட்டாத பாடல் (இரண்டு அடிகளைப் பாடுகிறார்) அப்புறமா காதல் ஓவியம், மயிலே மயிலே (பாடுகின்றார்), இரு பறவைகள் மலைமுழுவதும் அங்கே இங்கே பறந்தன, ஆயிரம் மலர்களே மலருங்கள், இதயம் போகுதே எனையே பிரிந்தே....

நீங்கள் மெல்லிசைப்பாடகியாக ஆரம்பத்தில் உங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பின்னணிப்பாடகியாக வருவதற்கு எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொண்டீர்கள்?


அந்த நாளில் சாரின் இசையில் பாடுவது ரொம்ப பெருமையா இருந்தது ராஜா சாரைப்பார்ப்பதே பெருமையான விஷயம். அந்த நாளின் என்னோட ஊரில் இருந்து யாருமே பாடகியாக வந்ததே இல்லை. சுஜாதாவும் கூட. இருவரும் ஒரே ஊர்தான்.

அந்தக் காலகட்டத்தில் ராஜா சார் இசையில் தமிழைத் தவிர வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்களா?

ஆமாம், தெலுங்கில் பாடியிருக்கிறேன். மகேந்திரன் சாரின் முள்ளும் மலரும் படத்தோட தெலுங்குப் பதிப்பில் அடி பெண்ணே பாட்டை பாடியிருக்கிறேன்.

சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் கூட நீங்கள் பாடியிருக்கிறீர்கள்


ஆமாம், பனிமலர் படத்தில் (பாடுகிறார்) பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்.
அப்புறம் சந்திரபோஸ் சாரின் முயலுக்கு மூணு கால் படத்திலும், மலையாளத்தில் ஷியாம் சார், ஜோன்சன் மாஸ்டர் என்று பாடியிருக்கிறேன்.


உங்களுக்கு ரசிகர்களின் அமோக அங்கீகாரம் கிடைத்த அதே சமயம் விருதுகள் என்ற மட்டில் ஏதாவது கிட்டியதா?

விருதுகள் ஒண்ணுமே கிடைக்கல, என்னோட பாட்டுக்கள் பிடித்தமான ரசிகர்கள் எனக்கு போன் பண்ணுவார்கள் அதுதான் எனக்குக் கிடைச்ச விருதுகள். இன்னும் இன்றைக்கும் மக்களோட இதயத்துல என்னோட இரண்டு மூன்று பாட்டுக்களாவது இருக்கும். அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கு ராஜா சாருக்கு என் லைஃப் பூராகவும் கடமைப்பட்டிருப்பேன்.

ராஜா சார் இசையில் பாடிய அந்த நாட்களில் மறக்க முடியாத அனுபவம் என்று ஏதாவது இந்த வேளை ஞாபகப்படுத்த முடியுமா?

ராஜா சார் கிட்டப் பாடினதே எனக்குப் பெரிய அனுபவம். ஒரு பாட்டையும் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டார். நீயே கேட்டுப்பாரு நீயே கரெக்டு பண்ணு அப்படிச் சொல்லுவார். எனக்கு பயம் அப்பவுமே இப்பவுமே (சிரிக்கிறார்)

தமிழிலே ஒருகாலகட்டத்தில் பெரும் பின்னணிப்பாடகியாக இருந்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அன்னியப்பட்ட பாடகியாக மாறிய அந்த சந்தர்ப்பம் எப்படி அமைந்தது?

எனக்கு அந்த நேரம் மியூசிக் டீச்சர் வேலை கிடைச்சது அதனால அந்தத் தொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரம் சுசீலாம்மா, ஜானகியம்மா, வாணியம்மா என்று நிறையப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் எப்போது போகும்னு ஒண்ணுமே தெரியல. அப்போது கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதும் பெற்றோர்கள் அதை விடவேண்டாம்னு சொன்னாங்க.

உங்களை மீண்டும் பாட வைத்த சந்தர்ப்பம்?

நான் எங்கிருக்கேன் என்று தெரியாத நிலையில் பல வருஷங்களுக்குப் பிறகு ஆனந்த விகடனில் என் பேட்டி வந்திருந்ததைப் பார்த்து மகேந்திரன் சாரின் மகன் ஜான் மகேந்திரன் நிறைய இடத்தில் தொடர்பு கொண்டு என் போன் நம்பரை கண்டுபிடிச்சுத் தன் படத்தில் பாடவச்சார். இசை ஶ்ரீகாந்த் தேவா. ஆனா அந்தப் படம் இன்னும் வரவில்லை அதனால் வேறு இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புக்கள் கிட்டல. 23 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் பாட்டுப் பாடியிருக்கிறேன்.

நீங்கள் திரையுலகில் இருந்து ஒதுங்கிய காலகட்டத்தில் யாரும் உங்களைப் பாட வைக்க முயற்சிக்கலையா?

அந்த நேரத்தில் என்னோட தொடர்பு கிடைக்காத காரணத்தால் நான் எங்கே இருக்கேன்னு கூடப் பலருக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்றிரண்டு மலையாளப்பாட்டு பாடியிருக்கேன்.

ராஜா சார் இசையில் மீண்டும் உங்களுக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிட்டியதாகவும் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் ஒரு செய்தி அறிந்தேன்?

ஆமாமா, அந்தப் பாட்டு பாடும் நாள் காலை என்னுடைய மகன் விழுந்து தலை அடிபட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக வேண்டி இருந்தது. நானும் பயந்து போயிருந்தேன். பாட்டுக்காக ராஜா சார் அழைச்ச நேரம் காலை எட்டு மணி. இதெல்லாம் முடிஞ்சு ஆனால் நான் அங்கே போனபோது பத்து மணி. அந்தப் பாட்டை வேறொருத்தர் பாடிட்டார். பரவாயில்லை அது கடவுள் எனக்குக் கொடுத்த பாட்டு இல்லை.

ஜேசுதாஸ் சாரின் அறிமுகத்தில் தமிழில் பாடும் வாய்ப்புக் கிடைத்து, தமிழில் அவரோடு சேர்ந்து பாடிய பாடல்?

ப்ரியா படத்தில் "என்னுயிர் நீதானே" அப்புறமா டிக் டிக் டிக் இல் "பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே"

அத்தோடு இன்னொரு அருமையான பாடகர் ஜெயச்சந்திரனோடு கூட "கீதா சங்கீதா"?

ஆமாமா, ரொம்ப நல்ல பாட்டு , வாலி சார் எழுதினது கீதா சங்கீதா சங்கீதமே செளபாக்யமே (பாடிக் காட்டுகிறார்)

அந்தக் காலத்தில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எல்லாமே பாட்டு பதிவாகும் போது இருப்பாங்க, ஏதாவது தப்பா பாடினாக் கூட உடனேயே திருத்தம் சொல்லிடுவாங்க. ஏன்னா தப்பா பாடினா அது என்னைக்குமே ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்லையா?


அந்தக் காலகட்டத்தில் கிடைத்த மறக்க முடியாத பெரும் பாராட்டு?


"இதயம் போகுதே" பாட்டு ரெக்கார்ட் ஆகும் நாள் சுசீலாம்மா ஸ்டூடியோ வந்திருந்தாங்க. அப்போ ராஜா சார் என்னை அழைச்சு "சுசீலாம்மா முன்னாடி அந்தப் பாட்டைப் பாடு" என்று கேட்டார். நான் நினைக்கிறேன் ராஜா சாருக்கு பெருமையா இருந்திருக்கும் அந்தப் பாட்டை என்னை வச்சு பாடவைச்சதால். சுசீலாம்மா "ரொம்ப நல்லா பாடியிருக்கீம்மா" என்று என்று பாராட்டியிருக்கின்றார்.

நீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு?

எனக்கு காதல் ஓவியம் பாட்டு ரொம்ப பிடிக்கும்

இப்படியான பாடல்களைப் பாடிவிட்டு அந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கு என்ற ஆவலும் அந்த நேரத்தில் எழுந்திருக்கிறதா?

அந்த நேரத்தில் நான் பாடல் பாடிவிட்டு கேரளாவுக்கு போய் விடுவேன். அந்த நேரத்தில் எங்களூரில் தமிழ்ப் படங்கள் வரும் வாய்ப்போ அல்லது இப்போது மாதிரி டிவி வாய்ப்புக்களோ கிடையாது அதனால அந்த சந்தப்பம் வாய்க்கல.

இப்போது தான் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கு, அப்படிப் பார்த்து ரசித்த பாட்டு, என் வானொலே, காதல் ஓவியம், தெய்வீக ராகம் அப்புறம் ஷோபா நடிச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை" அந்தப் பாடலின் ஒரு சில வரிகளைப் பாடக் கேட்கிறேன் பாடுகிறார்.

இத்தனை ஆண்டு இடைவெளி வந்துவிட்டதே என்ற ஏக்கம் எப்போதாவது வந்திருக்கிறதா?

சில வேளைகளில் வருத்தப்பட்டதுண்டு ஆனால் ராஜா சார் கொடுத்ததெல்லாமே எனக்கு ரொம்ப நல்ல பாடல்கள், அதுவே போதும் என்றும் நினைப்பதுண்டு.

பேட்டி முடிந்ததும் இவ்வளவு நேரமும் நல்லதொரு சம்பாஷணையைத் தந்ததுக்கு நன்றி சொல்லித் தன் விலாசத்தைக் கொடுத்து பேட்டியின் ஒலிப்பதிவை அனுப்ப முடியுமா என்கிறார்.
ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும்.




ஜென்சி ஜோடி கட்டிய பாடல்கள் - பழைய இடுகை

"தெய்வீக ராகம்" ஜென்சி பாடிய சில பாடல்கள்

என் வானிலே ஒரே வெண்ணிலா




இதயம் போகுதே எனையே பிரிந்தே



அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை



"இரு பறவைகள் மலை முழுவதும்"



"தெய்வீக ராகம் திகட்டாத பாடல்"


Thursday, January 6, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம்

தமிழ்த்திரையிசையின் அடுத்த போக்கைத் தீர்மானித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றோடு வயது 45. இந்தி இசைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த தென்னகத்து ரசிகனைக் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் வைத்தவர் இசைஞானி இளையராஜா, அடுத்து வந்த ரஹ்மானோ வட இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டதுமல்லாமல் ஹாலிவூடையும் கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த வகையில் இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துக்களைப் பகிர்வதோடு, ஆஸ்கார் விருதை அவர் தட்டிக்கொண்ட சமயம் "அம்ருதா" என்ற சஞ்சிகைக்காக ஏப்ரல் 2009 இல் நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகின்றேன்.

00000000000000000000000000000000000000

54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி)
படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அழைக்கப்படுகின்றார். இது சமீபத்தில் நடந்த ஒரு அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தின் பின்னால் இருந்தது பென்னி தயாள் என்ற பாடகனை அறிமுகப்படுத்தி வேலை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சாரும் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பண்பு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளன் திரைமறை காயாக இருந்து 1992 இல் வெளிப்பட்ட போது ஆரம்பித்தது. இன்றும் தொடர்கின்றது.

1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ரோஜா" படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய
"காதல் ரோஜாவே" ஒரு பாடல் மட்டுமே அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான குரலாக ஒலிக்கின்றது. ஏற்கனவே
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பாடிக் கொண்டிருந்த மின்மினி என்ற பாடகியை எல்லைகள் கடந்து தெரியவைத்ததும், விஜய் என்ற பெயரில் முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடி வந்த உன்னிமேனன் என்ற பாடகனை எல்லா ரசிகர் முன்னும் அறியவைத்ததும், பத்து வருஷங்களுக்கு மேல் தமிழில் பாடாமல் ஓய்ந்திருந்த பாடகி சுஜாதாவை மீள இயங்கவைத்ததும், மும்பையை கடந்தால் யார் இவர் என்று கேட்க வைத்த ஹரிஹரன் குரலை தேசங்கள் கடந்தும் ஒலிக்கவிட்டதும் என்று ஆரம்பித்தது ரஹ்மானின் இசைப்பயணம். பொதுவாகவேமிகவும் கஷ்டப்பட்டுக் கிடைக்கும் வாய்ப்பு, அதுவும் பேர் போன ஒரு தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா, நாடறிந்த இயக்குனர் மணிரத்னம் இப்படியாக மிகவும் சவாலாக வந்த அந்த இசைப்பணிக்கு வேறு யாரும் என்றால் நிச்சயம் இவ்வளவு புதுக் குரல்களைப் போடுவதைக் கொஞ்சம் யோசித்திருப்பார்கள். ஆனால் அங்கே தான் ரஹ்மானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகின்றது. அதுவரை இளையராஜா என்னும் மாபெரும் கலைஞன் பதினாறு ஆண்டுகளாகக் கட்டிப்போட்ட இசைமுடிச்சை அவிழ்த்துப் புதிதாக ஒன்றை ரசிகனுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதொரு விடயம். ஒரு ட்ரெண்ட் செட்டராக ரஹ்மான் அடையாளப்படும் போது வெறுமனே அவரின் புது மாதிரியான இசை மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கவில்லை, கூடவே ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட பாடகர் வட்டத்துக்குள்ளே இருந்த தமிழ் சினிமாவின் கூட்டை அகலத் திறந்து விட்டார் இவர். குறிப்பிட்ட பாடகர்களைத் தவிர்த்து வேறும் புதுப் பாடகர்களை அறிமுகப்படுத்துவது ரஹ்மான் காலத்துக்கு முன்னரும் இருந்திருக்கின்றது. ஆனால் ரஹ்மானுக்குப் பின்னான போக்கைப் பார்த்தீர்களானால் இந்த மாற்றம் எவ்வளவு பெரியதாக அமைந்திருக்கின்றது என்பதை இனங்காணலாம்.

இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஐந்து பாட்டென்றால் ஐந்து பாடகர்களோ, இல்லாவிட்டால் ஒரு பாட்டையே இரண்டு மூன்று பாடகர்களோ பாடுவது சர்வசாதாரணம். இந்த மாற்றத்தின் விதையைப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அது மிகையில்லை. டிவிக்களில் வரும் அறிமுகப் பாடகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த சப்தஸ்வரங்கள், ராகமாலிகா, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் திறமையை வெளிக்காட்டும் பாடகர்களில் பலருக்கு இப்போதெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது எட்டும் கனியாகி விட்டது. ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் பரவலாக இல்லாத காலத்தில் ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு நடுவராகப் போன ரஹ்மானில் கண்ணில் பட்டார் அந்த நிகழ்ச்சியில் பாடிய ஹரிணி. பின்னர் நிலாக் காய்கிறது என்று ஆரம்பித்தது ஹரிணியின் இசையப்பயணம்.

ஹோரஸ் கொடுக்கும் பாடகர்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அந்த எல்லையைக் கடந்து பெரும் பாடகராகச் சாதிக்க முடியாத காலமும் இருந்தது. ரஹ்மானின் காலத்தில் தான் இந்த விஷயத்திலும் மாறுதல் கண்டது. இவரின் பாடல்களுக்கு ஹோரஸ் கொடுத்த பலர் பின்னாளில் முன்னணிப் பாடகர்களாக வரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ரஹ்மானின் பாடல்கள் வரும் இசைத் தட்டுக்களைக் கவனித்தால் வெறுமனே முன்னணிப் பாடகர்கள், மற்றும் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இருக்காது. கூடவே அந்தப் பாடல்களுக்குப் பயன்பட்ட வாத்தியக் கலைஞர்கள், மற்றும் ஹோரஸ் பாடிய பாடகர்கள் பெயர் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. அது என்னதான் பெரிய லிஸ்டாக இருந்தாலும் கூட.

ரஜினி என்றாலும் கமல் என்றாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணிப் பாடகர்களின் பின்னணிப் பாடல் தான் ரசிகர் மனதில் ஒட்டும் என்ற நினைப்பை மாற்ற வைத்தது "முத்து" படத்தில் உதித் நாராயணன் பாடிய "குலுவாயிலே" பாட்டும் "படையப்பா" படத்தில் வந்த "மின்சாரப் பூவே" என்ற பாடலும். இந்தியன் கமலுக்கு போட்ட "டெலிபோன் மணி போல்" ஹரிஹரன் குரல்கூட அளவாகப் பொருந்தியதே.

சுரேஷ் பீட்டர்ஸ் குரலில் அமைந்த "சிக்கு புக்கு ரெயிலே" பாட்டு கொடுத்த புகழ் சுரேஷை ஒரு இசையமைப்பாளனாகவே மாற்றி அழகு பார்த்த்து. ஜென்டில்மேனில் "உசிலம்பட்டி பெண்குட்டி" முத்துப் பேச்சி பாடிய சாகுல் ஹமீத்தின் வித்தியாசமான குரலைக் கூட ரஹ்மான் இசையில் அறிமுகப்படுத்த முடிந்தது, தொடர்ந்து அவர் வெறும் வாத்திய இசையில்லாமல் ஹம்மிங்கோடு அமைந்த "ராசாத்தி என்னுசிரு" பாட்டில் கூட வசீகரித்தார். சாகுல் ஹமீத்தின் நட்பு ரஹ்மான் திரைக்கு வரும் முன்னரே அவர் இசையமைத்த தீன் இசைமாலை போன்ற ஆல்பங்களில் ஆரம்பித்தது. அந்த நட்பினை முறிக்காது ஹமீதின் குரலை திரையிலும் தொடர்ந்தார் ரஹ்மான். ரஹ்மான் கொடுத்த திரைப்பாலம் ஹமீதை மற்றைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடவைத்தது. கடல் கடந்தும் இசைப்பயணத்தைத் தொடர்ந்த ஹமீத் துரதிஷ்டவசமாக பெரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரஹ்மானையும் வெகுவாகவே பாதித்தது.

அனுபமா போன்ற மேற்கத்தேயச் சாயல் கொண்ட குரல்களுக்கு "கொஞ்சம் நிலவு" (திருடா திருடா) போன்ற பாடல்கள் களம் அமைத்து போல சுவர்ணலதா போன்ற பாடகிகளுக்கு "போறாளே பொன்னுத்தாயி" போன்ற கிராமிய மெட்டுக்களும் கைகொடுத்து தேசிய விருது வரை அழைத்துச் சென்றது.

திரையிசைக்கு பாலமுரளி கிருஷ்ணா போன்ற முழு நேர சங்கீத வித்துவான்களின் அறிமுகம் புதிதல்ல. ஆனால் ஜேசுதாஸ் போன்று கர்னாடக மேடைகளிலும் திரையிசையிலும் சமகாலத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் வண்ணம் பாடகர்கள் அமையாதிருந்தனர். அந்தப் போக்கினையும் ரஹ்மானின் காதல் திரைப்படம் உன்னி கிருஷ்ணன் மூலம் மாற்றிக் கொண்டது. ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் "என்னவளே அடி என்னவளே" பாடலுக்கும் "பவித்ரா" படத்தில் "உயிரும் நீயே" பாடலுக்கும் பாடியதன் மூலம் உன்னிகிருஷ்ணன் தேசிய விருது வரை அங்கீகாரம் பெற்றதோடு உன்னிகிருஷ்ணனுக்கு சபா மேடைகள் தாண்டி ஒலிப்பதிவுக் கூடங்களையும் தினமும் செல்லவைத்தது. கர்நாடக சங்கீதச் சாயல் மட்டுமன்றி ஜீன்ஸ் போன்ற படங்களில் இளமை துள்ளும் பாடல்களுக்கும் உன்னி கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தார் ரஹ்மான்.
அந்த வகையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகமாக அமைந்தது நித்யஶ்ரீயின் "கண்ணோடு காண்பதெல்லாம்" ஜின்ஸ் படப்பாடல்.
நித்யஶ்ரீ போன்ற திரையிசைச் சாயல் கலக்காத அக்மார்க் சபா மேடைக் குரலை ஜீன்ஸ் போன்ற மெகா பட்ஜெட் படத்தில் நுழைத்தது
ரஹ்மானின் சாமர்த்தியம்.

சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு நடுவராகச் சென்ற ஶ்ரீநிவாஸ் அந்த நிகழ்ச்சியில் பாடிய சின்மயியின் குரலை ஞாபகம் வைத்திருந்து
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலுக்கு புதுக்குரலைத் தேடியபோது ஶ்ரீநிவாஸ் சின்மயியை பரிந்துரைக்கிறார், சின்மயி என்ற திரையிசைப்பாடகி பிறந்தார். அது போல் அப்துல் ஹமீது நடாத்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் தன் திறமையைக் காட்டிய முகேஷுக்கு ரஹ்மானின் "கண்களால் கைது செய்" அறிமுகம் கொடுக்கின்றது. திறமை எங்கிருந்தாலும், அதை யார் வழிமொழிந்தாலும் அதனைப் பாவிக்கும் ரஹ்மானின் திறனுக்கு இவை சில உதாரணங்கள்.

ரஹ்மான் தமிழுக்கு அறிமுகப்படுத்திய வட நாட்டுக்குரல்கள் விளைவித்த மொழிச் சேதத்தையும் கண்டிக்க இசை ரசிகர்கள் தவறவில்லை. உதித் நாராயணன், மதுஶ்ரீ, சாதனா சர்க்கம் போன்ற பாடகர்களின் அந்நியமான தமிழை ரஹ்மானின் இசை உள்வாங்கிக் கொண்டாலும் அந்தக் குரல்களில் அமைந்த நல்ல பல பாடல்களை ஒதுக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானின் அறிமுகத்தில் வந்த கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற குரல்களும் சரி சங்கர் மகாதேவன், கவிதா சுப்ரமணியம், ஹரிஹரன் போன்ற ஏற்கனவே அறிமுகமாகி
ரஹ்மானின் பாடகளால் உச்சத்துக்கு சென்றவர்களும் சரி அந்தக் குறையையும் தீர்த்து விட்டார்கள்.

வட நாட்டுக் குரல்களை தமிழில் அழைத்து அறிமுகப்படுத்திய ரஹ்மானின் இன்னொரு சாதனை தமிழில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரையும் ஹிந்தித் திரையுலகிலும் வெளிக்காட்டி நின்றமை. ஶ்ரீநிவாஸ், கார்த்திக், பென்னி தயாள், சின்மயி போன்ற பாடகர்கள் பலர் ஹிந்தியிலும் தடம் பதிக்க ரஹ்மானின் பாடல்கள் களமாக அமைந்திருந்தன. ஹிந்தித் திரையுலகில் கூட மரபு ரீதியாக அமைந்த பாடகர்கள் வட்டத்திலிருந்து விலகி புதுப் புதுக் குரல்களின் தேடல் அமைந்து வருகின்றது. தமிழிலும் சரி ஹிந்தித் திரையுலகிலும் சரி ரஹ்மானின் அறிமுகத்தில் வெளிக்கொணரப்பட்ட பாடகர்களை ஒரு கட்டுரைக்குள் அடக்கிப் போட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அவரால் அறிமுகப்படுத்திய பாடகர் பட்டியல் நீள்கிறது.

ஆரம்பத்தில் ரஹ்மான் என்ற இளைஞன் தன் திறமையை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் தேடிக் காத்திருந்தது போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இப்படி இருப்பார்கள் என்ற அவர் மனதுக்குள் எண்ணியிருக்கலாம். அதுவே பின்னாளில் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பை அவருள் விதைத்திருக்கலாம்.

முதல் படம் கொடுத்த வெற்றிப் போதையில் படங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு இசையமைத்துத் தன் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் மிகவும் நிதானமாக நடைபோடும் ரஹ்மானால் தான் இன்று ஆஸ்கார் வரை செல்ல முடிந்தது. பெரும்பாலும்
ரஹ்மானின் சாகித்யத்தையும் புதிய முயற்சிகளையும் காட்டுவதற்கேற்ற களங்களாகத் தான் அவர் ஒப்புக் கொண்ட படங்கள் அமைந்தன.
அதனால் தான் கிராமியப் பின்னணியில் அமைந்த படங்களும் சரி நகர வாழ்வியலோடு அமைந்த கதைக்களனாயினும் சரி புதுப் புதுக் குரல்களைத் தன் மெட்டுக்களுக்குப் பயன்படுத்தி குறித்த அந்தத் திரைப்படங்களின் சாயத்தை வேறுபடுத்திக் காட்டினார். காலாகாலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடல்களின் குரலோசைக்கு ரஹ்மானால் புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. இன்று அவருக்குப் பின் தொடரும் இசையமைப்பாளர்கள் இப்போது புதுக்குரல்களைத் தேடும் பார்முலாவுக்கு வித்திட்டதும் ரஹ்மான் உருவாக்கிய இன்னொரு பாணி தான்.





அம்ருதா ஏப்ரல் 2009 இல் வந்த என் கட்டுரையின் மூலம்



Tuesday, January 4, 2011

றேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம் மூத்ததுக்கு

றேடியோஸ்பதியின் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்ப இடுகையாக ஒரு புதிரோடு தொடங்குகிறேன். நீண்ட நாட்களாகப் போட்டி இன்றித் தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தீனி போட்டது மாதிரியும் ஆச்சு.
இங்கே ஒரு படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கிறேன். இந்தப் பின்னணி இசை வரும் படத்தை இயக்கியவர் எண்பதுகளின் முக்கியமான நட்சத்திர இயக்குனர். இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இதே படத்தின் பாகம் 1 ஐ இந்த நட்சத்திர இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர் பாகம் 2 ஐத் தன் குருநாதர் இயக்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இயக்கிப் பெருவெற்றி பெற்ற படம். சிஷ்யனுக்குக் கிடைத்ததோ பெருவெற்றி, ஆனால் பாகம் இரண்டை இயக்கிய அவரின் குருநாதருக்குக் கிடைத்ததோ தோல்விப் படம். சீமைக்குப் போனாலும் சரக்கிருந்தாத் தானே எடுபடும்.

இரண்டு படங்களின் நாயகனும் ஒருவரே, இசையும் ஒரேயொரு ராஜா அந்த இளையராஜாவே. பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டே ஓடி வருக பதிலோடு

போட்டி இனிதே முடிந்தது, பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)

சரியான பதில்
கல்யாணராமன் - இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்
ஜப்பானில் கல்யாணராமன் - இயக்கம் எஸ்.பி.முத்துராமன்