Pages

Sunday, September 21, 2008

"முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு


"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர்.

1986 ஆம் ஆண்டில் தேசிய விருதாக வெள்ளித் தாமரை விருது சிறந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக இப்படத்தின் தயாரிப்பாளர் பாரதிராஜாவுக்கும் கிடைத்திருந்தது.

கதை வசனத்தை ஆர்.செல்வராஜ் எழுத, இப்படத்தைத் தயாரித்து இயக்கிவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆர்.செல்வராஜின் சிறந்ததொரு கதாசிரியர். பொண்ணு ஊருக்கு புதுசு, நீதானா அந்தக் குயில், பகவதிபுரம் ரயில்வே கேட் உட்பட ஆர்.செல்வராஜே ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கின்றார். ஆனால் இயக்குனராக அவர் வெற்றியடையவில்லை. பாரதிராஜாவின் இயக்கத்தில் ஆர்.செல்வராஜின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கே தான் ஒரு நல்ல கதையை படமாக்கும் வித்தை ஒரு நல்ல இயக்குனர் கைகளில் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இந்த முதல் மரியாதை.

இப்படத்தின் பின்னணி இசைப் பிரித்தெடுப்புக்காக நேற்று படத்தை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது. காரணம் இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே தனி இசையைப் பிரிப்பது, வார்த்தைகளை வெட்டுவது என்பது மகா சவாலாகி விட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் தலைசிறந்த இயக்கத்தை அணு அணுவாக ரசிக்க மீண்டும் ஒரு பெரும் வாய்ப்பும் கிட்டியது.

பெரிய மாப்பிள்ளை என்ற ஊர்ப்பெரிய மனுஷனுக்கு நிர்ப்பந்தமாய் வாய்க்கும் திருமண பந்தம் தரும் வேதனை வாழ்வில் பரிசல்காரியின் நட்பு அவருக்கு அவருக்கு ஒத்தடமாகின்றது. தூய அன்பைத் தேடும் இரு உள்ளங்களின் நட்பே காதல் என்னும் நீறுபூத்த நெருப்பாய் இருக்கின்றது. இன்னொரு பக்கம் இளவட்டங்கள் இரண்டின் காதல் என்னும் காமம் கலந்த நேசத்தைக் காட்டுகின்றார் இயக்குனர். அங்கேயும் தன் அத்தையின் அன்பில்லாத, வஞ்சிக்கப்பட்ட வாழ்வில் இருக்கும் இளைஞன் தான் காட்டப்படுகின்றான்.

சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு சாவு மணி போல் வந்த படங்களில் முதல் மரியாதை தலை சிறந்தது. மனுஷர் என்னமாய் வாழ்ந்திருக்கின்றார். அடக்கி வைக்கப்பட்ட தன் உணர்வுகளை மெளனமாகக் காட்டும் விதம், பரிசல்காரியின் அன்பில் பொங்கிப் பாயும் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று காட்சிக்குக் காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பின் பரிமாணம் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கின்றது. பரிசல்காரியாக வரும் ராதா மட்டும் என்னவாம். ரவிக்கை போடாத ஆனால் கவர்ச்சியை தன் நடிப்பிலும், கள்ளமற்ற சிரிப்பிலும் கொண்டு, நடிகை ராதிகாவின் பின்னணிக் குரலுக்கு இசைவாகவே ராதாவின் நடிப்பு வெளிப்படுகின்றது. தீபன் (எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாள் வளர்ப்பு மகன் திலீபன்) ரஞ்சனி ஆகிய அறிமுகங்கள் கூட சோடை போகவில்லை. விடலைக் காதலைக் கண் முன் கொண்டு வருகின்றார்கள். படம் முடிந்த பின்னரும் வடிவுக்கரசியின் மேல் ரசிகன் கொள்ளும் ஆத்திரம் தணியவில்லை என்பது அந்தப் பாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றி. ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் முழுப்படத்திலும் வந்தது போல இருக்கின்றது என்னம்மா கண்ணு சத்தியராஜ்.

இப்படத்தின் இயக்கத்தில் அவதானித்த சில சிறப்பான விடையங்கள்.
சத்யராஜ் துடுப்புக் கட்டையால் அடிவாங்கி கடற்கரை ஓரமாய் இறந்து கிடக்கையில் கூட்டத்தின் நடுவே அவரின் முன்னாள் காதலி வடிவுக்கரசி அதிர்ச்சியால் உறைய, கூடி நிற்கும் மக்களை போலிஸ் விரட்ட கடற் தண்ணீர் தெறிக்க அது வடிவுக்கரசி நெற்றியில் தெறித்து அவரின் குங்குமத்தை மெல்லக் கரைக்கின்றது. வடிவுக்கரசியை ஏமாற்றிய காதலன் அவர் தான் என்பதை சிம்பாலிக்காக அது காட்டுகின்றது.இதை ஜிராவிடம் சொல்லும் போது அவர் சொன்னார் விதவையாகும் போது அவளின் குங்குமம் கைபட்டு அழிக்க வேண்டியது, ஊர் மக்கள் கால் பட்டு அழிப்பது போல் காட்டப்படுகின்றது என்ற சிறப்பைக் காட்டினார்.

இன்னொன்று, தன் காதலி இசக்கியின் மறைவுக்குப் பின் தன் வாழ்வில் சுமை தாங்க வந்தவளின் மரணத்தின் நினைவாக எழுப்பியிருக்கும் சுமைதாங்கியில் காலம் தள்ளும் காதலன்.

இன்னொரு உதாரணம், சிவாஜியின் வெள்ளி நரைமயிர் ஒன்றில் ராதா கோத்த பாசிமணி மாலையை ராதா ஜெயிலுக்கு போகும் போது கடல்மணலில் தெரியாமல் தொலைக்கின்றார். காலம் பல கடந்து மரணப்படுக்கையில் இருக்கும் சிவாஜியைப் பார்க்க வரும் ராதாவுக்கு அதுவரை தான் பாதுகாத்த அந்தப் பாசிமணிமாலையைத் தன் உள்ளங்கை விரித்துக் கொடுத்துவிட்டு மூச்சை விடுகின்றார் சிவாஜி. ஒரு சில நிமிடங்களில் ரயிலேறி எங்கோ போக நினைக்கும் ராதா ரயிலிலேயே இறக்கின்றார். அந்தப் பாசிமணி மாலை கீழே விழுகின்றது.

வைரமுத்துவின் கவி வரிகள் இப்படத்தில் பாடல்களின் தேவையை உணர்த்துகின்றது. வெறும் இடைச்செருகலாக வைக்காமல் காட்சிகளின் தேவையைப் பொறுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல்களில் தேவையற்ற "மானே", "தேனே", "மயிலே" போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் இல்லை. "வெட்டி வேரு வாசம், விடலைப்புள்ள நேசம்" இப்பாடலில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் வெட்டிவேரின் வாசம் போல தன் உள்ளத்தில் மறைவாகப் புதைந்திருக்கும் பரிசல்காரியின் நேசத்தைக் காட்டுகின்றது. "பூங்காத்து திரும்புமா" இப்பாடலில் வரிக்கு வரி பெரியமாப்பிளையின் உள்ளக் கிடக்கையும், அதற்கு பரிசல்காரியின் ஒத்தடமான வார்த்தைகளும் கவியாகப் பிறக்கின்றன. பூங்காத்து திரும்புமா பாடலுக்கெல்லாம் இந்த ஒரு பதிவு பத்தாது. ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதைய்யா பாடல் காட்சியின் நீளம் கருதி வெட்டப்பட்டிருக்கின்றது. அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன் பாடலில் ஒரு வசனம் ஆபாசமாக இருக்கின்றது என்பதால் படத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது. இசைத்தட்டுக்களில் அப்படியே இருக்கின்றது. இங்கே அதையும் தந்திருக்கின்றேன். "ஓடிவா ஓடப்பக்கம் ஒளியலாம் மெதுவாக" என்ற காதலன் கூற்றுக்கு காதலி சொல்லும் பதில் "அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக" என்று படத்தில் வரிகள் மாற்றப்பட்டிருக்கின்றது.

இசைஞானி இளையராஜா, இவரைப் பற்றி நான் என்ன சொல்ல. ஆரோக்கியமான கூட்டணியும், கதைக்களனும் இருந்தால் ராஜாவுக்கு தனி களையே வந்து விடும். அதுவும் தன் நண்பனின் உயிர்த்துடிப்புள்ள படைப்பு, கூடவே வைர வரிகள் என்று இருக்கும் போது ராஜா மட்டும் ஓய்ந்து விடுவாரா?

முதல் மரியாதை போன்ற உயரிய படைப்பில் சிவாஜி, ராதா, பாரதிராஜா, ஆர்.செல்வராஜ், வைரமுத்து என்று அவரவர் பங்கைச் செய்து தனித்தன்மையோடு இருந்தது போல ராஜாவின் இசையிலும் தனித்துவம் இருக்கின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார். ஆனால் முதல் மரியாதை தெலுங்கு பதிப்பான "ஆத்ம பந்துவு" வில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தை இப்பாடல்களைப் பாடுவதற்கு கொடுத்தது நெருடலாக இருக்கின்றது. அப்பாடல்களைக் கேட்க
இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.


இம்முறை வழக்கமாக கொடுக்கும் பின்னணி இசையோடு காட்சிகளோடு மிளிரும் முதல் மரியாதை காட்சியும் கானமும் சிறப்பாக அனைத்துப் பாடல்களோடும் இடம்பெறுகின்றது. இதில் ராஜாங்கத்தின் பெருமையை என் எழுத்துக்களை விட அவரின் இசையே மெய்ப்பிக்கும்.

"மீண்டும் ஒரு கிராமத்து ராகத்தை எனது பரிவாரங்களோடு பாட வருகின்றேன்" பாரதிராஜ குரலோடு முகப்பு இசையும் இளையராஜா குழுவினர் பாடும் "ஏ கிளியிருக்கு" என்ற பாடலும், கூவும் குயில், புல்லாங்குழல் இசை பரவ வருகின்றது



"ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல், வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டு தான் இருக்கும், அப்படி ஒரு சோகராகத்தைத் தான் சுரம் பிரித்தேன், அதைத்தான் உங்கள் பார்வைக்குப் படம் பிடித்தேன்" என்று சொல்லும் பாரதிராஜாவின் அறிமுகம்




பரிசல்காரியும் அவள் தந்தையும் கிராமத்துக்கு வருதல்



பெரியமாப்பிளையின் மனைவி தன் மூக்கைச் சிந்திய கையால் அவருக்கு உணவு பரிமாறுதல். இந்த ஒரே காட்சியில் அவளின் குணாம்சம் காட்டப்படுகின்றது.



வயற்கரையில் பெண்களைச் சீண்டிப் பாட வைக்கும் பெரியமாப்பிளை, தொடர்ந்து வரும் தாலாட்டு




பெரியமாப்பிளை குருவியைப் பார்த்து "ஏ குருவி" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு




பரிசல்காரி பெரியமாப்பிளை மனைவியின் கண்ணிற் படாமல் ஓடுதல்




கோழிக்கூட்டில் அடைபட்ட பரிசல்காரியை காப்பாற்ற நினைத்த பெரியமாப்பிளை மனைவியிடம் அகப்படல்




"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி




மனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் "பூங்காத்து திரும்புமா" கூடவே "ராசாவே வருத்தமா" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது



பரிசல்காரியின் சவாலுக்கு முகம் கொடுக்க பெரிய மாப்பிளை இளவட்டக் கல்லை தூக்கும் முயற்சி, தோல்வியில் முடிகின்றது



பரிசல்காரியிடம் செருப்பு தைப்பவன் பெரியமாப்பிளையின் சோகக்கதையைச் சொல்லுதல், வசனம் இன்றி இசை மட்டும் உடுக்கை ஒலியோடு



விடலைப் பருவக்காதலர்கள் பேசும் காதல் மொழி, நாயனத்தோடு முடிகின்றது



பெரியமாப்பிளையும், பரிசல்காரியும் போட்டிக்கு மீன்பிடித்தல், இருவரும் சேர்ந்து முயற்சி செய்யும் போது வரும் மீன் குவியலோடு பின்னணி இசை, கூடவே"என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல"



பெரியமாப்பிளை ஆசையோடு அவள் ஆக்கி வைத்த மீன் சோறு சாப்பிடுதல்



சோகத்தோடு உட்கார்ந்து புல்லாங்குழல் இசைக்கும் காதலனுக்கு நீரில் அள்ளிய நிலாவைத் தண்ணீரில் போட்டுக் காட்டுகிறாள் காதலி. "அந்த நிலாவாத்தான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக" பாடல் ஒலிக்கின்றது. வைரமுத்து இப்படி முன்னர் விளக்கம் சொல்லியிருந்தார். "நிலவை பூமிக்கு வரச்சொல்லிக் காலம் காலமாய் கவிஞர்கள் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லம் கட்டுப்படாத அந்த வட்ட நிலவு இந்தக் காதலியின் கையில் கட்டுப்பட்டதே"



இளவட்டக்கல்லை தூக்கும் முயற்சியில் பெரிய மாப்பிளை வெற்றி, கிட்டார் இசையோடு வரும் காட்சி



காதலி இசக்கிக்கு இன்னொரு மாப்பிளை பார்த்திருப்பதாக செய்தியோடு தன் காதலனைத் தேடி ஓடும் காட்சி



பெரியமாப்பிளையை நேசத்தோடு பாராட்டும் பரிசல்காரி, வயலினில் "பூங்காத்து திரும்புமா" இடையடிகள் ஒலிக்க "வெட்டி வேரு வாசம்" பாட்டு கலக்கின்றது



இசக்கி தன் காதல் புல்லாங்குழல் வாசிக்க தான் ஓடுவதாகப் போட்டி வைத்து துர்மரணத்தை தழுவுதல்



இசக்கியின் தந்தை பெரிய மாப்பிளையிடம் சொல்லும் "ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்". இசக்கியின் காதற்கணவன் புத்தி பேதலித்தல்



இசக்கியின் இறப்புக்குக் காரணமாக இருந்த தன் மருமகனை பெரியமாப்பிளை போலீசில் காட்டிக் கொடுத்தல்



பஞ்சாயத்தில் பெரியமாப்பிள்ளை பரிசல்காரியை வச்சிருக்கேன் என்று சொன்னதை தவறாக நினைக்கவேண்டாம் என்று அவளிடம் சொல்ல, அவள் தன் காதலைச் சொல்லுதல். சோக ராகம், குயிலோசையோடு



பரிசல்காரி பெரிய மாப்பிளையை நினைத்து "ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க"



சொல்லமுடியாத காதலோடு மருகும் சோகராகம்



பரிசல்காரி குயிலு ஊரை விட்டுக் கிளம்ப ஆயத்தமாதல்



பெரியமாப்பிளை பரிசல்காரி குயிலுவைத் தேடி வருதல்


பூங்காத்து திரும்புமா சோக இசையோடு ஜெயிலுக்கு போகும் குயிலு



ஜெயிலில் வைத்து பெரியமாப்பிளை தன் உள்ளார்ந்த காதலை பரிசல்காரி குயிலுவிடம் சொல்லுதல், அதைத் தொடர்ந்து மரணப்படுக்கையில் பெரியமாப்பிளை, அவரின் இறப்பு, குயிலுவின் நிறைவான மரணம் என்று தொடரும் இறுதிக்காட்சிகளின் இசைத் தொகுப்பு



Friday, September 19, 2008

றேடியோஸ்புதிர் 22 - இளவட்டக்கல் ஞாபகம் இருக்கா?


தமிழ் சினிமா வரலாற்றில் விலக்கமுடியாத படம் இது.

பாட்டெழுதியவர் இப்படத்தின் கதையம்சத்தை இப்படிச் சொல்கின்றார்.

அந்த ஊரில் "பெரிய மாப்பிள்ளை" என்பது தான் அவருக்குப் பெயர். அந்த ஊரில் அவர் இட்ட கோட்டை எறும்பும் தாண்டுவதில்லை.

"மானம் பிரதானம்", "ஒழுக்கம் என் வழக்கம்" என்று வாழ்ந்து வருகின்ற மனிதர். ஊரே அவர் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றது ஒரேயொரு ஜீவனைத் தவிர.

அந்த ஜீவன் - அவர் மனைவி தான்.

அவர்களின் பந்தம் பந்தமல்ல - நிர்ப்பந்தம்.

வீட்டில் அவளது ஆதிக்கத்தால் அவரது பூப்போன்ற மனசு பொசுங்கிப் போகிறது.

அவளது புலம்பல் அவரது காதுக்குள் இரும்பைக் காய்ச்சி உஷ்ணத்தோடு ஊற்றுகிறது.

அந்தப் பாலைவனத்திலிருந்து தப்புக்கும் போதெல்லாம் அவர் பாட்டுப் பாடித் திரிவது வழக்கம்.

அப்போது.....
இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்.

பின்னணி இசையும் தந்திருக்கின்றேன். இம்முறை எல்லோருமே மிகவும் இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

puthir22.mp3 - Kana Praba

Monday, September 15, 2008

இசையமைப்பாளர் சங்கீதராஜன்

கடந்த றேடியோஸ்புதிரில் நான் கேட்ட முதற்கேள்வி எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் மலையாளத்திலும் தமிழில் வேறொரு பெயரிலும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் யார் என்று கேட்டிருந்தேன். சரியான பதிலாக அமைவது சங்கீதராஜன்.

நடிகர் தியாகராஜன் தயாரித்து, இயக்கி தானே இருவேடமிட்டு நடித்த "பூவுக்குள் பூகம்பம்" என்ற திரைப்படத்தின் மூலம் 1988 இல் தமிழுக்கு அறிமுகமானவர் சங்கீதராஜன். அந்தப் படத்தில் வரும் "அன்பே ஒரு காதல் கீதம்" அந்தக் காலகட்டத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

சங்கீதராஜன் தொடர்ந்து காவல் பூனைகள், என் கணவர், சேலம் விஷ்ணு, விக்னேஷ்வர், நிலாக்காலம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் கூட தமிழில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார்.

இவர் மலையாளத்தில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளராக எஸ்.பி.வெங்கடேஷ் என்ற பெயரில் இசையமைத்து வருகின்றார். குறிப்பாக கிலுக்கம், மன்னர்மதி ஸ்பீக்கிங், காக்காகுயில், சந்திரலேகா போன்ற பிரபல படங்கள் உட்பட பல படங்களுக்கு இசையமைத்துப் பிரபலம் பெற்றிருக்கின்றார்.

சங்கீதராஜன் என்னும் எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும்
"பூவுக்குள் பூகம்பம்" திரைப்படப்பாடல் "அன்பே ஒரு ஆசை கீதம்"
Anbe Oru - SPB

சேலம் விஷ்ணு திரைப்படத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடும் "மயங்கினேன் மன்னன் இங்கே கொஞ்சம் வா வா"
Mayanginen - SPB

Friday, September 12, 2008

றேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்)

றேடியோஸ்புதிர் வாயிலாக ஒருமுறை உங்கள் எல்லோருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த வார றேடியோஸ்புதிருக்குச் செல்வோம்.

இம்முறை மலையாளப் படங்களின் வீடியோ கிளிப்களை கீழே தந்து அவற்றோடு தொடர்பு பட்ட தமிழ் சினிமா சார்ந்த கேள்விகளைத் தருகின்றேன்.

கேள்வி ஒன்று: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ், தமிழில் வேறு ஒரு பெயரில் இசையமைத்திருந்தார். குறிப்பாக வாரிசு நடிகர் ஒருவரின் அப்பா நடிகர் மூலம் தமிழில் ஒரு பிரமாண்டமான படத்திற்கு இசையமைத்து அப்போது பரவலாகப் பேசப்பட்டவர். இசையோடு சம்பந்தப்பட்ட பெயரே இவரின் பெயர். தமிழில் இவரின் பெயர் எதுவாக இருந்தது என்பதே கேள்வி



கேள்வி 2: கீழே இருக்கும் படத்துண்டு உள்ள 80 களில் வந்த மலையாளப்படம் பின்னர் தமிழில் வேறு நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் வந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். நடிகர் தான் அரசியல் கட்சியில் பிசி. தமிழில் வந்த படத்தலைப்பில் இலக்கம் இருக்கும். இதே இலக்கம் பொருந்திய இன்னொரு தமிழ் படத்தை இன்னொரு பிரபல இயக்குனர் இயக்கியிருப்பார்.
இந்த மலையாள ரீமேக் தமிழ் படத்தின் பெயர் என்ன?





கேள்வி 3: கீழே இருக்கும் திரைப்பாடல் வடக்கும் நாதன் என்ற மலையாளத் திரைப்படத்தில் ரவீந்திரன் என்ற பிரபல இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்டது. இவரின் மகன் தமிழில் பாடகராக இப்போது வலம்வருகின்றார். விஜய் இறுதியாக நடித்த ஒரு தெலுங்கில் இருந்து வந்த படத்தில் (அழகிய தமிழ் மகன் அல்ல) குத்துப் பாட்டு பாடியிருக்கின்றார். அந்த தமிழ்ப் பாட்டு எது?

Tuesday, September 9, 2008

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்

1935 இல் சிவகங்கை மாவட்டம் குன்னக்குடி என்னும் ஊரில் பிறந்து தனது பன்னிரண்டு வயது முதல் 61 ஆண்டுகளாக வயலின் மேதையாகவும், சிறந்ததொரு இசையமைப்பாளராகவும் திகழ்ந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 8, 2008 இல் இவ்வுலகை அகன்று மேலுலகில் இசையாய்க் கலந்தார்.

வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைத்த தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றின் பாடல்கள் அன்னாருக்குச் சமர்ப்பணமாகின்றன. பக்திச் சுவை சொட்டும் தெய்வீக மணம் கமழும் பாடல்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு மருமகள் போன்ற சமூகப்படங்களில் வந்த " Love is a flower" போன்ற மேற்கத்தேயப் பாடல்களுக்கும், தோடி ராகம் என்ற படத்தில் வந்து வெகு பிரபலமான "கொட்டாம்பட்டி ரோட்டிலே ஏ ஹே, குட்டி போற சோக்கிலே" போன்ற ஜனரஞ்சகப் படையல்களைத் தன் இசையமைப்பில் வழங்கிய்வர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.


அந்த வகையில் இந்தப் பதிவில் இடம்பெறும் பாடல்கள்.

1. தஞ்சைப் பெரிய கோயில்
திரைப்படம்: ராஜராஜசோழன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ரி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வரலஷ்மி

2. Love is a flower
திரைப்படம்: மேல்நாட்டு மருமகள்
பாடியவர்: உஷா உதுப்

3. மருதமலை மாமணியே
திரைப்படம்: தெய்வம்
பாடியவர்: மதுரை சோமு

4. மாலை வண்ண மாலை
திரைப்படம்: திருவருள்
பாடியவர்: பி.சுசீலா

5. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திரைப்படம்: திருமலை தென் குமரி
பாடிவர்: சீர்காழி கோவிந்தராஜன்

6. தலைவா தவப்புதல்வா
திரைப்படம்:அகத்தியர்
பாடியவர்கள்: பி ராதா, எம்.ஆர் விஜயா

7. பால் பொங்கும் பருவம்
திரைப்படம்:மனிதனும் தெய்வமாகலாம்
பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா

Kunnakkudi V

Monday, September 8, 2008

எம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்

கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு சம்பவத்தைக் கொடுத்து, குறித்த சம்பவம் மூலம் வந்த பாடலைக் கேட்டிருந்தேன். பலர் சரியான பதிலோடு வந்திருந்தார்கள். அந்த சம்பவக் குறிப்பு ராணி மைந்தன் எழுதிய "எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்" என்ற நூலில் இருந்து பெறப்பட்டதை நன்றியோடு சொல்லிக் கொண்டு அதனை மீண்டும் தருகின்றேன்.

கவிஞர் கண்ணதாசன் ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்காக "மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.

நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.

அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது.

நான் கொடுத்த உபகுறிப்புக்களில் சொன்ன அந்த நூல் நடிகர் சிவகுமார் எழுதிய "இது ராஜ பாட்டை அல்ல".

தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்து இசையமைக்க ஆரம்பித்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமைந்த ஜோடிப்பாடல்களோடு மெல்லிசை மனனர்க்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்த கொடி அசைந்ததும் மற்றும் அமைதியான நதியினிலே ஓடம் ஆகிய பாடல்களுடன் முத்துக்கள் பத்தாக வருகின்றன.

1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
படம்: நெஞ்சிருக்கும் வரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ?
படம்: சுமதி என் சுந்தரி, பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா

3. பூ மாலையில் ஓர் மல்லிகை
படம்:ஊட்டி வரை உறவு, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

4. அமைதியான நதியினிலே ஓடம்
படம்: ஆண்டவன் கட்டளை,பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
படம்: பார்த்தால் பசி தீரும், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
படம்: ராஜபார்ட் ரங்கதுரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
படம்: தங்கப்பதக்கம், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

8. இனியவளே என்று பாடி வந்தேன்
படம்: சிவகாமியின் செல்வன், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

9. நாலு பக்கம் வேடருண்டு
படம்: அண்ணன் ஒரு கோவில், பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

10. நினைவாலே சிலை செய்து
படம்: அந்தமான் காதலி, பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

Sivaji MSV combo

Friday, September 5, 2008

றேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்டு?


வழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.

நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.

அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது. அந்தப் பாடல் எது என்பது தான் கேள்வியே.

உங்கள் விடையை இலகுவாக்க சில உபகுறிப்புக்கள்
1. இந்தப் பாடல் வரும் படத்தின் தலைப்பின் ஒரு பாதி ஒரு பிரபல தமிழ் நடிகர் தானே எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது.
2. இது ஒரு ஜோடிப் பாடல்.

மேலும் இந்தப் புதிரில் சற்று வித்தியாசமாக, கீழே பத்துப் பாடல்களைக் கொடுக்கின்றேன், அதில் ஏதாவது ஒன்று தான் இந்தப் பாடல், ஒருவர் ஒரேயொரு பாட்டை மட்டுமே தெரிவு செய்யலாம்.

1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ?
3. பூ மாலையில் ஓர் மல்லிகை
4. அமைதியான நதியினிலே ஓடம்
5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
8. இனியவளே என்று பாடி வந்தேன்
9. நாலு பக்கம் வேடருண்டு
10. நினைவாலே சிலை செய்து

Monday, September 1, 2008

"காலாபாணி (சிறைச்சாலை)" - பின்னணி இசைத்தொகுப்பு

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட புதிரின் விடையாக வந்தது "காலாபாணி" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.


மோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.

இப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது.

பல இடங்களில் வசனங்களோடு இணைந்து இந்தப் பின்னணி இசை பயணிப்பதால் அவற்றை விலக்கித் தனி இசையை மட்டும் பிரித்துக் கொடுப்பது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இசையைத் தனியே முன்னுறுத்திய முக்கியமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இங்கே தருகின்றேன். அனுபவியுங்கள்.



தியாகிகள் கைதிகளாக கப்பல் மூலம் காலாபாணி என்னும் கொடுஞ்சிறை நோக்கிப் பயணித்தல்




காலாபாணி சிறைச்சாலையின் மர்மங்களைத் தேடி வரும் வினீத் தியாகிகளின் சமாதியைக் காணல்




தியாகிகளின் கப்பல் அந்தமான் தீவின் கரையைத் தொடல்



காலாபாணி சிறையில தியாகிகள் நடமாடல்



மோகன்லாலின் மீது தபுவுக்கு வரும் காதல்



சிறையில் இருந்து தப்பித்த பிரபுவின் பழியைத் தானே ஏற்றுத் தண்டனை வாங்கி வரும் மோகன்லால்



மோகன்லால் பிரபு இருவரும் நட்பு பாராட்டுதல்



மோகன்லால் விடுதலையாகின்றார் என்ற செய்தியை தபுவிடம் சொல்லும் வெள்ளைக்கார வைத்தியர்



மோகன்லால் காலாபாணி சிறைச்சாலையில் இருந்த கொடுங்கோலனை அழிக்கத் தருணம் பார்த்தலும், அது நிறைவேறலும்