Pages

Sunday, December 28, 2014

உங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரையிசைப்பாடல் பொதி



2014 ஆம் ஆண்டில் பாடலாகவோ அல்லது படமாகவோ வெளியான இசைப்படையல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லது பாடல்கள் கொண்ட படம் எது என்பதை வைத்து நடத்தும் போட்டி இது.

ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் என்பது நிபந்தனை.

போட்டி முடிவு ஜனவரி 1 ஆம் திகதி வெளியாகும்.
இங்கே கொடுத்த பட்டியல் தரவரிசைப்படி அமைந்ததன்று.


மக்களே இதோ போட்டி முடிவு




மேலதிக படங்களுக்கான வாக்களிப்பு முடிவு

Thursday, December 11, 2014

"மங்கியதோர் நிலவினிலே" நான்கு விதம்


இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளாகும். 
தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி பாரதியின் இந்த நாளில் அவர் எழுதிய "மங்கியதோர் நிலவினிலே" பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.

எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய "ஒரு மனிதனின் கதை" மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க "ஒரு மனிதனின் கதை" என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை "தியாகு" என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.
"ஒரு மனிதனின் கதை" தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய "மங்கியதோர் நிலவினிலே" பாடல். 
இந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது இப்போது பயனை அளிக்கின்றது. இன்று இணையத்தில் காணக்கிடைக்காத இப்பாடலை என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.


பாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலும், பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி போன்ற படங்களிலும் பாரதியின் ஒன்றிரண்டு பாடல்கள் பயன்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும். 

"மங்கியதோர் நிலவினிலே" பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.

திருமணம் படத்தில்
ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்





பாவை விளக்கு படத்தில்  சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்


தேவநாராயணன் குரலில்
https://www.youtube.com/watch?v=6CZMVN9MLpo&sns=em

யார் பாரதி - நெல்லை கண்ணன்  பகிர்ந்த சிறப்பு மிகு உரை

Tuesday, December 9, 2014

"மனசுக்கேத்த மகராசா"வில் இருந்து "தேனிசைத்தென்றல்" தேவா


"மனசுக்கேத்த மகராசா" ராமராஜன் இயக்குநர்  பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.
அப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது.

"மனதோடு மனோ" ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.

ராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் "ஆறெங்கும் தானுறங்க" (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க" பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய "ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே "பாடலும் கூட.

மனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.

"மனசுக்கேத்த மகராசா" படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர் 
தீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து "மண்ணுக்கேத்த மைந்தன்" திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற "சிந்தாமணிக்குயிலே" (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய "ஓடுகிற வண்டி ஓட", "கண்ணில் ஆடும் நிலவே" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். "மண்ணுக்கேத்த மைந்தன்" படத்தின் பாடல்கள் "வைகாசி பொறந்தாச்சு" படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை. 

ராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.

சினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) - தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்)  அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் "மனசுக்கேத்த மகராசா" வில் தொடங்கி "வைகாசி பொறந்தாச்சு" தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உணமையில் இந்தப் பதிவு எழுத முன்னர் மனசுக்கேத்த மகராசா படத்தில் இருந்து "முகமொரு நிலா" என்ற பாடலைப் பற்றித் தான் எழுதுவதாக இருந்தது. அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.
இதோ அந்தப் பாடல் 



Tuesday, December 2, 2014

பாவலரு பாட்டு


வழக்கமாக நடத்தும் ராஜா இசையில் கோரஸ் பாடல்கள் போட்டிக்காக இரு மாதங்களுக்கு முன்னர் எடுத்து வைத்த பாட்டு "பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு". ஆனால் ஒவ்வொரு வாரமும் வேறு பாடல்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது இந்தப் பாடல் ஒலித்துணுக்கு மட்டும் அமைதியாக இருந்தது. ஏனோ திடீரென்று நேற்றைய போட்டிக்காக இந்தப் பாடலைப் பகிர வேண்டும் என்று நினைத்துப் போட்டியிலும் பகிர்ந்து கொண்டேன்.

சில மணி நேரங்கள் கழித்து பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவாவின் ஃபேஸ்புக்கில் இன்று டிசெம்பர் 2 ஆம் திகதி பாவலர் வரதராஜனின் நினைவு தினம் என்று பகிர்ந்தபோது எனது எண்ண அலையின் ஒற்றுமையை நினைத்துக் கொண்டேன். இது போலவே ஏதாவது ஒரு பாடலை நினைக்கும் போது அதைப் பற்றி யாராவது பேசுவதோ அல்லது வானொலி வழியாக எதேச்சையாக அதே பாடல் அந்த நேரம் ஒலிபரப்பப்படும் அதிசயமும் நிகழ்வதுண்டு. இம்மாதிரி ஒத்த உணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் சகோதரர் கங்கை அமரனில் இருந்து இன்றைய தலைமுறை வரை ஏதோவொரு வகையில் சினிமாவோடு சம்பந்தப்பட்ட துறையில் இயங்குகிறார்கள். விதிவிலக்காக இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் இந்தத் துறையில் நேரடியாக இயங்காத குறையைப் பல வடிவங்களில் தீர்த்து அவரை நினைப்பூட்டுமாற் போலச் சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

அவற்ற்றில் ஒன்று "பாவலர் கிரியேஷன்ஸ்" இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக இளையராஜாவின் இன்னொரு சகோதரர் மறைந்த ஆர்.டி பாஸ்கர் அவர்களே பெரும்பாலும் தயாரிப்பாளராக இயங்கிய படங்கள் வந்திருக்கின்றன. 
பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் இன்னும் ஒரு படி சுவை கூடிய பாடல்கள் இருப்பது போலத் தோன்றும். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 

பாவலர் வரதராஜன் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். பிரச்சார மேடைகளே இசைஞானியின் ஊற்றுக் கண்ணாய் அமைந்தவை. பாவலர் வரதராசன் கவிதைகள் கவிதா வெளியீடாக வந்திருக்கிறது. அதைவிட இன்னொரு சுவாரஸ்யம் ஒன்றுள்ளது.
"இதயக் கோவில்" திரைப்படத்தில் வெளிவந்த "வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்" என்ற பாடல் அவரின் கவிதை ஒன்றை அடியொற்றியே படத்துக்காகச் சிற்சில மாற்றங்களோடு திரைப்பாடல் ஆனது. இந்த மூலக் கவிதையை இளையராஜாவின் நூலொன்றில் (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது?) வாசித்த ஞாபகமுண்டு.

கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பிடித்த "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடல் பாவலர் வரதராஜன் பெயரிலேயே வெளியானது. அந்தக் குறிப்பு எல்.பி ரெக்கார்ட்டிலும் பதிவாகியுள்ளது. ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் போது கங்கை அமரன் முன்னிலையில், இந்தப் பாடலை எழுதியது கங்கை அமரன் என்றும் பாவலர் வரதராஜன் அவர்களைப் பெருமைப்படுத்தவே அவர் பெயர் உபயோகிக்கப்பட்டது என்றும் சொன்னார்.

பாவலர் வரதராஜனின் மகன்களில் எனக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே தன் இசையால் ஆட்கொண்ட இளையகங்கையைத் தான் முதலில் தெரியவந்தது. "ஆகாயம் கொண்டாடும் பூபாளமே" என்ற அற்புதமான பாடலை "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" படத்துக்காக இசையமைத்தவர். இளைய கங்கை குறித்துப் பிறிதொரு சமயம் தனிப்பதிவாகத் தரவுள்ளேன். இன்னொரு புதல்வர் பாவலர் சிவா இசைக்கலைஞராகவும், முக நூல் நட்பிலும் இருக்கிறார்.

பாவலர் வரதராசன் அவர்களின் பாடல்கள் இன்னும் பல திரைப்படப் பாடல்களாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். குறிப்பாக அவரின் எழுச்சிக் கவிதைகள்.

"எலே படிக்கிறதெல்லாம் பாட்டாயிருமாய்யா பாவலர் வரதராசன் பாட்டைக் கேட்டாக் காட்டுப் புள்ளைக்குக் கூடப் புத்தி வந்திரும்" என்ற பிரபலமான வசனம் "என் ராசாவின் மனசிலே" படத்துக்காக ராஜ்கிரண் குரலில் வந்தது ஞாபகமிருக்கும்.
"சின்னப் பசங்க நாங்க" படத்தில் பாவலர் வரதராசன் மன்றம் என்ற ஒன்றை நாயகன் முரளி சக நண்பர்களோடு நடத்துவதுபோலக் காட்சி இருக்கும்.

 பாவலர் வரதராஜன் என்ற பெயரை 90 களில் வெளிவந்த கோஷ்டி கானங்களில் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக அமைவது தான் இந்த "பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு"
அடடா ஒரு பாட்டு என்னை எங்கே எல்லாம் கூட்டிக் கொண்டு போய் விட்டது :-) சரி மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.
http://www.youtube.com/watch?v=iFqDmdwjmxE&sns=em

புகைப்படம் நன்றி : மாலை மலர்