Pages

Sunday, February 27, 2022

ஹிருதயம்❤️

இன்னொரு கல்லூரிக் காதல், ஆனால் எத்தனை கல்லூரிக் காதல் கதைகள் வந்தாலும் ஒரு பெரிய கூட்டணியோடு, மிகப் பெரும் எதிர்பார்ப்பும் சேர்ந்து கொண்டால் வெற்றிக் கணக்கு ஓரளவு தீர்மானிக்கப்பட்டு விடும். ஹிருதயமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

மோகன்லால் மகன் பிரணவ், இன்றைய காலத்து இளசுகளின் கனவுக்கன்னி கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் வினீத் சீனிவாசன் என்ற அடையாளத்தோடு விளம்பரப்படுத்தப்பட்டதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிப் போனது.

ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே தட்டத்தின் மரயத்து” வழியாகத் தன் மாயா ஜாலங்களைக் காட்டியவருக்குப் புதிதாக ஏதும் காட்ட வழி தெரியவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது.

அந்தப் படம் குறித்து என் பதிவு

http://www.radiospathy.com/2012/09/blog-post.html

மூன்று மணி நேரத்தை எட்டிப் பிடிக்கும் படம், ஆனால் சோர்ந்து விடாமல் பார்க்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தயார்படுத்தி விடுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் தியாகராஜ பாகவதர் காலம் போல மொத்தம் 15 பாடல்கள். என் அனுபவத்தில் இந்தப் பாடல்களை முன்னர் கேட்டிராத போதும் காட்சிகளோடு தானாக வந்து விழும் போது ரசித்து அனுபவிக்க முடிகின்றது. அந்த வகையில் இசைமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இயக்குநர் வினீத் சீனிவாசனின் மனவோசையாகப் பயணிக்கிறார்.

காதல் படம் என்றால் தயாரிப்பாளர் கணக்கில் குறைந்தபட்ச உத்தரவாதமாவது இருக்கும் என்றெல்லாம் ஒரு காலம் இருந்தது.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் உருகி உருகிக் காதல் கொள்ளும் படைப்புகள் வருவதில்லையே என்றதொரு கருத்தரங்கைப் படைப்பாளிகள் பார்வையில் காதலர் தினச் சிறப்புப் பகிர்வாக ஆனந்த விகடன் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

வாட்சாப் நம்பரை வாங்கி காதலித்தோமா, காதலை முறித்தோமோ என்ற நிலையில் இருக்கும் உலகத்தில் ஆழமான மன உணர்வுகளைக் காட்சிப்படுத்தினாலும் ஏற்கும் மன நிலையில் ரசிகன் இருப்பானா என்றதொரு ஆதங்கத்தை அந்தப் பகிர்வில் இயக்குநர்கள் வெளியிட்டிருந்தார்கள். 

ஹ்ருதயம் படத்தின் கதையும் அதனாலோ என்னமோ யாகூ சாட் காலத்துக்குப் போய் விடுகிறது.

இந்தக் கல்லூரிக் காலத்தைப் பற்றி இடைக்காலத்தில் “அர்ஜூன் ரெட்டி”யும் வந்து போய் விட்டதால், நல்ல பிள்ளையாக அதீதமாக போதை, குடி, கும்மாளம் என்று காட்டாமல் அதைத் தன் மென் சுபாவத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் வினீத். ஒளிப்பதிவாளரும் (விஸ்வஜித்) இரண்டு கதைக்களிலும் தோளோடு தோள்.

வினீத் சீனிவாசன் நம்மாள், அதாவது சென்னையில் வளர்ந்து பையன் என்பதால் ஏகத்துக்கும் தமிழர்களை உச்சியில் ஏற்றிக் கொண்டாடுக்கிறார். 

ஹிருதயம் படத்தின் இடைவேளையோடு முடியும் கல்லூரிக் காலத்தோடு நிறைவு செய்திருந்தால் அது ஒரு அழகான ஹைக்கூ போல இருந்திருக்குமோ என்று தோன்றியது. அவ்வளவுக்கு இயல்பான கதையோட்டம். இடைவேளையைத் தொடர்ந்து வரும் அடுத்த காதல், கல்யாணம், ஊடல், கூடல் எல்லாம் ஓரளவு ரசிக்க வைத்தாலும் முன்பாதியின் நியாயம் இல்லை.

ஆகவே இடைவேளைக்கு முன் “அட்டகத்தி” போலவொரு ரஞ்சித் தனமாகவும், இடைவேளைக்குப் பின் திணறும் கெளதம் வாசுதேவ மேனன் படம் போலவும் பட்டது.


பிரணவ் மோகன்லாலே எல்லாக்காட்சிகளிலும் பயணிப்பதால் ஏகத்துக்கும் பொறுப்பைச் சுமந்திருக்கிறார். லட்டு மாதிரி அவரின் ஆரம்ப காலத்தில் இப்படியொரு படம். நல்லவிதமாக அதை தக்க வைக்கிறார்.

சக மாணவனை பண்ணைப்புரம் இளையராஜா என்று அறிமுகப்படுத்துவதாகட்டும், தமிழர்கள் ஒன்றும் மலையாளிகள் போலப் ப்ளான் போட்டு வாழ்றதில்லை என்று குட்டு வைப்பதாகட்டும்,படத்தின் முற்பாதியே கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப்படம் பார்த்த உணர்வு தான்.

“உன்னோட இலட்சியம் என்ன?” என்று கேட்கவும், 

“என்னோட அப்பா, அம்மா நிம்மதியா இருக்கணும்” என்ற செல்வாவின் வார்த்தைகளின் நியாயம் நெகிழ வைத்தது.

பிரணவ் & கல்யாணி சந்திப்போடு இருவர் மீதான எதிர்பார்ப்பையும் பொய்க்க வைத்து விடுகிறது. 

ஆனால் ஆனால் ஆனால் 

இந்தப் படத்தில் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டுப் போய் விடுகிறார் தர்ஷணா ராஜேந்திரன். இடைவேளையைத் தொடர்ந்து வரும் கதை நீட்டலே அவருக்காகத் தான். 

காதல் மெல்ல முளை விடும் தருணத்தில் எழும் வெட்கப்பூ, அப்படியே எதிர்த்திசையில் தன் ஏமாற்றத்தின் ஆற்றாமையைக் காட்டும் விதம், பின்னிய கூந்தலை அவிழ்த்து விட்டுச் சிலிர்க்கும் சிலிர்ப்பு என்று எவ்வளவுஅழகாகத் தன் உணர்வுகளை இயல்பாகக் கடத்துகிறார் ஆஹா. இந்தப் படத்தை மீண்டும் தர்ஷணாவுக்காகப் பார்த்தால் அவரின் கோணத்தில் கதை நகருமாற் போல.

இன்னும் நிறைய வாய்ப்புகளை அள்ளட்டும் ஹிருதயத்திலும் "தர்ஷணா" ஆகிய தர்ஷணா.



தான் ஆழமாக நேசித்தவனின் நம்பிக்கைத் துரோகம் தந்த வலியை அவ்வளவு சீக்கிரம் தூக்கியெறிய முடியாத நிலையில் எழும் விரக்தியும் கோபமும், மெல்ல மெல்ல யாருடைய சமாதான வார்த்தைகளும் இல்லாமல் தானாகவே மனச் சமாதானம் செய்து கொண்டு அவன் எந்தத் தூரத்தில் இருந்தாலும் தனக்கானவன் என்று காத்திருந்தவளின் கதை தான் “ஹிருதயம்” என்று பொட்டில் அடித்தாற் போல நமக்கு இன்னொரு திசையில் கொண்டு போய் நிறுத்தி விடும் போக்கு, அதுதான் இந்தப் படத்தை நம் ஹிருதயத்திலும் இடம் பிடிக்க வைக்கிறது.

கானா பிரபா

27.02.2022


Saturday, February 26, 2022

பயணங்கள் முடிவதில்லை ❤️ 40 ஆண்டுகள்



பயணங்கள் முடிவதில்லை ❤️ 40 ஆண்டுகள்
ஒரு எதிர்பாராத வெற்றி தமிழ் சினிமாவின் போக்கையே நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைத்தது.
ஏற்கனவே “நெஞ்சத்தைக் கிள்ளாதே”, “கிளிஞ்சல்கள்” வழியாக (மூடுபனி துணை வேடம்) வெற்றிகளைக் குவித்த நடிகர் மோகனுக்கு மைக் ஐக் கொடுத்து அடுத்த பத்தாண்டுகளுக்குக் குறைவாக “மைக்” மோகனாக்கியது.
அதுவரை கே.பாக்யராஜோடு ஒட்டிக் கொண்டிருந்து, சுயம்புவாகத் திரைத் தொழிலைக் கவனித்துக் கற்றுக் கொண்டு
“ஒருத்தி மட்டும் கரையினிலே” படத்துக்குக் கதை, வசனம், ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரு பெரும் வெற்றிக் கனியைச் சுவைக்க வைத்து, வெள்ளி விழா இயக்குநராகப் பத்தாண்டுகள் வைத்திருந்தது. பாக்யராஜ் உதவி இயக்குநராகக் குடியிருந்த குடியிருப்புப் பகுதியை நினைவுபடுத்தும் காட்சியை கவுண்டமணி காட்சியாக இணைத்திருப்பார்.
“ஒருத்தி மட்டும் கரையினிலே” படத்திற்கு இசை கங்கை அமரன். அது போலவே எண்பதுகளின் வெள்ளி விழா நாயகன் ராமராஜன் இயக்குநராக அறிமுகமான “மண்ணுக்கேத்த பொண்ணு” படத்துக்கும் இசை கங்கை அமரன்.
“பயணங்கள் முடிவதில்லை” படத்தில் “தோகை இளமையில்” பாடலைப் பார்த்து ரசிக்கும் முக்கியஸ்தராக கங்கை அமரன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்.
“பயணங்கள் முடிவதில்லை” படத்துக்காக முதலில் ஒப்பந்தமானவர் நடிகர் சுரேஷ். ஆனால் ஒரு விபத்தின் காரணமாக அவரை வைத்துப் படமாக்காத சூழலில், ஸ்டில்ஸ் ரவி அவர்களின் பரிந்துரையில் நடிக்க வந்தவர் மோகன். அந்தத் திடீர் அதிஷ்டமே அவரைத் தொடர்ந்தும் தமிழ் சினிமாவில் நிலைக்க வைத்தது.
இந்தப் படத்தின் கதையைத் தானே எழுதியதாக பி.வாசு சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெரிய நிறுவனங்கள் கதையைத் தம் இலாகா பெயரிலேயே போடுவது வேறு மொழிகளில் எடுப்பதற்கான உரிமைச் சிக்கலையும் குறைக்கும். மதர் லேண்ட்ஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரிப்புத்துறைக்கு அடியெடுத்து வைத்து அந்தக் காலத்தில் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க இந்தப் படமும் தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்குப் பிள்ளையார் சுழி போட்டது. முழுத் திருப்தி இல்லாமல் படத் தயாரிப்புக்கு வந்தவருக்கு ஒரு பெரிய நம்பிக்கை விதையைக் கொடுத்தது இந்தப் படம்.
இந்தப் படத்தில் பிரபல திரைக் கதாசிரியர் சிறுமுகை ரவி இணை இயக்குநராக இயங்கினார்.
“பயணங்கள் முடிவதில்லை” வெள்ளி விழாக் கண்டதோடு
வட சென்னை மகாலட்சுமி தியேட்டரில் ஒரு வருடம் ஓடிய சாதனை படைத்தது.
இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி என்ன சொல்ல? ஒரு பதிவு தானும் போதுமோ?
பாடகர்கள் எஸ்.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
என்ற இருவரைத் தவிர யாரையும் காணாத பிரமிப்பு இந்தப் படம் பார்த்த நாளில் கொண்டிருந்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.
“இளைய நிலா பொழிகிறதே” பாடல் இந்த நாற்பது ஆண்டுகள் இன்னும் நவீனம் கலையாத இசை ஓவியம்.
வைரமுத்துவுக்கு இளைய நிலா பொழிகிறதே, சாலையோரம், தோகை இளமயில் என்று மூன்று பாடல்கள்.
ராக தீபம் ஏற்றும் நேரம், மணி ஓசை கேட்டு எழுந்து என்று கவிஞர் முத்துலிங்கத்துக்கு இரண்டு,
அதுபோலவே ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா என்று ஒரு குத்துப்பாட்டு, வைகறையில் வைகைக்கரையில் என்று ஒரு சோக ராகம் என்று கங்கை அமரனுக்கு என்று முத்தான ஏழு பாடல்கள்.
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் இந்த ஏழு பாடல்களில் ஒன்றைத்தானும் தவிர்க்க முடியுமா?
பயணங்கள் முடிவதில்லை பாடல்கள்
இசைஞானி இளையராஜாவை வட நாட்டிலும் தன்னுடைய முகவரி இல்லாமல் ஆக்கிரமிப்புச் செய்தவர் என்பதற்கு “இளைய நிலா”வும் இன்னோர் உதாரணம்.
Neele Neele Ambar Par
மட்டுமல்ல ஈராயிரங்களில் வெளிவந்த ஹிந்தி மியூசிக் ஆல்பங்களிலும் இந்த இசை திருடப்பட்டு ஹிந்திக்காரரால் பயன்பட்ட வரலாற்றை அப்போது கொடுத்திருந்தேன். (பல வீடியோக்கள் இப்போது அழிக்கப்பட்டு விட்டன)
இசை கற்கும் மாணவருக்குப் பாலபாடமாக ஏதாவது திரையிசைப்பாடல் இலக்கணமாக இருக்கும். நான் கீபோர்ட் பழகும் போது “யாழோசை” கண்ணன் மாஸ்டர் “நிலவு தூங்கும் நேரம்” (குங்குமச் சிமிழ்) பாட்டைத்தான் எடுத்த எடுப்பில் வாசிக்கப் பழக்குவார்.
அது போலவே இந்த நாற்பது ஆண்டுகளாக கிட்டார் இசையில் நீக்கமற இருக்கும் ஒரு பாட்டு எதுவென்றால் அது
“இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே.....”
பயணங்கள் (என்றும்) முடிவதில்லை
சாகாவரம் பெற்றது


கானா பிரபா
26.02.2022

Sunday, February 20, 2022

மலேசியா வாசுதேவன் அண்ணன் செம்மண்ணின் ஈரம் போல் ❤️

“காணும் கனவுகள்.....

நீ கொண்ட ஆசை நினைவுகள்

காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்

என்னென்ன சொல் இந்நாளிலே

நிறைவேற்றுவேன்......

அரவணைத்து ஆறுதல்படுத்தும் சுகத்தை கேட்கும் தோறும் ஒருவரால் கொடுக்க முடியும் என்றால் அது மலேசியா வாசுதேவனால் நிறையச் சந்தர்ப்பங்களில் விளைந்திருக்கிறது. ஆகத் திறமான சாகித்தியம் கொட்டும் பாடகர் நிறையப் பேர் குரலைக் கேட்டிருக்கிறோம், அதில் அவரின் திறனை மெச்சியிருக்கிறோம். ஆனால் நம் காலத்தவர் வாழ்வுக்கு மிக நெருக்கமாக இருந்த மலேசியா வாசுதேவனின் அணுக்கம் இன்னும் நெருக்கமானது. 

அதனால் தான்

“செம்மண்ணிலே தண்ணீரை போல் 

உண்டான சொந்தம் இது

சிந்தாமணி ஜோதியை போல் 

ஒன்றான பந்தம் இது”

கேட்கும் தோறும் இல்லாத தங்கை பந்தத்தையும் இருப்பது போல எண்ண வைத்து விடுகிறது.

அச்சொட்டாக அண்ணனின் குரலாகப் பொருந்தி விடும் மகத்துவம் எங்கள் மலேசியா அண்ணனுக்கு,

“ஒரு தங்கரதத்தில்” கேட்கும் போது உணரப்படும்.

“தோப்பிலே இருந்தாலும்

ஒவ்வொரு மரமும் தனித்தனிதான்

கூட்டத்தில் இருந்தாலும்

மனுஷன் எவனும் தனிமரந்தான்!

சமுதாயம் என்ன போடா

வீடு வாசல் என்ன போடா”

என்று தத்துவத்திலும் கை தேர்ந்த குரலாய் அவரே.

மலேசியா வாசுதேவன் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்ற விநோதமான பாட்டோடு பிரபலமானவர். 

துள்ளிசைப் பாடல்களைக் கொடுக்கும் போது கூட எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் (வச்ச பார்வை தீராதடி பாடல் அவரின் உச்சம் என்பேன்) இவர்களோடு மலேசியா வாசுதேவன் என ஒவ்வொருவரும் தனிப்பாணி உண்டு.

எண்பதுகளில் மலேசியா வாசுதேவன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குரலாக அச்சொட்டாக அமைந்த போது ரஜினிக்கு துள்ளிசைப்பாடல்கள் என்று வரும் போது மலேசியாவும் சிறப்பாகக் கை கொடுத்தார். ஆசை நூறு வகை பாடல் ரீமிக்ஸ் யுகத்திலும் கலக்குகின்றது. 

ஒரு பாடலை வரிக்கு வரி ஒப்புவிக்காமல் கேக் இற்கு ஐசிங் தடவியது போல தன் சிரிப்பாலும் கனைப்பாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தப் பாடலை மெருகேற்றுவது போலவே மலேசியா வாசுதேவனின் இந்த "ஹேய்" என்ற உற்சாகத் துள்ளல்.

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி என் கண்மணி பாடலை (தர்மத்தின் தலைவன்) பாடலை மலேசியா வாசுதேவன் குரலுக்காக மீண்டும் மீண்டும் ஒலிக்க விட்டுக் கேட்ட காலமெல்லாம் உண்டு. 

“ஆஆஆடி பாப்பமா” என்றெல்லாம் கொடுக்கும் எள்ளலை மனதுக்குள் சிரித்துக் கொண்டே கேட்பேன்.

அதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலை முந்திக் கொண்டு கேட்டது " ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்" அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே "இதப்பார்ரா" என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் 

மலேசியா வாசுதேவன் எள்ளல், வயோதிபத் தொனி, கலாய்ப்பு என்று எல்லாவிதமான பரிமாணங்களிலும் பரிணமிக்க முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் மாமனுக்கு மைலாப்பூரு தான்

அண்ணன். 

மலேசியா வாசுதேவனுக்குத் துள்ளிசைப் பாடல் உலகிலும் ஒரு இடமுண்டு. ஆனால் அங்கே தான் அவர் வெகு சுதந்திரமாக ஆர்ப்பரிப்பார். 

காதல் பாடல்களிலோ, உணர்வு மேலோங்கும் குடும்பத்துப் பின்னணி ஒலியோ அவர் மிகக் கவனமாக அடியெடுத்துப் பாடுவது போல இருக்கும். அநாசயமாகத் தன் வரிகளைக் கொட்டாது இருந்த இடத்தில் அப்படியே அந்த வரிகளில் ஒரு உணர்வுக் குவியலை எழுப்பி விடுவார். 

“தென்றலே ஆசை கொண்டு

தோகையை கலந்ததம்மா

தென்றலே ஆசை கொண்டு

தோகையை கலந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட

பூவை நீ கண்ணே

மா அம்மம்மா , நெஞ்சில்

தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்”

அந்தக் கடைசி ஈரடிகளைக் கேட்கும் போது மெல்லிய நெகிழ்வைக் கொடுத்து எங்களை இளக வைத்து விடுவார்.

“ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக

பாடு, பண் பாடு.....,

இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்

கூடு, ஒரு கூடு....,,

என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்....”

“பூங்காற்று திரும்புமா....

என் பாட்டை விரும்புமா....”

T.M.செளந்தரராஜன் குரலோடு ஒட்டிய சிவாஜிக்கு எண்பதுகளின் இன்னொரு குரலாக மலேசியா வாசுதேவன் ஒட்டிக் கொண்டது அவ்வளவு இயல்பானதொன்றல்ல. முதல் மரியாதையை வைத்து ஒரு ஆராய்ச்சியையே செய்து முடித்து விடலாம்.

இந்தப் பக்கம் சிவாஜி இன்னோர் பக்கம் ஆரம்ப கால ரஜினிக்கு அச்சொட்டான குரல் என்று மலேசியா வாசுதேவனுக்கான அங்கீகாரம் கதவைத் தட்டி வந்ததல்ல. இயல்பாக எழுந்தது.

“நீ.....இல்லாத போது

ஏங்கும் நெஞ்சு சொல்லாத கதை நூறு....”

“அலங்கார பொன் ஊஞ்சலே 

அழகாடும் பூஞ்சோலையே 

இளமாதுளை மலைத்தேன் 

சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே .....”

“காலங்கள் மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் பூக்கள்.....”

தோண்டத் தோண்ட ஊற்றெடுக்கும் மலேசியா வாசுதேவனின் ஆரம்ப காலங்கள். 

அப்படியே எண்பதுகளுக்குள் நுழைந்து விட்டால்

“மாறாது இது மாறாது...,”

என்று “கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச” பாடலோடு இன்னொரு குவியல்.

இதெல்லாம் கட்டிய தொகுதி இது.

1. இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது - எஸ்.ஜானகி (சிகப்பு ரோஜாக்கள்)

2. மலையோரம் மயிலே - சித்ரா ( ஒருவர் வாழும் ஆலயம்)

3. கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச - எஸ்.ஜானகி (என் ஜீவன் பாடுது)

4. சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே - சித்ரா (அண்ணனுக்கு ஜே)

5. காலங்கள் மழைக்காலங்கள் - எஸ்.ஜானகி ( இதயத்தில் ஒரு இடம் )

6. மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி எஸ்.ஜானகி (சக்கரைத் தேவன்)

7. குயிலே குயிலே பூங்குயிலே - சித்ரா (ஆண் பாவம்)

8. இள வயசுப் பொண்ணை வசியம் செய்யும் - சித்ரா ( பாண்டி நாட்டுத் தங்கம்)

9. ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில் - எஸ்.ஜானகி (மண் வாசனை)

10. மலர்களே நாதஸ்வரங்கள் - எஸ்.ஜானகி (கிழக்கே போகும் ரயில்)

11. ஆனந்தத் தேன் காற்றுத் தாலாட்டுதே - எஸ்.பி.சைலஜா (மணிப்பூர் மாமியார்)

12. ஆகாய கங்கை - எஸ்.ஜானகி ( தர்ம யுத்தம்) 

13. வெட்டி வேரு வாசம் - எஸ்.ஜானகி (முதல் மரியாதை)

14. தா தந்தன கும்மி கொட்டி - எஸ்.ஜானகி (அதிசயப் பிறவி)

15. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - எஸ்.ஜானகி (தூறல் நின்னு போச்சு)

16. இதயமே நாளும் காதல் (அடுத்தாத்து ஆல்பாட்)

17. பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் ( மைக்கேல் மதன காமராஜன்)

18. ஆத்து மேட்டுல - எஸ்.ஜானகி (கிராமத்து அத்தியாயம்)

19. நீ போகும் பாதையில் மனசு போகுதே - சித்ரா ( கிராமத்து மின்னல்)

20. கம்மாக்கரை ஓரம் கண்ணு ரெண்டும் - சித்ரா ( ராசாவே உன்னை நம்பி)

21. ஆயிரம் மலர்களே - ஜென்ஸி, எஸ்.பி.சைலஜா (நிறம் மாறாத பூக்கள்)

22. ஹேய் மைனா - சித்ரா (மாவீரன்)

23. பனி விழும் பூ நிலவில் - எஸ்.பி.சைலஜா (தைப்பொங்கல் )

24. வான் மேகங்களே - எஸ்.ஜானகி ( புதிய வார்ப்புகள்)

25. ஒன்னப் பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி - உமா ரமணன் ( மல்லு வேட்டி மைனர்)

26. ஆழக்கடலில் தேடிய முத்து - எஸ்..ஜானகி (சட்டம் என் கையில்)

27. ஊருக்குள்ள ஒன்னையும் பத்தி - சித்ரா ( நினைவுச் சின்னம்)

28. சரியோ சரியோ நான் காதலித்தது - எஸ்.ஜானகி ( எங்கிட்ட மோதாதே)

29. சீவிச் சிணுக்கெடுத்து - எஸ்.ஜானகி (வெற்றி விழா)

30. ஏத்தம்மய்யா ஏத்தம் - சித்ரா (நினைவே ஒரு சங்கீதம்)

பெண் ஜோடிக் குரல் இல்லாதத் தனிப் பாடல்கள் 

31. கோடை காலக் காற்றே - பன்னீர் புஷ்பங்கள்

32. பூவே இளைய பூவே - கோழி கூவுது

33. என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள்

34. ஏ ராசாத்தி ரோசாப்பூ - என் உயிர்த் தோழன்

35. வா வா வசந்தமே - புதுக் கவிதை

36. ஊரு விட்டு ஊரு வந்து - கரகாட்டக்காரன்

37. அள்ளித் தந்த பூமி - நண்டு

38. அடி ஆடு பூங்கொடியே - காளி

39. குயிலுக்கொரு நிறம் இருக்கு - சொல்லத் துடிக்குது மனசு

40. பாட்டு இங்கே ராபப்பா - பூவிழி வாசலிலே

“மலையோரம் மயிலே....

விளையாடும் குயிலே...

விளையாட்ட சொல்லித் தந்ததாரு.....”

இசை குறித்த இலக்கண அறிவில்லாத பாமர ரசிகனின் ரசிப்பு என்பது பசித்தவனுக்குக் கிட்டும் சாப்பாட்டுத் தட்டில் இருக்கும் அறுசுவை போன்றது. அது போல இருக்கும் எனக்காகவே வார்த்தது போல இருக்கும் இந்தப் பாட்டைக் கேட்காது நினைத்த மாத்திரத்தில் கூட.

“சிந்துமணி புன்னகையில்

சிந்தி வரும் மெல்லிசையில்

தேடாத ராகங்கள் கேட்கின்றது 

தேனோடு பாலொன்று சேர்கின்றது”

ஓ மை லவ்.......

ஓ மை லவ்.......

ஓ மை லவ்.......

https://www.youtube.com/watch?v=f2yqM4zXltk

அந்தத் தொண்ணூறுகளில் ஈழத்தில் இருந்து தமிழகத்தின் திசை நோக்கி சென்னை வானொலியில் கேட்ட இந்த காதல் ஜோடிப் பாடலை உள்ளூர் பாட்டுப் பதிவு செய்யும் நிலையத்தாரிடம் கேட்க அவரோ இதே பாடலின் ஜேசுதாஸ் பாடிய சோக வடிவத்தைப் பதிவு செய்து தந்த போது தாள முடியாத சோகம். ஏனெனில் சோக வடிவம் அருமையாகவும், பிரபலமாகவும் இருந்தாலும் கூட அந்த காதல் ஜோடிப் பாடலில் சித்ராவோடு இணைந்து, எண்பதுகளின் மென் குரலாக மலேசியா வாசுதேவன் பயணித்திருப்பார். 

தொண்ணூறுகளில் அதிகம் கிராமியத் தெம்மாங்கில் பயன்பட்டவருக்கு மலேசியா அண்ணன் இயக்கிய “நீ சிரித்தால் தீபாவளி” படத்தில் இப்படியொரு மெல்லிசைக் காதல் சந்தத்தைக் கொடுத்த ராஜாவை மனசாரப் பாராட்டினேன். தொண்ணூறுகளிலும் தன்னால் தன் பழைய எண்பதுகளின் குரலாக மிளிர முடியும் என்று செய்து காட்டிய அற்புதம் அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பு வந்து இந்தப் படத்தின் ஒலிப்பேழையை வாங்கி ஒட்டகம் போல அவதி அவதியாகக் கேட்டு ரசித்தேன் அப்போது. 

இன்று காலை கூட இதே பாடலோடு தான் விடிந்தேன்.

மலேசியா வாசுதேவன் அண்ணன் செம்மண்ணின் ஈரம் போல் நம் நெஞ்சில் இருப்பார். 

கானா பிரபா

20.02.2022

பாடகர் மலேசியா வாசுதேவன்

15 June  1944 - 20 February 2011


Friday, February 18, 2022

தமிழ் சினிமாவின் பாடல் பொக்கிஷம் எம்.அலிகான் மறைந்தார்

திரையிசைப் பாடல்கள் நமது பால்யகாலத்து உறவு போல.

அதனால் தான் என்னுடைய 30 வருட காலச் சேமிப்பை இன்னும் 

ஒலிநாடாவிலும், இசைத்தட்டுகளிலும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதையெல்லாம் எறிவது மகா பாவம்.

ஏன் இவற்றைச் சேகரிக்கிறோம், அது அடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேருமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஒரு வெறி நம்முள் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பாடல் பொக்கிஷம் எம்.அலிகான் நேற்று முன் தினம் (16.02) மறைந்து விட்டாராம். பாடல் சேகரிப்பு எவ்வளவு சவால் நிறைந்தது, சுவாரஸ்யமானது என்பதால் அவரை 2011 இல் ஒரு வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன். அலிகான் மறைந்த பின்னர் அவரை நான் வானலையில் சந்தித்ததை என் ட்விட்ஸ் தான் ஞாபகப்படுத்தின.

அலிகானைச் சந்தித்த அனுபவத்தை ஒரு அன்பர் பகிர்ந்திருக்கிறார்

https://tamil.filmibeat.com/specials/tamil-film-songs-ali-khan-chennai.html?story=3&fbclid=IwAR2KZhaT-TNLhzL1ry_AwsMSqex_zGLDUiJy2lVNcPSKXBkhldyTudverhY


படம் நன்றி : முனைவர் மு.இளங்கோவன்.

Wednesday, February 16, 2022

இதயமே....போகுதே....



“துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ.......”

சலவைக்காரரிடம் உடுதுணிகளைக் கொடுக்கும் போது இது இன்னாரது உடுப்புப் பொதி என்று நுணுக்கமாக ஒவ்வொரு ஆடையிலும் சிறு முத்திரை இடுவார். அந்த மாதிரியான நுணுக்கத்தை இந்தப் பாடலில் பொதித்திருப்பார் பாடலாசிரியர் பொன்னடியான்.

மேலும், 

“வெள்ளாவியில் வேக வச்ச

வெளுத்த துணி நானு புள்ள

கச்சிதமா கஞ்சி போட்டு

தேச்ச துணி நீதான் புள்ள

ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே

ஒரு சொகுசு

துணி எடுத்து துவைக்கிறப்போ

துவண்டு விடும் என் மனசு

காஞ்சிபுரம் பட்டில் மின்னும்

பொன்னப் போல உன் மேனி

எப்போதும் சாயம் போகா

சிலுக்கு துணி கண்ணே நீ

நான் தேடியே வாடுறேன் தேவியே”

என்று அந்தச் சூழலோடு பொருந்திய அற்புதமான உவமை தொனிக்கும் வரிகளோடு தொடரும்

“இதயமே போகுதே காதலில் வேகுதே” என்ற “அரண்மனைக் கிளி” படப் பாடல். 

ராஜ்கிரண் தன்னுடைய “என் ராசாவின் மனசிலே” படத்தில் வடிவேலுவுக்கு முத்திரைப் பாத்திரம் கொடுத்து “போடா போடா புண்ணாக்கு” பாடலும் வாயசைக்க வைத்தவர் ஒரு முழு நீளப் பாடலுக்கு ஒத்திகை பார்த்திருக்கலாம். 

ராஜ்கிரண் நடித்து இயக்கிய "அரண்மனைக் கிளி" படத்துக்காக இசைஞானி இளையராஜா வாரி வழங்கிய ஒன்பது பாடல்களில் இரண்டு பாடல்கள் படமாக்கப்படவில்லை. ஒன்று இளையராஜா பாடிய "ராமரை நினைக்கும் அனுமாரு", இன்னொன்று கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாடிய "இதயமே போகுதே". இங்கே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திரைப்படத்துக்காகப் பாடிய "இதயமே போகுதே" பாடலைப் பகிர்கிறேன். இந்தப் பாடல் தொண்ணூறுகளின் பாடல் விரும்பிகளுக்கு, குறிப்பாக என் நண்பர் வட்டம் அப்போது நேசித்த பாடல்களில் ஒன்று. இந்த மாதிரியான பாடல்கள் இவருக்கு நிரம்பக் கிடைத்திருந்தால், கூடவே அவை படமாக்கப்பட்டிருந்தால் இன்னும் பல வாய்ப்புகள் இவரை நாடியிருக்குமோ என்னமோ.

“இதயமே போகுதே” பாடலைப் பாடிய பாடகர் கிருஷ்ணமூர்த்தி மேடை இசைக் கச்சேரிகளில் பிரபலமான பாடகராக விளங்கியவர். T.M.செளந்தரராஜன் என்ற மேதமை பொருந்திய குரலோனின் பிரதி பிம்பமாக இவர் மெல்லிசை மேடைகளில் துலங்கியவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆரம்ப வரவுகளிலும் இவரின் கச்சேரிகளை ரசித்திருக்கிறேன்.

மதுரா ட்ராவல்ஸ் நடத்திய தென்னிந்தியப் பாடகர்களை ஒன்று கூட்டிய பிரமாண்டத் திருவிழாவில் கூடப் பாடியிருக்கின்றார்.

“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடலை அட்சர சுத்தமாகப் பாடுவார்.

இசைஞானி இளையராஜாவின் கூட்டுப் பாடகர் குழாமில் இருந்து சிறப்பித்தவர். 

“பாடாத தேனீக்கள்” படத்தில் வரும் “ஆதி அந்தம் இல்லாதவனே” https://www.youtube.com/watch?v=WsizL-eurKk என்ற களிப்பூட்டும் பாடலும், 

“சக்கரைத் தேவன்” படத்தில் பாடகர் T.S.ராகவேந்தருடன் “பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா” https://www.youtube.com/watch?v=GfMyqoWdFjw (கார்த்திக் ராஜா இசைமைத்ததாக விஜயகாந்த் மேடையில் குறிப்பிட்டார்)

பாடல்களும் முக்கியமானவை. 

ஏப்ரல் 2 ஆம் திகதி, 2016 இவ்வுலகை விட்டு மறைந்தார். 

எனது மனசுக்கு நெருக்கமான பாடல்களில் அவர் பாடிய “இதயமே போகுதே” என்றென்றும் என் நினைவில் வாழும்.

“துணி மேலே காதல் குறியைப்

போட்டு வைத்த மானே

நெஞ்சினிலே குறியைப் போட

மறந்து போனாய் ஏனோ

இதயமே போகுதே காதலில் வேகுதே

கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே”

https://www.youtube.com/watch?v=QnpZvToaZHo

கானா பிரபா

16.02.2022


Thursday, February 10, 2022

பாடகி மஹதி ❤️ இசைஞானி இளையராஜா கொடுத்த இன்னொரு அறிமுகம்

“ஹய்யய்யோ ஹய்யய்யோ பிடிச்சிருக்கு” வழியாக ஹாரிஸ் ஜெயராஜின் “சாமி” (2003) படத்துக்காக அடையாளப்பட்டிருந்தாலும், அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே இசைஞானி இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார் இன்று தன் இசையுலகில் இருபது வருடங்களைத் தொட்டு நிற்கும் பாடகி மஹதி.

சின்ன வயசிலேயே ராக ஞானம் கொண்டவர் இளையராஜாவைச் சந்திக்க நேர்கிறது தன் 16 வயதில். ராஜாவுக்கு முன் தியாகராஜரின் "எந்துகு பெத்தல' கீர்த்தனையைப் பாடியவருக்கு அந்த இடத்திலேயே வாய்ப்புக் கொடுக்கிறார் “காதல் சாதி” படத்துக்காக

அந்தப் பாடல் தான் “என்னை மறந்தாலும்” https://www.youtube.com/watch?v=wDPKbG5-rXc

என்ற பாட்டு. இதே பாடலை இசைஞானி இளையராஜாவும் தனித்துப் பாடியிருக்கிறார்.  இளையராஜாவே எழுதி, இசையமைத்துத் தானும் ஒன்று பாடி, மஹதியையும் பாட வைத்து அறிமுகப்படுத்தியது எப்பேர்ப்பட்ட வரம்.

"காதல் சாதி" திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்து முழுமையாக வெளிவராத படங்கள் என்ற பட்டியலில் அடங்கும். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்க நடிகர் உதயா. பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் இதுவாகும்.

இந்தப் படத்திற்காக மொத்தம் ஒன்பது பாடல்கள் இசையமைக்கப்பட்டவை என்பதை நினைக்கும் போதுதான் முடங்கிவிட்ட படத்தால் அருமையான பாடல்களும் விழலுக்கு இறைத்ததாகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். கஸ்தூரிராஜா இதற்கு முன்னர் தேவா இசையில் "மவுன மொழி" படத்துக்காகப் பத்துப் பாடல்களைப் பெற்றுப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

"காதல் சாதி" திரைப்படப் பாடல்கள் 2001 ஆண்டு வாக்கில் வெளியான போது அந்தக் காலகட்டத்தில் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரணி ஆகியோர் பாடகராக ஒரு சில படங்களில் பாடி வந்தனர். இந்தப் படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது. தவிர இசைஞானி இளையராஜா, கோவை கமலா, உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள்.

பாடகி மஹதியின் குரலை மேற்கத்தேயப் பாணியில் கேட்டுப் பழகிய காதுக்கு இவரின் ஆரம்பகாலப் பாடலான "என்னை மறந்தாலும்" பாடலை கேட்கும் போது புதுமையாக இருக்கும்.

"மனசே என் மனசே" உன்னிகிருஷ்ணன், பவதாரணி பாடிய ஜோடிப் பாடல் அப்போது பிரபலம்.

பாடகர் கார்த்திக் சன் டிவியில் அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கி வந்த "பாட்டுக்குப் பாட்டு" மூலம் மேடை வாய்ப்பைப் பரவலாக்கிக் கொண்டவர். ஒருமுறை தன் பேட்டியில் "காதல் சாதி" படப்பாடல் தான் தனக்குக் கிட்டிய முதல் வாய்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் "ஸ்டார்" படத்தில் வந்த "நேந்துகிட்டேன்" பாடல் சமகாலத்தில் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பாகக் கார்த்திக்குக்கு அமையவே அதுவே அவரின் அறிமுகப்பாடலாக அமைந்துவிட்டது. இருப்பினும் இளையராஜா, ரஹ்மான் என்ற இரு பெரும் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தனது அறிமுகத்தைக் காட்டும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டும்.

"காதல் சாதி" படத்தில் பாடகர் கார்த்திக் மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார்.

பாடகி மஹதிக்கு ஒரு திருப்பமாக அமைந்த “ஹய்யய்யோ ஹய்யய்யோ” பிடிச்சிருக்கு” https://www.youtube.com/watch?v=l9itqELxH0E அவரின் சாஸ்திரிய இசை மரபுக்கு முற்றிலும் வித்தியாசப்பட்டது. ஆனால் அந்தப் பாடலில் ஹரிஹரனோடு அவர் கொடுத்த அற்புதமான சங்கதிகளால் தான் அந்தப் பாட்டு தொடர்ந்து அவருக்கு ஏராளம் பாடல்ககள் கிடைக்க முதலீடானது.

“காது மடல் அருகே உதடுகள் நடத்தும்

நாடகம் புடிச்சிருக்கு”

என்ற இடத்தில் ஒரு சிரிப்பைத் தூவுவாரே அங்கே கன்னக்குழி தெரியச் சிரிக்கும் அழகி போல இருக்கும் அந்தச் சங்கதி.

 எனக்கு நீ நன்றிக்கடன் ஏதாவது செய்யணும்னா ஒம் புருஷனை எனக்குப் பல் டாக்டரா நிரந்தரமாக்கிடு" என்று குறும்பாகச் சொன்னார் சிட்னி ஒபரா ஹவுசில் கே.ஜே.ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்து. அங்கே தான் மஹதி திருமண பந்தத்தில் இணைவதாக மேடையில் பகிரங்கமாக அறிவித்தார் கான கந்தர்வர்.

அப்போது நான் எழுதிய பதிவு

http://www.madathuvaasal.com/2006/10/blog-post.html

உன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்" என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

பாடகி மஹதிக்கும், ஹரிஷ் ராகவேந்திராவுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதமான பொக்கிஷப்பாடல்களைக் கொடுத்திருக்கிறாரே என்று நினைப்பதுண்டு. அப்படி ஒன்று தான்

“அயன்” படத்தில் வரும் 

“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” 

https://www.youtube.com/watch?v=4HDiSUisIS4

மஹதி கிசுப்பான குரலில் கொடுக்க, ஹரிஷ் ஏக்கத்தொனியில்  அங்கேயும் இருவரும் துளி குறை வைக்காமல் அற்புதமான இசை வேள்வி நடத்தியிருப்பார்கள்.

பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் பத்து வருடங்கள் இசையைக் கற்றவர் மஹதியின் தந்தை. பையன் பிறந்தால் பாலமுரளி என்றும் பெண் என்றால் தான் கண்டுபிடித்த "மஹதி" ராகத்தையே சூட்டுமாறு வேண்டினாராம் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். இசைக்கு அடையாளமாக விளங்கும் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட மஹதி தன் ஊர்ப்பெருமையைச் சாஸ்திரிய இசை மேடையிலும் காட்டுகிறார். 

காதல் வந்து நுழைந்தால்

போதி மர கிளையில் ஊஞ்சல்

கட்டி புத்தன் ஆடுவான்

காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட

போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்

அடடா அடடா பிடிச்சிருக்கு.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மஹதி

கானா பிரபா

10.02.2022

Tuesday, February 8, 2022

கலைமானே...... உன் தலை கோதவா...! ❤️


காதலியே....... என்று அந்த மூச்சு விட மறந்த நீட்சி அப்படியே மலை முகடு தொட்டு பரந்து விரிந்து ஒலிக்குமாற் போல அவள் இருக்கும் திசை தேடித் தட்டுமாற் போவொரு பாவனையோடு தொடங்கும் போதே வேறோர் ஒரு சூனிய உலகுக்குள் போய் விடும் மனது.

“கண்ணே நீ போகும் 

வழி எங்கு போனாலும்

எல்லா வழியும் என் வீட்டு வாசலில்

வந்துதான் முடியும்...”

அனுபந்தமாகத் தொடங்குமிடத்தில் ஒரு ஹைக்கூ தனத்துக்குப் பின்னர் தான் அந்தக் “காதலியே.....” நீட்சி. எவ்வளவு அழகானதொரு கற்பனையில் களச் சூழலும், இசையும், பாடல் வரிகளும் ஒத்திசைவோடு சங்கமிக்கும் அற்புதத் தருணமது.

ஏ.ஆர்.ரஹ்மான் வட இந்தியருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டவரல்ல, அவர்களைத் தன் பக்கம் ஈர்த்து விட்டுத் தான் அவர்களின் அடையாள செவ்வியல் இசையிலும் தன்னால் கொடுக்க முடியும் என்று தான் கற்ற சுபி இசை மரபுகளையும் கொடுத்தார்.

அந்த வகையில் இந்த 

“நஹி சாம்னே” 

https://www.youtube.com/watch?v=bNK94h7vUeA

முந்தியதாக ரஹ்மானுக்கான அடையாளத்தை அங்கு நிறுவி அவர்களை ஆக்கிரமித்த வரிசையில் ஒன்று. 

அதனால் தான் அந்தப் பாடல் 

“கலைமானே உன் தலை கோதவா” 

https://www.youtube.com/watch?v=Q976wRoUuyQ

என்று நதிமூலத்துக்கு வந்த போதும் அந்நியப்படாமல் நம் மெய் நனைத்தது. வரைமுத்துவும் அந்நியம் கெடாமல் பார்த்துக் கொண்ட அற்புதக் கைவண்ணம்.

நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது – என்

உயிர் உள்ள புள்ளிதான் 

நீ வாழ்வது......

அப்படியே நம்மை அடித்துப் போட்டுக் கிடத்தி விடுவார் ஹரிஹரன்.

ஹிந்தியில் ஹரிஹரன் & சுக்விந்தர் சிங் கூட்டணியாக அடையாளப்பட்டாலும் முன்னவர் தான் முழு ஆக்கிரமிப்போடு பயணிப்பார். தமிழில் அதனால் தான் தனித்தும் அதே ஆக்கிரமிப்பைக் காட்ட முடிந்தது.

உன் கையிலே பூ வலை போடவா

உன் பாதையில் பூ மழை சிந்தவா

பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா

பெரும் பணக்காரக் காதலன் தன்னை எல்லாம் இழந்து, தன் காதலிக்காக பட்டுப் பீதாம்பரமோ, வைர வெள்ளி நகைகளையோ அணிவிக்காது அப்படியே அவளின் எளிமைக்கு நிகரான சோடனையைப் போடுவானாம் பாருங்கள்.

தால் ஹிந்திப் பதிப்பு தமிழில் தாளம் ஆன காலம் தொட்டு நான் ஆத்மார்த்தமாக ஆராதிக்கும் பாட்டு இது. இருபது வருடங்களாக “காதலர் கீதமாய்” வானொலியில் கொடுத்தாலும் பட்டை தீட்டிய வைரம் போல அந்த இசைத்தட்டு இன்னும் பழுதுபடாமல் இருக்கின்றது.

அந்த “காதலியே.....” என்ற கீச்சுக் குரலுக்கும் , “கலைமானே” என்றமைந்து தொடரும் வரிகளுக்கும் தான் எத்தனை வேறுபாடு, அதுவே ஒரு அழகியல்.

படம் வந்த காலத்தில் அக்க்ஷய் கண்ணா மீது அவர் தூக்கிச் சுமக்கும் அந்தச் செல்ல நாய்க்குட்டி போல ஒரு அனுதாபப் பார்வை விளைந்தது. இந்தப் பாடலை நேற்றில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தொலைவானபோது 

பக்கம் ஆனவள்

பக்கம் வந்த போது 

தொலைவாவதோ ?

https://www.youtube.com/watch?v=Q976wRoUuyQ

கானா பிரபா

Friday, February 4, 2022

பண்டிட் பீம்சென் ஜோஷி 100



பண்டிட் பீம்சென் ஜோஷி 100
(பெப்ரவரி 4, 1922 - ஜனவரி 24, 2011)
ராஜாவின் குரு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களது படத்தில் ஒரே பாடலை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவும், இன்னொரு இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷியும் பாட வந்திருக்கின்றார்கள்.
பாடல் பதிவுக்கு முன்னர் பாலமுரளி கிருஷ்ணா ப்ளாஸ்கில் இருந்து ஊற்றி ஊற்றிக் குடித்துக் கொண்டே, பீம்சென் ஜோஷிடம் வேண்டுமா என்று கேட்கிறார். அவர் வேண்டாம் என்று மறுக்கிறார்.
சரி அடுத்து மோர் வேண்டும் என்கிறார் பாலமுரளிகிருஷ்ணா.
அப்போதும் பீம்சென் ஜோஷியிடம் கேட்டால்
“வேண்டாமே பின்னர் குரல் கெட்டு விடும்
பாட முடியாது போய்விடும்”
என்கிறார்.
அப்போது பாலமுரளிகிருஷ்ணா சொன்னாராம்
“ஏய்யா ஒரு மோருக்கு நிக்காத குரல் என்ன குரல்யா அது”
என்று வேடிக்கையாக.
இந்த இடத்தில் எழுத்தை நிறுத்தி வைத்து விட்டு அப்படியே பண்டிட் பீம்சென் ஜோஷி பாடிய கன்னடப் பாடல்களில் மூழ்கினேன்.
அப்படிக் கிட்டிய அற்புதமானதொரு பாட்டு. இளையராஜாவின் வாத்தியார் ஜி.கே.வெங்கடேஷ் “Nodi Swami Naavu Irodhu Heeg” படத்தில் கொடுத்த பாட்டு
“லஷ்மி...லஷ்மி....லஷ்மி பாரம்மா, பாக்யதா லஷ்மி பாரம்மா”


என்னவொரு தெய்வீக அழைப்பு. அதுவும் ஒரு இந்துஸ்தானி மரபில் விளைந்த இந்தப் பாடகரைத் தென்னகத்தில் அழைத்துப் பாடும் அந்த மரபில் எவ்வளவு தூய்மையானதொரு நதிப் பிரவாகம் பாருங்கள்.
1966 இல் பாலமுரளிகிருஷ்ணாவையும், பீம்சென் ஜோஷியையும் இணைத்து சந்த்யா ராகா படத்தில் பாட வைத்த ஜி.கே.வெங்கடேஷ் இத்தனை ஆண்டுகள் கழித்து 1983 இல் கொடுத்த அற்புதமானதொரு பாட்டு. கன்னடத்தின் மிக உச்ச நடிகர் சங்கர் நாக் இயக்கி நாயகனாக நடித்த படத்தில் இந்தப் பாட்டில் தோன்றி நடித்தவர் அவரின் சகோதரர் ஆனந்த் நாக்.

சந்த்யா ராகா படத்தில் பீம்சென் ஜோஷி பாடியவை

Kannadathi Thaaye Baa


Ee Pariya Sobagaava
பாலமுரளி கிருஷ்ணாவுடன்

எப்பொழுதுமே நம் முன்னோர்கள், அதுவும் குருவின் ஸ்தானத்தில் இருந்து ஞானம் விளைவிப்பவர்களின் ஆளுமை எப்படியாவது நம்மில் புகுந்து விடும். அதனால் தான் முன்னோர்கள், தான் ரசித்த ஆளுமைகளை எல்லாம் தன் இசையில் பாட வைத்து அழகு பார்த்தார் இளையராஜா.
பண்டிட் பீம்சென் ஜோஷியின் குரலில் அளவற்ற காதல் கொண்ட இளையராஜா பின்னாளில் மகாத்மா காந்தியின்
“நம்ரதா கே சாகர்”
என்ற பாடலைப் பாட வைத்தது (கூடவே பண்டிட் அஜய் சக்ரபோர்தி இணைக்குரல்) குரு சீட மரபின் நீட்சியின் அந்தம்.
கானா பிரபா

Tuesday, February 1, 2022

ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி...


“இந்த இழப்பைப் பற்றி வருந்திக் கொண்டிருக்காதே!

ஒரு இழப்புக்குப் பின்னால் ஒரு வெற்றியும் இருக்கும்”

இப்படி இயக்குநர் அனுமோகனைச் சமாதானம் செய்தாராம் இசைஞானி இளையராஜா. அனுமோகன் இணைத்தயாரிப்போடு இயக்கிய இரண்டாவது படமான “நினைவுச்சின்னம்” படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் இருந்த போது அவரின் தந்தை மறைந்த செய்தி கிட்டிய கலக்கத்தில் இருந்தவருக்குத் தான் இந்த மாதிரிச் சமாதானம் சொன்னாராம் ராஜா. பின்னணி இசையோடு காட்சியும் பொருந்த சில நகாசு வேலைகளையும் சொல்லி ராஜா போட்டுக் கொடுத்த இசை “நினைவுச் சின்னம்” படத்தை வெள்ளி விழாப் படமாக்கியது.

அண்மையில் சாய் வித் சித்ராவில் பிரபு நடித்த படங்களில் தனக்குப் பிடித்ததில் ஒன்றாக “நினைவுச் சின்னம்” படத்தையும், பிரபுவின் அண்ணன் ராம்குமார் குறிப்பிட்ட போது ஆச்சரியமாக இருந்தது. பிரபு, ராதிகா கொங்கு பாஷையில் நடிக்க, இரண்டாவது ஜோடியாக முரளி & சித்ரா நடித்தார்கள்.

நினைவுச் சின்னம் படத்தின் பாடல்கள் எல்லாமே தேன் மாரி தான்.

திடுதிப்பென்று எஸ்பிபி வந்து குதித்து, சித்ராவோடு கும்மாளமிடும்

“வைகாசி மாசத்துல பந்தலொண்ணு போட்டு”

https://www.youtube.com/watch?v=3qWhTR-e39M

அதுவும் அந்த “ரெண்டு” என்பதைப் போகிற போக்கில் சுழித்து விட்டுப் பாடும் நகாசுக்காகவே அடிக்கடி ஓட்டிக் கேட்பேன்.

மனசைத் தடவித் தாலாட்டுப் பாடும் 

ஏலே இளங்குயிலே 

என்னாசைப் பைங்கிளியே 

பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீன்சுவையே

https://www.youtube.com/watch?v=oMyZgqme8YA

தாலாட்டு ஸ்பெஷலிஸ்ட் சுசீலாம்மா அப்படியே நம்மையும் பச்சைக் குழந்தை ஆக்கிவிடுவார்.

அப்படியே இன்னோர் பக்கம் ரணமான மனசுக்குக் களிம்பு போலத் தடவி விடும்

“சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன”

https://www.youtube.com/watch?v=VpWJ9bulKyA

என்று இசைஞானியார் தாயாகும் தருணம் என்று கொண்டாடும் இந்த இசைப் பெட்டகத்தில் இன்னொன்று அமைதியாக ஒளிந்து கொண்டிருக்கிறது. அதுதான்

“ஊருக்குள்ள என்னையும் பத்தி 

உன்னையும் பத்தி அட என்னென்னமோ சொல்லுறாங்க”

https://www.youtube.com/watch?v=v37G03aovf8

முன் சொன்ன பாடல்கள் சொல்லாமலேயே பரவலான கவனத்தை ஈர்க்கக் கூடிய, சொல்லி அடித்த பாடல்கள். இவற்றில் இருந்து விலகி ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அழகிய காதல் பாட்டு என்பதால் இதன் மீதான நேசமும் எனக்கு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.

அப்போதெல்லாம் புதுப் படங்களின் பாடல்கள் வெளிவரும் போது ஊருக்குள் இருக்கும் ரெக்கார்டிங் பார் காரர்கள் சத்தமாக அவற்றை ஒலிபரப்பி விளம்பரம் கொடுப்பார்கள். அந்த விளம்பரத்தாலேயே அவை பிரபலமாகிச் சூடு கிளப்புவதுண்டு. இந்தப் பாட்டு அந்த ரகத்தில் கூட அப்போது இருக்கவில்லை. 

சாதாரணமாக ஆரம்பிக்கும் பல்லவி தான், ஆனால் சரணம் தூக்கிச் சாப்பிட்டு விடும். ஒரு மெலிதான நடன அசைவுகள் போல ஜாலம் போட்டு விடுவார் ராஜா. மலேசியா வாசுதேவன், சித்ரா குரல்களுக்கு ஒத்திசைக்க புல்லாங்குழலும் வந்து எட்டிப் பார்த்துச் சிரித்து விட்டுப் போகும். கிராமத்து ஜோடி முரளி, சித்ராவுக்காக மலேசியா அண்ணரும், அப்படியே தாவணி போட்ட குரலாக சித்ராவுமாக சோக்கான பாட்டு.

மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்), கம்மாக்கரை ஓரம் (ராசாவே உன்னை நம்பி) , நீ போகும் பாதையில் (கிராமத்து மின்னல்), இளம் வயசுப் பொண்ணை ( பாண்டி நாட்டுத் தங்கம்) என்று மலேசியா வாசுதேவன், சித்ராவின் ஜோடிப் பாடல்கள் புதுப்பரிமாணம் கொடுப்பவை. 

“ஊருக்குள்ள 

என்னையும் பத்தி உன்னையும் பத்தி

அட என்னென்னமோ சொல்லுறாங்க”

https://www.youtube.com/watch?v=v37G03aovf8

அலுங்காமல் குலுங்காமல் வளைந்து நெளியும் சந்தச் சிறப்பிற்காக அலுக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கானா பிரபா

01.02.2022