Pages

Wednesday, July 2, 2025

ஒரு பெண் புறா கன்னடத்தில் SPB பாடிய கதை


"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"

என்று மனம் விட்டுச் சொன்னார் SPB.

"அண்ணாமலை" படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பாடல்கள் ரகளையாக ஊரெல்லாம் கலக்க, அவருக்கோ ஒரு மனக்குறை "ஒரு பெண்புறா" பாடலையும் தானே பாடியிக்கலாமே என்று.

அந்த உள்ளக் கிடக்கையை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும், இசையமைப்பாளர் தேவாவிடமும் சொல்லிக் கலாய்ப்பாராம் எஸ்பிபி.

"ஏன் நாம மெலடி பாட மாட்டோமா" என்று.

ரஜினி படங்களில் ஜேசுதாஸ் பாடல் என்பது ஒரு உளவியல் ரீதியாக அந்தக் கதாபாத்திரத்தின் நொந்த தன்மையைப் பிரதிபலிக்கும்.

இதே பாங்கிலேயே " நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் "சிட்டுக்குச் செல்லச் சிட்டு" பாடலும் ஜேசுதாஸ் குரலில் அமைந்திருந்தது.

இந்த மாதிரி எஸ்பிபி ஆசைப்பட்டதன் காரணம் பிறரின் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதற்கல்ல, இந்த மாதிரியான நல்ல வாய்ப்புகள் நல் வரம் என்ற அவரின் மனோவுணர்வு தான்.

இதே போலவே சுரேஷ் கிருஷ்ணாவின் குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "ருத்ர வீணா" படத்தில்

ஜேசுதாஸ் பாடிய 

"லலித ப்ரிய கமலம்"

https://www.youtube.com/watch?v=-s3cdlJFhes&list=RD-s3cdlJFhes&start_radio=1

பாடலும் கூடத் தானே பாடவேண்டும் என்று ஆசைப்பட அது "உன்னால் முடியும் தம்பி"யில் நிகழ்ந்ததாக எஸ்பிபி மகன் சரண் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுவே "இதழில் கதை எழுதும்" ஆனது

"அண்ணாமலை" படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து சுரேஷ் கிருஷ்ணா கன்னடத்தில் பெரும் நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து "கடம்பா" படம் தயாராகிறது. அதற்கும் இசை தேவா தான்.

அப்போது விஷ்ணுவர்த்தன் ஆசைப்பட்ட "ஒரு பெண் பிறா" பாடலை இப்படத்தில் வைக்கத் தீர்மானிக்கும் போது கூடவே எஸ்பிபியை இருவரும் நினைக்கிறார்கள்.

எஸ்பிபியின் ஆசை காத்திருந்து நிறைவேறுகிறது.

அதுதான்

https://www.youtube.com/watch?v=vc0ma2yHXJA

ஆனது.

பெரும் திருப்தியும் மகிழ்ச்சியுமாக எஸ்பிபி சொன்னாராம்

"இப்ப தான் ஒரு முழுமையா உணர்கிறேன்"

அண்மையில் Touring Talkies தொடரிலும் சுரேஷ்  கிருஷ்ணா இத்தகவலை மீள் நினைந்தார்.

இந்தத் தகவலை SPB பாடகன் சங்கதி நூலிலும் குறிப்பிட்டுள்ளேன்.

கானா பிரபா

02.07.2025


Tuesday, July 1, 2025

நிலவும் மலரும் பாடுது ❤️


சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா..

மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே

தோல்வி காணுமா..

காதலர் தாம் சந்திக்கும் போது எழும் ஐயப்பாடுகளைப் பாடலில் கொண்டு வரும் உத்தியை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கவியரசர் கண்ணதாசன் கொண்டு வந்திருப்பதை மெய்ப்பிக்க இன்னொரு பாட்டு.

வழக்கம் போல காதலியை ஆற்றுப்படுத்தி ஆறுதல் அளிக்கிறான் இந்தக் காதலன். 

இப்படியாகப் பாடலின் கவி நயத்தை வியக்க ஒரு தடவை, இன்னொரு தடவை இசைக்காக என்று கேட்டு வைக்கும் பாட்டு இது.

அள்ளி இறைத்தாலும் ஆயிரம் கொள்கலன் போதாத ஏரியின் மீதேறிப் படகில் மிதக்கும் போது ஒரு சொட்டு நீர்த்திவாலை அந்த் தண்ணீர்த் தொட்டியின் பெறுமானத்தைக் காட்டும். அது போலவே பாடல் தொடங்கும் போது எழும் அந்தச் சிறு ஒலி கூடக் காணாத காட்சியைக் கற்பனையிலே வரிக்க முகவரி எழுதும்.

கதகதப்பான குளிர் வாசம் அந்த ஆண் குரலோன் ராஜாவிடம். 

இசையரசி சுசீலாம்மாவைப் பற்றித் தனியாகப் பேசவும் வேண்டுமோ? எந்த ஆண் கூட்டில் சேர்ந்தாலும் இசைந்து போகும் அரசி அல்லவா?

பாடலூடே ஊடுருவும் அந்தப் புல்லாங்குழல் ஏரியைச் சுழித்து ஓடும் படகின் ஊடாடல் போல நிகழ்த்தும் ஆலாபனை.

அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.

“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”

எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.

தெலுங்கு தேசம் இரண்டு பாடக இசையமைப்பாளர்களைச் சம காலத்தில் பிரசவித்துள்ளது.

ஒருவர் கண்டசாலா இன்னொருவர் ஏ.எம்.ராஜா.

இனிய பிறந்த நாள் நினைவுகளோடு “எம்.ராஜாவுக்கு”

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது....

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது ❤️

https://www.youtube.com/watch?v=IiaquGWSJHI&list=RDIiaquGWSJHI&start_radio=1

கானா பிரபா

01.07.2025